Sunday, May 6, 2012

மே 18 ! உண்டியல் வறண்ட நாள். போர் குற்ற நாள்! ஸ்ரீ புலிகள் தொலைந்த நாள்! வன்னி சிவசங்கரன்

கனடிய பத்திரிகைகளில் காணப்படும் விளம்பரங்களின்படி இந்த இரண்டு 'நாள்களில்' எதனைத் தமிழர்கள் அனுசரித்து அவர்கள் சொல்லும் எந்த இடங்களுக்குப் போகவேண்டும் என்று தெரியாது கனடா வாழ் தமிழர்களுக்குத் தலையிடி தோன்றியுள்ளது. ஒரே இடத்தில் இந்த நாட்களைக் 'கொண்டாட' வேண்டும் என்று புலிகளின் ஊடகங்களில் சில பேச்சுக்கள் தொடர்ந்தாலும் முடிவுகள் தெரியவில்லை. கொத்து ரொட்டி விற்கும் உரிமை, உண்டியல் தூக்கும் உரிமை என்பன முடிவாக்கப்படவில்லை என்றே தெரிகிறது. 'போர் குற்ற நாள்' என்று பிரகடனப்படுத்தியுள்ள நேரு குணா - திருச்செல்வம் கோஷ்டியினர் 'தமிழீழத் தேசிய துக்க நாள்' என்று அறிவித்துள்ள உருத்திர குமாரன் கும்பலை 'வழிக்குக்' கொண்டுவர பல முயற்சிகளையும் செய்வதாகத் தெரிகிறது.

புலி என்று மக்களை மிரட்டி பணம் பறித்த கோஷ்டிகள் இப்பொழுது பல கோஷ்டிகளாகப் பிரிந்துள்ளதுடன் பலர் கிடைத்த பணத்துடன் ஓட்டம் பிடித்துள்ளனர். இந்தக் கோஷ்டிகள் அப்படி ஓடியவர்களை மிரட்டி சொத்துக்களை தங்களுக்குத் தரும்படி கேட்டுள்ளதாகவும் தெரிகிறது. அவர்களில் பலர் 'தலைவர்' கேட்டால் கொடுப்போம் என்று இவர்களுக்கே 'கயிறு' கொடுத்துள்ளனர்.

திருச்செல்வம் போன்ற அஞ்சாம் கிளாஸ் ஆசாமிகள் பணம் இல்லாத இடத்தில் தலையை விடுவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். புலிகள், ஈழம், இறுதி யுத்தம் என்று தமிழர்களிடம் வசூல் செய்து வீடு வாசல், கடை, என்று உல்லாசம் அனுபவிக்கும் கேடிகள் பலர் இப்பொழுது திருச்செல்வம்-நேரு குணா கும்பலின் கீழ் இயங்குகிறார்கள். இவர்களின் கீழ் இயங்குபவர்களில் முக்கியமானவர்கள் கனடா தமிழீழ அவை என்ற Nஊஊவு ஆகும். இவர்கள் இரண்டாவது தலை முறைக் கேடிகள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

புலி என்று உண்டியலுடன் திரிந்து ஊரை மிரட்டிய நேரு குணா திருச்செல்வம் கும்பல் இலங்கையில் புலிகள் காணாமல் போனவுடன் 'மனித உரிமை' கேட்கும் கோஷ்டிகளாக மாறியுள்ளனர். இறைச்சிக் கடைக்காரன் 'ஜீவகாருண்யம்' பேசுவது எப்படியோ அப்படித்தான் இந்த கேடிக் கும்பல்களின் மனித உரிமைக் கதைகளும் என்பதை தமிழர்கள் உணர வேண்டும்.

இலங்கையில் உள்ள மக்களோடு எதுவித தொடர்பும் இல்லாத இவர்கள் இலங்கை மக்கள் என்று யாரைப் பற்றிப் பேசுகிறார்கள்? உதாரணத்துக்குத் திருச்செல்வம் தனது வயோதிபத் தாயைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே திருட்டுத்தனமாக ஆட் கடத்தல் மூலம் கனடாவுக்குள் கொண்டு வந்துள்ளார். அதாவது 'ஸ்பொன்சர்' செய்து கிழவியைக் கூப்பிட்டால் கனடிய அரசின் வெல்பெயர் எடுக்க முடியாது என்ற காரணத்தால் செய்யப்பட்ட திருச்செல்வத்தின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று.

