Friday, December 24, 2010

ஆசியாவில் அமெரிக்காவின் போரை மூட்டும் பாத்திரம். Bill Van Auken

வட கொரியக் கரையின் மோதலுக்குரிய நீர்ப் பகுதியில் உண்மையான சுடும் பயிற்சிகளை தென்கொரியா மேற்கொள்வதற்கு அமெரிக்கா ஊக்குவிப்பதானது ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஆற்றப்படும் போரைமூட்டும் பாத்திரம் பெருகி வருவதன் அடையாளமாகும்.

சமீபத்திய போர் ஒத்திகை இயோன்பியோங் தீவில் நடத்தப்பட்டது. இது சில மாதங்களுக்கு முன்பு அங்கு தென் கொரியப் படைகளால் நடத்தப்பட்ட உண்மைச் சூட்டு பயிற்சிக்கு ஏறக்குறைய ஒத்ததாய் இருந்தது. அப்போதைய அந்த நடவடிக்கையால் ஆத்திரமூட்டப்பெற்று வடகொரியா அளித்த பதிலடி நடவடிக்கையில் இரண்டு தென்கொரியப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இரண்டு படகுகளும் மூழ்கின. கொரியத் தீபகற்பத்தில் ஒரு முழுமையான போர் வெடிப்பதற்கான உலகளாவிய அச்சத்தை இது தூண்டியது.

இந்த இரண்டு இராணுவ ஒத்திகைகளுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உள்ளது. இந்த முறை இயோன்பியோங் தீவில் சுமார் 20 அமெரிக்க இராணுவ அதிகாரிகளும் உடன் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இதனால் வட கொரியா பதிலடி கொடுக்குமானால், அமெரிக்காவுக்கு போருக்கான ஒரு காரணம் கிடைத்து, பெரும் பதிலடி கொடுப்பதில் தென் கொரியாவின் இராணுவப் படைகளுடன் அது சேர்ந்து கொள்ளும்.

இந்த நடவடிக்கைகளின் ஆத்திரமூட்டும் தன்மை குறித்து மறுப்பேதும் இருக்க முடியாது. இயான்பியோங் வட கொரியக் கடற்கரையில் இருந்து சுமார் ஏழு மைல்களுக்கும் சற்று அதிக தொலைவில் தான் இருக்கிறது (தென் கொரியாவில் இருந்து சுமார் 50 மைல்கள்). தென் கொரியப் படைகள் வீசும் குண்டுகள் விழும் பகுதி வட கொரியாவால் உரிமை கொண்டாடப்படும் பகுதி ஆகும். 1953ல் கொரியப் போரின் முடிவில் அமெரிக்க இராணுவத்தால் ஒருதரப்பாகத் திணிக்கப்பட்ட வடக்கு வரம்புக் கோடு என்று அழைக்கப்படும் ஒன்றை வடகொரியா நிராகரிக்கிறது.

சென்ற மாத நிகழ்வுகளை வரிசையாய் நிறுத்திப் பார்த்தால், அமெரிக்க ஆதரவுடனான இராணுவ ஒத்திகைகள் வடகொரியாவை திட்டமிட்டு தாக்குதல் நடாத்த இழுப்பது போன்றே தோன்றுகின்றது. அப்போது தான் தென்கொரியாவின் பதிலடிக்கான ஒரு சாக்கினை அது வழங்கும். தனது வலதுசாரி ஆதரவாளரிடமும் இராணுவத்திற்கும் அழைப்புவிடும் விதமாக, தென் கொரிய ஜனாதிபதியான லீ மியூங் பேக் ஒரு புதிய கொள்கையை நிறுவியிருக்கிறார். விகிதாச்சார பொருத்தமற்ற பதிலடிப் படைகளைப் பயன்படுத்த தென் கொரியப் படைகளுக்கு இக்கொள்கை அனுமதிக்கிறது. இது வட கொரிய இலக்குகள் மீதான வான் தாக்குதல்களைக் குறிக்கிறது.

