Wednesday, November 7, 2012

ஆளணி பற்றாக்குறையுடன் இயங்கும் யாழ்.போதனா வைத்தியசாலை

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு ஆயிரத்து 500 தாதியர்கள் தேவைப் படுகின்ற போதும் வெறுமனே 450 தாதியர்களே தற்போது பணியாற்றுகின்றனர் என யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சர்வ மதக்குழவிடம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.பவானந்தராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த சர்வமதக்குழவினர் இன்று யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்தனர். இவர்களை போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் யாழ்.போதனா வைத்தியசாலையின் நோயாளர் விடுதி, மற்றும் ஜப்பான் நாட்டின் ஜெய்கா நிறுவன உதவியுடன் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று காண்பித்தார்.

ஆளணிப்பற்றாக்குறையுடன் இயங்கி வரும் யாழ்.போதனா வைத்தியசாலை பொது மக்களுக்கு நல்ல சேவையினை வழங்கி வருவதாக தெரிவித்த யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியசாலைக்கு தேவையான தாதியர் ஆளணி வளத்தைப் பெற்றுக்கொடுக்க சர்வ மதக்குழ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பு தொடர்பில் பணிப்பாளர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இன்சினறோட்டர் (கழிவகற்றல் இயந்திரம்) இயந்திரம் ஒன்று தேவைப்படுகின்றது. இதன் பெறுமதி சுமார் ஒன்பது மில்லியன்கள் ஆகும். இதனை சர்வ மதக்குழவினர் மூலம் பெற்றுத்தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். இதற்கு அவர்கள் உடன்நடவடிக்கை எடுத்து இதனைப் பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment