Sunday, May 29, 2016

ஒரு வருடத்தில் யாழ்ப்பாண கல்விநிலையை உயர்த்துவோம் – நீதிபதி இளஞ்செழியன்

நான் யாழ்ப்பாணத்திற்கு வரும் போது தண்டனைகள் தாம் சமூகத்தை திருத்தும் என நம்பிக் கொண்டு வந்தேன். ஏனெனில், முப்பது ஆண்டு கால யுத்தத்தின் அகோரம். மீண்டும் எங்களது சமுதாயம் மோசமான நிலைக்கு சென்றுவிடக் கூடாது. அதற்கு அனுமதிக்கவும் கூடாது. அதனைக் கட்டுப்படுத்துவதற்கு காலம் தான் பதில் சொல்லும் என்று சொல்லிக்கொண்டிருக்கவும் முடியாது.

திட்டமிட்டு, குறிக்கப்பட்ட காலவரையறைக்குள் யாழ்ப்பாணத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்ற அவாவில் தான் கல்முனையிலிருந்து யாழ். மேல்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்று வந்தேன். செய்கின்றேன், செய்துகொண்டிருப்பேன். செய்து முடிக்கும் வரையும் ஓய மாட்டேன். இதனை நான் உங்களுக்கு கூறிவைக்க விரும்புகின்றேன்.

எந்த தடங்கல்கள் வந்தாலும், நான் நேர்ப் பாதையில் செல்கின்றேன். குறுக்குப் பாதையில் வரும் தடைகள் அத்தனையினையும் வெட்டிக்கொண்டு போவேன். எங்களது சமூகம் நீதி நியாயமாக வாழவேண்டும். அதற்கு நீதி நியாயமான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். சட்ட ஒழுங்கிற்கு கட்டுப்படும் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இந்த கோணத்தில் எங்களது பணி அமைந்திருக்கின்றது.

பட்டம் பதவிகள் வீட்டை அலங்கரிப்பதற்கல்ல. இதை வைத்து சமூகத்தை எவ்வகையில் வழிகாட்ட முடியும் என சிந்தித்து, அந்த வகையில் நாம் அதனை கொண்டு செல்ல வேண்டும்.

விசேடமாக நான் கவலைப்படும் ஒன்று எங்களது மாணவர் சமுதாயம் பற்றியது. மாணவர் சமுதாயம் என்பது சிறுவர்களைக் கொண்டது. அவர்கள் அப்பாவிகள். அந்த அப்பாவிகள் தடம்புரண்டு போக நாம் விடக்கூடாது. நீங்கள் ஒவ்வொருவரும் அந்த மாணவர் சமுதாயத்தை திருத்த வேண்டும். அதில் நீங்கள் மூர்க்கமாக இருங்கள். என்னுடன் ஒத்துழையுங்கள். ஒரு வருடத்தில் நாங்கள் யாழ்ப்பாணத்தில் 1970 ஆண்டிருந்த கல்வி கலாசாரத்தை ஏற்படுத்துவோம்.

இதனை ஏன் நான் கூறுகின்றேன் என்றால், முப்பது ஆண்டு காலம் நாம் கல்வியை இழந்து விட்டோம். இனியும் இழப்பதற்கு தயாரில்லை. இழந்த கல்வியை நாம் மீண்டும் பெற வேண்டும். 70ம் ஆண்டு கொடிகட்டிப் பறந்தது யாழ். மாவட்டம். அனைத்து பல்கலைக்கழகங்களையும் நிரப்பியது யாழ்.மாவட்டம். இன்று யாழ்.மாவட்டத்தின் கல்வி நிலையை பாருங்கள். 21ஆவது இடத்திற்கு யாழ்.மாவட்டம் தள்ளப்பட்டுள்ளது. ஒரு வருடம் அனைவரும் ஒன்று சேர்வோம். நீதிமன்றம் ஒன்று சேரும். அனைத்து சமூக சேவையாளர்களும் ஒன்று சேருங்கள். ஆசிரியர், அதிபர்கள் ஒன்று சேருங்கள். ஒரு வருடத்தில் யாழ்ப்பாணத்தில் சிறந்த கல்வித் தரத்தை கொண்டுவந்து, சிறந்த ஒழுக்கப் படையை கொண்டு வந்து பல்கலைக்கழகங்களை நிரப்ப வேண்டும். அதற்கு உங்களது ஒத்துழைப்பு தேவை.

நீங்கள் வாள்வெட்டுக்காரர்களுக்கு பின்னால் போகத் தேவையில்லை. கொள்ளைடிப்பவர்களுக்கு பின்னால் போகத் தேவையில்லை. அவர்களை நான் பார்த்துக்கொள்ளுவேன். அவர்களை அடக்க வேண்டியது என்னுடைய கடமை. நீங்கள் அப்பாவி மாணவர்களை அடக்குங்கள். அவர்கள் பாவம் அவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் வழிமாறி செல்ல விடக்கூடாது. அந்த மாணவர் சமுதாயத்திற்கு நாங்கள் வழிகாட்ட வேண்டும். மாணவர்களை சிறந்த கட்டமைப்பிற்குள் கொண்டு வர நீதிமன்றம் மட்டும் போதாது. போலிஸ் மட்டும் போதாது. அனைத்து தரப்பினரும் அதற்கு முன்வர வேண்டும்.

கடந்த இரண்டு கிழமையாக யாழ்ப்பாணத்தில் அமைதி நிலவுகின்றது. அமைதி கொண்டுவரப்பட்டது. மூன்று கிழமைக்கு முன்னர் ஒரு இரவு நீங்கள் தூங்க முடியாத நிலை இருந்தது. கொள்ளைகள், வாள் வெட்டுக்கள், சந்தி சண்டித்தனங்கள் அனைத்தையும் பத்து பதினைந்து நாட்களில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம். அந்த கட்டுப்பாடு நிலைக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து நாங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த பத்து நாட்களாக தாங்கள் அமைதியாக இருக்க முடிவதாக மக்கள் எங்களுக்கு அறிவித்துக் கொண்டிருக்கின்றார்கள் எங்களுக்கு சந்தோசமாக இருக்கின்றது.

நீதிபதி என்ற முறையில் நான் எனது கடமையைத் தான் செய்ய வந்துள்ளேன். நீதிபதி என்பவரது கடமை என்ன? சமூகத்தில் நல்லொழுக்கமுள்ள பிரஜைகளை உருவாக்கி, சட்டம் ஒழுங்கிற்கு கட்டுப்படும் சமுதாயத்தை உருவாக்கி, நீதியை நிலைநாட்ட வேண்டிய கடமைப்பாடு நீதிபதிக்கு உண்டு. அந்த வகையில் எனது கடமைகளை செய்கின்றேன். தண்டனை மட்டும்தான் சமுதாயத்தை திருத்தும் என்பது எனது வாதம். அதற்காக மாணவர் சமுதாயம் தண்டிக்கப்படக் கூடாது என்பதும் எனது வாதம். ஏனெனில் அவர்கள் சிறுவர்கள், அப்பாவிகள். பதினெட்டு வயதிற்கு குறைந்த அவர்களுக்கு பிரச்சினைகளின் பாரதூர தன்மைகள் விளங்காது.

எனது கைகள் நடுங்குகின்றன. ஒரு மாணவனை விளக்கமறியலுக்கோ, சிறைச்சாலைக்கோ அனுப்புவதற்கு எனது கரங்கள் மறுக்கின்றன. எனது இதயம் மறுக்கின்றது. மாணவர்களை விளக்கமறிலுக்கு அனுப்ப நான் தயங்குகின்றேன். சட்டத்தின் முன் யாவரும் சமன். எனினும் மாணவர்களின் நலன் எனக்குத் தேவை.

சிறந்த பெற்றோர்கள், சிறந்த கல்விமான்கள் இங்கு இருக்கின்றார்கள். நீங்கள் மாணவர் சமுதாயத்திற்கு வழிகாட்டுங்கள். வீதிகளில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் போதும், அவர்கள் பாடசாலையை விட்டு திரும்பும் போதும் போக்குவரத்து சட்டத்தை கடைப்பிடிக்கும் படி அவர்களுக்கு கூறுங்கள்.
தயவு செய்து உங்கள் பெண் பிள்ளைகளை கவனமாக பாதுகாக்க வேண்டும். அவர்கள் ரியூசனுக்கு செல்லும் போது அவர்களை கண்காணிக்க வேண்டும். ரியூசன் நடைபெறுகின்றதா? பிள்ளை பாடசாலைக்கு சென்றாவா என்பது குறித்தெல்லாம் பெற்றோராகிய நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும். சம்பவம் ஒன்று நடந்து முடிந்ததன் பின்பு வழக்கு விசாரணைகள் எல்லாம் இரண்டாவது விடயம். நடப்பதற்கு முன்னர் பாதுகாக்க வேண்டும். குற்றத்தை எப்படி தடுப்பது- குற்றச்செயலிலிருந்து மக்களை எப்படி பாதுகாப்பது என்பது தான் முதலில் எங்களுக்கு தேவையானது.

யாருமே பிறப்பால் கிரிமினல்கள் இல்லை. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அவர்களை கிரிமினல்களாக்குகின்றது. அவ்வாறான சந்தர்ப்ப சூழ்நிலை அமைய நாம் இடமளிக்கக் கூடாது.
சந்திகளில் கூடுவதை நாம் நிறுத்த வேண்டும். ஐந்து பேருக்கு மேல் சந்திகளில் கூடி நின்றால் அது சட்டவிரோத கூட்டம். கைது செய்யப்பட்டால் இரண்டு வருட சிறைத் தண்டனை. பெண்பிள்ளையின் கையைப் பிடித்தால் ஐந்து வருடங்கள் சிறைத் தண்டனை. பெண்பிள்ளையை கடத்தினால் ஏழு வருட சிறைத்தண்டனை. பாலியல் வல்லுறவிற்கு இருபது வருட சிறைத் தண்டனை. கொலை செய்தால் மரண தண்டனை. இது சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்டுளளது. இதனை நாங்கள் நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டும்.

நான் யாழ். மாவட்டத்திற்கு வந்ததன் பின்னர் ஒன்பது மரணதண்டனைகளை விதித்துள்ளேன். இருபதிற்கு மேற்பட்டோருக்கு 10 வருடங்களுக்கு மேற்பட்ட சிறைத் தண்டனைகளை வழங்கியுள்ளேன். நடந்தவை கொலை, பாலியல் வல்லுறவு, ஆட்கடத்தல் போன்ற பாரிய குற்றங்கள். இதற்கெல்லாம் ஆலோசனைகள் கிடையாது. தண்டனைகள் மட்டுமே தீர்ப்பு. இவ்வாறான தண்டனைகள் மூலம் குறுகிய காலகட்டத்தில் யாழ்.மாவட்டத்தில் நல்லதொரு சமுதாயத்தை கட்டமைப்பது என்னுடைய கடமை. அதற்கு ஒத்துழைக்க வேண்டியது மக்களாகிய உங்களது கடமை.

நான் நேரான பாதையில் செல்கின்றேன் நீஙகள் என்னுடன் வாருங்கள். செய்வோம். இன்னும் ஒரு வருடத்தில் எங்களது கல்வி உச்சநிலையை அடைய வேண்டும்.

நான் படித்தது பரியோவான் கல்லூரியில். அங்கு ஒழுக்கத்தை சொல்லித் தந்தார்கள் வழிநடத்தினார்கள். படித்தேன், இன்று நீதிபதியாக வந்து நிற்கின்றேன். ஒவ்வொரு மாணவனுக்கு பின்னால் ஒரு ஆசிரியர் நிற்பார். ஒரு தந்தை நிற்பார். அவர்களுக்கு ஒழுக்கத்தையும் கவ்வியையும் சொல்லிக் கொடுங்கள். அவர்களை எதிர்கால நாயகர்களாக்குங்கள். இது உங்களுடைய கையிலுள்ளது.

இளைஞர்களை பெற்றெடுத்த பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு ஆலோசனை வழங்குங்கள். சட்டத்தின் வரம்புகளை மீற வேண்டாம் என்று சொல்லுங்கள். ஒழுங்குகளை மீற வேண்டாம் என்று சொல்லுங்கள்.

சுதந்திரம் என்பது என்ன? உன்னுடைய விரலை எனது மூக்கு நுனிவரை கொண்டு வருவது உனது சுதந்திரம். மூக்கைத் தொட்டால் உனது மூக்கை உடைப்பது எனது சுதந்திரம். அது தான் தற்காப்பு சுதந்திரம். அதனை நீங்கள் பின்பற்றுங்கள். ஒவ்வெருவருக்கும் தற்காப்பு உரிமை உண்டு. அதனை நீதிமன்றில் வந்து சொன்னாலும் பயமில்லாமல் சொல்லுங்கள். என் கையை பிடித்தான் மூக்கை உடைத்தேன், என் தங்கையின் கையை பிடித்தான் அவனது மூக்கை உடைத்தேன் என பயமில்லாமல் சொல்லுங்கள். நீதிமன்றம் உங்களை விடுதலை செய்யும்.

ஏனெனில், அதுதான் தற்காப்பு உரிமை. சட்டப் புத்தகத்தில் உள்ளது. ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல், மரணம் விளைவிக்கும் சந்தர்ப்பத்தில் அவரை கொலை செய்யலாம். இதனை தற்காப்புரிமை என சட்டம் சொல்கிறது. என்னை ஒருவன் கொல்ல வருகின்றான் என்றால், நான் இரண்டு கைகளாலும் அவனை கும்பிட்டுக்கொண்டிருக்க மாட்டேன். எதிர்த் தாக்குதல் நடத்துவேன். அதனால் அவன் இறந்தால் அது எனது தற்காப்புரிமை. ஆகவே தற்காப்புரிமை எல்லோருக்கும் உள்ளது.

மாணவர்களுக்கு வழிகாட்டுங்கள். இளைஞர்களுக்கு வழிகாட்டுங்கள். ஒரு ஒழுக்கப் படையை அமையுங்கள். பாடசாலைகளில் ஒழுக்கப் படைகளை அமையுங்கள். நல்லதொரு கல்விச் சமுதாயத்தை உருவாக்குவோம். ஒரு வருடத்தில் எங்களது பல்கலைக்கழகங்கள் மாணவர்களால் நிரப்பப்பட வேண்டும். யாழ்.குடாநாடு சரித்திரம் படைக்கின்ற இடமாக மாற வேண்டும்.

வாள்வெட்டு, கொள்ளை, கடத்தல் சொல்லவே வெட்கமாக இருக்கின்றது.

வெளி மாவட்டங்களுக்கு நான் நீதிபதியாகப் போகின்றேன். தற்போதும் போகின்றேன். திருகோணமலை மாவட்டத்திற்கு நீதிபதியாக போகின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு போகின்றன். இங்கெல்லாம் பதில் நீதிபதியாக போய் வருகின்றேன். அங்கு கேட்கின்றார்கள் யாழ்ப்பாணத்தில் என் இவ்வாறெல்லாம் நடக்கின்றது என்று. அது எப்படிப்பட்ட ஊர் அந்த ஊரில் ஏன் வாள்வெட்டு நடக்கிறது. அங்கு ஏன் போதைவஸ்து வந்தது. ஏன் சந்தியில் நின்று அடிபடுகின்றார்கள். யாழ்ப்பாணத்தின் பண்பாடு, கலாசாரம் எல்லாம் எங்கு போனது? இன்றும் நாங்கள் யாழ் நூலகத்தை ஆசியாவின் கல்விக்களஞ்சியம் என்று கூறிவருகின்றோம். பெருமைப்படுகின்றோம். அப்படிப்பட்ட யாழ்ப்பாணம் இன்று ஏன் இவ்வாறான பாதையில் செல்கின்றது? இதனைத் திருத்துங்கள் என அங்கு அவர்கள் என்னிடம் கேட்கின்றார்கள். நான் என்னால் இயன்றவரை செய்வேன்.

சட்டம், சமுதாயம், கலாச்சாரம், பாரம்பரியம் என்பவற்றை உள்ளடக்கி, என்னால் இயன்ற அனைத்து சேவைகளையும் நான் செய்வேன்.

ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்தார்கள். நீதித்துறையின் விசேட அறிக்கையாளர்கள், சித்திரவதை தொடர்பான விசேட அறிக்கையாளர்கள். அவர்கள் வந்த சமயம் யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் உச்சக்கட்டத்திலிருந்தன. என்னைக் கேட்டார்கள் என்ன நடைபெறுகிறது என்று. என்னால் பதில் சொல்ல முடியவில்லை. நான் ஒரு நீதிபதியாக இருந்தும், என்னால் பதில் சொல்ல முடியவில்லை. எனது இயலாமை வெளிக்காட்டப்பட்டுவிடுமோ என பயந்தேன். பின்னர் கடும் நடவடிக்கை எடுத்தேன். தற்போது சட்டம் ஒழுங்கு ஓரளவிற்கு கட்டுப்பட்டிற்குள் வந்துள்ளது. தொண்ணூறு வீதமான மக்கள் நிம்மதியாக இருக்கின்றார்கள். அனைவரதும் ஒத்துழைப்பு எனக்குத் தேவை. நீதிபதியான நான் நீதிமன்றத்திற்குள்ளும் வெளியிலும் எனது கடமையை செய்வேன். யாழ்ப்பாணம், கிளிநொச்சி இரு மாவட்டங்களுக்கும் கடமை நீதிபதி நான்தான். அந்த வகையில் என்னால் இயன்றவற்றை செய்வேன்.

குடாநாடு அமைதியாக இருக்க வேண்டும். எங்களது பெண்கள் யாழ். வீதிகளில் இரவு 12 மணிக்கும் சுத்நதிரமாக நடமாடும் குரல்கள் எமக்கு கேட்க வேண்டும். அந்தப் பெண்கள் தாங்களுக்கு எவ்வித பாதகாப்பும் தேவையில்லை நாங்கள் சுதந்திரமாக இருக்கின்றோம் என்று கூறும் சமுதாய கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த குரல்கள் கேட்கும் போது நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுவேன்.

நான் எப்பொதும் நேசிப்பது மூன்று இனங்களும் வாழும் மாவட்டத்தில் நீதிபதியாக இருப்பதைத்தான். ஏனெனில், அங்குதான் பிரச்சினைகள் அதிகம். அந்த வகையில் வவுனியாவில் ஒன்பது வருடங்கள் இருந்தேன். திருகோணமலையில் நான்கு வருடங்கள் இருந்தேன். கல்முனையில் மூன்று வருடங்கள் இருந்தேன். இன்று 99 வீதத்திற்கும் அதிகமான தமிழர்கள் வாழும் தனித்தமிழ் மாவட்டத்தில் கடமையாற்றுகின்றேன். மகிழ்ச்சியாக இருக்கின்றது. இது நான் பிறந்த மாவட்டம். நான் பிறந்த இந்த மாவட்டத்திற்கு நான் ஒரு கடமையை செய்யக் கூடாதா? பிறந்த மண்ணிற்கு செய்யும் அந்த கடமை என்னை அழைக்கின்றது. அதனை நான் செய்கின்றேன். அதனை நாங்கள் அனைவரும் இணந்து செய்வோம்.

(யாழ்ப்பாணத்தில் சர்வோதயம் நிறுவனம் நடத்திய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் ஆற்றிய உரை)

Read more...

Tuesday, May 17, 2016

‘ராஜீவ்காந்தி கொலையின் நேரடி சாட்சி ‘போட்டோகிராபர் ஹரிபாபு உயிரோடு இருக்கிறார்!’ -ஆவணப்பட அதிர்ச்சி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. ‘படுகொலைக்குக் காரணமானவர்கள்’ என சி.பி.ஐயால் சொல்லப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர், தங்களது விடுதலையை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கிறார்கள்.

ராஜீவ்காந்தி படுகொலையின் மிக முக்கிய ஆவணம் என ஜெயின், வர்மா கமிஷன் விசாரணைகளில் குறிப்பிடப்பட்டது சம்பவ இடத்தில் போட்டோகிராபர் ஹரிபாபு எடுத்த புகைப்படங்களைத்தான். சர்வதேச அரங்கையும் இந்தப் புகைப்படங்கள் உலுக்கியது. ” ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்பில் ஹரிபாபு இறந்துவிட்டாலும், அவர் எடுத்த புகைப்படங்களால்தான் குற்றவாளிகளை நெருங்க முடிந்தது” என பெருமைப்பட்டுக் கொண்டார் சி.பி.ஐ இயக்குநராக இருந்த கார்த்திகேயன்.

