Friday, April 29, 2016

சிவராமின் கைகளில் எவ்வாறு இரத்தக்கறை படிந்தது என நினைவூட்டுவோம்.

புளொட் எனப்படுகின்ற தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் முக்கிய உறுப்பினரான சிவராம் கொலைசெய்யப்பட்டு இன்றுடன் 11 வருடங்களாகின்றன. சிவராம் தனது சுயலாபங்களுக்காக புலிப்பாசிசத்தை நியாயப்படுத்தி வந்திருந்தார். இதற்கு கைமாறாக இன்று புலிகளின் ஊதுகுழல்கள் சிவராமை நினைவு கூறுகின்றன.

சிவராமின் இரத்தக்கறை படிந்த கரங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் பலர் அம்பலப்படுத்தியிருந்தனர். அவ்வாறான கட்டுரைகளில் ஒன்றை இந்நாளில் மீள் பிரசுரம் செய்வதன் ஊடாக சிவராமின் உண்மை முகத்தையும் புலி-வியாபாரிகள் இன்று சிவராமை நினைவு கூறுவதன் நோக்கத்தையும் உணர்த்துவோம்.

சிவராம்: இரத்தக் கறைபடிந்த கரங்கள் -- நட்சத்திரன் செவ்விந்தியன்.

விடுதலைப் புலிகளால் மாமனிதர் பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்ட சிவராமின் இரத்தக்கறை படிந்த கொடூரக் கொலைகளின் குற்ற வரலாறு அம்பலத்திற்கு வந்திருக்கிறது. தர்மரத்தினம் சிவராம் 1984 ல் PLOTE ல் போய்ச் சேர்ந்த போது புளட்டின் உட்கட்சிப் படுகொலைகளும் சித்திரவதைகளும் உச்ச நிலையிலிருந்தன. PLOTE இல் இருந்த நேர்மையான அசலான போராளிகளில் PLOTE இனாலேயே சித்திரவதை செய்து கொல்லப்பட்டவர்கள் தவிர்ந்த மற்ற நேர்மையான போராளிகளான தீப்பொறி குழுவினர் முதலியோர் இக்காலப் பகுதியில் புளட்டிலிருந்து தப்பி வெளியேறிக் கொண்டிருந்தனர். தீப்பொறி குழுவின் மூலவர்களில் ஒருவரான உன்னதப் போராளி நொபேட் புளட்டின் கொடூரச் சீரளிவுகளை வைத்து எழுதிய ‘புதியதோர் உலகம்’ என்ற நாவல் 1985 இன் தான் வெளிவருகிறது.

சிவராம் முதலில் விடுதலைப் புலிகளில் தான் சேர விண்ணப்பித்தார். எனினும் மாத்தையாவினாலும் கிட்டுவினாலும் தனித்தனியே விடுதலைப் புலிகளில் சேருவதற்கு நம்பகமற்றவர் என்று சிவராம் திருப்பி அனுப்பப்பட்டார். இதன் பின்னரே சிவராம் புளட்டில் அசோக் எனப்படுகிற யோகன் கண்ணமுத்துவின் “அணைவோடு” இணைக்கப்பட்டார். இக்காலத்தில் தான் உமா மகேஸ்வரன் எல்லோரையும் அடிப்படையின்றி சந்தேகிக்கின்ற paranoid மனோவியாதிக்குட்பட்டிருந்தார். தன்னுடைய ஆங்கிலப் புலமையையும் மகேஸ்வரனின் பலவீனங்களையும் சாதுரியமாகப் பயன்படுத்தி சிவராம் தலமைக்கு மிகநெருக்கமாக குறுகிய காலத்திலேயே வந்துவிட்டார். இதன்போது புளட்டின் ஜனநாயக விரோதப் போக்குகளுக்கும் உட்கட்சி சித்திரவதைகளூக்கும் படுகொலைகளுக்கும் விசுவாசமாக உடந்தை போனார்.

(1) 1984, 1985 காலப் பகுதியில் ஒரு தடவை யாழ்ப்பாணம் குருநகரில் சிவராமும் தீபனேசனும் வீதியில் தற்செயலாக தீப்பொறி குழுவினரைச் சேர்ந்தவர்களை எதிர்கொள்ள நேர்ந்தது. உடனடியாகவே சிவராம் தனது பையிலிருந்து SMGயை எடுத்து load பண்ணி அவர்களை நோக்கி சுடத்தயாரானார். அதிஸ்ரவசமாக பொது மக்கள் அவ்விடத்தில் கூடிவிட்டதால் கொலை எதுவும் நடக்காமல் இரு தரப்பினரையும் பிரித்து அனுப்பி வைத்தனர்.

(2) பேராதனைப் பல்கலைக்கழக பல்மருத்துவத்துறை மாணவனான செல்வம் என்பவர் தனது பட்டப்படிப்பையே தியாகம் செய்து போராட வந்திருந்தார். இந்த செல்வமும் அகிலன் என்கிற இன்னொருவரும் சந்ததியாரோடு சேர்ந்து PLOTEஇன் உட்கட்சிப் படுகொலைகள், ஜனநாயகமின்மை என்பவற்றிற்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். மட்டக்களப்பிலிருந்து கைதேர்ந்த கொலையாளியான வெங்கட் ஐயும் அழைத்துக்கொண்டு சிவராம் தலமையில் ஒரு குழு மூதூருக்கு அகிலன் செல்வத்தைத் தேடிப் போனது. மூதூரில் ஒரு வீட்டிற்குள் சென்ற சிவராமும் வெங்கட்டும் அங்கிருந்த அகிலன் மற்றும் செல்வனையும் PLOTEஇன் மகளிர் பிரிவுத் தளபதியான கரோலினையும் கண்டனர். சிவராமும் வெங்கட்டும் கரோலினை தவிர்த்து அகிலன் செல்வனைக் கடத்திச் சென்று மூதூரில் ஒரு வயல் வெளியில் கொன்று அவ்வயல் வெளியிலேயே இருவரையும் புதைத்துத் திரும்பினர்.

