Showing posts sorted by relevance for query XIII. Sort by date Show all posts
Showing posts sorted by relevance for query XIII. Sort by date Show all posts

Saturday, January 9, 2010

மட்டு மேயர் சிவகீதா வுடனான நேர்காணல். பீமன்

இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படப்போவதாக எதிர்பார்க்கப்படுகின்ற இத்தருணத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும் மட்டு நகர் மேயருமான சிவகீதா பிரபாகரன் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ள நிலையில் இலங்கைநெற் இன் ஆசிரியர்களில் ஒருவரான பீமன், சிவகீதா அவர்களிடம் மேற்கொண்ட நேர்காணல்.

கேள்வி . எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். இத்திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன?

பதில் . எனது தந்தை அமரர் ராஜன் சத்தியமூர்த்தி 2004ம் ஆண்டு பொது தேர்தலில் நின்றபோது புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தும், அவருடைய தன்னலமற்ற சேவைக்கு மதிப்பளிக்கும் பொருட்டு இப்பிரதேச மக்கள் 24,200 வாக்குகளை அளித்திருந்தார்கள் என்பது யாவரும் அறிந்தவிடயம். எனது தந்தையின் கொலைக்கு பின்னர் எமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்த நிலையில் நாம் நாட்டைவிட்டு ஓடியிருந்தோம். பின்னர் பிரதேச மக்களினதும் எனது தந்தையின் ஆதரவாளர்களினதும் வேண்டுதலுக்கிணங்க அரசியலில் நுழைந்தேன். நான் இன்று எனது தந்தையின் வழியினை பின்பற்றியே அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றேன். இங்குள்ள மக்கள் நம்பிக்கைக்குரிய மாற்றம் ஒன்றை கொண்டுவரவேண்டும் என்ற விடயத்தில் ஆர்வமாகவுள்ளனர். அதனடிப்படையில் பிரதேச மக்கள் மற்றும் எனது ஆதரவாளர்களின் ஆலோசனையை ஏற்று ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளேன்.

கேள்வி . நம்பிக்கைக்குரிய மாற்றம் ஒன்றை மக்கள் எதிர்பார்கின்றார்கள் அல்லது நீங்கள் எதிர்பார்கின்றீர்கள் என கூறியிருந்தீர்கள். நீங்கள் குறிப்பிடும் நம்பிக்கைக்குரிய மாற்றம் என்னவென்பதை விபரமாக கூற முடியுமா?

பதில். நம்பிக்கைக்குரிய மாற்றம் என்னவென்றால்.. ஒருநாட்டின் அபிவிருத்தி என்பது தனிமனித பொருளாதார அபிவிருத்தியைச் சார்ந்திருக்கின்றது. தனிமனித பொருளாதார அபிவிருத்தி ஏற்படும்போது நாடு தன்னிறைவு பெற்ற நாடாக அமையும். பாலங்கள், வீதிகளை அமைப்பது நல்லவிடயம். ஆனால் அவற்றை மாத்திரம் அபிவிருத்தி என்று கூறிவிடமுடியாது. காரணம் இவற்றை செய்யவேண்டியது அரசின் கடமை. ஆனால் தனிமனித பொருளாதாரத்தை உயர்த்துவதே குடிமக்களுக்கு அரசு செய்யவேண்டிய உயரிய கடமையாகும். அத்துடன் ஊழல்கள் அற்ற அரசாங்கம் ஒன்றையே மக்கள் எதிர்பார்கின்றார்கள்.

கேள்வி - நீங்கள் அரசியலில் பிரவேசிக்கும்போது உங்களது உயிருக்கு புலிகள் தரப்பால் அச்சுறுத்தல் இருந்து வந்தது. அதேநேரம் கருணா பிள்ளையானிடையே ஏற்பட்ட அதிகாரப்போட்டி மற்றும் பிணக்குகளுள்ளும் நீங்கள் சிக்கியிருந்தீர்கள், நீங்கள் அவர்களில் ஒரு தரப்பை ஆதரிக்கும் போது மறுதரப்பால் அச்சுறுத்தல் உருவாகியிருந்ததையும் மறுக்க முடியாது. ஆனால் இவ்வாறான நிலைமைகளிலெல்லாம் மஹிந்த ராஜபக்ச அரசாங்கமே உங்களுக்கு உதவி புரிந்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அவ்வரசாங்கத்திற்கு உதவி புரியவேண்டிய கடப்பாடு உங்களுக்கு உண்டு என பேசப்படுகின்றதே?

பதில் - நாட்டினதும் , நாட்டு மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டியது நாட்டில் இருக்கும் ஆட்சியாளர்களது கடமை.

கேள்வி - நீங்கள் தொடர்ந்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தை கொண்டுள்ளீர்களா?

பதில் - இன்றுவரைக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி. தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு மாநகர சபை மேயராகவுள்ளேன்.

கேள்வி - நீங்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஜெனரல் பொன்சேகாவை ஆதரிக்கின்ற நிலையில் உங்களுடைய மட்டுநகர் மேயர் பதவி பறிபோகுமா? அவ்வாறு மேயர் பதவி பறிபோனாலும் மாநகர சபையில் ஆளும் தரப்பில் இருப்பீர்களா அல்லது எதிரணியில் அமர்வீகளா?

பதில் - இது தொடர்பாக எனது சட்ட ஆலோசகர் மற்றும் ஆதரவாளர்களிடம் பேசிய பின்பே கூறமுடியும்.

கேள்வி - கட்சிமாறுவதாயின் எந்த கட்சியை தெரிந்தெடுப்பீர்கள் என அறியலாமா?

பதில் - அது எனது ஆதரவாளர்களின் விருப்பில் தங்கியிருக்கின்றது.

கேள்வி - எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா? எந்தக்கட்சியில் போட்டியிடுவீர்கள்?

பதில் - எனது அரசியல் வாழ்வு என்பது நான் முன்னர் கூறியதுபோல் எனது ஆதரவாளர்கள் மற்றும் பிரதேச மக்களின் ஆலோசனையின்படியே நகர்கின்றது. அதற்குரியநேரம் வரும்போது அவர்களின் ஆலோசனைப்படியே முடிவு எடுக்கப்படும்.

கேள்வி - உங்களுடைய தந்தை புலிகளால் கொலை செய்யப்பட்டார். அக்கொலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பின்னணியில் இருந்தார்கள் என்ற பரவலான கூற்று உண்டு. அத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்த உங்கள் தந்தையின் உடல் புலிகளால் நாகரிகமற்ற முறையில் நாடாத்தப்பட்டிருந்தபோது கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அதை கண்டித்திருக்கவில்லை. இவ்வாறான நிலையில் எதிர்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவீர்களா?

பதில் - என்னுடைய தந்தை கொலை செய்யப்பட்டபோது அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரே. அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்துதான் செயற்பட்டிருந்தார். எமது மக்களின் பிரதேச நலனுடன் கூடியதும் மக்களின் அபிவிருத்திசார்ந்ததுமான செயற்பாடுகளை எவர் முன்னெடுத்தாலும் அவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு நான் பின்நிற்கப்போவதில்லை. இன்று உருவாகியிருக்கின்ற ஜனநாயக சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்கள் நலன் சார்ந்த செய்பாடுகளை முன்னெடுப்பார்களாயின் அவர்களின் செயற்பாடுகளுக்கு நான் தடையாக இருக்கமாட்டேன்.

கேள்வி - இலங்கையிலே ஆயுதப்போராட்டம் முடிவடைந்துள்ள நிலையில், ஆயுதக்குழுக்களாக அரசியலில் நுழைந்துள்ள தமிழ் அரசியல்வாதிகள் தொடர்பான உங்கள் பார்வை எவ்வாறு அமைந்துள்ளது?

பதில் - நாட்டிலே உருவாகியுள்ள ஜனநாயக சூழ்நிலையை மேலும் மேம்படுத்தும் பொருட்டு சகலரதும் கருத்துக்களுக்கு மதிப்பளிக்குமாறு அனைவரையும் வேண்டுகின்றேன்.

கேள்வி - மட்டக்களப்பு பிரதேச்தில் ஆயுதக்குழுக்களில் இருந்தவர்களே அரசியலில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களின் அரசியல் தலைமைத்துவத்தை அல்லது பிரதிநிதித்துவத்தை மக்கள் தொடர்ந்தும் எற்றுக்கொள்ள தயாராவுள்ளனரா அல்லது சமுதாயத்திலுள்ள சிறந்த சமுகசேவை மனப்பாண்மை உள்ளவர்கள் அரசியலுக்குள் பிரவேசிக்கவேண்டும் என விரும்புகின்றார்களா?

பதில் - இதயசுத்தியுடனும் ஜனநாயகப் பண்புகளுடனும் அரசியல் செய்வார்களாக இருந்தால் நான்கூட அவர்களை வரவேற்பேன். எமது மக்கள் நன்கு சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். எதிர்வரும் பொது தேர்தலில் மக்களின் தீர்ப்பை அறியலாம்.

கேள்வி - தமிழ் மக்களின் அரசியல் வட்டத்தில் அரசியலில் சிறந்த அறிவும் நிர்வாகத்திறனுமுடையோர் குறைந்து செல்வதாகவும், முன்னாள் ஆயுததாரிகளின் அரசியல் பிரவேசமே இதற்கான காரணம் எனவும் கூறப்படுகின்றது. இது தொடர்பான உங்கள் கருத்து என்ன?

பதில் - கடந்தகாலங்களில் வடகிழக்கு பிரசேதங்களில் காணப்பட்ட அசாதாரண சூழ்நிலையே இதற்கான காரணமாக கூறலாம். ஆனால் தற்போது சூழு;நிலைகள் மாறிவருகின்றது.

கேள்வி - எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவதாக நீங்கள் அறிவித்ததைத்தொடர்ந்து உங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றதே. இது உண்மையா?

பதில் - ஆம். எனது பாதுகாப்பிற்காக ஆண்களும் பெண்களுமாக 25 இராணுவ வீரர்கள் வழங்கப்பட்டிருந்தார்கள். ஜெனரல் பொன்சேகாவை ஆதரிக்கும் விடயத்தினை தெரிவிக்குமுகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிற்கு கொழுப்பு சென்றிருந்தேன். அப்போது கொழும்பிலிருந்தே எனது பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுவிட்டது. அத்துடன் தற்போது உங்களுக்கு இந்நேர்காணலை வழங்குவதற்கு 1 மணித்தியாலயங்களுக்கு முன்னர் கொழும்பு பாதுகாப்பு செயலகத்தில் இருந்து என்னை தொடர்பு கொண்ட அதிகாரி ஒருவர் எனக்கு வழங்கப்பட்டுள்ள குண்டு துளைக்காத வாகனத்தை உடனடியாக திருப்பித் தருமாறு கேட்டிருந்தார். நாளை மறுதினம் திங்கட் கிழமை அதை உத்தியோக பூர்வமாக கையளிப்பதாக உறுதி அளித்துள்ளேன்.

நேர்காணல்கள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. XIII

...............................

Read more...

Thursday, March 19, 2009

விமானப்படை பேச்சாளர் இலங்கைநெற் இற்கு வழங்கிய பேட்டி.



விமானப்படையின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக்க நாணயக்கார அவர்கள் இலங்கைநெற் இற்கு மின்னஞ்சல் ஊடாக வழங்கியுள்ள பேட்டி.

கேள்வி : இறுதியாக புலிகள் மேற்கொண்ட தாக்குதலின் போதும்கூட புலிகளின் விமானங்கள் கொழும்பு வரமுன்னர் விமானப்படையினரால் தடுக்க முடியாமல் போனதற்கு காரணம் என்ன?

பதில் : புலிகளின் விமானங்கள் தாளப்பறந்து முடியுமானவரை நிலமட்டத்துடன் பறந்து வந்துள்ளது. புலிகள் பயன்படுத்திய சிலின் 143 விமானங்களின் அதிகூடிய பறப்புவேகம் மணித்தியாலயத்திற்கு 240 கிலோ மீற்றர்கள் ஆகும். எமது கண்காணிப்பு கருவிகளில் ஆகக்குறைந்தது மணித்தியாலயமொன்றிற்கு 400 கிலோமீற்றர் தூரம் பதிவு செய்யப்பட்டுள்ளமையால் வேகம் குறைந்த விமானம் ஒன்றை குறிப்பாக இரவு நேரத்தில் இனம் காண்பது கடினம்.

கேள்வி : கட்டுநாயக்க பகுதியில் சுட்டுவீழ்த்தப்பட்ட விமானம் தாக்கப்பட்ட விதம் குறித்து விரிவாக விளக்க முடியுமா?

பதில் : கட்டுநாகயக்க விமானப்படைத்தளத்தில் நிலைகொண்டுள்ள 32 வது விமான எதிர்பு துப்பாக்கிப் படைப் பிரிவினரால் விமானம் சுட்டு வீழ்த்ப்பட்டதுடன் புலிகளின் விமானி 12.07 மில்லி மீற்றர் துப்பாக்கியினால் தாக்கப்பட்டார். அவரது நுரையீரல் பகுதியில் குண்டொன்று தங்கிக்கொண்டது.

கேள்வி : சரியான நேரத்தில் விமானியின் உடலில் குண்டுபாய்ந்து அவரை மயக்கமடைய செய்திருக்கா விட்டால் அவர் கிபீர் விமானங்களின் தரிப்பிடத்தை தாக்கியிருப்பார் எனக் கூறப்படுகின்றது. அவ்வாறு இடம்பெற்றிருந்தால் அதன் விளைவுகள் எவ்வாறு இருந்திருக்கும்?

பதில் : அது அவ்வாறுதான், அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருக்காவிட்டால் விமானத் தரிப்பிடத்தை மோதித் தாக்கியிருப்பார்.

கேள்வி : புலிகளால் தமது இலக்குகளை அடைய முடிந்திருந்தால் வன்னிப்போரில் அது எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்?

பதில் : தரித்து நின்ற விமானங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தாக்குதலில் அவர் வெற்றி கண்டிருந்தால் விளைவுகள் பாரதூரமானதாக இருந்திருக்கும். ஆனால் நாம் எமது முழுப்பலத்தையும் ஓர் இடத்தில் குவித்து வைத்திருக்கவில்லை. காரணம் இவ்வாறான தாக்குதலை நாம் எந்த நேரத்திலும் எதிர்பார்த்தே இருந்தோம். ஆனால் ஒன்று மட்டும் உண்மை புலிகளின் பொய்பிரச்சாரத்திற்கும் தம்மவர்களை உற்சாகப்படுத்துவதற்கும் புலிகளுக்கு உதவியாக அமைந்திருக்கும்.

கேள்வி : புலிகளிடம் மேலும் விமானங்கள் இல்லை என்று நம்புகின்றீர்களா?
பதில் : அவர்களிடம் மிகவும் சிறிய ரக விமானங்கள் ஒன்று அல்லது இரண்டு இருக்காலாம்.

கேள்வி : வன்னிக் கள நிலமைகள் எவ்வாறு காணப்படுகின்றது?

பதில் : யுத்தக்களம் புதுக்குடியிருப்பின் வடகிழக்குப் பகுதிக்குள்ளும் சாலையின் மேற்குப் பகுதியினுள்ளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கேள்வி : இன்றைய படையினரின் வெற்றிக்கான பின்னணி யாதெனக் கருதுகின்றீர்கள்?


பதில் : சிறந்த அரசியல் தலைமையும் இராணுவத்தலமையும் முதற் காரணம், இரண்டாவது யுத்தம் சம்பந்தமான விடயங்களை மக்களுக்கு சரியான முறையில் எடுத்துச் செல்லுதலுடன் புலிகளின் விசமப் பிரச்சாரங்களை முறியடித்தல். மூன்றாவது யுத்தத்தில் பொதுமக்கள் பாதிப்படைகின்ற விடயங்களை அவதானித்து அவர்களை சாதுரியமாக பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துதல். நான்காவது வீரர்களை வெற்றியை நோக்கி உற்சாகப்படுக்தல்.

கேள்வி : வன்னி மீட்ப்பு போரின் உங்கள் பங்களிப்பு யாது? அவற்றில் குறிப்பிடக் கூடிய சில விடயங்களை விரிவாக கூற முடியுமா?

பதில் : மேலே குறிப்பிட்ட 2, 3, 4 என்பவற்றைதான் நாம் செய்து வருகின்றோம்.

கேள்வி : 1990 களின் நடுப்பகுதியில் சாம் ரக விமான எதிர்ப்பு இலகு ஏவகணைகள் விமானப்படையினருக்கு அச்சுறத்தலாகவும் சில காலங்கள் விமானப்படையின் விமானங்கள் வன்னியின் வான்பரப்பில் பறக்காமல் கூட இருந்திருக்கின்றது. அவ்வாறு புலிகள் மீண்டும் ஒரு முறை விமான எதிர்ப்பு ஏவகணைகளைத் தருவித்து விமானப்படையினருக்கு பாரியதோர் அச்சுறத்தலை உருவாக்குவார்களாயின் வன்னிப் போரின் நிலைமைகளில் எவ்வாறான மாற்றங்கள் ஏற்படும்?

பதில் : தானியங்கி ஏவுகணை எதிர்பு சாதனங்களை நாம் கொண்டுள்ள வரைக்கும் சாம் போன்றவற்றால் எமக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது.

கேள்வி : இன்று வன்னியின் ஒரு சிறிய நிலப்பரப்பினுள் பெருந்தொகையான மக்களும் புலிகளும் முடங்கியுள்ளனர் அல்லது முடக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் புலிகளின் இலக்குகளை நீங்கள் எவ்வாறு தனித்து இனங்காண்கின்றீர்கள்?

பதில் : நாம் இலக்குகளைத் தாக்கும்போது அப்பகுதியில் பொதுமக்கள் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர்தான் தாக்குகின்றோம். ஆனால் அங்கு சில சந்தர்பங்களில் ஒரு சில பொதுமக்கள் பாதிக்கப்படுவதுண்டு, அவர்கள் புலிகளினால் பலவந்மாக தம்முடன் மனிதகேடயங்களாக தடுத்து வைத்துள்ள மக்கள்.

கேள்வி : விமானப்படையினரின் வான் தாக்குதல்கள் மூலம் வன்னியின் அப்பாவித் தமிழ் மக்கள் இலக்கு வைக்கப்படுகின்றார்கள் என புலிகளால் வெளியிடப்படுகின்ற செய்தி பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

பதில் : புலிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கடந்த வருடம் மார்களி மாதம் மற்றும் இவ்வருடம் ஜனவரி மாதங்களில் இவ்வாறான பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தனர். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

கேள்வி :வன்னியில் வான்படையினர் கிளெஸ்ரெர் போன்ற தடைசெய்யப்பட்டுள்ள குண்டுகளை வீசுவதாக புலிகளின் செய்திகளின் ஊடாக தெரியவருகின்றது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் : உலக யுத்த விதிகளுக்கமைய தடைசெய்யப்பட்ட கிளெஸ்ரர் உட்பட எந்தவிதமான குண்டுகளையும் நாம் பயன்படுத்துவதில்லை.

கேள்வி : உங்களது கணிப்பில் இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற யுத்தம் எவ்வளவு காலத்தில் முடிவு பெறும் என எதிர்பார்கின்றீர்கள்?

பதில் : இது விடயத்தில் குறிப்பிட்டதோர் காலவரையறையை கூற முடியாது. புலிகள் தடுத்து வைத்திருக்கின்ற மக்களை விடுக்கின்றபோது யுத்தம் முடிவுக்கு வரும்.

கேள்வி : புலிகள் இயக்கம் முற்று முழுதாக அழிக்கப்பட்டு அல்லது பலமிழக்க செய்யப்பட்ட பின்னர் தமிழ் மக்களுக்கான தீர்வு எவ்வாறு அமையும் என எதிர்பார்கின்றீhகள்?

பதில் : தமிழ் மக்களுக்கு சமூக, பொருளாதாரா, அரசியல் அபிவிருத்தி தேவைப்படுகின்றது. பொருளாதார வளர்ச்சி சமூக வழர்ச்சி மற்றும் அரசின் மீது நம்பிக்கையை கொண்டுவரும். தமிழ் மக்களுடைய நிலைமைகளை சிங்கள மக்கள் யாதார்த்த பூர்வமாக உணர்ந்து கொண்டு இனங்களுக்கியையேயான இணக்ப்பாடொன்றை உருவாக்க தம்மை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். XIII

Read more...

Friday, December 16, 2011

த. தே கூ வினுள் இடம்பெறும் பனிப்போரில் நாம் நடுநிலை வகிப்போம். சித்தார்த்தன்.

புளொட்டினுள் சில்லறைகள் கிடையாது என்றும் கூறுகின்றார்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் தலைமைப் பதவிக்காக முன்னாள் ஆயுததாரிகட்கும், ஆயுதம் தாங்காதோருக்குமிடையே பனிப்போர் ஒன்று இடம்பெற்றுவருகின்றது. இந்நிலைமைகள் தொடர்பாக அக்கூட்டமைப்பின் பங்காளியாக தம்மை அண்மையில் இணைத்துக்கொண்டுள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன்அவர்களிடம் இலங்கைநெற் நேர்காணல் ஒன்றை மேற்கொண்டது.

கேள்வி - நீங்கள் இப்போது முற்றுமுழுதாக தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து விட்டீர்களா?

பதில் - எங்களைப் பொறுத்தமட்டில் நாங்கள் முற்றுமுழுதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றோம்.

கேள்வி -தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு கூட்டமைப்பே அல்ல எனவும் அது புலிகளை தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறுவதற்காக புலிகளால் உருவாக்கப்பட்டதோர் கூட்டு எனவும் கூறிவந்திருக்கின்றீர்கள். தற்போது அக்கூற்றை வாபஸ் பெறுகின்றீர்களா?