இந்நிலையில், ” போட்டோகிராபர் ஹரிபாபு இறந்துவிட்டார் என அதிகாரிகள் சொல்வது சுத்தப் பொய். அவர் உயிரோடுதான் இருக்கிறார். அவரை வேண்டுமென்றே அதிகாரிகள் தப்ப வைத்தார்கள். சம்பவ இடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது அவருடைய கேமராவும் அல்ல. அத்தனையும் நாடகம்” என அதிர வைக்கிறார்கள் இரண்டு மருத்துவர்கள். தடய அறிவியல் ஆய்வு அறிக்கை, ஹரிபாபுவின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்கள் என எட்டு ஆண்டுகளாக இதற்காகப் பயணித்து, பல புது தகவல்களைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

வருகிற மே 21-ம் தேதி ராஜீவ்காந்தி படுகொலை தினத்தன்று ‘பைபாஸ்’ என்ற தலைப்பில், ஆவணப்படத்தை வெளியிட இருக்கிறார்கள். கோவையைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ் மற்றும் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி ஆகிய இருவரும்தான், ஹரிபாபுவை நோக்கிக் காய்களை நகர்த்தியவர்கள்.

கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தியிடம் பேசினோம்…

ஹரிபாபுவை நோக்கிப் பயணிக்கும் யோசனை எப்படித் தோன்றியது?

” எங்களுக்குத் தொடக்கம் முதலே ராஜீவ்காந்தி படுகொலையின் தடய அறிவியல் அறிக்கை, போஸ்ட்மார்ட்டம் உள்ளிட்ட பல விஷயங்களில் சந்தேகம் இருந்தது. கோவையைச் சேர்ந்த என்னுடைய நண்பர் மருத்துவர் ரமேஷ், படுகொலை வழக்கின் ஆவணங்களைத் தேடும் முயற்சியில் இறங்கினார். ஜெயின் கமிஷன், வர்மா கமிஷன் ஆகிய இரண்டிலும், ‘குற்றத்தைப் பற்றிய விடை தெரிவதற்கு மிக முக்கியமான காரணம், ஹரிபாபு எடுத்த கேமராவும் படங்களும்தான் முழு வழக்கையும் முடிவுக்குக் கொண்டு வந்தது’ என்றது.

எங்களுடைய கேள்வியெல்லாம், ‘ஹரிபாபு இறந்துவிட்டார். ஆனால், அவருடைய கேமரா மட்டும் எப்படி பாதிப்படையாமல் போனது?’ என்பதுதான். ‘தாமரை பூ வடிவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது’ என்கிறது புலனாய்வு அறிக்கை. அப்படி வெடிக்கும்போது கேமரா பாதிப்படையாமல் இருக்காது என சந்தேகப்பட்டோம். அப்போது எங்களுடைய சந்தேகங்களுக்கு விடை கிடைக்கவில்லை. இதுதொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்கே மிகவும் கஷ்டப்பட்டோம்.

2008-ம் ஆண்டு ராஜீவ் படுகொலை வழக்கைக் கையாண்ட தடய அறிவியல் துறை பேராசிரியர் சந்திரசேகர், ‘ஃபர்ஸ்ட் ஹியூமன் பாம்’ என்ற புத்தகத்தை எழுதினார். அதில் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தன. ‘கேமரா எப்படி பாதிப்படையாமல் கிடைத்தது?’ என்ற கேள்விக்கு பதில் சொல்லும் சந்திரசேகர், ‘ பூகம்பம் நடக்கும்போது அதிர்ஷ்டவசமாக சிலர் இடிபாடுகளுக்கு நடுவிலும் பாதுகாப்பாக வெளிவந்திருக்கிறார்கள். அதைப் போலத்தான் கேமராவும் கிடைத்தது’ என்கிறார்.

ஆனால், ‘ கிரைம் சீன் இன்வெஸ்டிகேஷன்களில் இதுபோன்ற உவமைகள் எடுபடாது, சம்பவ இடத்தின் நிலவரத்தைப் பொறுத்து அறிவியல்ரீதியாகப் பேச வேண்டும்’ என அமெரிக்காவின் டாபெர்ட் வழக்கின் புலனாய்வு வழிமுறைகள் சொல்கிறது. டாபெர்ட் வழக்கின் புலனாய்வு முறைகளைச் சரியாகக் கையாண்டிருந்தால், இந்த வழக்கின் போக்கே திசைமாறியிருக்கும். அப்படி எதையும் புலனாய்வுத் துறை செய்யவில்லை. நாங்கள் டாபெர்ட் நடைமுறைகளைக் கையாண்டு விசாரணையைத் தொடங்கினோம்.”

ஹரிபாபு சாகவில்லை என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?

” ஹரிபாபுவின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கையைத் தேடினோம். அந்த அறிக்கையில், ‘இறந்த நபருக்கு சுன்னத் செய்யப்பட்டிருக்கிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘வன்னிய சமூகத்தைச் சேர்ந்த ஹரிபாபு எப்படி சுன்னத் செய்வார்?’ தவிர, ‘அந்த சடலத்தின் வயது 30’ என்கிறார்கள். ஹரிபாபுவுக்கு 22 வயதுதான் ஆகிறது. ராஜீவ் காந்தியை படம் எடுக்கும்போது, அவர் நடந்துவரும் கார்பெட்டின் இடதுபக்க மூலையில் இருந்திருக்கிறார் ஹரிபாபு. அங்கிருந்துதான் போட்டோ எடுத்தார். ஆனால், அவரது உடலை வலது பக்கம் இருந்து எடுத்ததாகச் சொல்கிறார்கள். குண்டு வெடித்தாலும் உடல் வலது பக்கம் வந்து விழுவதற்கு வாய்ப்பே இல்லை.

‘உங்கள் மகனின் உடல் இது’ என போலீஸார் சொன்னதைக் கேட்டு, அவரது அப்பா சுந்தரமணி உடலைக் கையெழுத்து போட்டு வாங்கியிருக்கிறார். ‘சடலத்தை எரிக்கக் கூடாது, புதைக்க வேண்டும்’ எனப் போலீஸார் கூறியிருக்கிறார்கள். ஆனாலும், ஹரிபாபு குடும்பத்தினர் அன்றைக்கே உடலை எரித்துவிட்டார்கள். மருத்துவர்கள் அந்த சடலத்தில் இருந்து தலையை வெட்டி எடுத்திருக்கிறார்கள். அவர் முகம் முற்றிலும் சிதைந்துவிட்டது எனச் சொல்கிறார்கள். சடலத்தில் இருந்து கை ரேகை மட்டும் எடுத்தவர்கள், டி.என்.ஏ சாம்பிள் எடுக்கவில்லை. மருத்துவர்களும், ‘ஏன் சுன்னத் செய்யப்பட்டிருக்கிறது?’ எனவும் கேள்வி எழுப்பவில்லை. ஹரிபாபுவின் அக்கா விஜய ரேவதி சொல்லும்போது, ‘கிரீம் கலர் சட்டை அணிந்திருந்தான்’ என்கிறார். ஆனால், போலீஸோ, ‘ பச்சை கலர் முழுக்கை சட்டை’ எனச் சொல்கிறார்கள். இதையெல்லாம் யாரும் கேள்வி எழுப்பவில்லை.”

அப்படியானால், போலீஸார் காட்டும் சடலம் யாருடையது?

” அதற்கும் எங்களுக்கு விடை கிடைத்தது. ஸ்ரீபெரும்புதூரில் சுலைமான் சேட் என்று ஒருவர் இருக்கிறார். அவர்தான் ராஜீவ்காந்தி நடந்து வரும்போது பூ தூவுவதற்காக இருவரை ஏற்பாடு செய்திருந்தார். அவர்கள் இருவரும் முஸ்லிம்கள். கண்டிப்பாக இந்த இருவரில் ஒருவரைத்தான் ஹரிபாபு எனக் காட்டியிருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தோன்றுகிறது. இரண்டு பூக்கூடைகள் சம்பவ இடத்தில் இருந்தது என புலனாய்வு அறிக்கை சொல்கிறது. சுப்ரமணியன் சுவாமியும் இரண்டு பூக்கூடை இருந்ததாகச் சொல்கிறார். ”

இந்த விவகாரத்தில் தவறு செய்தது யார்?

“கிரைம் சீன் இன்வெஸ்டிகேசன் என்பதே இந்த வழக்கில் முற்றிலும் மீறப்பட்டிருக்கிறது. முன்னுக்குப்பின் முரணான தகவல்களைச் சொல்கிறார் தடய அறிவியல் பேராசிரியர் சந்திரசேகர். சம்பவ இடத்திற்கு மறுநாள் காலை 11 மணிக்குப் போனதாகச் சொல்லியிருக்கிறார்.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
மகாலட்சுமிக்கு ஸ்ம்ரிதி இரானியின் அடடே விளக்கம்!

ஆனால், கே.ராமசுந்தரம் என்ற ஃப்ரீலான்ஸ் நிருபர், தன்னுடைய பிளாக்கில், ‘மே 22-ம் தேதி எனக்குப் பேட்டி கொடுத்தார் சந்திரசேகர்.ராஜீவ்காந்தியின் ஷூ, மனித வெடிகுண்டு தனுவின் தலையில் இருந்த கனகாம்பரம், பச்சை கலர் சல்வார், ஆரஞ்ச் கலர் பாட்டம், வெடிகுண்டுக்கு பயன்படுத்திய சுவிட்ச் ஆகியவற்றைக் காட்டினார் சந்திரசேகர். நான் அதை வீடியோ எடுத்தேன். சம்பவ இடத்திற்கு முதல்நாள் இரவே சந்திரசேகர் போய்விட்டார்’ என எழுதியுள்ளார். இந்த வீடியோப் பதிவுகள் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் மற்றும் கனடாவின் டோரண்டோ ஸ்டார் ஆகியவற்றில் வெளியானது.”

இப்படிச் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

“இந்த வழக்கின் மிக முக்கியமான கேள்வி இது. சம்பவ இடத்தில் இருந்து காயத்தோடு ஹரிபாபுவை மீட்டவர்கள், அவரைத் தப்பியோட வைத்துவிட்டார்கள். இதற்குப் பின்னால் ஏராளமான மர்மங்கள் இருக்கின்றன.”

அப்படியானால், ஹரிபாபு இப்போது எங்கே இருக்கிறார்?

“அவர் இப்போது பக்கத்து மாநிலம் ஒன்றில் சாமியார் வேடத்தில் இருக்கிறார். அவரைத் தப்பவிட்டது யார்? என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அவரிடம் விடை இருக்கிறது. அவரது குடும்பத்தினர் சென்னையில் குடியிருந்தார்கள். இப்போது வேறு இடத்திற்குப் போய்விட்டார்கள்.”

ஆவணப்படம் எப்போது வெளியாகும்?

” ராஜீவ்காந்தி படுகொலை தினத்தன்று வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். தவறான நீதியால் ஏற்பட்ட விளைவுகளைச் சொல்லும் சிலப்பதிகாரக் கதை நடந்த பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். ஒரு மணி நேரம் ஓடக் கூடிய படம் இது. வழக்கின் பல மர்மங்களை அவிழ்க்கும் மிக முக்கியமான ஆவணப்படமாகவும் இது இருக்கும்!” என விரிவாகப் பேசி முடித்தார் மருத்துவர் புகழேந்தி.

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு பற்றிய விவாதம் வரும்போதெல்லாம், ‘உண்மைக் குற்றவாளிகள் அரசு பதவிகளில் அமர்ந்து கொண்டு உலா வருகிறார்கள். தவறே செய்யாதவர்கள் இளமையைத் தொலைத்துவிட்டு, நோயோடு சிறைகளில் வாடுகிறார்கள்’ என்பார்கள். அது உண்மைதானோ!?

– ஆ.விஜயானந்த்

(Vikatan)

Read more...

அல்பிரட் துரையப்பாவின் கொலை. ராஜன் கூல்

ஜூலை 83க்கான முன்னுதாரணங்களும் மற்றும் தண்டனை விலக்குக்கான அடித்தளமும்

அல்பிரட் துரையப்பா 1960 – 1965 வரை யாழ்ப்பாணத் தொகுதியின் சுயேச்சை பாராளுமன்ற Alfred-Duraiappahஉறுப்பினராக இருந்தார், மற்றும் பலமுறை மேயராகவும் பதவி வகித்த பிரபலமான மனிதர். பல தமிழ் தேசியவாதிகளால் இது நிராகரிக்கப்பட்ட போதிலும், உண்மை என்னவென்றால் எல்லா தோதல்களிலும் யாழ்ப்பாண தொகுதியில் வாக்குகள் அவர், தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சி என்பனவற்றுக்கு இடையில் சமமாகப் பிரிபட்டு வந்துள்ளன. அரசியலில் சிறந்த உதாரணமாக அல்லது கொள்கைவாதியாக தன்னை பிரதிநிதிப் படுத்துவதற்காக அவர் விண்ணப்பம் செய்வதற்கான தேவை எதுவும் இருக்கவில்லை. அவர் தனது தொகுதி மக்களை தனிப்பட்ட முறையில் தனித்தனியாக நன்கு அறிவார், மற்றும் ஒவ்வொருவரும் அவரைத் தன் குடும்பத்தில் ஒருவராக உணரும் விதத்தில் நடக்க முயற்சித்தார். அவர் வீதிகளில் மக்களைச் சந்திக்கும்போது அவர்களுக்கு வாழத்துச் சொல்லி அவர்களது படிப்பு மற்றும் தனிப்பட்ட விடயங்கள் தொடர்பாக விசாரிப்பார். சாதாரண வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு வேண்டிய மக்களின் தேவைகளை அவர் பூர்த்தி செய்துவந்தார். வேலைகள், இடமாற்றம், சந்தைக் கட்டிடம், பொதுக் கழிப்பறைகள் மற்றும் தெரு விளக்குகள் போன்றவற்றை அவர் நிறைவேற்றி வந்தார். அவரது அரசியல் பாணிக்கு அரசாங்கத்தின் புரவலர்தன்மை பொருத்தமாக இருக்கும் என்பதினால் அவர் தன்னை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைத்துக் கொண்டார்.

யாழ்ப்பாணத் தொகுதிக்கு வெளியே தன்னைக் காட்டிக்கொள்ள முனைப்புக் காட்டியதில்லை, ஆனால் அந்த கௌரவமான தொகுதியில் தேசியவாதிகளான தமிழர் ஐக்கிய முன்னணிக்கு (தமிழரசுக் கட்சிக்கு) ஒரு வலிமையான சவாலாகத் திகழ்ந்தார். அவர் கணிசமானளவு வணிகர்கள், முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகத்தினரையும் மற்றும் நகரில் உள்ள வறிய மக்களையும் கொண்ட ஒரு வாக்கு வங்கியை தனதாக்கி வைத்திருந்தார். துரையப்பாவின் இந்த புகழ் தேசியவாதிகளுக்கு எரிச்சலை மூட்டியது. தேசத்தை பற்றிய சில தெளிவற்ற யோசனைகளை கடைப்பிடிப்பதற்காக, மக்கள் தங்கள் சாதாரண தேவைகள் மற்றும் வாழ்க்கையின் விருப்பங்கள் அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராக உள்ள ஒரு பொய்யான தோற்றம் உடைய யாழ்ப்பாணத்தின் உயர்வான ஒரு சமூகத்தின்மீது அவர்கள் அந்த தேசியவாதத்தை திணிக்க முற்பட்டார்கள். இந்த பாசாங்குத் தனத்தை துரையப்பா பகிரங்கப் படுத்தினார்.

1972ல் தமிழர் ஐக்கிய முன்னணி (தமிழரசுக்கட்சி) துரையப்பாவை துரோகி, மற்றும் சாவதற்கே லாயக்கானவர் என அழைத்து அவர்மீது திட்டமிட்ட தாக்குதல்களைத் தொடங்கியது. ஆரம்பத்தில் அது யாழ்ப்பாண தொகுதியை வெல்வதற்கான ஒரு சிறு சண்டை போலவே இருந்தது. ஆனால் அவர்கள் அதிகம் வலியுறுத்தியது போல, தாங்கள் நினைப்பதுதான் சரியானதும் மற்றும் இயற்கையானதும் அவரது முடிவும் அப்படியே நடக்கவேண்டும் என நம்பத் தொடங்கினார்கள். ஜனவரி 1974ல் நடைபெற்ற சர்வதேச தமிழராய்ச்சி மாநாடு துரையப்பாவை இழிவுபடுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தது.

இந்த தொடர் ஆராய்ச்சி மாநாடு புகழ்பெற்ற கல்விமானான பிதா. எக்ஸ். தனிநாயகம் என்னும் திறமையான தமிழ் கல்விமானால் நடத்தப்பட்டது. இந்த தொடரின் முதல் மாநாடு 1966ல் கோலலம்பூரில் நடந்தது மற்றும் அதை பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தொடங்கி வைத்தார். மலேசிய அரசாங்கம் அதற்கு தாராளமான ஆதரவு வழங்கியது. 1974ம் ஆண்டு மாநாடு ஆரம்பத்தில் கொழும்பில் நடக்கும் என எதிர்பார்க்கப் பட்டது, ஆனால் அதன் அமைப்பாளர்கள் மாநாட்டை யாழ்ப்பாணத்துக்கு மாற்ற முடிவு செய்தார்கள்.

இந்த மாநாடு யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டதும், தமிழர் ஐக்கிய முன்னணி (ரி.யு.எப்) தவிர்க்க முடியாதபடி அதன்மூலம் அரசியல் மூலதனம் தேட ஆரம்பித்தது. (குறிப்பு:- தமிழரசுக் கட்சி (எப்.பி) ஒரு பெரிய கூட்டணியாக தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பனவற்றுடன் இணைந்து 14 மே 1972ல் தமிழர் ஐக்கிய முன்னணியை (ரி.யு.எப்) உருவாக்கியது. இந்த தமிழர் ஐக்கிய முன்னணி ஸ்ரீலங்காவில் இருந்து பிரிந்து செல்லும் கொள்கையை இணைத்துக் கொண்டபின் 14 மே 1976ல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியாக (ரி.யு.எல்.எப்) மாறியது. அப்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தாங்கள் பிரிவினையுடன் உடன்பட முடியாது என தெரிவித்து கூட்டணியில் இருந்து வெளியேறியது). எனினும் மாநாட்டை யாழ்ப்பாணத்துக்கு மாற்றுவதற்கு நல்ல பல காரணங்கள் இருந்தன மற்றும் ஏற்பாட்டாளர்கள் ரி.யு.எப் இனது திட்டப்படி நடந்தார்கள் என நம்புவதற்கான எந்தக் காரணமும் இருக்கவில்லை. ஆனால் அரசாங்கம் பதற்றமடைந்திருந்தது, மாநாட்டுக்காக ஸ்ரீலங்காவுக்கு வருகை தந்த நான்கு பிரதிநிதிகள் திருப்பி அனுப்பப் பட்டார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் இந்த நிகழ்வு பற்றி பொதுமக்களிடம் பெரிதான ஆர்வம் ஏற்பட்டிருந்தது. கல்வியல் சார்ந்த மாநாடு வீரசிங்கம் மண்டபத்தில் ஜனவரி 3ம் திகதி முதல் 9ம் திகதி வரை நடைபெற்றது. வெளிநாட்டு பிரதிநிதிகளின் பேச்சை மேலும் கேட்கவேண்டும் என மக்களிடமிருந்து அதிக வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டதால், இந்த பொது நிகழ்வு 10 ந்திகதி மாலை வரை நீட்டிக்கப்பட்டது.

கூட்டத்தை நடத்துவதற்கான காவல்துறையினரினரால் வழங்கப்பட்ட அனுமதி 9ந் திகதியுடன் முடிவடைந்ததால் மாநாட்டின் பிரதம ஏற்பாட்டாளர் கலாநிதி. மகாதோவாவுக்கும் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சந்திரசேகராவுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு கனவான் ஒப்பந்த புரிந்துணர்வின்படி 10 ந்திகதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதியான ஜனார்த்தனன் என்பவர் ஒரு பிரதிநிதியாக இல்லாதபடியால் அவர் கூட்டத்தில் பேசமாட்டார் என்கிற உத்தரவாதம் மகாதேவாவினால் வழங்கப்பட்டது. சில சாட்சிகள் தெரிவிப்பதின்படி ஜனார்த்தனன் அன்று மாலை 2ம் குறுக்குத் தெருவில் உள்ள ரி.யு.எப் இனது அலுவலகத்தில் அமிர்தலிங்கத்துடன் பேசிக்கொண்டிருந்தாராம். ஆனால் அவரது இருப்பின் சட்டபூர்வ தன்மை பற்றிய கேள்வி ஒன்றில் கிறீற்ஷர் அல்லது சன்சோனி ஆணைக்குழுக்களால் எழுப்பப்படவில்லை மற்றும் சன்சோனி தெரிவிப்பதன்படி, ஏ.எஸ்.பி சந்திரசேகரா முதல்நாள் ஜனார்த்தனனை எதிர்கொண்டு பொதுஇடத்தில் பேசக்கூடாது என எச்சரிக்கை செய்திருந்தாராம்.