மேற்கூறிய இரண்டு தகவல்களையும் நம்பகரமான மனித உரிமை அமைப்பான மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. PLOTE உறுப்பினர்களுக்கு சிவராமின் அகிலன் செல்வன் கொலைகள் நீண்ட காலமாகத் தெரிந்த திறந்த இரகசியமே. இதனைவிட தலமைக்கு எதிராகக் அகிலன் செல்வம் கிளர்ச்சி செய்தமையைப் பயன்படுத்தி தனிப்பட்ட பெண் விவகாரம் முதலியன சம்பந்தப்பட்ட கோப தாபங்களுக்காக இவ்விருவரும் சிவராமினால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

சிவராமைப்பற்றி நல்ல அபிப்பிராயம் அவருடன் பழகிய நல்ல மனிதர்களிடம் கிடையாது. அவர்கள் சொல்லுகிற குற்றச்சாட்டுகளில் ஒன்று சிவராம் பிறரை “அள்ளி வைப்பதில்” வல்லவர் என்பது.

1. மாலைதீவுக்கு படையெடுத்துச்சென்ற தன்னுடைய சக தோழர்களான புளட் உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தில் “அள்ளி வைத்தவர்” சிவராமே என்பதை சிவராமுடன் பல்கலைக் கழகத்தில் ஒன்றாகப் படித்த இப்போது அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக்கழக துணைப் பேராசிரியராக இருக்கும் கார்ட்றி இஸ்மாயில் தான் லைன்ஸ் (www.lines-magazine.org) சஞ்சிகையில் எழுதிய ‘Mourning Sivaram’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதே “அள்ளி வைப்பு” தகவலை பாரிஸ் ஈழமுரசுவில் 90 களின் ஆரம்பத்தில் வெளிவந்த தொடரான ‘காந்தி தேசத்தின் மறுபக்கம்’ என்ற புளட் வரலாற்றைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரையிலும் காணலாம்.

2. முன்னைநாள் வீரகேசரி பத்திரிகையாளரான மட்டக்களப்பைச் சேர்ந்த நித்தி என்ற நித்தியானந்தனை (பின்னர் இவர் புலிகளில் இணைந்து ஒரு சமரின் போது இறந்து விட்டார்) புலி என்று புளட் மோகனிடம் காட்டிக் கொடுத்தது சிவராமே என்ற தகவலை நித்தியானந்தனே தனது நண்பரான இப்போது ஆஸ்திரேலியாவில் புலிகளால் கொலை மிரட்டல் விடப்பட்டிருக்கும் நாகராஜா என்ற பத்திரிகையாளரிடம் தெரிவித்தை நாகராஜா சிவராமைப் பற்றி தேனீ இணையத்தில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதன் காரணமாக புளட் மோகனால் சுடப்பட்ட நித்தியானந்தன் காயமடைந்தார் எனவும் பின்னர் நித்தி புலிகளில் இணைந்து கேணல் கருணாவின் நம்பிக்கைக்குரியவராக செயற்பட்ட காலத்தில் சிவராமால் கருணாவை நெருங்கவே முடியவில்லை என்பதையும் நித்தியின் மரணத்தின் பின்னரே சிவராமும் கருணாவும் நெருக்கமாயினர் என்றும் நித்தி சிவராமை இந்திய உளவுப் பிரிவான ரோ வின் ஒற்றன் என்று தன்னிடம் கூறியதையும் நாகராஜா அக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். நித்தி காட்டிக் கொடுக்கப்படுவதற்கு முன்சிவராம், டி.பி.எஸ் ஜெயராஜ், நித்தி ஆகிய மூவரும் பல தடவைகள் கொழும்பில் ஒன்றாகச் சந்தித்து மது அருந்திக் குலவியதை ஜெயராஜ் தன்னுடைய Sunday Leader கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

(புளட் மோகன் புலிகளால் கொல்லப்பட்ட பின்னர் மோகன் பற்றி ஒரு நீண்ட செய்திக் கட்டுரையை சிவராம் தமிழ் நெற் இல் எழுதினார். அதில் நித்தியானந்தன் என்ற பத்திரிகையாளரை புளட் மோகன் கொல்ல முயற்சித்ததாகவும் எழுதினார். கொலையை ஏவி விட்டது யார் என்ற உண்மையைச் சொல்ல மோகனும் நித்தியானந்தனும் உயிரோடு இல்லை. சிவராமும் தமிழ்நெற் உம் எழுதுவதுதானே வரலாறும் நாடகமும்.)

3. சிவராமைப் பற்றி டி.பி.எஸ் ஜெயராஜ் எழுதிய நீண்ட கட்டுரையில் ஒரு கட்டத்தில் சிவராம் negative reputationஐப் பெற்றதாகவும் இது தொடர்பாக தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிவராமோடு பழகுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியதாகவும் அதற்கமைய தானும் அக்காலத்தில் சிவராமோடு நெருங்கிப் பழகவில்லை என்பதையும் ஜெயராஜ் எழுதுகிறார்.

விடுதலைப் புலிகளிலிருந்து கருணா தான் பிரியப்போவதாக அறிவித்த ஆரம்பத்தில் சிவராம் கூட கரிகாலன் மற்றும் ரமேஷ் ஆகியோரைப் போல கருணாவின் பக்கமே இருந்ததாக இப்போது பரவலாக நம்பப்படுகிறது. சிவராம் புளட்டிலிருந்த ஆரம்ப காலங்களில் இருந்தே கிழக்கு மாகாணத்தின் நலன்களிலும் முக்கியத்திலும் அக்கறை கொண்டிருந்தவாராக அறியப்பட்டவர். வன்னிப் புலிகளூம் இதனடிப்படையில் சிவராமே கருணாவைத் தூண்டி விட்டிருக்கலாம் என்று சிவராமை சந்தேகித்தனர். பிளவு ஏற்பட்டபோது கருணாவின் சார்பாக சிவராமே தங்களை முதன் முதலாகத் தொடர்பு கொண்டார் என்பதை தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள ஒரு அரசியல் கட்சியின் வட்டாரமொன்று தெரிவித்ததையும் கரிகாலனும் ரமேஷம் வன்னித் தலைமைப் பக்கம் கட்சி தாவியபோதே சிவராம் “இனிக் கருணா நிலைக்க முடியாது” என்ற முடிவுக்கு சிவராம் வந்ததையும் UTHR (J) அறிக்கை குறிப்பிடுகிறது.

