Tuesday, April 29, 2014

நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்து! பஹ்ரேனின் அதி உயர் விருது ஜனாதிபதி மகிந்தவிற்கு!

இலங்கைக்கும் பஹ்ரேனுக்கும் இடையில் 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், இலங்கை ஜனாதிபதியின் தலைமைத்துவம், ஒரு முன்மாதிரியாகும் எனவும், அவர் பிராந்திய ஸ்திரத்தன்மைக்காக அதிஉயர் பணியாற்றி வந்துள்ளளார் எனவும், பஹ்ரேன் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பஹ்ரேன் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு, அல் சபீர் மாளிகையில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. மன்னர் ஹமாட் பீன் ஈஷா அல் கலீபா, பிரதமரும், இளவரசருமான கலீபா பின் சல்மான் பின் ஹமாட் அல் கலீபாவும் அதில் இணைந்திருந்தனர். இலங்கைக்கும், பஹ்ரேனுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்துவதற்கான 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

விளையாட்டு, கலை, கலாசாரம், உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கும் வகையிலும் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதுடன் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பஹ்ரேன் பல்கலைக்கழகத்திற்கு இடையிலும் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை ஜனாதிபதி ஒருவர் பஹ்ரேனுக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும். இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி இரு நாடுகளுக்கு இடையிலான அபிவிருத்தியை கட்டியெழுப்பும் தேவை இதன் மூலம் வெளிப்படுவதாக தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, இரு நாட்டு தலைவர்களும், சர்வதேச மேடைகளில் ஒருங்கிணைப்புடன் செயற்படுவதற்கும், இணக்கம் தெரிவித்தனர். இலங்கைக்கும், பஹ்ரேனுக்கும் இடையில் 1992ம் ஆண்டு உத்தியோகபூர்வ ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டன.

கடந்த பெப்ரவரி மாதம் தலைநகர் பனாமாவில், இலங்கையின் புதிய தூதரக அலுவலகம் திறக்கப்பட்டது. இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் பலமடைந்து வருகின்றன. 2009ம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த அந்நாட்டு பிரதமர், வடக்கின் நிர்மாணப்பணிகளுக்கென, ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை அன்பளிப்பு செய்தார்.

இதேவேளை பஹ்ரேனின் அதி உயர் விருதான ஷேக் ஈஷா விருது வழங்கி ஜனாதிபதி கௌரவிக்கப்பட்டுள்ளார். பஹ்ரேன் அதியுயர் விருதான அல் கலீபா விருது வழங்கி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கும் பஹ்ரேனுக்கும் இடையில் இருதரப்பு உறவுகளை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்ளும் முயற்சிகளை கௌரவிக்கும் முகமாக இவ்விருது வழங்கப்படுவதாக பஹ்ரேன் மன்னர் அமாத் பின் இஷா அல் கலீபா தெரிவித்தார்.

அல்கலீபா விருது 1940 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகின்றது. காலஞ்சென்ற ஷேக் இஷா பின் சல்மான் அல் கலீபா மன்னர் மனித நேயம் தொடர்பில் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பை நினைவுகூறும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டு வருகின்றது.

இதுவரை சவுதி அரேபிய மன்னர் மலேசிய பிரதமர் பிரிட்டிஸ் மகாராணி 2 ஆம் எலிசெபத் உள்ளிட்ட உயட்மட்ட தலைவர்களுக்கே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. பஹ்ரேனுடன் சிறந்த நட்புறவை கட்டியெழுப்புவதற்கு இலங்கையில் தாமும் எதிர்பார்ப்பதாக விருதினை பெற்றுக் கொண்ட ஜனாதிபதி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையில் அந்நியோன்ய தொடர்புகள் காரணமாகவே உறவுகள் மேம்பட்டுள்ளதாக ஜனாதிபதி இங்கு மேலும் சுட்டிக்காட்டினார். மன்ரின் அழைப்பின் பேரில், இந்த சுபீட்சமான தீவுக்கு வருகை தரக்கிடைத்தமை, தனக்கு மகிழ்ச்சியை தருவதாக கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தனக்கும், தனது தூதுக்குழுவினருக்கும் வழங்கிய இந்த மதிப்பையும், மரியாதையையும், கௌரவத்தையும், ஒருபோதும் மறக்க முடியாது என்றும், இதற்காக தான் நன்றி தெரிவிப்பதாகவும், கூறினார்.

ஷேக் ஈஷா, அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 1976ம் ஆண்டு இலங்கைக்கு வந்தபோது, தான் இளம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததையும், ஜனாதிபதி ஞாபகப்படுத்தினார். நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு நேரடியாக பங்களிப்பு செய்வதற்காக, நாட்டு மக்களை வலுவூட்டும் வகையில், மன்னரின் கோட்பாடுகளை தான் மதிப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை பொருளாதார ரீதியாக பலமடைவதே, தனது கொள்கைகளிலும், அடிப்படைகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தில், தீவு இராச்சியமாக இலங்கை அபிவிருத்திப்பாதையில் துரிதமாக பலமடைந்து வருகின்றது. சகல இன மக்களும் பொதுவாக அனுபவிக்கக்கூடிய நிரந்தர பொருளாதார சுபீட்சத்தை எட்டுவதற்கு, தனது நாடு இன்று ஒரே கொடியின் கீழ், பிளவுகள் இன்றி, அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும், ஜனாதிபதி அங்கு தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com