மாநாட்டு அமைப்பாளர்கள் முதலில் இறுதிக் கூட்டத்தை திறந்த வெளி அரங்கில் நடத்துவதற்கு திட்டமிட்டார்கள், அதற்கான அனுமதியை யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பாவிடம் இருந்து பெறவேண்டி இருந்தது. ஆனால் 9ந்திகதி மழை பெய்திருந்ததால். அமைப்பாளர்கள் இறுதிக் கூட்டத்தை வீரசிங்கம் மண்டபத்திற்கு மாற்றுவதற்கு திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் 10 ம் திகதி சனக்கூட்டம் மண்டபத்திற்குள் நெரிசல் ஏற்படுத்தியதால் பலரும் மண்டபத்துக்கு வெளியில் நின்று உரைகளை செவிமடுக்க வேண்டியதாயிற்று. மழை வருவதற்கான அறிகுறிகள் இல்லாததால் அமைப்பாளர்கள் இறுதி நேரத்தில் திரும்பவும் திறந்தவெளி அரங்கிற்குச் செல்லத் தீர்மானித்தார்கள். அவர்கள் அதற்கான அனுமதியை பெறுவதற்காக மேயர் துரையப்பா மற்றும் மாநகரசபை ஆணையாளர் ஆகியோரை சந்திக்க முயற்சித்தார்கள், ஆனால் அது வெற்றியளிக்கவில்லை.

அமைப்பாளர்கள் விரைவாக மண்டபத்துக்கு வெளியே ஒரு தற்காலிக மேடையை தயாரித்தார்கள், ஆனால் அது வளாகத்துக்கு உள்ளே காங்கேசன் துறை வீதியையும் மற்றும் யாழ்ப்பாண முற்றவெளியையும் நோக்கும் வகையில் அமைந்திருந்தது. சுமார் 50,000 வரை மதிப்பிடத்தக்க மக்கள் வீதி ஓரங்களிலும் மற்றும் முற்றவெளி முதல் யாழ்ப்பாணக் கோட்டையின் அகழிவரையிலும் அமர்ந்திருந்தார்கள். நகர போக்கு வரத்துக்களை மணிக்கூண்டு கோபுர வீதி வழியாக பிரதான சாலையை நோக்கி திருப்பி அனுப்புவதில் பொலிசார் உதவி புரிந்தார்கள், அதன்படி மக்கள் கூட்டம் எதுவித இடையூறும் இன்றி பேச்சுக்களை கேட்க கூடியதாக இருந்தது. கூட்டம் தாமதமாக இரவு 8.00 மணியளவில் ஆரம்பமானது, மற்றும் தலைவர் கலாநிதி வித்தியானந்தன காவல்துறையினரின் உதவிகளுக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். முதலாவது பேச்சாளராக தென்னிந்தியாவை சேர்ந்த பேராசிரியர் நைனா முகமது தனது பேச்சை தொடங்கி பார்வையாளரை தனது சொல் மந்திரத்தால் கட்டிப்போட்டார்.

சிறிது நேரத்துக்குப் பின்னர் எல்லோரும் ஆச்சரியப்படும்படி கலகத் தடுப்பு காவல்துறையினரின் ஒரு பகுதியினர் மணிக்கூட்டு கோபுர பக்கம் இருந்து வீரசிங்கம் மண்டபத்தின் மேற்குப் புறமாக தாக்குதலை மேற்கொண்டவாறு கூட்டத்தினரை ஒரு பக்கமாக ஒதுங்கும்படி கடுமையான தொனியில் கட்டளையிட்டவாறே கூட்டத்தினரை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அமளி எற்பட்டு மின்சார கம்பி கீழே விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.

பீதியடைந்த கூட்டத்தினர் கலைந்தோடத் தொடங்கினர். இந்த துயரம் ஏற்பட அல்பிரட் துரையப்பா தான் காரணமாக இருந்தார் என்பதற்கு ஒரு துளி ஆதாரம்கூட இல்லை. ஆனால். அவர் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் நகரபிதாவாக இருந்தபடியால் இந்தச் சம்பவத்திற்காக அவர் பலிக்கடா ஆக்கப்பட்டார். அதே இரவில் ரி.யு.எப் ஆதரவாளர் என அடையாளம் காணப்பட்ட ஒரு மனிதரின் தலைமையின் கீழ் பிரதான வீதியில் அமைந்திருந்த ஸ்ரீ.ல.சு.க வின் அலுவலகம் அடித்து நொருக்கப்பட்டது.

வெகு விரைவாகவே இந்த துயரத்துக்கும் மற்றும் பொதுமக்களின் மரணத்துக்கும் துரையப்பாதான் பொறுப்பு எனக் குற்றம்சாட்டி திறமையான பிரச்சார நடவடிக்கை கட்டவிழ்த்து விடப்பட்டது. திரும்பவும் இது பிணங்களின் மேல் நடத்தப்படும் ஒரு அரசியல் நடவடிக்கையாக மாறியது. பின்னர் அது எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் புதிய உயரத்தை அடைந்தது. இந்த துயரத்துக்கு யாராவது பொறுப்பேற்க வேண்டுமானால் அது ரி.யு.எப் மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோரே அதற்கான பெரும் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும் என்பது தொடர்ந்து தெளிவாகியிருக்கும். ஜனார்த்தனன் இந்தியாவக்கு திரும்பிச்சென்று காவல்துறையினரால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான சடலங்களை தான் கண்டதாக அறிவித்தார். ஸ்ரீலங்காவிலிருந்து வெளியாகும் பெரிய தமிழ் பத்திரிகையான வீரகேசரி தனது ஆசிரியத் தலையங்கத்தில் ஜனார்த்தனனின் பொறுப்பற்ற அறிக்கைக்காக கண்டனம் வெளியிட்டது.

அப்போது இருந்த அரசாங்கம் இதைப்பற்றி விசாரணை செய்வதற்கு ஒரு ஆணைக்குழுவை நியமித்து இந்த விடயத்தை தீர்த்து வைத்திருக்கலாம். ஆனால் திருமதி.பண்டாரநாயக்காவின் அரசாங்கம் அதையிட்டு ஒருவகை மனப்பயம் கொண்டிருந்ததால் அதைச் செய்ய மறுத்துவிட்டது. இந்த விடயம் நீதியரசர் ஓ.எல்.டி கிறெற்சர் தலைமையிலான மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு அதிகாரபூர்வமற்ற ஆணைக்குழுவின் முன் சென்றது. இதுபற்றி எமது அடுத்த பகுதியில் எடுத்துக் கொள்வோம்.

சன்சோனி ஆணைக்குழுவின் அறிக்கையில் (பக்கம் 25, கீழே பார்க்க) திரு.ஜே.டி.எம் (மித்ர) ஆரியசிங்க, அப்போதைய யாழ்ப்பாண பொலிஸ் அத்தியட்சகர் திருமதி அமிர்தலிங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு பேச்சை மேற்கோள் காட்டி தெரிவித்திருப்பது. 9 பெப்ரவரி 1974ல் மேற்குறித்த காவல்துறையின் நடவடிக்கை;ககு எதிராக தமிழர் ஐக்கிய முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு ஹர்;த்தாலின்போது, முனியப்பர் கோவிலுக்கு முன்பாக கூடியிருந்த ஒரு கூட்டத்தினர் முன்பாக திருமதி அமிர்தலிங்கம் அவர்கள் பேசும்போது, 10 ஜனவரியில் இடம்பெற்ற மரணங்களுக்கு ஏ.எஸ்.பி சந்திரசேகர அவர்கள்தான் பொறுப்பான நபர் மற்றும் துரோகியான துரையப்பா அன்றைய சம்பவங்களுக்கு பின்னால் இருந்து செயற்பட்டவர் என்று சொன்னதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்களது அடுத்த பகுதியில் திரு. ஆரியசிங்கா பற்றி அதிகம் சொல்லவேண்டி உள்ளது, ஆனால் திருமதி.அமிர்தலிங்கம் சொன்னதாக சொல்லப்படுபவை அந்த நேரத்தில் ரி.யு.எல்.எப் இன் அரசியலுடன் ஒத்ததாக உள்ளது .(உதாரணம்: 24 மே 1972ல் புதிய குடியரசு அரசியலமைப்புக்கு எதிரான ஒரு கூட்டத்தில் காசி ஆனந்தன் பேசியது. சாட்சிகள் தெரிவிப்பதின்படி, இயற்கையாக மரணம் அடையக்கூடாது என்று பட்டியல் இடப்பட்டுள்ள துரோகிகள் மத்தியில் துரையப்பாவின் பெயரும் இருப்பதாகவும், ஆனால் அவரது மரணத்தின் தன்மை இளைய தலைமுறையினரால் தீhமானிக்கப்படும் என்றும் அவரால் குறிப்பிடப்பட்டது. செல்வநாயகமும் மற்றும் அமிர்தலிங்கமும் அப்போது அந்த மேடையில் அமர்ந்திருந்தார்கள்.) இங்கு குறிப்பிட்டுக் கூறவேண்டியது என்னவென்றால் டி கிறெற்சர் ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது துரையப்பாவின் பெயர் எழவேயில்லை, இந்த ஆணைக்குழுவின் முன் சாட்சிகளை அழைத்து வருவதில் ரி.யு.எப் முக்கிய பாத்திரத்தை வகித்திருந்தது, மற்றும் ஆணைக்குழுவில் இருந்த பிஷப் குலேந்திரன் தமிழரசுக் கட்சியின் (ரி.யு.எப்) பக்கம் சார்பானவர் என்பது யாவரும் நன்கறிந்தது. ஒரு மேயர் என்கிற வகையில் துரையப்பா, நிகழ்ச்சி நடைபெறும் இடமாக யாழ்ப்பாண நகரசபை மண்டபத்தை அமைப்பாளர்கள் தேர்ந்தெடுப்பதை விரும்பியிருந்த போதிலும், எந்த வழியிலும் அவர் விரோதமாகவோ அல்லது ஒத்துழைக்காமலோ இருந்தார் என்று பரிந்துரைப்பதற்கு ஏதுவாகஆதாரங்கள் எதுவும் இருக்கவில்லை.

அல்பிரட் துரையப்பாவை நோக்கி வெறுப்பை உருவாக்கும் தன்மை இப்படியாகத்தான் இருந்தது. தேசியவாத அனுதாபிகளாக இருந்தவர்களுக்கு இந்தப் பிரச்சாரத்தை உட்கொள்ளுவது சிறிது சிரமமாக இருந்தது மற்றும் இது எதை நோக்கிச் செல்கிறது என்று கேட்கவும் அவர்கள் தவறி விட்டார்கள். போர்க்குணத்தின் வாயிற்படியில் நின்ற இளைஞர்கள் மனதில் விதைக்கப்பட்டவை கொல்வதற்கு ஒரு தூண்டுதலாக அமைந்துவிட்டன.

வெள்ளிக்கிழமை மாலைவேளையில் அவரது வழமையான நிகழ்ச்சிப்படி, பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு இரண்டு தோழர்களுடன் காரில் வந்திறங்கியபோது, 27 ஜூலை 1975ல் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார். பிரபாகரன் அந்த கொலையாளிகள் கூட்டத்தின் மத்தியில் இருந்தார், அப்போது அவர் புலிகள் இயக்கத்தை அமைக்கும் ஆரம்ப நிலையில் இருந்தார். துரையப்பாவின் தோழர்களில் ஒருவர் இதுபற்றி ஆர்வமுடன் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

காத்திருந்த கொலையாளிகள் நான்கு கதவுகளுள்ள அந்த சீருந்து நிறுத்தப்பட்டதும் அதன் பயணிகள் பயன்படுத்தும் மூன்று வாயில்களையும் நோக்கிச் சென்றார்கள். அவர்களது நோக்கம் துரையப்பாவையும் அவரது இரண்டு தோழர்களையும் கொல்வதாக இருந்தது. தோழர்களில் ஒருவர் பின்கதவு வழியாக கீழே இறங்கியதும், ஒரு கட்டையான இளைஞன் ஒரு கைத்துப்பாக்கியை அவரை நோக்கி குறிபார்த்தவாறு நடுங்கியபடி நிற்பதைக் கண்டார். யோகநாதன் என்கிற அந்த தோழர், அந்த இளைஞனை ஒரு பக்கமாக தள்ளி நிலத்தில் வீழ்த்திவிட்டு அருகில் உள்ள குளிர்பானம் விற்கும் பெட்டிக் கடைக்குள் ஓடி ஒளிந்து கொண்டார். மற்றைய தோழரான ராஜரட்னம் காயமடைந்தார் ஆனால் சமாளித்துக்கொண்டு ஓடிவிட்டார்.

பதற்றம் அடைந்திருந்த கொலையாளிகள் துரையப்பாவின் சீருந்தை அதன் ஓட்டுனரான பற்குணம் என்பவருடன் சேர்த்து எடுத்துக்கொண்டு போனார்கள். பெட்டிக்கடைக்குள் மறைந்திருந்த யோகநாதனை நோக்கிச் செல்வதற்கு அவர்கள் முயற்சி மேற்கொள்ளவில்லை. கொலைகாரர்கள் அங்கிருந்து சென்றதும் பெட்டிக்கடை நடத்திய பெண் அவரை வெளியே வரும்படி அழைத்தாள். வெளியே வந்த அவர், துரையப்பா தண்ணீர் வேண்டிக் கதறுவதைக் கண்டார். செத்துக் கொண்டிருக்கும் அந்த மனிதரின் தலையை தனது மடியில் ஏந்தியவாறு அவரது வாய்க்குள் சிறிது காற்றூட்டப்பட்ட தண்ணீரை ஊற்றினார். அதன்பின் துரையப்பா தன் கடைசி மூச்சை விட்டார். பல வருடங்களுக்குப் பின்னா பிரபாகரனது படத்தை பார்த்த யோகநாதன் தன் முன்னே நடுங்கியபடி நின்ற அந்த இளைஞன் பிரபாகரன்தான் என அடையாளம் கண்டுகொண்டார், அத்துடன் அவரது ஆர்வலராகவும் மாறினார். அந்தக் குழுவில் இருந்த மற்றொரு அங்கத்தவரான கலாபதி பிரபாகரனைப் போலவே சமமான தோற்றத்தை கொண்டவர் என மற்றவர்கள் தெரிவித்தார்கள்.

யோகநாதனது அடையாளம் சரியாக இருந்தால், ஜூலை 1975ல் பிரபாகரனால் இன்னமும் படுகொலையை ஒரு ஆரோக்கியமான முறையில் மேற்கொள்வதற்கு முடியாமலிருந்தது என சுட்டிக்காட்ட முடிகிறது. ஆனால் அதிக நேரம் ஆவதற்குள்ளேயே சீருந்து ஓட்டுனரான பற்குணத்தின் கொலைக்கு அவர் ஒரு கருவியாக மாறியுள்ளார். அதன்மூலம் அவரது நகர்வுகளுக்கான திசை சரியாக அமைக்கப்பட்டுவிட்டது.

மேலும் ரி.யு.எல்.எப் (அப்போது ரி.யு.எப்) துரையப்பாவின் கொலையை நேரடியாக தூண்டி விட்டதுக்கான ஆதாரம் எதுவுமில்லை. ரி.யு.எல்.எப் ஒரு கைத்துப்பாக்கியை துரையப்பாவுக்கு நேரே குறிபார்த்து வைத்துவிட்டு அதன் விசையை யாராவது இழுக்கட்டும் என்று தெரிந்து கொண்டு வேறுபக்கம் பார்த்துக்கொண்டு நின்றார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். சில ரி.யு.எல்.எப் தலைவர்கள் இந்த போராளி இளைஞர்களுடன் தொடர்பு கொண்டிருந்தது எங்களுக்கு தெரியும், உள்ளக இரகசியமாக இருந்த இந்த விடயம் 1976ல் அமிர்தலிங்கம் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ மத்திய குழுவின் சந்திப்பின் பின்னர் ஓரளவு சாதாரணமாகியது. இதன் அடையாளம் என்னவென்றால் 1980 களின் ஆரம்பங்களில் பிரபாகரன் அமிர்தலிங்கத்தின் விசுவாசியாக இருந்துள்ளார் என்பதுதான். ஆனால் எல்.ரீ.ரீ.ஈயின் தீர்மானம் மேற்கொள்ளும் விடயத்தில் ரி.யு.எல்.எப் ஏதாவது பங்களிப்பை மேற்கொண்டது என்று இதனை அர்த்தம் கொள்ளல் ஆகாது.

ரி.யு.எல்.எப் இன் யாழ்ப்பாண மேயராக இருந்த திருமதி. யோகேஸ்வரன், 1998ல் எல்.ரீ.ரீ.ஈ யினால் கொல்லப்பட்டார். யாழ்ப்பாணத்தில் இருந்து பிரசுரமாகும் சஞ்சீவி எனும் பத்திரிகையில் ஒரு பத்தி எழுத்தாளர் பின்னாளில் எழுதியது, துரையப்பாவை கொலை செய்த பின்னர் பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் இருந்த தனது கணவரிடத்தில் வந்ததாகவும் தான் அவருக்கு தேனீர் கொடுத்து உபசரித்ததாகவும் திருமதி யோகேஸ்வரன் தன்னிடத்தில் தெரிவித்தார் என்று.

1977ல் யோகேஸ்வரன் ரி.யு.எல்.எப் இனது யாழ்ப்பாண தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானதுடன் மற்றும் போராளி இளைஞர்களுடன் நட்பாக இருந்ததும் அனைவரும் அறிந்ததே.

எனினும் இந்த பத்தி எழுத்தாளரின் கூற்றை அவநம்பிக்கையுடனேயே கணிக்கப்பட வேண்டும். பதற்ற நிலையில் உள்ள கொலைகாரர்கள் இந்த மாதிரி வேலைகளைச் செய்ய மாட்டார்கள், அதுவும் காவல்துறையினர் அவர்களுக்காக வலை விரித்துள்ள சமயத்தில். இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்காக பிரபாகரன் யாழ்ப்பாண நகருக்கு வருவதற்குப் பதிலாக வட பகுதி கடற்கரைகளுக்குத்தான் சென்றிருப்பார். அவருடைய பாடசாலை நண்பருக்கு அவர் வழங்கிய அவரது சொந்த வாக்குமூலத்தின்படி அவர் செய்தது இதுதான். கடற்படையினரின் எச்சரிக்கை குறையும் வரை அவர் தொண்டமானாறு கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு ஆலமரத்தின் மீதேறி மூன்று நாட்கள் வரை அதன்மீது ஒளிந்திருந்தாராம். அதற்கு மேலும் அவர்கள் தப்பிச் செல்ல பயன்படுத்திய துரையப்பாவின் சீருந்தும் வடக்கு நோக்கியே ஓட்டிச் செல்லப்பட்டு வடபகுதிக் கரையில் உள்ள சேந்தாங்குளம் பகுதியில் கைவிடப் பட்டிருந்தது.

எனினும் தேசியவாதிகளின் கோரிக்கைகளுடன் உடன்பாடற்றவர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் மற்றும் துரையப்பாவின் வாழும் உரிமையை பலாத்தகாரமாக தட்டிப் பறித்தது என்பன தமிழ் அரசியலின் திசையை துயரத்தின் பக்கமாக திருப்பிவிட்டது. துரையப்பாவின் மரணத்தின் சோகம் கண்ணீர் பெருக்கெடுக்க வைத்தது. இன்று கண்ணீர் எதுவும் மிச்சமாக இல்லை.



Read more...