வன்னிப் புலிகள் மிகச் சரியாகவே தன்மீது சந்தேகம் வைத்திருப்பது சிவராமுக்கு மிகத்தெளிவாகவே தெரிந்திருக்கும். இதற்கிடையில் கருணாவின் படைகள் கலைந்து போன பின்னர் சிவராமின் மைத்துனரான கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் வன்னிப் புலிகளால் கருணா விவகாரம் தொடர்பாக “கைது செய்யப்பட்டு” விசாரிக்கப்பட்டார். எப்படி தனது பிழைப்புக்காக 1997 ல் தமிழ் நெற் தொடங்கியபோது தன்னுடைய புலி விமர்சனத்தைக் கைவிட்டு புலிச்சார்பு நிலை எடுக்கத் தலைப்பட்டாரோ அப்படி ஒரு நிலமை இப்போதும் சிவராமுக்கு. இம்முறை வன்னிச் சார்பு எடுக்க வேண்டிய நிலமை.

தமிழ் நெற்றுக்கு நிதி செலவளிப்பவர்களில் வன்னிப் புலிகளின் ஆதிக்கமே இருக்கும். புலிகளின் வெளிநாட்டு அமைப்புக்களிலும் கிழக்கு மாகாணத்தவரின் செல்வாக்கு இல்லை. வடக்கு மாகாணத்தவரினதும் வன்னிப் புலிகளினதும் அதிக்கமே. தமிழ் நெற்றின் ஆசிரியாராக தொடர்ந்தும் இருக்க வேண்டும் புலிகளின் பணத்தில் உலகச் சுற்றுலாப் பயணங்களும் செய்ய வேண்டும் என்றால் (பிரித்தானிய சாம்ராச்சியம் கோலோச்சிய காலத்தில் ஒருவர் உலகம் சுற்ற வேண்டுமென்றால் அவர் பிரித்தானியக் கடற்படையில் சேர வேண்டும் என்பதைப்போல) வன்னித் தலைமைப் பக்கம் சாய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. கருணாவை மிகக் கடுமையாகக் கிண்டலடித்து கருணாவுக்கான ஒரு பகிரங்கக் கடிதத்தை வீரகேசரியில் எழுதினார். சிவராமின் பெருமளவிலான கட்டுரைகளைப் போலவே அதுவும் ஒரு கட்டணம் செலுத்தாத விளம்பரமே.

சிவராம் தனது தனிப்பட்ட பாதுகாப்பில் கடந்த காலங்களில் மிகக் கவனமாகவே இருந்துள்ளார். 1986 ம் ஆண்டு ரெலோ இயக்கம் புலிகளால் அழிக்கப்பட்ட பின்னர் மற்றைய இயக்கங்களையும் அழிக்கத் தொடங்கினர். அடுத்ததாக புளட் மீது புலிகளால் யாழ் குடாநாட்டில் தாக்குதல் தொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட கடைசி நேரத்தில் புளட்டின் உறுப்பினர்களாக யாழ் நகரில் தங்கி இருந்தவர்கள் சிவராமும் மெண்டிஸ் என்கிறவருமே. இருவருமே நிலமையின் உக்கிரத்தைத் தணிக்கும் பொருட்டு ராஜதந்திரமான ஒரு நடவடிக்கையைச் செய்தனர். புளட் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக ஒரு பத்திரிகை அறிக்கையை தயார் செய்து அதனை யாழ்ப்பாணத்தின் நான்கு பத்திரிகைகளிலும் வெளிவருமாறு செய்தனர். அறிக்கையைப் பார்த்த விடுதலைப் புலிகளின் திலீபன் ஏன் இவ்விதமான நடவடிக்கையை அவசரப்பட்டுச் செய்ததாக இரண்டு புளட் உறுப்பினர்களிடமும் நேரடியாகவே வந்து கேட்டார். இதற்குப் பதிலாக திலீபனிடம் சிவராம் நேரடியாகவே சொன்னார் “உங்களை நம்பேலாது மச்சான்”

இதனோடு மட்டும் சிவராம் நின்றுவிடாது விரைவிலேயே ஒரு படகில் தமிழ் நாட்டுக்குத் தப்பிச்சென்று விட்டார். மெண்டிஸ் கிட்டுவோடு நட்பு பாராட்டுகிறவர். கிட்டு மெண்டிஸின் உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்படும் என்று கூறியதை நம்பி யாழ்ப்பாணத்திலேயே மெண்டிஸ் தங்கியிருந்தார். எனினும் சிவராம் வெளியேறிய சில தினங்களிலேயே மெண்டிஸ் புலிகளால் “கைது செய்யப்பட்டு” சில நாட்களின் பின் கொல்லப்பட்டார்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து புலிகளோடு பேச்சுவார்த்தைகளை நடத்தவென்று வாசுதேவா தலமையிலான ஒரு குழு கிழக்கு மாகாணத்தில் புலிகளைச் சென்று சந்திக்கவிருந்தது. புலிகளை இது தொடர்பாக வாசுதேவா நம்புவதை கடுமையாக எச்சரித்த சிவராம் தானும் அக்குழுவில் செல்வதைத் தவிர்த்தார். முடிவில் பேசவென்று அழைத்து வாசுதேவா முதலியோரை புலிகள் கொன்றது எலோருக்கும் தெரிந்ததே.

