Friday, September 14, 2018

ரவியின் அமைச்சர் கனவுக்கு ஆப்பு! சீஐடி வழக்கு தாக்கல்!

ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவி ஒன்றை வழங்குமாறு ஐ.தே.கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களால் தொடர்ந்தும் பிரதமரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவந்ததையடுத்து மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையுடன், ரவி கருணாநாயக்க எந்த விதத்தில் தொடர்புபட்டுள்ளார் என்பது தொடர்பில் தனக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதன்படி அண்மையில் பிரதமர் செயலகத்திடம் சட்டமா அதிபரால் குறித்த அறிக்கை கையளிக்கப்பட்ட நிலையில், பிரதமர் வியட்நாமிலிருந்து வந்த பின்பு இதை அடிப்படையாக கொண்டு ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவி வழங்குமாறு ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்யவுள்ளார் என்று செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் அமைச்சுப் பதவி கிடைக்கும் என காத்திருந்த ரவிக்கு இன்று குற்றவிசாரணைப் பிரிவினரால் பேரதிர்ச்சி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று -14- குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இவர், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன் பொய்யான ஆதாரங்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com