Wednesday, April 30, 2014

வடக்கில் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரத்துடன் தொடர்புடைய 17 இராணுவத்தினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

வடக்கில் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் பலாத்கார சம்பவங்களுடன் தொடர்புடைய 17 இராணுவச் சிப்பாய்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற 2007-2009 மற்றும் யுத்தம் நிறைவு பெற்ற 2009-2012 காலப்பகுதியில் வடக்கில் இடம்பெற்ற பெண்கள் மீதான 119 பாலியல் பலாத்கார சம்பவங்களுடன் தொடர்புடைய 125 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவற்றில் 5 சம்பவங்களுடன் இராணுவ சிப்பாய்கள் 7 பேர் தொடர்புபட்டுள்ளனர். இதேபோல் 200-2012ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கில் இடம்பெற்ற 256 பாலியல் பலாத்கார சம்பவங்களுடன் தொடர்புடைய 307 பேர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 6 சம்பவங்களுடன் இராணுவத்தினர் 10 பேருக்கு தொடர்புள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று (30) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய இராணுவப் பேச்சாளர் இந்த தகவல்களை தெரியப்படுத்தினார். 2001ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டு வரையில் வடக்கில் ஆயிரத்தில் ஒரு பெண் என்ற ரீதியில் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

இந்த காலப்பகுதிக்குள் வடமத்திய மாகாணத்தில் ஆயிரத்துக்கு இருவர் என்ற ரீதியில் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார். இந்நிலையில் வடக்குப் பிரதேசங்களில் மட்டுமே பெண்கள் மீதாக பாலியல் பலாத்கார சம்பவங்கள் இடம் பெறவில்லை என அவர் தெரிவித்தார். எனினும் பலாத்கார சம்பவங்களுடன் தொடர்புடைய இராணுவத்தினருக்கு எதிரான நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com