இவ்வகையாக தனது பாதுகாப்பு சம்பந்தமாக மிகச்சரியான மதிப்பீடுகளைச் செய்த சிவராம் தனது இறுதிக் காலத்தில் தனது பாதுகாப்பு சம்பந்தமாக மிக அசட்டையாக இருந்தது அதிசயமே. அதுவும் புளட்டின் உட்கட்சிப் படுகொலைகளின் இரத்தக்கறைகளை காவிக்கொண்டும் தனது சக புளட் உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக துரோகம் செய்து கொண்டும் கருணாவோடு கொழுவிக்கொண்டும் வன்னிப் புலிகளின் உத்தியோகப் பற்று அற்ற பிரச்சாரச் செயலாளராக கொழும்பில் இயங்கிக்கொண்டும் இன்னமும் கொழும்பில் வைத்து ஒரு “பத்திரிகையாளரான” தான் கொல்லப்படமாட்டேன் என்று சிறீலங்காவின் ஜனநாயகம் நீதி சட்டம் ஒழுங்கு என்பவற்றில் நம்பிக்கை வைத்து இருந்ததானது ஒரு முரண் நகையே.

சிவராமைப் பற்றி தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகள் அவர் ஒரு துப்பாக்கி தாங்கிய போர் வீரர் என்ற மாதிரியான பிரமைகளை கட்டமைத்துள்ளன. உண்மையில் சிவராம் ஒரு சமரில் (battle) கூட பங்குபற்றியதில்லை. அவரது துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டுகள் யாரையாவது கொன்றது என்றால் அது அவரது சக புளட் இயக்கத் தோழர்களான அகிலனும் செல்வனுமே.

மாமனிதர் விருது வழங்கப்பட்டதை அடுத்து தமிழ் பத்திரிகைகளில் பலர் சிவராமுக்கு அதிபுனையப்பட்ட அஞ்சலிக் கட்டுரைகளை போட்டிபோட்டுக்கொண்டு எழுதினர். அவர் ஒரு உன்னதமான பத்திரிகையாளராகவும் புத்திஜீவியாகவும் கட்டமைக்கப்பட்டார். இப்படி எழுதியவர்கள் விடுதலைப் புலிகளையும் புலிப்பாசிசத்தையும் அண்டிப் பிழைப்பு நடத்தும் ஊடக “யாவாரிகள்”. இவர்களில் பலர் சிவராமின் உண்மை வரலாற்றை அறிந்தவர்கள் என்பது போக கடந்த காலங்களில் சிவராமை கடுமையாக விமர்சித்தவர்கள். தெரிதல், காலச்சுவடு, உயிர்மை போன்ற இலக்கிய இதழ்களிலும் அஞ்சலிகள் வந்தன. இதைத் தொடர்ந்து ஆன்மீக மற்றும் சோதிட மாத இதழ்கள், மங்கையர் மஞ்சரி, அம்புலிமாமா என்பவற்றிலும் சிவராமுக்கு அஞ்சலிகள் வரலாம் என்று எதிர்பார்த்தேன்.

ராஜ்பால் அபேயநாயக்கா சிவராமை யேசு கிறிஸ்து அளவுக்கு ஆக்காத குறைதான். Sunday Times இல் வெளிவந்த சிவராமின் அஞ்சலிக் கூட்ட அழைப்பில் சிவராமின் ‘விசிறிகள்’ (fans) எலோரும் வரலாம் என்று வெட்கமின்றி எழுதப்பட்டது. அவர் ஒரு சினிமா நட்சத்திரமாக உருவாக்கப்பட்டார். சிவராமின் அடிமுதல் நுனி வரை அறிந்த நடுநிலமையான பத்திரிகையாளரான டி.பி.எஸ் ஜெயராஜே சிவராமின் மறுபக்கங்கள் பற்றி அடக்கி வாசித்தார். ஜெயராஜ் எழுதிய நீண்ட தொடரில் புனைவுகளே அதிகம் என்பது போக அதில் அதிகளவான தரவுப்பிழைகள் இடம் பெற்றன.

அகிலன் செல்வம் கொலையைப் பற்றி எழுதுகிற ஜெயராஜ் “எனினும் விசாரணையின் போது சிவராம் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டதாக” புனைந்து பல்டி அடிக்கிறார். வேலிக்கு ஓணான் சாட்சி என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட புளட்டின் கங்காரு நீதிமன்றங்களில் ஜெயராஜுக்கு எப்போது உடன்பாடு வந்ததோ தெரியாது. தன்முயற்சியில் சற்றும் மனம் தளராத பேரா. சிவத்தம்பி, சிவராமை ” நீ எத்தகைய பெரிய மனிதன்” என்று எழுதினார்.

மாத்தையாவினாலும் கிட்டுவினாலும் நம்பகரமற்றவர் என்று மிகச் சரியாகவே மதிப்பிடப்பட்ட சிவராம் தனது குறுகிய கால வாழ்க்கையினாலும் அதனை உறுதிப்படுத்திச் சென்றிருக்கிறார்.

(தேசம் சஞ்சிகை இதழ் 25 (நவம்பர் – டிசம்பர் 2005))

Read more...

Wednesday, April 27, 2016

நாட்டின் இறைமைக்கு எதிரான எந்தவொரு தீர்மானமும் இங்கு செல்லுபடியாகாது. வடமாகாண சபைக்கு மைத்திரி.

நாட்டின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் ஏற்படுத்தும் எந்தவொரு வரைவுக்கும் அனுமதியோ அல்லது ஆதரவோ வழங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நபருக்கும் எந்தவொரு பிரேரணைகளையும் நிறைவேற்றுவதற்கு உரிமை இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டைப் பிரிக்கும் பிரேரணைகளை செயற்படுத்துவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று கூறியுள்ளார்.

இன்று காலை ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், செய்திப் பணிப்பாளர்கள், செய்தி ஆசிரியர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

இவ்வாறான பிரேரணகைள் நிறைவேற்றப்பட்டவுடன் பதற்றமடையத் தேவையில்லை என்றும் கூறினார்.