புதில் - இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் 2009 போர் முடிவடைந்தபின் அவர்களுடைய நிலைப்பாடு முற்றுமுழுதாக மாறியிருக்கிறது. அங்கு வெளிநாட்டில் புலிகள் என்று பேசப்பட்டாலும் இலங்கையைப் பொறுத்தமட்டில் புலிகள் என்றொரு விடயமே கிடையாது. அது முற்றுமுழுதாக அற்றுப்போன விடயமாகவே பார்க்கப்படுகிறது. அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தற்போது புலிகளை ஒருவிடயமாக பார்ப்பதில்லை. 2009 க்கு பின்னர் அவர்கள் புலிகள்தான் ஏகபிரநிதிகள் என்றோ புலிகளின் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதாகவோ, புலிகளை ஆதரிப்பதாகவோ எந்த இடத்திலும் கூறியதில்லை.

ஆகவே நிலைமைகள் முற்று முழுதாக மாறியிருக்கின்றது. இலங்கையிலே இருக்கின்ற சூழ்நிலையை பொறுத்த மட்டில் கடந்த காலத்தையெல்லாம் சிந்தித்துக்கொண்டு செயற்படுவோமாக இருந்தால் மீண்டும் எங்களுடைய மக்களை பாரதூரமான பாதாளத்திற்கு தள்ளிவிடுவோம்.

இங்குள்ள மக்களும் தன்னார்வ நிறுவனங்களும் எங்களுடன் பேசி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணையுமாறு கேட்டார்கள். அதற்கேற்பவே நாம் அவ்வாறு இணைந்து கொண்டுள்ளோம்.

நாம் இணைந்து கொண்ட பின்னர் எற்பட்ட மாற்றத்தை பார்பீர்களானால், வெறும் 64000 வாக்குகளை யாழ் குடா நாட்டிலே பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து பிரச்சாரம் செய்த பின்னர் ஏறக்குறைய 120000 (இது முற்றிலும் எமக்காக அளிக்கப்பட்ட வாக்குகள் என நான் சொல்ல வரவில்லை) வாக்குகளை பெற்றிருக்கின்றது. எனவே மக்கள் இந்த ஒற்றுமையை விரும்புகின்றார்கள் என்பதை உணர முடிகின்றது.

கேள்வி - தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளை ஏற்றுக்கொள்ளவில்லை என நீங்கள் கூறினாலும், அவர்கள் வெளிநாட்டுப்பயணங்களை மேற்கொள்ளுகின்றபோது, புலிகளின் பிரதிநிதிகளை புலம்பெயர் தேசங்களில் திரைமறைவில சந்திப்பதாக கூறப்படுகின்றதே..

பதில் - அவர்கள் அவ்வாறு சந்திக்கின்றார்களா என்பது எனக்கு தெரியாது. சில வேளைகளில் அது பழைய நட்பு ரீதியானதாகவும் இருக்கலாம். எது எவ்வாறாயினும் பகிரங்கமாக அவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதே எமக்கு தேவை.

கேள்வி - கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நீங்கள் தலைமை தாங்குகின்ற புளொட் அமைப்பினை தேச விரோத கும்பல் என்றும், ஒட்டுக்குழு என்றும் அதேநேரத்தில் நீங்கள் அவர்களை புலிகளின் எடுபிடிகள் என்றும் வசை பாடி வந்துள்ளீர்கள். இவ்வாறான கருத்துக்களால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட தாக்கங்களுக்கான நிவாரணம் பற்றி பேசியதுண்டா?

பதில் - ஆம் நாங்களும் அவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றோம், அவர்களும் எம்மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருக்கின்றார்கள். துரோகி என்று சொன்னால், புலிகளுக்கு எதிராக இருந்தவர்கள் யாவரும் துரோகிகள் என வர்ணிக்கப்பட்டார்கள், அவ்வாறே நாமும் வர்ணனை செய்யப்பட்டோம். பலமான இயக்கமொன்றின் தவறை சரியாக சொன்னாலும் அது தவறாக மக்களால் எடுத்துக்கொள்ளப்பட்ட ஓர் காலம் இருந்தது. அதாவது புலிகளை எதிர்ப்பவர்கள் துரோகிகள். நாம் புலிகளை எதிர்த்தோமே தவிர மக்களை எதிர்க்கவில்லை. புலிகளுக்குக்கூட நாம் தீங்கு செய்யவில்லை அவர்கள் செய்கின்ற விடயங்கள் மக்களை ஆபத்தில் போடப்போகின்றது எனக் கூறினோம், ஆனால் அவ்வாறு கூறுவதும் தவறு என்றார்கள். மே 19ம் திகதி நாம் கூறியவை சரி என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.

இன்று உயிரைத் தவிர யாவற்றையும் இழந்த மக்களையே காண்கின்றோம் இம்மக்கள் மத்தியிலே நாம் தொடர்ந்தும் பிளவு பட்டு நிற்கக்கூடாது என்ற காரணத்திற்காக பழை விடயங்களை பழையவையாக விட்டுவிட்டோம்.

கேள்வி - தேர்தலில் ஒற்றுமை வேண்டும் என்பதற்காக இணைந்திருக்கின்றீர்கள் அப்படித்தானே

பதில் - தேர்தலில் மாத்திரமல்ல உரிமை விடயத்திலும் ஒற்றுமை வேண்டும் என்பதற்காவே நாம் இணைந்துள்ளோம்


கேள்வி - இன்று தமிழ் மக்கள் மத்தி;யில் முன்னணியில் இருப்பது அரசியல் உரிமைப் பிரச்சினையா, பொருளாதார பிரச்சினையா?

பதில் - என்னைப்பொறுத்தவரை முன்னணியில் இருப்பது அரசியல் உரிமைப் பிரச்சினையே. ஏனென்றால் சரியானதோர் அரசியல் தீர்வு கிடைத்து நாமே எங்களுடைய பிரதேசங்களை பார்கின்றபோது, சரியான அபிவிருத்தியைச் செய்யமுடியும்.

இன்று அங்கு அபிவிருத்திகள் நடைபெறுகின்றது. ஆனால் அவை மக்களை நேரடியாக சென்றடையவில்லை. மக்களுக்கு என்ன தேவை என்று அறியாமல் கொழும்பிலிருந்து கொண்டு விடயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவைகள் தான் பிழை என்று நாம் கூறுகின்றோம்.

அத்துடன் அப்பிரதேச மக்களால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி வேலைகளே உச்ச பலனை கொடுக்கும் என நம்புகின்றோம்.

அபிவிருத்தி மற்றும் அரசியல் தீர்வு விடயம் இரண்டும் சாமாந்தரமாக செல்லவேண்டும் என விரும்புகின்றோம்.

கேள்வி - கொழும்பிலிருந்து கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற விடயங்களின் பலன் மக்களை சென்றடைவில்லை எனக் கூறுனீர்கள். அவ்விடயங்களில் உள்ள குறைபாடுகளை இனம்கண்டு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரியப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டீhகளா?


பதில் - கூறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றோம். ஆனாலும் நாங்கள் கூறுகின்ற விடயங்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுகின்ற நிலையில் இல்லை என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.

கேள்வி - புளொட் அமைப்பின் வெளி நாட்டுக்கிளைகளின் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளது?

பதில் - புலிகள் இருந்த காலத்தில் மிகவும் பலவீனமான நிலையிலேயே அவர்கள் இருந்தார்கள். இருந்தபோதும் தம்மால் முடிந்தவற்றை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

கேள்வி - எந்தெந்த நாடுகளில் உங்கள் கிளைகள் இயங்குகின்றன. அக்கிளைகளில் உறுப்பினர்களாக இயங்குகின்றவர்களின் எண்ணிக்கை எவ்வாறு உள்ளது?

பதில் - சுவிஸ், ஜேர்மன், கனடா, பிராண்ஸ் உட்பட இன்னும் சில நாடுகளில் கிளைகள் இயங்குகின்றது. கிளைகளில் எத்தனைபேர் அளவில் உள்ளார்கள் என்பது தொடர்பான சரியான கணக்கு என்னால் தற்போது கூற முடியாது. மிகச் சொற்பமானவர்களே உள்ளார்கள் அவர்களும் முழு நேரமாக இங்குவதில்லை.

கேள்வி - 86 களில் அதிகூடிய ஆட்பலத்தினை கொண்ட அமைப்பென்ற பெருமையை புளொட் அமைப்பு கொண்டிருந்தது. புலம்பெயர் தேசங்களிலே முன்னாள் போராளிகள் என்ற தகவலை திரட்டுகின்றபோதுகூட (புலிகள் உட்பட) புளொட் அமைபினரே அதிகம் காணப்படுகின்றனர். ஆனால் உங்கள் கிளைகளில் சொற்பானவர்களே செயற்படுகின்றதை காணமுடிகின்றது. இந்நிலைமைக்கான காரணம் என்ன?

பதில் - இவர்களில் பலர் புலிகளின் அச்சுறுத்தலால் தப்பி ஓடியவர்கள், அவர்கள் அந்த அச்சுறுத்தல் அங்கும் தொடரக்கூடாது என்ற காரணத்திற்காக ஒதுங்கிக்கொண்டார்கள், சிலர் புலிகளுடன் இணைந்து செயற்படுகின்றார்கள். ஆனாலும் அங்கிருகின்றவர்களில் பலர் எம்முடன் தொடர்பில் உள்ளனர். இங்கு வருகின்றபோது வந்து சந்திக்கின்றார்கள், உதவிகளை செய்கின்றார்கள்.

கேள்வி - புலிகளின் வளர்சிக்கு அவ்வியக்கத்தின் புலம்பெயர் கிளைகள் பாரிய பங்களிப்பைச் செய்துள்ளது. அக்கிளைகளின் செயற்பாட்டாளர்களால் நிராயுத பாணிகளாக ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் தங்கள் பக்கம் இணைத்துக்கொண்டு தலைமைக்கு வலுச்சேர்க்க முடிந்துள்ளது. ஆனால் புலம்பெயர் தேசத்திலே ஆயிரக்கணக்கிலான முன்னாள் புளொட் உறுப்பினர்கள் உள்ளபோதும் உங்கள் கிளைச் செயற்பாட்டாளர்களால் தமது முன்னாள் தோழர்களைக்கூட இணைத்துக்கொள்ள முடியாது போயுள்ளது. இதற்கான காரணத்தை கிளைச் செயற்பாட்டாளர்களிடம் கேட்கின்றபோது, கிளைகள் எவ்வாறு செயற்படவேண்டும என்பது தொடர்பாக சரியான வரையறைகள் தலைமையால் வகுத்துக் கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. மறுபுறத்தில் கிளைகளுடன் இணைந்து செயற்படாமல் இருக்கின்ற முன்னாள் உறுப்பினர்களிடம் கேட்கின்றபோது, இங்குள்ள கிளைகள் சில சில்லறைகளாலேயே நிர்வகிக்கப்படுகின்றது இவர்களுடன் இணைந்து செயற்படுவதன் ஊடாக எந்தவொரு இலக்கையும் அடைய முடியாது எனக் கூறப்படுகின்றது. இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

பதில் - ஏவ்வாறு செயற்படவேண்டும் என்கின்ற வியூகங்களையும் , வரையறைகளையும் நாம் எழுத்துமூலமாக அல்லாவிட்டாலும் வாய்மூலமாக வழங்கியிருக்கின்றோம். உங்களுக்கும் தெரியும் புலிகள் இருந்த காலத்தில் மிக சொர்ப்பமானவர்களே வேலை செய்தார்கள், அவர்களுள் ஒருவரை பொறுப்பாளராக நியமித்து விடயங்களை இயக்கினோம். சில தோழர்கள் அவர்களை சில்லறைகள் என்று சொல்வார்களானால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. எங்களை பொறுத்தவரை நாம் எவரையும் சில்லறை என்றும் பார்க்கவில்லை தாள் என்றும் பார்க்கவில்லை தோழர் என்றுதான் பார்கின்றோம். அவர்களுடன் சேர்ந்து விரும்பாதவர்கள் நேரடியாக எம்மை தொடர்பு கொள்ளலாம்.

எமக்கு தற்போது கட்சியையும் கிளைகளையும் வழர்ப்பது நோக்கமல்ல. இங்கு யாவற்றையும் இழந்து நிற்கும் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்பதே அவா. உதவி செய்ய விரும்புகின்ற தோழர்கள் சிலர் அங்கிருந்து இங்கு வருகின்றபோது நேரடியாக பிரதேசங்களுக்குச் சென்று தம்மால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து செல்கின்றனர். இதுதான் எங்கள் தேவையும்.


கேள்வி - நீங்கள் புலம்பெயர் நாடுகளில் பல கிளைகள் இயங்குவதாக கூறினாலும், எந்த கிளையும் மக்களுடன் தொடர்பில் இல்லை. எந்தக்கிளைக்கும் ஆதரவாளர்கள் என்று எவரும் இல்லை. ஒரிரு நபர்களுடன் மக்களுடன் தொடர்பாடல் இல்லாத கிளைகளின் பயன் என்ன?

பதில் - கிளைகள் மக்களுடன் தொடர்பில் இல்லை என்பதை நான் நம்பவில்லை. நான் சுவிற்சர்லாந்துக்கு வந்திருந்தபோது பலர் வந்து என்னைச் சந்திருந்தார்கள். அங்கிருக்ககூடியவர்கள் இங்குள்ளவர்கள் போல் முழுமையாக செயற்பட முடியாது என்ற ஒரு விடயம் உண்டு. அடுத்து நாம் அவர்கள் அவ்வாறு செயற்படவேண்டும்மென எதிர்பார்கவும் இல்லை.

ஆனால் தற்போது நிலைமைகள் மாறியுள்ளது. முன்னர் மக்கள் புலிகளுக்கே பணத்தினை வழங்கினர். இங்குள்ள மக்களை அழிக்க பணத்தினை புலிகளுக்கு வழங்கிய மக்களுக் தற்போதைய நிலைமைகளை விளங்கப்படுத்தக்கூடிய முயற்சிகளை எடுத்து இங்குள்ள மக்களுக்கு உதவிகளை புரியக்கூடிய செயற்பாடுகளை கிளைகள் எடுக்குமாக இருந்தால் அது சிறப்பாக அமையும்.

கேள்வி - சர்வதேச கிளைகளின் பொறுப்பாளர் என்கின்ற பதவிக்கு போட்டிகள் நிலவுவதாக அறியமுடிகின்றதே?

பதில் - அவ்வாறான பதவியொன்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் எவ்வாறு அப்படியானதோர் போட்டி நிலவ முடியும்.

கேள்வி - தற்போது புளொட் அமைப்பின் செயற்பாடுகள் எவ்வாறுள்ளது?

பதில் - எமது ஆயுதம் தரித்த போராளிகளை முற்றுமுழுதாக நிலைமாற்றி அரசியல் பயிற்சிளை வழங்கி வீடுகளுக்கு அனுப்பியுள்ளோம். முகாம்கள் யாவற்றையும் மூடியுள்ளளோம், இயக்கம் என்கின்ற நிலைமாறி தற்போது அரசியல் கட்சியாக செயற்படுகின்றோம்.

கேள்வி - தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை கைப்பற்றுவதற்காக அங்கு பனிப்போர் ஒன்று இடம்பெறுகின்றது. இப்போர் முன்னாள் ஆயுததாரிகளுக்கும் ஆயுதம் தாங்காதோருக்குமானது எனச் சொல்லப்படுகின்றது. இப்பனிப்போரில் நீங்கள் எங்கு நிற்கின்றீர்கள்?

பதில் - நாம் எங்கும் இல்லை. அது அவர்களுடைய பனிப்போர். அவர்களே அதை பார்த்துக்கொள்ளட்டும். நாம் எமது தனித்துவத்துடன் நிதானமாக இருக்கின்றோம்.

கேள்வி - தற்போது காணப்படுகின்ற பிளவு மேலும் விரிசலடைந்தால்?

பதில் - இது விரிசல் அடையக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு அதற்காக முழு முயற்சி எடுத்துக்கொண்டிருக்கின்றோம். எந்தப்பக்கம் என்ற கேள்விக்கே இடமில்லை.

கேள்வி - அவ்வாறாயின், பிளவு என்பது தவிர்க்க முடியாது என்ற நிலை வந்தால் நீங்கள் எந்தப்பக்கமும் செல்லாமல் தனித்து செயற்படுவீர்களா?

பதில் - அது இப்போதைக்கு கூறமுடியாது. XIII



Read more...

Thursday, March 26, 2009

கருணாவுடனான விசேட நேர்காணல்


அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் இன்றைய வன்னிக்கள நிலமைகள் மற்றும் வர்ஷா கொலை தொடர்பாக இலங்கைநெற் விசேட தொடர்பாளர் விருகோதரன் அவர்களுக்கு வழங்கிய பேட்டி.

கேள்வி : திருமலைச் சிறுமி வர்ஷா கொலை தொடர்பான உண்மைகளை விளக்க முடியுமா?

பதில் : ஆம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிள்ளையானின் சகாக்காளான சுறங்க, ஜனா ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டுள்ள படுபாதகச் செயல்.
திருமலைப் பிரதேசத்தில் சுறங்கவின் மேற்பார்வையிலிருந்த பிள்ளையானது பிரத்தியேக முகாம் ஒன்றில் வர்ஷா தடுத்து வைக்கப்பட்டிருந்து கொலை செய்யப்பட்டுள்ளார். அங்கிருந்து வர்ஷாவின் பாடசாலைச் சீருடைக்கான ரை மற்றும் சீருடையின் ஒரு பகுதி என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அவ் அலுவலகம் பொலிஸாரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இக்கொலையுடன் தொடர்புடையவர்கள் பொலிஸாரால் இனம்காணப்பட்டுள்ளனர். ஜனா கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் இருந்தபோது இதுபோன்று தாம் மேற்கொண்டிருந்த பல கொலை கொள்ளைகள் பற்றிப் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருந்தார். இக்கொலைகள் வெளிவரும் போது பிள்ளையான் உட்பட பலரும் தண்டனைக்குட்படுவர் எனும் பயத்தில் பிள்ளையான் ஜனாவை அச்சுறுத்தி அவரை தற்கொலை செய்து கொள்ளவைத்துள்ளார். தற்போது சுறங்க பிள்ளையானது பாதுகாப்பில் உள்ளார்.

கேள்வி : நீங்கள் எவ்வளவுதான் பிள்ளையான் மீது குற்றஞ் சுமத்தினாலும், இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் உங்கள் பாசறையில் வளர்ந்தவர்கள் மட்டுமல்ல நீங்கள் புலிகளியக்கத்தில் இருந்து விலகி வந்தபோது உங்கள் அழைப்பை எற்றுக்கொண்டு உங்களுடனேயே வந்தவர்களாவர். புலிகளின் அராஜகங்களை வெறுத்து வெளியேறியவர்கள் எனக் கூறிக்கொள்ளும் இவர்கள் தொடர்ந்தும் மனித குலத்திற்கெதிரான செயல்களில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ளாததற்கான காரணம் என்ன?

பதில் : இது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் வேதனையளித்துக்கொண்டிருக்கின்ற விடயம். இவ்விடயத்தில் பலதடவைகள் பிள்ளையானிடம் பேசியிருக்கின்றேன், கொலை கொள்ளைகளை நிறுத்தாதவிடத்து மக்கள் மனங்களை வெல்லமுடியாது என்ற உண்மையை பல தடவைகள் அறிவுறுத்தியிருக்கின்றேன். ஆனால் அவர் அவற்றை ஏற்கவில்லை அதன் பிரதிபலன் இன்று வரலாற்றில் பதிவாகியுள்ளது. பச்சிளம் பாலகி வர்ஷா கூட இவர்களின் வெறிக்கு பலியாகியுள்ளாள் என்பது வேதனை. எவ்வாறனதொரு சூழலில் இவருக்கு இந்த கொலைவெறி மனநிலை உருவானது என்பது என்னால் சரியாக கூறமுடியாதுள்ளது. பிள்ளையான் புலிகளியக்கத்தில் இருக்கும்போது தனிப்பட்ட குரோதம் காரணமாக தனது கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை அடித்து கொலை செய்திருந்ததுடன் அதற்காக புலிகளியக்கத்தின் புலனாய்வுத் துறையினரால் இவருக்கு ஒன்றரை வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

இதை எதற்காக கூறினேன் என்றால் இவர்கள் எனது பாசறையில் வளர்ந்தவர்கள் என்பதற்காக இவர்களது தான்தோன்றித்தனமான தவறுகளுக்கு என்மீது குற்றஞ்சுமத்துவது பொருத்தமானது என கருதவில்லை. ஓட்டு மொத்தத்தில் தமது சுயதேவைகளை பூர்த்தி செய்ய விடுதலை இயக்கங்களில் நுழைந்தவர்களுள் இவர்களும் அடங்குவர்.

கேள்வி : வர்ஷா கொலை வழக்கில் தேடப்படுகின்ற சுறங்க என்பவர் நீங்கள் இந்தியாவில் இருந்தபோது கூட உங்களுடன் இருந்தவர் எனக் கூறப்படுகின்றது. எவ்வாறு பிள்ளையானுடன் இணைந்து கொண்டார்?

பதில் : இல்லை. இவர் இந்தியாவில் என்னுடன் இருக்கவில்லை, பெங்களுரில் ஈஎன்டிஎல்எப் என்கின்ற குழுவுடன்தான் இருந்தார். அவர் இந்தியவில் இருந்து இலங்கை வந்து பிள்ளையானுடன் இணைந்து கொண்டார். பிள்ளையானது நிதிவிவகாரங்களுக்கு பொறுப்பாக இவரே செயற்பட்டார். பிள்ளையானால் கொழும்பில் உள்ள வர்த்தகர்களை கடத்தி பணம்பெறப்பட்ட பணம் இவராலேயே நிர்வகிக்கப்பட்டது.

