மக்களுக்கு சேவை செய்ய அரசியல் தேவையில்லை என்பதால் அரசியலுக்கு நான் எந்த சந்தர்ப்பத்திலும் வர மாட்டேன் என்று, முன்னாள் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஹட்டனில் வைத்து இன்று தெரிவித்துள்ளார். அங்கு இடம்பெற்ற ஊடகவியலார்கள் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார். இந்த சந்திப்பில் முன்னாள் இலங்கை அணி வீரர் முத்தையா முரளிதரன் மேலும் தெரிவிக்கையில்,
எனக்கு அரசியலில் அனுபவமும் இல்லை. ஆனால் எனது அமைப்பின் ஊடாக கஸ்ரங்களுக்கு முகம் கொடுக்கும் மக்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்வோம். கடந்த காலங்களில் இடம்பெற்ற அரசியல் குழப்பநிலை தொடர்பாக நான் விமர்சிக்க விரும்பவில்லை. முக்கியமாக தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை 1000 ரூபாவுக்கு மேல் வழங்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும். தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அவர்களுக்கு போதுமானதாக இல்லை. இவர்களது ஊதிய உயர்வு விடயம் தொடர்பில் தொழிற்சங்கவாதிகள் மற்றும் அரசியல் கட்சியினர் போன்றோர் அவர்களால் முன்வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கையை ஏற்று, உரிய ஊதியத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நாங்களும் ஆதரவு வழங்குவோம். அத்துடன், தொழிலாளர்களை பணிபகிஷ்கரிப்பு மற்றும் ஹர்த்தாலில் ஈடுப்படுத்த வேண்டாம். அவர்கள் தமது பணிகளை தடை இல்லாமல் முன்னெடுக்க வேண்டும். அவர்கள் பணிகளை சரிவர முன்னெடுத்தால்தான் அவர்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்றும் கூறினார்.
மேலும், சம்பள பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் தொழிலாளர்களை தொழிலுக்கு செல்ல வேண்டாம் என சொல்பவர்களால் அவர்களின் நாள் சம்பளத்தை கொடுக்க முடியுமா ? இவ்வாறு சொல்லுபவர்களால் அது முடியாது. இதனால் இறுதியில் பாதிப்படைவது தொழிலாளர்கள்தான். எனவே இதற்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதேவேளை, 20 வருட காலமாக எங்களின் இலங்கை கிரிக்கெட் அணி முதலாம், இரண்டாம் இடங்களை தக்க வைத்திருந்தது. கடந்த மூன்று வருட காலமாக இலங்கை கிரிக்கெட் அணியினர் சாதனைகள் எதுவும் படைக்கவில்லை. இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பில் ஆராய்ந்துதான் பார்க்க வேண்டும். இதைப்பிற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமைத்துவத்தை மாத்திரம் குறை கூற முடியாது. அணியின் வீரர்களும் பொறுப்பு கூற வேண்டும்.
இலங்கை கிரிக்கெட் அணியை பொறுத்த வரை பண தட்டுப்பாடு என்பது இல்லை. எனவே கிரிக்கெட் வீரர்களின் ஆளுமை மற்றும் திறன்களை விருத்தி செய்து 20 வருட வெற்றி பயணத்தை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு அ\னைவரும் ஒன்றிணைந்து முயற்சிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment