Friday, August 31, 2018

இன்றைய நல்லாட்சி அரசின் நல்ல இலட்சனம் இதுதானா? -ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

இலங்கையில் சீரற்ற காலநிலைகளின் போது வெள்ளப் பெருக்கால் மிகப் பாதிக்கப்படும் ஒரு பிரதேசமாக அடையாளப்படுத்தப்படும் மாவட்டங்களில் ஒன்றுதான் இரத்தினபுரி. இந்த மாவட்டத்தில் ஏற்படக் கூடிய வெள்ளப் பெருக்கு கொழும்பின் களனி கங்கைக் கரையோரம் வரை பாதிப்பை ஏற்படுத்தும். இதன் மூலம் இரத்தினபுரியின் வெள்ள நிலைமை எவ்வாறிருக்கும் என்பதனை நாங்கள் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த மாவட்டத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினால், வசதி குறைந்த ஒரு தனி நபர் சாதாரணமாகப் பாதிக்கப்பட்டாலும் அவர் இழக்கும் சொத்துகளின் ஆகக் குறைந்த பெறுமதி அண்ணளவாக 20, 000 ரூபாவாக இருக்கும். அதனை விட நிச்சயமாகக் குறைவான சேதம் அவருக்கு ஏற்படாது.

கடந்த வருடம் இரத்தினபுரி பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளம் அந்தப் பிரதேசத்தில் பாரிய அழிவுகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது. இதனை நாம் மறந்து விட முடியாது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நஷ்டயீடுகளை வழங்கியது. தொடர்ந்தும் வழங்கி வருகிறது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அண்மையில் அரசாங்கத்தால் நஷ்டயீடு வழங்கப்பட்டுள்ளது. அவர் பெற்ற நஷ்டயீட்டுத் தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 80 ரூபாதான்.

கடந்த வருடம் இரத்தினபுரியில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்குக் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட எஸ். சந்திமா ரஸஞ்ஜலி என்ற பெண், வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட தனக்கு நஷ்டயீடாக
80 ரூபாவை அரசாங்கம் வழங்கியமை தொடர்பில் தனது வேதனையை வெளியிட்டுள்ளார்.

வெள்ள அனர்த்தத்தில் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தின் கணிப்பீடு வெறும் 80 ரூபா அல்ல என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டு அவர் இரத்தினபுரி பிரதேச செயலாளருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மூலம் பல பில்லியன்கள் பணம் மோசடி செய்யப்பட்டு மக்கள் பணம் வீணடிக்கப்பட்டமை உட்பட பல மோசடிகளில் சிக்கியுள்ள இந்த அரசாங்கம், பாரிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு வழங்கிய நஷ்டயீடு வெறும் 80 ரூபாதான்.

பார்வையிழந்த ஓர் அரச அதிகாரியாவது பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டை நேரில் சென்று அந்தப் பெண்ணின் சேதமடைந்த உடைமைகளைத் தொட்டு உணர்ந்து அவற்றின் சேதத்தை அறிக்கையிட்டாலும் நிச்சயம் 80 ரூபாவாக இருக்க முடியாது

அலரிமாளிகையை அரசியல்வாதிகளின் திருமண மண்டபமாக மாற்றியுள்ள இந்த அரசாங்கம், அப்பாவி மக்களின் குடிசை வாழ்க்கையை அவல வாழக்கையாக மாற்ற முய்சிப்பது வேதனைக்குரியது.



(நன்றி படம் நெத் எப்.எம். சிங்களம்)


Read more...

5 மாத கர்பிணியை கொன்றது புலிகளின் முன்னால் காவல்துறை உறுப்பினன்.

நேற்று முன்தினம் கிளிநொச்சி பன்னங்கட்டி பகுதியில் இளம் தாய் ஒருத்தி கொலை செய்யப்பட்டிருந்தாள். கணவனால் கைவிடப்பட்டிருந்த அத்தாய் தனது ஊனமுற்ற குழந்தை ஒன்றை வழர்ப்பதற்காக தொழிற்சாலை ஒன்றில் காவல்காரியாக தொழில்புரிந்து வந்த நிலையிலேயே இக்கொலை நடைபெற்றுள்ளது.

கொலைஞன் இனம்காணப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் சகல ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டிருந்தாலும் அவன் புலிகளின் முன்னாள் காவல்துறை உறுப்பினன் என்பதை இருட்டிப்பு செய்துவருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த குறித்த கொலையின் முழுமையான மர்மமும் இன்று துலங்கியது. நித்தியகலாவின் வயிற்றில் வளர்ந்த குழந்தை தன்னுடையதுதான் என்பதையும், அந்த குழந்தை விவகாரத்தால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என்பதையும் கைதுசெய்யப்பட்ட முன்னாள் புலி காவல்துறையினன் ஏற்றுக்கொண்டுள்ளான்.

கொலையுண்ட பெண்ணின் தொலைபேசித் தரவுகளை பரிசீலனை செய்த பொழுது, குறித்த நிறுவனத்தில் பாதுகாப்பு மேற்பார்வையாளராக பணிபுரிந்த முன்னாள் புலி காவல்துறையினனின்; தொலைபேசியில் இருந்தே இறுதியாக அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதுடன், கொல்லப்பட்ட பெண்ணும் அவரும் நீண்டகாலமாக தொடர்பில் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் நடைபெற்ற அன்று இரு தொலைபேசிகளும் நீண்ட நேரமாக ஒரே கோபுர அலையிலையே நகர்ந்துள்ளமை கண்டறியப்பட்டது. இதனடிப்படையில், இன்று மதியம் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரான கிருஸ்ணகீதன் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான்.

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் புலிகளின் காவல்துறையினனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, கொலையை தானே செய்ததாக அவன் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவன் கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையாவான். அவனது ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது-

கொல்லப்பட்ட பெண்ணுடன் எனக்கு தொடர்பு இருந்தது. அவரது வயிற்றில் வளர்ந்த குழந்தை என்னுடையதுதான். அதனால் அவள் தன்னை கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தினாள். எனக்கு குடும்பம் இருந்தது. அதனால் நித்தியகலாவை கூட்டிச்செல்ல முடியவில்லை. இருவரும் நஞ்சு குடித்து இறந்துவிடுவோம் என்று முடிவெடுத்தோம். 28.08.2017 அன்று அவள் கடமை முடிந்து தொழிற்சாலையை விட்டு வெளியில் வந்ததும், நான் எனது வீட்டில் இருந்து நடந்து வந்து அவளது மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்டேன்.

பின்னர் அம்பாள்குள வீதியூடாக கிளிநொச்சி வந்து உள் பாதைகளால் கரடிப்போக்கு வந்து, பின்னர் மீண்டும் உள் பாதைகளால் சம்பவ இடத்திற்கு சென்றோம். வரும்போதே நித்தியகலாவை மருந்துப் போத்தல் ஒன்றை வாங்கிவந்தாள். அங்கு சென்றதும் குடிப்போம் என்றதும் எமக்குள் சிறு பிரச்சனை வந்துவிட்டது. நித்தியகலா பாதுகாப்பு உத்தியோகத்தரின் உடையில் வந்தமையால் அவரது கழுத்து பட்டியில் தொழில் அடையாள அட்டை தொங்கிக் கொண்டிருந்தது. கழுத்தில் இருந்த பட்டியைக் கொண்டே அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன்.

இறந்தவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் என அடையாளம் காணப்படக் கூடாது என்பதற்காக நித்தியகலாவின் பாவாடை, மேற்சட்டை என்பவற்றை கழற்றி எடுத்துவிட்டு, சடலத்தை அருகில் இருந்த வயல்வெளிக்குள்ளால் இழுத்து சென்று, வாய்க்காலுக்குள் போட்டேன்.

மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வந்து கனகபுரம் பகுதியில் அவரின் பாவாடையை எறிந்துவிட்டு, கைப்பை மற்றும் மேற்சட்டை என்பவற்றை அம்பாள்குளப்பகுதியில் எறிந்தேன். மோட்டார் சைக்கிளில் நள்ளிரவு நேரம் வீட்டுக்கு வந்தேன். பின்பக்காக இருக்கும் அறையில் மோட்டார் சைக்கிள் கெல்மட்டை ஒழித்து வைத்து விட்டு மருந்துப் போத்தலை எடுத்து குடிக்க நினைத்தேன். பிறகு பிள்ளைகள் நினைவு வந்ததால் அதனையும் வீடுக்குள் ஒளித்துவைத்து விட்டேன். சம்பவ இடத்தில் இடுப்புபட்டி மற்றும் சில தடயங்களை மட்டும் விட்டுவிட்டு, மற்றவற்றை நானே கொண்டு வந்தேன். இக் கொலையை நான் மட்டுமே செய்தேன். என்னால் சம்பவ இடம், மற்றும் பொருட்கள் வீசப்பட்ட இடங்கள் என எல்லாவற்றையும் அடையாளம் காட்ட முடியும்' என வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தான்.

வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், பொருட்கள் வீசப்பட்ட இடத்திற்கு அவரை பொலிசார் அழைத்து சென்றனர். கனகபுரத்தில் வீசப்பட்ட பாவாடை மீட்கப்பட்டது. பின்னர், அவரது வீட்டுக் சென்று மோட்டார் சைக்கில் அவர் பாவித்த தொலைபேசி, ஹெல்மட், மற்றும் மருந்துப் போத்தல் என்பவற்றை மீட்டனர்.

அம்பாள் ளம் பகுதியில் வீசப்பட்ட மேற்சட்டையை சம்பவம் நடைபெற்ற மறுநாளே பொலிசார் மீட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் சந்தேகநபரின் மனைவியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

தற்போது சந்தேகநபர் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். திங்கள்கிழமை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளான்.



Read more...

யானை அடிக்க முன்னர் தானே அடித்துக்கொண்டு ஓடி ஒழிந்தார் விக்கி.

பளை பிரதேசத்தில் யூலிப்பவர் மற்றும் வீற்றாப்பவர் எனும் நிறுவனங்களுக்கு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் முதலமைச்சர் மற்றும் அவரது நெருங்கிய சாகவென அறியப்படுகின்ற ஐங்கரநேசன் மீது மோசடிக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன், குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் நீதியரசர் விக்கினேசுவரன் ஓடியொழித்துள்ளமை நேற்று வடமாகாண சபை கூடியபோது நிருபணமாகியுள்ளது.

குறித்த இரு காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களும் 2 வருடங்கள் மின்சார சபைக்கு மின்சாரத்தை வழங்கியமைக்காக2933.8 மில்லியன் ரூபாய் (293 கோடி ரூபா) நிதியைப் பெற்றுள்ளது. 2 வருடத்தில் 293 கோடி ரூபாய் மிகை லாபம் பெறும் நிறுவனத்திடமிருந்து 2 கோடி ரூபாய் மட்டுமே வருடம் ஒன்றுக்கு சமூகக்கடப்பாட்டு நிதியாக பெறப்பட்டுள்ளது.

இந்நடைமுறையானது முற்றிலும் தவறானது என்றும் குறித்த நிறுவனங்களிடமிருந்து மொத்த லாபத்தில் குறித்ததோர் விகிதாசாரத்தை பெற்றுக்கொள்வதற்கு ஏற்றவகையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படல்வேண்டும் என்ற முன்மொழிவுகள் வைக்கப்பட்டபோது அவற்றை முதலமைச்சர் எழுந்தமானமாக நிராகரித்து சட்டத்துக்கு புறப்பான முறையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் குறித்த காற்றாலை மின்உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான பகிரங்க கேள்வி அறிவித்தல் விடப்பபட்டு அதிக வருமானத்தை மாகாண சபைக்கு வழங்கக்கூடியதோர் நிறுவனத்தை தேர்ந்தெடுக்காமல் குறித்த இரு நிறுவனங்களிடமிருந்தும் பெருந்தொகைப் பணத்தை முதலமைச்சர் மற்றும் ஐங்கரநேசன் உட்பட்டோர் பெற்றுக்கொண்டுள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

இக்குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் வகையில் கணக்காய்வு அறிக்கையில் :

* குறித்த நிறுவனங்களுடன் மாகாண சபை செய்துள்ள ஒப்பந்தத்தில் பிரதம செயலாளர் கையொப்பமிட்டிருக்கவில்லை.

* காற்றாலை அமைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள காணி நோக்கம் குறிப்பிடப்பட்டு காணி ஆணையாளரிடமிருந்து அனுமதி பெறப்படவில்லை.

* ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முன்னர் மாகாண சபையின் அனுமதி பெறப்படவில்லை.

* நிறுவனங்களுக்கான அனுமதிக்கான சட்டரீதியான கேள்வி மனுகோரப்படவில்லை.

போன்ற பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளது.

இக்குறைபாடுகள் தொடர்பில் நேற்று கூடிய சபையில் விவாதிப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக முற்கூட்டியே அறிவிக்கப்பட்டபோது , இவ்விடயத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டாம் என சபையின் தவிசாளரை எழுத்துமூலமாக முதலமைச்சர் கோரியதன் ஊடாக விவாதத்திற்கு எடுத்துக்கொண்டால் மேற்படி குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் நிரூபணமாகும் என்பதை அவர் அறிந்து வைத்துக்கொண்டே இந்த தவறை புரிந்துள்ளார் என்பது தெளிவாகின்றது.

இவ்வாறு சட்டவிரோதமாக செய்யப்பட்டுள்ள குறித்த ஒப்பந்தம் முதலமைச்சரின் இல்லத்தில் வைத்தே இடம்பெற்றமையும் தற்போது அம்பலமாகியுள்ளது. முன்னாள் நீதியரசர் நியாயமாக நடந்துகொள்வார் என எதிர்பார்த்த தமிழ் மக்களில் பலர் விக்னேஸ்வரன் மோசடிப்பேர்வழி என்பதை நம்ப மறுத்தே வந்தனர். ஆனால் நேற்றைய விவாதத்தில் விக்னேஸ்வரன் கலந்து கொள்ளாமை புருவத்தை உயர்த்தப்பண்ணியுள்ளது.

நேற்று குறித்த விவாதம் ஆரம்பமாதற்கு முன்னர் சபையின் தவிசாளர் விக்னேஸ்வரனால் அனுப்பப்பட்டிருந்த கடிதம் ஒன்றை வாசித்தார். அக்கடிதத்தில்:
நான் வேறு நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளதால் இன்றைய சபை அமர்வுகளில் பங்கெடுக்க முடியாது என தெரியப்படுத்தியிருந்தார்.



(முதலமைச்சர் விடயத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டாம் என எழுதிய கடிதத்தின் பிரதி)

இவ்விடயத்தில் விக்னேஸ்வரன் தவறிழைத்திருக்காவிடின் அவரால் சபையோர் முன்தோன்றி தன்னை நிரபராதி என நிரூபித்திருக்க முடியும். எதுஎவ்வாறாயினும் முதலமைச்சர் விடயம் தொடர்பில் பதிலளிக்கும் பொருட்டு எதிர்வரும் 11ம் திகதி கூடவுள்ள அமர்வில் தொடர்ந்தும் இவ்விடயம் தொடர்பில் பேசப்படும் என்றும் அப்போது முதலமைச்சரிடமிருந்து சில கேள்விகளுக்கு பதிலெதிர்பார்க்கப்படுமென்றும் அவை முதல்வர் அறிவித்துள்ளார். அதேநேரம் அடுத்த அமர்விலும் விக்னேஸ்வரன் கலந்து கொள்ளாமல் தவிர்பார் என்றும் அடுத்த அமர்வே வடமாகாண சபைக்கான இறுதி அமர்வாக அமையும் என்றும் நம்பமுடிகின்றது.

விக்னேஸ்வரனின் முகத்திரை கிழித்து கே.சயந்தன் சபையில் தெரிவித்ததாவது:

மாகாணசபை உருவாக்கப்பட்ட சில மாதங்களில் பளையில் ஒரு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் உருவாக்க முயற்சிக்கப்படுகிறது. அதற்காக தென்னிலங்கையில் இருந்து வந்தவர்களுக்கு எங்களுடைய அதிகாரிகள் கண்ணை மூடிக்கொண்டு கையொப்பமிடுகிறார்கள் என எனக்கு தகவல் கிடைத்தது.

அதனை நான் முதலமைச்சருடைய கவனத்திற்கு கொண்டு சென்றபோது, அது தொடர்பாக நிபுணர்களின் கருத்துக்களை பெறுமாறு முதலமைச்சர் எனக்கு கூறினார். அதற்கமைய நான் சில நிபுணர்களை அணுகி கருத்துக்களை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மூவர்ணப்படங்களுடன் அப்போதைய அமைச்சர் ஐங்கரநேசனின் செய்தி ஊடகங்களில் வந்திருந்தது.

„வடமாகாணத்திற்கு வரும் பெருமளவான முதலீட்டை அமைச்சர் ஐங்கரநேசன் பார்வையிட்டார்' என அந்தச் செய்தி அமைந்திருந்தது.

இங்கே நான் கேட்பது மின்சார சபையின் கீழ் உள்ள பல கம்பனிகள் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க தயாராக இருந்தார்கள். அதுவும் இந்த யூலிப்பவர், பீற்றாப்பவர் ஆகிய நிறுவனங்கள் மின்சாரத்திற்கு அறவீடு செய்யும் நிதியிலும் பார்க்க மிக குறைவான நிதியில் செய்ய தயாராக இருந்தார்கள். அப்படி இருக்கையில் எந்த கேள்வி கோரலும் இல்லாமல் தனியே இந்த நிறுவனங்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டது எப்படி?

மிகப்பெரியளவில் வருமானம் பெறும் நிறுவனத்திடமிருந்து எமது மக்களுக்குக்கிடைத்த நன்மைகள் என்ன? என கேள்விக்கணைகளை தொடுத்தார்.
இக்கேள்விகளுக்கு எதிர்வரும் 11ம் திகதி விக்னேஸ்வரன் பதிலளிப்பாரா?


ஐங்கரநேசனின் முகத்திரை கிழித்து அஸ்மின் சபையில் தெரிவித்ததாவது:

வெளிப்படை தன்மை பற்றி பேசும்போது கண்காய்வு அறிக்கையை இந்த சபையில் எடுக்கவேண்டாம் என முதலமைச்சர் எமக்கும் சபைக்கும் கடிதம் எழுதியதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம்.

