Monday, September 19, 2011

முஸ்லிம் காங்கிரஸ் உங்களுக்கு என்ன செய்தது. கல்முனையில் ரணில் கேள்வி

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டதைத் தவிர இந்தப் பிரதேசங்களில் என்ன அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளனர் என ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.

கல்முனை மாநகர சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று சாய்ந்தமருது, கல்முனைக்குடி, பாண்டிருப்பு, மருதமுனை, நற்பிட்டிமுனை போன்ற கிராமங்களில் தேர்தல் காரியாலயங்கள் திறந்து வைக்கப்பட்டதுடன், பொதுக் கூட்டங்களும் இடம்பெற்றன.

அப்பிரதேசங்களில் இடம்பெற்ற கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில் :-

நாட்டில் காணப்படும் பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டுமானால் அனைத்து மக்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

அரசுடன் இணைவதன் மூலமே ஹம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் போன்று முஸ்லிம் செறிந்து வாழும் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய முடியும் எனக் கூறி எம்மிடமிருந்து பிரிந்து சென்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது போயுள்ளது.

அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டதைத் தவிர இந்தப் பிரதேசங்களில் என்ன அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளனர். இன்னும் கல்முனை நகர் சுடுகாடு போல் காட்சியளிப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது.

இக்கூட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர் அனோமா தயாகமகே, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயாகமகே, மேல் மாகாண சபை உறுப்பினர் லாபிர் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com