பணத்தினை மாத்திரம் குறி வைத்து ஈழம் புலி என்று உண்டியலுடன் திரிந்த கும்பல்களுக்கு மே 18 உண்மையிலேயே துக்க தினம்தான். ஏனென்றால் உண்டியல் காயத் தொடங்கிய நாளை எப்படி இவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்? மே 18 க்கு முன்னர் இந்தக் கோஷ்டிகள் உச்சரித்த முக்கியமான சொற்களில் இப்பொழுது இவர்கள் தவிர்க்கும் முக்கியமான சொற்கள் 'பிரபாகரன்', ஈழம், என்பனவையே. அதிலும் பிரபாகரன் செத்துப் போனதை இன்னமும் பகிரங்கமாகக் கூறாதவர்கள் இலங்கைத் தமிழர்களின் மேம்பாட்டுக்கு உழைக்கிறார்கள் என்று யாரை ஏமாற்றுகிறார்கள்?

அதிலும் கனடாப் புலிகளின் முக்கிய பிரமுகராக வலம் வந்த நேரு குணா 'தனக்கும் புலிகளுக்கும் சம்பந்தம் கிடையாது' என்று பகிரங்கமாக அறிவித்த நோக்கம் என்ன? கனடாவில் புலிகளைத் தடை செய்த கட்சியும், தற்போதைய ஆளும் கட்சியுமான கன்சர்வேர்டிவ் கட்சி கனடாவில் புலிகள் என்று பகிரங்கமாக வலம் வந்தவர்களை இலங்கைக்கு நாடு கடத்தலாம் என்ற பயத்தினால்த்தான் பல 'உண்டியல்' புலிகள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓட்டம் எடுத்துள்ளனர்.

சன்சீ போன்ற கப்பல்களில் வந்தவர்கள் ஒருவரும் புலிகள் இல்லை என்றும் அப்படியானவர்களைக் காட்டுங்கள் பார்க்கலாம் என்று கனடிய அரசுக்கே சவால் விட்ட ஆட்கடத்தியும், கனடா தமிழ் காங்கிரசின் பேச்சாளருமான டேவிட் பூபாலபிள்ளை இப்பொழுது மாயமாகியுள்ளார். யார் என்ன 'குளிசை' கொடுத்தார்களோ தெரியவில்லை. ஆயினும் கப்பல்களில் வந்தவர்களில் பலர் தங்களுக்கும் புலிகளுக்கும் இருந்த தொடர்புகளைப் 'புட்டுக்' காட்டிப் பூபாலபிள்ளையின் முகத்தில் கரி வாரித் தேய்த்துள்ளனர்.

தற்போது கனடாவில் கொண்டு வரப்பட்டிருக்கும் சி-31 சட்டப்படி அகதிகள் என்று வருபவர்கள் முதலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் சட்ட விரோத குடி வரவாளர்களாகவே கருதப்படுவதுடன் கனடாவை விட்டு நாடு கடத்தப்படுவார்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இந்தச் சட்டம் 'ஆட்கடத்திகளுக்கு' பெருத்த அடியாகும். இலங்கையிலுள்ளவர்கள் அல்லது வேறு தேசத்திலுள்ளவர்கள் கனடா வந்து 'அகதி' ஆகலாம் என்ற நம்பிக்கையை இந்தச் சட்டம் தகர்த்துள்ளது. ஆட்கடத்திகள் பலரும் புலிக் கும்பல்களுடன் தொடர்புள்ளவர்கள் என்பதையும் கவனிப்பது நல்லது. ஆட்கடத்தல் மூலம் கிடைக்கும் கறுப்புப் பணத்தை 'வெள்ளையாக்குவது' கனடாவில் சுலபம் என்பதும் இன்னொரு உண்மை.

இந்த 'புலி அலை' போய் விட்டபடியால் தாங்கள்தான் கனடா வாழ் தமிழர்களின் 'ஏக பிரதிநிதிகள்' என்று கூறி கனடிய அரசுகளிடம் சங்கங்கள் வைத்து 'நிதி' வசூல் செய்து வயிறு வளர்க்கும் முயற்சியில் உருத்திரகுமாரன் கும்பலும், திருச்செல்வம்-நேரு குணா கும்பலும் தீவிரமாக செயல்படுவதுடன் கனடிய அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் காலங்களில் தமிழர்களின் வாக்குகளை தங்களால் திசை திருப்ப முடியும் என்றும் 'அள்ளி' விட்டு ஊரை ஏமாற்றுகிறார்கள். அதற்காகத்தான் இந்த ' துக்கஃகுற்ற நாள்' திருவிளையாடல்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

40000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்று கண்டு பிடித்த இந்த உண்டியல் புலிகளுக்கு இன்னமும் பிரபாகரன் செத்துத் தொலைந்தது தெரியாமல் இருக்கிறது. அது மாத்திரமல்ல புலிகள் தரப்பில் எத்தனை ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்ற தகவலையும் இந்த தறுதலைகள் சொல்லக் காணோம்! எத்தனை புலிகள் செத்தார்கள் என்று யாரவது சொல்லுவார்களா?