கேள்வி : வர்ஷா கொலை விசாரணையில் அரச தலையீடு அதிகரித்து வருவதாகவும், இக்கொலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தொடர்பை அரசு மூடி மறைக்க முற்படுவதாகவும் பேசப்படுகின்றது. இதில் எவ்வளவு உண்மைகள் உண்டு?

பதில் : இது முற்றிலும் பொய்யானதோர் திட்டமிட்ட பிரச்சாரம். சுயாதீனமானதோர் விசாரணையை மேற்கொள்ளுமாறு திருமலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அரசு கட்டளையிட்டுள்ளது. இவ்விடயத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தொடர்புபட்டுள்ளதை பொலிஸார்தான் மக்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார்கள். இவ்விசாரணையில் பொலிஸாருக்குள்ள அக்கறையை திருமலை மக்கள் நன்கு அறிவார்கள்.

கேள்வி : வர்ஷா சம்பவத்துடன் கைது செய்யப்பட்டுள்ளவர்களுள் முஸ்லிம் இளைஞர் ஒருவரும் அடங்குவதாக தெரியவருகின்றது. அவருக்கும் ரிஎம்விபி யினருக்கும் இடையேயுள்ள தொடர்பு என்ன?

பதில் : இவர் பிள்ளையானால் உருவாக்கப்பட்ட இன நல்லுறவுப் பணியகத்தில் கடமையாற்றி வந்தவர்.

கேள்வி : இன நல்லுறவு பணியகம் என்கின்ற இந்நிறுவனம் எவ்வாறான பணிகளை முன்னெடுத்து வருகின்றது?

பதில் : அவர்கள் முன்னெடுப்பதற்கென ஒன்றும் இல்லை. இனங்களுக்கிடையில் நல்லதோர் புரிந்துணர்வு உருவாகி வருகின்றது. ஆனால் பிள்ளையானால் உருவாக்கபட்ட இப்பணியகத்தில் பணியாற்றுபவர்கள் அனைவருமே நடத்தை தவறியவர்கள். பல கொலை கொள்ளைகளுடன் தொடர்புடையவர்கள். அதற்கு வர்ஷாவின் விடயம் நல்லதோர் சான்று.

கேள்வி : பொலிஸ் காவலில் இருந்து தற்கொலை செய்து கொண்ட ஜனா எனப்படும் வரதராஜா ஜனார்த்தன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் எனவும் கடந்த தேர்தல் காலங்களில் கட்சியின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் ஒட்டுவதில் ஈடுபட்டதன் மூலமே தனக்கு அறிமுகமானார் எனவும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். ஜனா உங்களுக்கு எவ்வாறு பரிட்சயமானவர்?

பதில் : இவர் ரிஎம்விபி யின் ஆரம்பகால உறுப்பினர் என்பதுடன் பிள்ளையானது தீவிர விசுவாசி. இவரை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இல்லை என்பது பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பதை ஒத்ததாகும். ஜனா வர்ஷாவின் கொலையுடன் கைதாகி சயனைட் அருந்தி மரணமாவதற்கு முதல் மாதம் (மாசிமாதம்) உறுப்பினர்களுக்கான சம்பளம் பெற்றுக்கொண்டதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. வேண்டுமானால் உங்களிடம் சமர்ப்பிப்பேன். மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

கேள்வி : ரிஎம்விபி உறுப்பினர்கள் இவ்வாறு தவறான வழியில் சென்றுள்ளமைக்கான பிரதான காரணம் உங்களுக்கும் பிள்ளையானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிளவு எனக் கொள்ளலாமா?

பதில் : இல்லை இல்லை, இது உங்கள் தவறான பார்வை. இவர்களை நாம் ஓரங்கட்டியதற்கான பிரதான காரணமே இவர்களது இவ்வாறான செயற்பாடுகள்தான். எமது இயக்கத்தில் இருந்த ஒழுக்கமான போராளிகள் மற்றும் தளபதிகள் இன்றும் என்னுடனேயே இருக்கின்றனர்.

கேள்வி : வர்ஷாவின் விடயத்தை தொடர்ந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலர் உங்களுடன் இணைந்து வருவதாக தெரியவருகின்றது. அவர்கள் மேற்கண்ட கொலை கொள்ளைகளில் அதிருப்தி கொண்டு வருகின்றார்களா? அன்றில் வேறு ஏதாவது நோக்கங்கள் இருக்குமா?

பதில் : பிள்ளையானிடம் மொத்தமாக 60-70 பேர் வரை இருகின்றார்கள். அவர்களில் பலர் தவறான கருத்துக்கள் உட்புகுத்தப்பட்டு அங்குள்ளனர். ஆனால் இன்று அவர்கள் அதை உணர்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் வர்ஷாவின் கொலையைத் தொடர்ந்து 25 பேர் எம்மிடம் வந்துள்ளார்கள். காலப்போக்கில் பிள்ளையானும் அவரது நெருங்கிய சகாக்கள் ஒருசிலருமே எஞ்சுவர்.

கேள்வி : ரிஎம்விபி யினர் ஆயுதங்களை ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உங்களிடம் வந்து சரணடைந்த அவ்வியக்க உறுப்பினர்கள் ஆயுதங்களையும் கொண்டு வந்ததாக கூறப்படுகின்றது. அவ் ஆயுதங்களை நீங்கள் என்ன செய்தீர்கள்?

பதில் : ஆம் அவர்கள் வரும்போது ஆறு ரி 56 ரக துப்பாக்கிகளைக் கொண்டு வந்தார்கள். நாம் அவற்றை இராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளோம். இங்கு நான் குறிப்பிட விரும்பும் விடயம் யாதெனில் ரிஎம்விபி யினர் 20 க்கு மேற்பட்ட கைத்துப்பாக்கிகளை வைத்துள்ளார்கள். இக்கைத் துப்பாக்கிகளே இவர்களது கொலை வெறி நாடகங்களுக்கு பயன்படுகின்றது. கடந்த வாரம் கூட சீலன் , சூட்டி போன்றோர் களுவாஞ்சிக்குடி பிரதேச சபைத்தலைவர்pன் தலையில் தமது கைத்துப்பாக்கிகளை வைத்து மிரட்டியுள்ளனர். இவ்விடயம் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளதுடன் பொலிஸார் இவர்களை தேடி வருகின்றனர்.

கேள்வி : புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி வந்தபோது கிழக்கு தமிழ் மக்களுக்கு தனியானதோர் அரசியல் தளம் வேண்டும் எனவும் அதற்காக தனிக்கட்சி ஒன்று அவசியம் ஆகையால் கிழக்கு மக்கள் அனைவரும் ஒன்று படவேண்டும் எனவும் கூறி வந்துள்ள நீங்கள் இன்று இலங்கை சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளீர்கள். ஏன் இந்த திடீர் மாற்றம்?

பதில் : இதை திடீர் மாற்றம் எனக் கூறி விடமுடியாது. நாம் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி வந்தபோது தனித்து நின்று எமது நிலைமைகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருந்தது. அதில் வெற்றி கண்டுள்ளோம். புலிகள் இயக்கம் எவ்வாறானதோர் கொடிய இயக்கம் என்பதை மக்களுக்குப் புரிய வைத்துள்ளோம். அவ்வாறு நாம் செய்யாமல் ஏதாவது ஓர் பிரதான கட்சியில் நாம் இணைந்திருப்போமேயானால் மக்கள் எம்மை துரோகிகளாகப் பார்த்திருப்பார்கள்.

அடுத்தது சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஓர் தனிச் சிங்களக்கட்சியாக பார்க்கமுடியாது. அந்தக் கட்சியின் வளர்ச்சியில் ஓர் காத்திரமான பங்கைத் தமிழர்கள் ஆற்றியிருக்கின்றார்கள். யாழ் மாவட்டத்திலே அக்கட்சி வெற்றிகளை குவித்த வரலாறு உண்டு. ஏன் சந்திரிகா அம்மையார் ஆட்சியை கைப்பற்றுவதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அதி கூடிய வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இம்முடிவை நான் தனித்து எடுத்திருக்கவில்லை. ஜனாதிபதி மகிந்த எனக்கு அழைப்பு விடுத்தபோது நான் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களுக்கும் சென்று எமது மக்களிடம் இவ்விடயம் தொடர்பாக அவர்களின் விருப்பு வெறுப்புகளை கேட்டேன். அங்குள்ள புத்தி ஜீவிகள் அனைவரையும் அழைத்து கலந்துரையாடினேன். மக்கள் தமது பூரண சம்மதத்தை தெரிவித்திருந்தார்கள்.

இன ரீதியாக கட்சிகளை அமைத்து வைத்துக்கொண்டு குரோதங்களை தொடர்ந்தும் வளர்ப்பதை விடுத்து பலம் மிக்க கட்சியொன்றுடன் இணைந்து எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதே எமது மக்களின் விருப்பமாக இருக்கின்றது.

கேள்வி : புலிகள் இயக்கம் பலவீனப்படுத்தப்பட்ட பின்னர் நீங்கள் இணைந்திருக்கும் கட்சி தமிழ் மக்களுக்கு எவ்வாறானதொரு தீர்வை முன்வைக்கப்போகின்றது?

பதில் : எமது மக்களின் தீர்வு விடயத்தில் ஜனாதிபதி மிகவும் திடகாத்திரமான கொள்கையை கொண்டுள்ளார். இன்று நிலைமைகள் மிகவும் மாறி வருகின்றது. 1983ம் ஆண்டு 13 இராணுவத்தினரை கொன்று அவர்களது உடலங்கள் கொழும்பை வந்தடைந்தபோது ஒட்டு மொத்த கொழும்பும் எரிய ஆரம்பித்தது. 3500 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் இன்று நிலமைகள் அவ்வாறில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அக்குரஸ்ச பிரதேசத்தில் 5 அமைச்சர்களை குறிவைத்து புலிகளால் தற்கொலைத் தாக்குதல் நாடாத்தப்பட்டது. அதில் பல சிங்கள மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் சிங்கள மக்கள் தமிழ் மக்களை இவ்விடயத்தில் குறை கூறவில்லை. தமிழ் மக்களின் பிரச்சனைகள் வேறு புலிகளின் பிரச்சினைகள் வேறு என்ற உண்மையை அவர்கள் உணர்ந்துள்ளார்கள்.

உங்களுடைய கேள்விக்கான பதிலுக்கு வருகின்றேன். மாகாண சபை ஒன்றினூடாக எமது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளக் கூடிய வாய்ப்பிருக்கின்றது. இணைந்த வட-கிழக்கு என தமிழ் மக்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பை புலிகளின் தலைவர் பிரபாகரன் சிதைத்துவிட்டார். இன்று வட கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த தனித் தனி மாகாணங்கள் ஊடாக தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றது.

கேள்வி : வன்னியின் யுத்த களநிலைகள் எவ்வாறு காணப்படுகின்றது?

யுத்தம் முடிவடையும் தறுவாயில் உள்ளது. 28 சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பே புலிகளிடம் உள்ளது. அரசினால் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள யுத்த சூனியப்பிரதேசத்தில் பெரும்பாலான மக்கள் உள்ளனர். அங்கு புலிகளும் உள்ளனர். மக்களின் நன்மை கருதி படையினர் மிகவும் அவதானமாக சிறிய ரக துப்பாக்கிகள் கொண்டு புலிகளுடன் போரிட்டு வருகின்றனர். கனரக மற்றும் ஆட்லறி , மோட்டார் தாக்குதல்களை நிறுத்தியுள்ளனர். இன்று இருதரப்பினருக்கும் இழப்புகள் மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றது. அது தவிர்க்க முடியாதது. ஏனெனில் இது இறுதி கட்டம் புலிகளுக்கு வாழ்வா சாவா என்ற கட்டம். இதில் மக்களும் பாதிப்படையத்தான் செய்கின்றார்கள். அதை தவிர்த்து கொள்வது முற்று முழுதாக புலிகளின் கைகளிலேயே உள்ளது. இது தொடர்பாக எம்மால் செய்யக் கூடியவற்றை சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் அரச தலைவருடனும் பேசி வருகின்றோம்.

கேள்வி : புலிகள் இயக்கம் முற்றாக அழித்தொழிக்கப்படும் என கூறுவீர்களா?

பதில்: சகல பிரதேசங்களையும் படையினர் கைப்பற்றிய பின்னர் சில காலங்கள் தேவைப்படும். புலிகளால் இனிவரும் காலங்களில் படையணிகளைத் திரட்டி தாக்குதல்களை நடாத்ததுவதற்கோ அன்றில் தமக்கென ஒர் கட்டுப்பாட்டு பிரதேசங்களை வைத்துக்கொள்வதற்கோ முடியாது. அடுத்தது கெரில்லாப் போர்தான். ஆனால் அது நீண்ட காலங்களுக்கு நிலைக்காது. காரணம் மக்கள் ஆதரவில்லாமல் அப்போர் சாத்தியமில்லை. இன்று மக்கள் யுத்தத்தை வெறுக்கின்றனர் எனவே புலம்பெயர் தேசத்தில் இருந்து இவ்யுத்தத்தை தூண்டுகின்ற எமது மக்கள் இங்குள்ள மக்களின் மனநிலையை உணர்ந்து கொள்ளவேண்டும். XIII



Read more...

Wednesday, September 15, 2010

டக்ளஸ்,கருணா,பிள்ளையான் ஆகியோரை அரசு ஒரம்கட்டி விட்டது. ஐ.தே.க பொதுச் செயலாளர்.

பிரித்தானியாவிற்கு பிரத்தியேக விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பா.உ திஸ்ஸ இலங்கைநெற் இற்கு வழங்கிய விசேட செவ்வியில் அரசாங்கம் கே.பி யுடன் உருவாக்கிக் கொண்டுள்ள உறவுகளின் பின்னர் பயங்கர வாதத்தை ஒழிப்பதற்கு அரசுடன் இணைந்திருந்த டக்ளஸ் தேவானந்தா , கருணா , பிள்ளையான போன்றோரை ஓரம்கட்டி விட்டது என தெரிவித்துள்ளார். பேட்டி கண்டவர் பீமன்.

செவ்வியின் முழுவடிவம்.

கேள்வி - தற்போது இலங்கையில் நிலவரங்கள் எவ்வாறு காணப்படுகின்றது?

பதில் - யுத்தம் முடிவடைந்த பின்னர் மக்களுக்கு வாழ்க்கைச் சுமையை குறைப்பதாக கூறினார்கள். பொருட்களின் விலை குறைக்கப்படும், மக்களின் பொருளாதாரம் மேம்படுத்தப்படும், மக்களுக்கு வேலைப்வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் , வருவாiயை அதிகரிக்கச் செய்வது போன்ற பல உறுதிகளை வழங்கினார்கள். ஆனால் இன்று மக்கள் முன்னரை விட மிகுந்த சுமையை சுமக்கவேண்டிய நிலையில் உள்ளனர்.

யுத்தத்தின் பின்னர் வடகிழக்கிலுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக அரசு உறுதியளித்தது. ஆறு மாதங்களினுள் மக்களை மீள் குடியேற்றுவோம் என உறுதி அளித்தார்கள். இவற்றில் எந்த ஒரு உறுதிமொழியையும் இந்த அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியவில்லை.

இன்று ஜனாதிபதியை அவரது குடும்பம் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது. குடும்பத்தை காப்பாற்றுவதற்காக சட்டங்கள் கையிலெடுக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட சகல உறுதி மொழிகளையும் மறந்து அரசாங்கம் தொடர்ந்தும் நிறைவேற்று அதிகார ஆட்சி முறையை பலப்படுத்தும் விதமாக அரசியல் யாப்பிலும் மாற்ற ங்களை மேற்கொண்டுள்ளது.

கேள்வி - நிறைவேற்று அதிகார ஆட்சி முறை உங்கள் கட்சியினால் கொண்டுவரப்பட்ட ஒன்றுதானே?

பதில் - 1978ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சி முறையை இந்நாட்டிற்கு அறிமுகம் செய்து வைத்தது உண்மை. ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சிமுறைக்காக அன்று ஜே.ஆர் ஜெயவர்த்தன அவர்கள் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றே அதை செய்திருந்தார் என்பதை திடமாக கூறுகின்றேன். ஆனால் அவர் அன்று அந்த அதிகாரங்களை இன்றுள்ளவர்கள்போல் துஸ்பிரயோகம் செய்யவில்லை. நாட்டின் அபிவிருத்திக்காகவே பயன்படுத்தினார். ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தல் வாக்குறுதியாக நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பேன் என்று கூறி ஆட்சியை பிடித்த பின்னர் , நிறைவேற்று ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மேலும் பலப்படுத்திவருகின்றார். இவ்விடயத்தினை நாம் முற்றாக எதிர்கின்றோம்.

கேள்வி - இடைத்தங்கல் முகாம் மக்களின் நிலைமைகள் எவ்வாறுள்ளது?

பதில் - இடைத்தங்கல் முகாம் மக்களை மீள் குடியேற்றும் பணிகள் மந்தகதியிலேயே இடம்பெறுகின்றது. இவ்வரசாங்கம் 6 மாத காலத்தினுள் மீள் குடியேற்றுவதாக இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் வழங்கிய உறுதிமொழியை காப்பாற்றத் தவறியுள்ளது. இன்னும் அம்முகாம்களில் லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர்.
இது நாட்டின் எதிர்காலத்தில் மீண்டும் பயங்கர வாதம் ஒன்று உருவாக வழிவகுக்கலாம்.

கேள்வி - ஐக்கிய தேசியக் கட்சி இன்று ஆட்சியிலிருந்திருந்தால், இவ்விடயத்தை எவ்வாறு கையாண்டிருக்கும்?

நாம் ஆட்சியில் இருந்திருந்தால் , இம்மக்களை அவர்களுக்கு சொந்தமான இடங்களில் கால நேரத்துடன் குடியமர்த்தி , அவர்கள் தங்கள் சொந்த பந்தங்களுடன் வாழக்கூடிய நிலை ஒன்றினை நிச்சயமாக ஏற்படுத்தியிருப்போம். நாம் இம்மக்களை சிறைக்கைதிகளைப் போல் நடாத்தாமல் , அம்மக்கள் சுயமாக தொழில் புரிந்து கௌரவமாக வாழக்கூடிய நிலையை உருவாக்கியிருப்போம். ஆனால் நாம் தற்போதும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றோம்.

கேள்வி - வன்னிமக்கள் குடியேற்றப்படுவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் குறைபாடுகள் , வன்னி பிரதேச அபிவிருத்தி பற்றி குறிப்பிடுகின்றீர்கள் , அரசாங்கம் இன்று நாட்டில் பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றது. சமநேரத்தில் சமவேகத்தில் சகல விடயங்களையும் மேற்கொள்ள எமது அரசாங்கத்திடம் பொருளாதார வசதி உண்டா?

பதில் - அபிவிருத்தி நடைபெறவில்லை என நான் கூறவில்லை. தென்பகுதியில் நடைபெறுகின்ற விடயங்கள் நாட்டின் வடகிழக்கிலும் இடம்பெறவேண்டும். எமது நாட்டில் அனைவரும் இணைந்து செயற்படவேண்டும். அனைவரையும் ஒரேவிதத்தில் பார்க்கப்பட வேண்டும். தென்பகுதியில் இடம்பெறுகின்ற அதே வேலைத்திட்டங்கள் வடகிழக்கிலும் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே மேலுமோர் பயங்கர வாதம் தலைதூக்காது நாட்டைப் பாதுகாக்கலாம்.

கேள்வி - மீண்டும் நாட்டில் பயங்கர வாதம் தோன்றாலம் என்ற அடிப்படையிலான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றீர்கள். இது மக்களிடம் காணப்படும் அச்சமா?

பதில் - நிச்சயமாக கூறுகின்றேன். இடைதங்கல் முகாம் மக்களை மீள் குடியேற்றுவதை அரசாங்கம் தாமதப்படுத்துவது சாதாரணமான விடயமல்ல. இந்நாட்டில் மேலுமோர் பிரபாகரன் உருவாகாமல் இருக்கவேண்டுமென்றால் அம்மக்கள் விடயத்தில் அரசாங்கம் அதிக சிரத்தை செலுத்தவேண்டும்.

கேள்வி - எதிர்கட்சிகள் பலவீனமாகிச் செல்வதாக கூறப்படுகின்றதே..

பதில் - அரசு இன்று தனக்கெதிராக செயல்படுகின்ற கட்சிகளை பிளவு படுத்துவதிலும் , துண்டாடச் செய்வதிலும் ஈடுபட்டுவருகின்றது. எதிர்கட்சிகளின் குரல்வளைகளை நசுக்குவதற்கு அரசு வௌ;வேறு தந்திரங்களை கையாள்கின்றது. அதிகார பலத்தினால் பல அழுத்தங்களை கொடுத்து சிதற வைக்க முயற்சி செய்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சி அனைத்து மக்களையும் ஒரே பார்வையில் பார்த்ததோர் கட்சி. தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களை ஒரேவிதமாக பராமரித்த கட்சி. சகல இனங்களினதும் அங்கீகாரத்தைப் பெற்ற கட்சி. இவ்வாறானதோர் பாரம்பரியத்தை கொண்ட இக்கட்சியை தற்போதைய அரசாங்கம் சிதறடிக்கவே முயற்சிக்கின்றது. எமது அமைச்சர்களை பணம் கொடுத்து வாங்கி கட்சியை சிதறடிக்கின்றனர். அது தவறானதோர்செயல். இது ஜனநாயகத்தை மீறும்மோர் செயல். இது மக்களுக்கு எவ்வித நன்மையையும் தரப்போவதில்லை.

கேள்வி - எதிர்கட்சிகள் பலவீனமாகியுள்ள நிலையில் அக்கட்சிகள் யாவும் இணைந்து செயற்படவேண்டும் என்ற கருத்தியல் உள்ளது. இவ்விடயத்திற்காக ஐக்கிய தேசியக் கட்சி எதைச் செய்துள்ளது?