திங்களன்றான ஒத்திகை நடவடிக்கைகளுக்கு வடகொரியா எந்த இராணுவப் பதிலிறுப்பும் செய்யத் தவறியதை அடுத்து, வடகொரியாவுக்கு “ஒரு வலிமையான செய்தியை” அனுப்பும் வகையிலும் ஒரு இராணுவ மோதலை தூண்டுவதற்கும் எண்ணம் கொண்டு அமெரிக்காவும் தென் கொரியாவும் இன்னும் கூடுதலான ஒத்திகைகளுக்குத் தயாரிப்பு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஞாயிறன்று (திட்டமிட்ட தாமதத்திற்குப் பின்னர்) கூட்டப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அவசரகால அமர்வை இரண்டு கொரியாக்களுக்கும் இடையே ஒரு புதிய மோதலைத் தடுப்பதற்கு நடக்கும் முயற்சிகளில் குறுக்கே நிற்பதை நோக்கித் திருப்ப அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தையும் சபையின் தற்காலிக தலைமைப் பதவியையும் பயன்படுத்தியது. வடக்கு மற்றும் தெற்கு இரு பக்கத்தில் இருந்தும் போருக்கு இட்டுச் செல்லக் கூடிய கூடுதலான இராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்கவும், இந்த மோதலுக்கு ஒரு தீர்வு காண்பதற்கு சியோலுக்கும் பியோன்கியாங்குக்கும் ஐநாவின் ஒரு சிறப்புப் பிரதிநிதி அனுப்பப்படுவதற்கும் முயற்சி செய்ய ரஷ்யா ஒரு அமர்வுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

ஆயினும் அமெரிக்காவுக்கு இந்த பதட்டங்களை தணிப்பதில் ஆர்வமில்லை, மாறாக இப்பிராந்தியத்தில் தனது சொந்த மூலோபாய நலன்களைத் தொடர்வதற்கான ஒரு வழியாக அவற்றை பயன்படுத்திக் கொள்வதில் தான் ஆர்வம். வடகொரியா மீது ஒருதரப்பான கண்டனத்தை வெளியிடுவதற்கு வெளியே எந்த தீர்வையும் நிராகரித்த அமெரிக்க தூதர் சூசன் ரைஸ் கவுன்சிலின் வேறெந்த நடவடிக்கையும் பொருத்தமற்றது என நிராகரித்தார்.

அரை நூற்றாண்டுக்கு முன்னதாக சுமார் 34,000 அமெரிக்க துருப்புகளும், குறைந்தது 114,000 சீனப் படையினரும் அத்துடன் ஏறக்குறைய நான்கு மில்லியன் கொரியர்களும் ஒரு கொடிய போரில் உயிரிழந்திருந்த கொரிய தீபகற்பத்தில், தனது பெருகிய வலுச்சண்டை கொள்கையைத் தொடர்வதன் மூலம் அமெரிக்க ஆளும் உயரடுக்கு என்ன தேடுகிறது?

அமெரிக்க கொள்கையின் பிரதான நோக்கம் இரண்டு கொரியாக்களுக்கும் இடையில் இராணுவ மோதலைத் தடுப்பது அல்ல, மாறாக சீனாவின் மீது அழுத்தம் கொடுப்பதற்கும் ஆசியா முழுவதும் பெருகிவரும் அதன் பொருளாதார மற்றும் அரசியல் வலுவை எதிர்கொள்வதற்குமான ஒரு வழியாக மோதல் அபாயத்தைச் சுரண்டிக் கொள்வது தான்.

பதட்டங்களைக் குறைக்கும் ஒரு முயற்சியில் கொரியத் தீபகற்பத்தை அணுஆயுதமற்றதாக்குவது குறித்து பேச இரண்டு கொரியாக்கள், அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகியவை பங்குபெறும் ஆறு தரப்பு பேச்சுவார்த்தைகளுக்கான கூட்டம் ஒன்றைக் கூட்ட சீனா முனைந்தது. இது 2008 முதல் நிறுத்தப்பட்ட நிலையில் உள்ளது. ஆயினும் அமெரிக்காவோ இதற்கு எதிரானதொரு அணுகுமுறையை கையிலெடுத்தது. கொரிய நெருக்கடியில் சீனாவுக்கு எதிரான ஒரு குழுவினை வலுப்படுத்தும் நோக்கமுடையதாக சொல்லத்தக்க வகையில் அது தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளின் அயலுறவு அமைச்சர்களுடன் தனது சொந்த கூட்டத்தை வாஷிங்டனில் நடத்தியது.