புதிய அரசியலமைப்பாக்க முயற்சி: மறைந்திருக்கும் அபாயங்கள். குமாரவடிவேல் குருபரன்

அரசியலமைப்பாக்க அவையை (Constitutional Assembly) உருவாக்கும் பிரேரணை தொடர்பான விவாதம் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டு இரண்டு மாத கால தாமதத்தின் பின்னர் கடந்த மார்ச் 9 ஆம் திகதி பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கத்தின் மீது சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உள்ள பிடி இந்த தாமதத்தில் இருந்தும் பிரேரணைக்கு கொண்டு வரப்பட்ட திருத்தங்களில் இருந்தும் நன்றாக தெரிகின்றது. அண்மையில் சனாதிபதி சிறீசேனவுக்கு நெருக்கமான ஜாதிக ஹெல உறுமயவை சேர்ந்தவொரு ஆலோசகர் குறிப்பிட்டது போல சிறீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திற்குள் ஒரு எதிர்கட்சியாக இயங்கி வருகின்றது. சுதந்திரக் கட்சி பிரேரித்த திருத்தங்களையும் மகிந்த சார்பு ‘பொது எதிரணி’யின் திருத்தங்களையும் முழுமையாக ஏற்றுக் கொண்டு பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறீலங்கா சுதந்திரக் கட்சி முன் வைத்த திருத்தங்களில் பிரதானமானது ‘தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வவைக் கண்டடைதல் அரசியலமைப்பு அவையின் நோக்கங்களில் ஒன்று என பிரேரணையின் முகவுரைப் பந்தியில் குறிப்பிட்ட வாசகம் நீக்கப்பட வேண்டும் என்பது. இவ்வருட ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் திரு. சுமந்திரன் அவர்கள் இனப் பிரச்சனையை தீர்த்தல் தனது நோக்கங்களில் ஒன்று என வெளிப்படையாகக் குறிப்பிட்டு தொடங்கப்படுகின்ற முதலாவது அரசியலமைப்பாக்க முயற்சி என பிரேரணையை பாராட்டியிருந்தார். இம்முகவுரைப் பந்தியை மாற்றக் கூடாது என்று ஜனவரி 12, 2016 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பொது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு. சம்பந்தன் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார். கூட்டமைப்பின் கோரிக்கையை விட சுதந்திரக் கட்சியினரை திருப்திப்படுத்துவது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முக்கியமானதாக இருந்திருக்கின்றது. இனப்பிரச்சனை ஒன்று தீர்க்கப்பட வேண்டும் என்ற அடையாளப்படுத்தலை எதிர்ப்பது என்பது இனப்பிரச்சனை என்று ஒன்று இல்லை. இருந்தது ஒரு பயங்கரவாதப் பிரச்சனை தான் என்று சொல்வதற்கு ஒப்பானது. இதனை பகிரங்கமாகவே மகிந்த ராஜபக்ச போர் முடிந்த கையோடு பாராளுமன்றில் கூறினார் என்பது ஞாபகம் இருக்கலாம். ஜனவரி 9, 2016 அன்று பிரேரணை அறிமுகப்படுத்தப்பட்ட போது பாராளுமன்றில் உரையாற்றிய சனாதிபதி பண்டா செல்வா, டட்லி செல்வா ஒப்பந்தம் நிறைவேற்றப்படாமல் கிழித்தெறியப்பட்டது தொடர்பில் வருத்தம் வெளியிட்டார். ஆனால் அவர் சார்பு சிறீலங்கா சுதந்திரக் கட்சியினராலேயே அரசியலமைப்பாக்க அவை தீர்மானத்தின் முகவுரை பந்தியில் ‘தேசிய பிரச்சனையை தீர்ப்பது புதிய அரசியலமைப்பின் நோக்கங்களில் ஒன்றாக இருக்க வேண்டும்’ என்று சொல்லப்பட்டுள்ள வாசகங்கள் நீக்கப்பட வேண்டும் என்று மும் மொழியப்பட்டுள்ளமை அந்த உணர்வின் உண்மைத் தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றது. இன்றைய சனாதிபதியின் கீழ் செயற்படும் சுதந்திரக் கட்சியினரும் கடந்த ஜனாதிபதியின் கொள்கைகளையே பின்பற்றுகின்றனர். மாற்றம் பேச்சில் உள்ளது செயலில் இல்லை.

பிரேரணை நிறைவேற்றப்பட்டு விட்டது. புதிய அரசியலமைப்பில் என்னதான் இருக்கப் போகின்றது என்பதே இப்போதுள்ள கேள்வி. மக்கள் கருத்தறியும் குழுவின் நாடாளாவிய சுற்றுலாவை ஒரு சடங்காகவே பார்க்க வேண்டும். புதிய அரசியலமைப்பில் என்ன உள்ளடக்கப்படவுள்ளது என்பது மக்களின் கருத்துக்களால் வடிவம் பெறாது. புதிய அரசியலமைப்பின் பிரதான நோக்கம் நிறைவேற்று அதிகார சனாதிபதி முறையை ஒழித்தலும் பாராளுமன்ற முறையிலான ஒரு அரசாங்கமுறைக்கு இலங்கையை மீளக் கொண்டு வருவதும் புதியதோர் தேர்தல் முறையை கொண்டு வருவதும் என்றளவில் மட்டுபடுத்தப் படவிருக்கின்றது என்பது தென்னிலங்கை அரசியலில் இருந்து புலப்படும் செய்தி. 2015 ஆகஸ்ட் பொதுத் தேர்தலிற்கு முன்னர், 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் முன் வைக்கப்பட்டு நிறைவேற்றப்படாத 20ஆவது திருத்ததின் உள்ளடக்கம் தேர்தல் மறுசீரமைப்பை பற்றியது தான். அது தான் புதிய அரசியலமைப்பின் முக்கிய உள்ளடக்கமாக இருக்கப் போகின்றது.

இவ்விடயத்தில் சனாதிபதி சிறிசேன, அவர் சார்பு சிறீலங்கா சுதந்திரக் கட்சி பொது எதிரணி மூன்றினதும் பிரதான நோக்கம் நிறைவேற்று அதிகார சனாதிபதி முறை நீக்கப்பட்டால் தேர்தல் முறை மறுசீரமைப்பானது பாராளுமன்றத்தையும் அதன் மூலமாக பிரதமரையும் பலமான அதிகார மையமாக மாற்றும் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதே. அதாவது விகிதாசாரப் பிரதிநித்துவ தேர்தல் முறை நீக்கப்பட்டு தொகுதி வாரி தேர்தல் முறை மேலோங்கும் ஓர் கலப்பு தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். அவ்வாறான தொகுதி வாரி தேர்தல் முறைமையே தென்னிலங்கையின் பிரதான கட்சிகளின் ஏதோவொரு கட்சிக்கு பலமான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கும். மத்தியையும் மத்தியின் தலைவரையும் பலமாக வைத்திருப்பது தான் சிங்கள பௌத்த அரசிற்கு பாதுகாப்பு என்பது சிங்கள பௌத்த அரசியலமைப்பு சிந்தனை பாரம்பரியத்தில் (ஜாதிக சிந்தனையில்) அதி முக்கியமானதாக கருதப்படுகின்றது. 1972 அரசியலமைப்பு பாராளுமன்ற முறையை ஒட்டியதாக இருந்த போதிலும் வழமையான பாராளுமன்ற முறைமைகளில் போன்றல்லாது அதியுயர் அதிகாரங்கள் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டிருந்தமையும் அதன் மூலம் பிரதமர் சகல அதிகாரமுள்ளவராக இருந்தமையும் நினைவில் கொள்ளப் பட வேண்டியது. ஆகவே இங்கு நிறைவேற்று அதிகார சனாதிபதி முறையா பாராளுமன்ற முறையா என்பது முக்கியமல்ல. எந்த முறையானாலும் மத்தியில் நடுமையமான நிறுவனம் ஒன்றில் அதிகாரங்கள் குவிந்து இருக்க வேண்டும். இந்த மரபில் தான் நிறைவேற்று அதிகார சனாதிபதி முறையை முழுமையாக நீக்க வேண்டுமென்றால் பலமான மத்திய அரசாங்கத்தை தர வல்ல ஒரு தேர்தல் முறை ஒன்றை உறுதிப்படுத்த வேண்டுமெனசிங்கள பௌத்த அறிவுஜீவிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியும் அடிப்படையில் இதே மரபை சேர்ந்தவர்கள் தான். ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட ஆட்சி அதிகார நடைமுறை சித்தாந்தமும் நடுமையத்தில் அதிகாரக் குவிப்பை விரும்பும் ஒன்று என்று தென்னிலங்கை அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். நவதாராள முதலாளித்துவ உலக ஒழுங்கிற்குள் இலங்கையை அழைத்துச் செல்ல மத்தியில் அதிகாரக் குவிப்பு அவசியம் என்ற சிந்தனையில் பிறந்தது தான் ஐக்கிய தேசியக் கட்சியின் 1978 நிறைவேற்று அதிகார சனாதிபதி முறை. சந்திரிக்கா அம்மையார் காலத்தில் நிறைவேற்று அதிகார சனாதிபதி முறை ஒழிப்பு பற்றி விவாதிக்கப்பட்ட போது நிறைவேற்று அதிகார பிரதமர் முறையை தான் ஆதரிப்பதாக ரணில் விக்கிரமசிங்க நிலைப்பாடு எடுத்திருந்தமை ஞாபகம் இருக்கலாம். கொழும்பில் உள்ள அவரது சிவில் சமூக நண்பர்கள் விகிதாசார பிரத்நித்துவ முறை மேலோங்கும் ஓர் கலப்பு தேர்தல் முறையை விரும்பினாலும் சிறி லங்கா சுதந்திரக் கட்சி பிளவு பட்டு நிற்கும் இச்சூழலில் கூடுதலாக தொகுதி வாரி பிரதிநித்துவம் மேலோங்கும் ஓர் கலப்பு பொறிமுறையை ரணில் விக்கிரமசிங்கவும் விரும்பலாம். அது ஐக்கிய தேசியக் கட்சி அடுத்தவோர் தசாப்தத்திற்கு ஆட்சியில் தொடர்ந்து இருக்க வாய்ப்பளிக்கும் என ரணில் சிந்திக்கக் கூடும். ஆகவே தேர்தல் முறை மறுசீரமைப்பு, அரசாங்க முறை தெரிவு ஆகிய விடயங்களில் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இடையில் பெரிய கொள்கை வித்தியாசங்கள் இல்லை. குறுங்கால அரசியல் நலன்களின் அடிப்படையிலேயே வித்தியாசங்கள் தோன்ற வாய்ப்புள்ளன.

இவற்றிற்கு மத்தியில் இரண்டு கட்சிகளுக்குமே இனப்பிரச்சனையை தீர்ப்பதை பற்றி உண்மையான அக்கறை காட்டப் போவதில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரபல ஆங்கில வார இறுதிப் பத்திரிகை ஒன்று தனது அரசியல் பத்தியில் கூட்டமைப்பிடம் பெரிதாக ஒன்றையும் எதிர்பார்க்க வேண்டாம் எனப் பிரதமர் தம்மிடம் கூறியதாக பிரதமரை மேற்கோள் காட்டியிருந்தது. 13ஆம் திருத்தத்தில் இருப்பவை தக்க வைத்துக் கொள்ளப்படும் என்றும் ஆளுநரின் சில அதிகாரங்கள் குறைக்கப்படாலம் என்றும் வடக்கு கிழக்கு இணைப்பு நிச்சயம் சாத்தியமில்ல என்றும் தான் கூட்டமைப்பிற்கு சொல்லி விட்டதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

அப்படியென்றால் தொடர்ந்து சர்வதேச சமூகத்திற்கு ரணிலும் அவரது வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீரவும் புதிய அரசியலமைப்பு இனப்பிரச்சனைக்கு தீர்வு வரும் என்று சொல்வதன் சூட்சுமம் என்ன? ஒன்றும் பெரிதாக கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்தும் கூட்டமைப்பும் இச்செயன்முறையில் நம்பிக்கை வைக்குமாறு தமிழ் மக்களை தொடர்ந்து கோருவது எதற்காக?

ரணில், மங்களவை பொறுத்த வரையில் அரசியல் தீர்வு ஒன்று கொடுத்தாகி விட்டது என்பது தான் பொறுப்புக் கூறலில் இருந்து இலங்கையை விடுவிப்பதற்கான சிறந்த வழி. அரசியல் தீர்வு கிடைத்து விட்டால் பொறுப்புக் கூறலை பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை, அப்படி புதிய அரசியலமைப்பை உருவாக்கிய பின்னும் பொறுப்புக் கூறலை வலியுறுத்தினால் அரசியல் தீர்வு மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட சமாதானம் பாதிக்கப்படலாம் என வாதிடுவது தான் சிறிசேன-ரணில் அரசாங்கத்தின் திட்டம். இந்த வாதத்தை அண்மையில் சனாதிபதியின் அலுவலகத்தின் கீழ் இயங்கும், சந்திரிக்கா அம்மையாரால் தலைமை தாங்கப்படும் மீளிணக்கத்திற்கும் தேசிய ஒற்றுமைக்கான நிலையத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான ராம் மாணிக்கலிங்கம் சர்வதேச இணையத்தளம் ஒன்றிற்கு எழுதிய கட்டுரை ஒன்றின் மூலம் மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார்.

அரசியல் தீர்வையும் பொறுப்புக் கூறலையும் பேரம் பேசும் பொருட்களாக மாற்றுவதில் உள்ள அசிங்கத்திற்கு அப்பால் நேர்மையான பேரம் பேசுதலாக அமையக் கூட இங்கு வாய்ப்பில்லை. அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்காக தமது கட்சியின் சிங்கள பௌத்த வாக்களர்களை அந்நியப்படுத்த ரணிலுக்கோ மங்களவுக்கோ சிறிசேனவுக்கோ துளியளவும் விருப்பமில்லை. அதன் காரணமாக தான் கடந்த தேர்தலிலும் தமிழ் மக்கள் பேரவையின் யோசனைகளிலும் புதிய அரசியலமைப்புக்கான கருத்தறியும் குழுவிற்கு முன் தோன்றிய தமிழ் மக்களின் சமர்ப்பணங்களிலும் மிகத் தெளிவாக சமஷ்டிக் கோரிக்கை மீள வலியுறுத்தப் பட்டுள்ள போதிலும் தென்னிலங்கை கட்சிகள் ஒற்றையாட்சியை விட்டுக் கொடுக்க மாட்டோம் என மீள மீள வலியுறுத்துகின்றனர். இங்கு அடிப்படையில் மீளிணக்கம் செய்யப்பட முடியாத நிலைப்பாடுகளை சிங்களத் தரப்பும் தமிழ்த் தரப்பும் எடுத்துள்ளன. இந்தப் பிரச்சனைக்கான தீர்வு ஒற்றையாட்சியோ சமஷ்டியோ என்று அடையாளப்படுத்தாத ஒரு அரசியலமைப்பினை உருவாக்குவதன் மூலம் எட்டப்படலாம் என்று மங்கள சமரவீரவும் திரு. சுமந்திரனும் உலகத் தமிழர் பேரவையும் அவர்களது சக பிரயாணிகளும் சிங்கப்பூரில் கடத்த வருடம் நடத்திய கூட்டமொன்றில் பேசி தீர்த்ததாக சொல்லப்படுகின்றது. ஒன்றை ஒன்றன் பெயரால் அழைக்காமல் விடுவதன் மூலம் அது அதுவாகி விட முடியாது என்று கூறுவது அறிவுடமையாகாது. போண்டாவை போண்டா என்றோ வாய்ப்பனை வாய்ப்பன் என்றோ அழைக்காமல் விட்டால் போண்டா போண்டாவாக இல்லமால் போகாது; வாய்ப்பன் வாய்ப்பன் என்றோ இல்லமால் போகாது. நிற்க.

இவை எல்லாவற்றையும் தாண்டி தமிழ் மக்களிடம் இந்த இல்லாத அரசியல் தீர்வை அரசியல் தீர்வாக ஏற்றுக் கொள்ளச் செய்ய திட்டம் ஒன்று உள்ளது. அரசியலமைப்பு அவையில் 2/3 பெரும்பான்மை, பாராளுமன்றில் 2/3 பெரும்பான்மை என்பதற்கும் அப்பால் பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரம் சாதாரண பெரும்பான்மை ஒன்றின் மூலம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு தேவை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் குறிப்பாக தமிழ் மக்களின் பெரும்பான்மையினரின் வாக்குகள் அரசியல் தீர்வு எயதப்பட்டு விட்டது எனக் காட்டுவதற்கு அவசியமானது. பாராளுமன்ற முறையின் கீழ் மாகாண முறைமை/ அதிகாரப் பரவலாக்கம் நன்றாக வேலை செய்யும் வாய்ப்புள்ளது, ஆளுநரின் அதிகாரம் சிலது குறைக்கப்படுதல் நன்மையே, இது தீர்வுக்கான ஆரம்பப் புள்ளி என்று சொல்லி தமிழ் மக்களின் வாக்குகளைக் கேட்டு 2016இல் தீர்வு தருவோம் என வாக்குறுதி தந்த எமது பிரதிநிதிகளே எம்மிடம் வருவார்கள். இவை எவையும் மக்களிடம் எடுபடா விட்டால் புதிய அரசியலமைப்பை மகிந்த ராஜபக்ச தரப்பு எதிர்க்கிறது ஆகவே தமிழ் மக்கள் அதனை ஏற்றுக் கொள்ள அக்காரணம் ஒன்றே போதும் என்று வாதிடப்படும். எப்படி மைத்ரிப்பால சிறிசேனவை கடந்த சனாதிபதித் தேர்தலின் போது விமர்சித்தவர்களை மகிந்த ஆதரவாளர்களாக காட்ட முயற்சிக்கப்பட்டதோ புதிய அரசியலமைப்பு தீர்வாகாது என்று கூறுபவர்களை மகிந்த ஆதரவாளர்களாக காட்ட முயற்சிக்கப்படும். மகிந்த எதிர்ப்பையே போருக்கு பிந்திய தமிழ்த் தேர்தல் அரசியலின் பிரதான முதலீடாக இருப்பதால் இந்த உத்தி வேலை செய்வதற்கான வாய்ப்பு உண்டு. இது நடந்தால் தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்குள் ஓர் அரசியல் தீர்வை ஏற்றுக் கொனடதாகவும் அரசியல் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டதாகவும் அரசாங்கத்தால் பரப்புரை செய்யப்படும். அத்தோடு பொறுப்புக் கூறல் செயன்முறையையும் மெல்ல மூடி விடுவார்கள். இந்த அணுகுமுறைக்கு இந்தியாவும் அமெரிக்காவினதும் பூரணஆதரவு நிச்சயம் உண்டு என்பதில் சந்தேகமே இல்லை. இந்த அணுகுமுறைக்கு இடைஞ்சலாக இருப்பவர்கள் அல்லது இருக்கக் கூடியவர்களது அரசியலை தமிழ் தீவிரவாத அரசியலாக அடையாளப்படுத்தி அவர்களை ஒதுக்கும் வேலைத்திட்டம் இந்த இடைஞ்சலை களையும் எண்ணத்தில் வெகு தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது. இந்தத் திட்டம் முறியடிக்கப் பட வேண்டுமென்றால் தமிழ் மக்கள் மத்தியில் இவ்விடயங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான திறந்த விவாதக் களங்கள் உருவாக்கப் பட வேண்டும். இக்களங்கள் கட்சி அரசியலைத் தாண்டி ஒரு வெகுசன மக்கள் அணிதிரள் அரசியலை உருவாக்குவதற்கான வெளியை உண்டு பண்ண வேண்டும்.

(13 மார்ச் 2016 ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த கட்டுரை )

Read more...

Monday, May 16, 2016

தமிழ்த் தேசியம் , விடுதலை , சுயநிர்ணயம் அனைத்துக்கும் அவர்கள் Good Bye...

இன்றைய காலவோட்டத்துள் இசைந்த நம்மைக் கடந்தவொரு தலைமுறையைப் பார்க்கிறோம். அஃது, புலத்துள் மிக இடைவெளியை ஏற்படுத்தியிருப்பதையும் பார்க்கின்றோம். தமிழ் மொழிசார்ந்த வாழ்வு இனியெப்படியிருக்கும் என்பதைத் தமிழகத்துக் கலை வடிவங்களிலிருந்து கணித்துவிடவும் முடியும். அவை, கட்டியமைக்கும் போலிப் பிரமாண்டகள், வர்ணங்கள் , மனிதர்கள் யாவும் நமக்கு அந்நியப்பட்டவர்கள். ஆனால் , புலத்தின் இரண்டாம் தலைமுறைக்கேற்ற மாதிரி மனிதர்கள் அவர்கள்.

இன்று, கனேடியத் தமிழர்களைக் குறித்து நோக்குவோமானால் அவர்கள் இந்தப் பிரமாண்டங்களது சாட்சியான போலி மனிதர்களாக வாழ்வதும் , நுகர்வதும் - அதைத் தேடுவதிலும் , திணிப்பதிலும் கோடம்பாக்கப் போலிப் பிரமாண்டத்துக்கு நிகராய் நகர்வது கண்கூடு!