பதில் - நாம் அந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றோம். அரசிற்கு எதிரான அனைத்துக்கட்சிகளையும் ஒன்றிணைத்து வேலை செய்யும் ஒர் திட்டத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம். தற்போது கட்சிகளிடையே காணப்படும் பிளவுகள் அரசிற்கு சாதகமாக அமைந்துள்ளது. அத்தோடு பாராளுமன்றில் நாம் வௌ;வேறாக பிரிந்து நிற்பதும் அவர்களுக்கு சாதகமாகவுள்ளது. அரசிற்கு ஒர் பாடத்தை புகட்டவும் சவாலாக திகழவும், அரசிற்கு எதிரான கருத்தினை கொண்டவர்கள் ஒன்றிணையவேண்டும். பாராளுமன்றிற்கு உள்ளே உள்ள கட்சிகள் மாத்திரமல்ல , வெளியேயுள்ள கட்சிகள் , தொழிற் சங்கங்கள் , பொதுஜன அமைப்புக்கள் ஆகியனவும் எம்மோடு ஒன்றிணையவேண்டும். அதற்கான அர்ப்பணிப்புகளையும் நாம் செய்துவருகின்றோம்.

கேள்வி - எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி என்ற ஒன்று மிஞ்சுமா?

பதில் - நாம் வீழ்ந்து எழுந்திருக்கின்றோம். ராஜபக்ச அரசாங்கம் ஐ.தே.கட்சியை அழிக்க முயற்சித்தாலும் , நாம் மக்கள் பலத்தோடு மீண்டும் ஆட்சிக்குவருவோம். ஐக்கிய தேசிய கட்சியை ஒருபோதும் அழித்து விடமுடியாது. இது இவர்களது தற்காலிக எத்தனிப்பு . இதே முயற்சியை 1956 இல் எஸ் ஆர்.டபிள்யூ பண்டாரநாயக்க அவர்கள் மேற்கொண்டிருந்தபோது கட்சி முற்றிலும் அழிந்துபோகும் வெளித்தோற்றமே காணப்பட்டது. ஆனால் நாம் 1970 களில் மீண்டும் பலம்பெற்று ஆட்சியை கைப்பற்றினோம். இவ்வாறான நிலைகள் அனைத்துக்கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கின்றது, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் லங்கா சமசமாஜ கட்சிக்கும் கொமுனீசக் கட்சிக்கும் ஏற்பட்டிருக்கின்றது. உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால் 1978 க்கு பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்க , சந்திரிகா அம்மையார் , அனுரபண்டாரநாயக்க ஆகியோர் கூட சின்னாபின்னப்பட்டு போயிருந்தார்கள்.

ஏன் ஜேவிபியை எடுத்துப்பாருங்கள். அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி , சிறிலங்கா சுதந்திரக் கட்சியை விட மாறுபட்ட கொள்கையுடன் இடதுசாரிப் போக்கினை கொண்டவர்கள். இவர்களுடனிருந்த விமல்வீரவன்ச போன்றோர் பிரிந்து சென்று அரசுடன் இணைந்ததன் ஊடாக அவர்களுக்கும் இவ்வாறான நிலைமைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டிருந்தது, எனவே இது இலங்கை அரசியல் வரலாற்றில் புதியவை அல்ல. அநத்வகையில் ஐக்கிய தேசியக்கட்சி அதேபோன்றதோர் பிரச்சினைக்கு தற்போது முகம் கொடுத்துள்ளது. இன்றைய எம்நிலைமை நிரந்தரமானது அல்ல. தவறுகளை திருத்திக்கொண்டு நாம் மீண்டும் செயல்படுவோம். அதற்கான மக்களின் அடித்தளம் எமக்குண்டு.

கேள்வி - நாட்டை ஆண்ட இரு பிரதான தேசியக் கட்சிகளில் ஒன்றான தங்கள் கட்சியினுள் இன்று உட்பூசல் தோன்றியுள்ளது. இப்பூசல்களை தீர்த்துக்கொள்ள முடியாத உங்களால் எவ்வாறு நாட்டிற்கு தலைமைத்துவத்தை வழங்க முடியும்?

பதில் - ஐக்கிய தேசியக் கட்சி மண்டியிடும் கட்சியல்ல. இக்கட்சி 7 தலைவர்களால் வழிநடத்தப்பட்டு வந்துள்ளதோர் கட்சி. எமது கட்சி ஒரு தனிநபருக்கோ குடும்பத்திற்கு கட்டுபட்ட சொத்தாக இருந்ததில்லை. தற்போது ஒர்பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலைமையை அரசாங்கமே திட்டமிட்டு செய்து வருகின்றது. எமது கட்சியின் சிலர் பணத்திற்காகவும் பதவிகளுக்காகவும் கட்சியை காட்டிக்கொடுத்திருக்கின்றார்கள். இவ்வாறான பல சரித்திரங்களை நாம் கண்டிருக்கின்றோம். நாம் மீண்டும் பழைய நிலைக்கு வருவோம் என்ற நம்பிக்கையும் தைரியமும் எம்மிடமுண்டு.

கேள்வி - ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அரசின் பக்கம் தாவியுள்ளனர். அவர்களுள் ஐ.தே.கட்சியில் நுவரேலிய மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய முன்னாள் ஊடகவியலாளரான சிறிரங்காவும் அடங்குகின்றார். இவ்வாறான நிலைமைகள் உருவாக என்ன காரணம்?

பதில் - இது மனவருத்தத்திற்குரியதோர் விடயம். இவர்களுக்கு உண்ண உணவு கொடுத்தது ஐக்கிய தேசியக் கட்சி. இவர்களுக்கு கிடைத்த வாக்குகள் அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கினால் கிடைத்த வாக்குகள் அல்ல. இவை கட்சிக்கான வாக்குகள். இவர்கள் தனியாக போட்டியிடுட்டு வெற்றிபெற்றிருந்தால் அவர்களின் செயற்பாட்டில் தவறில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குளை பெற்று பணத்திற்காக பா.உ அங்கத்துவத்தை விற்பனை செய்துள்ளனர். அடுத்த தேர்தலில் அதற்கான பாடம் மக்களால் புகட்டப்படும். அங்கேயுள்ள அப்பாவி மலையகத் தமிழ் மக்களின் வாக்குகளை இவர் விற்றுள்ளார். இம்மலையக மக்கள் தமது வாக்குகளை ஐ.தே.கட்சிக்கே அளித்தனர். விருப்புவாக்குகளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே உரியவையாகும். தனக்கு ஓர் பதவியோ , அந்தஸ்தோ கிடைத்தால் அவற்றை ஏலத்தில் விடுவது அழகல்ல.

கேள்வி - பா.உ சிறிரங்கா , நாட்டின் ஜனாதிபதியின் புத்திரர் நாமல் ராஜபக்சவின் தலைமையிலான இளையோருக்கு நாளை எனும் அமைப்பில் ஓர் முக்கிய பதவியை வகிப்பதாகவும், அரசாங்கத்துடன் மிகுந்த உறவை கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்துள்ளபோதும் , ஐக்கிய தேசியக் கட்சியில் அவர் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டமைக்கான பின்னணி அல்லது மர்மம் என்ன?

பதில் - அரசியல் ரீதியாக இவர் விடயத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. இலங்கையின் முன்னணி ஊடக ஸ்தாபனம் ஒன்றின் தலைவரும் சில ஊடக முக்கியஸ்தர்களும் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே இவருக்கு எமது கட்சியில் போட்டியிட அனுமதி கிடைத்தது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிறிதொரு கட்சிக்கு தாவமாட்டோம் என இவர்கள் வாக்குறுதியும் வழங்கிவிட்டே கட்சியில் போட்டியிட்டார்கள். அவர்கள் வேறு ஒரு கட்சிக்கு செல்லும் எண்ணம் இருந்திருந்தால் அவர்கள் அங்கே போட்டியிட்டிருக்க வேண்டும். இது அவர்கள் கட்சிக்கு செய்த அநீதி மட்டுமல்ல அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் செய்த அநீதியாகும். இவர்கள் அனாதைகள் ஆகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

கேள்வி - ஜெனரல் பொன்சேகாவின் தற்போதைய நிலை என்ன?

பதில் - ஜெனரல் சரத் பொண்சேகாவுக்கு அரசு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளது. ஜெனரல் பொன்சேகாதான் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான யுத்தத்திற்கு தலைமை தாங்கினார். சிலர் காரியாலயங்களில் இருந்து கொண்டும் , வீடுகளில் இருந்துகொண்டும் ஆலோசனைகளையே வழங்கிவந்தார்கள். சரத் பொன்சேகாவோ நேரடியாக யுத்த முனையிலேயே அதற்காகச் செயற்பட்டார். இந்த வெற்றியை வைத்துத்தான் இவர்கள் வாக்குகளை பெற்றது. இதனால் ஜெனரல் பொன்சேகா மீது மக்களுக்கு அபிமானம் உண்டு. இப்படி மக்கள் அபிமானம் உள்ள ஒருவரைத்தான் அரசு சிறையில் அடைத்து வைத்துள்ளது. நாம் அவரை விடுதலை செய்வதற்கான முன்னெடுப்புக்களைச் செய்கின்றோம். அரசாங்கம் அவரை தடுப்புக்காவலில் வைத்துள்ளது. போரில் முன்னணியில் இயங்கிய இராணுவச் சிப்பாய் தொடக்கம் ஜெனரல்கள் வரை அரசு சிறைகளில் அடைத்துள்ளது. யுத்தத்திற்கு தலைமை தாங்கிய பலரை பதவிகளிலிருந்தும் விலக்கி வருகின்றது.

கேள்வி - ஜெனரல் பொன்சேகா இன்று எதிர்நோக்கும் சிக்கல்களிலிருந்து அவர் மீள உங்கள் கட்சி என்ன செய்திருக்கின்றது?

பதில் - அவருக்காக நாம் குரல் கொடுக்கின்றோம். அவர் எமது கட்சியைச் சார்ந்தவர் அல்ல. அதிபர் தேர்தலுக்கு பொது அபேட்சகர் ஒருவரை தெரியும்போது அவரை தேர்ந்தெடுத்தோம். அவர் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு முற்றாக உழைத்தோம். அவர் தேர்தலில் பெற்ற பெரும்பாண்மையான வாக்குகள் எம்முடைய வாக்குகள். எங்களால் முடிந்தவை யாவற்றையும் நாம் அர்பணிப்புடன் செய்துள்ளோம். ஜெனரல் பொன்சேகாவிற்கு எதிரான பல வழக்குகளில் எமது சட்டத்தரணிகளே அவருக்காக வாதாடுகின்றனர். இந்த அநீதிக்கு எதிராக உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் அவர் சார்பாக போரட்டங்களை நாடாத்துகின்றோம். சர்வதேச அமைப்புக்களின் கவனத்திற்கு இவர் விடயத்தினைக் கொண்டு சென்றவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியினர்தான். உதாரணத்திற்கு ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்திற்கு அவர் குறித்த விடயத்தை நாம் கொண்டு சென்றுள்ளோம். இவ்விடயத்தை எமது கட்சியின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான விடயங்களை கையாளும் கலாநிதி ஜெயலத் ஜெயவர்த்தன முன்னெடுத்துச் செல்கின்றார். எதிர்வரும் ஐப்பசி மாதத்தில் ஜெனிவா செல்லவுள்ள ஜெயலத் ஜெயவர்த்தன அவர்கள் மேலதிய விடயங்களை சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு எடுத்துச்செல்வார்.

கேள்வி - அரசாங்கத்தின் பாதுகாப்பில் உள்ள புலிகளின் முக்கியஸ்தர் கே.பி தொடர்பாக பலதரப்பட்ட செய்திகள் நாளாந்தம் வெளிவருகின்றது. உங்கள் கருத்து என்ன?

பதில் - குமரன் பத்மநாதனை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஆனால் அவர் புலிகளியக்கத்தின் தலைவர் தானே என பிரகடனப்படுத்தியிருந்தார். கே.பி கைது செய்யப்பட்டார் என்ற செய்தி வெளியாகியிருந்தபோது, எமது ஊடகங்கள் யாவும் புலிகளுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் கே.பி யிடமே உள்ளதாக கூறியிருந்தன. அவர் பெயரில் உள்ள கப்பல்கள் உட்பட அசையும் அசையா சொத்துக்களை நாட்டுக்காக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அனால் இன்று அவ்வாறான செயல்கள் எதுவும் நடந்தேறியதாக தெரியவில்லை.

கே.பி இலங்கை அரசிற்கு சொந்தமான கெலிக்கொப்டர்களில் வவுனியா மற்றும் வன்னி பிரதேசங்களுக்கும் சுற்றுப்பயணங்களைச் செய்துள்ளார். அது மட்டுமல்ல இலங்கையின் பத்திரிகைகள் சிலவற்றுக்கும் செவ்விகளை வழங்கியுள்ளார். அச்செவ்விகளினூடாக அவர் இலங்கையின் பாதுகப்பு அமைச்சின் செயலருடன் மிக நெருக்கமான தொடர்பினை கொண்டுள்ளமை தெளிவாகின்றது. எனவே நாம் சொல்கின்றோம். அவர் தடுப்புக்காவலில் இல்லை. அரசுடனான உடன்படிக்கையுடன் , அரச பாதுகாப்பில் தங்கியுள்ளார் என்றே நாம் கூறுகின்றோம். அவரிடம் உள்ள சொத்துக்கள் தொடர்பான விபரங்கள் எதுவும் வெளிவரவில்லை. அவற்றை அறிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உண்டு. எனவே இவர் விடயமான உண்மைகளை மக்களுக்கு அரசாங்கம் தெரியப்படுத்தவேண்டும்.

கேள்வி - மேற்படி குற்றச்சாட்டுக்களுக்கு என்ன ஆதாரங்கள்?

பதில் - ஆதாரங்கள். புலிகளின் தற்போதைய தலைவர் என தன்னை பிரகடணப்படுத்தியுள்ள இவர் ராஜதந்திரிகள் தங்கவைக்கப்படும் இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். குமரன் பத்தநாதனுக்கு எதிராக குற்றங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. புலிகளுக்காக ஆயுதங்களை கொள்வனவு செய்தவர். இவர் அரச பாதுகாப்பில் உள்ளார். அவரிடமிருந்த சொத்துக்கள் யாருக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. புலிகளின் வருவாய் யாருக்கு சென்றுகொண்டிருக்கின்றது.

கேள்வி - கடந்தகாலங்களில் அரசுடன் இணைந்திருந்தவர்களை புறந்தள்ளி கே.பி யை முதன்மைப்படுத்தும் செயற்பாட்டில் அரசாங்கம் இறங்கியுள்ளதாக பா.உ சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இவ்விடயத்தில் உண்மைகள் உண்டா?

பதில் - ஆம் இது முற்றிலும் உண்மை, திரு. டக்ளஸ் தேவானந்தா, திரு. கருணா , திரு. பிள்ளையான் ஆகியோர் புலிகளுக்கு எதிரான விடயங்களில் அரசிற்கு ஆதரவினை வழங்கி வந்தார்கள். இன்று இவர்களின் நிலை என்ன? இவர்களை கணக்கில் எடுக்கின்றார்களா? , ஒத்துழைப்பு வழங்குகின்றார்களா ? இல்லை. கே.பி யை தமிழ் மக்களின் ஒரேதலைவராக்குவதற்கு முயற்சிகளை அரசு மேற்கொள்கின்றது. அதாவது விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டவர்களை புறந்தள்ளி , புலிகளின் தலைவர் ஒருவரை வாழவைக்க முயற்சிக்கின்றது. XIII

Read more...

Sunday, April 5, 2009

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. ஆனந்தசங்கரி அவர்கள் இலங்கைநெற் விசேட தொடர்பாளர் முகமட் றாபியுடன்



ஐயா. ஆனந்தசங்கிரி அவர்களை பல முறை நேரடியாக சந்தித்த பல ஆயிரம் அனுபவங்கள் இருக்கிறது. வெள்ளை வேட்டி, வெள்ளை சேர்ட்டில் மிக மிக பவ்வியமாக பேசும் அந்த ஆனந்த சங்கரி ஐயாவா இது எனசற்று நேரம் துணுக்குற்று விட்டேன். ஆவேசம், ஆவேசம் மொத்த தமிழினத்தின் மீதும் ஆவேசம். பல வருடம் தனது கண்காணிப்பில் இருந்த அந்த வன்னிச் சனமா இது? ஐயகோ!!! கடவுளே உனக்கு கண்ணில்லையா? அல்லது எங்களின் சனத்தின்ர ஓசை உனக்கு கேட்கவில்லையா? என நொடிக்கு நொடி அழுத அந்த ஆனந்த சங்கரி ஐயாவிடம் கண்ட துயரப் பேட்டி இது.



கேள்வி : கடந்த மூன்று நாட்களாக வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வந்த மக்களை பார்வையிடச் சென்றிருந்தீர்களே. அவர்கள் எப்படி இருக்கிறார்கள்?

பதில் : கொடுமை ,கொடுமை , மகா கொடுமை. யார் யாருக்கு ஆறுதல் சொல்வது. கையிழந்து,கால் இழந்து கதறும் மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது வயிறு கொதிக்கிறது. எல்லாம் இந்த புலியால வந்ததுதானே. வெள்ளம் வரும், புயல் வரும்போதெல்லாம் மக்கள் ஓடுவார்கள்,பிறகு ஒரு நாளில். இரண்டு நாளில் பழையபடி தங்கள் இடத்துக்கு போய் சேர்ந்து விடுவார்கள். இது அப்படியா? கடவுளே! மனிதப் பேரவலம்! யாரும் எதுவும் செய்ய முடியாது. முடிந்தளவு அரசு செய்துள்ளது. செய்து கொண்டிருக்கிறது.

கேள்வி : அவர்களது இருப்பிடம்,உணவு சம்பந்தமாக ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா?

பதில் : இருப்பிடம், உணவில் எந்த குறையும் இல்லை. முதல் இரண்டுநாட்கள் மட்டும்தான் பிரச்சனை. அப்புறம் அதற்குரிய ஏற்பாடுகளை செய்து விடுகின்றார்கள். மூன்று நாட்களுக்கு முந்தி வந்தவர்களெல்லாம் நன்றாக சாப்பிட்டுக் கொண்டு எந்த குறையுமில்லாமல் இருக்கின்றனர். ஆனால் எங்கிட சனம் சிவப்பரிசி தின்னுற சனம். இந்த வெள்ளை அரிசியால நிறைய பேருக்கு வயிற்றோட்டம். தயவு செய்து அதை மட்டும் மாத்தி கைக்குத்துரிசி சோறு போடச் சொல்லுங்கோ என நிறைய பேர் கேட்டினம். இது சம்பந்தமாக அரசிடம் நாளைக்கு கதைக்கப் போகின்றோம்.

கேள்வி : சிங்கள இராணுவம் தமிழ் பெண்களை மானபங்கப்படுத்துகின்றது.என ஒரு செய்தி கசிகிறதே. தனிப்பட்ட ரீதியில் யாரிடமாவது இது சம்பந்தமாக கேட்டீர்களா?

பதில் : அவனுக்கு இந்த சனத்துக்கு சாப்பாடு கொடுப்பதற்கே நேரமில்லாமல் இருக்கிறது. அதற்குள்ள மானபங்கபடுத்துவதாவது. பல பேருக்கிட்ட தனிப்பட்ட ரீதியில் இது சம்பந்தமாக கேட்டேன். ஐயோ அவன்தான் எங்களின்ற புள்ளைகள் அழுதாலும் தூக்கிக் கொண்டு வந்து பிள்ளைகளுக்கு பால் கொடுங்கோ என்று சொல்றான், என அழுகின்றனர். இதை இந்த புலிக்குட்டிகளும்,அங்க உள்ள ஜெயானந்தமூர்த்தி, சம்பந்தன் கூட்டம் பரப்பி விடுற கதை இது.

அந்த மனிதக் கூட்டத்துக்குள்ள இருந்து ஒரு புள்ள என பார்த்து சிரித்தது. யாரும்மா நீ எங்கேயோ கண்ட மாதிரி இருக்கிறதே என்றேன். கையிரண்டும் இல்லாத அவர். நான் உங்கட பின் வீடு பவளத்தின்ட மகள் என்றார். அம்மா எங்கென்று தெரியாதாம். அப்பா இரண்டு கால்களையும் இழந்து புலிப்பிரதேசத்தில் இருக்கிறாராம். தான் தனியாக இங்கு வந்துள்ளாராம். இப்படி ஆயிரம் சனம். இதை அங்கிருந்து கொண்டு வணங்கா மண்விடுற அந்த டொக்டர் மூர்த்தியையும் இவருட புலிக் கூட்டத்தையும் கூட்டிவந்து காட்ட வேண்டும். சேனைப் பயிர் செய்து கொண்டு அடுத்தவனுக்கு எந்த குரோதமும் செய்யாமல் வாழ்ந்த இந்த மக்கள் யாருக்கு என்ன பாவம் செய்தார்கள்.

கேள்வி : இந்த மக்கள் இப்படியே இங்கு எத்தனை காலத்துக்குத்தான் இருப்பார்கள்?

பதில்: இது சம்பந்தமாக நாங்கள் அரசுடன் கதைக்க உள்ளோம். உடனடியாக கிளிநொச்சிக்குள்ள கொண்டு போய் குடியேற்றவும் முடியாது. இந்த புலி அங்க மிதிவெடியை அல்லவா விதைத்து வைத்துள்ளது. அதனால் அக்கராயன் குளம் போன்ற பகுதிகளில் மூன்று கிராமங்களை தேர்வு செய்து இந்த மக்களை அங்கு கொண்டு போய் விட்டால் அவர்கள் தமது தொழிலை செய்து கொண்டு நிம்மதியாக இருப்பார்கள்

கேள்வி : எத்தனை முகாம்களுக்கு விஜயம் செய்தீர்கள்?
பதில் : இரண்டு முகாம் தவிர ஏனைய அனைத்து முகாமுக்கும் சென்றோம்.