குறித்த நிறுவனத்தினர் '2 பெட்டிகள் நிறைய காசு கொண்டுவந்தார்கள் அப்பன்' நான் அவற்றை பெற்றுக்கொள்ளவில்ல என எனக்கும் சக உறுப்பினர் எஸ்.சுகிர்தனுக்கும் ஐங்கரசேன் அப்போது கூறியிருந்தார்.

அதேபோல் 40 மில்லியன் ரூபாய் செலுத்தி தனது மகளை ஐங்கரநேசன் எவ்வாறு வெளிநாட்டில் படிக்கவைத்தார்? என்பதற்கான ஆதாரங்கள் யாவும் எங்களிடம் உள்ளன என்றார் அஸ்மின் .

இதனை மறுதலித்த மாகாணசபை உறுப்பினர் ஐங்கரநேசன், நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல. என்னுடைய மகளை எங்கே படிக்க வைக்கவேண்டும் என்பதை நான் தீர்மானிப்பேன். அதை குறித்து கவலைப்படவேண்டாம் என்றார்.

நான் எப்படி பணம் செலுத்தினேன் என்பதற்கான ஆதாரம் இருக்கிறது என்றால் அதனை இப்போது வெளிப்படுத்துங்கள். மேலும் 2 பெட்டி நிறைய காசு கொண்டுவந்தார்கள் என நான் எப்போதும் -எங்கேயும் கூறவில்லை – என்றார்.

தொடர்ந்தும் உறுப்பினர் அஸ்மின் உரையாற்றுகையில், தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் வேட்பாளர்கள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிடவேண்டும். பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் தங்கள் சொத்து விபரங்கள் குறித்து வெளிப்படுத்தவேண்டும்.

இந்த இடத்தில் நான் கேட்கிறேன், முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் தங்கள் சொத்து விவரங்களை வெளியிடவேண்டும் என முழங்கினார்.

யானை அடிக்க முன்னர் தானே அடித்துக்கொண்டு ஓடி ஒழிந்துள்ள விக்கி வருவாரா 11ம் திகதி தருவாரா பதில்?

பீமன்.


Read more...

நான்கு தேரர்கட்கு நீதிமன்று பிடியாணை! ஞானசார தேரரின் மனு நிராகரிப்பு

கடந்த ஆண்டு இடம்பெற்ற அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் போராட்டத்தின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக பொலிஸாரால் இனம்காணப்பட்டுள்ளதாக கூறப்படும் நான்கு முன்னணி தேரர்கட்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.

பெங்கமுவெ நாளக தேரர், மாகல்கந்தே சுதத்த தேரர், இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மற்றும் மெடில்லே பன்யலோக தேரர் ஆகியோருக்கெதிராகவே மேற்படி பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர் தனது தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்வதற்கு அனுமதி கோரிய மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகயில் குற்றவாளியென காணப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, நீதிமன்றத்தை அவமதித்ததாக கடுமையான உழைப்புடன் 06 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பினை எதிர்த்து ஞானசாரதேரரால் சமர்பிக்கப்பட்ட மனு இன்று 31ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்ததுடன் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஞானசாரதேரரை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

Thursday, August 30, 2018

ஏமாற்றாதே! ஏமாறாதே! - விஜய பாஸ்கரன்

1977 இல் இலங்கையில் தமிழர்கள் தொகை 35 இலட்சம்.இதில் 20 இலட்சம் வடகிழக்கு தவிர்ந்த தென் பகுதிகளில் வாழ்ந்தார்கள்.மீதி 15 இலட்சம் இதில் பத்து இலட்சம் தமிழர்கள் குடாநாட்டில் வாழ்ந்தார்கள். மீதமுள்ள ஐந்து லட்சம் மக்கள் வன்னி, மன்னார் மற்றும் கிழக்குப்பகுதியில் வாழ்ந்தார்கள். அந்த ஐந்து லட்சம் மக்களை வைத்துக்கொண்டு எப்படி வடகிழக்கு நிலப்பரப்பை பாதுகாக்க முடியும்?

1948 இல் பிரசாவுரிமை சட்டத்தை எதிர்த்து அதற்கு காங்கிரஸ் ஆதரவளித்த காரணத்துக்காக செல்வநாயகம்,அக் கட்சியில் இருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பித்தார்.தமிழ் மக்கள் தொடர்பாக எந்த தெளிவான சிந்தனையும் இருக்கவில்லை.இன்றுவரைஅதே தொடர்கதை .

எந்த மலையக மக்களை காரணமாக காட்டி செல்வநாயகம் வெளியேறினாரோ அதன் பிற்பாடு அந்த மலையக மக்களைப்பற்றி செல்வநாயகமோ தமிழரசுக்கட்சியோ சிந்திக்கவில்லை.அவர் தனிக்கட்சி அமைக்க ஒரு காரணம் தேவைப்பட்டது. அவ்வளவுதான்.

தமிழ்த் தேசியம் சிங்கள இனவாதம் என தமிழ்மக்களுக்கு பூச்சாண்டி காட்டிய தமிழரசுக்கட்சி இந்த தமிழ்தேசியத்தைக் கட்டிக்காக்க என்ன செய்தது? தமிழுக்காக என்ன செய்தார்கள்?தமிழ் தேசியத்தை வலுப்படுத்த என்ன செய்தார்கள்? என் திட்டங்கள் இருந்தன? யாழ்ப்பாணத்தில் மேடைபோட்டு இனவாதம் பேசி கரகோசம் பெற்றதைத் தவிர என்ன செய்தார்கள்.

பெரும்பான்மைத் தமிழர்கள் தென்னிலங்கையிலேயே வாழ்ந்தனர். அந்த தமிழர்கள் தொடர்பாக என்றாவது தமுழரசுக்கட்சி சிந்திக்கவில்லை.வடக்கு கிழக்குக்கு வெளியே புத்தளம் மாவட்டம் இருந்தது. இங்கே தமிழர்களே புத்தளம், சிலாபம் பகுதிகளில் வாழ்ந்தார்கள்.இவர்களைப் பற்றி என்றாவது சிந்தித்தார்களா?

அம்பாறை கந்தளாய் திட்டங்களால் தமிழர் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள். அன்றைய காலங்களில் காணி அதிகாரம் அரச அதிபர், பிரிவுக் காரியாதிகாரி, மாவட்டக் காணி அதிகாரிகளிடமே இருந்தது. இந்தக் குடியேற்றங்களில் தமிழர்களுக்கும் பங்குகள் கிடைத்தன. அன்றைய காலங்களில் கிழக்குத் தமிழர்கள் போதியளவு நிலவளங்களோடு வாழ்ந்தார்கள். இதனால் இந்தக் குடியேற்றங்களில் அக்கறை கொள்ளவில்லை. இங்கே குடியேற்ற தகுதியான மக்களை தமிழ்அரசியல்வாதிகள் தேடவில்லை.இன்னமும் அம்பாறை திருகோணமலையில் நகர சுத்தி தொழிலாளர்களுக்கு காணிகள் இல்லை.இன்றளவும் இந்த மக்கள் பற்றிய கரிசனை இல்லை.தவறுகள் யாருடையது?

அன்றைய கல்லோயா கந்தளாய் தொடங்கி இன்றுவரை சிங்கள அரசியல்வாதிகள் நிலமற்ற ஏழைகளுக்கே காணிகளை வழங்குகிறார்கள். அன்று வடக்கு யாழ்ப்பாணத்தில் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களில் பலர் காணிகள் இல்லை.வறுமையானவர்களாகவே வாழ்ந்தார்கள். இவர்களை இந்தப் பகுதிகளில் குடியேற்றி இருந்தால் இன்று பூர்வீக நிலவளம் பாதுகாக்கப்பட்டிருக்கும்.இன்றைய யாழ்பாண மக்கள் நெருக்கடி குறைந்திருக்கும்.

1977 லேயே ஐந்து லட்சம் வன்னி மற்றும் கிழக்கில் வாழந்தார்கள் என்றால் 1948-50 களில் தமிழர் தொகை எவ்வளவாக இருந்திருக்கும்.

தமிழத் தேசியம்,சிங்கள பேரினவாதம் என்று சொல்லியே தமிழ் அரசியல்வாதிகள் காலத்தைக் கடத்துகிறார்கள்.இதுவரைக்கும் தமிழ்த் தேசியத்தைக் கட்டிக்காக்க என்ன செய்தார்கள்.பழியை இலகுவாக அரசாங்கத்தின் மேல் போட்டுவிட்டு தப்பி ஓடுகிறார்கள்.

இன்று இஸ்லாமிய வெறுப்பும் வளர்க்கப்பட்டுள்ளது. அவர்கள் தம்மை இஸ்லாமியர்களாகவே அடையாளப்படுத்துகிறார்கள் என்பது உண்மை. அவர்கள் பெரும்பாலும் வடக்கு கிழக்கில் வாழந்தபோதும் தென்னிலங்கையில் வாழ்ந்த இஸ்லாமிய மக்களைக் கைவிடவில்லை. சொந்த மொழி தமிழைக் கைவிடவில்லை. எத்தனையோ இடர்களை கண்டபோதும் இஸ்லாமிய ஒருமைப்பாட்டை கைவிடவில்லை. ஆனால் நமது தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள். தெற்கே இஸ்லாமிய மக்களால், மலையக மக்களால் தமிழ் காக்கப்பட்டது. மேற்கே புத்தளத்தில் தமிழ் அழிந்தது. எங்கே போனார்கள்?

1972 வரை யாழ் குடாநாட்டுக்கு வெளியே தமிழர்களுக்கு நல்ல பாடசாலைகள் இல்லை. நல்ல ஆசிரியர்கள் இல்லை. நல்ல கல்விபெற யாழ்ப்பாணமே வரவேண்டி இருந்தது. இதற்காக தமிழ் அரசியல்தலைவர்கள் செய்தது என்ன? நல்ல வைத்தியர், வைத்தியசாலை கூட இல்லை. இதற்கெல்லாம் இனவாதமா காரணம்? அரசாங்கமா பொறுப்பு?

வடக்கே குடாநாட்டில் சாதிவெறிகொழுந்து விட்டு எரிந்தது? இதை மாற்ற என்னநடவடிக்கை எடுத்தார்கள்? அதைவிட பிரதேசவாதம் வளர்ந்தது. இஸ்லாமியதமிழர்கள் நம்பகத் தன்மையை இழந்தார்கள். இதைப்பற்றி என்றாவது சிந்திக்கவில்லை. தமிழத் தேசியம் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது? அன்றைய செல்வநாயகம் தொடங்கி இன்றைய மாவை, விக்கி, சிறீதரன்வரை ஒரே நாடகங்களையே அரங்கேற்றுகிறார்கள். நிறுத்துங்கள்! ஏமாற்றியது போதும்.

அன்றில் இருந்து இன்றுவரை இதுவே தமிழர்களின் அரசியல். கொள்கை இல்லை. செயற் திட்டங்கள் இல்லை. இனவாதம் என்ற நெம்புகோலை வைத்து தமிழர்களின் அரசியலை பந்தாக உருட்டி விளையாடுகிறார்கள். இந்த இனவாதம் தென்னிலங்கை இனவாதிகளுக்கு அரசியலுக்கு தீனி போடுகிறது.

வடகிழக்கில் நிலங்கள் பறிபோவதற்கு அரசாங்கம் காரணமல்ல. தமிழ் அரசாங்க அதிகாரிகளும் அரசியல்வாதிகளுமே காரணம். எந்தவித திட்டங்கள், செயற்திறன்கள் உங்களிடம் இல்லை. வெறுமனே அரசாங்கம், சிங்கள இனத்தின் மேல் பழிபோடுவது அவசியமற்றது.

இனவாதங்களை தூண்டி மக்களைஏமாற்ற வேண்டாம். இவர்களின் இனவெறிகளை நம்பி மக்களும் ஏமாறவேண்டாம்.

Read more...

Wednesday, August 29, 2018

தென்கிழக்குப் பல்கலைக்கலைக்கழகத்தில் மாணவிக்குப் பாலியல் தொல்லை!

மூன்று குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சிரேஷ்ட விரிவுரையாளர் பதவி இழந்தார்! (ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்தமை உட்பட மூன்று குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்ட சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் குறித்த விரிவுரையாளர் கடந்த வருடம் பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே அவர் அதே திகதியிலிருந்து பதவி நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற மாணவி ஒருவரை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியமை, அவருக்கு உள ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தியமை மற்றும் இந்த விவகாரம் தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொள்ளக் கூடாது என்றும், அவ்வாறு முறையிட்டால் பரீட்சையில் சித்தியடையாது செய்வேன் என்று அச்சுறுத்தியமை என்பன தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதனையடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாத காலப் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் காரணமாக பல்வேறு வாதப்பிரதிவாதங்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருந்ததுடன் குறித்த சிரேஷ்ட விரிவுரையாளரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்குமாறும் கோரிக்கைகள் வலுப்பெற்றிருந்தன.

இவ்வாறானதொரு நிலையிலே அவர் சிரேஷ்ட விரிவுரையாளர் பதவியிலிருந்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் இடைநிறுத்தப்பட்டதுடன், அவருக்கான மாதாந்தக் கொடுப்பனவாக, அவர் பெற்று வந்த மாதச் சம்பளத்தின் அரைப் பகுதி மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பல்கலைக்கழக பேரவையினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் கொழும்பு, பல்கலைக்கழக சட்ட பீட விரிவுரையாளர்கள் அடங்கிய குழுவினரால் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனையடுத்து அவர் மீதான மூன்று குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதனையடுத்து குறித்த விரிவுரையாளருக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டுமென விசாரணைக் குழு சிபார்சு செய்து தென்கிழக்குப்ப ல்கலைக்கழக பேரவைக்கு தமது அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது.

இது தொடர்பில் கடந்த மாதம் கூடி ஆராய்ந்த தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவை அவரை பணியிலிருந்து நீக்குவதென தீர்மானித்தது. இதன்படி அவர் பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்ட காலப் பகுதியிலிருந்து பதவி நீக்கஞ் செய்வதாக பல்கலைக்கழகப் பேரவை தீர்மானித்தது.

அத்துடன், அவர் பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்ட காலத்திலிருந்து அவருக்கு மாதாந்தம் வழங்கப்பட்ட அரை மாதச் சம்பளத்தையும் மீளப் பெறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அந்தப் பணத்தை அவரது பணிக்கொடை கொடுப்பனவிலிருந்து மீளப் பெறுவதாகவும் பல்கலைக்கழகப் பேரவை தீர்மானித்துள்ளாகவும் தெரிய வருகிறது.

இது தொடர்பான கடிதம் பதவி நீக்கஞ் செய்யப்பட்ட குறித்த சிரேஷ்ட விரிவுரையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

இதேவேளை, தென்கிழக்குப் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் சில மாதங்களுக்கு முன்னர் உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ நாடாளுமன்றில் தெரிவித்த சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்களுக்கு, அங்குள்ள மாணவிகள் பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சில பாடங்களில் தேர்ச்சி அடைய முடியாது என்று அவர் தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் இந்த உரை தென்கிழக்கு பல்கலைக்கழக சமூகத்தினரிடையே பாரிய சர்ச்சையைத் தோற்றுவித்திருந்ததோடு கண்டனங்களுக்கும் உள்ளாகியிருந்தது.

குறித்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு விரிவுரையாளர் மீதான குற்றச்சாட்டை வைத்துக் கொண்டு, அந்தப் பல்கலைக்கழகத்தை இழிவுபடுத்தும் வகையிலும், அங்குள்ள ஒட்டுமொத்த மாணவிகளை அவமதிக்கும் வகையிலும் அமைச்சர் கருத்து வெளியிட்டமையைப் பலரும் வெளிப்படையாக கண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே குறித்த விரிவுரையாளர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

'மெட்ரோ நியூஸ்'

Read more...

எல்லைநிர்ணய மீளாய்வுக்குழுவின் பணி. வை எல் எஸ் ஹமீட்

எல்லைநிர்ணய மீளாய்வுக்குழுவை பிரதமர் தலைமையில் சபாநாயகர் நியமித்துவிட்டார். இவர்கள் மாகாணசபைச் சட்டத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்ய, தேர்தல்முறையை மாற்றியமைக்க, பழைய தேர்தல்முறைக்குச்செல்ல திருத்தங்களை முன்வைப்பார்கள்; என்றெல்லாம் ஊடகங்கள் நிறைய எழுதுகின்றன. அல்லது பலரும் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இவை எதுவும் இந்தக்குழுவின் பணியல்ல.

இந்தக்குழு மாகாணசபை தேர்தல்கள் (திருத்த) சட்டம் ( Act No 17 of 2017) பிரிவு 12 இன் படியே நியமிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்படி சட்டத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிக்கு மேலதிகமாக எதையும் செய்யமுடியாது. அவ்வாறு செய்தால் அது அந்தக்குழுவின் பணியாக கொள்ளப்படவும் முடியாது.

குழுவின் பணி

பிரிவு 13 இல் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் இக்குழு, தொகுதிகளின், பெயர், இலக்கம், மற்றும் எல்லைகளில் மாற்றங்கள் செய்யலாம். அதாவது எல்லைகளை மாற்றியமைக்கலாம். பல் அங்கத்தவர் தொகுதிகளை அல்லது புதிய தொகுதிகளை உருவாக்கலாம். இதற்குமேல் எதுவும் செய்யமுடியாது.

பிரிவு 14 இன்படி, இதனை இரண்டுமாதங்களுக்குள் பூர்த்திசெய்து ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க வேண்டும். அவருக்கு இது தொடர்பாக ஒரேயொரு பணிதான் இருக்கிறது.

பிரிவு 15 அதனைக் கூறுகிறது. அதாவது, அறிக்கை கிடைத்ததும் புதிய அவ்வெல்லை நிர்ணயத்தை (வர்த்தமானியில்) பிரகடனப்படுத்த வேண்டும். அவ்வளவுதான். மிகுதி தேர்தல் ஆணைக்குழு விற்குரியது.

இந்த அறிக்கையை ஜனாதிபதி அங்கரிக்கவேண்டிய அவசியமுமில்லை. நிராகரிக்க அதிகாரமுமில்லை. திருத்தமும் செய்யமுடியாது. வேறு சிபாரிசுகள் வழங்கப்படவும் முடியாது. வழங்கப்பட்டாலும் வர்த்தமானியில் பிரசுரிப்பதை நிறுத்தி வேறு எதுவும் செய்யமுடியாது. பாராளுமன்றம் அங்கீகரிக்கவும் தேவையில்லை.

