Sunday, April 10, 2011

இலங்கையில் அரச நிர்வாகம் குடும்ப ஆதிக்கத்துக்குள்

'குடும்ப ஆதிக்கம்'- அமெரிக்கா இலங்கையில் அரச நிர்வாகம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் குடும்ப ஆதிக்கத்துக்குள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.அத்தோடு, அங்கு மனித உரிமை மீறல்கள் முடிவின்றி தொடர்வதாகவும் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடும்ப ஆதிக்கம்
அரசாங்கத்தின் நிறைவேற்றுத்துறை மற்றும் மற்றைய அரசுதுறைகள் அரசதுறைகளில் குடும்ப ஆதிக்கம் என அமெரிக்கா விமர்சனம் அனைத்தும் ஜனாதிபதியின் குடும்ப ஆதிக்கத்தின் பிடியிலேயே இருப்பதாக மனித உரிமைகள் தொடர்பான அமெரிக்காவின் இந்த வருடாந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதியின் இரண்டு சகோதரர்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலர் ஆகிய நிறைவேற்றுத்துறையின் முக்கியப் பொறுப்புகளை வகிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்கா, இன்னொரு சகோதரர் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக இருப்பதாகவும் கூறியுள்ளது.

2010ம் ஆண்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் ஆளும் கூட்டணி அரசாங்கமும் ஆட்சிக்கு வந்த தேர்தல்களை சிக்கல்களுக்குரியது என சுயாதீன கண்காணிப்பாளர்களை மேற்கோள்காட்டி அந்தத் தேர்தல்களின் சுதந்திரத்தன்மையையும் அந்த அறிக்கை கேள்விக்குட்படுத்தியுள்ளது.

இரண்டு தேர்தல்களிலுமே ஆளும் கூட்டணி அரசாங்கம் பெருமளவான அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சட்டவிரோத கொலைகளும் காணாமல் போதல்களும்
இலங்கை அரசாங்கமும் அதன் முகவர்களும் மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் பற்றிய அமெரிக்காவின் அறிக்கை, பாதுகாப்புப் படையினர் நீதிக்குப் புறம்பான சட்டவிரோதக் கொலைகளில் ஈடுபடுவதாகவும் அந்நாட்டில், காணாமல் போதல்கள் தொடர்ந்தும் ஒரு பிரச்சனையாகவே இருந்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.

இருந்தாலும் இவ்வாறான சம்பவங்கள் எண்ணிக்கையில் வேண்டுமானால் சற்று குறைந்துள்ளதாகவும் அமெரிக்கா கருதுகிறது.

நீதித்துறை சுதந்திரம்
சட்டத்தின் பிடியிலிருந்து விலகியிருப்பதற்கான வசதி அதிகாரிகளுக்கு உள்ள நிலையில், மனித உரிமைகளை மீறியமைக்காக பாதுகாப்பு படையிலோ பொலிஸ் தரப்பிலோ எவரும் சிவில் அல்லது இராணுவ நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதான தகவல்கள் எதுவும் இல்லை.

அத்தோடு இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரம், நிர்வாகத்துறையின் கடுமையான தலையீடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அமெரிக்கா கருதுகிறது.

மனி்த உரிமை மீறல்கள் பற்றிய விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு அதன் இறுதி அறிக்கையை காலங்கடந்தும் இதுவரை கையளிக்கவில்லை.

அத்தோடு ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை மற்றும் காணாமல் போயுள்ள லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் எக்னலிகொட தொடர்பான விசாரணைகளில் எவ்வித முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை எனவும் அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு
இலங்கையிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இயலாத்தன்மை இன்னொரு கவலைக்குரிய விடயமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உரிமை மீறல்கள் தொடர்பில் ஆழ ஆராய்ந்து தகவல்களை திரட்டாமல் ஆணைக்குழு தனக்கு முன்னாலுள்ள ஆதாரங்களில் மட்டும் தங்கியிருந்து வழமையான நியாய சபை போன்றே விசாரணைகளை முன்னெடுக்கின்றது எனவும் உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளின் நிலை பற்றிய அமெரிக்காவின் மதிப்பீட்டை வெளியிடும் வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com