கேள்வி : இன்றைய இந்த சூழலை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர என்ன செய்ய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில் : புலம்பெயர் நாடுகளில் இருந்து கூக்குரலிடம் மொத்த புலிக்குட்டியையும் அந்த வணங்காமண்ணிலோ அல்லது வணங்காகப்பலிலோ ஏற்றி முல்லைத் தீவில் இறக்கி விடச் சொல்ல வேண்டும். இதை ஏதாவது இரண்டு நாடுகள் செய்தால் உடன் யுத்தம் நிற்கும். இந்தக் கூட்டத்தினால்தான் இவ்வளவு பிரச்சனைகளும்.

கேள்வி : மகின்த அரசு போரை முடிவுக்கு கொண்டு வருமா ? வந்த பின் தமிழர் நிலை எவ்வாறு இருக்கும் என நினைக்கின்றீர்கள்?

பதில் : நான் எவருக்கும் இனி வக்காலத்து வாங்கப் போவதில்லை. ஜனாதிபதிக்கு பல முறை சொல்லிவிட்டேன். போரை நிறுத்துங்கள் மக்களை காப்பாற்றுங்கள் என. இந்தியாவுக்கும் மற்றவர்களுக்கும் அறிவித்தும் விட்டேன். இந்தியா தானே நான்கு மணித்தியாலத்தில் வைத்தியர்களுடன் வந்து இன்றைக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றான். அவனைப் போய் 'றோ' என்றால் எவன் வந்து உதவுவது? இந்த சேனாதி ராஜாவும்,சம்பந்தனும் வந்து நிற்பாட்டி பார்க்கட்டுமே. அவர்கள் தானே இதற்கெல்லாம் காரணம். இப்போது என்ன தமிழர் நிலை நன்றாகவா இருக்கிறது? முதல் புலிகள் ஆட்சியில் அவர்கள் என்ன நன்றாகவா இருந்தார்கள்? முதலில் புலியும் இப்போது இங்குள்ள புதிய குட்டி புலிகளும் அழியணும்.

கேள்வி : இந்த போரை நிறுத்த அல்லது வன்னியில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்ற உங்களது அமைப்பு என்ன உருப்படியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது?

பதில் : அரசுக்கு பல முறை சொல்லி விட்டோம் இனியும் சொல்லப் போகின்றோம். மக்கள் தினமும் வெளியேறிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இதில் மேலதிகமாக சொல்வதற்கும் ஒன்றும் இல்லை. இந்த சம்பந்தன், சேனாதிராஜா, கஜேன்திரன், மற்ற அந்த தங்கச்சி எல்லோரையும் கூப்பிட்டுத்தான் மக்களை விடுவிக்கச் சொல்லி சொல்ல வேண்டும். அவர்களை போய் இந்த கேள்வியை கேட்பதை விட்டுவிட்டு என்னிடம் கேட்கிறீரே( ரொம்ப கோபமாக சொல்கின்றார்)

பாவம் தம்பி, பாவம். இது பொல்லாத பாவம் தம்பி. என்னை கண்டுவிட்டு ஒரு பெண்பிள்ளை அழுதது. இரண்டு கையும். இரண்டு காலும் இல்லை.என்னம்மா நடந்தது என கேட்டேன். ஐயா நான் பளை தம்பகாமம் கிராமத்தைச் சேர்ந்தவள். குடும்பத்தில் அனைவரும் இறந்து விட்டனர். இந்த புலி எங்களை அடைத்து வைத்திருந்ததையா இப்போதுதான் நிம்மதி ஐயா என கண்ணீர் விட்டது. இப்படி எத்தனையோ யாழ்ப்பாணசனத்தை இந்தப்புலி இவ்வளவு காலமும் அடைத்து வைத்திருந்தது.

கேள்வி: இந்த போரை நிகழ்த்துவது இந்தியா என அனைத்து தரப்பினரும் கூறுகின்றனர். இது உண்மையா? இந்தியா சம்பந்தமாக உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில் : என்ன விஷர் கேள்வி இது? இந்தியாவுக்கு வேறு வேலையில்லையா? நீர் என்ன அவங்கட ஆள்மாதிரி கேட்கிறீர்? நீங்கள்தானே அவர்களின் தலைவரை கொன்றீர்கள். ராணுவத்தை விரட்டினயள். பிறகு காசு கொடுத்தனுப்பி வை.கோ, திருமாவளவன் எல்லோரையும் பேசச் சொன்னீர்கள். மத்த இந்த உங்களுடைய எம்பிமார்களை எல்லாம் அனுப்பி கோலாட்டம் நடாத்தினயள். இப்போ என்ன இந்தியன் வந்து அடிக்கிறாள் என்கிறியள். உங்கட அந்த மொத்த எம்பிமார்களையும் அனுப்பி அவனுக்கிட்ட நிறுத்தச் சொல்லலாம் தானே. எங்க இப்போ அவங்கள் எல்லாம்.

கேள்வி : போர் முடிவுக்கு வந்த பின்னர் புலிகளின் அச்சுறுத்தல் இருக்குமா ? புலிகள் பலம் இழந்து விட்டார்களா?


பதில் : திரும்பவும் மோட்டுத்தனமாத்தான் கேட்கிறீர். பொத்துவில் வரை வியாபித்திருத்த அவர்களை 300 கட்டை விரட்டி வந்து புதுமாத்தளனுக்குள்ள முடக்கி வைத்திருக்கிறார்கள். இது அவர்களுக்கு படுதோல்வி. கிடங்கு வெட்ட ஆள் இல்லை, தண்டவாளம் களத்த ஆள் இல்லை. சேனைப்பயிர் செய்த சனம் எல்லாம் ஓடிவந்துட்டுது. இப்போ வணங்கா மண்விட்டு வீரம் காட்டுறாங்கள். வாய்ச்சொல்லில் வீரரடி என்று பாரதி அப்போது பாடியது இவர்களுகுத்தான் பொருந்தும்.

கேள்வி : உங்கள் அமைப்பின் எதிர்காலத் திட்டம் என்ன?.
பதில் : இப்போது ஒரு திட்டமுமில்லை. மக்கள் உடனடியாக தங்கள் பகுதிகளுக்கு போய் தமது தொழிலை தொடங்க வேண்டும். அதன் பின் மக்களே தங்கள் தலைவர்களை தெரிவு செய்ய வேண்டும். இப்போது கொஞ்சம் பேர் தாங்கள்தான் தலைவர் என பத்திரிகைகளில் புகைப்படங்கள் போட்டுக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள். தாங்களே வாக்குப் பெட்டிக்குள்ள வாக்குப் போட்டு எம்பி ஆனவர்கள் இவர்கள்.

கேள்வி : கிழக்கு மாகாண அமைச்சையும்,கருணா சம்பந்தமாகவும் என்ன அபிப்பிராயங்களை கொண்டிருக்கின்றீர்கள்?


பதில் : அங்கு என்னவெல்லாமோ நடக்கிறது. மக்கள் மக்களை தலைவர்களாக தெரிவு செய்யும் வரை அனைவரும் இன்னொரு குட்டி பிரபாகரன்களே.

கேள்வி : மலையக மக்கள்,முஸ்லீம் மக்கள்,வட கிழக்குக்கு வெளியே வாழும் மக்கள் சம்பந்தமாக ஏதாவது திட்டங்கள் வைத்துள்ளீர்களா?

பதில் : பாவம் மலையக மக்கள் ரொம்ப நல்ல மக்கள். அங்கு புதிய தலைவர்களெல்லாம் முளைத்து நாடு நாடாகப் போய் பொங்கு பொங்கு என பொங்கு தமிழ் பாடியதால் இப்போது ஒரு பாவமும் அறியாத அந்த மக்களையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். இந்த தலைவர்கள் எல்லாம் அந்த மலையக மக்களை பற்றி கவலைப்படாமல் தமிழ்செல்வனிடமும், பிரபாகரனிடமும் போய் அல்லவா ஆனா,ஆவன்னா படிக்கத் தொடங்கினார்கள். இந்த மலையகத் தலைவர்களுக்கு டென்மார்க்குக்கு போய் பொங்கு தமிழ் பொங்க என்ன தலைவிதியா?

முஸ்லீம் மக்கள் மேல் எனக்கு ஆறாத பாசம் உண்டு.அவர்களும் நாங்களும் ஒன்றுதானே.
பிறகென்ன முஸ்லீம், தமிழ். யாழ்ப்பாண ஏ.ஜீ.எ.மக்பூல் எனது நண்பர் மட்டுமல்ல அவரிடம் நாங்கள் தமிழ் இலக்கணமும், ஹிந்து நாகரிகமும் படித்துள்ளோம். அந்த அளவுக்கு தமிழ் மேல் தீராத காதலுள்ளவர்கள் முஸ்லீம்கள். அதையும் இந்த புலி வந்தல்லவா குழப்பி விட்டது.

கேள்வி : எதிர்காலத்தில் எப்படியான தீர்வு தமிழ் பேசும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில் : கடவுள் காப்பாற்ற வேண்டும். "நான் அடிமையாக வாழ விழும்புகின்றேன்" என அடிமைச்சாசனம் எழுதிக் கேட்காத தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் வர வேண்டும். பத்திரிகைகள் உண்மை எழுத வேண்டும். ஒரு பத்திரிகை கூட உண்மை எழுதவில்லை. புலி அங்கே இரண்டு பேரை கொண்றால், அதை பக்கம் பக்கமாக எழுதி புலியை பாராட்டிய பத்திரிகைகள்தான் இது வரை வந்தது. இவை ஒழிந்தால் உண்மையான ஜனநாயகம் தானாக வரும்.

கேள்வி :சிறிலங்காவில் உள்ள ஏனைய சிங்கள கட்சிகளுடன் உங்களுக்கு உறவுகள் உள்ளதா?அவர்கள் தமிழர்களின் உரிமை சம்பந்தமாக என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள்? சிங்கள மக்கள் மத்தியில் தமிழருக்கு இப்படியான தொரு பிரச்சனை இருக்கிறது என தெரியப்படுத்த ஏதாவது ஆரோக்கியமான திட்டங்கள் வைத்திருக்கிறீர்களா?

பதில் : கட்சிகளையும் தலைவர்களையும் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் அத்தனை சிங்கள மக்களும் நாட்டில் பிரச்சனை தீர வேண்டும். சிங்களவர்களுக்குரிய சகல உரிமையும் அனைத்து மதத்தினருக்கும் வழங்கப்பட வேண்டும். எல்லோரும் சுமுகமாக கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும். இந்த நாடு சுபீட்சமடைய வேண்டும் என மனதார விரும்புகின்றனர். இந்த முழு நாட்டுக்கும் எல்லா மக்களுக்கும் நான்தான் ஜனாதிபதி, இங்குள்ள ஒவ்வொரு வரையும் எனது பிரஜைகளாக கருதுகிறேன், எவரிடமும் பாகு பாடு காட்ட மாட்டேன், எவரையும் எவருக்கும் காட்டிக் கொடுக்க மாட்டேன், இது எனது நாடு, அனைவரும் என் மக்கள் என ஜனாதிபதி ஏற்றுக் கொள்வாரானால் பிறகென்ன வேலையிருக்கிறது எமக்கு. இதைத்தான் நான் அவரிடம் சொல்லப் போகின்றேன்.

கேள்வி : எதிர்வரும் மாகாணசபை,பாராளுமன்ற தேர்தல்களில் உங்கள் கட்சி போட்டியிடுமா?
தனித்து போட்டியிடுவீர்களா? ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடுவீர்களா?

பதில் : போட்டியிடுவேன். ஆனால் இங்கு ஒருவர் தான் தான் கிங். தான்தான் மினிஸ்டர். இனி தான்தான் சீப் மினிஸ்டர் என சொல்லிக் கொண்டு திரியிறார். போன ஜூன் மாத அவருட பேப்பரில ஒரு பக்கம் பிள்ளையான் மற்றப் பக்கம் ஜனாதிபதி இந்தப்பக்கம் தன்ர போட்டோவை போட்டு அடுத்த முதலமைச்சர் என பறை சாற்றிக் கொண்டு திரியிரார். ஜனனாயகத் தேர்தல் நடந்தால் போட்டியிடுவேன். சேர்ந்தா தனித்தா என்பதை அப்போது தீர்மானிப்போம்.

கேள்வி : கிழக்கு மாகாணத்தில் உங்கள் கட்சியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கின்றது?

பதில் : விரைவில்அலவலகம் திறக்க உள்ளோம். தொர்புகளை பேணிவருகின்றோம்.

கேள்வி : உங்கள் கூட்டு முன்னணி தேர்தலுக்கான கூட்டா? அல்லது மக்கள் நலன் சார்ந்த கூட்டா? எப்படி அதை நம்புவது? ஏற்கனவே பல முறை கூடிக்கலைந்துள்ளீர்களே?

பதில் : தமிழ்நாடு மாதிரி சமஷ்டி ஆட்சி. இதுதான் எங்கள் கூட்டின் நோக்கம். அதற்கு முதல் கிடைப்பதைப் பெற்றுக் கொண்டு ஜன நாயக வழிமுறைகளில் போராடுவது. இவ்வாறு ஒரு சமஷ்டி கிடைத்தால் தமிழ் நாட்டுல இருந்து ஊழையிடுபவர்கள் கத்த மாட்டினம். இது சம்பந்தமாக மல்வத்த தேரோக்கள், பிஷப்மார், கட்சிகள் மற்றும் சில பல பெரியார்களுடன் தனியாகவும், கூட்டாகவும் கதைத்துள்ளோம். இதற்கான வேலைத் திட்டங்களைபடிப்படியாக
செய்து வருகின்றோம். இப்போதுள்ள இந்த சூழலில் இதற்குமேல் சொல்வதற்கொன்றுமில்லை.

கேள்வி : கடந்த சில நாட்களாக கூட்டு முன்னணி அறிக்கைகள் மட்டும் விட்டுக்கொண்டிருப்ப
தைத்தான் காண்கின்றோம். புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் கூட இன்னும் தனித்தனியே சிந்திப்பவர்களாகவே உள்ளனர். எதிர்காலத்தில் புலம் பெயர்நாடுகளில் உள்ளவர்களின் பங்களிப்பும் பாரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கலாமா? அது சம்பந்தமாக உங்கள் அபிப்பிராயம் என்ன?


பதில் : எங்களால் முடிந்ததை செய்து கொண்டுதான் இருக்கிறோம். அதற்குமேல் இந்த புலிக்குட்டி மாதிரி எங்களால் செய்ய முடியாது. வெளி நாட்டில் உள்ள பழைய, புதிய எல்லோரும் வரவேணும். இந்த மனித அவலங்களை பார்க்க வேண்டும். அரசியல் செய்ய வேண்டும். ஆனால் இந்த பிக்னிக் வாற வேலையை விட்டு விட்டு வர வேண்டும். அதை விட்டு விட்டு மக்களோடு மக்களாக இருந்து இங்கு இந்த புலிகள் செய்த வேலைகளை உலகுக்கு வெளிக்காட்ட வேணும். புகைப்படங்கள் எடுத்துக்குப் போய் தமிழனை சிங்களவன் கொல்றான் என்ற புலிக் கதை எல்லாம் சொல்லப்படாது.

கேள்வி : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அண்மைய அபிவருத்தி சேவைகள் சம்பந்தமான தங்கள் அபிப்பிராயம் என்ன?


பதில் : அதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. 1994 இல் ஐந்தரை லட்சம் மக்களின் வாக்குகளில் நாங்கள் ஒன்பது பேர் போனோம். இப்போது எட்டாயிரம், பிறகு மூவாயிரத்து எழுநூற்றைம்பது, பின்னர் எண்ணுறு வாக்குல பாராளுமன்றம் போனவர்கள் எல்லாம் அரசியல் செய்யப் போய், இதை பார்த்துப் போட்டு புலியும் மொத்தமாக போட்டு 21 எம்பி சீட் எடுத்து எல்லாரையும் கலைத்துக் கொண்டிருக்கிறான்.

கேள்வி : ஈ.பி.டி.பி.யினருக்கும் உங்கள் கட்சியருக்குமான தொடர்புகள் எவ்வாறு இருக்கின்றன? யாழ்ப்பாணத்தில் அவர்களது முகாம்களை அப்புறப்படுத்த கோருகின்றீர்களே. இதனால் என்ன பயனை எதிர்பார்க்கிறீர்கள்? இது புலிகளுக்கு ஆயுதங்களுடன் நடமாட ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி விடுமே? ஈ.பி.டி.பி.யினர் கிளிநொச்சி பகுதியில் முகாம் அமைத்தால் எதிர்கால உங்கள் அரசியல் வேலைத்திட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்குமென்று அஞ்சுகின்றீர்களா?

பதில் : யாழ்ப்பாணத்தில் ஆமி கேம்புல எல்லாம் இவர்கள்தானே நிற்கின்றனர். சட்ட விரோத செயல் ஆயிரம் நடக்கிறது. செக் பொயின்ட்ல நின்று கொண்டு புறோக்கர் தமிழில் கதைப்பது. நாலு வார்த்தை கதைக்கும் போது அதற்குள்ளால இரண்டு யாழ்ப்பாண தமிழ் வார்த்தை வந்துவிடும். மக்கள் என்ன முட்டாள்களா? இவர்கள் அவைகளில் நின்று கொண்டு செய்யிற அழிச்சாட்டியம் பற்றி மக்கள் என்னிடம் கூறுகிறார்கள். இதை அவர்களால் வெளியே கூற முடியாது. இன்னொரு பிரபாகரன் தோன்றிவிடக்கூடாது என்பதால்தான் அம்முகாம்களை மூடச்சொன்னேன்.
பத்திரிகைக்கு சுவிப் டிக்கட் காறனும், இன்ஷூரன்ஸ் காறனும் முழுப்பக்க விளம்பரம் கொடுக்கிறான், றேடியோவில் இரண்டு மணிநேரம் விளம்பரம் பிறகென்ன முழுப் பூசணிக்காயை சோற்றுல மறைச்சி அரசியல் செய்றது.

கேள்வி : அண்மையில் ஜனாதிபதி கூட்டிய சந்திப்பின் போது உங்களுக்கும் திரு.டக்ளஸ் தேவானந்தாவுக்கும் சச்சரவு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறதே.

பதில் : ஜனாதிபதியே டக்ளஸ் தேவானந்தாவைப் பார்த்து 'என்ன டக்ளஸ் சங்கரி ஐயா உங்கள் பேரைச் சொன்னால் பயப்படுகின்றார்'என கேட்டார்.அப்போது அவர் சிரித்தார். எனக்கு நீதியான அரசியல்தான் செய்யத் தெரியும். கடத்தி, கொள்ளையிட்டெல்லாம் பழக்கமில்லை. என்னிடம் அதற்கு ஆட்களுமில்லை. நான் தனிக்கட்டை.

கேள்வி : பிரபாகரன் பிடிபட்டுஅல்லது சரணடைந்து மன்னிப்பு கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும். பிரபாகரன் கொல்லப்படவேண்டுமா.அவர் பகிரங்கமன்னிப்பு கேட்டு மீண்டும் ஆயுதமற்ற ஒரு உரிமை போராட்டத்துக்கு வந்தால் நீங்கள் ஆதரவழிப்பீர்களா?

பதில் : ஐயா வா என அழைத்து யாருடைய காலிலாவது விழுந்து வடக்குக்கு முதலமைச்சர் பதவி வாங்கி கொடுப்பேன்.

05-04-2009 XIII

Read more...

Saturday, March 13, 2010

எம்மை துரோகிகள் என புலிகள் செய்த பிரச்சாரம் தவிடு பொடியானது. புளொட் பவன். (பேட்டி)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்திய குழு உறுப்பினர்களில் ஒருவரும், வன்னி மாவட்டத்தில் அவ்வமைப்பின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவருமான பவான் என அறியப்படும் க.சிவநேசன் வன்னி தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக இலங்கைநெற் இற்கு தொலைபேசி ஊடாக வழங்கிய பேட்டி. பேட்டி கண்டவர் பீமன்.

உங்கள் அரசியல் பிரவேசம் குறித்து விளக்க முடியுமா?

தமிழ் மக்களின் விடுதலைவேண்டி போராடிய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் 83 காலப்பகுதிகளில் இணைந்த நான் இன்றுவரை அவ்விக்கத்தின் ஊடே எனது பணிகளை செய்து வருகின்றேன்.

83 ல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து கொண்டேன் என தெரிவித்திருந்தீர்கள். அவ்வியக்கத்தினை தேர்ந்தெடுத்தற்கான விசேட காரணங்கள் உண்டா?

நான் பாடசாலைக் கல்வியை தொடர்ந்து கொண்டிருந்தேன். அக்கால கட்டத்தில் தமிழர்களுக்கெதிரான ஒடுக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருந்தது. பேரினவாத சக்திகளால் 83 வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டிருந்துடன், இதற்கு எதிராக போராடவேண்டும் என்ற கோஷங்களும் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. எம்மை ஆயுதப்போராட்டத்தில் இணைத்து கொண்டு எமது மக்களின் சுதந்திரத்தை, அதாவது தமிழீழத்தை அடையவேண்டும் என்ற இலக்கோடு நான் கழகத்தில் இணைந்து கொண்டேன். நான் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினை தேர்ந்தெடுத்தற்கான காரணம் என்னவென்றால். இவ்வியக்கத்தின் தலைவராக உமா மகேஸ்வரன் அவர்கள் இருந்தார். மக்களுக்கான போராட்டத்தின் அவரது கொள்கைகளில் எனக்கு ஈடுபாடும், அந்த இலக்கை அடையலாம் என்ற நம்பிக்கையும் இருந்தது. அத்துடன் அவர் ஒரளவு படித்த மனிதராக காணப்பட்டார்.