எனவே, ஊடகங்களில் எழுதப்படுவதை வைத்து யாரும் குழம்பவேண்டாம்.

சில தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் வேறு சிலரும், பாராளுமன்றம் முழுமையாக நிராகரித்த ஒன்றை எவ்வாறு ஒரு குழு திருத்தி அமுல்படுத்துவது. பாராளுமன்றத்தைவிட குழு உயர்ந்ததா? என்ற கேள்வியை எழுப்புவதாக சில ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அது நியாயமான கேள்வி. ஆனாலும் சட்டம் அப்படித்தான் சொல்கிறது.

பாராளுமன்றம் நிராகரித்தால்தான் குழுவுக்கே வேலை ஆரம்பமாகிறது. எனவே, இந்தக்கேள்வி சட்டமாக்கமுன் எழுப்பப்பட்டிருக்க வேண்டும். இலங்கையில் ஒரு சட்டத்தை மீளாய்வு செய்யும் அதிகாரம் நீதிமன்றுக்கு இல்லை. இந்தியாவில் இருக்கின்றது.

எனவே, சுருக்கமாக நாட்கள் கரைய ஆரம்பித்து விட்டன. மாதம் இரண்டுதான் இருக்கிறது. ஒரேயொரு தீர்வு, திருத்தம் சட்டம்தான். திருத்தச்சட்டம் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். வர்த்தமானியில் பிரசுரிக்க வேண்டும். ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெறச் செய்யவேண்டும். நீதிமன்றத்திற்கு விரும்பியவர்கள்செல்ல இருவாரகால அவகாசம் கொடுக்கவேண்டும். நீதிமன்றம் இது தொடர்பாக ஆராய்ந்து தனது முடிவைச்சொல்ல காலஅவகாசம் வேண்டும்.

இருப்பதுவோ, இரு மாதங்கள். திருத்தச் சட்டத்தை சாட்டாகவைத்து அறிக்கையைத் தாமதிக்க முடியாது.

எனவே, அவசரமாக திருத்தச் சட்டத்தைக் கொண்டுவாருங்கள்.

Read more...

Tuesday, August 28, 2018

புதியதோர் உலகம் செய்வோம்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

உங்களின் முன்னால் இக்கட்டுரையை ஒரு விண்ணப்பமாக வைக்கிறேன். அதென்ன விண்ணப்பம் என்கிறீர்களா? அதுபற்றி கொஞ்சம் விரிவாய்ச் சொல்லவேண்டியிருக்கிறது. என் கட்டுரைகளைப் படியுங்கள் என்று,
என்றும் எவரையும் நான் வலியுறுத்தியதில்லை. ஆனால், இன்று இக்கட்டுரையைக் கட்டாயமாகப் படியுங்கள் என, உங்களிடம் வேண்டி நிற்கிறேன். முக்கியமாக எம் இனத்தின் நாளைய தலைவிதியை நிர்ணயிக்கப்போகும், இளைய தலைமுறையினர் இக் கட்டுரையை கட்டாயம் படிக்கவேண்டும் என்பது என் விருப்பம்.

அதைவிட முக்கியம் உயர்கல்வி முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள், இக் கட்டுரையைப் படிப்பது. அதற்கான ஒரு காரணம் உண்டு. அது என்ன என்பதை பின்னால் சொல்கிறேன். அதற்கு முன்….

✍✍✍

நடந்து முடிந்த முப்பதாண்டு அவலங்களால், எம் இளையோரின் வாழ்வில் பல தேக்கங்கள். கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக, திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழ்ந்தாற் போன்ற அனுபவத்திற்கு, ஆளாக்கப்பட்ட துரதிஷ்டசாலிகள் அவர்கள்.

உயிர்ப்பயம், உடைமைப்பயம், உலகத்தொடர்பின்மை, நிமிர முடியா நெருக்கடிகள் என, பல விடயங்கள் அவர்களைப் பாதித்திருந்ததால், தமிழினத்தின் அறிவுலகப் புதிய தலைமுறை, ஓர் பெரிய பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.

அதென்ன பாதிப்பு என்கிறீர்களா? ஆளுமையின்மை. இதுவே மேற் கேள்விகளுக்கான ஒரே பதிலாம்.

✍✍✍

தனிமனித எழுச்சிக்கும் ஓர் இனத்தின் எழுச்சிக்கும், ஆளுமை என்பது மிக அவசியமானது. கல்வி, செல்வம், வீரம், விளையாட்டு, இலக்கியம், சமயம், கலை என, பல்துறைப்பட்ட ஆற்றல்கள் தனிமனித, சமூக உயர்ச்சிக்கு அவசியமானவை.

ஆனால், இவற்றால் மட்டும் உயர்வுகள் கிட்டிவிடப்போவதில்லை. ஒரு மரத்தை அதன் கிளைகள், இலைகள், பூக்கள், பழங்கள் என, பலவும் அழகு செய்யலாம். அன்றேல் பயன் செய்யலாம். ஆனால், இவையெல்லாவற்றின் உயிரோட்டம் தங்கியிருப்பது அம்மரத்தின் வேரில்தான். மேற்சொன்ன அனைத்தும் வேர் கருகின் கருகிப்போம்.

அதுபோலத்தான், கல்வி, செல்வம், வீரம், விளையாட்டு, இலக்கியம், சமயம், கலை எனும், அனைத்துத் திறமைகளின் பின்னணியில் இருப்பது ஆளுமையே. அது இன்றேல் இவையனைத்தும் இருந்தும் பயன் அன்றாம்.
அந்த உயர்ச்சியின் உயிரனைய ஆளுமையைத்தான், நம் இளையோர் இன்று இழந்து நிற்கின்றனர்.

✍✍✍

இன்றைய எமது இளைஞர்களிடம் மற்றைய திறமைகள், அனைத்தும் நிறைந்து கிடக்கின்றன. ஆனால், ஆளுமையின்மையால் இவற்றின் பயனை அடையமுடியாமல். நம் இளைஞர்கள் தத்தளிப்பதை நான் கண்கூடாகக் காண்கிறேன்.

✍✍✍

ஒரு காலத்தில் நம் இனத்தில் அறிஞர்களும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும், ஆளுமைமிக்கவர்களாய் தலைமைப் பண்போடு செயலாற்றினார்கள். அதற்காம் சில உதாரணங்கள் சொல்கிறேன்.

✍✍✍

தமிழினத்தின் அன்றைய அரச அதிபர்கள், இன்றைய மத்திய அமைச்சர்களை விடப் பெரிதும், துணிவும் ஆளுமையும் மிக்கவர்களாய் கம்பீரத்துடன் வாழ்ந்தனர்.

பிரதமர், ஜனாதிபதி போன்றோரின உத்தரவுகளைக் கூட ஆராய்ந்து, உடன்பாடின்றேல் அவற்றை நிராகரிக்கும் ஆற்றல் அவர்களிடமிருந்தது. யாழ். நூலக எரிப்பின்போது அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். இட்ட உத்தரவை, எதிர்த்து நிற்கும் துணிவுடன் அன்றைய யாழ் அரசஅதிபர், இருந்ததாய்ப் பலரும் சொல்வார்கள். இது அன்றைய நிர்வாகிகளின் ஆளுமை.

✍✍✍

அதுபோலவே நம் கல்வியாளர்கள், உலக அரங்கைச் சமன் செய்யும் ஆற்றலோடும் ஆளுமையோடும் அன்று திகழ்ந்தார்கள். யாழ் இந்துக்கல்லூரியின் அதிபராய் இருந்த சபாலிங்கம், சென்ஜோன்ஸ் கல்லூரி அதிபராய் இருந்த ஆனந்தராஜா, ஹாட்லிக் கல்லூரி அதிபர் பூரணம்பிள்ளை ஆகியோரின் ஆளுமையை, இன்றும் யாழ்ப்பாணம் பேசுகிறது.

அதற்குப் பின்னர்கூட ஆளுமைமிக்க கல்வியாளர்கள் நம் மண்ணில் இருந்தார்கள். இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் அட்டூழியங்கள் செய்து முடித்திருந்த வேளையில், மூடியிருந்த யாழ் பல்கலைக்கழகத்தை மீண்டும் திறப்பதற்காய், அப்போதைய இலங்கைக்கான இந்திய இராணுவக் கட்டளைத்தளபதி மஞ்சித்சிங், யாழ்பல்கலைக்கழகத்தில் கூட்டம் ஒன்றைக் கூட்டியபோது, 'எங்கள் மண்ணில் அழிவுகளைச் செய்யும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது?" என்று, அந்தப் பயச் சூழ்நிலையிலும் பேராசிரியர் டாக்டர் கூல் துணிந்து பேசியதைக் கேட்டு, அந்த இராணுவ அதிகாரியே அதிர்ந்து பணிந்தாராம்.

இச் சம்பவத்தை பிறர் சொல்ல அறிந்து மகிழ்ந்திருக்கிறேன். இவை அன்றைய கல்வியாளர்களின் ஆளுமை.

✍✍✍

அன்றைய நம் அரசியல்வாதிகளைக் கண்டு, பெரும்பான்மையின அரசியல்வாதிகளும், மற்றை நாட்டுத் தலைவர்களும் கூட, மனதால் மரியாதை செய்யும் நிலை இருந்தது. தந்தை செல்வாவின் இறுதிக்கிரியை முற்றவெளியில் நடந்தபோது, அந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் எம். சிவசிதம்பரம் அவர்கள், உயர் மேடையில் நின்று உரையாற்றிய தொனியைக் கேட்டு, அந்நிகழ்வுக்கு வந்திருந்த சிங்களத் தலைவர்களும் வெளிநாட்டுத் தூதர்களும், மெய்சிலிர்த்ததைக் கண்ணால் கண்டிருக்கிறேன்.

யு.என்.பி. கட்சி தேர்தலில் பெருவெற்றி பெற்று, முன்னால் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமையைப் பறிக்க முடிவு செய்தபோது, நமக்கு எதிரானவர் அவர் எனத்தெரிந்திருந்தும் ஜனநாயகத்திற்கு மாறான செயற்பாடு இதுவென, அமிர்தலிங்கம் உரையாற்றியபோது இலங்கைப் பாராளுமன்று அதிர்ந்தது உண்மை.

அமரர் அமிர்தலிங்கம் பாரதப் பிரதமர் அன்னை இந்திராகாந்தியுடன், பல உலகத்தலைவர்கள் சேர்ந்திருந்த விருந்தில் கலந்து, அவர்களுக்குச் சமமாய் இருந்து உரையாடும் ஆற்றலும் தகுதியும் பெற்றிருந்தார். இது அன்றைய அரசியல்வாதிகளின் ஆளுமை.

✍✍✍

இன்று இவை ஏதும் எம் இனத்திடம் இல்லை. நிர்வாகத்திலோ, அறிவுலகிலோ, அரசியலிலோ, இத்தகைய துணிவுமிக்க ஆளுமையாளர்களை காண்பதென்பது அரிதிலும் அரிதாகிவிட்டது. அண்மைக்காலத்தில்,
எனக்குத் தெரிந்து சத்தியம் சார்ந்து துணிந்து ஆளுமை செய்பவர்களாய், மேல் நீதிமன்ற நீதியரசர் இளஞ்செழியனையும், யாழ் மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவையுமே காணமுடிகிறது. அவர்கள் பற்றியும் ஆயிரம் விமர்சனங்கள்.

எவர் எதைச் சொன்னாலும் அவர்களது ஆளுமையை ரசிக்கவேண்டித்தான் இருக்கிறது. வேறுவேறு துறைகளில் வெளிப்படாமல் ஒருசிலர் இருக்கக்கூடும். பெரும்பான்மை பற்றிச் சொல்வதானால், நம் இனம் ஆளுமையாளர்களை இழந்து நிற்பதே உண்மையாம்.

✍✍✍

வலியோரை வழிமொழியும் அறிஞர்களே, கல்வியுலகிற்கு இன்று தலைமை தாங்குகின்றனர். மேலதிகாரிகள் காலால் இட்ட கட்டளையை, தலையால் செய்யக் காத்திருக்கும் கோழைகளே, நிர்வாக உலகிற்கு இன்று தலைமை தாங்குகின்றனர்.

தம்மக்கள் மத்தியில் வீரவசனம் பேசிவிட்டு, கொழும்பில் பேரின அரசியல்வாதிகளுக்கு கால்தடவிச்சலுகைபெறும், வேடதாரிகளே அரசியல் உலகிற்கு இன்று தலைமை தாங்குகின்றனர்.

இந்த மூன்று வர்க்கத்தாரும்தான், இன்றைய நம் இளைஞர்களின் ஆளுமை இலட்சியங்கள். என்னே நம்விதி.

✍✍✍

எப்படி இருந்த இனம் இன்று எப்படி ஆகிவிட்டது? மேற்சொன்ன மும்மூர்த்திகளின் ஆளுமையைப் பின்பற்றி வாழத்தலைப்பட்டால், ஓர் இளையதலைமுறை எப்படி நிமிரும்? தாம் பொய்யர்கள் எனத் தெரிந்துகொண்டு, அப்பொய்மை வெளிப்படாமல் இருப்பதற்காக, இளையோரின் உணர்ச்சிகளை தேசப்பற்றின் பேரால் தூண்டி, தம் மாயவலைக்குள் மடக்கி வைத்திருக்கிறார்கள் இவர்கள்.

இப்பாரிய மாயவேலியை உடைத்துக் கொண்டு, ஆளுமை மிக்கவர்களாய் நம் இளையோர் மாறுவது எங்ஙனம்? அது பற்றி உங்களுடன் பேசத்தான் இக்கட்டுரை.

✍✍✍

இழந்த ஆளுமையின் மீட்சிக்காய், நம் இளையோர் செய்யவேண்டிய வேலைகள் எவை? அவற்றைத் தெரிந்து கொள்வது மிகமிக அவசியம். அவைபற்றி ஒவ்வொன்றாய்ச் சொல்கிறேன்.

✍✍✍

நம் இளையோரின் ஆளுமையின்மையின் முதற்காரணம், இனத்துள் ஆளுமை முன்னுதாரணங்கள் இல்லாமை என்பது பற்றி முன்னர் பார்த்தோம்.

மற்றவர்களைக் குறை சொல்லி என்ன பயன்? நாமே நம்மை நிமிர்த்தவேண்டியதுதான்! நம் இளையவர்கள் ஆளுமைக்கான முதற்செயற்பாடாக, பன்மொழித்திறமையை உடனடியாக வளர்க்கவேண்டும். நம்தமிழ் மண்ணைவிட்டு இலங்கை அளவில் நாம் விரிந்து செயற்படவேண்டுமானால், சிங்கள மொழி அறிவின்றி அது சாத்தியமில்லை. அதுபோலவே உலக அளவில் நாம் விரிந்து செயற்படவேண்டுமானால், ஆங்கில மொழி அறிவின்றி அது சாத்தியமில்லை. இவ்விரு மொழி பயிற்சியின்மையே, நம் இளையோரின் ஆளுமையின்மையின் இரண்டாம் காரணம் என்பேன்.

✍✍✍

சிங்கள, முஸ்லிம், மலையக இனத்தார் இவ் உண்மையைத் தெரிந்துகொண்டு, மும்மொழிப் பயிற்சி பெற்று இன்று ஆளுமையாற்றல் மிக்கவர்களாய்த் திகழ்கிறார்கள். மொழியாற்றல் வந்ததுமே, எவருடனும் தம் பிரச்சினையைப் பேசித்தீர்க்கும் ஆற்றல் வர, ஆளுமையின் அரைப்பகுதி சாத்தியமாகிவிடுகிறது.

இன்றைய புதியதலைமுறை அரசியல்வாதிகள், அறிஞர்கள், நிர்வாகிகள் என, பெரும்பான்மையினோர் இப்பன்மொழி ஆற்றலை இழந்திருப்பதால்த்தான், தம் கருத்தை மற்றவர்க்கு உரைக்கும் திறனின்றி, ஆளுமை அற்று அடிமைப்பட்டு கூசிக்குறுகி நிற்கின்றனர். மற்றைய இனங்களின் இளையோர் இம் மொழியாற்றலால் ஆளுமைபெற்று, நிமிர்ந்து நிற்பதைக் கண்டு வியக்கிறேன்.

தென்பகுதிகளில் கல்லூரிகள் முடியும் வேளையில், சில சந்தர்ப்பங்களில் வீதிவழியால் செல்ல நேரிடும். அப்போது கல்லூரி முடிந்து வரும் பேரின இளைஞர்களைக் காண்பேன் . அவர்களின் கம்பீரம், இளமைக்கே உரித்தான உற்சாகம், மேன்மையுறும் நடையுடை பாவனை இவற்றையெல்லாம் காண்கையில், எம் இளைஞர்கள் சற்றுப்பின்தங்கி விட்டார்களோ என எண்ணி என் நெஞ்சம் வாடுவதுண்டு.

✍✍✍

பரீட்சைகளில் மற்றை இனத்தாரைவிட, சிறந்த சித்திகளைப் பெற்ற எம்முடைய இளைஞர்கள், பன்மொழிப் புலமையின்மையால் மாணவர்கள் ஒன்றுகூடும் இடங்களில், கூச்சத்தோடு ஒதுங்கி நிற்கின்றனர். பல ஆற்றல்கள் இருந்தும் அதை வெளிப்படுத்த முடியாமையால் ஏற்படும் நாணத்தில், நம் இளையோரின் ஆளுமை அப்படியே நசிந்து போகிறது.

✍✍✍

ஆளுமையின்மையின் மூன்றாவது காரணியாய் இருப்பது, நம் கடந்தகால வரலாறு. கடந்த காலங்களில் நமது இயக்கங்களாலும், இடையிடை உள் நுழைந்த பிற இராணுவங்களாலும், நம் மக்களுக்கு உபதேசிக்கப்பட்ட ஒரே மந்திரம், கட்டளையை ஏற்றுப் பணிந்து போ! என்பதுவேயாம்.

இம்மந்திரக்கட்டிலிருந்து இன்றும் நம் இளையோர் விடுபடவேயில்லை. இளையோர் என்ன இளையோர் முதியோரும்தான்! சிறுமைகண்டு பொங்குதல் என்பதை நம் இனத்தார் மறந்து பலகாலம் ஆயிற்று. சிலர் பொங்குவதாய்ப் பொய்மை செய்கிறார்கள். பின்னர் தம் சுயநலத்திற்காய்ப் பணிந்து திரைமறைவில் பாதம் வருடுகிறார்கள்.

