Friday, January 25, 2019

சிறைக்கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்த இரண்டாவது அறிக்கை ஒப்படைப்பு - விசாரணைக்குழு.

சிறைக்கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்த இரண்டாவது அறிக்கை இன்று அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, இது குறித்து விசாரணை மேற்கொள்ளும் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்வதற்காக, நியமிக்கப்பட்ட இரண்டாவது குழுவின் விசாரணை அறிக்கையே இன்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரலவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை வளாகத்துக்கு சென்று, பல விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளிடமும் வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டுள்ளது.

சிறைச்சாலையில் கைதிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியானதை அடுத்து மேற்படி விசாரணை குழு தமது விசாரணைகளை ஆரம்பித்தது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தலைமையிலான குழுவின் அறிக்கை, கடந்த திங்கட்கிழமை அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து குறித்த இரு அறிக்கையையும் ஒப்பிட்டு பார்த்து, அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கையை எடுக்க எதிர்ப்பார்ப்பதாக, நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment