Monday, January 9, 2012

இலங்கையில் ஆயுதப்போரா? புலம்பெயர்ந்தோர் கனவிலேயே காணமுடியும். Maj Gen ஹெந்தவித்தாரண.

இரண்டாவது ஆயுதப்போர் ஒன்றுக்கு புலிகள் இயக்கம் ஆரம்பமாவதாக , கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்திருப்பதாக புலம்பெயர் நாடுகளை தளமாக கொண்டுள்ள இணையங்கள் பல புரளி கிளப்பியுள்ளது. அத்துடன் குறிப்பிட்ட ஆங்கிலச் செய்தித்தாளில் , உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள விடுதலைப் புலிகளின் அனுதாபிகளின் நடவடிக்கைகள் தொடர்பாக, வடக்கில் விழிப்பூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த இரகசியத் திட்டம் குறித்து தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண, அரசாங்க அதிகாரிகளை உசார் படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக புலிகளின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்செய்தி தொடர்பாக இலங்கை தேசிய புலனாய்வுத் துறையின் பிரதானி ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவித்தாரண அவர்களை இலங்கைநெற் தொடர்பு கொண்டு கேட்டபோது, வழமையான பொய்புரளிகள் எனத் தெரிவித்த அவர், புலம்பெயர்ந்தோர் இலங்கையில் இனிமேல் யுத்தம் ஒன்றை காண்பதானால் அதை கனவிலேயே காணமுடியும் எனக்கூறினார்.

இலங்கையிலே இனிமேல் யுத்தம் ஒன்றை கனவினிலேயே காணமுடியும் என அவர் திட்டவட்டமாக கூறுவதன் பின்னணியை நாம் ஆராய்வோமானால், 2009 மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், புலம்பெயர் புலிப்பினாமிகளின் வசூலிப்பு படுவீழ்ச்சியடைந்தது. தமது வசூலிப்பை தொடர்வதானால் இலங்கையில் யுத்த நிலைமைகள் தொடவேண்டும், அங்கு குண்டுகள் வெடிக்கவேண்டும் என புலம் பெயர் புலிகள் விரும்பினர்.

வன்னியிலிருந்து வடகிழக்குக்கு வெளியே புலிகளால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த தற்கொலைதாரிகளை கொண்டு தமது கனவை நிறைவேற்ற முடியுமென புலம்பெயர் புலிகள் கருதினர். அதற்காக தீவிர முயற்சிகளையும் மேற்கொண்டனர். ஆனால் அவர்களின் முயற்சிகளுக்கு முன்னாள் புலிகளிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

மாறாக கொழும்பு உட்பட ஏனைய பிரதேசங்களில் எஞ்சியிருந்த புலிகள் யாவரும் அரசிடம் சரணடைந்ததுடன் தாம் வைத்திருந்திருக்ககூடிய இராணுவ உபரகணங்கள், ஆயுதங்கள் யாவற்றையும் படையினரிடம் வழங்கியதுடன், புலம்பெயர் புலிகள் இலங்கையிலே நிலைமையை மோசமைடையச் செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால் நாம் இனியும் இவர்களது சுரண்டலுக்கு துணைபோக தயாராக இல்லை என்ற செய்தியையும் படையினருக்கு தெரிவித்திருந்தனர்.

முன்னாள் புலிகளின் இத்தகவல்களை உள்வாங்கிக்கொண்ட படையினர், புலம்பெயர் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பாக ஒட்டுமொத்த சரணடைந்த புலிகளிடமும் மேற்கொண்ட ஆய்வில் புலம்பெயர் புலிகளின் கட்டளைக்கு இலங்கையிலே உயிர்தப்பியுள்ள புலிகள் எவரும் செயற்பட தயாராக இல்லை என்ற உண்மையை உறுதிப்படுத்திகொண்டுள்ளனர்.

இவ்வாறான நிலையிலேயே புலிகளின் ஊடகங்கள் தமது புலம்பெயர் பிழைப்பை நிலைநிறுத்தி கொள்வதற்காக பொய்புரளிகளை கிளப்புகின்றனர்.

தமது செய்திகளை தற்போது மக்கள் நம்புவதற்கு தயாரக இல்லை என்ற நிலையை உணர்ந்துள்ள அவர்கள், சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களில் வரும் இவ்வாறான அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை மேலும் திருவுபடுத்தி வழங்கி வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com