Sunday, July 3, 2011

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைய ஆசிய, ஆபிரிக்க நாடுகள் தயக்கமாம்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் இணைவது தொடர்பில் ஆசிய – ஆபிரிக்க சட்ட மன்ற நாடுகள் ஆர்வம் காட்டவில்லை என இம்மன்றத்தின் புதிய தலைவரான நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இந்நீதிமன்றத்துடன் இணைவதால் நாட்டின் இறைமை பாதிக்கப்படும் என்பதனாலேயே மன்றத்தின் 50ஆவது அமர்வில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஆசிய – ஆபிரிக்க சட்ட மன்றத்தில் உள்ள நாடுகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பிலான விளக்கத்தினை வழங்கும் முகமாக அடுத்த வாரம் மலேசியாவில் பயிற்சி பட்டறையொன்றை சர்வேதச குற்றவியல் நீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்தார்.

கடந்த ஐந்து நாட்களாக கொழும்பில் நடைபெற்ற ஆசிய – ஆபிரிக்க சட்ட மன்றத்தின் 50ஆவது மாநாடு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தாங்கள் எதிர்பார்த்தை விட இம்மாநாடு வெற்றியளித்ததுடன் சர்வதேச பயங்கரவாதம், சர்வதேச வர்த்தக சட்டம், சட்டவிரோத ஆட்கடத்தல், பெண் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற பல விடயங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக ரவூப் ஹக்கீம் கூறினார்.

இந்த தீர்மானங்களை உறுப்பு நாடுகளில் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

1952ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆசிய – ஆபிரிக்க சட்ட மன்றத்தின் ஸ்தாபக நாடான இலங்கை, நான்காவது தடவையாக 50ஆவது வருடாந்த மாநாட்டை இலங்கையில் கடந்த வாரம் நடத்தியது. இம்மாநாட்டில் 10 நீதியமைச்சர்கள், ஆறு சட்ட மா அதிபர்கள் உட்பட பல வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

1 comment:

  1. It's really a wonderful idea,because
    the situation is more complicated
    than they had at first realized.

    ReplyDelete