Tuesday, October 16, 2012

பொன்சேகா எதிரணியை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்: திஸ்ஸ

முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத் பொன்சேகா எதிரணியை பிளவுபடுத்துவதற்கு முயற்சிக்கின்றார் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அரசாங்கத்தின் கூலியுடனையே அவர் இந்த முயற்சியை மேற்கொள்கின்றார் என கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. சரத் பொன்சேகாவுக்கு உதவி வழங்கியமையை அவர் மறந்துவிடக்கூடாது. அவர் கட்சி உள்விவகாரங்களில் தலையிடாமல் எம்முடன் இணைந்துகொள்ள வேண்டும்.

ஐ.தே.க. பிறிதொரு எதிரணியுடன் இணைந்துகொள்ளாது. நாம் ஏற்கெனவே எதிரணி ஒன்றை உருவாக்கியுள்ளோம். இந்த எதிரணியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மௌபீம லங்கா பெரமுனை தலைவருமான ஹேமகுமார நாணயக்கார, ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவர் ஸ்ரீமஸ்ரீ ஹப்புயாராய்ச்சி ஆகியோர் இணைந்துகொள்ளத் தீர்மானித்துள்ளனர்' என்றார்.

No comments:

Post a Comment