தமிழ் வாழ்வு , அவ் மொழிசார்ந்த வாழ்வு எவருக்கு ? "தமிழ் இன" விடுதலை , தேசம் என்பதெல்லாம் எவருக்கானது?

புலத்து வாழ்வானது அந்தத்தத் தேசத்து மொழிகளோடு சங்கமித்த பின் நினைவுக் கோலமாக "மாதிரி மனிதர்களை" உருவாக்கி வைப்பதற்கும் , சடங்குகள் செய்வதற்கும் கோடம்பாக்கப் பிரமாண்ட மாதிரிகள் மிகப் பெரும் கருத்தியல் மனதை புலத்து மனிதர்களுக்கு ஏற்படுத்தி விட்டது.

எனக்குத் தெரிந்தவொரு பெண்மணி கூறினார் : தற்போது, ஒரு விழாவுக்கு வேண்டிய புதிய சாறியை ஒரு முறை அணிந்துவிட்டு நாம் அதை எறிந்து விடுவோம். அடுத்த முறை, அதைக் கட்ட முடியாது. புதிய டிசையின் வரும். அதைத்தாம் கட்ட வேண்டும். " எனக்கு, இது முற்றிலும் புதிய விடையமாத் தெரிந்தது. பின்புதாம் நம் போலிப் பிரமாண்டத்தின் கோடம்பாக்கச் சூழ்ச்சி புரிந்தது. இதுதாம் இன்றைய யதார்த்தம்.

போராட்டம் , விடுதலை என்பதெல்லாம் வந்தடைந்த கோலமும் இப்படித்தாம் பிழைப்புவாதமாச்சு.

"தமிழீழ விடுதலை" சொல்லி , இலட்சக் கணக்கான பிணங்களாக மக்களை ஆக்கிவைத்து நிதி சேகரித்தவர்கள் எல்லோரும் தற்போது புலத்தில் பெரும் வணிகக் குடும்பங்களாக வலம் வருகிறார்கள். பிரமாண்ட மனிதர்களாகத் தம்மை உருவாக்கி வைத்து, நம்மை மனோவியல் ரீதியாகத் தாக்கி அழிக்கின்றார்கள்! தமக்கு முன் நம்மைச் செல்லாக் காசாக்கியும் விட்டார்கள். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இவர்கள் , ஒரு தோற்பையோடு விமானம் ஏறி, அகதியாகப் பிழைக்கப்பட்ட வாழ்வு மக்களிடம் கொள்ளையிட்ட பணத்தின் மூலம் தொடைத்தெறியப்பட்டுப் பிரமாண்ட போலி மனிதர்களை -தனிநபர்வாத உச்சக் கொம்பர்களை ; கொம்பிகளை உருவாக்கியதுள் தமிழீழவிடுதலைப் போராட்டம் முக்கிய பங்கு வகித்துள்ளது.அதையொட்டி இன்றைய இரண்டாந் தலைமுறை மகிழ்ந்துவிடலாம்!
அவர்கள் , கனடாவில் வைத்தியக்கும் நிதியானது மட்டும் பல இலட்சம் கோடி அமெரிக்க டொலாராக இருக்கிறது.

இவையெல்லாம் அப்பாவிகளிடம் "தமிழீழ விடுதலை" சொல்லித் தட்டிப்பறித்தவை என்பதுள் சந்தேகமில்லை!

இவர்களது விளம்பரப் பிரமாண்டங்கள் உருவாக்கும் கருத்தியலும் ( Tamil Entertainment Television (TET) )அதுசார்ந்த மனித மாதிரிகளும் மிக அற்பத்தனமான மனிதர்களை நமக்குள் உலாவிட்டுள்ளது.

"போராட்டம் -விடுதலை " என்பதெல்லாம் இந்த மனித மாதிரிகளுக்கு அவசியமற்றது. இவர்களது நாவில் போலித்தனமாக உறவாடும் இந்தக் கோசங்களைக் கடந்து, நிலத்தில் மனிதர்கள் இலங்கைத் தேசத்தின் வாழ்வுக்குள் நுழைந்தே தீருவார்கள்.

அவர்கள் , இலங்கையின் இறைமைக்குட்பட்ட வாழ்வையும் , அத்தேசத்துக்குள் பொருண்மிய வாழ்வுக்கானவொரு பொது மொழியாகச் சிங்களத்தையும் பேசித் தம்மை இலங்கையராக்கியே தீருவார்கள். இதுதாம் 21 ஆம் நூற்றாண்டின் பொருளாதாரத் தேவையும் கூட.

பேர்லின் (Berlin) கணேச மூர்த்தி அவர்கள் கூறியமாதிரி :" இந்தியா, அவுஸ்திரேலியா, கனடா முதல் மேற்கு ஐரோப்பிய நாடுகள் முழுவதும் குடியேறிகளாகச் சென்ற தமிழ்தேசியவாதிகள் ,அந்த நாட்டுப் "பிரசைகளாக" ஆகிவிட்ட கொழுப்பெடுத்த யாழ்.மத்தியதர வர்க்கத் தமிழர்கள் , சோத்துக்கு வழி தேடக் கிழக்கில் குடியேறிய ஏழைச் சிங்கள மக்களை தமிழர்களின் நிலத்தைப் பறிக்க வந்தவர்களாகக் கற்பித்தனர். புகலிடத் தமிழர்கள் தாம் குடியேறிய நாடுகளில் ஐரோப்பியர், ஆபிரிக்கர், ஆசியர், லத்தீன் அமெரிக்கர் என்று உலகெல்லாம் உள்ள முன் பின் கேட்டுக் கண்டறியாத மக்களுடன் எல்லாம் வாழ்வார்கள். பல்லினக் கலாச்சாரத்துக்கு ஆட்படுவார்கள் ஆனால் , இலங்கையுள் சொந்த நாட்டுக்குள் மட்டும் சிங்களவர்களுடன் வாழ மறுக்கின்றார்கள். தொட்டால் , பட்டால் தீட்டு என்கிறார்கள். இந்த அநாகரீகர்களை மனித நாகரீகம் திருத்தியெடுக்க இன்னமும் எத்தனை சகாப்தங்கள் தேவை? ; "நாம் இலங்கையர் " என்று சிந்திப்பது என்ன , அத்தனை பெரிய துரோகமா? தமிழர், முஸ்லிம், சிங்களவர், பறங்கியர், வேடர் என்று எல்லா மக்களும் இலங்கையர் என்ற கூட்டுள் ஐக்கியப்படாமல் எப்படி சோசலிசம் வரும்? "

நிலத்து மக்கள் இலங்கைத் தேசியவின உருவாக்கத்துக் கேற்ப வாழ்வைத் தெரிவார்கள் -இனிப் போராட்டம் , விடுதலை என்பது இலங்கையில் தொழிலாளரது உரிமை சார்ந்த பொருளாதார வாதமாகவே இருக்கும்.
தமிழ்த் தேசியம் , விடுதலை , சுயநிர்ணயம் அனைத்துக்கும் அவர்கள் Good Bye சொல்லிச் சிங்களச் சமுதாயத்தோடு கலந்து -இசைந்து ,இணைந்து இலங்கைத் தேசிய இனமாகவும் , பொதுமொழியான சிங்களத்தை முதன்மை மொழியாகவும் ஏற்றுக் கொள்வர். இது. ஒரு வகையில் சரியானதும் , நேர்மையானதும் -அவசியமானதுங்கூட இந்தப் புலத்துத் "தமிழர்கள்" தம் போலிப் பிரமாண்டத்தின் முன்!

ப.வி.ஶ்ரீரங்கன்
16.05.2016


Read more...

Thursday, May 12, 2016

இலங்கை அரசாங்கம் IMF ன் சிக்கன கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தத் தொடங்குகிறது. By Saman Gunadasa

சர்வதேச நாணய நிதியம் (IMF), கடந்த வாரம் 1.5 பில்லியன் டாலர் பிணையெடுப்பு கடன் வழங்குவதற்காக இலங்கை அரசாங்கத்துடன் உடன்பாட்டை எட்டியுள்ளதாக அறிவித்தது. நாட்டின் ஆபத்தான அந்நிய செலாவணி நெருக்கடியை தடுப்பதற்காக மூன்று ஆண்டுகள் நீடிக்கப்பட்ட நிதிவசதி கடனைப் பெற கொழும்பு முயற்சித்திருந்தது.

ஜூன் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக்குழு ஒப்புதல் தர வேண்டிய இந்த உடன்படிக்கை, சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் முன்னெடுக்கும் பிரதான சமூக சிக்கன வெட்டுக்களுக்கு கீழ்ப்பட்டதாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை குழுவின் தலைவர் டாட் ஸ்னைடர், ஊடகங்களுக்கு கூறும் போது, இந்த உடன்படிக்கை "முன் நடவடிக்கைகளை நிறைவு செய்வதுடன்" பினைந்துள்ளது, என்றார். வேறு வார்த்தைகளில் கூறினால், சர்வதேச நாணய நிதியத்தின் ஜூன் கூட்டத்திற்கு முன்னதாக வங்கியின் கோரிக்கைகளை செயல்படுத்த தொடங்கினால் மட்டுமே கொழும்புக்கு கடன் கிடைக்கும்.

உத்தியோகபூர்வ சர்வதேச நாணய நிதிய ஒப்புதல், "ஏனைய பல்தரப்பு மற்றும் இருதரப்பு கடன்களில் மேலதிகமாக 650 மில்லியன் டாலர் கடனை கிடைக்கச் செய்யும், இதன் மூலம் சுமார் 2.2 பில்லியன் டாலர்கள் மொத்த உதவி (நடப்பில் உள்ள நிதி ஏற்பாடுகளுக்கு மேலாகவும் அதிகமாகவும்) கிடைக்கும் என்று ஸ்னைடர் கூறினார். "ஏனைய பல்தரப்பு மற்றும் இருதரப்பு கடன்கள்” உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியில் இருந்தும் எதிர்பார்க்கப்படுகின்றது என்று அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இலங்கையின் உடனடி அந்நிய செலாவணி நெருக்கடி அபாயத்தை எளிதாக்கினாலும் கூட, நாட்டின் B+/ எதிர்மறை தரமிடலில் மாற்றம் இருக்காது என்றும் ஃபிட்ச் தரமிடல் முகவரமைப்பு செவ்வாயன்று எச்சரித்திருந்தது. "வெளி மற்றும் பொது நிதி நடவடிக்கைகளில் நிலவும் நீண்டகால பலவீனங்களை அகற்றுவதற்கு" அரசாங்கத்தின் பக்கம் "நீடித்த அர்ப்பணிப்பு" அவசியப்படுகின்றது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனும் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளைப் பற்றி கலந்துரையாட கடந்த மாதம் வாஷிங்டன் சென்ற பிரதிநிதிகளுக்கு தலைமை வகித்தனர். இந்த நடவடிக்கைகளில், பெறுமதி சேர் வரி (VAT); ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை துரிதமாக தனியார்மயப்படுத்துவது உட்பட அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை சீர்திருத்துவது; மின்சாரம் மற்றும் எரிபொருள் விலையை சந்தையை நிர்ணயிக்க விடுவது; மற்றும் ஒரு நெகிழ்வான நாணய மாற்று விகிதத்தை பராமரிப்பதும் அடங்கும்.

கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.4 சதவீதத்தை எட்டிய வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை அரசாங்கம் கடுமையாக குறைக்க வேண்டும் என்பதே சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய கோரிக்கை ஆகும். அது இந்த ஆண்டு 5.4 சதவீதமாகவும் 2020ம் ஆண்டில் 3.5 சதவீதமாகவும் குறைக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கின்றது.

திங்களன்று அரசாங்கம் பெறுமதி சேர் வரியை (வாட்) 11ல் இருந்து 15 சதவீதம் வரை அதிகரித்த அதே வேளை மின்சாரம், பொதுப் போக்குவரத்து, கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு போன்ற சேவைகளுக்கும் அரிசி, பாண், கோதுமை மா, பால், மசாலா மற்றும் மருந்துகளுக்கும் இந்த வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்தது. எனினும் ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகளதும் அதிக விலை உயர்வு, விலக்களிக்கப்பட்ட பொருட்களின் விலைவாசியையும் உயர்த்தும். பெறுமதி சேர் வரியானது தனியார் கல்வி மற்றும் தனியார் மருத்துவ பராமரிப்பின் மீது சுமத்தப்படுவதானது, இலங்கையின் ஏற்கனவே சீரழிந்து தொங்கிப்போயுள்ள சுகாதாரம் மற்றும் கல்வி முறை மீது மேலும் அழுத்தத்தை திணிக்கும்.

அரசாங்கம் 2 சதவீத தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது மின்சாரம், தொலைத் தொடர்பு சேவைகள் மற்றும் மசகு எண்ணெய்க்கும் விதிக்கப்படும். பெறுமதி சேர் வரி மற்றும் இதர வரிகளும் அரசாங்க வருவாயை 100 பில்லியன் ரூபாய்கள் (685.6 மில்லியன் டாலர்கள்) வரை அதிகரிக்கும் என்று நிதி அமைச்சர் கருணாநாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

கொழும்பில் வெளிவரும் சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு சமீபத்திய ஆய்வு குறிப்பிட்டுள்ளதாவது: "தொலைபேசி, தண்ணீர் மற்றும் மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு மேலாக, பல்வேறு பொருட்களின் விலை அதிகரிப்பதையும் கணக்கில் எடுத்தால், ஒரு சராசரி குறைந்த வருமானம் பெறும் அல்லது மத்தியதர வர்க்க குடும்பத்திற்கு [மாதத்திற்கு] 10,000 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை அதிகமாக செலவிட நேரும்."

ஞாயிறன்று தனது வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க) ஒரு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் "தனியார் மயமாக்கப்படாமல் இலாபம் தரும்" ஸ்தாபனங்களாக ஆக்கப்படும் என்று அறிவித்தார்.

அரச வங்கிகள் உட்பட இந்த நிறுவனங்கள், ஒரு “பொது சொத்து நம்பிக்கையின்” கீழ் கொண்டுவரப்பட்டு "மக்களுக்கே சொந்தமானதாக இருக்கும்" என்று அவர் கூறிக்கொண்டார். விக்கிரமசிங்கவின் "மக்களுக்கே சொந்தமானது" என்ற கூற்று, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை மூடிமறைப்பதற்கான மற்றொரு அவநம்பிக்கையான முயற்சியாகும்.

சில காலம் விக்கிரமசிங்க, சிங்கப்பூர் டாமாசெக் (Tamasek) மாதிரி என்று அழைக்கப்படுவதை அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை நிர்வகிக்க பயன்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். டாமாசெக் ஹோல்டிங் லிமிடெட், அரச நிறுவனங்களை கட்டுப்படுத்தவும் அவற்றை வணிக அடிப்படையில் இயக்குவதற்கும் சிங்கப்பூர் அரசாங்கத்தால் நிறுவப்பட்டது.

பிரமாண்டமான கடன் சுமை மற்றும் வளரும் அந்நிய செலாவனி நெருக்கடியின் கீழேயே கொழும்பு சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற முயன்றது. திருப்பி செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடன்கள் இந்த ஆண்டு 4.56 பில்லியன் டாலர்களாக அதிகரித்ததுடன் கடந்த ஆண்டு அந்நிய செலாவணி பற்றாக்குறை 1.5 பில்லியன் டாலர்களை அடைந்ததோடு 2015ல் வெளிநாட்டுக் கடன்கள் 44.8 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளன. வெளிநாட்டு நாணய இருப்பு, ஜனவரி முதல் 1 பில்லியன் டாலர் கீழிறங்கி 6.3 பில்லியன்களுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.

வெளிநாட்டு இருப்புக்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதியை குறைத்துவிட்ட உக்கிரமடைந்து வரும் உலக பொருளாதார பின்னடைவே ஆகும். ஒரு மில்லியனாக மதிப்பிடப்படும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் வருமானம், மத்திய கிழக்கில் பெருகி வரும் போர் நிலைமை காரணமாக தொடர்ந்து வீழ்ச்சியடைகின்றது. இந்த வெளிநாட்டுப் பணம் இலங்கைக்கு உயர்ந்த அந்நியச் செலாவணி வருமானத்தை ஈட்டித் தருபவையாக உள்ளன.

மத்திய வங்கியின் சமீபத்தில் வெளியான ஆண்டு அறிக்கையில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது 2014ல் 4.9 சதவீதமாக இருந்து கடந்த ஆண்டு 4.8 சதவிகிதமாக குறைந்துவிட்டதை காட்டுகிறது. மூலதன பொருளாதாரம் ஆய்வாளர் கிறிஸ்டல் டான், அது இந்த ஆண்டு சுமார் 4.5 சதவீதம் வீழ்ச்சியடையும் என்று முன்கணித்துள்ளனர். இந்த "வளர்ச்சி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலும் மந்தகதியாகும் வாய்ப்பு உள்ளது," என்று அவர் கூறினார்.

இலங்கையின் பெரும் வர்த்தகர்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாடு பற்றி களிப்படைந்துள்ளனர். உத்தியோகபூர்வ அறிவிப்பால் கொழும்பு பங்குச் சந்தை 1 சதவீதம் எழுச்சி கண்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விக்கிரமசிங்க மற்றும் ஏனைய அரசாங்க அமைச்சர்கள், கடன் நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் இராஜபக்ஷ போன்ற, தற்போதைய அரசாங்கமும் பெருகிவரும் வெளிநாட்டு கடன்கள் சிலவற்றை செலுத்த, கடந்த ஆண்டு நாணய பேரம்பேசல் மூலமும் அரசு இறைமை முறிகளை விற்றும் 6 பில்லியன் டாலர்களை கைமாற்றாகப் பெற்றுள்ளது.

2009 ஆம் ஆண்டில், இராஜபக்ஷ அதிகாரத்தில் இருந்த போது, அவரது அரசாங்கம் அந்திய செலாவணி நெருக்கடியை தடுப்பதற்காக 2.6 பில்லியன் டாலரை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனாகப் பெற்றது. சர்வதேச நாணய நிதியம் கடும் தாக்குதல்களை கோரியது. இதனால் அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வை இராஜபக்ஷ முடக்கி வைத்ததோடு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது வரிகளை திணித்தார்.

2015 ஜனவரியில் பதவிக்கு வந்த ஜனாதிபதி சிறிசேன, வாஷிங்டன் ஆதரவிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையை அடுத்து, வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதாகவும் ஜனநாயக உரிமைகளை மீண்டும் ஸ்தாபிப்பதாகவும் வாக்குறுதி கொடுத்து, இராஜபக்ஷவுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பை சுரண்டிக்கொண்டார்.

ஆட்சிக்கு வந்து 16 மாதங்களுக்குள், சிறிசேன-விக்கிரமசிங்க நிர்வாகம் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, மக்களின் பரந்த தட்டினரின் வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் மீது முன்னெப்போதும் இல்லாதளவு தாக்குதலை கட்டவிழ்த்துவிடத் தொடங்கியுள்ளது. இந்த சமூக தாக்குதல்கள், தொழிலாள வர்க்கப் போராட்டங்களும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பும் வெடிப்பதை காணும்.

Read more...

Wednesday, May 11, 2016

வடக்கிலுள்ள விதவைகளின் சோகக்கதை - டிலிஷா அபேசுந்தர

யுத்த விதவைகள்

சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பம் முல்லைத்தீவின் தென்கிழக்கில் அமைந்துள்ள war widowsநந்திக்கடலேரியில் உள்ள தண்ணீரை கொதிக்க வைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் நாங்கள் செல்வராஜியின் இருப்பிடத்துக்குச் சென்றோம். அலங்கோலமான நிலையில் இருந்த அவரது சிறிய வீட்டின் சுவர்களினூடாக, ஒரு சோகமான கடந்தகாலத்தின் இருண்ட நிழல்களை முற்றாக காணக்கூடியதாக இருந்தது. “போரின் உச்சக்கட்டத்தின்போது ஒரு ஷெல் தாக்குதலில் எனது கணவரும் மற்றும் எனது பிள்ளைகளில் மூவரும் கொல்லப்பட்டார்கள். இப்போது மீதமாக உள்ள மூன்று பிள்ளைகளுடன் மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் எனது வாழ்க்கையை கொண்டு நடத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன.” என்று செல்வராஜி தெரிவித்தாள்.