தேர்தல் ஒன்று நெருங்கும் போது இவ்வாறான விடயங்கள் இடம்பெறுவதாகவும், ஜெயலலிதாவும் இவ்வாறு செய்றபட்டு இலாபம் அடைவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

வெட்வரி அதிகரிப்பு குறித்து ஜனாதிபதியிடம் வினவப்பட்ட போது, பொது மக்களை பாதிக்கும் விதமாக எவ்விதத்திலும் வெட் வரி அதிகரிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி கூறினார்.

வர்த்தக துறையினருக்கே வெட் வரி அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும், அதன் காரணமாக வீணாக அச்சம் அடையத் தேவையில்லை என்றும் கூறினார்.

அத்துடன் சிலர் அரசாங்கத்தை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான சதிகாரர்களாக செயற்படுவதாகவும், அவ்வாறான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் தான் இடமளிப்பதில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.

தானும் பிரதமரும் இணைந்து இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதாகவும், அந்தப் பயணத்தை நாசவேலை செய்வதற்கு எவருக்கும் இடம் வழங்குவதில்லை என்றார்.

கடந்த 48 ஆண்டுகளாக தான் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாத ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தலின் போது வெளியேற காரணம் கடந்த அரசாங்கத்தின் நிர்வாகமே என்றும், கடந்த அமைச்சரவையில் இருந்தவர்களுக்கும் இவை நன்கு தெரியும் என்றும் கூறினார்.

சாப்பாட்டு மேசைக்கு சென்றால் அங்கு முதலில் குடும்ப உறுப்பினர்களின் தீர்மானங்கள் மாத்திரமே பேசப்படுவதாகவும், குடும்பத்தின் 05 உறுப்பினர்கள் மாத்திரம் தீர்மானம் எடுக்கும் இடமாக அது இருந்ததாகவும் ஜனாதிபதி கூறினார்.

முன்னர் இருந்த மோசமான ஆட்சியில் இருந்து நாட்டைப் பாதுகாத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு அறியக் கொடுக்காமல் சில ஊடகங்கள் மோசடிக்காரர்களுக்காக முன்நிற்பது குறித்து தான் வருத்தமடைவதாக கூறினார்.

ஊடகங்கள் எப்போதும் சமநிலை தன்மையுடன் செயற்பட வேண்டிய போதும் சில ஊடகங்கள் மோசடிக்காரர்களின் தேவைக்கு ஏற்றவாறு செயற்படுவதாக கூறினார்.



Read more...

ஜனா மீதான தாக்குதலும் பூசாரியின் காவாலித்தனமும்.

கடந்த புதன் கிழமை இரவு வாழைச்சேனை கருணைபுரம் குழந்தையேசு கிறவுண் விளையாட்டு மைதானத்தில், கிறவுண் விளையாட்டு கழகத்தின் 27 வது வருட நிறைவையொட்டி இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டிருந்த கிழக்கு மாகாண சபையின் த.தே.கூ உறுப்பினரும் ரெலோ அமைப்பின் முக்கியஸ்தருமான கோவிந்தன் கருணாகரன் என்கின்ற ஜனா உரையாற்றுகையில், மக்கள் முன் அவரது ஒலிவாங்கி பறிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்டுக்கதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் தெரியவருவது யாதெனின்:

கிறவுண் விளையாட்டுக்கழகத்தினரால் கடந்த பல ஆண்டுகளாக இவ்வாறான நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றது. இந்நிகழ்வுக்காக கடந்த சில வருடங்களாக பூசாரியான யோகேஸ்வரன் எம்பி நிதியுதவி செய்து வந்துள்ளார். அந்நிதியுதவிக்கு பிரதிபலனாக நிகழ்வின் பிரதம விருந்தினர் இருக்கையையும் பூசாரி அலங்கரிந்து வந்துள்ளார்.

ஆனால் இம்முறை விளையாட்டுக்கழகத்தினர் யோகேஸ்வரன் எம்பி யிடம் நிதியுதவி கேட்டு சென்றபோது, பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதைதொடர்ந்து ஜனாவிடம் சென்ற விளையாட்டுக்களத்தினருக்கு நிதியுதவி கிடைக்கப்பெற்றுள்ளது. தொடர்ந்து நிகழ்விற்கு ஜனா பிரதம அதிதியாக அழைக்கப்பட்டுள்ளார்.

பிரதம அதிதி கதிரை பறிபோனதை சகித்துக்கொள்ள முடியாத எம்பி யோகேஸ்வரன், பிரதேசத்தை சேர்ந்த மதுவுக்கு அடிமையான இளைஞன் ஒருதனுக்கு சாராயப்போத்தலை வாங்கி கொடுத்து மேற்படி இழிசெயலை நடாத்தியுள்ளார்.

மதுவுக்கு அடிமையான சிவகுமார் என்ற இளைஞன் கடந்த 23 ம் திகதி பொலிஸாரல் கைது செய்யப்பட்டு ஜனாவை தாக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது 25 ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கதிரைக்காக, மேடைக்காக, பதிவிகளுக்காக, ஒலிவாங்கிக்காக தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டிருக்கின்றனர் என்பதற்கு இச்சம்பவம் சிறந்து உதாரணமாகும்.

பூசாரியின் இக்குழிபறிப்பு தொடர்பில் கூட்டமைப்பு விசாரணை மேற்கொண்டு அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமா என மக்கள் வினவுகின்றனர்.

Read more...

Tuesday, April 26, 2016

உக்கிரமடையும் இஸ்ரேலின் நில ஆக்கிரமிப்பு; தினமும் அகதிகளாகும் பாலஸ்தீன மக்கள். எம்.ஐ.முபாறக்

பாலஸ்தீன நிலத்தில் யூத நாடொன்றை உருவாக்கும் திட்டம் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டங்களின் விளைவாக 1947 ஆம் ஆண்டு நிறைவேறியது.பாலஸ்தீன மக்களுக்கே தெரியாமல்-அவர்களிடம் கேட்காமல் ஐ.நா பாலஸ்தீனின் 55 வீத நிலத்தை யூதர்களுக்கு பறித்துக் கொடுத்தது.அது போதாது என்று அன்றிலிருந்து இன்று வரை யூதர்கள் பாலஸ்தீன் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டே வருகின்றனர்.