சிங்கள முற்போக்கு சக்திகளுடன் இணைந்தே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என உமா மகேஸ்வரன் அவர்கள் கூறிவந்திருக்கின்றார். அவ்விடயத்தில் தற்போது உங்கள் அமைப்பின் நிலைப்பாடு என்ன?

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் என்பது சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என்பதை அம்மக்களுக்கு காண்பிக்கவேண்டும் என்ற விடயத்தை அவர் தொடர்ச்சியாக கூறிவந்திருக்கின்றார். ஈழம் என்பது சாத்தியமில்லை, அதை இந்தியா ஏற்றுக்கொள்ள மாட்டாது என்பதையும் எமக்கு பின்புலம் இல்லை என்பதையும் உணரமுடிந்தபோது சிங்கள முற்போக்கு சக்திகளுடன் இணைந்து புரட்சி ஒன்றை உருவாக்கி அவர்கள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைமையை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் காணப்பட்டதை என்னால் அவதானிக்க கூடியதாக இருந்துள்ளது.

ஈழம் என்பதை இந்தியா ஏற்றுக்கொள்ள மாட்டாது என எவ்வாறு உணர்ந்திருந்தீர்கள்?

இலங்கை என்பது ஒரு பல இனங்கள் வாழுகின்றநாடு. எனவே இங்கே தனிநாடு ஒன்று உருவாவதை இந்தியா ஊக்குவிக்குமானால் அல்லது உதவி செய்யுமாக இருந்தால் அது இந்தியாவிற்கும் பாதகமாக அமையும் என்பதை இந்தியாவின் பல சக்கிகளும் தெளிவாகவே கூறியிருந்தார்கள். ஏன் கருணாநிதி அவர்கள் கூட ஈழம் என்பது சாத்தியமில்லை என்பதைத்தான் கூறியிருந்தார்.

இதற்கும் அப்பால் சென்றால் இந்திய இடதுசாரிகளான பாண்டியன் , கதிகாலசுந்தரம் ஆகியோரது அரசியல் பாசறை வகுப்புக்களில் பங்கெடுத்திருக்கின்றேன். அவர்களும் ஐக்கிய இலங்கையினுள்ளே அதிகூடிய அதிகாரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்ற விடத்தினையே கூறினர்.

இவ்வாறான நிலையில்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்திருந்தது. இன்று இறுதிவரை ஆயுதப்போராட்டத்தை தொடர்ந்திருந்த புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட அவ்வொப்பந்தத்தை ஏற்று கையொப்பம் இட்டிருந்தார். ஆனால் எமது தலைவர் உமா மகேஸ்வரன் அதனை ஏற்றுக்கொண்டு கையொப்பம் இட்டிருக்கவில்லை. பின்னாட்களில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எமது தீர்வுக்கான முதற்படியாக ஏற்றுக்கொள்வோம் என இணங்கியிருந்தார்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை உங்கள் தலைமை அல்லது உங்கள் அமைப்பு ஏற்றுக்கொண்டிராததற்கு காரணம் என்ன?

இலங்கை இந்திய ஒப்பந்தம் எமது பிரச்சினைக்கான முழுத்தீர்வு அல்ல என்பதாகும். அதாவது நாம் ஆயுதப்போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்ததன் இலக்கை இந்திய ஒப்பந்தம் அடைந்திருக்கவில்லை என்பதாகும்.

இலங்கையில் தமிழ் ஈழம் மலர்வதை இந்தியா விரும்பியிருக்கவில்லை எனக்குறிப்பிட்டீர்கள். அவ்விடயத்தினை ஆரம்பநாட்களில் ஏன் மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை?

ஈழம் என்பது சாத்தியமில்லை என தெரிவித்திருந்தபோதும், ஈழத்தை கோருங்கள் அப்போதுதான் இலங்கையில் தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய அதி உச்ச அதிகாரங்களையாவது பெற்றுக்கொள்ளலாம். அதற்கான உதவியை செய்வோம் என தெரிவித்திருந்தார்கள்.

இலங்கையில் ஆயுதப்போராட்டம் முடிவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஆயுத அமைப்புக்கள் தமிழ் மக்கள் மத்தியில் அவசியம் இல்லை என்ற கருத்து நிலவுவதை அவதானிக்க முடிகின்றது. உங்கள் கருத்தென்ன?

இதில் உண்மை உண்டு. காரணம் புலிகளின் ஆயுத பலத்திலும் அப்போராட்டத்திலும் மக்கள் அதீத நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவ்வியக்கம் சுக்குநூறாக, நினைத்துப்பார்க்ககூட முடியாத முறையில் வீழ்ந்தபோது மக்கள் சோர்வடைந்து விட்டார்கள். எனவே அப்படியானதோர் நிலைப்பாட்டை அவர்கள் வெறுக்கின்றார்கள். அதற்காக அவ்வாறானதோர் நிலை மீண்டும் உருவாக வேண்டும் என நான்கூறவில்லை.

புளொட் இயக்கத்தினர் வவுனியா பிரதேச மக்களிடம் பலவந்தமாக பணம் பறித்தாகவும், மக்களை துன்புறுத்தியதாகவும் பரவலான குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றது. இந்நிலை தொடர்ந்தவண்ணம் உள்ளதா?

உங்களுக்கு நன்றாக தெரியும் நாம் மக்கள் மக்தியில் இருந்து செயற்பட்டு வருகின்றோம். செயற்படுகின்றபோது ஒருசில முரண்பாடுகள்வரும். எந்த ஒருவிடயத்தை செய்கின்றபோதும் எவருக்கும் மக்கள் மத்தியில் 100 வீத ஆதரவு கிடைப்பதில்லை. அந்தவகையில் கொழும்பிலும் வெளிநாடுகளிலும் இருந்து அறிக்கை விடுக்கின்றவர்களுக்கும் மக்களுக்கும் இடையே முரண்பாடுகள் வராது. அவர்கள் மக்கள் மத்தியில் செயற்படுவதில்லை. நாம் செயற்படுகின்றோம். எமக்கும் மக்களுக்கும்மிடையே ஒரு சில முரண்பாடுகள் உண்டு. அவற்றை பெரிதுபடுத்தும் செயற்பாட்டை எமது அரசியல் எதிராளிகள் செய்துகொண்டே இருப்பார்கள்.

அடுத்து பணம்பறிக்கின்ற விடயத்தை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். நாம் யாரிடமும் பலவந்தமாக பறித்ததில்லை. சில காலங்களுக்கு முன்னர் சிலரிடம் எமது கட்சியின் தேவைகளுக்காக கேட்டுவாங்கியிருக்கிறோம். பலர் எமது வேண்டுகோளை ஏற்று தந்திருக்கின்றார்கள். சிலர் இல்லை என்று சொல்லியிருக்கின்றார்கள். நாம் அவற்றை ஏற்றிருக்கின்றோம். கடந்த 6 மாதங்களாக நாம் எவரிடமும் எந்த பணமும் பெறுவதில்லை.

எது எவ்வாறாயினும் நாம் 100 வீதம் சுத்தமானவர்கள் எனக் கூறவில்லை. நாமும் இந்த சமுகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சமுகத்துடன் இணைந்து வாழ்கின்றோம். எமது மக்களுடன் வாழ்கின்றோம். மக்களும் எம்மை பகடைக்காய்களாக பாவித்திருக்கின்றார்கள் என்ற விடயத்தினையும் இங்கு கூறவேண்டும்.

நீங்கள் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்து கொள்வதற்காக பல சுற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும், தேர்தல் கூட்டு ஒன்றை அமைக்க முயன்றதாகவும், இறுதியில் தோல்வியடைந்தாகவும் தெரியவருகின்றது. உங்களுடைய அந்த முயற்சி வெற்றியளிக்காமைக்கு காரணம் என்ன?

நாங்கள் பேச்சுவார்த்தைக்கு சென்றது என்பதைவிட மக்களின் வேண்டுகோளின் அடிப்படையில் பேசினோம் என்பது சிறந்ததாகும். வவுனியாவிலே பெரும்பாண்மையாக தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். எனவே பெரும்பாண்மையான தமிழ் ஆசனங்களை பெறவேண்டும் என்ற ஆதங்கம் வவுனியா மக்களிடம் உண்டு. சகோதர இன மக்களின் எண்ணிக்கைக்கேற்ப அவர்களுக்கான பிரதிநிதித்துவம் அமையவேண்டும் எனவும் தமிழர்களாகிய நாம் பிளவுபட்டு நிற்கும்போது அதன் பயனால் அவர்கள் அதிக ஆசனங்களை பெற்றுவிட்டால் அது தமிழ் மக்களின் நலனுக்கு குந்தகம் ஏற்பட்டுவிடும். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பும், எமது கட்சியும் ஒன்றிணைந்து போட்டியிடவேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் இருதரப்பினரிடமும் முன்வைத்தார்கள். தேர்தல் கூட்டுக்கள் அல்லாது கொள்கையடிப்படையில் இணையக்கூடிய கூட்டுக்கள் தமிழ் மக்களிடையே அவசியம் என்ற விடயத்தை நாம் பன்நெடுங்காலங்களாக வலியுறுத்தியும் வந்துள்ளோம். அந்த அடிப்படையில் மக்களின் வேண்டுதலை ஏற்று நாம் அவர்களுடன் பேசினோம். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது நான்காக உடைந்திருக்கின்றது. நான்கு குழுக்களாக செயற்படுகின்றது. அதிலும் அவர்கள் கொண்ட கொள்கைக்கு மிக எதிர்மாறான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றார்கள். இருந்தாலும் கூட நாம் சம்பந்தன் மாவை தலைமையிலான குழுவுடன் பேசினோம். ஆனால் அவர்கள் தமது விடயங்களில் மிகவும் பிடிவாதமாக இருந்தார்கள். தர்மலிங்கம் அவர்களின் மகன் சித்தார்த்தனை வேண்டுமானால் எம்முடன் இணைந்துக்கொள்வோம், மற்றவர்கனை நாம் சேர்க்க மாட்டோம்.. வவுனியாவில் மாத்திரம் ஒர் இடத்தை ஒதுக்கி தரமுடியும் எனக் கூறியிருந்தார்கள்.

இவ்விடயத்தினை எமது தலைவர் மிகவும் ஆணித்தரமாக எதிர்த்ததுடன், தான் புளொட் அமைப்பின் தலைவராக பேசுவதாக இருந்தால் பேசுகின்றேன், அதைத்தவிர்த்து தனியே தர்மலிங்கம் அவர்களின் மகனாக பேசுவதற்கு எதுவுமில்லை என தெரிவித்திருந்தார். இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ள ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகள் துரதிஸ்டவசமாக அமைந்துள்ளது.

கடந்த தேர்தலில் தமிழ் மக்கள், தமிழீழ விடுதலைப் புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்றே தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை பாராளுமன்றம் அனுப்பியதாக கூறப்படுகின்றது. தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், அந்நிலையில் இருந்து விலகியுள்ளதையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிலர் தாம் புலிகளை பயங்கரவாதிகளாகவே கருதியிருந்ததாகவும் கூறியுள்ளதையும் மக்கள் அறிந்துள்ளனர். இவ்வாறான நிலையில் மக்கள் தற்போது எவ்வாறானதோர் அரசியல் தலைமையை எதிர்பார்க்கின்றனர்?

ஓர் நீதியானதும் நேர்மையானதுமான தலைமை தமக்கு வேண்டும் என்பதில் மக்கள் அவாகொண்டிருப்பது போன்றுதான் தோன்றுகின்றது. அன்று புலிகள் தம்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகளென உலகிற்கு எடுத்துக் கூறுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியிருந்தார்கள். கூட்டமைப்பினரும் தமது கதிரைகளை தக்கவைத்துக் கொள்ளவதற்காக புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக உலகிற்கு சொல்வதில் மும்முரமாக நின்றார்கள். ஆனால் இன்று நிலைமை வேறு.

உண்மையிலே இது ஒரு தேசியக் கூட்டமைப்பு அல்ல. சந்தர்ப்பவாத கூட்டென்பதே பொருத்தமானதாகும். ஏனென்றால், அக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, ஈபிஆர்எல்எப், தமிழர் விடுதலைக் கூட்டணி என்பவற்றின் தலைமைகள் புலிகளின் தலைமையால் கொன்றொழிக்கப்பட்ட நிலையில், அதன் இரண்டாவது தலைமைகள் தமது தலைகளை காப்பாற்றிக் கொள்வதற்காகவும், பாராளுமன்றக் கதிரைகளை பெற்றுக்கொள்வதற்காகவுமே கூட்டில் இணைந்து கொண்டார்கள். இதுவொரு தேசியக் கூட்டடென்றால் அதைப்போல் நகைச்சுவை இருக்கமுடியாது என்றே நான் கூறுவேன். அன்று தேசியம் என்று இலங்கை அரசிற்கு எதிராக கூப்பாடு போட்டவர்களால் எவ்வாறு இன்று அதே அரசின் சின்னத்தின்கீழ் போட்டியிடமுடியும். இவர்கள் கதிரைகளுக்காக எதுவும் செய்வார்கள்.

வன்னியில் புலிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் தேர்தல் பிரச்சாரங்கள் செய்கின்றீர்களா?

விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒருசில இடங்களில் மக்கள் மீள் குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள். அப்பிரதேசங்களுக்கு நாம் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் செல்லவில்லை. அவர்கள் குடியேற்றப்பட்ட மறுகணமே சென்றோம். அவர்களுடன் பேசினோம். உற்சாகம் அளித்தோம். அவர்களின் குறைநிறைகளை கேட்டு எம்மால் முடிந்தவற்றை செய்தோம். அவர்களின் மனநிலை எமக்கு நன்றாக தெரியும். அவர்கள் தற்போது ஓர் தேர்தலை சந்திப்பதற்கு தயாரானவர்களாக இல்லை. அவர்கள் இழக்க கூடிய யாவற்றையும் இழந்து ஏறக்குறைய பிச்சாண்டிகள் என்றநிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எனவே அம்மக்களிடம் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்வது பொருத்தமானது அல்ல. இருந்தாலும் அவர்களுக்கு அரசியல் உரிமை உண்டு. அவர்களுடைய பிரதிநிதிகளை அவர்களே தெரிந்தெடுக்கவேண்டும். அந்த உரிமையை அவர்கள் இழந்து விடக்கூடாது என அவர்களுக்கு தைரியம் கொடுக்கின்றோம். அதே நேரத்தில் உங்களுக்கு நிச்சயமாக சிறந்ததோர் அரசியல் தலைமைத்துவம் வேண்டும் அதை நீங்கள் இப்போது சரியாக தேர்ந்தெடுக்காவிட்டால், இன்னும் ஆறு வருடங்கள் காத்திருக்க நேரிடும் என்ற விடயத்தை விளங்கப்படுத்தி வருகின்றோம்.

உங்கள் கருத்துக்களை கேட்பதற்கு அம்மக்கள் ஆர்வம் காட்டுகின்றார்களா?

நிச்சயமாக, அவர்கள் எமது கருத்துக்களை மிகவும் ஆர்வத்துடன் செவிமடுக்கின்றார்கள். ஆனாலும் அங்குள்ள மக்கள் தடுப்பு முகாக்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளின் விடுதலையிலேயே ஏக்கம் கொண்டுள்ளனர். அவ்விளைஞர் யுவதிகளை தம்முடன் இணைத்துக்கொள்ளவேண்டும், அவர்கள் இழந்த குடும்ப சுகத்தை அவர்களுக்கு கொடுக்கவேண்டும். அவர்களுக்கு கிடைக்காமல்போன கல்வியறிவை ஊட்டவேண்டும் என்ற விடயங்களை எம்மிடம் பேசுகின்றனர். இவ்விடயத்தில் அரசு எமக்கு அளித்த உறுதி மொழிகளை பூரணமாக நிறைவேற்றவில்லை என்றுதான் நான்கூறுவேன். இம்மக்கள் விடுவிக்கப்பட்டதும், இவ்விளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டதுமான காலகட்டங்களில் நாம் அரசுடன் பல தடவைகள் பேசியிருக்கின்றோம். இவ்விளைஞர் யுவதிகள் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படுவார்கள் என அரசினால் எமக்கு கூறப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் இவ்விளைஞர் யுவதிகள் புலிகளினால் பலவந்தமாக பிடிக்கப்பட்டவர்கள். புலிகள் தமிழ் இளைஞர் யுவதிகளை பலவந்தமாக பிடித்து போரில் ஈடுபடுத்துகின்றனர் என அரசு சர்வதேச நாடுகளுக்கு சொல்லியிருக்கின்றது. எனவே அவ்வாறான இந்த அரசு அவ்விளைஞர்களை எவ்வாறு தடுத்து வைக்கமுடியும் என எனக்கு விளங்கவில்லை. எனவே இவ்விளைஞர் யுவதிகள் விடயம் தொடர்பாக உடனடியாக எம்மால் நடவடிக்கை எடுக்க முடியாது போனாலும், தேர்தல் முடிந்த பின்னர் எமக்கு தேர்தலில் ஆசனங்கள் கிடைக்காது போனாலும் கூட அவர்களின் விடுதலை வேண்டி பாரிய அளவிலான சாத்வீக போராட்டங்களையாவது நாடாத்தி அவர்களை மீட்க எமது முழுப்பலத்தையும் பிரயோகிப்பது என நாம் உத்தேசித்துள்ளோம். அத்துடன் அதில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையும் உண்டு. இதுவே இன்று வன்னிமக்கள் எதிர்பார்க்கும் பாரிய எதிர்பார்ப்பாகும்.

புளொட் அமைப்பினராகிய உங்களைப்பற்றி வன்னி மக்களுக்கு புலிகளால் ஒரு பயங்கரமான வடிவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அம்மக்கள் உங்களை விரோதிகளாகவே பார்க்க கூடிய அளவிற்கு அவர்கள் மூளைச்சலைவை செய்யப்பட்டுள்ளார்கள். அத்துடன் இம்மக்கள் சுமார் 24 வருடங்களின் பின்னரே உங்களை நேரடியாக காண்கின்றார்கள். புலிகளால் துரோகிகள் என கூறப்பட்டு வந்த உங்களை மக்கள் காணும்போது அவர்களின் உணர்வுகள் எவ்வாறு காணப்படுகின்றது?

எமது அமைப்பு மாபெரும் மக்கள் அமைப்பாக கட்டியெழுப்பட்டு 1986ம் ஆண்டு காலப்பகுதிகளில் கிராமங்கள் தோறும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை கொண்டிருந்த அமைப்பென்பது யாவரும் அறிந்தவிடயம். அவ்வாறே வன்னியில் இருந்த எமது தோழர்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தாலும் கூட அவர்கள், சமுதாயத்தில் நல்ல பிரஜைகளாக இருந்துள்ளதுடன், அவர்கள் தற்போது தம்மை புளொட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியப்படுத்தும்போது புலிகளின் அப்பிரச்சாரங்கள் தவிடு பொடியாகியுள்ளது. இவை அனைத்துக்கும் அப்பால் எம்மை எவ்வாறு கெட்டவர்கள் எனச் சொன்னார்களோ அதற்கு மேலாக இலங்கை இராணுவத்தினர் தொடர்பாக மிக கொடுரமான செய்திகளை புலிகள் மக்களுக்கு கொடுத்திருந்தார்கள். அதாவது சிங்கள இராணுவம் உங்களை அண்டினால் அவர்கள் வெட்டி, சுட்டுக்கொல்வார்கள், கற்பழிப்பார்கள் போன்ற செய்திகள் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் வன்னியிலிருந்து வந்த மக்களை இராணுவம் புலிகள் கூறியது போல் அணுகவில்லை என்பதை அம்மக்களுடாகவே அறிய முடிகின்றது. இராணுவம் தம்மை மிகவும் கண்ணியமாக நாடாத்தியாதாகவே மக்கள் கூறுகின்றனர். ஆகவே இவ்விடயதிலும் புலிகளின் பிரச்சாரம் மேலும் தவிடு பொடியானது. புலிகள் கூறியவை யாவும் பொய்யானது என்ற நிலைப்பாட்டுக்கு மக்கள் வந்து விட்டனர். எனவே புளொட் இயக்கத்தினர் மீதும் கூறப்பட்டவை பொய்யானது என்பதையும் உணர்ந்து விட்டனர். நீங்கள் கூறும் இவ்விடயத்தில் உண்மை இருக்கின்றது. ஆனால் அது புலிகளாலேயே பொய்யாக்கப்பட்டுள்ளது. இவ்விடயங்களை மக்களுக்கு விளங்கவைப்பதற்கு நாம் எதையும் விசேடமாகச் செய்யவில்லை.

உங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் வன்னி பிரதேசத்தில் இருந்து மீண்டுவந்துள்ளதாக தெரிவித்தீர்கள். அவ்வாறானவர்கள் மீண்டும் உங்களுடன் இணைந்து செயற்பட ஆர்வம் கொண்டுள்ளார்களா? அவர்கள் இணைவார்களாயின் அது எவ்வாறான செல்வாக்கினை செலுத்தும?

வவுனியாவிலே எமது காரியாலயத்தில் இன்று பழைய தோழர்களுக்கான ஒன்று கூடல் ஒன்று இடம்பெற்றது . அதில் சுமார் 1000 இற்கு சற்று குறைவானவர்கள் வந்திருந்தார்கள். தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுடன், பழையகால நிகழ்வுகளையும் , சம்பவங்களையும் தோழர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். அத்துடன் எதிர்காலத்தில் ஆயுதங்களுடன் சம்பந்தப்படாத வகையில் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆதங்கம் அவர்களுள்ளே இருப்பதையும் அவர்களது கருத்துக்கள் எடுத்துக்காட்டின.