அடங்கிப்போதல், நழுவிப்போதல், பிரச்சினைகளைத் தவிர்த்தல், நமக்கேன் என்று இருத்தல், சுயகருத்தின்மை போன்ற, ஆளுமைக்கெதிரான செயற்பாடுகலெல்லாம், நற்பண்புகளாய் நம் மக்கள் மத்தியில் உபதேசிக்கப்படும் அவலம், இன்று நம் இனத்தில் வேரூன்றி இருக்கிறது. பெரியவர்களின் இந்த ஆளுமையற்ற போக்கினையே, இளையோரும் பின்பற்றுதல் இயல்பன்றோ!

அதனால்த்தான் நம் இளையோர் மேற் பண்புகளோடு, நல்ல பிள்ளைகளாய்த் தம்மைக் காட்டி நிற்கின்றனர். இழிவை ஏற்றமாய்ப் பதிவு செய்யும் முயற்சி.

✍✍✍

மொத்தத்தில், முன்னுதாரணமின்மை, மொழிப்பயிற்சியின்மை, சுயசார்பின்மை என்பவையே, பெரும்பாலும் நம் இளையோரின் ஆளுமையின்மையின் காரணங்களாயின.

✍✍✍

இவற்றை யார் நீக்குவது? எங்ஙனம் நீக்குவது? இளையோரை ஆளுமைமிக்கவர்களாய் எங்ஙனம் ஆக்குவது? இவைதான் இன்று நம் இனத்தின் முன் இருக்கும் பெரிய கேள்விகள்.

✍✍✍

குறைகளைச் சுட்டிக்காட்டுவது எளிது. பட்டிமண்டபம் பேசிப்பேசி கம்பன்கழகத்தார்க்கு, பிழைபிடிப்பதில் வித்தகம் வந்துவிட்டது. பிழைபிடித்து என்ன பயன்? சரியைச் செய்யவேண்டாமா? எல்லோரது பிழைகளையும் எடுத்துக் காட்டும் கம்பன்கழகம், மேற்படி பிழைகளை நீக்கவும் மாற்றவும் ஏதேனும் முயற்சி செய்யுமா? உங்கள் மனக்கேள்விகள் எங்கள் செவிகளில் பதிவாகின்றன.

✍✍✍

உங்கள் கேள்விகள் நியாயமானவைதான். செய்யவேண்டும் என நாங்களும் விரும்பத்தான் செய்கிறோம். உங்களின் உதவியின்றி நாங்கள் தனித்து எதனைச் செய்யமுடியும்? தாய் நாட்டிலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எம் இனத்தார், தீமைகளை நடக்கவிட்டு பின் அதற்கான பிராயச்சித்தங்களைச் செய்வதையே, தொண்டு என நினைக்கின்றனர்.

அத் தொண்டுகளுக்கே அவர்கள் உதவிக்கரம் நீட்டுகின்றனர். 'கருணையைக் காட்டுவதற்கு முன் நிபந்தனையே, மற்றவர்கள் கஷ்டப்படவேண்டும் என்பதுதானே" என்று முன்பு ஓருமுறை எங்கள் கவியரங்கில், கவிஞர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார் பாடியது நினைவிருக்கிறது. தீமைகள் வருவதை முன் உணர்ந்து தடுக்கும் முயற்சிகளை, நம்மவர்கள் தொண்டாய்க் கருதுவதில்லை. அத்தொண்டுகளுக்கு உதவிபுரிய விரும்புவதுமில்லை.

காரணம், முன்னைய செயற்பாட்டில் அவர்களுக்கு விளம்பரம் கிடைக்கும். பின்னயதில் அது கிடையாது என்பதேயாம். பிழைகளும் அதற்கான பிராயச்சித்தங்களும் நடந்துகொண்டேயிருக்கவேண்டும். அப்பிழைகள் வாராமல் தடுத்து சரிகளைச் செயற்படுத்தும் முயற்சிகள் தேவையற்றவை. இதுதான் இன்றைய ஈழத்தமிழர்களின் சித்தாந்தமாம்.

✍✍✍

கடந்த நாற்பதாண்டுகாலமாக கடுமையான போர்க் காலத்திலும், மக்கள் மனதை ஆறுதல்படுத்தி, வாழ்வு மீண்டும் மலரும் என நம்பிக்கையூட்டி, மொழிப்பற்றும் இனப்பற்றும் மதப்பற்றும் உருவாக்கி, ஆளுமையும் அறமும் புகட்டி நாம் செய்த தொண்டுகளுக்கு, நம் இனத்தாரிடமிருந்து இன்றுவரை போதிய ஆதரவு கிட்டவில்லை என்றே சொல்வேன். 'நமக்கென்ன? எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும்," என்றும் ஏனோ நம்மால் இருக்கமுடியவில்லை. அதுதான் எங்கள் குறைபாடு.

✍✍✍

அதனால் எம் இளையோரின் வீழ்ச்சியின் அடிப்படையாயிருக்கும் ஆளுமையின்மை எனும் பெரும் குறையை நீக்கி நிறைவுண்டாக்க, கம்பன் கழகத்தால் புதிய முயற்சி ஒன்றை எடுக்க விரும்புகிறோம். அதற்கான ஆலோசனைகளையும் ஆதரவுகளையும் உங்களிடம் எதிர்பார்த்து நிற்கிறோம். அதென்ன புதிய முயற்சி என்கிறீர்களா? அதுபற்றி விரிவாய்ச் சொல்கிறேன்.

✍✍✍

இளையோரிடம் ஆளுமை வளரவேண்டும். அவர்களால் நம் இனம் உயரவேண்டும். அதற்கான ஒரு சிறிய கதவை நாம் திறந்தால் என்ன? எனும் எண்ணம் தோன்றியது. அவ் எண்ணம் என்ன? என்பதை சிறிது விபரிக்கிறேன்.

✍✍✍

உயர்தரப் பரீட்சை முடிவுகள் வருவதற்கும், பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கும் இடையில், கிட்டத்தட்ட ஆறுமாதங்களை நம் இளைஞர்கள் வீணே கழிக்கவேண்டியிருக்கிறது. இந்த ஆறுமாதங்களைப் பயன்படுத்தி நம் இளையோர்க்கு, ஆளுமை மற்றும் பன்மொழிப் பயிற்சிகளை வழங்கினால் என்ன? என்று தோன்றுகிறது. அப்பயிற்சிக்கான வழிமுறைகளைப் பின்வருமாறு அமைக்கலாம் என கருதுகிறோம்.

✍✍✍

முதல் நிலையில், பரீட்சை முடிவுகளை வைத்தும் அவர்களது இயல்பாற்றலைப் பரிசோதித்தும், இருபது அல்லது முப்பது மாணவர்களை தேர்ந்தெடுப்பது. பல்கலைக்கழகம் புகும் முழு மாணவர்களுக்கும், மேற்பயிற்சிகளை நடத்தும் பலம் இப்போதைக்குக் கம்பன்கழகத்திடம் இல்லை.

அதனாலேயே தேர்ந்தெடுக்கும் மாணவர் தொகையை எல்லைப்படுத்த நினைக்கிறோம். தேரந்தெடுக்கப்படும் மாணவர்களில் ஆண், பெண் என இருசாராரும் இணைத்துக் கொள்ளப்படுவர். இப்பணிக்கு பொருளாதார ரீதியாகப் பலரும் துணை செய்ய முன்வந்தால், தேர்ந்தெடுக்கப்படும் மாணவரின் எண்ணிக்கையை அதிகரிக்கமுடியும்.

✍✍✍

மேற்பயிற்சி கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் கொண்டதாய் அமையும். இவ் ஆறுமாதப் பயிற்சியிலும் மாணவர்கள் முழுமையாய்ப் பங்குபற்றவேண்டும். மாணவர்களுக்கு தங்குமிடவசதியும், உணவு முதலியவைகளும் வழங்கப்படும். தேவையேற்படும் பட்சத்தில் மாணவர்களிடம் அடிப்படை கட்டணம் பெறப்படும்.

கொழும்பு, மலையகம், திருகோணமலை, மட்டக்களப்பு எனும் தமிழ் பிரதேகசங்களிலும், எவையாவது இரண்டு சிங்கள பிரதேசங்களிலும், மாதந்தோறும் இம்மாணவர்கள் இடம் மாற்றித் தங்கவைக்கப்படுவர். ஆண்களுக்குத் தனியிடமும் பெண்களுக்குத் தனியிடமும், அவர்களுக்கான ஆண், பெண் பராமரிப்பாளர்களும் ஒழுங்கு செய்யப்படுவர்.

✍✍✍
மேற்கு நாடுகளிலிருந்து அழைக்கப்படும் ஆங்கிலேய விரிவுரையாளர்களே, ஆங்கில மொழிப்பயிற்சியினை நடாத்துவர். அதுபோலவே சிங்கள மொழிப்பயிற்சிக்கு சிங்கள ஆசிரியர்களே நியமிக்கப்படுவர். தகுதிபெற்ற தமிழ் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு அடிப்படைத் தமிழ் அறிவும் வழங்கப்படும்.

அதுபோலவே பன்மத அறிவும், அவ்வவ் மத அறிஞர்களால் மாணவர்களுக்குப் போதிக்கப்படும். இவைதவிர கணினிப்பயிற்சி, ஆளுமைப் பயிற்சி, நிர்வாகப் பயிற்சி போன்றவைகளும், தகுதி பெற்றவர்களைக் கொண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும். இவை எமது தற்போதைய அடிப்படை எண்ணங்கள்.

✍✍✍

கலாசார, இனபகிர்வுக்காக, பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள், குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இவ்விரண்டு வாரங்கள், சிங்கள, முஸ்லிம், மலையக, பறங்கி இனங்களைச் சார்ந்த இல்லங்களில், தங்கவைக்கப்படுவர். மற்றைய இனங்களுடனான உறவு வளர்ச்சிக்காக, இம் முயற்சி செயற்படுத்தப்படும்.

✍✍✍

பயிற்சியின் இறுதி மாதத்தில் இம்மாணவர்களுக்கு, மிகப்பெரிய நிறுவனங்களில் ஓரிரு நாட்கள் நிர்வாகப் பயிற்சி வழங்கப்படும். உயர் அதிகாரிகளைச் சந்திக்கும் முறை, வங்கி முதலிய நிறுவனங்களைக் கையாளும் முறை, உயர் ஆளுமையாளர்களைச் சந்திக்கும் முறை, நட்சத்திர ஹோட்டல்களில் விருந்துண்ணும் முறை போன்றவை அனுபவபூர்வமாக மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படும்.

வசதிப்பட்டால் உயர் அரசியல்வாதிகளையும், பெரு நிறுவனத் தலைவர்களையும் நேரடியாகச் சந்தித்து, உரையாடும் வாய்ப்புக்கள் உண்டாக்கிக் கொடுக்கப்படும்.

✍✍✍

இவைதவிர, தினம் ஒரு ஆளுமையாளரைச் சந்திக்கும் வாய்ப்பு, ஆளுமையாளர்கள் பற்றிய உரை, நவீன செயன்முறை ஊடான ஆளுமைப் பயிற்சி, தனித்த சுய ஆற்றலுக்கான வெளிப்பாட்டுப் பயிற்சி, ஊடகச் செயற்பாடுகள் பற்றிய பயிற்சி, சட்ட, மருத்துவ, இராணுவ நெறிமுறைகள் பற்றிய அறிவு, பல்லின கலை, (இசை, நாடகம்) இலக்கிய அடிப்படை அறிமுகம், விளையாட்டுத்துறைப் பயிற்சி, பல நாட்டு உணவுவகை அறிமுகம், குறித்த சில நிகழ்வுகளில் பங்கேற்கும் முறை, மற்றும் உடையலங்காரம், அதிர்வுகள் தரும் விடயங்களை எதிர்கொள்ளும் முறை, சமூகத்திற்கு உதவும் மனப்பாங்கு என்பனவான விடயங்களும், இம் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்.

✍✍✍

மேற்படி பயிற்சிகள், இராணுவ கட்டுப்பாட்டிற்கு நிகரான கட்டுப்பாட்டோடுதான், மாணவர்களுக்கு வழங்கப்படும். இப்பயிற்சிகள் முடிந்து வெளிவரும் மாணவர்கள், சமூகத்தில் தனித்து இனங்காணப்படத் தக்கவர்களாய்த் திகழ்வார்கள்.

✍✍✍

இது ஒரு பெரிய கனவு. கம்பன்கழகத்தின் இன்றைய பலத்தால் மட்டும், இக்கனவை நனவாக்க முடியும் என்று தோன்றவில்லை. முதலில் எமது இந்த நோக்கத்தின் அவசியத்தை தக்கவர்கள் உணரவேண்டும். பின் அதற்குத் துணைபுரிய முன்வரவேண்டும். பாரதியார் சொன்னால் போல,

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்
எதுவும் நல்கி இங்கெவ்வகையானும்
இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்.

என அனைவரையும் இத்திட்டத்திற்குத் துணைபுரிய வரவேற்று நிற்கிறோம். இவ்விடயத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவையும், நம் அரசியல்வாதிகளின் ஆதரவையும், நம் நாட்டின் தாழ்விலாச் செல்வர்களின் ஆதரவையும் நாம் நாடி நிற்கிறோம். இவ் எண்ணம் பற்றிய புதிய சிந்தனைகளை, அறிவுலகத்தாரும் ஆளுமையாளர்களும் மாணவர்களும் கூட எமக்கு வழங்கலாம்.

✍✍✍

அண்மையில் 'வேலைக்காரன்" என்ற தமிழ்ச்சினிமாவில், அதன் கதாநாயகன் அடிக்கடி ஒரு தொடரைச் சொல்வான். அத்தொடர் இன்று எம் இனத்திற்குத் தேவையானது. அதைப் பதிவு செய்து இக்கட்டுரையை முடிக்கிறேன்.

சொற்களிலேயே சிறந்த சொல் 'செயல்" என்பதே, உங்கள் ஆதரவுக்கும் ஆலோசனைக்குமாய்க் காத்திருக்கிறோம்.

Read more...

Monday, August 27, 2018

ஈழவரலாற்றில் மறக்கமுடியா பெருமகன் அமிர்ந்தலிங்கம், அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்! ஸ்ரேன்லி ராஜன்

அப்பாத்துரை அமிர்தலிங்கம் அவர்களின் ஜனனதினம் இன்றாகும். அரசியல் தவறுகளுக்கப்பால் ஈழ மக்களின் சுதந்திர வேட்கையில் மிக ஈடுபாடு கொண்டிருந்த தலைவன் அவர். ஆனால் இன்று தமிழ் சமூகம் அவரை மறந்திருக்கின்றது. ஆனாலும் இந்தியத் தமிழன் ஒருவன் அவரை மறக்கவில்லை. அவரது உள்ளக்குமுறல்:

இலங்கை தமிழர்களில் அவர்தான் மிக முக்கிய தலைவராக இருந்தார். ஈழத்துகாந்தி சாமுவேல் செல்வநாயகத்திற்கு பின் அவரைத்தான் ஈழதமிழர்களின் தலைவராக உலகம் கருதிற்று. பன்மொழி ஆற்றல் மிக்கவர், பெரும் ஜனநாயகவாதி, எல்லா நாட்டு மக்களாலும் மதிக்கபட்டவர் என அவருக்கு பெரும் மதிப்பு இருந்தது, இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக இருந்த முதல் தமிழர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்
செல்வாவிற்கு பின் அவர்தான் ஈழபிரச்சினையினை முன்னெடுத்து சென்றார், கொழும்பு கலவரத்தை தொடர்ந்து ஈழதமிழர் மேல் உலகெல்லாம் ஒரு அனுதாபம் ஏற்பட அவர்தான் காரணம்.

தமிழகத்திற்கு அவர் ஆதரவு தேடி வந்தார். அவரை வரவேற்பதில் எம்ஜிஆருக்கும், கலைஞருக்கும் போட்டியே இருந்தது, "நாவலரே வருக.." என போஸ்டர் ஓட்டி அசத்தினார் கலைஞர். நான் தான் முதல்வர், என் காரில்தான் நீங்கள் வரவேண்டும் என விமான நிலையத்திலிருந்து தன் காரில் அழைத்து சென்று கருணாநிதியினை பார்த்து கிக்கிக்க்க்கி என சிரித்தபடி சென்றார் எம்ஜிஆர்.

சுருக்கமாக சொன்னால் ஈழபிரச்சினையினை தமிழகத்தில் கொண்டு வந்து பெரிய செய்தி ஆக்கியதே அமிர்தலிங்கம் தான். இந்திராகாந்தியிடம் அவர்தான் முதலில் ஈழநிலையினை எடுத்துரைத்தார், அமிர்தலிங்கமும் தந்தை செல்வாவின் மகனுமான சந்திரஹாசனுமே இந்தியாவில் ஈழபோராளிகள் பயிற்சிபெற அனுமதிபெற்றனர்.

அமிர்தலிங்கத்தின் அமைதியான அணுகுமுறையே இந்திரா ஈழபோராட்டத்தில் இறங்க வழிகோலியது, அமிர்தலிங்கம் இல்லையென்றால் ஈழபோராட்டம் இந்த அளவு வளர்ந்திருக்காது, புலிகள் என்றோ காலியாயிருப்பர்.

1984 குடியரசு தின விழாவின் பொழுது அமிர்தலிங்கத்தை அழைத்து தன் அருகே சிறப்பு விருந்தினராக அமரவைத்தார் இந்திரா. அது வெளிநாட்டு அதிபருக்கே கொடுக்கபடும் கவுரவம், ஆனால் ஒரு நாட்டின் எதிர்கட்சி தலைவருக்கு எப்படி கொடுத்தார் என பெரும் பரபரப்பு எழும்பியது.

அமைதியாக ஜெயவர்த்தனேவினை பார்த்து புன்னகைத்தார் இந்திரா, ஆம் அதன் அர்த்தம் ஜெயவர்த்தேனேவிற்கு மட்டும் புரிந்தது. ஈழம் அமைந்தால் அதற்கு அமிர்தலிங்கம்தான் அதிபர் என்ற பொருள் யாருக்கு புரியாது? அலறினார் ஜெயவர்த்தனே, சிங்கள இனமே அலறிற்று.

