Saturday, February 2, 2019

இலங்கையின் சுதந்திர தினத்தை, ''கரிநாளாக கடைபிடிக்க'' தீர்மானித்த கேப்பாபுலவு மக்கள்.

நாளை மறுதினம் அனுஷ்டிக்கப்படவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தை, கரிநாளாக அனுஷ்டிக்க கேப்பாபுலவு மக்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அன்றைய தினம், தமது காணிகளினுள் உள் நுழையும் போராட்டமொன்றையும் முன்னெடுக்க முல்லைத்தீவு - கேப்பாபுலவு மக்கள் திட்டமிட்டுள்ளனர்.இந்த நிலையில் அவர்களது ஜனநாயக போராட்டத்தை முடக்க, மக்களது காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமை பலப்படுத்தும் நடவடிக்கையில் படையினர் குதித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

704 ஆவது நாளாக, இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு கேப்பாபுலவு கிராம மக்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2017.03.01 அன்று ஆரம்பித்த மக்களது நில மீட்பு போராட்டத்தில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு ஒருதொகுதி காணிகள் விடுவிக்கப்ட்டுள்ள நிலையில், மீதமாகவுள்ள காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ளன.

அந்த காணிகளில் இராணுவத்தினர் தமது படை முகாங்களை அமைத்து நிலை கொண்டுள்ளனர் . இந்த காணிகளை முழுமையாக விடுவிக்க கோரி மக்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

இதனிடையே மக்களது போராட்டத்தை எதிர்கொள்ள, படையினர் முகாம் வாயில்களில் முள்ளுக்கம்பிகளை கொண்டு, பல்வேறு தடுப்புக்களை அமைத்து முகாமை பலத்த பாதுகாப்புக்குள் கொண்டுவந்துள்ளனர். 24 மணிநேரமும் காவல்துறையினர் பணியில் அமர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com