இவ்விடயத்தில் நான் ஒன்றைச் சுட்டிக்காட்டவேண்டும் நாம் இதுவரை எமது தோழர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கவில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் நாம் நாடளாவிய ரீதியில் எமது தோழர்களை அழைப்போம். அப்போது எமது பலம் தெரியவரும். எமது அமைப்பு அவர்களை சிறந்த முறையில் பயிற்றுவித்து விடுவித்திருக்கின்றது. அவர்களில் பலர் இன்று சமூகத்தில் சிறந்த அந்தஸ்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தேர்தலின் பின்னர் அவர்களை அழைத்து அவர்களுடாக கிராம மட்டங்களில் கட்டமைப்புக்களை உருவாக்கி மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்பது இன்று நடந்த ஒன்றுகூடல் ஊடாக உறுதியாகியுள்ளது.

தேர்தல் நிலவரங்களை பார்க்கும் போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் கட்சிக்கு வாக்கு சேர்க்க முனைவதிலும் பார்க்க விருப்புவாக்குகளை பெற்றுக்கொள்வதற்கு முனைப்புக் காட்டுவதையும், அதனடிப்படையில் ஒரே கட்சியை சேர்ந்த வேட்பாளர்களிடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. இவ்விடயத்தில் உங்கள் கட்சி நிலவரங்கள் எவ்வாறு காணப்படுகின்றது?

எங்களுடைய கட்சி வேட்பாளர்களை பொறுத்தவரை அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இல்லை. நானும் கூட ஒரு வேட்பாளன். கட்சிக்கு வாக்குகளை சேர்ப்பதிலேயே எமது வேட்பாளர்கள் குறியாக இருக்கின்றார்களே தவிர விருப்பு வாக்குகள் என்பது பிரச்சினை அல்ல.

தேர்தல் பிரச்சாரங்களின் போது, தமிழர் தமிழருக்கும் முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கும் சிங்களவர் சிங்களவருக்குமே வாக்களிக்கவேண்டும் என்ற குறுந்தேசியவாதம் பேசப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இவ்விடயத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன? இது சரியா?

தேசியவாதம் என்பது எங்களுடைய உள்ளங்களிலே ஊறியவிடயம். தேசியவாதம் என்ற விடயமே எம்மை போராட்டங்களை நோக்கி தள்ளியுள்ளது. தமிழ் தேசியம் என்ற விடயத்திற்காக ஆரம்ப காலங்களில் முஸ்லிம்களும் எம்முடன் இணைந்து போராடிவந்த வரலாறுகளே உண்டு. ஆனால் பேரினவாத சக்திகளால் தமிழ் மக்களில் இருந்து முஸ்லிம்கள் பிரிக்கப்பட்டுவிட்டார்கள். சிங்களத் தேசியவாதம் என்பது சிங்கள மக்களின் நலனை கருத்திற்கொண்டதாக காணப்படுகின்றது. எனவே தமது இனங்களின் நலனில் கவனம் கொண்ட விடயங்களை குறுந்தேசியவாதமாக வரையறுக்க முடியாது. அவை தேசியவாதம்தான். அந்த வகையில் இங்கே வன்னியில் ஏறத்தாழ 12,000 சிங்களவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தமது நலனை கருத்தில் கொண்ட சிங்களவர் ஒருவரை தெரிவு செய்யவேண்டும் எனக்கருதுவது தவறு எனக் கூறிவிடமுடியாது. ஆகவே இவ்விடயத்தினை தேசியவாதம் அல்லது குறுந்தேசியவாதம் என்பதை விட ஒர் இனத்தின் நலன்சார்ந்த விடயம் என்றே நான் கூறுவேன். அந்தவகையில் அதில் எவ்வித தவறும் இல்லை.

வன்னியிலே பல அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றது. சரியாக எத்தனை அரசியல் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் போட்டியிடுகின்றது? இவற்றால் தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள் எவை?

அரசியல் கட்சிகள் , சுயேட்சைக்குழுக்கள் என மொத்தமாக 28 குழுக்கள் போட்டியிடுகின்றன. அனேகமான சுயேட்சைக் குழுக்கள் அரசினால் களமிறக்கப்பட்டுள்ளது. ஏன் சில கட்சிகள் கூட அதே நிலைதான். ஊதாரணத்திற்கு யாழ்பாணத்தில் அரசுடன் இணைந்து அரசின் சின்னத்தின்கீழ் போட்டியிடும் தமிழ் கட்சியை இங்கு தனித்து போட்டியிட விட்டிருக்கின்றார்கள். அதேபோன்று கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிட்ட கட்சிகளைத் தனித்தனிக்கட்சிகளாக போட்டியிட விட்டிருக்கின்றார்கள். இது அரசிற்கு சாதகமான ஒர் நடவடிக்கையாகத்தான் நான்பார்க்கின்றேன். அரசு தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்து கட்சியொன்று அதிகூடியவாக்குகளை எடுப்பதை தடுப்பதன் மூலம் தமது பிரதிநிதித்துவத்தை கூட்டலாம் என கருதுகின்றது. ஆனால் தமிழ் மக்கள் இவ்விடயங்களை நன்கு விளங்கி தாம் தமது பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவேண்டும் என உறுதிபூணுவார்களாயின் எவரது வியூகங்களாலும் எம்மை தோற்கடிக்க முடியாது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் உங்களது கட்சியினால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக்கூட பெற முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. அந்தவகையில் இத்தேர்தலை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

கடந்த தேர்தலானது முற்றிலும் வேறுபட்ட நிலையில் நோக்கவேண்டியது. புலிகள் மிகவும் பலமாக காணப்பட்டார்கள். அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவுடன் சமாதான ஒப்பந்தம் என்ற ஒன்றை செய்துகொண்டதுடன் தங்களை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என உலகிற்கு அறிவிக்கும் பொருட்டு ரிஎன்ஏ என்ற அமைப்பொன்றை நிறுவி அவர்களை தேர்தலில் நிறுத்தியதுடன், தமது அரசியல் அங்கீகாரத்திற்காக அவ்வமைப்பை வெல்ல வைக்கும் நோக்கில் தமது முழு ஆயுதப்பலத்தையும் பிரயோகித்து அவ்வமைப்பினை வெல்லவும் வைத்திருந்தார்கள். ஆனால் இத்தேர்தலானது புலிகள் முற்றிலும் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட நிலையில் மக்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே எமக்கு இங்கு சாதகமான நிலை உள்ளதாகவே தோன்றுகின்றது.

நேர்காணல்கள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. XIII

Read more...

Tuesday, December 23, 2008

தமிழீழ விடுதலைக் கழக தலைவர் திரு. சித்தார்த்தன் அவர்களுடனான நேர்காணல்.


இன்று தமிழ் அரசியல் கட்சிகள் பிளவுபட்டு மேலும் சிறு சிறு கூறுகளாக சென்று கொண்டிருக்கின்ற தருணத்தில் உங்களால் இவ்வாறானதொரு கூட்டணியை எவ்வாறு உருவாக்க முடிந்தது?

எமது ஜனநாயகக் கூட்டணி இன்று உருவாக்கப்பட்டதல்ல. கடந்த மூன்று வருடங்களாக எமது கட்சி, திரு. ஆனந்தசங்கரி தலமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, திரு. சிறிதரன் தலமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (நாபா அணி) இணைந்து தொடர்ந்து பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்திருக்கின்றோம். எமது மக்களின் தேவைகளின் நிமிர்த்தம் பல வெளிநாட்டு ராஜதந்திரிகள், அதிகாரிகள் மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், அங்குள்ள அரசியல்வாதிகள் என பல தரப்பட்டோரையும் நாம் கூட்டாக சந்தித்து பேசி வந்திருக்கின்றோம். அது மட்டுமல்ல கடந்த தேர்தல்களில் கூட, குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிமன்றத் தேர்தல் மற்றும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் கூட்டாகவே போட்டியிட்டோம். (அங்கு சிறியதொரு வித்தியாசம் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களில் ஈபிடிபி யினர் எம்முடன் இணைந்து போட்டியிட்டிருந்தார்கள். பின்னர் இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தல்களில் அவர்கள் எம்மிலிருந்து விலகிக் கொண்டார்கள்)

அவ்வாறு தொடர்ந்து புரிந்துணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் கூட்டாகவே வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் சென்றதனூடகவும் இன்றைய காலத்தின் தேவையான ஓர் கூட்டணியை அரசியல் கட்சியாக பதிவுசெய்துள்ளோம். டிரிஎன்ஏ அதாவது ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி இலங்கையில் தேர்தல் திணைக்களத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளதுடன் எமது கட்சியின் சின்னமாக எமக்கு குத்து விளக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தத்தில் புரிந்துணர்வின் அடிப்படையில் ஒன்றுபட்டு வேலைதிட்டங்களை முன்னெடுத்ததன் பயனாக இக்கூட்டணியை உருவாக்க முடிந்ததென கூறுகின்றீர்கள். இக் கூட்டணி உருவாக்கத்தின் நோக்கம் என்ன? அதன் அடிப்படைக் கொள்கைகள் என்ன?

கூட்டணி உருவாக்கத்தின் நோக்கம் தமிழ் கட்சிகள் பிளவுபட்டு நிற்பதால் தமிழ் மக்களின் குரல் ஒருமித்து ஒலிக்காமல் தனித்தனியாக ஓலிக்கும்போது உருவாக்கூடிய நிலைமைகளை முறியடிப்பதாகும். அரசு மட்டுமல்ல வேறு சக்திகளும் இந்நிலைமைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்துவதை தடுக்கவேண்டும் என்பதும், ஒன்றுபட்டு நாம் குரல் கொடுக்கும்போது அதன் பலம் வலுவாக இருக்கும் என்பதும் ஆகும்.

அடிப்படைகொள்கைகள் என்கின்றபோது நாம் எமது அடிப்படை அரசியல் கொள்கைகளை ஆதரிக்கின்ற கட்சிகளாக இருக்கின்றோம். எங்களைப் பொறுத்தவரை சமஸ்டி அமைப்பின் கீழ் ஒர் நிரந்தரமான தீர்வைக் காணலாம் என நிச்சயமாக நம்புகின்றோம். சமஸ்டி முறையிலான தீர்வே எமது அடிப்படைகொள்கை. அது தவிர அங்கு வேறு பல விடயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. எமது கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்ற எனைய கட்சிகளும் எம்முடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என எதிர்பார்கின்றோம்.

உங்கள் ஜனநாயகக் கூட்டணி உருவாக்கத்தின் நோக்கம் அதன் தேவை மற்றும் அதன் கொள்கைகளை ஏனைய கட்சிகளுக்கு உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்தி அவர்களையும் உங்களுடன் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளீர்களா?

கடந்தகாலங்களில் இது பற்றி பல தடவைகள் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளோம். கூட்டாக வேலை செய்யவேண்டியதன் அவசியத்தை எடுத்து கூறியிருக்கின்றோம். இங்கே முக்கியாமான விடயம் யாதெனில் அடிப்படையில் எம்முடன் ஒத்துப்போக வேண்டிய கட்சிகளாக இருக்கவேண்டும். கூட்டணி என்னும் போது அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளவேண்டும். தேர்தலுக்கு மாத்திரம் கூட்டணி அல்லாமல் வேலைத்திட்டங்களிலும் கூட்டணியுடன் ஒத்துழைக்க கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பு. ஒரு கட்சி மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதிலே நாம் மிகவும் அவதானமாக உள்ளோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை எடுத்துக்கொண்டால் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்திலேயே அக்கூட்டமைப்பு செயற்படுகின்றது. புலிகள் எதைக் கூறுகின்றார்களோ அதை கூறுவதற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது. ஆகவே அப்படியான ஓர் கூட்டணியாக நாம் இருக்க முடியாது. அங்கத்துவக் கட்சிகள் சமமாக மதிக்கப்படுகின்ற தன்மை, சம அந்தஸ்து பேணப்படல் என்கின்ற காரணங்களுக்காகவே இக்கட்சியை தனியான ஒர் சின்னத்தின் கீழ் பதிவு செய்துள்ளோம். இவ்விடயங்களை மதிக்கக்கூடிய கட்சிகள் இணைய முற்படும் சந்தர்பத்தில் அவர்கள் தமது அடையாளங்களை விட்டுத்கொடாமல் இக்கூட்டணியில் ஓர் அங்கமாக இணைந்து கொள்ள முடியும். அப்போது அவர்களை சந்தோசமாக ஏற்றுக்கொண்டு வேலைசெய்யத் தயாரகவே இருக்கின்றோம்.

உங்கள் கூட்டணியில் அங்கத்துவம் பெறும் அரசியல் கட்சிகள் தேர்தல்களில் கூட்டணியில் இருந்து விலகி தனித்து நிற்க முடியுமா?

இது நிச்சயமாக தேர்தல்களை இலக்காகக்கொண்டு உருவாக்கப்பட்டதொரு கூட்டணி அல்ல. கூட்டணியில் இருந்து ஒருகட்சி தம்மை விலத்தி கொள்ள யாப்பில் இடமுண்டு.

கூட்டணியில் அங்கம்வகிக்கும் போது தனித்து தேர்தல்களில் பங்கு பற்ற முடியாது என்கிறீர்களா?

வேலைத்திட்டங்களில் ஒன்றாக நிற்கின்றபோது தேர்தலில் மாத்திரம் தனித்து நிற்பதில் அர்த்தம் இல்லை.

நீங்கள் அங்கம் வகிக்கின்ற கூட்டணியோ அல்லது நீங்கள் தலமை தாங்குகின்ற புளொட் அமைப்போ எதிர்வரும் தேர்தல்களில் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணியுடனோ அன்றில் ஐ.தே. கட்சியுடனோ தேர்தல்களில் கூட்டுச்சேர வாய்ப்புண்டா?

நிச்சயமாக இல்லை. எந்தவொரு அடிப்படையிலும் நாம் எந்தவொரு பெரும்பாண்மைக் கட்சிகளுடனும் தேர்தல்களில் கூட்டுச்சேர்ந்து நிற்கப்போவதில்லை. எங்களுடைய தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல் ஒருமித்த எமது பலத்தை நிரூபிக்கவே இக்கூட்டணியை அமைத்துள்ளோம். அதனடிப்படையில் எமது கூட்டணிச் சின்னமான குத்துவிளக்கு சின்னத்தின் கீழேயே இனிவரும் காலங்களில் போட்டியிடுவோம்.

உங்கள் கூட்டணி எதிர்காலத்தில் அரசிற்கோ அன்றில் அரசொன்றை அமைப்பதற்கோ ஒத்துழைப்பு வழங்குமா?

அது இப்போது கூறுவது கடினம். நாங்கள் விதிக்கக்கூடிய நிபந்தனைகளை அரசு எவ்வாறு பரிசீலிக்கப்போகின்றது அல்லது நடைமுறைப்படுத்தப் போகின்றது என்பதிலேயே அவ்விடயம் தங்கியுள்ளது. ஆனால் இன்று இருக்கின்ற சூழ்நிலையில், தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகள் கிடைக்கும் வரைக்கும், தமிழ் மக்கள் இத்தீவிலே நிம்மதியாக வாழுகின்ற வரைக்கும் அரசதரப்பு ஆசனங்களில் நிச்சயமாக அமரமாட்டோம். இவ்விடயத்தில் எவ்வித சந்தகத்திற்கும் இடமில்லை.

கடந்த சில காலங்களாக ஈபிடிபி அமைப்பு வவுனியாவில் செயற்படுவதாக தெரியவருகின்றது. அவ்வமைப்பு எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைத்து போட்டியிடும் என கருதுகின்றீர்களா? அவ்வாறு அவர்கள் அரசுடன் இணைத்து போட்டியிட்டால் அது உங்களுக்கு பெரும் சவாலாக அமையுமல்லவா? எவ்வாறு சமாளிப்பீர்கள்?

ஈபிடிபி சில காலங்களாக அல்ல ஓர் குறிப்பிடக் கூடிய காலங்களாக அங்கு செயற்பட்டு வருகின்றார்கள். அவர்கள் தனித்து தேர்தல்களில் நிற்கப்போகின்றார்களா? அல்லது எம்முடன் இணைந்து நிற்பார்களா? என்பது எமக்குத்தெரியாது. நிச்சயமாக அவர்கள் எங்களுடன் இணைவார்கள் என எதிர்பார்கின்றோம். ஈபிடிபி அரசுடன் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் பெரும்பாண்மைக்கட்சிகளும் அரசும் வவுனியாவில் போட்டியிடும்.

ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி போட்யிடுகின்றபோது கடந்தகாலங்களைப் போன்று சில தமிழர்களும் அக்கட்சியில் போட்டியிடுவார்கள். அதனுடன் ஈபிடிபி யினரும் இணைந்து கொண்டாலும் கூட அது எமக்கு பெரிய சவாலாக இருக்கப்போவதில்லை. எங்களைப் பொறுத்தமட்டில் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றோம். எதிர்வரும் காலங்களில் நாடாத்தப்பட இருக்கும் தேர்தல்கள் எவ்வாறு அமையப்போகின்றது என்பதுதான் விடயம். நிச்சயமாக ஓர் ஜனநாயக முறையிலான தேர்தல் இடம்பெற்றால் மக்கள் பலத்துடன் எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்.

உங்கள் கூட்டணியை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், உங்கள் கொள்கைகள் அரசாங்கத்திற்கு சார்பானவையெனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார். இதுபற்றி நீங்கள் என்ன கூறுகின்றீhகள்?

எமக்கு பாராளுமன்ற அங்கத்துவம் இல்லாத காரணத்தால் நாம் தமிழ் மக்கள் மத்தியில் பேசுவதற்கு தகுதியற்றவர்கள் என்றும் கூறியிருக்கின்றார். இதிலிருந்து இவர் தங்களைத் தவிர எவரும் தமிழ் மக்களைப் பற்றி பேசக்கூடாது எனக் கருதுகின்றார். இதுதான் புலிகளது ஏகப்பிரதிநிதித்துவக் கொள்கை. புலிகள் கொலைகள் மூலம் அதை நிறைவேற்றப் பார்த்தார்கள். அனால் கூட்டமைப்பினர் அதை வேறுவிதமாக கையாளுகின்றார்கள். எம்மைப் பொறத்தவரையில் இவர்கள் புலிகளது அடிவருடிகள். இதை நாம் எதேச்சையாக கூறவில்லை. கடந்த 2007 ஆண்டு மாவீரர் தின உரையில் பிரபாகரன் தம்மை மக்கள் அங்கீகரித்து 22 பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்பியுள்ளார்கள் என்று கூறியதன் மூலம் கூட்டமைப்பினர் புலிகள் தான் என்பதை அவர் உறுதிப்படுத்தியிருக்கின்றார். தமிழ் கூட்டமைப்பினர் கூறுவது புலிகள் கூறுவதே! அந்த வகையில் இன்று இங்கு நடந்து கொண்டிருக்கின்ற யுத்தமென்பதும் ஒட்டுமொத்தத்தில் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் புலிகள் என்பதை நிலைநிறுத்துவதற்கானதுவே. ஆகவே அவர் கூறிய அவ்விடயத்தை பெரிதுபடுத்த வேண்டிய தேவை இல்லை.

மற்றயது எமக்கு பாராளுமன்ற அங்கத்துவம் இல்லை என்பதும் தமிழ் கூட்டமைப்பினர் அவ் அங்கத்துவங்களை எவ்வாறு பெற்றுக்கொண்டார்கள் என்பதும் நாம் கூற வேண்டிய தேவை இல்லை. இங்கு தேர்தல் கண்காணிப்புகளில் ஈடுபட்டிருந்த ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்தோர் தேர்தல் ஆணையாளருக்கு வழங்கியிருந்த அறிக்கையில் அங்கு இடம்பெற்றிருந்த மோசடிகளை தெட்டத்தெளிவாக சுட்டிக்காட்டியிருந்ததுடன் அத்தேர்தல் முடிவுகளை நிராகரிக்கும்படியும் பரிந்துரைத்திருந்தனர். அவ்வாறான ஓர் மோசடியை செய்து பாராளுமன்ற அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டு தாங்கள்தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூற முடியுமானால், நாம் நேர்மையாகவே அன்றில் இருந்து இன்று வரை மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களின் ஒருதொகை வாக்குகளை புலிகளின் அச்சுறத்தலையும் மீறிப்பெற்று இருக்கின்றோம் என்றால் அது நாம் அந்த மக்களின் பிரதிநிதிகள் என்பதே அர்த்தம்.

சகல விடுதலைப் போராட்ட இயக்கங்களின் வரலாறுகளையும் எடுத்துப்பார்கின்றபோது அவை இரண்டிற்கு மேற்பட்ட பிரிவுகளாக பிளவு பட்டுள்ளதையும், அதன் முன்னணித் தளபதிகள், போராளிகள் தலைமையுடன் முரண்பட்டு பிரிந்து சென்றும் உள்ளனர். ஆனால் தலைவர் உமாமகேஸ்வரனது மறைவின் பின்பு உங்கள் தலைமையில் இயங்கிவருகின்ற புளொட் இயக்கம் அதற்கு விதிவிலக்காக காணப்படுகின்றது. இவ்விடங்களை நீங்கள் இத்தனை காலமும் எவ்வாறு சமாளித்து வருகின்றீர்கள்?