தனது மூன்று பிள்ளைகளுடன் முல்லைத்தீவு, கோப்புலவில் வாழும் 47 வயதான செல்வராஜி (உண்மைப் பெயரல்ல) போர் முடிவடைந்ததின் பின்னர் இரண்டரை வருடங்களுக்கு மேலாக உள்ளக இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களிலேயே (ஐ.டி.பி) வாழ்ந்துள்ளாள். போரின்போது அவளது கணவர் வலியமுள்ளிவாய்க்காலில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ யின் பதுங்கு குழிகளுக்குள் இனிப்பு விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தினார். துரதிருஷ்டவசமாக 29 மே 2009ல் அவளது கணவருடன் சேர்ந்து மூன்று பிள்ளைகளும் ஒரு ஷெல் தாக்குதலில் அழிந்துபோனார்கள். அந்த தாக்குதலில் உயிர்பிழைத்த மற்ற இரண்டு பிள்ளைகளும் அங்கவீனர்களாகி விட்டார்கள். தற்போது செல்வராஜி இந்த இரண்டு விசேட தேவையுடைய பிள்ளைகளுடனும் மற்றும் இன்னொரு பிள்ளையுடனும் சேர்ந்து வாழ்க்கை நடத்தவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளாள். இந்த சுமையான வாழ்க்கையும் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டமும் ஒருபோதும் ஒரு முடிவுக்கு வரப்போவதில்லை.

“எனது பிள்ளைகளில் ஒன்று மட்டுமே வேலை செய்கிறது. மீன்பிடித் தொழிலின் மூலம் அவன் சிறிது பணம் சம்பாதிக்கிறான். அவனது உழைப்பிலேயே எங்களது முழுக் குடும்பமும் தங்கியுள்ளது. அவன்கூட தனது வேலையை அதற்கான எந்தவித வசதியும் இல்லாமலே செய்து வருகிறான். அரசாங்கம் எங்களுக்கு மீன்பிடி வலைகளை வழங்குவதாக வாக்களித்துள்ள போதிலும் இதுவரை எங்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. விசேட தேவையுடைய எனது பிள்ளைகளால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னால் அவர்களை எங்கும் அனுப்பவும் முடியாது. ஒரு இடைநிறுத்தலும் இல்லாமல் செல்வராஜி தனது சோகத்தை கொட்டித் தீர்த்தாள்.

“வாழ்வதற்கு எங்களுக்கு பணம் அவசியமாக உள்ளது. பிள்ளைகளுக்கு மருந்து வாங்க எங்களுக்கு பணம் அவசியமாக உள்ளது. முன்னர் இராணுவம் அவர்களுக்கான சிகிச்சையை வழங்கியது. கிராமத்தவர்களுக்கு உணவு தயாரித்துக் கொடுத்து நானும் கூட சிறிதளவு பணம் சம்பாதிக்கிறேன். எங்களை வறுமை வாட்டுவதால் அதைக்கொண்டு தொடர்ந்து வாழ்வதுகூட கடினமாக உள்ளது.”

இந்த அவலநிலை முல்லைத்தீவுக்கு மட்டும் என்று வரையறுக்கப் படவில்லை. பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களால் நடத்தப்பட்ட புலனாய்வில் கிட்டத்தட்ட 40,000 – 60,000 வரையான பெண்கள் வடக்கில் விதவைகளாக மாறியுள்ளார்கள் என்பது வெளிப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின்படி 50,000 குடும்பங்களை பெண்கள் தலைமையேற்று நடத்துவதாக தெரியவந்துள்ளது. புள்ளிவிபர திணைக்களத்தின் 2012 – 13 குடும்ப பிரிவு வருமானம் மற்றும் செலவு அறிக்கையின்படி, பெரும்பான்மையான பெண்கள் தலைமையிலான குடும்பங்களை தலைமையேற்று நடத்தும் பெண்கள் 49 – 50 வயதைச் சேர்ந்த குழுவினராக உள்ளார்கள். அவர்களில் பாதிப்பேர் விதவைகள்.

30 வருட யுத்தம் வடக்கிலுள்ள விதவைகளின் வாழ்க்கையை சீரழித்து விட்டது. “யுத்தம் முடிவுற்றதின் பின்னரும் யுத்த விதவைகளின் பிரச்சினை ஒரு தீவிரமான விடயமாகிவிட்டது. இப்போதுதான் அதன் உண்மையான தாக்கம் வெளிப்படத் தொடங்கியுள்ளது. பொருளாதார ரீதியில் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள்” இவ்வாறு சொன்னார் முல்லைத்தீவு மாவட்டத்தின் மேலதிக மாவட்டச் செயலாளர் திரு. எம். மோகன்தாஸ். இதில் nரும் பிரச்சினையாக இருப்பது இந்தப் பெண்கள் தங்கள் குடும்பங்களைக் காப்பாற்றுவதற்கான போதிய வழிகள் இல்லாமலிருப்பதுதான். யுத்தத்துக்குப் பின்னர் வடக்கு சில உட்கட்டமைப்பு முன்னேற்றங்களுக்கு சாட்சியாக இருந்தபோதும், அது செல்வராஜியைப் போல வறுமையில் வாடும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பெரிதாக எதையும் செய்துவிடவில்லை. “போரின்போதுகூட எங்களுக்கு வேலைக்கான எந்த வழியும் கிடைக்கவில்லை. அதனால்தான் எனது கணவர் இனிப்பு விற்க முயற்சித்தார். இப்போது கூட பணம் சம்பாதிப்பதற்கு சாதகமாக எந்த நிலையும் இல்லை. அயலவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுப்பதின் மூலமே என்னால் சிறிதளவு பணம் தேட இயலுமாக உள்ளது” என செல்வராஜி சொன்னார். அதேபோல வடக்கிலுள்ள பெண்களின் மத்தியிலுள்ள வேலையில்லா பிரச்சினையை மோகன்தாஸ் அவர்களும் கூட உறுதிப் படுத்தினார்.

விதவைகளுக்கான அரசாங்கத்தின் உதவி போதுமானதா?

2014 அரசாங்க புள்ளிவிபரங்களின்படி ஸ்ரீலங்காவிலுள்ள பெண்களின் மத்தியில் வேலையின்மை 65 விகிதமாக உள்ளது. பெரும்பான்மையான பெண்கள் வேலையற்று இருக்கும் முதல் நான்கு மாவட்டங்களில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களே முன்னிலை வகிக்கின்றன. தற்சமயம் இங்குள்ள யுத்த விதவைகளுக்கு அதிகாரமளிக்கும் வகையிலான ஒரு திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு யுத்த விதவைகளுக்கு சுய வேலைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 5.43 மில்லியன் ரூபாக்களை ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 181 குடும்பங்களுக்;கு மாதாந்த உதவித் தொகையாக ரூபா 30,000 கிடைக்கக்கூடும். மேலும் யாழ்ப்பாணத்தில் 54,000 குடும்பங்கள் சமுர்த்தி நலன்களை பெற்று வருகின்றன. எனினும் எத்தனை யுத்த விதவைகள் சமுர்த்தி உதவிகளைப் பெறுகிறார்கள் என்று யாழ்ப்பாண மாவட்டச் செயலக அலுவலகத்தில் உள்ள சமுர்த்தி அதிகாரியிடம் விசாரித்தபோது, அந்த எண்ணிக்கை தனக்குத் தெரியாது என அவர் சொன்னார். இதற்கு அப்பால் அரசாங்கம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபா உதவித்தொகை வழங்கும் ஒரு திட்டத்தையுமகூட ஆரம்பித்துள்ளது.

எனினும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியது, இந்த திட்டம் யுத்த விதவைகளில் கவனம் செலுத்தப்பட்டதைப் போன்ற ஒன்று அல்ல, மற்றும் “யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்” என்கிற பிரிவின் கீழ் எந்த வகையான குடும்பங்களை அனுமதிப்பது என்று அரசாங்க அதிகாரிகள் மத்தியில் ஒரு தெளிவான யோசனை இல்லாமலுள்ளது என்று.

கையில் போதுமான நிதி இருந்தும் அதிகாரிகள் தேவையானவர்களுக்கு அதை வழங்காமல் உள்ளார்கள். அவர்கள் ஏன் நிதியை கொடுக்காமல் இருக்கிறார்கள் என்று வினாவியபோது, பல்வேறு தேவைகள் உள்ள குழுக்களை அவர்கள் இன்னமும் அடையாளம் காணவில்லை என அவர்கள் தெரிவித்தார்கள். எப்படி அவர்கள் பணத்தை வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்று கேட்டபோது, குடும்பங்கள் தனிப்பட்ட முறையில் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தார்கள்.

அப்போது அவர்களிடம்; மக்கள் ஒருபோதும் அப்படியானவற்றை செய்ய மாட்டார்கள் என அவர்களுக்கு நான் விளக்கினேன்” என விக்னேஸ்வரன் சொன்னார். தான் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் தேவையுள்ள குடும்பங்களை கண்டறிவதற்காக களப் பணிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியதாகச் சொன்னதுடன் அவர் மேலும் தெரிவித்தது, இந்த உதவித் தொகையை 6,000 ருபாவாக அதிகரிக்கும்படி தான் முன்வைத்த கோரிக்கைக்கு பிரதம மந்திரி கூட செவிமடுத்துள்ளார் என்று. “ஒருங்கிணைந்த நிதியிலிருந்து எங்களுக்கு கிடைத்துள்ள 6 மில்லியன் ரூபா நிதியையும் யுத்த விதவைகளின் நலன்களுக்காக ஒதுக்கத் தீர்மானித்துள்ளோம். சமீப காலம்வரை வட மாகாண சபையில் பெண்கள் விவகாரங்களுக்காக ஒரு அமைச்சு இருக்கவில்லை. இப்போது நாங்கள் அப்படியான ஒரு அமைச்சை உருவாக்கி உள்ளோம். இதற்காக அரசாங்கத்திடம் இருந்து நாங்கள் எந்த நிதியையும் பெறவில்லை. சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து இதற்கான நிதியை கோரியுள்ளோம்” என அவர் தெரிவித்தார்.

இந்த விடயம் பற்றி தன்னுடைய கருத்தை தெரிவிக்கும்போது வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே சொன்னது, அரசாங்கமும் மற்றும் சர்வதேச நிறுவனங்களும் வடக்கை மீள் கட்டுமானம் செய்வதற்கு பெருந்தொகையான பணத்தை செலவிட்டுள்ள போதிலும், அதனால் இன்னமும் போரினால் எற்பட்ட வடுக்களை குணமாக்க முடியவில்லை என்று. “வடக்கிலுள்ள யுத்த விதவைகளின் பிரச்சினையில் இரண்டு பிரதான காரணங்கள் நிலமையை மோசமாக்கி வருகின்றன. முதலாவது இந்த பிரதேசத்தில் உள்ள மொத்த மக்கள் தொகை விகிதத்தில், பெண்களின் எண்ணிக்கை மிகவும் உயர்வாக உள்ளது. யுத்தத்தில் ஏராளமான உயிர் இழப்பு ஏற்பட்டு உள்ளதால், நிலமை இன்னும் மோசமடைந்துள்ளது.

இரண்டாவது காரணம் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு வருமானம் தேடவேண்டிய war-widowsஅதேவேளை பிள்ளைகளுக்கு உணவு ஊட்டுதல், கல்வி கற்பித்தல் போன்ற மேலதிக சுமைகளும் விதவைகள் மீது விழுந்துள்ளன. இந்தக் காரணங்கள் பெண்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது” என ஆளுனர் தெரிவித்தார். இதற்கிடையில் யுத்த விதவைகளுக்கான தேசிய குழுவின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி திருமதி சாந்தா அபிமன்னசிங்கம், சுட்டிக்காட்டுவது, யுத்த விதவைகளின் நலன்களுக்காக மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் ஆரம்பித்துள்ள சிறிய அளவிலான திட்டங்கள், அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை தீர்க்க போதுமானதாக இல்லை என்று. “எல்.ரீ.ரீ.ஈ கிளர்ச்சியின்போது இந்தப் பெண்களில் பெரும்பாலானவர்கள் அரசாங்க மற்றும் ஏனைய கைவிடப்பட்ட நிலங்களில் பயிர்ச்செய்கையை முன்னெடுத்து வாழ்ந்து வந்தார்கள். பெரும்பாலான நிலங்கள் இராணுவம் மற்றும் அதேபோல நீண்ட காலங்களுக்கு முன்னர் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த உரிமையாளர்கள் கைகளுக்கு சென்றது முதல், அவர்களின் வாழும்வழி அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அவர்கள் தங்கள் வீடுகளைக்கூட இழந்து விட்டார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் இன்னும் உயர்வடைந்துள்ளதால், அவர்கள் உயிர்வாழ்வதற்கு பல சிரமங்களுக்கு முகம் கொடுக்கவேண்டி உள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

“இது அவர்கள் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதை தடுத்துள்ளது. புத்தகங்கள் மற்றும் போக்குவரத்துக்கான செலவை அவர்களால் கொடுக்க இயலாமல் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் கல்வி அறிவற்ற இளைஞர்கள் ஆபத்தான வழிகளில் விழுந்துவிடுவதற்கான ஒரு ஆபத்து ஏற்படுகிறது” என்று அபிமன்னசிங்கம் சொன்னார்.

தற்போது ஒரு பெண் தனியாக சமூகத்தில் வாழ்வது நடுக்கடலில் தவிக்க விடப்பட்டதை போன்ற ஒரு நிலை. விசேடமாக தனது குடும்பத்தை காப்பாற்றும் சுமையை எற்றுக்கொண்டுள்ள பெண்கள் நாதியற்றவர்களாக விடப்பட்டுள்ளார்கள், அநேகமாக அக்கிரமக்காரர்களுக்கு இலகுவான இரையாக அவர்கள் மாறிவிடுகிறார்கள். மறுமணம் புரிவது ஸ்ரீலங்கா கலாச்சாரத்துக்கு, விசேடமாக வட பகுதியில் அவ மரியாதையான செயலாகக் கருதப்படுகிறது. அதனால் வடக்கில் உள்ள விதவைகள் உயிர்வாழ்வதற்கு எண்ணற்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். வேலையின்மை, பொருளாதார சிரமங்கள், பிள்ளைகளின் கல்வி, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளை இந்தப் பெண்கள் எதிர்கொள்கிறார்கள். கிளிநொச்சியில் மாத்திரம் 1237 யுத்த விதவைகள் உள்ளனர். 4967 விதவைகளில் 1442 பேர்களின் விதி, யுத்தத்தின் காரணமாக பாதிப்பு அடைந்துள்ளது. 40 வயதுக்கு குறைவான பெண்களின் தலைமையில் 985 குடும்பங்கள் உள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் பெண்கள் தலைமையிலான 13,000 குடும்பங்கள் உள்ளன.

பரமேஸ்வரியின் கதை

34 வயதான பரமேஸ்வரியின் கணவன் 2009ல் ஒரு கண்ணிவெடியில் அகப்பட்டு மரணமடைந்தார். நான்கு பிள்ளைகளின் தாயாக இருந்த அவள் ஒரு கஷ்டமான வாழ்க்கை வாழ்கிறாள்.”எனது கணவர் மரணமானபோது எனது கடைசி மகளுக்கு வயது இரண்டு மாதங்கள் மட்டுமே. எனது கணவர்தான் எனது குடும்பத்தை காப்பாற்றி வந்த ஒரே ஆள். அவர் ஒரு மீனவர். நான் எனது 16ம் வயதில் திருமணம் செய்தேன். எனது தந்தைகூட கடலில்தான் மரணமடைந்தார். எனது கணவரின் மரணத்தின் பின் எப்படி தனியாக உயிர் வாழ்வது என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அப்போது பல பிரச்சினைகள் இருந்தன. எனது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப நான் விரும்பியபோதிலும் அது சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்தது. உயிர்வாழ்வதற்கான அனைத்து நம்பிக்கைகளையும் நான் கைவிட்டு விட்டேன் ஆனாலும் எனது பிள்ளைகளுக்காக நான் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தேன். 2010 ல் ஒரு தொண்டு நிறுவனம் எனது உதவிக்கு வந்தது. இப்போது நான் இனிப்பு விற்று எனது வாழ்க்கையை கொண்டு செல்கிறேன், ஆனால் எனது பிள்ளைகளை காப்பாற்ற அது போதுமானதாக இல்லை. இப்போது எனது மூத்த மகன் ஒரு கூலியாளாக வேலை செய்கிறான்”. பரமேஸ்வரி மன அழுத்தத்துடன் வாழ்கிறாள். அவளது உறவினர்களிடமிருந்து அவளுக்கு உதவிகள் கிடைத்த போதிலும் ஒரு தந்தையையும் மற்றும் கணவனையும் இழப்பது மிகவும் தீவிரமான ஒரு பிரச்சினை. மறுமணம் செய்வதில் அவளுக்கு உள்ள வெறப்பை அவள் வெளிக்காட்டினாள்.

மறுமணம் செய்வதைப் பற்றி நான் யோசித்தேன் ஆனால் எனது பிள்ளைகள் என்னைச்சுற்றி உள்ளபோது என்னால் அதைச் செய்ய முடியவில்லை. திரும்பவும் திருமணம் செய்த அப்படியான ஒரு பெண் எங்கள் கிராமத்தில் இருக்கிறாள், ஆனால் கிராமத்தவர்கள் அளைப்பற்றி தரக்கறைவாக பேசினார்கள். அத்தகைய அவமானங்களால் பாதிப்படைய நான் விரும்பவில்லை. பிள்ளைகளுக்கு அது நல்லதல்ல. திருமணம் செய்த பின்னர் என்னால் அவர்களைக் கவனிக்க முடியாமல் போனால் அவர்களுக்கு என்ன நடக்கும்?”

மறுமணம் பற்றிய பிரச்சினையை பரமேஸ்வரி இப்படித்தான் பார்க்கிறாள். ஒரு விதவைக்கு மறுமணம் எல்லை தாண்டிய ஒன்றா? வடக்கிலுள்ள பெரும்பாலான விதவைககளுக்கு அது தங்கள் மதக் கலாச்சாரத்தக்கு விரோதமான செயல் மற்றும் அவர்கள் தொடர்ந்து தனியாகவே வாழ்ந்து வாழ்க்கையின் சிரமங்களை தாங்கிக் கொள்கிறார்கள். அதற்கு மேல் புதிய கணவர் விசுவாசமானவராக இருப்பாரா மற்றும் பிள்ளைகள் நன்கு கவனிக்கப் படுவார்களா என்கிற சந்தேகங்களும் அவர்களுக்கு உள்ளது.

யாழ்ப்பாண பெண்கள் அபிவிருத்தி மையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், 52 வீதமான பெண்கள் மறுமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்கள் ஆனால் 42 விகிதமானவாகள் அதுபற்றி கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்கள். துஷ்பிரயோகத்துக்கு உள்ளாவது பற்றி அநேகர் பேசவில்லை. அதனால் தமிழ் சமூகம் இந்த யுத்த விதவைகளிடத்தில் அதிகம் பரிவும் மற்றும் மனிதாபிமானமும் காட்ட வேண்டும்.

சீதனப் பிரச்சினையும் கூட பல விதவைகளை மறுமணம் செய்வதைப்பற்றி சிந்திப்பதிலிருந்து தடுத்துள்ளது என்று மையம் தெரிவிக்கிறது. அழிவுக்குப் பின் எஞ்சியவற்றில் இருந்து தனது வாழ்க்கையை உருவாக்கிய ஒரு பெண்ணுக்கு சீதனத்தை தேடுவது என்பது அடுப்பிலிருந்து நெருப்புக்குள் விழுவதைப் போன்றதாகும். இந்தப் பெண்களுக்கு உடல் மற்றும் உள்ளம் சம்பந்தமான ஆரோக்கிய வசதிகளை வழங்கவேண்டியது அவசரமான ஒரு தேவையாகும். விதவைகள் மட்டுமன்றி அவர்களது உறவினர்களுக்கும் இந்தப் பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்.

