Monday, January 21, 2019

குண்டுத் தாக்குதலுக்கு திட்டம் தீட்டிய 50 பேருடைய தகவல்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்

நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த குண்டுத் தாக்குதல் மேற்கொள்ள திட்டம் தீட்டிய 50 பேருடைய தகவல்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குழுவொன்றை சேர்ந்த குறித்த 50 பெரும் பௌத்த விகாரைகளுக்கு குண்டுத் தாக்குதல்களை நடாத்தி நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்த திட்டம் தீட்டி உள்ளார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அண்மையில் புத்தளம், வனாத்து வில்லு பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து இந்த திட்டம் தீட்டிய விடயம் அம்பலம் ஆகியுள்ளது. இந்த வன்முறைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த குழுவுடன் சம்மந்தப்பட்ட 7 பேர் இதுவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

பௌத்த விகாரைகள் மீது தாக்குதல் நடாத்துவதற்கு புதிதாக உறுப்பினர்களை சேர்த்துக் கொள்வதற்கு இந்த அடிப்படைவாதக் குழு நாடு முழுவதும் வகுப்புக்களை நடாத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.வனாத்து வில்லில் வெடிபொருட்களை மறைத்து வைத்ததும் இந்த குழுவில் உள்ள இரண்டு பேர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த அடிப்படைவாதக் குழுவைச் சேர்ந்த ஒருவர், பல வாரங்களாக தனது தென்னந்தோட்டத்தில் தங்கி, குண்டு உற்பத்தி செய்யும் உபகரணங்களுடன் காணப்பட்டதாக கைது செய்யப்பட்ட வனாத்து வில்லு தென்னந்தோட்ட உரிமையாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

வனாத்தவில்லு தென்னந்தோட்ட வெடிபொருட்களுடன் தொடர்புபட்ட இருவர், மாவனல்லை உட்பட பல பிரதேசங்களில் புத்தர் சிலையை உடைப்பதற்கு தூண்டுதல் வழங்கியவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் மேலும் இரண்டு பேர் தற்பொழுது புத்தளம் பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியுள்ளதாகவும், இவர்களைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com