ஆரம்பத்தில் புளொட் இயக்கத்திலும் பிளவுகள் எற்பட்டுள்ளது. பின்னாட்களிலும் எம்மிடையே கருத்துமுரண்பாடுகள் உருவானதுண்டு. அனால் நாம் அனைவரது ஜனநாயக உரிமைகட்கும் மதிப்பளித்து அவர்களது கருத்துக்களுக்கு முக்கியத்தும் கொடுக்குமுகமாக மத்திய குழுவைக் கூட்டி உடனுக்குடன் பிணக்குகளுக்கு தீர்வு கண்டுவருகின்றோம். அநேகமான பிணக்குகளுக்கான தீர்வுகளை கூட்டு முடிவுகளாக எடுக்கின்ற போது அவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. பெரும்பாலும் முடிவுகளை கூட்டு முடிவுகளாக எடுக்க ஆரம்பித்தாலே பிரச்சினைகள் எழுவதை தவிர்க்கலாம் என நான் கருதுகின்றேன்.

இவ்வாறான பிளவுகளுக்கான காரணம் தலைமைத்துவத்தின் குறைபாடு என்று கூறுவீர்களா? அன்றில் போராளிகள் அல்லது தளபதிகளின் சுயநலம் சார்ந்த முடிவுகள் என்று கூறுவீர்களா?

எமது தமிழ் இயங்கங்களிடையே நிகழ்ந்துள்ள நிகழ்வுகள் இவ்விரண்டு தரங்களையும் சாரும். ஓவ்வொரு கட்டங்களிலும் இருக்ககூடியவர்களின் பதவி ஆசைகள், தாம் ஏன் தொடர்ந்தும் இரண்டாம் கட்டத்தில் இருக்கவேண்டும் முதலாம் கட்டத்திற்கு போனால் என்ன என எழுகின்ற தர்க்கம் என்பனவே பொதுவான காரணிகளாக அமைந்துள்ளது. இதுபற்றி பொதுவான ஓர் கருத்தை கூற முடியாது. ஒவ்வொரு இயக்கங்களும் பிளவுபட ஒவ்வொரு காரணங்கள் இருந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்புகளுள் மிகபெருமளவிலான போராளிகளைக் தன்னகத்தே கொண்டிருந்த புளொட் அமைப்பு காலப்போக்கில் அதன் ஆட்பலத்தை இழக்க நேரிட்டதற்கான காரணம் என்ன?

நாம் ஆயுத பலத்தை நாம் உருவாக்கத் தவறியமையே அதற்கான முக்கிய காரணமாக நான் கணித்து வைத்துள்ளேன். இதற்கு தலைமையை மட்டும் குறை கூறிவிட முடியாது. நாம் ஓர் காலகட்டத்தில் மிக ஆட்பலம் பொருந்திய அமைப்பாக காணப்பட்டபோது நாம் இந்தியாவின் கட்டளைக்கு கட்டுப்படமாட்டோம் என இந்தியா எம்மீது சந்தேகப்பட ஆரம்பித்தன் விளைவாக நாம் இந்தியாவை நம்பாத காரணமும் இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஏற்பட்ட விரிசலும் பல பின்னடைவுளைத் தந்திருந்தது. இந்தியா எமக்கு ஆயுத ரீதியாக உதவிபுரிய மறுத்த போது நாம் சுயமாக ஆயுங்களை கொண்டுவர முயற்சித்திருந்தபோது அவ்விடயங்களை இந்தியா கையாண்ட விதம் என்பன பல பிரச்சினைகளைக் கொடுத்திருந்தது. நிச்சியமாக ஓர் ஆயுத அமைப்பிடம் ஆயுதங்கள் இல்லாமல் போகின்றபோது அது பல பின்னடைவுகளை சந்திப்பது தவிர்க்கமுடியாதது.

கொள்கை ரீதியாக நாம் மிகவலுப் பெற்றவர்களாக இருந்த போதிலும் அக்கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அன்று ஆயுதம் என்பது இன்றியமையாததாக இருந்தது. நாம் கொள்கை ரீதியா பலமாக இருக்கின்றோமா என்பதைவிட இராணுவ ரீதியாக பலமாக இருக்கின்றோமா என்பதுதான் அன்றைய மக்களின் கேள்வியாகவும் மனநிலையாகவும் இருந்தது. இராணுவ ரீதியாக பலமாக இருக்கின்ற இயக்கம்தான் விடுதலையைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை மக்களுக்கு அன்றும் இருந்தது இன்றும் இருக்கின்றது. இவ்வாறன காரணங்களே எமது போரட்டம் என்பது முற்று முழதாக வெறும் இராணுவக் கட்டமைப்பாக உருப்பெற்றதற்கும் போராட்டம் திசைதிருப்பட்டதற்கும் ஏதுவாக அமைந்திருந்தன. .

இன்று புலம்பெயர்ந்த நாடுகளிலே முன்னாள் போராளிகள் என்று எடுத்துக்கொள்ளுகின்றபோது புளொட் அமைப்பின் போராளிகளே அங்கு மிகவும் கணிசமாக காணப்படுகின்றனர். ஆனால் அமைப்பினுடனான அவர்களது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவே பேசப்படுகின்றது. இது பற்றி உங்கள் கருத்து என்ன? அவர்களது சேவையை மீண்டும் பெற்றுக்கொள்ள எதிர்காலத்தில் முயற்சிப்பீர்களா?

எண்பதுகளில் புளொட் இயக்கம் இங்கு பலமாக மாபெரும் சக்தியாக இருந்த காலங்களில் நான் லண்டனில் இருந்தேன்; அப்போது புலம்பெயர் தமிழர்களில் 60 சதவீதத்தினர் புளொட் இயக்கத்தையே சார்ந்திருந்தனர். ஏனயை 40 சதவிதத்தினரும் பல்வேறு இயக்கங்களையும் சார்ந்திருந்தனர். நாம் இங்கு ஆயுதரீதியாக பலவீனமடைந்த போது அங்கிருகக்கூடிய போராளிகள் சோர்வடைந்து படிப்படியாக தமது சொந்த விடயங்களில் இறங்க ஆரம்பித்திருந்தார்கள். ஆனால் இன்று அந்த நிலைமைகளில் சிறிது மாற்றத்தை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. நாம் அங்கு விஜயம் செய்கின்றபோது, கருத்தரங்குகளை ஏற்பாடு செய்கின்ற போது பெரிய அளவில் இல்லாவிட்டாலும் ஒரு சிறிய தொகுதியினர் மீண்டும் வருவதை அவதானிக்கின்றேன். மறுபுறத்தில் இப் பின்னடைவுகள் யாவற்றிற்கும் நிதி நெருக்கடியும் காரணமாக இருந்துள்ளது. இயக்கமொன்றை உள்நாட்டில் மட்டுமல்ல எங்கு செயற்பட வைப்பதானாலும் நிதி என்பது இன்றியமையாதது. அந்த வகையில் நாம் ஆயுத பலமிழந்து இராணுவ ரீதியாக பின்தள்ளப்பட்டபோது எமக்கு மக்களிமிருந்து கிடைத்துவந்த நிதியுதவிகள் இல்லாமல் போனது. இன்று புலிகள் ஆயுதபலத்துடன் இருக்கின்றார்கள் மக்கள் விரும்பியோ, விரும்பாமலோ, பயத்திலோ பணத்தை கொடுக்கின்றார்கள் அப்பணத்தில் புலிகளால் உலகெங்கும் அவர்களது செயற்பாடுகளை தக்க வைத்துக்கொள்ள முடிந்திருக்கின்றது.

எமக்கு இன்று எமது மக்களிடமிருந்து எந்தவிதமான அன்பளிப்புகளும் கிடையாதபோதிலும் எமது தோழர்கள் தமது சொந்தப்பணத்திதை செலவு செய்து அங்கு இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதுவே ஓர் பெரிய விடயம் என்பதுடன் அது எமக்கு பலமும்கூட. ஆனால் இங்கு நிலமைகள் மாறும் போது அங்கும் மாற்றங்கள் ஏற்படும். ஆனால் அங்கிருக்கின்ற தோழர்கள் அனைவரும் ஒரு கட்டம் வரும்போது புளொட் இயக்கத்திற்கென்றல்லாமல் மக்களுக்காக தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஏனென்றால் அவர்கள் அரசியல் ரீதியாக மிகவும் திடமாக வளர்க்ப்பட்ட, வளர்ந்த தோழர்கள். புளொட்டை பொறுத்தவரை அது தனது தோழர்களுக்கு பூரணமான அரசியல் அறிவை வழங்கி இருக்கின்றது. அந்த வகையில் புலம் பெயர்ந்து வாழுகின்ற புளொட் இயக்கத் தோழர்கள் எமது மக்களின் தேவைகள் என்ன என்பதை நன்கு உணர்வார்கள். அவர்கள் சரியான தருணம் வரும் போது எமது மக்களுக்கு செய்யவேண்டிய சேவையை அவர்கள் செய்வார்கள் என்பதில் எனக்கு எந்த விதமான சந்தேகமும் கிடையாது.

இன்று வன்னியில் இடம்பெற்று வருகின்ற போரை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

இராணுவத்தினரின் கை ஓங்கி புலிகள் பலவீனமான நிலையில் உள்ளனர்.
இங்கு மக்களை பாதுகாக்க வேண்டிய தேவை இருதரப்பினருக்கும் உண்டு. ஆனால் மக்களை காக்கவேண்டிய பெரியதொரு கடமைப்பாடு புலிகளுக்கு உண்டு. காரணம் தமிழ் மக்கள் சிங்கள பேரினவாத அரசுகளால் நசுக்கப்படுகின்றபோது அவர்களை நாம் காப்பாற்ற வேண்டுமெனக் கூறியே ஆயுத இயக்கங்கள் உருவாக்கப்பட்டது. பின்னாட்களில் போராட்டம் என்பது புலிகளுக்கே சொந்தமானதெனவும் அவர்களால் மாத்திரமே தமிழ் மக்களுக்கு விடுதலையை வாங்கிக்கொடுக்க முடியுமெனவும் மாற்று இயக்கங்களை புறந்தள்ளி புலம்பெயர்ந்து வாழுகின்ற மக்களிடம் இங்குள்ள மக்களின் பெயரால் கோடிக்கணக்கான நிதியுதவிகளை பெற்றுள்ளனர். எனவே புலிகளுக்கு மக்களிடம் வாங்கியுள்ள நிதியின் பெயரால் அம்மக்களை காப்பற்ற வேண்டிய கடமை ஒன்றுள்ளது. அதேதருணத்தில் இவ்விடயத்தில் இராணுவத்தினர் புலிகளுடனான போரில் எறிகணைத் தாக்குதல் மற்றும் ஆகாயவழித் தாக்குதல்களில் ஈடுபடுகின்றபோது மக்களை கவனத்தில் கொள்ளவேண்டும் என பல வழிகளிலும் வேண்டுதல் விடுத்து வருகின்றோம். இருதரப்பினரும் யுத்தம் புரிய விரும்பினால் அவர்கள் யுத்தம் புரியட்டும். அனால் அங்குள்ள மக்கள் காப்பாற்ற படவேண்டும் என்பதே எமது வேண்டுதல்.

ஈராக் யுத்தத்தை எடுத்துப்பார்ப்போமானால் அங்கு 15 லட்சம் மக்கள் போரிலே உயிரிழந்திருக்கின்றார்கள். அதனுடன் ஒப்பிடுகையில் எமது மக்கள் போர் நேரங்களில் உயிரிழந்துள்ளது மிகக் குறைவு. காரணம் எமது மக்கள் இன்றைய போர் நடவடிக்கைகளுக்கு நன்றாக பழக்கப்பட்டு விட்டார்கள். போர் நடக்கின்ற இடங்களை விட்டு உடனடியாக விலத்தி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லப் பழகிக் கொண்டுள்ளார்கள். அது எமக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. ஆனால் ஆங்காங்கே அவ்வாறு இடம்பெயருகின்ற போதும்கூட சில தாக்கங்கள் இடம்பெறத்தான் செய்கின்றது. அதில் ஒரு பொதுமகன் கொல்லப்பட்டால் கூட அதை அனுமதிக்க முடியாது.

அடுத்து வன்னியிலே ஓர் சிறிய பகுதியினுள் 3 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அங்கு தங்குவதற்கு போதுமான கட்டிடவசதிகள் கிடையாது. மக்கள் ஆங்காங்கே எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தொற்றுநோய் அபாயம் இருக்கின்றது. இந்த மக்களை காப்பாற்ற வேண்டிய கடமையொன்றும் எமக்கிருக்கின்றது. இப்போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர்களில் நாமும் ஒர் முக்கிய பங்காளிகள் என்ற வகையில் இந்நிலமைகளுக்கு எதிராக எம்மால் முடியுமானவற்றை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அங்கு உணவுத்தட்டுப்பாடு கிடையாது. இந்திய அரசு ஒருதொகை உணவு வகைகளை அனுப்பி வைத்துள்ளது. இந்தியா அனுப்பாவிட்டாலும் இலங்கை அரசும் உணவுப் பொருட்களை அனுப்பிக்கொண்டுதான் இருந்தது.

அடுத்து ஒருதொகை மக்கள் புலிகளின் பிடியிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை படையினர் செட்டிக்குளத்தில் உள்ள மெனிக் பார்ம் பிரதேசத்தில் வைத்து பாராமரித்துக் கொண்டிருக்கின்றார்கள். அங்கு எமது தோழர்கள் தொடர்ந்து சென்று அம்மக்களின் தேவைகளை அறிந்து தமது சக்திக்கு ஏற்றவாறு சில உதவிகளை செய்து வருகின்றார்கள்.

இன்றைய போரில் ஏதாவது ஒருதரப்பு முற்று முழுதாக வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டா?

இப்போது கூறுவது மிகவும் கஸ்டம். ஆனாலும் புலிகள் பலவீனமான ஓர் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதைத்தான் நாம் பார்க்கின்றோம்.

உங்களது கெரில்லா போராட்ட அனுபவங்களின் அடிப்படையில், இராணுவத்தினரது கை மேலோங்கும் தருணத்தில் புலிகள் மீண்டும் கெரில்லா போர் முறைக்கு செல்வார்களாயின் அவர்களால் எத்தனை காலங்களுக்கு போர் செய்ய முடியும்?

இதில் 80ம் ஆண்டு காலப்பகுதிகளை வைத்துக்கொண்டு எவ்வித எதிர்வுகூறல்களையும் கூற முடியாது. காரணம் இங்குள்ள மக்கள் அதாவது போர் இடர்பாடுகளினுள் வாழும் மக்கள் (புலம்பெயர்ந்து வாழும் மக்களல்ல) போரை முற்றாக எதிர்க்கின்றார்கள். அந்த வகையில் கெரில்லாப் போர் என்பது மக்கள் மத்தியிலிருந்து எடுத்துச் செல்லப்படவேண்டிய ஒன்றாகும். அதற்கு மக்கள் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவார்கள் என நான் நம்பவில்லை. இப்போரிலே இலங்கை இராணுவம் முற்றுமுழுதான அனுபவத்தை பெற்றுள்ளமையால் கெரில்லா யுத்தமொன்றை சிறிய அளவில் மேற்கொள்வதானாலும் பெரியளவில் எதிர்ப்புக்களை சந்திக்க நேரிடும்.

உலகிலே கெரில்லா இயக்கங்களை அழித்த வரலாறு இல்லை என கூறப்படுகின்றது. ஆனால் இலங்கையின் புவியியல் தளமும் இலங்கை இராணுவத்தின் ஆட்பலமும் அதன் நவீன வளர்ச்சியும் கெரில்லா இயக்கமொன்றிற்கு இடம் கொடுக்குமா?

இப்போரிலே புலிகளியக்கம் அழிந்துவிட்டால் அல்லது பலமிழந்துவிட்டால் இலங்கையில் புரையோடிப்போயுள்ள பிரச்சினைக்கான தீர்வு கண்டுவிட்டோம் என அரசு கதவுகளை இழுத்து மூடிவிடப்போகின்றார்களா? அன்றேல் தமிழ் மக்களது நியாமான கோரிக்கைகளை நிவர்த்தி செய்யப்போகின்றார்களா என்பதிலேயே மேற்படி விடயம் தங்கியுள்ளது. அரசு தமிழ் மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகட்கு ஓர் பொருத்தமான அதிகாரப் பகிர்வை வழங்கி தமிழ் மக்கள் திருப்தியுடன் தமது விடயங்களை தாங்களே நிவர்த்தி செய்து கொள்ளக்கூடிய ஓர் நிலைமையை உருவாக்குமேயானால், நிச்சயமாக விடுதலைப் புலிகள் மட்டுமல்ல எந்த ஒரு அமைப்பும் ஆயுதப்போராட்டத்தில் வெற்றியடைய முடியாது.

இன்றைய நிலையில் புலிகளியக்கத்தின் தலைவராக நீங்கள் இருந்தால் எவ்வாறான அணுகு முறைகளை மேற்கொள்வீர்கள்?

முதலாவதாக அவருடைய நிலையில் நான் இருக்க விரும்பவில்லை. அவர் மிகவும் ஓர் கஸ்டமான நிலையில் இருக்கின்றார். காரணம் அவர் ஒர் பெரிய இயக்கத்தை வைத்திருந்து இன்று மிகவும் நலிந்த நிலைக்கு வந்துள்ளார். இந்நிலைக்கு அவரும் அவ்வியக்கமும் இழைத்த பாரிய தவறுகளே காரணம் எனக் கூறுவேன். குறிப்பாக தனது ஏக பிரதிநிதித்துவக் கொள்கையின் நிமித்தம் 1970 களின் பிற்பகுதியில் இருந்தே மாற்று இயக்கங்களுடன் முரண்பட ஆரம்பித்திருந்தார் என்பது யாவரும் அறிந்த விடயம். குறிப்பாக இவரது ஏகப்பிரதிநிதித்துவக் கொள்கையே எமது போராட்டத்தை சிதைத்தது என்பதை தற்போது அனைவரும் உணர்ந்துள்ளனர். அடுத்து அவர் இந்தியாவிற்கு பாரிய தவறிழைத்திருக்கின்றார். அன்று இந்தியாவின் உதவியுடன் எமது மக்களுக்கு ஒர் நியாயமான தீர்வு கிடைக்கப்பெற்றிருந்தது. ஆனால் அதன் பயன் எம்மக்களைச் சென்றடைய விடாது தடுத்து பாரிய படுகுழியில் தள்ளியிருக்கின்றார். எனவே நிச்சயமாக நான் அவரது நிலையில் இருக்க விரும்பவில்லை. ஆனால் நான் அவர் நிலையில் இருந்திருந்தால் நிச்சயமாக தவறுகளை உணர்ந்து என்னை திருத்திக்கொள்ள முற்பட்டிருப்பேன். அடுத்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்பேன்.

புலிகளியக்கம் இந்தியாவிற்கு பாரிய தவறிழைத்துள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் புலிகள் அவற்றை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையில் இல்லாதபோது இன்று தமிழக அரசியல்வாதிகளின் நிலையை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

புலிகள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இந்திய பிரதமருடைய கொலை விடயம் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. இந்திய படையினருடன் இங்கு போரிட்ட விடயத்தை அரசியல் ரீதியாக இந்திய மக்கள் நோக்கினாலும் இந்திய பிரதமருடைய கொலையை அந்நாட்டு மக்கள் மறப்பதற்கு தயாராக இல்லை. தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் இவ்விடயத்தில் மிகவும் அவதானமாகவே செயற்படுகின்றார்கள். குறிப்பாக அங்கு அனைத்துக் கட்சிகளும் கூட்டப்பட்டிருந்தபோது திரு. கருணாநிதி அவர்கள் புலிகளியக்கம் இழைத்த சகல தவறுகளையும் நினைவு கூர்ந்திருந்தது மட்டுமடல்லாது தமிழ் மக்களது இன்றைய இந்த அவல நிலைக்கு பிரபாகரன் மாற்று இயக்கங்ளை அழித்தொழித்ததே காரணம் என வெளிப்படையாகவே கூறியிருக்கின்றார். அங்குள்ள சில கட்சிகள் தமது இருப்பை தக்க வைத்துள்கொள்வதற்காக இப்பிரச்சினையை வேறு திசையில் திருப்ப முனைந்தாலும் நாங்கள் இவ்விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்கின்றோம். தமிழ் மக்களுக்கான இந்தியாவின் குரல் புதிதாக (அதாவது புலிகள் வன்னியில் முடக்கப்பட்ட போதுதான்) ஒலிக்கத்தொடங்கியது அல்ல. அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் என்றுமே உறுதியாக உள்ளனர்.

புலிகளுடன் பேசுவதாயின் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு வரவேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது. இது சாத்தியப்படுமா?

புலிகள் ஆயுதங்களை கீழே வைப்பதற்கு என்றும் தயாரானவர்கள் அல்லர். நேபாளத்தை எடுத்துக்கொள்வோமேயானால் மாவோயிஸ்டுக்கள் தமது ஆயுதங்களை ஐ.நா பாதுகாப்பில் வைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்குச் சென்று ஓர் முடிவுக்கு வந்திருக்கின்றார்கள். புலிகள் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டு விட்டார்களா?.. அக்கோரிக்கையை கைவிடாத பட்சத்தில் பேச்சுவார்த்தைக்குச் சென்று பேசமுடியாது, ஆகவே ஆயுதத்தை கைவிடவும் முடியாது. பிரபாகரன் தமிழீழ கோரிக்கையில் மிகவும் பற்றுதியாக இருக்கின்றார் என நான் நிச்சயமாக நம்புகின்றேன், ஆகவே அவர்கள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு வருவார்கள் என்பது சாத்தியமற்ற விடயமாகவே தென்படுகின்றது:

மாவோயிஸ்டுக்கள் ஐ.நா சபையின் பாதுகாப்பில் ஆயதங்கைளை வைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு சென்றதை உதாரணம் காட்டியிருந்தீர்கள். ஆவ்வாறன ஓர் வழிமுறைக்கு புலிகள் வருவார்களாக இருந்தால் அரசு தரப்பினர் அதை ஏற்றுக்கொள்வார்களா?

இவ்விடயத்தில் என்னால் எதுவும் கூறமுடியாது. XIII

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com