“பெரும்பான்மையான யுத்த விதவைகள் இளம் பெண்கள். அவாகளது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்காக கலாச்சார கட்டுப்பாடுகளில் தளர்வு காட்ட வேண்டும்” என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியும் மற்றும் சமூக விஞ்ஞ}ன துறையின் தலைவருமான பேராசிரியர் ஆர். சிவச்சந்திரன் கூறுகிறார். ரி.என்.ஏ உட்பட தமிழ் அரசியல் தலைவர்கள், இந்த விதவைகள் மறுமணம் செய்வதை அனுமதிக்க வேண்டும் என்கிற ஒரு வேண்டுகோளை பொதுமக்களிடம் விடுக்கவேண்டும். “ போரின் உச்சத்தின் போதுகூட இந்தப் பெண்களுக்கு வருமானத்திற்கான ஒரு வழி இருந்தது. தங்கள் உறவினர்கள் எல்.ரீ.ரீ.ஈ யில் இருக்கிறார்கள் என்று சொல்லிக்கூட சிலர் பெருமைப்பட்டார்கள், மற்றும் அப்படியான எல்லா விடயமும் இப்போது துடைத்தழிக்கப்பட்டு வருவதினால் அவர்கள் தீவிரமான மனக்குழப்பத்துக்கு முகம் கொடுக்கிறார்கள். இவை வெளிக்காட்டப் படாவிட்டாலும் கூட சில விதவைகள் விபச்சாரம், போதைமருந்து பாவனை மற்றும் தற்கொலையில்கூட ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுவதற்கு இவைகள்தான் காரணமாக உள்ளன”.

“யுத்தம் காரணமாக சிறு வயதில் திருமணம் செய்தது, துஷ்பிரயோகங்களுக்கு உட்படுவது, மற்றும் கலாச்சாரத் தடைகள் என்பன இந்தப் பெண்கள் மத்தியில் மனக்குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது” என்று சொல்கிறார் முல்லைத்தீவு வைத்திய சாலையின் உளவியல் நிபுணர் மருத்துவர். சி.விஜேந்திரன். பல அரசியற் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் என்பன இந்தப் பிரதேசத்தில் அதிகரித்து வரும் விபச்சாரத்தைப் பற்றி தங்கள் கவலைகளைத் தெரிவித்துள்ளார்கள். இதுவரை இதபற்றிய துல்லியமான தரவுகள் கிடைக்கவில்லை. இந்த முடமான சமூக அமைப்பின் கீழ், இந்தப் பெண்கள் ஏன் இந்த இருண்ட வழிக்கு திரும்பினார்கள் என்பதில் அதிசயம் எதுவுமில்லை. வடக்கில் வாழும் ஆயிரக்கணக்கான விதவைகள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தினர்கள் ஆகியோரின் வாழ்க்கையை வெறும் பணப் பைகளினால் மட்டும் குணமாக்க முடியாது.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Read more...

Monday, May 9, 2016

இராஜவரோதயம் சம்பந்தனுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து டாக்டர் நடேசனின் பகிரங்க மடல்.

என்னை உங்களுக்கு நினைவுபடுத்திவிட்டு விடயத்துக்கு வருகின்றேன். சில ஆண்டுகளுக்கு முன்பு அவுஸ்திரேலியா மெல்பனுக்கு நீங்கள் வந்தசமயம் சந்தித்த போது, கிழக்கு மாகாணத்தை வடக்கோடு இணைக்க 65 வீதமான இஸ்லாமிய மற்றும் சிங்கள மக்கள்; ஆதாரிக்காத போது எப்படி 77இல் வடக்கு-கிழக்கு இணைந்த பிரதேசத்தை தமிழ் ஈழம் எனக் காண்பித்து எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றினீர்கள்?; என்று கேட்டபோது, தாங்கள் “48ஆம் ஆண்டில் தமிழர்கள் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்தார்கள்” என்றீர்கள். அப்பொழுது நான், “அப்படியானால் இறந்த ஆவிகளிடம்தான் நாங்கள் சர்வசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்றேன். நீங்கள் என்னை சிங்களவர் போல் பேசுவதாக குறிப்பிட்டுவிட்டு முகத்தை திருப்பி கொண்டீர்கள். உணர்ச்சி வசப்பட்ட பேச்சுகளுக்கப்பால் அறிவுசார்ந்த தர்க்கத்துக்கும் உங்களுக்கும் வெகு தூரம் என்றாலும் மக்கள் மத்தியில் வித்தியாசமான கருத்துகளை பரிமாற வேண்டிய வரலாற்றுக் காலத்தில் நாம் இருக்கிறோம். இதைத்தான் பிரபல இலங்கைத் தமிழ் ஏடும் வலியுறுத்துகிறது.
விடயத்துக்கு வருகிறேன்.

ஐக்கிய நாடுகள் சபையின் தெரிவுக் குழுவின் அறிக்கையை வரவேற்று நீங்கள் விட்ட பதில் அறிக்கையைப் பார்த்தேன்.

இலங்கை அரசபடைகளும் விடுதலைப்புலிகளும் போர் குற்றங்கள் புரிந்தார்கள் என இந்த அறிக்கையில் இருக்கிறது. இதை நம்மவர்களுக்குத் தெரிவிக்க ஐக்கிய நாடுகள் தெரிவுக் குழுதான் வேண்டுமா?
இலங்கையில் உள்ள சுப்பனும் கந்தனும் சொல்வார்களே. பண்டா, சில்வா இஸ்மயிலைக் கேட்டாலும் தெரியும்.

போர்க் குற்றம் புரிந்த விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள். மற்றைய தரப்பான இலங்கை இராணுவமும் அதன் தலைவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதுதான் உங்களதும் இந்த அறிக்கையை ஆதரிப்பவர்களதும் கருத்தும் அல்லவா?

கடந்த முப்பது வருடங்களாக விட்டு விட்டு நடந்த போரையும் இறுதியாக மூன்று வருடகாலம் தொடர்ந்து நடந்த போரையும் சிறிது திரும்பிப் பார்ப்போம்.

தமிழ்த் தலைவர்களான செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றோரின் கனவுகள் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்ற பெயரில் தனிநாட்டுத் தீர்மானமாக தமிழ் இளைஞர்கள் தலையில் சுமத்தப்பட்டது. அந்தக் கனவுகளை சுமந்து வந்த இளைஞர்களில் ஒருவர்தான் பிரபாகரன். இளைஞர்கள் ஆயுதத்தால் இலங்கை இராணுவத்தை விரட்டி விட்டு உங்களை ஆட்சி பீடத்தில் அமர்த்துவார்கள் என கனவு கண்டீர்கள்.
ஆனால் நடந்துது என்ன?

தான் கஷ்டப்பட்டு ஏன் அமிர் அண்ணைக்கு கிரீடம் கொடுக்க வேண்டும் என பிரபாகரன் நினைத்ததால் அமிர் அண்ணையையும் உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரையும் கொலை செய்தார்கள். அத்துடன் தனக்கு எதிராக வேறு போட்டி வரக்கூடாது என நினைத்து அக்காலத்தில் மேலும் பலரையும் வைகுண்டம் அனுப்பிவிட்டார். நீங்களும் உங்கள் தலைவர்களும் வைத்த நெருப்பு உங்களை மட்டுமல்ல எல்லோரையும் எரித்தது. முடிவில் உங்கள் கதவை தட்டும்போது அதாவது போர்நிறுத்த காலத்தில் உயிர்தப்பிய எல்லோரும் துப்பாக்கி முனையில் ஒன்று சேர்க்கப்பட்ட போது பிரபாகரனை மேதகு தலைவராக்கி விட்டு பாராளுமன்ற அங்கத்தவராகிவிட்டீர்கள்.

இப்படியே போனால் எதிர்காலத்தில் இலங்கைத்தமிழர்களுக்கு என்ன நடக்கும் என எண்ணிப்பார்க்கும் தூரப்பார்வை அல்லது துணிவு உங்களுக்கு 2002இல் இல்லை. மாவிலாறில் விடுதலைப்புலிகள் போரைத் துவங்கிய போதும் இல்லை. அல்லது தம்பி போனால் திண்ணை காலியாகும் என மனதுக்குள் கணக்கு போட்டீர்களா?

அதன்பின்பு உலகத்திலேயே பெரிய மோசடியான தேர்தல் நடந்தது. அதில் விழுந்த கள்ள வாக்குகளில் பலர் தெரிவு செய்யப்பட்டார்கள். (நீங்கள் இல்லை) அதன் பின் நீங்கள் எல்லோரும் போருக்கு ஆதரவாக உலகம்பூராவும் விமானத்தில் பறந்து ஆதரவு தேடியதை மறந்து விட்டிர்களா?

பொங்கு தமிழ்காலத்தில் போரை ஆதரித்து புறநானுறு படைத்த புலவர்கள் அல்லவா உங்கள் பாராளுமன்ற அங்கத்தவர்கள். அவர்களுக்கு நீங்கள் தலைவர். அதாவது இலங்கை இராணுவத்திற்கு ஜனாதிபதி மாதிரி இல்லையா?

குறைந்த பட்சம் கிழக்கு மாகாணத்தில் இராணுவம் வெற்றிபெற்ற போது உங்களுக்கு போரின் விளைவை ஊகிக்க முடியவில்லை. அப்பொழுதும் மேதகு பிரபாகரனின் தலைமையை நம்பியிருந்தீர்கள். சரி, வடக்கில் போர் தொடங்கிய போது மன்னார் புளியங்குளம் முதலிய இடங்களில் இருந்து மக்களை மந்தைகள் போல் விடுதலைப்புலிகள் கொண்டுவந்த போது மக்களைப் பாதுகாக்க கொண்டு வருகிறார் என மவுனமாக இருந்தீர்கள். ஆனந்தசங்கரி, டீ.பிஎஸ். ஜெயராஜ் மற்றும் என்னைப் போன்றவர்கள் அதற்கு எதிராக குரல்கொடுத்த போது நீங்கள் போருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தீர்கள்.

உங்களுக்கு சில சம்பவங்களை பிரத்தியேகமாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

வன்னியில் நடந்த போரில் மக்கள் உயிரிழப்பு தொடங்கியது. முல்லைத்தீவு மாவட்டத்தில், அதாவது A9 பதையின் கிழக்குப் பகுதியில் புதுக்குடியிருப்புக்கு அண்டிய பிரதேசத்தில். அப்பொழுது இராணுவம் சுதந்திரபுரத்தை பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய போது அங்கு மக்கள் இடம் பெயர்ந்தார்கள். அங்கே செஞ்சிலுவை சங்கத்தினரும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் நலன் அமைப்பினரும் சென்றார்கள். அந்த இடத்தில் அரசாங்க சேவை அமைப்புகள் சென்றபோது 200 மீட்டர் தூரத்தில் புலிகளின் குரல் வானொலியின் (container) கொள்கலத்துடன் சென்றனர் . இவர்களது முயற்சியை முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் பார்த்திபனும் ஐக்கிய நாடுகள் அகதி அமைப்பின் பிரதிநிதியும் ஆட்சேபித்தபோது வானொலிக்கு பொறுப்பாக இருந்த தமிழன்பன் நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்று கூறினார். இதன்பின் விடுதலைப்புலிகளின் ஆட்டிலரி அணியும் சுதந்திர புரத்திற்கு இடம் பெயர்ந்தது. அங்கிருந்து இராணுவத்தை தாக்கினார்கள். அந்தத் தாக்குதலுக்கு பதிலாக இராணுவம் என்ன செய்யும் என்பதை சொல்லத் தேவையில்லை.

இன்னுமொரு சம்பவம் உங்கள் கவனத்திற்கு:
2009 ஏப்பிரல் 20 ஆம் திகதி இரவு விடுதலைப்புலிகளிடம் இருந்து ஈரோஸ் பாலகுமார் குடும்பத்துடன் கடல்மார்க்கமாக வள்ளத்தில் முல்லைத்தீவில் இருந்து தப்பி ஓட முற்பட்டபோது விடுதலைப்புலிகளால் சுடப்பட்டார் . அப்பொழுது பாலகுமாரின் மகள் காயமடைந்தார். இன்னும் அந்த பிள்ளையின் எலும்புகள் குணமடையவில்லை.

பாலகுமாரின் குடும்பத்தை தாக்கிய விடுதலைப்புலிகள் எத்தனை தமிழ்மக்களின் இறப்புக்கு நேரடியாக காரணமாக இருந்தார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

கடைசியாக ஒரு சம்பவம். உங்களுக்கு நினைவு இருக்கிறதோ தெரியவில்லை.
உக்கிரமான போர் நடந்த போது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் நானும் ஒருவன். 2008 மார்ச் மாதம் 28ஆம் திகதி என்னுடன் வந்த மெல்பன் சட்டத்தரணி ரவீந்திரனிடம் ‘உங்களிடம் சம்பந்தரின் தொலைபேசி இலக்கம் இருந்தால் யுத்தத்தில் அகப்பட்ட மக்களைப் பற்றி அரசாங்கத்திடம் வந்து பேசச் சொல்லுங்கள’ என்றேன். அவர் தொலைபேசியில் பேசி விட்டு வந்து சொன்னார் ‘சம்பந்தர் இந்தியாவுக்கு போவதால் தனக்கு நேரமில்லை என்கிறார்’.

பெரும்பாலான மக்கள் புதுக்குடியிருப்பு பகுதியில் இறந்த போது அரசாங்கத்தோடு அல்லது புலிகளோடு பேச முற்பட்டீர்களா? அந்தவேளையில் நீங்கள் இந்தியாவுக்கு பிரயாணம் செய்தீர்கள்.
நான் கூறிய சம்பவங்கள் உண்மையானவை. இதில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி உறுதிப்படுத்தலாம்.

இந்த வயதில் சுய விமர்சனம் செய்யவிட்டால் வேறு எக்காலத்தில் செய்யமுடியும்? அரசியலை விலக்கிப் பார்த்தால் விடுதலைப் புலிகள் மற்றும் அரசாங்கத்தில் மட்டுமல்ல அப்பாவி மக்களின் இரத்தம் உங்களது கைகளிலும் படிந்துள்ளது.

இனி நீங்கள் வரவேற்றது ஐக்கிய நாடுகள் செயலாளரின் அறிக்கையை மட்டுமே. இது ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ அறிக்கையாக மாற பலபடிகள் உள்ளன.

இந்த அறிக்கையின் எதிர்காலத்தைப் பார்ப்போம்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் எந்த ஒரு நாடும் முக்கியமாக சீனா அல்லது ரஷ்ஷியா வீட்டோ பண்ணாமல் இருந்தால் மட்டுமே மேற்கு நாடுகளின் ஆதரவில் வரையப்பட்ட அறிக்கையின் படி இலங்கையில் போர்க் குற்ற விசாரணைக் கமிஷன் வருவது சாத்தியம். சீனாவுக்கு தீபெத்திலும் ரஷ்ஷியாவுக்கு செச்செனியாவிலும் இதே போன்ற விசாரணையை தொடங்குவதற்கான சகல சாத்தியம் உண்டு. இதை விட அமெரிக்காவும் பிரிட்டனும் ஈராக்கில் ஏற்படுத்திய போர் அழிவுகள் குறைந்தவையல்ல. நமது பக்கத்து நாடான இந்தியாவின் இராணுவத்தால் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட காஸ்மீரிகள் கடந்த சில வருடங்களில் இறந்து விட்டார்கள். அது இன்னும் முடிவடையாத தொடர்கதை.

இப்படியாக எல்லோர் உடம்பிலும் சிரங்குப் படை உள்ளது. யாருக்கு யார் தைலம் போடுவது? இந்த நிலையில் இந்த நாடுகள் இலங்கை மீது எங்வளவு தாக்கத்தை பிரயோகிக்கும் என்பது கேள்விக்குரியது.
மறுபுறத்தில் அதிக தாக்கத்தை பிரயோகிக்கும் போது இலங்கை அரசாங்கம் இரண்டு வகையாக செயற்படலாம்.

ஒருவிதத்தில் விசாரணைக்கு அனுமதித்து விட்டு உள்நாட்டில் பல முட்டுக்கட்டைகளை போடமுடியும். இதைவிட இலங்கை இராணுவத்திற்கு பொறுப்பாக இருந்த ஜெனரல் சரத்பொன்சேகாவின் தலைமையில் தான் போர் நடந்தது. போரியல் சட்டப்படி மனிதாபிமனமற்ற உத்தரவை அரசியல் தலைமை இட்டாலும் இராணுவத் தலைவர் அதை நடைமுறைப்படுத்த வேண்டியதில்லை. கடைசிப் போரின் நடவடிக்கைகள் மட்டுமல்ல கொழும்பில் நடந்த கொலைச் சம்பவங்களைக் கூட வேறு பலர் பொறுப்பேற்க வேண்டி வரும். அது மட்டுமல்ல இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக நடக்கும் விசாரணையில் எத்தனை தமிழர்களால் துணிந்து சாட்சியம் அளிக்கமுடியும்?

மறுபுறத்தில் இந்தக் கமிசன் இலங்கை இறைமைக்கு எதிரானது என சொல்லி விட்டு எதிர்த்து நிற்கலாம். கியூபா 60 வருடங்கள் அமெரிக்காவையும் உலகத்தையும் எதிர்த்து நிற்கவில்லையா?

இந்த இருநிலையிலும் நட்டமடையப் போவது தமிழர்கள்தான். சிங்கள அரசியல்வாதிகளை புறந்தள்ளிவிட்டாலும் இலங்கையின் பதினைந்து மில்லியன் சிங்கள மக்களது நட்புறவு இல்லாமல் தமிழர்கள் வாழ்வது கடினமானது.

இதைவிட முக்கியமான விடயம் போர் நடக்கும் போது பார்த்துக்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையும் மேற்குலகமும் தற்போது விழித்தெழுந்து இலங்கை அரசாங்கத்தையும் விடுதலைப்புலிகளையும் குற்றம் சாட்டினால் இதன்மூலம் இலங்கைத்தமிழருக்கு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்ப்பது தமிழீழம் கிடைக்கும் என முப்பது வருடம் நம்பியதை விட படு முட்டாள்தனமானது. தமிழர்கள் எதைப் பெற்றாலும் சக இலங்கை மக்களோடுதான் சேர்ந்து பெறமுடியும். இந்த போர்க் குற்றசாட்டில் இலங்கைக்கு மிகவும் அதிக பட்ச தாக்கம் வருவதாகில் அது இலங்கையில் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் தடைகளாகும். இதனால் நிச்சயமாக முழு இலங்கை மக்களும் துன்பப்படலாம் ஆனால் சமூகத்தில் கீழ்தட்டில் இருக்கும் மக்கள் கூடிய அளவில் இதன் சுமையை அனுபவிக்க வேண்டி இருக்கும்.

இதை விட இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் தான் இனவாதம் உண்டு தமிழ் இஸ்லாமிய மக்களிடம் இல்லை என ஒருவராலும் கூறமுடியாது. ஆனால் இந்தியாவில் இந்து-முஸ்லீம் மக்கள் இடையே உள்ள பிளவையோ பாகிஸ்தானில் ஷியா- சுன்னி மக்களிடம் இருக்கும் வேறுபாடுகள் ஏன் பாலஸ்தின- யூத மக்களது உறவுகளோடு ஒப்பிடும்போது மிகக் குறைந்தது. இலங்கை இனவாதம் இரு பக்கத்து அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் இலங்கையை குற்றவாளிக் கூண்டில் ஏற்றினால் சிங்கள மக்கள் மத்தியில் மேலும் இனத்துவேசத்தை உருவாக்க வழிவகுக்கும். 83 ஜுலை காலங்கள் எமது மனதில் இருந்து இன்னும் அகலவில்லை. இன வெறுப்பு இரு பக்கத்து அரசியல்வாதிகளுக்கும் வாக்குகளை அதிகரிக்க உதவும். ஆனால் சாதாரண கந்தையாவுக்கும் சில்வாவுக்கு நன்மை பயக்காது.

இந்த அறிக்கையில் அதிக புளகாங்கிதம் அடைவது வெளிநாட்டு புலி ஆதரவாளர்கள்தான். ஆனால் இந்த அறிக்கை திட்டவட்டமாக வெளிநாட்டுத் தமிழரின் கனவான தமிழீழத்தை நிராகரிக்கிறது. விடுதலைப்புலிகளுக்கு கொடுத்த நிபந்தனையற்ற ஆதரவை கண்டிக்கிறது. இதைவிட விடுதலைப்புலிகளுக்காக இவர்கள் சேர்த்த பணத்தை போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிட பரிந்துரைக்கிறது.

ஆனால் ஆனைக்கால் வியாதிக்காரன் தனது வீங்கிய காலை பலமென்று நினைப்பது போல்தான் இவர்களும் எதிரியின் சகுனப் பிழைக்கு சந்தோசப்படும் பிரகிருதிகள்.