இந்திரா காலத்திற்கு பின் ராஜிவ் வந்ததும், ராஜிவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் வந்தபொழுதும் அமிர்தலிங்கம் இந்தியா பக்கமே இருந்தார். இந்தியா மூலமே இலங்கை தமிழர்கள் நன்மை பெறமுடியும் என்பதும், இன்னொரு நாடு ஒருகாலும் ஈழதமிருக்காய் வராது, இந்தியா மட்டுமே ஏதாவது நன்மை பயக்கும் நிலையில் இருக்கின்றது, நாளை சிக்கல் என்றாலும் இந்தியாதான் கொடுக்கும் என்பது அவரின் நம்பிக்கை. அது மகா உண்மையும் கூட‌.

இது பிரேமதாசாவிற்கு பெரும் எரிச்சலை கொடுத்தது, புலிகளும் பிரேமதாசாவும் இந்திய படைகளுக்கு எதிராக கூட்டாஞ்சோறு பொங்கி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்ட காலங்கள் என்பதான் கொலபொறுப்பினை புலிகள் எடுத்தனர். அவர்களுக்கென்ன தமிழர் தரப்பு பிரதிநிதி என எவர் வந்தாலும் கொல்ல வேண்டும்.

அமிர்தலிங்கம் புலிகளின் கடும் போக்கினை விமர்சித்தார், போராளிகள் என்பவர்கள் செய்யும் அட்டகாசங்கள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது என்றார், தமிழர்களை கொல்லும் அந்த கொடூரம் ஒரு காலமும் நன்மை பயக்காது என பொதுவாக சொல்லிகொண்டிருந்தார்.

அவர்தான் ஈழதமிழர்களின் பிரதிநிதி என உலகம் பார்த்து கொண்டிருந்தபொழுதே புலிகளுக்கு சகிக்கவில்லை. அவர்களை பொறுத்தவரை தாங்கள் மட்டுமே ஈழ தமிழரின் பிரதிநிதி என சொல்லிகொண்டார்கள். போட்டிக்கு வந்தவர்களை எல்லாம் தொலைத்த புலிகள், அமிர்தலிங்கத்தை விடுவார்களா?

நாங்கள் துப்பாக்கி தூக்கி போரிடும் பொழுது, அமிர்தலிங்கம் இலங்கை அரசோடு பேசுகின்றார் அதனால் அவர் துரோகி என அறிவித்தார்கள். (ஆனால் இதே புலிகள் பின்பு பிரேமதாசாவோடு கொஞ்சியது வரலாறு,அவர்கள் செய்தால் ராஜ தந்திரம் மற்றவர் செய்தால் கொடூரம்) புலிகளின் வாயில் ஒருவனை துரோகி என சொல்லிவிட்டால் அவன் சாகபோகின்றான் என பொருள்.

பிரபாகரன் பற்றி தன் கருத்தை இப்படி பண்பட்ட மொழியில் சொன்னார் அமிர்தலிங்கம் :

"தம்பி பிரபாகரன் தமிழனித்திற்காக சிறுவயதில் இருந்தே போராடுவது வரவேற்கதக்கது, ஆனால் எதனை செய்யவேண்டும், எதனை செய்யகூடாது எனும் அறிவு அவரிடம் இல்லை, பக்குவம் இல்லை, முதிர்ச்சி இல்லை.
இவர் இப்படியே செய்துகொண்டிருந்தால் அது பெரும் அழிவில் முடியும், அவர் பின்னால் இளைஞர்கள் செல்வது நல்ல அறிகுறி அல்ல..."


துரோகி என புலிகள் குமுறிகொண்டிருந்தபொழுது, இந்த வார்த்தைகள் புலிகளை வெறியூட்டின‌. ஒரு பெரும் தலைவனே, தமிழர் தலைவனே இப்படி சொல்லிவிட்டபின் மக்கள் எப்படி பிரபாகரனை நம்புவர்?, விடுவார்களா?

3 புலிகளை அமிர்தலிங்கத்துடன் பேசவேண்டும் என அனுப்பினர், அவர்களும் சில நாட்கள் சென்று பேசினர், அப்பொழுதெல்லாம் ஆயுதம் இல்லை. அமிர்தலிங்கம் பெரும் பாதுகாப்பில் இருந்தவர், சிங்கள அரசு அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கியிருந்தது, காரணம் உலகம் மதிக்கும் ஒரு தமிழ் தலைவனுக்கு போராட்டம் நடக்கும் காலத்தில் ஏதும் நடந்து தொலைத்துவிட்டால் அது இலங்கை அரசுக்கு பெரும் சிக்கல்"

இஸ்ரேலியர் அராபத்தை விட்டு வைத்தார்கள் அல்லவா? அப்படி. இந்நிலையில் அந்த கொலைகார புலிகள் ஆயுதத்தோடு அவரை பார்க்க வந்தார்கள், வாசலில் நின்ற சிங்களன் தடுக்கின்றான், அனுமதிக்கவில்லை பெரும் சத்தம். அதனை கேட்டு மாடியிலிருந்து சொல்கின்றார் அமிர்தலிங்கம்.

"அவர்கள் எனக்கு தெரிந்தவர்கள் அனுப்புங்கள், ஆயுதம் பற்றி கவலை இல்லை" என அனுமதி கொடுக்கின்றார் அமிர்தலிங்கம்

எப்படி நம்பியிருக்கின்றார் பார்த்தீர்களா?

அதன் பின் அமிர்தலிங்கத்துடன் பேசுகின்றார்கள் கொலைகாரர்கள், அவரோடு இன்னும் இருவர் இருந்தார்கள், யோகேஸ்வரன் போன்றவர்கள், அவர்களும் சிறந்த சிந்தனையாளர்கள். அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையற்கரசி எல்லோருக்கும் தேநீர் கொண்டு வருகின்றார், கொலைகார புலிகள் குடிக்கின்றார்கள். கொஞ்சமும் மனிதாபிமானம் உள்ளவர்கள் அதனை குடிப்பார்ளா? அல்லது அந்த மங்கல மகராசி கையால் தேநீர் குடித்தபின் அவள் தாலிபறிக்க நினைப்பார்களா? புலிகளுக்கு ஏது நன்றி? ஏது மனது? எல்லாம் கொடூரம்.

தேநீரை அருந்திவிட்டு அமிர்தலிங்கத்தை சுட்டார்கள், அதன் பின் அருகிலிருந்தவரை சுட்டுவிட்டார்கள். சத்தம் கேட்டு அமர்தலிங்க மனைவியும் அந்த சிங்கள காவல்காரனும் ஓடிவந்தான். அவனை கண்டதும் அமிர்தலிங்கம் மனைவியினை சுடும் திட்டத்தை கைவிட்டு கொலைகாரர்கள் ஓடினர்,

ஆம் அவர்கள் அமிர்தலிங்கதினை சுட்டுவிட்டு தனிஈழம் பெற அவசரமாக ஓடினர்.

ஆனால் அந்த சிங்களன் பின்னால் விரட்டி சென்று சுட்டடான். கொலையாளிகளை அவன் விரட்டி சுட்டு கொன்றான், ஒரு தமிழ் தலைவனை கொன்ற தமிழ்புலிகளை சுட்டு கொன்றவன் ஒரு விசுவாசமான சிங்களன்.

அது மட்டுமல்ல அமிர்தலிங்கத்தின் பாதுகாவலரானா அந்த சிங்களன் அமிர்தலிங்கம் மனைவியிடம் அழுதான், என்னை மன்னியுங்கள், நான் அவர்களை தடுத்திருக்கவேண்டும், இவர் அழைத்தார் என்றுதான் விட்டுவிட்டேன் என் கடமையினை நான் சரியாக செய்யவில்லை. எப்படிபட்ட மிக உயர்ந்த சிங்களன் அவன்?, அமிர்தலிங்கத்தை அவன் தமிழனாகவா பார்த்தான் இல்லை, நிச்சயம் இல்லை அவரை தலைவனாக கண்டிருக்கின்றான். அமிர்தலிங்கத்தை போலவே வரலாற்றில் நின்றுவிட்டான் அந்த நல்ல சிங்களன்.

பிரபாகரனுக்கு பின்னும் இலங்கை அமைதியாக இருக்கின்றது என்றால் அது இதுபோன்ற நல்ல சிங்களர்களால்தான்.

அமிர்தலிங்கத்தின் கொலை பெரும் பிரச்சினையாயிற்று, ஈழமக்கள் அழுதனர், வழக்கம் போல மறுத்தனர் புலிகள், பின் அமைதியாயினர். புலிகள் கொலையினை மூன்று வகையாக எதிர்கொள்வர், ஒன்று கொன்றது நாங்கள்தான் என்பர், இரண்டாது ரகம் முணுமுணுப்பு, மூன்றாம் ரகம் மர்ம அமைதி.

ராஜிவ் கொலை என்பது மூன்றாம் ரகம், அமிர்தலிங்கம் கொலை இரண்டாம் ரகம். புலிதளபதி மாத்தையா அமிர்தலிங்கத்திற்கு கொடுக்கபட்டது மரண தண்டனை என பகிரங்கமாக சொன்னார், பிராபகரன் உத்தரவுபடி அந்த கொலையினை செய்தது நிச்சயம் மாத்தையாதான், பின் மாத்தையாவும் பிரபாகரனுக்கு துரோகி ஆனார், கொஞ்சநாளில் பிரபாகரனால் கொல்லபட்டார். பின் ராஜிவும் கொல்லபட்டு , புலிகளின் நன்றி கடனுக்காக பிரேமதாசாவும் கொல்லபட்டார். எப்படிபட்ட நன்றிமிக்கவர் புலிகள், காப்பாற்றி சோறு போட்டவனை எல்லாம் மண்டையில் போட்டவர்கள்.

வடமராட்சியில் தன்னை காத்த ராஜிவினை கொன்றார்கள், பின் அமைதிபடையிடமிருந்து காத்த பிரேமதாசாவினை கொன்றார்கள். அப்படியே தாங்கள் பெரும் போராளிகளாக இடமளித்து பயிற்சிபெற‌ இந்தியாவிடம் வாதாடி வழிகொடுத்த அமிர்தலிங்கத்தையும் கொன்றார்கள்.

புலிகள் செய்த மிக மிக தவறான அரசியல் கொலைகளில் அமிர்தலிங்கம் கொலையும் ஒன்று. ஜூலை 13ம் நாளில்தான் அவர் புலிகளால் கொல்லபட்டார், இப்படி எல்லாம் சிரித்துகொண்டே கொலை செய்வது ஒருவகையான மனநோய், பிரபாகரனுக்கும் அவர் கும்பலுக்கும் அதுதான் இருந்திருக்கலாம். இதன் பின் என்னவெல்லாமோ நடந்து புலிகள் 2009ல் பெரும் மக்கள் அழிவோடு அழிந்தும் போயினர்.

இன்று யாருமில்லா அனாதைகளாக நிற்கின்றது ஈழ தமிழினம், மறுபடி அமிர்தலிங்கம் போன்றவர்கள் பிறந்து வந்து வழிகாட்டட்டும். பிரபாகரன்கள் இனி பிறக்காமலே போகட்டும்.

திருப்பெரும்புதூரில் காவலர் அனுசுயா தற்கொலை குண்டுதாரி அனுசுயாவினை தடுக்க, அவரை தடுக்காதீர்கள் மாலையிட அனுப்புங்கள் என சொல்லி தனுவினை தன் அருகே அழைத்தார் ராஜிவ். அந்த சதிகாரியும் வந்து குனிந்து வணங்கி கொன்றாள்.

இவர்கள் எனக்கு தெரிந்தவர்கள், அவர்களிடம் ஆயுதம் இருப்பது பிரச்சினையில்லை உள்ளே அனுப்புங்கள் என சொல்லி கொலையாளிகளை தன்னை கொல்ல அனுமதி கொடுத்தார் அமிர்தலிங்கம். அவர்களும் வந்து வணங்கி தேநீர் குடித்துவிட்டே கொன்றனர்.

புலிகளின் பயிற்சி இப்படித்தான் நம்ப வைத்து கழுத்தறுப்பதாக இருக்கின்றது. இதனைத்தான் பெரும் வீரகாவியமாக இந்த சீமானும் வைக்கோவும் பழநெடுமாறன் எனும் இந்த தேசத்தின் சாபங்கள் எல்லாம் சொல்லிகொண்டிருக்கின்றன‌.

அமிர்தலிங்கத்தின் மரணம் ராஜிவிற்கு பெரும் எச்சரிக்கை, பத்மநாபாவின் கொலை அடுத்த எச்சரிக்கை இதனை எல்லாம் கொஞ்சமும் சிந்திக்காமல்தான் ராஜிவ் இறந்தார்.

இன்று அமிர்தலிங்கத்தின் பிறந்த நாள், ஈழமக்களின் துயரத்திற்கு இந்தியா மட்டுமே உதவமுடியும் என இங்கு ஓடோடி வந்து இந்தியாவின் தலையீட்டில் சில நன்மைகளை அடையலாம் என நன்முயற்சிகளை எடுத்தவரின் பிறந்த நாள். ஈழதமிழருக்காக உயிர் கொடுத்து ராஜிவினை எச்சரித்தவர் அவர். நிச்சயம் தமிழகத்தில் ஈழபிரச்சினையினை கொண்டுவந்தவர் அவரே, அவர் மூலமே ராமசந்திரன் கலைஞர் எல்லாம் ஈழசிக்கலில் நுழைந்து, பின் இந்திய அரசு நுழைந்து பல முயற்சிகள் நடந்தது. எல்லாம் புலிகளின் விபரீத புத்தியால் நாசமானது.

அவர் தமிழகத்தில் விதைத்த விதைதான் வளர்ந்தது, ஆனால் அவரை யார் கொன்றார்களோ அவர்களையே தீரர்கள், வீரர்கள் என சொல்லும் கூட்டம் இங்கு பின்னாளில் வந்தது. இதனை விட அறிவுகெட்டதனம் இருக்கவே முடியாது.

எது எப்படி ஆயினும் ஈழவரலாற்றில் மறக்கமுடியா பெருமகன் அமிர்ந்தலிங்கம், அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

Read more...

Friday, August 24, 2018

மாகாண சபைத் தேர்தலில் தமிழ் பிற்போக்கு இனவாத சக்திகளைத் தோற்கடிக்க வேண்டும்!

பதவிக்காலம் முடிவடைந்த சில மாகாண சபைகளுக்கு உரிய காலத்தில் தேர்தல் நடத்தாது அரசாங்கம் இழுத்தடித்து வருகிறது. இதே நேரத்தில் வட மாகாண சபை உட்பட வேறும் சில மாகாண சபைகளின் பதவிக் காலமும் இவ்வருட இறுதியில் முடிவடைய இருக்கின்றது. அவற்றின் தேர்தல்களும் உரிய காலத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

இப்போதைக்கு மாகாண சபைத் தேர்தல்களை அரசாங்கம் நடத்தாது என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சூசமாகச் சொல்லியும் விட்டார். சில நாட்களுக்கு முன்னர் கருத்துத் தெரிவித்த பிரதமர், மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என்பனவற்றுக்கு முன்னதாக நடத்தப்படும் எனச் சொன்னார். அடுத்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் எப்பொழுது நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரியும். அதன்படி பார்த்தால் இன்னும் இரண்டு வருடங்களுக்கு மாகாண சபைத் தேர்தல் இல்லை என்பது புலனாகும்.

சில வேளைளில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் கூட உரிய காலத்தில் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை அரசாங்கம் நடத்தாமல் இழுத்தடிப்பதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றது. அதில் முக்கியமானது பழைய முறையிலா அல்லது புதிய முறையிலா நடத்துவது என்பது. புதிய முறையில் நடத்தினால் அது சிறுபான்மை இனங்களுக்குப் பாதிப்பை உண்டாக்கும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சில தமிழ் கட்சிகள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. ஜே.வி.பி. ஒரு குட்டி முதலாளித்துவ சிங்கள தேசியவாதக் கட்சி என்ற போதிலும் அதுவும் கூட புதிய தேர்தல் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆக, எதிர்க்கட்சிப் பதவியை வைத்துக்கொண்டு, அதனால் வரும் சுகபோகங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கிற தமிழரசுக் கட்சி ஒரு தேசிய சிறுபான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய போதும், ஐ.தே.க. அரசாங்கத்துடன் உள்ள வர்க்க – அரசியல் ஐக்கியம் காரணமாக புதிய தேர்தல் முறைக்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல், மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிப்பதை எதிர்க்காமல் மௌன அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாமல் இழுத்தடித்து வருவதற்கு தேர்தலை பழைய முறையில் நடத்துவதா அல்லது புதிய முறையில் நடத்துவதா என்ற நடைமுறைப் பிரச்சினைகளை விட, அரசியல் ரீதியான காரணமே பிரதானமானது. அதாவது தேர்தலை நடத்தினால் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் படுமோசமான தோல்வியைச் சந்திக்கும் என்பதே காரணமாகும். இது எல்லோருக்கும் தெரிந்த இரகசியமாகும்.

நாம் முன்னரே சில தடவைகள் சுட்டிக் காட்டியது போன்று, இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து சில மாதங்களிலேயே மக்களிடம் செல்வாக்கை இழந்துவிட்டது. (அதற்குப் பல காரணங்கள், அதை அலசுவதல்ல இக்கட்டுரையின் நோக்கம்) அது அரசாங்கத்துக்கும் தெரிந்த காரணத்தால்தான், தமக்கு மக்கள் மத்தியில் என்ன நிலை இருக்கிறது என்று அறிவதற்கு தென்னிலங்கையில் சில பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு தேர்தல் நடத்திப் பார்த்தார்கள். அப்படி நடத்திய தேர்தல்கள் எல்லாவற்றிலுமே அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் இரண்டும் படுதோல்வியடைந்தன.

அதன் காரணமாக உள்ள+ராட்சித் தேர்தல்களை நடத்தப் பயந்து, இரண்டரை வருடங்களாக இழுத்தடித்து, பின்னர் தவிர்க்க இயலாத சூழலில் தேர்தலை நடத்தினார்கள். அத்தேர்தலில் முன்னரிலும் பார்க்கப் படுமோசமாகத் தோல்வியைத் தழுவினார்கள். அதன் காரணமாகவே இப்பொழுது மாகாண சபைத் தேர்தல்களை நடத்தப் பயந்து இழுத்தடித்து வருகின்றனர். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் எப்பொழுது தேர்தல் நடத்தினாலும் அரசாங்க கட்சிகள் இரண்டும் படுதோல்வியடையும் என்பதும், வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தவிர இதர ஏழு மாகாணங்களிலும் கூட்டு எதிரணி அமோக வெற்றி பெறும் என்பதும் நிதர்சனமான உண்மை.