சீன எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இப்பிராந்தியத்தில் அடுத்தடுத்த போர் ஒத்திகைகள், மஞ்சள் கடல், தென் சீனக் கடல் மற்றும் ஜப்பான் கடலில் அணு ஆயுதம் தாங்கிய விமானங்களைத் தாங்கிய யுஎஸ்எஸ் ஜோர்ஜ் வாஷிங்டன் கப்பலையும் சண்டைக் கப்பல்களையும் நிறுத்துவது ஆகியவை மூலம் அமெரிக்கா தனது இராணுவப் படைவலிமை அணிவகுப்பை தொடர்ந்து நடத்துவதும் இத்துடன் இணைந்து கொண்டுள்ளது.

கடல்களின் சுதந்திரத்திற்கான ஆதரவாளனாக காட்டிக் கொண்டு பிராந்திய மோதல்களில் (ஸ்பார்ட்லி மற்றும் சென்காகு/தியாயு தீவுகள் விவகாரம் போன்றவை) சீனாவின் விரோதிகளுக்கான காவலராய் தன்னை நுழைத்துக் கொள்வதன் மூலம் சீனாவைச் சுற்றி வளைத்து கட்டுப்படுத்துகிற நோக்கத்துடன் தொடர்ச்சியான இராணுவக் கூட்டணிகள் மற்றும் உடன்பாடுகளுக்கு அமெரிக்கா முனைந்து வந்துள்ளது.

உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரமாக சீனாவின் எழுச்சி மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடி ஆகியவற்றால் எடுத்துக்காட்டப்படும் ஆசியாவிலும் சர்வதேசரீதியாகவும் பூகோளமூலோபாய சூழலில் ஏற்பட்டிருக்கும் ஆழமான மாற்றத்திற்கு அமெரிக்கா பதிலிறுப்பு செய்கிறது. ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் காண்பது போல, அமெரிக்க ஆளும் உயரடுக்கு பொருளாதார வீழ்ச்சியைச் சரிக்கட்டும் முயற்சியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எஞ்சிய இராணுவ சக்தியையே மிகப் பெருமளவில் நம்பியிருக்கிறது.

ஒரு புதிய பெரிய போர் வெடித்தால் சீனா தான் அதன் அநேகமான எதிரியாக இருக்கும் என்பதான வகையில் அமெரிக்க இராணுவம் பயிற்றுவிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

அமெரிக்க கூட்டுப் படைத் தலைமையின் இந்த ஆண்டிற்கான கூட்டு செயல்பாட்டு சூழல் (JOE) அறிக்கையில் (அமெரிக்க இராணுவம் அச்சுறுத்தல்களாகக் காண்பவை மற்றும் வருங்காலத்தில் எங்கு அது அனுப்பப்படலாம் என்பதற்கான ஒரு மூலோபாய வழிகாட்டி) ஒரு அச்சுறுத்தும் எச்சரிக்கை இடம்பெற்றுள்ளது. “சீனா எடுக்கவிருக்கும் பாதை தான் 21 ஆம் நூற்றாண்டின் தன்மையையும் இயல்பினையும், அதாவது அது ‘இன்னொமொரு இரத்தகளறியான நூற்றாண்டாய் இருக்குமா’ அல்லது ‘அமைதி ஒத்துழைப்புக்கான நூற்றாண்டாக’ இருக்குமா என்பதை, தீர்மானிக்க இருக்கிறது.”

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே இராணுவ மோதல்கள் ஏற்பட சாத்தியமுடைய சூழல்களையும் அது வரைந்து காட்டுகிறது. இதில் உலகின் இந்த இரு பெரும் பொருளாதாரங்களுக்கு இடையில் போர் ஏற்படுவதற்கான சாத்தியமும் இடம்பெற்றுள்ளது. “(சூடானில்) தனது எண்ணெய் ஆதாரவளங்களை பாதுகாக்கும் சீனாவின் அக்கறை ஆபிரிக்காவில் இருக்கும் அபூர்வமான ஆதாரவளங்களைப் பாதுகாக்க மற்ற அரசுகளும் ஆபிரிக்காவில் தலையீடு செய்யும் ஒரு வருங்காலத்திற்கு கொண்டுவந்து விடலாம். எரிசக்தி விநியோகங்கள் தேவைக்குப் பூர்த்தி செய்ய முடியாத நிலையாகி, தேய்ந்து கொண்டு செல்லும் எரிசக்தி ஆதாரவளங்களை இராணுவரீதியாக பாதுகாக்கும் அவசியம் இருப்பதாக அரசுகள் கண்டால், வருங்கால மோதலுக்கான தாக்கங்கள் ஏற்படும்.”