இறுதி யுத்தகாலத்தில் வெளிநாட்டு தமிழனை நம்பி விடுதலைப்புலிகள் மோசம் போனார்கள். அமெரிக்கத் தமிழன் பராக் ஒபமாவின் கப்பல் வரும் என்றான். அவுஸ்திரேலிய தமிழன் பசுபிக்நாடுகள் தமிழீழத்தை ஆதரிக்கிறது என்று கயிறு கொடுத்தான். நோர்வேத்தமிழன் போரை நிறுத்தாமல் போரிடுங்கள். இந்தியாவில் காங்கிரஸ் அரசு தோற்று மத்தியில் ஆட்சிமாறும் என கூறினான்.

ஐயா சம்பந்தனே தமிழனுக்கு நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் புலம் பெயர்ந்த புலி ஆதரவாளர் பக்கம் தலைவையாதீங்கோ.

பிற்குறிப்பு:
பேச்சுவார்தைகளை எப்படி நடத்துவது என்ற பயிற்சி எடுக்க சிங்கப்பூர் போனீர்கள் என தகவல் வந்தது. ஐக்கிய நாடுகள் செயலாளர்நாயகத்தின் அறிக்கையை வரவேற்றுவிட்டு அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தமுடியும் என நினைக்கிறீர்களா?

நடேசன் – அவுஸ்திரேலியா

Read more...

Saturday, May 7, 2016

கௌரவ பஷீர் ஷேகுதாவூத்துக்கு இளம் இரத்தங்களின் திறந்த மடல்

தவிசாளர் பசீர் சேகுதாவூத் சேருக்கு....- A.W.M. ஹிஷாம் சம்மாந்துறை-
அஸ்ஸலாமு அலைக்கும் வாரகுமத்துல்லாஹி வாபரகாதுஹு..


வல்ல இறைவனின் உதவியுடன் நீங்கள் நல்ல தேகாரோக்கியத்துடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அல்ஹம்துலில்லாஹ். எமது கட்சிக்கும் இந்த சமூகத்தும் நீங்கள் புரிந்து வரும் மகத்தான சேவைகளையும், தியாகங்களையும் நினைவு கூர்ந்தவனாக இதை எழுதுகிறேன்.

நீங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர்களுக்கு எழுதிய திறந்த மடலை படிக்க கிடைத்தது. தாங்கள் எழுதிய மடலுக்கு பதில் மடல் எழுதும் அளவு நான் பெரியவனல்ல. உங்கள் அனுபவத்தின் அரைவாசி தான் எனது வயதாகும். நீங்கள் இந்த சமூகத்திற்காக சிந்திய ஒரு வியர்வைத் துளிக்கேனும் நான் ஈடாகுவேனா என்று கூடத்தெரியாது. இருந்தாலும் எனது சிந்தனைக்கு பட்டதையும் எனது ஞாபகங்களின் அடிப்படையிலும் இந்தக்கட்சியின் அண்மைக்கால நடவடிக்கைகளில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவனாக உங்களிடம் சில விடயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

உங்களது திறந்த மடலில் இக்கட்சியில் கடந்த காலங்களில் எழுந்த பல முரண்பாடுகளையும் அந்த பிரச்சினைகளின் போது நீங்கள் தலைவர் றஊப் ஹகீம் இன் பக்கமே நியாயம் இருந்ததனால் தலைவருக்கு ஆதரவாக நின்றதனையும் நினைவு கூர்ந்தீர்கள். சில சந்தர்ப்பங்களில் நீங்கள் உயிரைக்கூட பணயம் வைத்து போராடியதாக கூறி இருந்தீர்கள். அது நிச்சயமான, மறுக்க முடியாத உண்மையாகும். அந்தந்த உட்பூசல்களின் போது தலைவரின் பக்கம் நியாயம் இருந்ததனாலும் கட்சியைப் பாதுகாக்க வேண்டியதற்காகவும் அவ்வாறு நியாயமாக நடந்து கொண்டதாக கூறி இருந்தீர்கள். ஆனால் இப்போது எழுந்துள்ள பிரச்சினையில் செயலாளரின் நீதிக்காக செயலாளருக்கு ஆதரவாக குரல்கொடுப்பதாக கூறுகிறீர்கள்.

இங்கு நீங்கள் கூறவரும் விடயத்தின் மூலம் மற்றவர்கள் எதைப் புரிந்துகொள்வார்கள் என்பது தெரியாது. ஆனால் எனக்கு ஒரே ஒரு விடயம் புரிகிறது. நீங்கள் தலைவரையும், செயலாளரயும் மட்டுமே பிரச்சனைக்குரியவர்களாக காட்ட முனைகிறீர்கள். நீங்கள் எப்போதும் பிரச்சினைளுடன் சம்பந்தப் படாதவராகவும், முரண்பட்டுகொள்ளும் இருவரில் நியாயம் யார் பக்கம் உள்ளதோ அவருக்கு ஆதரவாக நின்று நியாயத்திற்காக குரல் கொடுப்பதாய் கூறி இருக்கிறீர்கள். இம்முறையும் அதைத்தான் செய்கிறேன் எனக்கூறி உங்களுக்குள்ள பிரச்சனைகளை மூடி மறைத்து விட்டீர்கள். மேலும் கட்சியில் இதுவரை காலமும் இடம்பெற்ற முரண்பாடுகளை ஒவ்வொன்றாக கூறிய நீங்கள், கட்சிக்குள் நீங்கள் முரண்பட்ட எந்தவொரு சம்பவத்தையும் கூறாது இருட்டடிப்பு செய்து விட்டீர்கள். இதன் மூலம், ஒரு போதும் முரண்பாடுகளில் சிக்கிகொள்ளாத உத்தமராக உங்களை நீங்களே காட்டிக்கொள்வதாய் அறிகிறேன்.

உண்மையில் நீங்கள் கூறுவது போன்று கடந்த காலங்களில் தலைவருக்கு ஆதரவாக செயற்பட்டதற்கு காரணம் தலைவரின் பக்கம் நீதி இருந்தது மட்டும் தானா? அவ்வாறு நீதிக்காக மட்டும் செயற்பட்டிருந்தால் இதை ஏன் அப்போதே கூறவில்லை? அதே போல இம்முறை செயலாளரின் நீதிக்காக செயலாளருக்காக குரல் கொடுப்பதாக கூறுகிறீர்கள். உண்மையில் இதை எவ்வாறு எடுத்துக்கொள்வது? செயலாளருக்கு ஆதரவாக என்றா? அல்லது தலைவருக்கு எதிராக என்றா? ஆனால் தேர்தல் முடிந்த கையோடு ஒரு தேசியப்பட்டியல் உங்களுக்கும் வழங்கப் பட்டிருந்தால் நீங்கள் எதற்காக, யாருக்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பீர்கள் என்பது தெரிய வந்திருக்கும்.

மேற்படி மடலில், செயளாரின் அதிகாரம் குறைக்கப்பட்டதனை குறையாகக் கொள்ளும் நீங்கள், பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் காலத்தில் செயலாளராக இருந்த தற்போதைய தலைவர் அவர்களுக்கும் இவ்வாறு அதிகாரக்குறைப்பு செய்யப்பட்டிருந்தால் தற்போதைய தலைவரின் நிலை என்னவாகியிருக்கும்? என்று கேட்டிருந்தீர்கள். ஆனால் இப்படியான ஒரு தலைவனை பெற்றுக் கொள்ளாத இந்த சமூகத்தின் நிலை எங்கே சென்றிருக்கும் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? பெருந்தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின் ரவூப் ஹகீம் அவர்களைத் தவிர வேறு யாரவது ஒருவரது கைக்குச் சென்றிருந்தால் இக்கட்சியின் நிலை என்னவாயிருக்கும் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா ?? கட்சி இன்று உயிரோடு இருந்திருக்குமா?? கட்சியை விற்றுத் தின்றிருப்பார்கள். அவ்வாறுதான் கட்சி உயிரோடு இருந்தாலும், இந்தக்கட்சிக்கு ரவூப் ஹகீம் அல்லாத வேறு ஒருவர் தலைவராக இருந்திருந்தால் உங்களுக்கு மூன்று முறை தேசியப்பட்டியல் கிடைத்திருக்குமா ?? அவ்வாறு மூன்று முறை தேசியப்பட்டியல் கிடைக்காமல் போயிருந்தால் உங்களது நிலை இப்போது என்னவாயிருக்கும்?? நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பீர்கள் என்பதை சிந்தித்துப் பார்த்தீர்களா?

அதேபோல மேற்படி பேராளர்களுக்கான உங்களது மடலில் கட்சியில் இள ரத்தம் பாய்ச்சப்பட வேண்டியதன் அவசியம் பற்றி பேசியிருந்தீர்கள். கட்சிக்குள் உங்களுக்கு இத்தனை பிரச்சினைகள், உட்பூசல்கள் இருந்த போதிலும் கட்சியினதும் சமூகத்தினதும் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் உங்கள் பெரிய மனதை இந்த இடத்தில் பாராட்டியே ஆகவேண்டும். மேற்படி இள ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும் என்பதற்காவே உங்களுக்கு கடந்த வருடம் பொதுத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப் படவில்லை என்பதனை நீங்கள் ஏற்றுக்கொள்வதாக உங்களின் இதற்கு முந்தைய அறிக்கை ஒன்றின் மூலம் அறிந்து கொண்டேன். நீங்கள் கட்சியின் முடிவை மதிக்கும் ஜனநாயக அரசியல்வாதியாக இருந்தால்; நீங்கள் சுயநலமற்ற ஒரு அரசியல்வாதியாக இருந்தால் கட்சியால் நிறுத்தபட்ட எந்த வேட்பாளருக்காக களத்தில் இறங்கி வேலை செய்தீர்கள் ? மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது கட்சியின் வெற்றிக்காக என்னென்ன பங்களிப்புக்கள் செய்தீர்கள்...?? அதைவிட கடந்த பொதுத்தேர்தலில் கட்சியின் தவிசாளர் என்ற வகையில் உங்களது பங்களிப்பு எவ்வ்வாறாக இருந்தது என்பதனை விளக்க முடியுமா..??எப்போதும் நியாயத்தின் பக்கம் மட்டும் செயல்படுவதாக கூறும் நீங்கள் இதில் உள்ள நியாத் தன்மையை கூறுங்கள்.

மேலும் எப்போதும் நீதிக்காக மட்டும் போராடி வருவதாக கூறும் உங்களிடம் இன்னொரு விடயம் பற்றிப் பேசுவதிலும் தப்பில்லை என்று நினைக்கிறேன். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நமது கட்சியினால் எடுக்கப்பட்ட முடிவினையும் தாண்டி மகிந்த ராஜபக்சவுக்கு பகிரங்க ஆதரவு வழங்கி பிரார்த்தனை செய்து அறிக்கைகள் விட்டிருந்தீர்கள். இவ்வாறு மகிந்தவுக்கு ஆதரவு வழங்கியதில் என்ன நியாயம் இருந்தது என்பதனை அறிய ஆவலாக உள்ளேன். எப்போதும் நியாயத்தின் பக்கமே ஆதரவு வழங்குவதாக கூறும் நீங்கள் மகிந்தவுக்கும் மைத்திரிக்கும் இடையில் நடந்த தேர்தலில் எந்த நியாயத்தின் அடிப்படையில் மகிந்தவை ஆதரிக்க முன்வந்தீர்கள்.?

அதிலும் அல்லாஹ்வுக்கு அடுத்ததாக இந்த நாட்டு முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு மகிந்தவை மட்டுமே நம்புவதாக கூறியிருந்தீர்கள். இவ்வாறு கூறியதின் அடிப்படை நியாயம் என்ன என்பதை தெளிவு படுத்தக்கோருகின்றேன். இவ்வாறு கூறுவதன் மூலம் யாரை சந்தோசப் படுத்த முனைந்தீர்கள்? மகிந்தவின் கடந்தகால நடவடிக்கைகளில் எதை காரணமாக வைத்து இப்படியொரு நம்பிக்கை உங்களுக்கு வந்தது? எப்போதும் கட்சியின் நலனை மட்டும் முன்னிறுத்தியே முடிவெடுப்பதாக கூறும் நீங்கள் அத்தேர்தலில் இவ்வாறு முடிவெடுத்ததில் கட்சிக்கும் இந்நாட்டு முஸ்லிம்களுக்கும் என்ன நன்மை இருந்தது என்பதனை நீங்கள் மட்டும்தான் அறிவீர்கள்.

அதேபோல் கடந்த முறை உங்களது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காலத்தில் ஒரு சாதனையே செய்தீர்கள். கட்சியின் தவிசாளராக இருந்து கொண்டு தலைவருக்குத் தெரியாமல் கேபினட் அமைச்சர் பதவியொன்றினை பெற்றிருந்தீர்கள். இதில் என்ன நியாயம் உள்ளது ?

மன்னிக்கவும்; இக்கேள்வி ஏற்கனவே உங்களிடம் ஒரு தொலைக்காட்சி ஊடகவியலாளரினால் கேட்கப்பட்டு அதற்கு நீங்கள் வழங்கிய பதில் இப்போது தான் ஞாபகத்துக்கு வருகிறது. “ஒரு மனிதன் தனது வாழ்விலே எப்போதும் வளர்ச்சியை எதிர்பார்ப்பான். அதே அடிப்படையில் தான் நானும் சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக பிரதி அமைச்சராக இருந்து, இன்று இந்த அமைச்சர் பதவியை ஒரு வளர்ச்சியாகவே காண்கிறேன்” என்று அப்போது காரணம் கூறி இருந்தீர்கள் (எனது ஞாபகம் சரியாக இருக்கும் என நம்புகிறேன்)

அவ்வாறு தான் நீங்கள் அந்த அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்வதென்றாலும் தலைவருக்கு தெரியாமல் பெற்றுக் கொண்டதன் நியாயம் என்ன? காரணம் என்ன? எமது கட்சிக்கென்று ஒரு தனித்துவம் இருப்பதை அன்று நீங்களே மறந்து போயிருந்தீர்கள். அன்று இந்தக் கட்சியை விட இந்த தலைவனை விட நீங்கள் அமைச்சுப் பதவியை பெரிதாக நினைத்ததன் நியாயம் என்ன? நீங்கள் தான் எப்போதும் நியாயத்தின் பக்கம் மட்டுமே இருப்பவராச்சே... ஒரு சிறுபான்மை கட்சியின் முக்கிய பதவியை வகிக்கும் நீங்கள் மக்களின் பாரிய பொறுப்புக்களை உங்களின் தோள்களில் சுமந்து கொண்டிருக்கும் நீங்கள் இவ்வாறான தீர்க்கமான முடிவுகள் எடுக்கின்ற போது, உங்கள் தனிப்பட்ட வளர்ச்சியை மட்டும் தான் கவனத்தில் எடுப்பீர்களா? அல்லது அதுவும் நியாயம் தான் என்று கூறப்போகிறீர்களா??

காட்டிக்கொடுப்பும், கழுத்தறுப்புகளும் மிக மலிவாகவே காணப்படும் இலங்கை அரசியல் களத்தில் உங்களது அந்த அமைச்சுப்பதவிக்கும் பேரம் பேசப்பட்டிருக்கும் என்பதனை சாதாரண அரசியல் அவதானியால் கூட அப்போது ஊகிக்க முடிந்திருந்தது.

தவிசாளர் அவர்களே நீங்கள் இக்கட்சிக்கும் இச் சமூகத்துக்கும் செய்த, செய்து கொண்டு வரும் அளப்பரிய பணிகளை குறைத்து மதிப்பிடுதல் இம்மடலின் நோக்கமல்ல. ஆனாலும் ஒரு ஜனநாயக அரசியல் வாதியாக இதுவரை உங்களைக்காணும் நான், தொடர்ந்தும் அதே நிலையிலே உங்களைக் காணவேண்டும் என்று ஆசைபடுவதாலேயே இவ்வாறு எழுதினேன்.

நன்றி.
இப்படிக்கு A.W.M. ஹிஷாம் சம்மாந்துறை.

Read more...

Monday, May 2, 2016

உதயத்துள் உதயம் : கிழக்கிலங்கை இளையோர் அமைப்பு.

கிழக்கிலங்கையை மையப்படுத்தி கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக உதயம் அமைப்பு செயற்பட்டு வருகின்றது. இலங்கையில் சுனாமி ஏற்படுத்திய பேரழிவினை தொடர்ந்து உதயமாகிய உதயம் அமைப்பு கிழக்கிலங்கை மக்களின் துயர்துடைப்பதில் ஒர் குறிப்பிடத்தக்கதும் குறைகாணமுடியாததுமான பங்காற்றியிருக்கின்றது.

உதயம் அமைப்பின் வளர்ச்சி ஓர் புதிய பரிணாமத்தை எட்டியிருக்கின்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை 01.05.2016 தொழிலாளர் தினமன்று கிழக்கின் இளையோரை ஒர் குடையின்கீழ் அணிதிரளுமாறு அழைப்பு விடுத்த அமைப்பு , இளையோரிடம் அதன் பணிகளை கையளித்துள்ளது.

இந்நிகழ்வு நேற்று பிற்பகல் Telli, Girixweg 12, 5000 Aarau எனும் விலாசத்திலுள்ள சனசமூக நிலையத்தில் திரு.சுந்தரலிங்கம், திரு.பரமேஸ்வரமூர்த்தி மற்றும் திருமதி இந்திரா ஆகியோரின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.

வரலாறு கண்டிராதவகையில் மண்டபத்தில் ஒன்று திரண்டிருந்த கிழக்கிலங்கை இளையோர் முன்னிலையில் தலைமையுரையாற்றிய திரு. தேவசகாயம் அவர்கள், உதயம் ஆரம்பித்து ஓர் யுகத்திற்கு பின்னர் ஓர் புதிய அத்தியாயமாக இளையோர் அமைப்பினை உருவாக்கியுள்ளோம். உங்கள் பணியினை நீங்கள் முன்னெடுத்துச்செல்ல நாம் பின்னிருப்போம் என உறுதியளித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய உதயத்தின் மூத்த உறுப்பினர் திரு. சுந்தரலிங்கம் பேசுகையில், மட்டு-அம்பாறை மாவட்டங்களை மையப்படுத்திய சேவையினையே உதயம் செய்து வந்தது. காலப்போக்கில் திருகோணமலை மாவட்டத்திற்கு தனது சேவையை விஸ்தரித்ததன் ஊடாக கிழக்கிலங்கைக்கானதோர் தனி அமைப்பு என்ற பரிணாம வளர்ச்சியை கண்டது. அவ்வளர்ச்சியின் வரலாற்றில் ஓர் புதிய பக்கமாக இன்று கிழக்கின் இளையோராகிய உங்கள் கைகளில் உங்களுக்கான பணிகளை கையளிப்பதில் உதயம் மட்டற்ற மகிழ்சி அடைகின்றது என்றார்.

மேலும் அங்கு உரையாற்றிய செயலாளர் திரு.வே.ஜெயக்குமார் உதயத்தின் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பில் இளையோருக்கு விளக்கமளித்ததுடன் கிழக்கிலுள்ள தேவைகளையும் இளையோர் செய்யவேண்டிய சேவைகளையும் பட்டியலிட்டுக் கூறினார். மேலும் அத்தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வளங்களை இளையோர் அமைப்பு எவ்வாறு திரட்டிக்கொள்ள முடியும் என்ற ஆலோசனையை வழங்கியதுடன், இளையோர் அமைப்பு சுயாதீனமாக செயற்பட்டு நவீன அறிவு மற்றும் ஆற்றல்களை ஒன்றுகுவித்து கிழக்கு மக்களின் குறைகளை தீர்க்கும் ஆற்றல்மிகு கருவியாக உருப்பெறவேண்டும் என்றும் கிழக்கு மண்ணின் மைந்தர்களின் பெருமையை காக்கவேண்டும் என்றும் வேண்டுதல் விடுத்தார்.

அங்கு அவதானிக்கப்பட்ட உதயத்திற்கே உரித்தான பணியாதெனில், பொருலாளர் அவர்களால் 2015ம் ஆண்டுக்கான வரவு-செலவுக் கணக்கறிக்கை இளையோரிடம் கையளிக்கப்பட்டது.

நேற்றைய நிகழ்வில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் பிரபல இசைக்குழுவொன்றின் இசைக்கச்சேரியும் அங்கு திரண்டிருந்த இளையோர் பெற்றோரை மகிழ்வூட்டின.

இளையோர்கள் குழுக்கள் குழுக்களாக எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடல்களை நாடாத்திக்கொண்டிருந்தமை அவர்களது ஆர்வத்தை எடுத்தியம்பியது.

உதயம் அமைப்பானது அரசியல் கட்சிகளின் ஆழுகையில் இருந்து தன்னை தனிமைப்படுத்தி வந்திருக்கின்றது என்பது அதன் தனிச்சிறப்பம்சமாகும்.
















Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com