Wednesday, October 30, 2013

தொடர்ச்சியாக சிறுமிகளை துஸ்பிரயோகம்: ஜெயிலும் துஸ்பிரயோகமுமாக திரியும் கிளிநொச்சி இளைஞன்

கிளிநொச்சி, கிரமந்தன் ஆறு பகுதியில் 7 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய சந்தேகநபரை நவம்பர் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி, கிரமந்தன் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் கடந்தவாரம் கடைக்கு சென்ற வேளை மேற்படி நபர் ஏமாற்றி சைக்கிளில் கூட்டிச்சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (28) சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்தனர்.

மேற்படி சந்தேக நபரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (29) ஆஜர்படுத்திய போது, நீதிபதி எம்.ஐ.வகாத்தீன் சந்தேகநபரை நவம்பர் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமியையும் சந்தேகநபரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

இதேவேளை, மேற்படி சந்தேக நபர் 2011ஆம் ஆண்டு வாய்பேசாத யுவதி ஒருவரை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தால் ஒரு வருட காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

விடுதலையாகிய பின்னர் 2012ஆம் ஆண்டு 12 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கடந்த மே மாதம் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கடந்த வாரம் மூன்றாவது தடவையாக மேற்படி 7 வயதுச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட குற்றத்திற்காக மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Put him to life time prisson or deth judjment.

    ReplyDelete