Wednesday, January 23, 2019

பெருந்தோட்ட மக்களுக்கான போராட்டங்களிலும் சதி இடம்பெறுகிறது - பெரியசாமி பிரதீபன்.

ஆயிரம் ரூபாய் சம்பள விடயம் தொடர்பாக இடம்பெறும் போராட்டங்களிலும் பல சதிகள் இடம்பெறுவதாக, நுவரெலியா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும், மஸ்கெலிய பிரதேச சபையின் பிரதித் தவிசாளருமான பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

ஹற்றனில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த பெரியசாமி பிரதீபன் இதனை கூறினார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பள உயர்வு விடயத்தில், அரச சார்பற்ற பொது அமைப்புகள் இன்று பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தன.

இந்த போராட்டங்கள் மலையக அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கவாதிகள் மீது தொழிலாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையை விரிசலடைய வைக்கும் ஒரு திட்டமிடப்பட்ட சதி என்று கருதும் அளவுக்கு சந்தேகம் எழுவதாக, மஸ்கெலிய பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பள விடயம் தொடர்பில் மலையக தொழிற்சங்கம் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து கடந்த காலத்தில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் பணிப்புறக்கணிப்புக்களில் பெருந்தோட்ட தொழிலாளர்களை ஈடுபடுதினார்கள்.

இதனால் தொழிலாளர்கள் சுமார் பத்தாயிரம் ரூபாய் வரை வருமானத்தை இழந்தனர். இந்த நட்டத்திற்கு பொறுப்புக் கூற முடியாத நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் இருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது அரச சார்பற்ற பொது அமைப்புகள் ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி பணிப் பகிஷ்கரிப்புக்கும், போராட்டங்களுக்கும் அழைப்பு விடுத்து அவர்களைப் போராட்டத்தில் ஈடுப்படுத்தியும் உள்ளதாக தெரிவித்த அவர், இதற்கான உரிய தீர்வு இப்போதே கிடைக்காவிட்டால், ஏற்பட்ட நட்டத்திற்கு யார் பொறுப்பு கூறுவார்கள் என கேள்வி எழுப்பினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com