இது ஒருபுறமிருக்க, மாகாண சபைத் தேர்தல்களை – குறிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாது இழுத்தடிப்பதில் தமிழ் அரசியல் தலைமைக்கும் இரகசியமான முறையில் விருப்பம் உண்டு. வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வட மாகாணத்தின் ஆயுள்காலத்தை நீடிக்கும்படி கோரி அரசாங்கத்தை இரகசியமாக அணுகியதாக சில மாதங்களுக்கு முன்னர் ஒரு தகவல் வெளியானது. இதுவும் தேர்தல் பயத்தின் காரணமாகத்தான். விக்னேஸ்வரனுடன் முரண்பாடு இருந்தாலும், தமது முரண்பாடு அம்பலத்துக்கு வருவதைத் தவிர்ப்பதற்கும், சில வேளைகளில் தேர்தலில் பின்னடைவு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும், சம்பந்தன் குழுவினருக்கும் இதில் உடன்பாடு உண்டு.

தற்போதைய சூழலில் வட மாகாண சபைத் தேர்தல் நடந்தால் (மேற்கத்தைய, இந்தியத் தரப்புகள் தலையிடாமல் இருந்தால்) சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு அணியாகவும், விக்னேஸ்வரன் தலைமையிலான இன்னொரு அணி தனியாகவும் களமிறங்கக்கூடிய சூழல் உண்டு. இதில் ஏதாவது ஒரு தரப்பு வெற்றி பெற்றாலும் கூட, பிற்போக்கு தமிழ் தேசியவாத சக்திகள் பலவீனமடையும் என்பது நிச்சயம். அதனால், பிரிந்து நிற்பது தமிழ் தேசிய நலன்களுக்கு பாதகம் என்று சொல்லி (தமிழ் தேசிய நலன்கள் என்பது தமிழ் மக்களின் நலன்கள் அல்ல, மாறாக தமிழ் மக்கள் மத்தியிலுள்ள அற்ப தொகையான பிற்போக்கு இனவாத மேட்டுக் குழாமினரின் நலன்கள் என்று அர்த்தம் கொள்க), உள் – வெளி சக்திகள் இவர்களை ஒன்றிணைந்து போட்டியிட வைக்கவே முயற்சிகள் நிகழும் என்பதும் உண்மை.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை, அங்கு தமிழ் மக்களை விட, முஸ்லீம் – சிங்கள மக்களின் கூட்டு எண்ணிக்கை அதிகம் என்பதால், அங்கு தமிழ் பிரிதிநிதித்துவத்தைப் பாதுகாக்க கட்சி வேறுபாடின்றி அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இது எவ்வளவு தூரம் வெற்றி பெறும் என்பது ஒருபுறமிருக்க, இது சரியான அணுகுமுறையா என்ற கேள்வியும் இருக்கின்றது.

ஏனெனில், கிழக்கு மாகாணம் மூவின மக்களும் வாழ்கின்ற பிரதேசம் என்ற யதார்த்தம் அங்கு உள்ளது. இந்த நிலைமையில் தேசியக் கட்சிகள் மூவின மக்களையும் உள்வாங்கி அரசியல் செய்கையில், இன (தமிழ் – முஸ்லிம்) அடிப்படையிலான கட்சிகள் தனித்து அரசியல் செய்வது சரியா, பயன் தருமா என்ற கேள்வி எழுகின்றது. இங்கும் கூட மக்களை ஏமாற்றவே இன அடிப்படையிலான கோசம் முன் வைக்கப்படுகின்றது.

ஏனெனில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழமைபோல தமிழ் தேசியவாதம் பேசி கடந்த தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றிபெற்ற பின்னர் என்ன செய்கிறது? தமிழ் தேசியத்தைக் கைவிட்டுவிட்டு, மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளால் இலங்கையில் நிறுவப்பட்ட வலதுசாரி அரசாங்கத்தைப் பாதுகாக்க எவ்வித நிபந்தனையுமின்றி அரசாங்கத்தை ஆதரித்து வருகின்றது.

முஸ்லிம் கட்சிகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அனைத்து முஸ்லிம் கட்சிகளும் இஸ்லாமிய தேசியவாதத்தை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெற்றாலும், பின்னர் பதவிக்கு வரும் எந்த அரசாங்கமாக இருந்தாலும் அவற்றுடன் இணைந்துவிடும் வழக்கத்தைக் கொண்டுள்ளன.

எனவே உண்மை என்னவென்றால், தமிழ் – முஸ்லிம் தலைமைகள் தத்தமது தேசியவாதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்தாலும், அவர்கள் அந்த இனங்களில் உள்ள ஏகப் பெரும்பான்மையான மக்களின் நலன்களைப் பிரதிபலிக்கவில்லை. அந்த இனங்களிலுள்ள ஒரு குறிப்பிட்ட வரக்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்காக முழு மக்களினதும் பிரதிநிதிகள் போல் நடித்துவிட்டு, பின்னர் சிங்கள முதலாளித்துவ ஆளும் வர்க்கத்துடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ இணைந்து விடுவர். இதுதான் ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. மக்கள் இதை விளங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து ஏமாந்து வருகின்றனர்.

குறிப்பாக, இலங்கைத் தமிழ் மக்கள் இந்த விடயத்தில் வடிகட்டின முட்டாள்களாகவே தொடர்ந்து இருந்து வருகின்றனர். ஏனெனில், தென்னிலங்கையில் மாற்றங்கள் நிகழ்ந்தாலும், தமிழ் மக்களைப் பொறுத்தவரை “சுற்றிச் சுற்றி சுப்பற்றை கொல்லைக்குள்ளே”தான் நின்று உழல்கின்றனர்.

முன்பு தமிழரசு – தமிழ் காங்கிரஸ் என்ற ஒரே வர்க்க, ஒரே அரசியலின் இரண்டு பிரிவுகளுடனும் ‘கன்னை’ பிரிந்து நின்றனர். இப்பொழுது சம்பந்தன் அணி – விக்னேஸ்வரன் அணி என்ற அதே விதமான இரண்டு அணிகளுக்கிடையிலும் கன்னை பிரிந்து நிற்கின்றனர். இங்கேதான் தமிழ் மக்கள் மீண்டும் தவறு விடுகின்றனர்.

அதாவது, சம்பந்தன் அணி – விக்னேஸ்வரன் அணி என்பது அரசியல் ரீதியாக வெவ்வேறானவை அல்ல. இரண்டினதும் அரசியல் அடிப்படை ஒன்றுதான். அதாவது, இரண்டுமே பிற்போக்கு தமிழ் தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டவை. இரண்டினதும் சமூக அடிப்படை யாழ்.மையவாத, நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ, உயர்சாதி மேட்டுக்குழாமினர்தான். இவர்கள் இருவருமே ஏகாதிபத்திய விசுவாசிகள். இப்பொழுது இவர்களுக்கிடையில் உள்ள முரண்பாடு சம்பந்தன் குழு அரசாங்கத்தை ஆதரிக்கின்து, விக்னேஸ்வரன் குழு எதிர்க்கின்றது என்பதுதான்.

இது தற்காலிகமானது. நாளைக்கே தேர்தல் நடந்து கூட்டு எதிரணி ஆட்சிக்கு வந்தால் (பெரும்பாலும் அதற்கான வாய்ப்புகள்தான் உண்டு), சமபந்தன் அணி அரச எதிர்ப்பாளர்களாக மாறும். அப்பொழுது சம்பந்தன் அணிக்கும், விக்னேஸ்வரன் அணிக்கும் இடையில் இப்பொழுது நிலவுகின்ற ஒரேயொரு முரண்பாடும் அகன்றுவிடும். விக்னேஸ்வரன் இப்பொழுது சம்பந்தன் அணியை எதிர்ப்பது, தமிழ் அரசியல் அதிகார பீடத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவேயன்றி, தமிழ் மக்களினதோ, தமிழ் தேசியத்தினதோ நலன்களுக்காக அல்ல. ஆனால் அதற்காக தமிழ் தேசியவாதம் பற்றி உரக்கக்கூவி மக்களை ஏமாற்றுகிறார்.

இந்த நிலைமையில், தமிழ் மக்களின் அரசியல் போக்கில் அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டுள்ளது. இதை வரப்போகும் மாகாண சபைத் தேர்தலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அதற்கான ஒரு நல்ல சூழல் தோன்றியுள்ளது. அதிகாரப் போட்டி காரணமாக சம்பந்தன் – விக்னேஸ்வரன் குழுவினரிடையே தோன்றியுள்ள முரண்பாடு அதற்கான வாய்ப்பைத் திறந்துவிட்டுள்ளது. அதைப் பயன்படுத்த வேண்டியது தமிழ் மக்கள் மத்தியிலுள்ள உண்மையான மாற்று சக்திகளின் கடமையாகும்.

இதற்கு முதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று விக்னேஸ்வரன் அணிதான் என்ற மாயையை மக்கள் மத்தியில் உடைத்தெறிய வேண்டும். அவர்கள் இருவரும் ஒருவரேதான். உண்மையான மாற்று, தமிழ் மக்கள் மத்தியிலுள்ள ஜனநாயக – முற்போக்கு சக்திகள்தான் என்பதை நிரூபிக்க வேண்டும். நிரூபிப்பதன் மூலமே மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். (இதற்கு ஒரு உதாரணம் – சிங்கள மக்களிடையே ஐ.தே.கவின் பாரம்பரிய எதிரி சிறீ.ல.சு.க. தான் என்ற நிலை இருந்தது. ஆனால் சிங்கள ஜனநாயக – முற்போக்கு சக்திகள் சரியான முறையில் வேலை செய்ததின் மூலம், ஐ.தே.கவுக்கு மாற்று சிறீலங்கா பொதுஜன பெரமுன தான் என்ற இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளனர்)

அதற்கான முதல் பணியாக, கடந்த காலத்தில் ஏற்பட்ட வேண்டத்தகாத, கசப்பான சிறுசிறு முரண்பாடுகளை ஒருபக்கம் தூக்கி வீசிவிட்டு, தமிழ் மக்கள் மத்தியிலுள்ள உண்மையான ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள் (கட்சிகள்) ஒன்றிணைந்து ஒரு பரந்துபட்ட முனினணியைத் தோற்றுவிக்க வேண்டும். இதை வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதன் மூலம் உலகம் மாறினாலும், தமிழ் மக்களின் பிற்போக்குத் தலைமை ஒருபோதும் மாறாது என்ற சூத்திரத்தைப் பொய்யாக்க வேண்டும்.

இது சாதிக்க முடியாதது அல்ல. எல்லா ஜனநாயக – முற்போக்கு சக்திகளும் மனது வைத்தால் இந்த அற்புதத்தை நிகழ்த்த முடியும். இதற்கான பொன்னான வாய்ப்பு – குறிப்பாக வட மாகாணத்தில் இப்பொழுது உருவாகியுள்ளது. அதைப் பற்றிப் பிடிப்பது நம் எல்லோரினதும் கடமை.

வானவில் இதழ் 92

Read more...

யாழ்ப்பாணத்தை பௌத்தமயம் ஆக்குகின்ற எந்த வேலை திட்டமும் மேற்கொள்ளப்படவே மாட்டாதாம்! நாக விகாரையின் விகாராதிபதி

யாழ்ப்பாண மாவட்டத்தை பௌத்தமயம் ஆக்குகின்ற எந்தவொரு வேலை திட்டமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று யாழ். நாக விகாரையின் பிரதம விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல தேரர் தெரிவித்தார். இவர் இன்று வெள்ளிக்கிழமை காலை நாக விகாரையின் கேட்போர் கூடத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு மேலும் பேசியவை வருமாறு:-

யாழ்ப்பாண மாவட்டத்தை பௌத்தமயம் ஆக்குகின்ற எந்தவொரு வேலை திட்டத்திலும் நாம் ஈடுபடவில்லை. மாறாக யாழ்ப்பாண மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான உறவு பாலமாகவே நாம் செயற்படுகின்றோம்.

சமய அடிப்படையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எமது விருப்பமாக உள்ளது. குறிப்பாக பௌத்த சமயத்தோடு இணக்கப்பாடான சூழல் யாழ். மாவட்டத்தில் உருவாக வேண்டும் என்றே விரும்புகின்றோம். மாறாக விகாரைகளை கட்ட வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படவில்லை.

பௌத்த காங்கிரஸுக்கு சொந்தமான காணிகள் யாழ். மாவட்டத்தில் பல இடங்களிலும் உள்ளன. அவற்றில் அறிந்தோ, அறியாமலோ மக்கள் குடியிருப்புகளும் இடம்பெற்று உள்ளன. இருப்பினும் இங்கு குடியிருக்கின்ற மக்களை வெளியேற்றுகின்ற எந்தவொரு எண்ணமும் எமக்கு கிடையாது. அதே விதத்தில் பொது தேவைகளுக்காக சில கட்டிட நிர்மாணங்களும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அவற்றையும் நாம் இடிக்க விரும்பவில்லை. எமது மேற்பார்வையில் அவற்றின் வழக்கமான செயற்பாடுகளோடு நல்லிணக்க மையங்களாக அவை இயங்க முடியும். இதே நேரத்தில் பௌத்த காங்கிரஸிக்கு சொந்தமான இடங்களில் பௌத்த அடையாளங்கள் சிலவற்றை பேணுவது உசிதமானதாக இருக்கும் என்பது எமது விசுவாசம் ஆகும்.

Read more...

Thursday, August 23, 2018

ஐ.தே.க எம்பி யிடம் வேலை பெற்றுத்தருவதாக பணம் பெற்று ஏமாற்றியதாக முன்னாள் புலி கைது.

நடராஜா குகராஜா என்பவன் கடற்புலிகள் பிரிவில் இயங்கியவன். இலங்கை அரசிடம் சரணடைந்த பின்னர் மஹிந்த ராஜபக்ச அரசின் எடுபிடிகளாக மாறிய பல நூற்றுக்கணக்கான புலிகளில் இவனும் ஒருவன். அக்காலகட்டதில் யாழ் கட்டளைத் தளபதியாகவிருந்த ஹத்துருசிங்கவினால் வழிநடத்தப்பட்ட இவன் டண் ரிவி யின் புகைப்படப்பிடிப்பாளராக இணைக்கப்பட்டான்.

ஊடவியலாளன் என்ற முகமூடி அணிந்திருந்த இவன் தொடர்பில் பல்வேறு சர்சைகள் காலம்காலமாக எழுந்திருந்தாலும், அவ்வப்போது தப்பித்துவந்துள்ளான்.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலாவினூடாக வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குகன் என அழைக்கப்படுகின்ற குகராஜ் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மல்லாகம் நீதிமன்ற உத்தரவின் பெயரில் 14 நாட்கள் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளான். இவனுடன் விஜயகலா மகேஸ்வரனின் உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இக்கப்பம் பெறுதல் தொடர்பில் விஜயகலாவிற்கு தொடர்புகள் உண்டா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை முடக்கியுள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மேற்குறித்த இருவரும் இணைந்து பாதிக்கப்பட்ட நபருக்கு அரச திணைக்களமொன்றில் வேலை பெற்றுத்தருவதாக பெண் ஒருவரின் வங்கிக்கணக்கிற்கு ஐந்து லட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளிலிருந்து ஊர்ஜிதமாகியுள்ளது.

மேலும் குகன் எனப்படுகின்ற குகராஜ் என்பவன் இதற்கு முன்னர் இளைஞர் ஒருவரை மேற்குலக நாடொன்றிற்கு அனுப்பி வைப்பதாக ஆறு இலட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும் அது தொடர்பில் பொலிஸில் முறையிட்டபோது, காவல்துறை உயர்மட்ட தொடர்புகளை பயன்படுத்தி அவன் கைதிலிருந்து தப்பித்துக்கொண்டதாக இணையத்தளம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

Wednesday, August 22, 2018

விக்னேஸ்வரனை தொடர்ந்தும் பொறுத்துக்கொள்ள மாட்டாராம் மாவை! பிரித்தானிய தூதரக அதிகாரியிடம் முறைப்பாடு!

யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த பிரித்­தா­னிய உயர் ஸ்தானி­க­ரா­ல­யத்தின் அர­சியல் தலைமை அதி­காரி நீல் கவானாக் சந்தித்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனா­தி­ராஜா, வடக்கு மாகாண சபை உரு­வாக்­கப்­பட்டு ஐந்து ஆண்­டுகள் ஆகின்­றன. எனினும் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் கூறப்­பட்ட பல விட­யங்கள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. கூட்­ட­மைப்பு மாகாண சபையில் ஆளுங்­கட்­சி­யாக உள்­ள­போதும் அது செய­லற்­ற­தா­கத்தான் காணப்­ப­டு­கின்­றது. தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றுகின்றதோர் கூடமாகவே வடமாகாண சபை காணப்படுகின்றது. மக்­க­ளுக்­கான சேவை­யினை செய்­ய­வில்லை. அர­சியல் தீர்வு மற்றும் போரினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு அடிப்­ப­டைத்­தே­வை­களை அடை­யாளம் காணுதல், வேலை­வாய்ப்­புக்­களை உரு­வாக்­குதல், வாழ்­வா­தார உதவித் திட்­டங்கள் அடை­யா­ளப்­ப­டுத்­துதல் போன்ற விட­யங்­களில் மாகாண சபை முறை­யாக செயற்­ப­ட­வில்லை என முறையிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தூதரக அதிகாரி வினவியபோது, தமிழ்த் ­தே­சி­யக்­கூட்­ட­மைப்பும் மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை முழு­மை­யாக நிறை­வேற்­ற­வில்லை என்றும் அதன் காரணமாக தாம் பலத்த விமர்சனத்திற்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்த அவர் தம்மை விமர்சிப்பவர்கள் தங்களுக்கு மாற்றுவழி ஏது என்பதை தெளி­வாகக் குறிப்­பி­டா­த­வர்­க­ளாக உள்­ளார்கள் என சிறுபிள்ளைத்தனமாக கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது. மாற்றுவழி தெரியாத தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதற்கு அரியாசனம் என்ற கேள்வியை நிட்சயமாக தூதரக அதிகாரி கேட்டிருக்கலாம் என மக்கள் நம்புகின்றனர்.