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், உலகின் முக்கியமான எரிசக்தி உற்பத்திப் பிராந்தியங்கள் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் இராணுவரீதியாக தனது மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்கு எடுக்கும் முயற்சிகளில் சீனாவின் நடவடிக்கைகள் குறுக்கிடுமானால், விளைவு போராய் இருக்கலாம்.

இரண்டு அணு ஆயுத சக்திகளுக்கு இடையே ஏற்படக் கூடிய அத்தகையதொரு போரின் தாக்கங்கள் மிகப் பயங்கரமானது என்பதையும் கடந்த ஒன்றாக இருக்கும்.

கவலையளிக்கும் விதத்தில், சென்ற வாரத்தில் நியூயோர்க் டைம்ஸ் “சிந்தித்துப் பார்க்க முடியாத ஒன்றுக்கான மூலோபாயத்தை அமெரிக்கா மீண்டும் சிந்திக்கிறது (US Rethinks Strategy for the Unthinkable)” என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டது. ஒரு அணுஆயுதப் போர் ஏற்பட்டால் தப்பிப் பிழைக்கும் தன்மை குறித்து கொள்கைவகுக்கும் வட்டாரங்களுக்குள் நடந்து வரும் சமீபத்திய யோசனைகளை இது பேசியது.

“நினைத்துப் பார்க்கவும் முடியாத கொடூரம் என்று சொல்லும் மனத்தடையை நாம் கடந்தாக வேண்டும்” என்று மத்திய அவசரநிலை நிர்வாக அமைப்பின் நிர்வாகியான கிரேய்க் ஃபுயுகேட் டைம்ஸிடம் கூறினார். “அதனைக் கையாளுவதற்கு நாம் தயாராய் இருக்க வேண்டும்”.

”சிந்தித்துப் பார்க்க முடியாததை”க் குறித்து இவ்வாறு சிந்திப்பதெல்லாம் நேரடியாய் சீனாவை மனதில் கொண்டு செய்யப்படுகிறது என்பதை சென்ற டிசம்பரில் செல்வாக்குமிகுந்த அயலுறவுக் கொள்கை இதழான Foreign Affairs (பாரின் அஃபர்ஸ்) இதழில் வெளிவந்த ஒரு கட்டுரை சுட்டிக் காட்டியது. ”சீனாவின் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை” வீழ்த்துவதற்கு “அமெரிக்கா உயர் திறன் அணுசக்தி தாக்குதலை பயன்படுத்துவதன் பின்விளைவுகள்” குறித்து அமெரிக்க அணு ஆயுத ஆய்வாளர்கள் நடத்தி வரும் ஒரு ஆய்வினை அது மேற்கோள் காட்டியது.

”சீனாவின் ஆயுத கிட்டங்கிகள் எல்லாம் நாட்டுப்பகுதிகளில் தான் அமைந்திருக்கின்றன என்றாலும் இந்த தாக்குதல் ஒரு பெரும் பகுதியை சிதறடிக்கும், 3-4 மில்லியன் மக்களைக் கொல்லும் என்பதாய் இந்த ஆய்வின் மாதிரி கணித்ததாய்” கட்டுரை தெரிவித்தது.

பனிப் போர் முடிந்து இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் வரலாற்று நெருக்கடியால் உந்தப்பட்டு ஒரு அணுஆயுதப் பெருந்தீயின் அபாயம் முன்னெப்போதையும் விட பெரியதாய் இருக்கிறது, வளர்ந்து கொண்டும் செல்கிறது. இந்த அபாயம் தன்னுடன் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வருங்காலத்திற்கான அச்சுறுத்தலையும் உடன்சுமந்து வருகிறது.

சமுதாயத்தை சோசலிச முறையில் மாற்றுவதற்கான ஒரு பொதுப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை தேசிய எல்லைகளைக் கடந்து ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டமே பொதுவாக இராணுவவாதத்தின் நச்சு வளர்ச்சிக்கும் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தியம் ஆற்றிவரும் போரைமூட்டும் பாத்திரத்திற்கும் ஒரே முற்போக்கான பதில் ஆகும்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com