இஸ்ரேல் கைப்பற்றிய அதிகமான நிலங்களுள் அதிகமான நிலங்களில் யூத குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன; இஸ்ரேலிய தொழில்சாலைகள் நிறுவப்பட்டுள்ளன; யூதர்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இஸ்ரேலின் பொருளாதார வளர்ச்சிக்கான பெரும் பங்களிப்புகள் இந்த நிலங்களில் இருந்துதான் பெறப்படுகின்றன. மறுபுறம் இந்த நிலங்களின் சொந்தக்காரர்கள் இந்த நிலங்களிலேயே இஸ்ரேலின் கை கூலிகளாக-அடிமைகளாக பணிபுரியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறானதொரு பொருளாதாரக் கட்டமைப்பை-யூத குடியிருப்புகளை சிதைத்து விட்டு அந்த நிலங்களை பாலஸ்தீனிடம் இஸ்ரேல் மீள ஒப்படைக்கும் என்பது கனவிலும் நடக்காத ஒன்று.அவற்றைக் கைப்பற்ற பாலஸ்தீன மக்கள் இன்னும் போராட வேண்டும்.

யூதர்களால் பறிக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தில்1948 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி சியோனிச தலைவர் டேவிட் பேங்கியூரியனால் இஸ்ரேல் நாடு பிரகடனப்படுத்தப்பட்டது.மறு நாளே யூதர்கள் சுமார் 500 பாலஸ்தீன கிராமங்களுக்குள் புகுந்து 7 லட்சம் முஸ்லிம்களை வெளியேற்றி அந்த நிலங்களைக் கைப்பற்றினர்.அதே கால பகுதியில் பல நாடுகளில் இருந்து 7 லட்சம் யூதர்கள் வரவழைக்கப்பட்டு அந்த நிலங்களில் குடியமர்த்தப்பட்டனர்.

இதனால்,இஸ்ரேலுக்கும் அதனைச் சுற்றியுள்ள அரபு நாடுகளுக்கும் இடையில் யுத்தம் மூண்டது.அந்த யுத்தத்தின் பின் பாலஸ்தீனின் காஸா பகுதி எகிப்தின் கட்டுப்பாட்டின் கீழும்-அல்-அக்ஸா பள்ளிவாசல் உள்ளிட்ட மேற்குக் கரை ஜோர்தானின் நிர்வாகத்தின் கீழும் வந்தன.

1967 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற மூன்றாவது யுத்தத்தின் முடிவில் காஸா,அல்-அக்ஸா உள்ளிட்ட மேற்குக் கரை,எகிப்துக்குச் சொந்தமான சினாய் பாலைவனம்,ஜோர்தானுக்கு சொந்தமான ஜோர்தான் பள்ளத்தாக்கு,சிரியாவுக்குச் சொந்தமான கொலன் ஹெய்ட்ஸ்,லெபனானுக்கு சொந்தமான ஷெபா விவசாய நிலங்கள் போன்றவை இஸ்ரேலால் கைப்பற்றப்பட்டன.

1978 ஆம் ஆண்டு இஸ்ரேல் எகிப்தின் சினாய் பாலைவனத்தை எகிப்திடம் மீள ஒப்படைத்தது.2005 ஆம் ஆண்டு காஸாவை விட்டும் வெளியேறியது.காஸாவில் நிறுவப்பட்டிருந்த யூத குடியேற்றங்களை மேற்குக் கரைக்கு மாற்றியது.

மேற்குக் கரை,ஜோர்தான் பள்ளத்தாக்கு,சிரியாவின் கொலன் ஹெய்ட்ஸ்,லெபனானின் செபா விவசாய நிலங்களை இஸ்ரேல் தொடர்ந்தும் அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது.

கைப்பற்றப்படட அந்த நிலங்களை மீட்டெடுக்க அந்தந்த நாடுகள் ஏதோவொரு வகையில் முயற்சித்துக் கொண்டு இருக்கின்ற போதிலும் மேற்குக் கரையை மீட்கும் போராட்டமே முக்கியமானதாகும்.

மேற்குக் கரையை-அல்-அக்ஸா பள்ளிவாசலை மீட்கும் போராட்டம் விரைவில் வெற்றி பெற வேண்டும் என்பதே உலக முஸ்லிம்கள் அனைவரினதும் விருப்மாகும்.இதை மீளக் கைப்பற்றும் பாலஸ்தீன போராட்டத்துக்கு கை கொடுக்க வேண்டியது உலக முஸ்லிம் நாடுகளின் கடமையாகும்.இந்தக் கடமை சரியாக நிறைவேற்றப்பட்டால் பாலஸ்தீன் இஸ்ரேலிடமிருந்து மிக விரைவில் முழுமையாக மீட்கப்படும் என்பது நிச்சயம்.

ஆனால்,இந்த விடயத்தில் உலக முஸ்லிம்களும் முஸ்லிம் நாடுகளும் காட்டும் அசமந்தப் போக்கால் பாலஸ்தீன் தினம் தினம் அழிவைச் சந்தித்து வருகின்றது.இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளினால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கொலைகளும் நில ஆக்கிரமிப்புகளும் நாளுக்கு நாள் தொடரவே செய்கின்றன.

உலக முஸ்லிம்களின் விடுதலைக்காகப் போராடுவதாகச் சொல்லிக்கொள்கின்ற ஆயுதக் குழுக்களும் சரி.முஸ்லிம் நாடுகளும் சரி பாலஸ்தீன் விடயத்தில் மௌனமாகவே இருக்கின்றன.முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராகப் போராடுவதை விட்டுவிட்டு தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்கின்றன.இது மேற்கு நாடுகளின் திட்டமிட்ட சதியாகும்.இது விரிவாக ஆராயப்பட வேண்டியது.