மாகாண சபை­யினால் எதிர்­பார்க்கப்­பட்ட விட­யங்கள் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பது அனை­வ­ருக்கும் தெரியும் என்று தெரிவித்துள்ள மாவை சேனாதி ராஜா, அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்கும் அழிந்த தேசத்­தினைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும். மக்­களின் தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்கும் அடுத்த மாகாண சபை தேர்தலில் போட்­டி­யி­டுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மக்கள் மத்­தியில் விமர்­ச­னங்கள் இருந்­தாலும் ஒரு சில விட­யங்கள் நடை­பெற்­றுள்­ளன. குறிப்­பாக அரசினால் விடுவிக்கப்பட்டுள்ள நிலங்கள் மற்றும் வீட்டுத் திட்­டங்கள் போன்­றவற்றை இம்முறை எமது அரசியல் மூலதனமாக்கவுள்ளோம் என்றும் அவர் தெரிவிதுள்ளதாக அறியமுடிகின்றது.



Read more...

Tuesday, August 21, 2018

அல்கொய்தாவின் ரமஸி யூசுப் போன்ற கொலை வெறியனே ஒற்றைக்கண் சிவராசன். ஸ்ரேன்லி ராஜன்.

அல்கய்தாவின் கதையினை படித்தவர்களுகு தெரியும் அதில் ஒரு இரக்கமில்லா கொலைகாரன் இருந்தான் அவன் பெயர் ரம்ஸி யூசுப். முதன் முதலில் அமெரிக்க இரட்டை கோபுரத்தை 1994ல் தகர்க்க தாக்கியது, கென்ய தான்சானிய தாக்குதல், பிலிப்பைன்ஸில் போப்பாண்டவரை கொல்ல முயன்றது என அவனின் அட்டகாசம் அதிகம், பின்பு அமெரிக்கா பிடித்து அவனை அமெரிக்க தனி தீவில் அடைத்திருக்கின்றது, மகா ஆபத்தானவன் அவன்.

அவனை போலவே புலிகளில் ஒருவன் இருந்தான் அவன் பெயர் சிவராசன், ஒற்றைகண் சிவராசன், அவன் இயற்பெயர் பாக்கியநாதன், புலிகளுக்கு யாரையாவது கொல்லவேண்டும் என்ற கொள்கைதான் மாறாதே தவிர பெயர் மாறிகொண்டே இருக்கும்.

ஈழத்தில் புலிகளுக்க்காக பல கொலைகளை செய்தவனை பத்மநாபா கொலைக்காக தமிழகம் அனுப்பினார் பிரபாகரன்.

இங்கு வந்தவன் தன் சக புலியினை மாணவனாய் நடிக்க வைத்து பத்மநாபாவிடம் உதவி கோர செய்து அப்படியே அவர் இருப்பிடத்தை கண்டுபிடித்து சென்னை சூளமேட்டில் பத்மநாபா மற்றும் 13 பேரை கொடூரமாக கொன்றான். அன்றிரவு அவனை தமிழக போலிஸ் பிடித்தது, ஆயினும் மேலிட உத்தரவுபடி விடுவிக்கபட்டான். மேலிடம் என்றால் அன்று திமுக ஆட்சி, 1989ல் கலைஞர் வந்து அமைதிபடை எல்லாம் திரும்பெற்று அந்த படையினை கூட வரவேற்கமாட்டேன் என தேசதுரோகம் செய்த காலங்கள்.

ஆம் ஒரு முதல்வராக இருந்து கலைஞர் அப்படி செய்தது நிச்சயம் தேசதுரோகம் சந்தேகமில்லை, ஆயினும் விபிசிங் அரசு கலைஞரை டிஸ்மிஸ் செய்யவில்லை. முதல்வரே தங்களுக்கு சாதகம் எனும் நிலையில் புலிகள் பேயாட்டம் ஆடினர், சிவராசன் பத்மப்நாபா கொலைக்கு பின்னும் இங்கு சில கொலைகளை செய்தான், தமிழக காவல்துறையினரையே தாக்கினான் என்றெல்லாம் செய்திகள் வந்தன‌. எல்லாம் அன்று வைகோ கலைஞருடன் இருந்த தைரியம், முரசொலிமாறன் புலிகளுக்கு காட்டிய அனுதாபம். இந்த தைரியத்தில் தமிழகத்தை ஈழமாகவே நினைத்து சுற்றிவந்தான் சிவராசன், அவனுக்கு இங்கு எந்த தடையுமில்லை.

இந்நிலையில்தான் ராஜிவினை கொல்லும் பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கபட்டது, தீக்குழந்தை என பெயரிடபட்ட தனுவும் மற்றவர்களும் இங்கு வந்தனர். வழக்கபடி படகில் வேதாரண்யம் வந்த சிவராசன் கடத்தல் தங்கத்தை காசாக்கி சதி வேலையினை தொடங்கினான். இங்கு அவனின் கும்பலில்தான் முருகன் இருந்தான், பேரரிவாளன் இருந்தான் , ஹரிபாபு இருந்தான், ஸ்டூடியோ சபாரத்தினம் இருந்தார். இன்னும் பலர் இருந்தனர்.

சிவராசனின் திட்டம் முதலில் நளினிக்கு தெரியவில்லை, ஆனால் பேரரிவாளன் போன்றவருக்கு தெரிந்தது. காரணம் பேரரிவாளன் இலங்கை சென்று புலிகளை சந்தித்தவர். காரியம் முடிந்ததும் இலங்கைக்கு செல்ல வேண்டியவர் பட்டியலில் பேரரிவாளன் ஹரிபாபு பெயர் எல்லாம் இருந்தது.

பத்மநாபா போல் அல்லாமல் ராஜிவ் கொலை மிக சிரமாக இருந்தது, கூடவே கலைஞர் அரசு டிஸ்மிஸ் செய்யபட்ட நேரம் என்பதால் எங்காவது பேசினால் ஈழதமிழ் காட்டிகொடுத்துவிடும் என்பதாலும் நளினி , பேரரிவாளன் போன்றவர்களை பயன்படுத்திகொண்டான் சிவராசன்.

இது போக தமிழக காங்கிரஸிலும் அவன் கரங்கள் ஊடுருவின, ராஜிவினை புலிகள் கொல்வார்கள் என கொஞ்சமும் நம்பாத காங்கிரசாரில் சிலர் அவன் புலிகளால் பாதிகபட்ட தமிழன் என்றே நம்பினர். அவனும் அப்படியே நடித்து பலரை ஏமாற்றினான். அப்படியே விபி சிங் நடத்திய கூட்டத்தில் ஒத்திகையும் பார்த்து கொண்டான்.

பின் ராஜிவ் கொலையினை மிக நுட்பமாக திட்டமிட்டு அதை நடத்தியும் முடித்தான். அதுவும் சென்னையில் ராஜிவ் தப்பினால் கிருஷ்ணகிரி அங்கும் தப்பினால் டெல்லியில் கொல்ல இன்னொரு பெண் ஆதிரை என ஏற்பாடு செய்திருந்தான். ராஜிவ் திருப்பெரும் புதூரிலே சிக்கினார்.

கென்னடி கொலைபோல மர்மமான கொலை என்றாலும் சிவராசன் எதில் சிக்கினான் என்றால் இரு விஷயங்கள். முதலில் பத்மநாபா கொலை போல அல்லாமல் இங்கு ராஜிவ் கொலைக்கு உள்ளூர் ஆட்களை பயன்படுத்தியது. இரண்டாவது அந்த ஹரிபாபுவின் கேமரா.

இரண்டாவது விஷயம்தான் மகா கொடுமை, முதலில் குண்டு வைக்கும் இடம் தொடர்பாக சில போட்டோங்களை அனுப்ப அவன் ஹரிபாபுவினை கூட்டிகொண்டு அலைந்தான், ஆனால் கடைசி நொடியிலும் ஏன் என்றால் அங்குதான் புலிகளின் கோழைத்தனம் தெரிந்தது.

பிரபாகரனுக்கு விசித்திரமான மனநோய் இருந்தது, தன் எதிர்களின் கடைசி நொடியினை அவர் பார்த்து திருப்தி அடைவது அவரின் ஸ்டைல் அப்படித்தான் இந்த படங்களும் எடுக்கபட்டன‌.

குண்டுவெடிப்பின் வீரியம் சிவராசனுக்கு தெரிந்தும் அவனை அனுமதித்தான் , ஆனால் ஆர்வ கோளாறில் உட்சென்று உயிர்விட்டான் ஹரிபாபு. அந்த கலவரத்தில் கேமரா பற்றி மறந்துவிட்டான் சிவராசன்.

நீதி அந்த கேமரா வடிவில் துப்பு துலக்க உதவியது. அதுவரை புலிகள் கண்ணீர் வடித்தனர், கிட்டுவோ லண்டனில் இருந்து முடிந்தால் கொலைகாரர்களை இந்தியா கண்டுபிடிக்கட்டும் என எகத்தாளம் செய்துகொண்டிருந்தான்.

இந்தியா தீவிரமாக துப்பு துலக்கியது, பேரரிவாளன் நளியின் அண்ணன் அச்சகத்தில் இருந்த புலிகளின் குகையில் எனும் வீடியோக்கள் எல்லாம் சிக்கின‌. அதில் சிவராசனின் வீடியோ, வைகோ ஈழம் சென்ற வீடியோ எல்லாம் இருந்தது, விஷயம் உறுதிபடுத்தபட்டபின் அவனை இந்திய விசாரணை குழு தீவிரமாக தேடியது.

புலிகளின் பெயர் அடிபட ஆரம்பித்தவுடன் அவனை காப்பாற்றும் முயற்சியினை பிரபாகரன் கைவிட்டார். இந்திய குழு இலங்கைக்கு செல்லும் வயர்லெஸ் தொடர்புகளை ஒட்டுகேட்டபொழுது சிவராசனின் படுபயங்கர திட்டம் வெளிதெரிந்தது.

ஆம், பூந்தமல்லியில் இருந்த ராஜிவ் கொலை விசாரணை அலுவலகத்தை தாக்கி கார்த்திகேயனை கொல்ல அவன் திட்டமிட்டது எல்லாம் தெரிந்தது. எவ்வளவு தைரியம்? யார் கொடுத்த தைரியம் என்றால் சாட்சாத் திமுகவும், திகவும் கொடுத்த தைரியம். தமிழகத்தில் புலிவேட்டை தொடங்கியது, 30க்கும் மேற்பட்ட புலிகள் சயனைடு குடித்தனர், திமுக உறுப்பினர் எல்லாம் கைதாயினர், திமுக கனத்த அமைதி.

இனி தமிழகம் தன்னை காப்பாற்றாது என உணர்ந்த சிவராசன் பெங்களூர் தப்பினான், அதுவும் டாங்கர் லாரியில் அவனும் சுபாவும் தப்பினர். இங்கு பேரரிவாளன், நளினி உட்பட பல குடும்பங்களின் சீரழிவுக்கு காரணமான சிவராசன் அங்கும் ஒரு குடும்பத்தை கெடுத்தான். அவன் பெயர் ரங்கநாத். ரங்கநாத் ஐரோப்பாவில் வசித்தபொழுது எப்படியோ புலிகளிடம் சிக்கிகொண்டார், அந்த தொடர்பில் அவரை பிடித்த சிவராசன் வலுகட்டாயமாக பயன்படுத்தினான்.

இந்தியா முழுக்க அவனை காவல்துறை தேடிகொண்டிருக்க அவனோ பெங்களூர் அருகே புறநகரில் பதுங்கி இருந்தான், துப்பு கிடைத்த காவல்துறை வளைத்தது. கமாண்டோபடை வரும் வரை ரகசிய காவல் இருந்தார்கள், இந்திய வழக்கபடி கமாண்டோ படை தாமதமாகவே வந்தது. முதலில் அவனுக்கு சந்தேகம் வராதவாறுதான் வளைத்தார்கள் ஆனால் அங்கு வந்த டெம்போ ஒன்று பழுதானவுடன் சந்தேகபட்டு முதலில் தாக்கியது சிவராசன் குழு. சண்டை வெடித்தது, கமாண்டோ களமிறக்க சில தாமதாமாக ஆவணங்களை எல்லாம் எரித்துவிட்டு தற்கொலை செய்தான் சிவராசன்.

ஆம் இதே ஆகஸ்டு 20, அன்று ராஜிவ் காந்தியின் பிறந்த நாள். ராஜிவ் கொல்லபட்டு 3 மாதத்திற்குள் மிக சரியாக ராஜிவ் பிறந்தநாள் அன்று சிவராசனின் கதை முடிக்கபட்டது.

ஈழபுலிகளில் மிக மிக கொடூரமானவன் சிவராசன், யாரும் செய்ய துணியாத கொடூரங்களை எல்லாம் சர்வ சாதாரணமாக செய்தவன். புலிகளின் பயிற்சி அப்படி இருந்திருக்கின்றது. அவனை கொண்டாடிய புலி இயக்கம் அவனாலே அழிந்தது, அவனை ஆதரித்த பாவத்திற்காக நளினி குடும்பம் அழிந்தது. பேரரிவாளனின் தாயார் இன்றுவரை கண்ணீர் விடுகின்றார். தமிழகத்தில் புலி இயக்கமே அவனின் செய்ய கூடாத செயலால் கருவருக்கபட்டது. பெங்களூர் ரங்கநாத் குடும்பம் அவனால் பிரிந்தது.

புலிகளுக்கு கொல்ல , அழிக்கவே தெரியும் யாரையும் வாழவைக்க தெரியாது என்பதற்கு சிவராசன் பிரபாகரனை விட பெரும் உதாரணம். இவ்வளவு நடந்தும் பேரரிவாளன் தாயாரோ, நளியோ யாராவது சிவராசனை கண்டித்தோ அவனை அனுப்பிய பிரபாகரனை கண்டித்தோ ஒருவார்த்தை பேசியிருப்பார்களா?

ஏன் பேசவில்லை? ஒன்று அவர்களிடமிருந்து பெற வேண்டியதை பெற்று பேசாமல் இருக்க வேண்டும் அல்லது நாங்கள் செய்தது சரி சட்டத்தின் ஓட்டையில் எங்களை விடுங்கள் என மறைமுகமாக சொல்லவேண்டும்.

அவர்கள் இந்த இரண்டையுமே செய்திருக்கின்றார்கள் பின் எப்படி அவர்களை விடுவிப்பார்கள்.

சிவராசன் சந்தித்த திமுகவினர் ஏராளம் உண்டு அதில் முக்கியமானவர் வைகோ . அவரை போல இன்னும் நிறையபேர் உண்டு. சிவராசனின் கூட்டாளியாக கருதபட்ட, யார் மூலம் சிவராசன் தப்பி செல்ல முயன்றானோ அந்த சந்திராசாமியினை யாரும் தொடவில்லை. சந்திரசாமி பெரும் ஆயுத வியாபாரி, அந்த பெல்ட் வெடிகுண்டு இப்படி வந்திருக்கலாம் என்பது யூகம்.

சுப்பிரமணியன் சாமி என்பவரும் சிக்கவில்லை, ராஜிவிற்கு கருப்பு பூனை படையினை வாபஸ் வாங்கியதே அவர்தான். இந்த புலி, வைகோ, சு.சாமி, சந்திரசாமி எல்லோருக்கும் இடையேயான ஒற்றுமை அந்நிய நாட்டு கைகூலிகள். இதில் சிவராசன் செத்தான் மற்றவர்களை ஏதோ ஒரு சக்தி காப்பாற்றிற்று. அவர்களை எல்லாம் வழக்கிலிருந்து ஒரு சக்தி காப்பாறிற்று, அதே வைகோ பின் மன்மோகன் அரசில் எல்லாம் இருந்தார். யாருக்கும் வெட்கமில்லை என்பது இதுதான், அரசியல்வாதிகள் அப்படித்தான்.

சிவராசனின் சாகசம் பற்றி அங்கிள் சைமனுக்கு இன்னும் தெரியாது போல, இல்லாவிட்டால் சிவராசனுக்கு கண்ணாடி வாங்கி கொடுத்ததே நான் என கிளம்பிவிடுவார். இங்கு நடமாடவிட்ட பாவத்திற்காக பலரை கொன்ற , பல குடுமபங்களை சீரழித்த அந்த சிவராசனை போன்ற ஈழ ஈனதமிழர்கள் இனி பிறக்காமலே போகட்டும்.

கொடுமதியாளர்களாலும் கொலைகாரர்களாலும் நிரம்பிய புலிப்படை, அதில் அரக்கனான சிவராசனை வளர்த்துவிட்டு அவனாலே அழிந்தும் போனது. 2009 சம்பவங்களுக்காக கலைஞரை திட்டமுடியாது. ஆனால் 1990 சம்பவங்களுக்காக அவரை திட்டாமல் இருக்கவும் முடியாது. ஆம் பத்மநாபா கொலைவழக்கிலே சிவராசனை பிடித்து சாத்தி இருந்தால், தா கிருட்டினன் கொலைவழக்கில் காட்டிய வேகத்தை பத்மநாபா கொலைவழக்கிலே காட்டி இருந்தால் ராஜிவ் கொலை நடந்திருக்காது. அந்த பழியில் இருந்து தப்பிய கலைஞர், செய்த பாவத்திற்கு தப்பிய கலைஞர் 2009ல் செய்யாத பாவத்திற்கு மாட்டிகொண்டார்.

சிவராசன் என்பவன் ராஜிவ் கொலையில் சம்பந்தபடாமல் இருந்தாலோ இல்லை கொல்லபடாமல் தப்பி இருந்தாலோ தமிழகம் அவனால் நாசக்காடு ஆகியிருக்கும். அப்படி ஒரு வெறிபிடித்த மிருகம் அவன்.

தமிழகம் சிந்தவேண்டிய‌ முழு இரத்தபழியினையும் தாங்கி, தன்னை கொடுத்து தமிழ்நாட்டை காப்பாற்றி இருக்கின்றார் ராஜிவ் காந்தி

இவ்வாக்கமானது ஸ்ரேன்லி ராஜன் என்பவரின் முகநூலிலிருந்து பெறப்பட்டது.

Read more...

தொழில் தருவதாகக் கூறி வேலையில்லா பட்டதாரிகளை ஏமாற்றும் திட்டம்! – வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்

தற்போதைய அரசாங்கம் ஆயிரக்கணக்கான வேலையில்லா பட்டதாரிக்களுக்கு பொய் கூறி அவர்களை தொடர்ந்தும் ஏமாற்றுவது இன்று நடைபெற்ற தொழில் வழங்கும் நிகழ்வின் மூலம் தெரிய வருகின்றதென ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் குறிப்பிடுகிறார்.