கடல் கந்த ஈழம் என்றவுடன் உண்டியல் கோஷ்டிகள் அனைத்தும் ஒன்றாகவே தமிழர்களை ஏமாற்றப் புறப்பட்டனர். ஆனால் சொத்துக்களைப் பிரிக்கும் பொழுது ஆளுக்கொரு கோஷ்டியாகப் பிய்த்துக் கொண்டு ஒடியுள்ளனர். கனடாவில் அதிக தமிழர்கள் உள்ளபடியால் கடல் கடந்த ஈழத்தின் 'கஜானா' சாவி தன்னிடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் போன திருச்செல்வத்தின் திருட்டுக் கும்பலுக்கு பெரும் ஏமாற்றமே காத்திருந்தது. உருத்திரகுமாரன் புலிகளின் 'சுவிஸ்' வங்கிக் கணக்குகளைப் பற்றி மூச்சு விடாததுடன் திருச்செல்வம் கும்பலுக்கு பட்டை நாமம் போட்டு விட்டதனால் வெகுண்ட திருச்செல்வம் கும்பல் கனடா கந்த சுவாமி ஆலையத்தில் கூடி 'கடல் கடந்த ஜனநாயகத் தமிழீழம்' என்று ஒன்றை கொண்டு வந்து திருச்செல்வத்தைப் 'பிரதமர்' ஆக்கியுள்ளனர்.

திருச்செல்வத்துக்குச் சேர்ந்திருந்தவர்களின் காலை வாருவது கை வந்த கலை. ஆயினும் இந்த அஞ்சாம் கிளாஸ் திருச்செல்வம் கனடாவில் 'மூத்த பத்திரிகையாளர்', 'அரசியல் விமர்சகர்' என்று வலம் வருவது 'ஊமையன் ஊரில் உளறுவாயன் வித்துவான்' என்பதையே நினைவூட்டுகிறது.

தற்பொழுது இலங்கையில் புலிகள் காலத்தில் நடத்தப்பட்ட கொலைகள் பற்றிய விசாரணைகள் தொடங்கியுள்ளன. 'ஈழ முரசு' பத்திரிகை உரிமையாளர் மயில் அமிர்தலிங்கம், முல்லைத்தீவு அரச அதிபர் ஞானச் சந்திரன், உதவி அரச அதிபர் பஞ்சலிங்கம் ஆகியவர்களின் கொலைகளில் திருச்செல்வத்தின் பங்களிப்பு உள்ளதாகவும் அதனால் திருச்செல்வத்தை நாடு கடத்தும்படி இலங்கை அரசு கோரலாம் என்றும் தெரிய வந்துள்ளது.

போர் குற்றம் என்பது உண்டியல் புலிகளின் தற்போதைய பிரச்சார முழக்கம். தருஸ்மன் அறிக்கையிலிருந்து நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வரை புலிகளும் போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்படிப் போர் குற்ற விசாரணையை இலங்கைக்கெதிராக ஐநா எடுக்குமாயின் புலிகளும் அவர்களுக்கு நிதி அளித்தவர்களும் விசாரணைக்குட்படுத்துவதுடன் ஹேக் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்படுவார்கள்.

கனடாவில் புலி என்று அட்டகாசம் செய்த அனைவரினதும் தகவல்கள் கனடிய அரசின் வசம் உள்ளதனால் போர் குற்ற விசாரணை வரும் பொழுது கடல் கடந்த எம்பிக்கள் மாத்திரமின்றி தடை செய்யப்பட்ட உலகத்தமிழர் இயக்கப் பிரமுகர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஹேக் அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 'போர் குற்ற நாள்' என்று புலிக் கும்பல்கள் அலறுவது ஒரு வகையில் நல்ல விஷயம்தான். வெளிநாட்டு அரசுகள் புலிக் கேடிகளை அடையாளம் காண உதவும். கனடாவில் இந்தக் கும்பல்களின் நடவடிக்கைகளை அல்லது பிரச்சாரக் கூட்டங்களை கனடிய பாதுகாப்பு பகுதியினரும், இலங்கை அரசும் திரைப்படங்களாக்குவார்கள் என்றும் பலரை அடையாளம் காண அவை உதவும் என்றும் நம்பப்படுகிறது.


No comments:

Post a Comment