பலஸ்தீனின் நிலத்தில் 55 வீதமான நிலத்தைத்தான் ஐ.நா சபை 1947 இல் யூதர்களுக்குப் பறித்துக் கொடுத்து.ஆனால்,அந்த நிலம் போதாது என்று கூறி மறு நாள் முதலே அவர்கள் மேற்கொண்ட நில ஆக்கிரமிப்பின் விளைவாக இப்போது 85 வீதமான நிலங்கள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.

அந்த நிலங்களில் வசித்து வந்த பாலஸ்தீன மக்களை விரட்டியடித்துவிட்டு அங்கு தொழில்சாலைகளும் யூதக் குடியுருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன;அமைக்கப்பட்டு வருகின்றன.அண்மைக்காலமாக நில ஆக்கிரமிப்பும் யூதக் குடியிருப்புக்கள் அமைப்பதும் தீவிரமடைந்துள்ளன.சர்வதேசத்தின் எதிர்ப்புகளையும் மீறி இஸ்ரேல் தனது திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டே இருக்கின்றது.

தினமும் பாலஸ்தீன மக்கள் அகதிகளாகிக் கொண்டே இருக்கின்றனர்.தினமும் யூதக் குடியிருப்புக்கள் இருக்கின்றன.மேற்குக் கரையில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலுள்ள 60 வீதமான நிலங்களுக்குள் பாலஸ்தீன அதிகார சபையால் கூட நுழைய முடியாதுள்ளது.கிழக்கு ஜெருசலத்தின் நிலைமையும் படு மோசமானது.அங்கும் வீடுகள் உடைக்கப்படுவதும் யூதக் குடியிருப்புகள் அமைக்கப்படுவதும் தொடர்ந்த வண்ணம்தான் உள்ளன.

2009 முதல் 2014 வரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 23 வீதமான யூதக் குடியிருப்புக்கள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.இன்னும் 55,548 வீடுகளை அமைப்பதற்கு இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.2013 ஆம் ஆண்டு மார்ச் முதல் இப்போது வரை தினமும் சராசரி 460 வீடுகள் என்ற அடிப்படையில் வீடுகள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.2014 இல் 3100 வீடுகளுக்கான நிர்மாணப் பணிகள் தொடங்கப்பட்டன.ஜெருசலத்தில் மிக விரைவில் 90,000 மக்கள் விரட்டப்படும் அபாயம் உள்ளது.

இவ்வாறு இஸ்ரேலின் யூதக் குடியிருப்பு விஸ்தரிப்பும் நில அபகரிப்பும் தொடர்ந்த வண்ணமேதான் உள்ளன.சர்வதேச நாடுகளும் முஸ்லிம்களும் இதற்கு எதிராகக் கண்டனங்களை மாத்திரம் தெரிவிக்கின்றதே தவிர இவற்றுக்கு எதிராக-இவற்றை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கு எதுவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

பலஸ்தீனர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்குள் நுழைந்து அவர்களுக்கு மத்தியில் யூதக் குடியிருப்பை நிறுவி பாலஸ்தீனர்களின் பலத்தை வெகுவாகக் குறைத்துவிடும் வேலையை இஸ்ரேல் கட்சிதமாகச் செய்து வருகின்றது.இதன் மூலம் இஸ்ரேலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பாலஸ்தீனர்களின் ஜனநாயகப் போராட்டத்தை வெகுவாகக் குறைப்பதே இஸ்ரேலின் ஒரே நோக்கம்.

அது மாத்திரமன்றி,''அகன்ற இஸ்ரேல்'' என்ற இஸ்ரேலின் அந்த நாசகாரத் திட்டத்துக்குள் பாலஸ்தீன் உள்வாங்கப்பட்டு பாலஸ்தீன் என்ற ஒரு நாடே இல்லாமல் போய்விடும்.அதன் பின் பாலஸ்தீனர்கள் அவர்களின் மண்ணுக்காகப் போராட முடியாமல் போய்விடும்.இதனால்,இஸ்ரேல்-பாலஸ்தீன் என்ற இரு நாட்டுத் திட்டம் வலுவிழந்து போய்விடும்.

உலக நாடுகளும் முஸ்லிம் நாடுகளும் தொடர்ந்தும் இவ்வாறு பாராமுகமாக இருந்தால் பாலஸ்தீன் என்ற நாடு விரைவில் இல்லாமலே போய்விடும்.இனிமேலாவது முஸ்லிம் நாடுகள் சிந்தித்து முடிவெடுக்குமா?











Read more...

Monday, April 25, 2016

ஜெயலலிதா என்னும் பாசிச மனநோயாளி. செ.கார்கி

அரசியலில் நாம் எவ்வளவோ வக்கிரம் பிடித்த பேர்வழிகளை எல்லாம் பார்த்திருக்கின்றோம். எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களை அவர்களின் கடந்த கால செயல்பாடுகளைச் சொல்லி சில பேர் விமர்சிப்பார்கள், சில பேர் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தாக்கி விமர்சனம் செய்வார்கள். ஆனால் யாரும் தன் சொந்தக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களை இழிவுபடுத்த மாட்டார்கள். ஒரு கட்சியின் பலம் என்பதே அந்தத் தொண்டர்கள் தான்.

ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் தரும் நூற்றுக்கணக்கான வாக்குறுதிகளை நம்பி தொண்டர்கள் இந்த முறையாவது தமது வாழ்க்கையில் நல்லது ஏதும் நடக்காதா என எதிர்பார்ப்போடு வாக்களிக்கின்றனர். வழக்கம் போல அவர்கள் ஏமாற்றப்படும் போதும் கட்சியின் மீது கொண்ட தீவிர விசுவாசத்தால் தன்னுடைய தலைவரின் பெயர் கெட்டு விடக்கூடாதே என தான் ஏமாந்தாலும் தலைவனின் மானத்தைக் காப்பாற்ற மல்லுக்கட்டும் பல தொண்டர்களை இன்னமும் நீங்கள் பார்க்கலாம். தொண்டர்களின் இந்த வெள்ளந்தியான மனம் தான் அரசியல் தலைவர்களை இன்னமும் இங்கு செல்வாக்கோடு வாழ வைத்துக்கொண்டு இருக்கின்றது.