வேலையில்லா பட்டதாரிகள் அனைவருக்கும் வேலை வழங்குவதாகக் கூறிய தற்போதைய அரசாங்கத்தின் ஜனாதிபதியும் பிரதமரும் இன்று 4100 பட்டதாரிகளுக்கு மாத்திரம் தொழில் வழங்கி கண்காட்சி நடத்துகிறார்கள்.
2012 மார்ச் 31ம் திகதியின் பின்னர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியின் கீழ் மூன்று வருடங்களும் தற்போதைய மைத்திரி – ரணில் ஆட்சியின் கீழ் மூன்று வருடங்களும் என்ற வகையில் பட்டதாரிகளுக்கு 6 வருடங்கள் தொழில் இல்லாமலிருக்க நேர்ந்த்து.

ஆகவே 58000த்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தொழில் இல்லாமல் வரிசையில் காத்திருக்கின்றனர். ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் என்ற வகையில் 2013 வருடம் பட்டதாரிகளின் பிரச்சினைக்கு அரசாங்கத்திடம் தீர்வு கேட்டு போராடத் துவங்கியது. தொழில் வழங்குவதற்கான வருடாந்த வேலைத்திட்டமொன்று அவசியமெனவும், சகல பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்குமாறும் கேட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் தென்னே ஞானானந்த தேரர் மேலும் குறிப்பிட்டார்.

Read more...

Sunday, August 19, 2018

முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் உள்ளதா ? அரச புலனாய்வுத்துறையை கேள்விக்குட்படுத்தும் முன்னாள் புலி உறுப்பினர்.

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களும், கருணா அணியினர்களும் தப்பி ஓடியபோது அவர்களது ஆயுதங்களை முஸ்லிம்களிடம் விற்பனை செய்ததாகவும், அவ்வாறான ஆயுதங்கள் இன்றும் முஸ்லிம்களிடம் உள்ளதாகவும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலை புலி உறுப்பினர் பகிரங்கமாக கூறியுள்ளார்.

இவரது கூற்று இன்று அரசியல் மட்டத்தில் பாரிய விமர்சனங்களை தோற்றுவித்துள்ளதுடன் இதனை சாதாரணமான ஒரு பேச்சாக எடுத்துக்கொள்ள முடியாது. சிங்கள இனவாதிகள் தொடக்கம் மதத் தலைவர்கள் வரைக்கும் அரசியலில் தங்களை பிரபலப்படுத்துவதற்காக பாவிக்கின்ற ஒரு துரும்புதான் முஸ்லிம் மக்களாகும்.

அதுபோலவே அரசியலில் தமிழ் மக்கள் மத்தியில் தடம்பதிக்க முற்படும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் உள்ளதாக புரளியை கிளப்பிவிட்டு அதன்மூலம் பிரபலம் அடையவும், அரசியல் இலாபம் பெறுவதற்குமான முயற்சியா ? அல்லது இதற்குப்பின்னால் வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்று சிந்திக்க தோன்றுகின்றது.

இலங்கையின் அரச புலனாய்வு துறையினர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. விடுதலை புலிகள் பலமாக இருந்த காலங்களில் யாராலும் பிரவேசிக்க முடியாத அவர்களது கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் ஆழ ஊடுருவும் அணியினர்களை அனுப்பி புலிகளின் விமானப்படை தளபதி சங்கர் உட்பட பல முன்னணி தளபதிகளை கொலை செய்தார்கள்.

அத்தோடு துல்லியமான புலனாய்வு தகவலின் அடிப்படையிலேயே புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனை விமானத்தாக்குதல் மூலம் அழித்தார்கள்.

சர்வதேச பொலிசாரின் கண்களில் மண்ணை தூவிக்கொண்டு புனைப்பெயர்களில் நடமாடிய புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் கே.பி அவர்களை மலேசியாவில் அதிரடியாக கைது செய்து விசேட விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டுவந்தவர்கள்.

இவ்வாறு எத்தனையோ சாதனைகளை இலங்கை புலனாய்வு துறையினர்கள் செய்ததுடன், இறுதி யுத்த காலத்தில் கொழும்பில் புலிகளின் தற்கொலை தாக்குதல் நடைபெறாதவாறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள்.

இலங்கை அரசாங்கத்திடம் இப்படியான திறமையான புலனாய்வு துறையினர்கள் இருக்கும்போது முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் இருப்பது மட்டும் அவர்களுக்கு தெரியாமல் போனது எவ்வாறு ?

2004 இன் இறுதியில் கருணா அணியினர்கள் ஆயுதங்களை களைந்துவிட்டு தப்பி சென்றார்கள். அதுபோல் 2009 இல் இறுதி யுத்தம் நடைபெற்று புலிகள் இயக்கத்தின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இன்றைய நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களிடம் உள்ள ஆயுதங்களை களையவில்லை என்றும், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் கூறுவது நியாயமென்றால், கடந்த 2005 தொடக்கம் 2014 இறுதி வரைக்கும் மகிந்த ராஜபக்ஸவே இந்த நாட்டை ஆட்சி செய்தார். ஏன் மகிந்தவினால் முஸ்லிம்களின் ஆயுதங்களை கண்டுபிடிக்கவில்லை ? அல்லது களைய முடியவில்லை ?

புலனாய்வு துறையினர்கள் உட்பட அரச படையினர்களை மிகவும் திறமையாக வழி நடாத்திய அன்றைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சாவுக்கு இது தெரியாமல் போனது எவ்வாறு ?

குறித்த காலப்பகுதிக்குள் முஸ்லிம் மக்களை சிங்களவர்கள் தாக்கி அவர்களது பொருளாதாரத்தை அழித்தபோது இந்த ஆயுதங்களை அவர்கள் ஏன் பாவிக்கவில்லை ?

எனவே புனர்வாழ்வு பெற்ற ,முன்னாள் புலி உறுப்பினர்களின் இந்த அறிவிப்பானது பின்னணி அரசியல் நோக்கம் கொண்டதே தவிர எந்தவித உண்மையுமில்லை.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

Read more...

மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா? வை எல் எஸ் ஹமீட்

கடந்த இரண்டொரு வாரங்களாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சட்டத்தில் இடமுண்டு; என்ற கருத்து உலா வந்துகொண்டிருக்கின்றது. இன்றைய (19/08/2018) Sunday Times இலும் பேராசிரியர் G L பீரிஸ் மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்ததாக சில கருத்துக்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவை தொடர்பாக சற்று கண்ணோட்டம் விடுவோம்.

இங்கு வியாக்கியானத்திற்குட்படுத்தப்படுகின்ற பிரதான சரத்து 19 வது திருத்தத்தினூடாக மீள அறிமுகப்படுத்தப்பட்ட சரத்து 31(2) ஆகும். இது ஏற்கனவே இருந்தது. 18 வது திருத்தத்தினூடாக நீக்கப்பட்டது. அது மீண்டும் 19 வது திருத்தத்தினூடாக கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

இந்த சரத்து பின்வருமாறு கூறுகின்றது;

“ No person who has been twice elected to the office of President by the People, shall be qualified thereafter to be elected to such office by the people.”

அதாவது, “ இரு தடவைகள் மக்களால் ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்ட எவருக்கும் அதன்பின் அப்பதவிக்கு தெரிவுசெய்யப்படும் தகுதி இல்லை”. என்பதாகும்.

இங்கு பேராசிரியர் G L பீரிஸ் முன்வைக்கின்ற வாதம் ‘ இந்த சட்டம் ‘prospective’ வே தவிர ‘ retrospective’ அல்ல என்பதாகும். இச்சொற்களுக்குரிய நேரடித் தமிழ்ப்பதம் தெரியாது. இவற்றின் பொருள்; ‘prospective’ என்பது ஒரு சட்டம் அமுலுக்கு வந்தபின்னர் நடைபெறுகின்ற விடயங்களுக்கே அச்சட்டம் செல்லுபடியாகும். அதற்குமுன் நடைபெற்ற விடயங்களுக்கல்ல; என்பதாகும்.

‘ Retrospective’ என்பது சட்டம் பின்னர் இயற்றப்பட்டாலும் அதற்கு முன் நடந்த விடயங்களுக்கும் அது செல்லுபடியாகும்; என்பதாகும்.

உதாரணமாக முஸ்லிம்களுக்கு பலதார மணம்புரிதல் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. நாளை ‘ ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் முஸ்லிம்களுக்கும் செல்லுபடியாகாது’ என்று ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டால் அது prospective என்றால் சட்டம் அமுலுக்கு வரமுன் முடித்த பலதார திருமணங்கள் பாதிக்கப்படாது. புதிதாக முடிக்க முடியாது. ‘retrospective’ என்றால் சட்டம் கொண்டுவரமுன் முடித்த ஒன்று மேற்பட்ட திருமணங்களும் செல்லுபடியற்றதாகிவிடும்.

பொதுவாக சட்டத்தின் நிலைப்பாடு என்னவென்றால் ‘ எந்தவொரு சட்டமும் retrospective effect இருக்கின்றது என்று அதில் வெளிப்படையாக குறிப்பிடப்படாவிட்டால் அது ‘prospective’ யே ஆகும்.

(இதன்பின் இலகு புரிதலுக்காக prospective ஐ முன்னோக்கிய செயற்படுதன்மை என்றும் retrospective ஐ பின்னோக்கிய செயற்படுதன்மை என்றும் குறிப்பிடப்படும்.)

அதேநேரம் கிரிமினல் குற்றங்கள் தொடர்பாக ஆக்கப்படும் சட்டங்களுக்கு பின்னோக்கிய செயற்படுதன்மையை வெளிப்படையாகவும் வழங்குவதை அரசியலமைப்புச் சட்டம் தடைசெய்திருக்கின்றது.

ஏனைய சட்டங்களைப் பொறுத்தவரை அரசாங்கம் விரும்பினால் பின்னோக்கிய செயற்படுதன்மையை அதற்கு வெளிப்படையாக வழங்கலாம். அவ்வாறு குறிப்பிடாவிட்டால் அதற்கு ‘பின்னோக்கிய செயற்படுதன்மை இல்லை என்றும் முன்னோக்கிய செயற்படுதன்மை’ மாத்திரமே இருக்கின்றது; என்பதும் பொருளாகும்.

மேற்குறித்த அரசியலமைப்பு சரத்தில் பின்னோக்கிய செயற்படுதன்மை தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது மாத்திரமல்ல வியாயக்கியான விதிகளின்படி சாதாரண சட்டங்களுக்கு பின்னோக்கிய செயற்படுதன்மையை வழங்குவதுபோன்று அரசியலமைப்புச் சட்டத்திற்கு வழங்க முடியாது. அரசியலமைப்புச் சட்டம் எப்போதும் முன்னோக்கிய செயற்படுதன்மையையே கொண்டிருக்கின்றது; என்ற நிலைப்பாடு இருக்கின்றது.

இந்தப்பின்னணியில்தான் மேற்படி சரத்திற்கு பின்னோக்கிய செயற்படுதன்மை இல்லை; முன்னோக்கிய செயற்படுதன்மையே இருக்கின்றது. எனவே, மஹிந்த ராஜபக்ச இருமுறை ஜனாதிபதியாக இருந்தது 19வது திருத்தம் கொண்டுவரப்பட முன்னராகும். 19 வது திருத்தத்தின்பின் அவர் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படவில்லை. எனவே, அவருக்கு மீண்டும் போட்டியிடத் தடையில்லை. மைத்திரி தொடக்கம் எதிர்காலாத்தில் ஜனாதிபதியாகின்றவர்கள்தான் இருமுறைக்குமேல் தெரிவுசெய்யப்பட முடியாது; என்ற வாதத்தை பேராசிரியர் G L பீரிஸ் முன்வைக்கிறார்.

இது தொடர்பாக முன்னாள் பிரதம நீதியரசர் அவர்கள் மேற்படி வாதத்தை ஏற்றுக்கொண்டவராக, “ இரண்டு தடவைக்கு மேல் தெரிவுசெய்யப்பட முடியாது; என்றதடை ஏற்கனவே (1978ம் ஆண்டிலிருந்து) இருந்தாலும் அது 18வது திருத்தத்தின்மூலம் நீக்கப்பட்டுவிட்டது. என்வே 19வது திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட சரத்து ( பழையதாக இருந்தாலும்) புதியதாகவே கருதப்பட வேண்டும். எனவே முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இச்சட்டம் பொருந்தாது; என்ற கருத்தைத் தெரிவித்திருக்கின்றார்.

இவர்களின் கருத்தினதும் நிலைப்பாட்டினதும் ஏற்புடைத்தன்மை

மேற்குறித்த சரத்திற்கு பின்னோக்கிய செயற்படுதன்மை இல்லை; என்ற இருவரது கருத்துக்களும் முழுக்க முழுக்க ஏற்புடையதே. மறுதலிக்க முடியாது. அதேபோன்று, குறித்த சரத்து புதியதே என்ற முன்னாள் பிரதம நீதியரசரின் கருத்திற்கும் மறுப்பேதும் கூறமுடியாது. அதுவும் சரியான கருத்தே.

முரண்பாடு, “ எனவே மஹிந்த ராஜபக்ச மீண்டும் போட்டியிடுவதை இச்சரத்து கட்டுப்படுத்தவில்லை” என்ற அவர்களது நிலைப்பாட்டில்தான். அதாவது இச்சரத்திற்குரிய பொருள்கோடலில்தான் முரண்பாடு இருக்கின்றது. அப்பொருள் கோடலுக்கு இப்போது வருவோம்.

குறித்த சரத்தை இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம். ( two clauses).

“ No person ..... shall be qualified thereafter to be elected to such office by the People “ ( main clause).

அதாவது, “ எவருக்கும் அதன்பின் அப்பதவிக்கு மக்களால் தெரிவுசெய்யப்படும் தகுதி இல்லை” ( பிரதான பகுதி)

“........who has been twice elected to the office of President by the People.....”. ( subordinate clause)

அதாவது, “........யார் மக்களால் இருமுறை ஜனாதிபதிப் பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றாரோ அவர்.......”. ( அதன் உப பகுதி)

இங்கு கவனிக்க வேண்டியது, ஒரு குறிப்பிட்ட வகையானவர்கள் இச்சரத்து அமுலுக்குவந்த கணத்திலிருந்து மீண்டும் போட்டியடத் தகுதியற்றவர்களாகின்றனர்.

மையக்கேள்வி

இந்த முழுப்பிரச்சினைக்குமான மையக்கேள்வி, “ இந்த குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தவராக ஒருவர் இந்த சரத்து அமுலுக்கு வந்தபின் வரவேண்டுமா? அல்லது ஏற்கனவே அந்த வகையில் அடங்குகின்ற ஒருவரை இச்சட்டம் குறிப்பிடுகின்றதா? என்பதாகும்.

இங்கு பாவிக்கப்பட்டிருக்கின்ற உப பகுதி ( subordinate clause) என்ன காலத்தில் பாவிக்கப்பட்டிருக்கின்றது என்பதுதான் இங்கு முக்கியமானது. இந்த உப பகுதியின் தொழில் அந்த பிரதான பகுதியில் பாவிக்கப்பட்டிருக்கின்ற ‘ அவர்’ யார் என்பதை விவரிப்பதாகும்.

“.........who has been elected twice......”

இங்கு பாருங்கள் ‘ present perfect tense ‘ இல் இந்த clause பாவிக்கப்படுகின்றது. இந்தக் காலம் ஒரு சம்பவம் நிகழ்காலத்தில் நடந்து முடிந்திருக்க வேண்டும். அதாவது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

இங்கு நிகழ்காலமென்பது ‘ இப்பொழுதான்’ என்பதாகவும் இருக்கலாம். அல்லது முன்பு நடந்து தற்பொழுது என்கின்ற உணர்வை வழங்குவதாக இருக்கலாம். ( அதாவது there must be a sense in the present tense, but the action must be complete).

உதாரணமாக ‘I have had my lunch ‘ இது சற்றுமுன்னர் நடந்ததைக் குறிக்கும். நேற்று நடந்ததைக் குறிக்காது.

[மூன்று மாதங்களுக்குமுன் ஒரு கார் வாங்கினோம்.? இப்பொழுதும் சொல்லலாம் ‘ I have bought a car’ ‘ நான் ஒரு கார் வாங்கியிருக்கின்றேன்’ என்று. ( ஆனால் I have bought a car three months ago என்று கூறமுடியாது , இது இலக்கணத்தோடு தொடர்புபட்டது, இங்கு அவசியமில்லை).]

இங்கு அவதானத்திற்குரியது, அந்த சம்பவம் நிறைவுபெற்றிருப்பது.

எனவே, யாருக்கு மீண்டும் தெரிவுசெய்யப்படுவது தடையென்றால் ‘ 19 வது திருத்தம் அமுலுக்கு வந்ததன்பின் தெரிவுசெய்யப்படுகின்ற சமயத்தில் அவர் ஏற்கனவே இரண்டுமுறை தெரிவுசெய்யப்பட்டவராக இருக்கக்கூடாது.

மாறாக, இவர்கள் கூறுவது போன்று ‘ அவர் அவராக வருவதும் 19வது திருத்தம் அமுலுக்கு வந்ததன்பின்புதான் என்றால் ஆகக்குறைந்தது இச்சரத்து யதார்த்தத்தில் அமுலுக்கு வருவதற்கு பத்து வருடங்கள் எடுக்கும். அது பாராளுமன்றத்தின் எண்ணமாகவும் இருந்திருக்க முடியாது. வியாக்கியான விதிகளையும் கேலிக்கூத்தாக்கும்.

மட்டுமல்ல, கீதா குமாரசிங்கவின் வழக்கில் நீதிமன்றம் எடுத்துக்கொண்ட பிரதான கேள்வி தேர்தல் தினத்தன்று அவர் இரட்டைப் பிரஜாஉரிமை உடையவரா? என்பதே தவிர அவர் 19 திருத்தத்திற்குமுன் இரட்டைப் பிரஜாஉரிமை பெற்றாரா? பின்னர் பெற்றாரா? என்பதல்ல.

எனவே அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரும்போது ஒருவர் ஏற்கனவே இருமுறை தெரிவுசெய்யப்பட்டிருந்தால் போட்டியிடமுடியாது.

இவை இவர்களுக்குத் தெரியாததுமல்ல. இவையெல்லாம் ஒருவகை அரசியல் உத்திகளும் பிரச்சாரமுமாகும். . இதேபோன்றுதான் பழையமுறையில் மாகாணசபைத் தேர்தலை நடாத்த சட்டத்தில் இடமுண்டு என்றார்கள்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com