நம்மைப் போன்ற குறைந்த பட்ச அரசியல் அறிவு உள்ளவர்கள் தலைவன் தப்பு செய்தான் என்றால் அவனை ஏகத்துக்கும் எடுத்து எறிந்து பேசிவிடுவோம். ‘போடா நீயும் உன் கட்சியும்’ என தூக்கி எறிந்துவிட்டு ஒத்துவரும் கட்சியில் ஐக்கியம் ஆகிவிடுவோம். ஆனால் காலங்காலமாக தலைவனின் முகத்திற்காகவும் அவன் எப்போதோ செய்த ஏதோ ஒரு நல்லதிற்காகவும் அவனை இன்னும் அன்போடு நினைத்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான அரசியல் அற்ற மக்கள், தலைவன் என்னதான் ஊழல் செய்தாலும் ஊதாரித்தனம் செய்தாலும் அதை பெரிது படுத்தாமால் அதே கட்சியிலேயே கடைவரை தன்னுடைய உயிர் மூச்சு அடங்கும் வரை காலத்தை தள்ளுகின்றனர். இது போன்ற மக்களை உலகின் வேறு பகுதியில் எங்காவது பார்க்க முடியுமா என தெரியவில்லை. ஆனால் நிச்சயம் தமிழ்நாட்டில் நாம் பார்க்க முடியும்.



தனக்குப் பிடித்த தலைவியின் பேச்சைக் கேட்க மாட்டோமா, அவரை நேரில் ஒருமுறையேனும் வாழ்க்கையில் பார்க்க மாட்டோமா என தன்னுடைய குடும்பப் பிரச்சினை, வேலை என அனைத்தையும் ஒரு நாள் தள்ளிவைத்துவிட்டு கட்சிக்காரர்கள் ஏற்பாடு செய்துதரும் மினி ஆட்டோக்களிலும், லாரிகளிலும் ஆட்டு மந்தைகளைப்போல ஏறிக்கொண்டு மகிழ்ச்சியில் ஏதோ சுற்றுலாவுக்குப் போகும் மனநிலையில் வரும் அந்தத் தொண்டனை ஒரு கட்சியின் தலைவி எப்படி நடத்தியிருக்க வேண்டும்? ஒன்றுமே இல்லாமல் அன்னக்காவடியாக, ஆட்டக்காரியாக தமிழகம் வந்த தன்னை இன்று பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக்கிய அந்த அரசியலற்ற அற்பப் பிறவிகளை, உள்ளங்களையில் வைத்தல்லவா தாங்கியிருக்க வேண்டும். குறைந்த பட்சம் அவர்களை ரத்தமும் சதையும் உணர்ச்சிகளும் உள்ள ஒரு மனிதப் பிண்டமாகவேனும் கருதியிருக்க வேண்டும் அல்லவா?

ஆனால் நாம் இதையெல்லாம் யாரிடம் இருந்து எதிர்பார்க்க முடியும்? குறைந்த பட்ச நேர்மையையாவது தம்வாழ்நாளில் கடைபிடிக்கும் ஒருவரிடம் இருந்து எதிர்பார்க்கலாம். ஆனால் ஆண்டாண்டு காலமாக ஊறிப்போன பார்ப்பனத் திமிரில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு மிருகத்திடம் இருந்து இதை நாம் எப்படி எதிர்பார்க்க முடியுமா? சுயமரியாதை அற்ற, முதுகெலும்பற்ற கூழைக்கும்பிடு போடும் ஒரு அடிமைக் கூட்டத்தை தன்னுடைய பரிவாரமாகக் கொண்டிருக்கும், சாமானிய மக்களை தான் கொடுக்கும் நூறு ரூபாய்க்கும், பிரியாணிக்கும், ஆசைப்பட்டுவரும் பஞ்சை பராரிகளாக பார்க்கும், கொழுத்துப்போன பணத்திமிரில் ஆட்டம் போடும் ஒரு மனநோயாளியிடம் இருந்து இதை நாம் எதிர்பார்க்க முடியுமா?

இந்த உலகத்தில் தான் மட்டுமே வாழ்வாங்கு வாழ்வதற்குத் முழுத் தகுதியானவள்; மற்ற அனைவரும் தான் அப்படி வாழ்வதற்காக குற்றேவல் புரிய கடவுளால் படைக்கப்பட்டவர்கள் எனக் கருதும் ஒரு சுயமோகிதான் இந்த மனநோயாளி ஜெயலலிதா. அவருக்கு ஒரு பிரச்சினை என்றால் அனைவரும் அதற்காக வேதனைப்பட வேண்டும்; அவர் சிறைக்குச் சென்றால் அவரது தொண்டர்கள் தீக்குளிக்க வேண்டும்; பொதுமக்களை கடைகளை மூடச்சொல்லி கட்டாயப்படுத்த வேண்டும்; பேருந்துகளை எரிக்க வேண்டும்; முடிந்தால் உள்ளே இருக்கும் மாணவிகளையும் சேர்த்தே எரிக்க வேண்டும்; கோவிலில் பால்குடம் எடுக்க வேண்டும்; அலகு குத்திக் கொள்ள வேண்டும்; மண்சோறு தின்க வேண்டும்; மொட்டை போட்டுக் கொள்ள வேண்டும்; மீசை எடுத்துக் கொள்ளவேண்டும். இதற்கெல்லாம் ஜெயலலிதாவிற்குத் தொண்டர்கள் வேண்டும்; கழகக் கண்மணிகள் வேண்டும். மற்றபடி தன்னுடைய வேலை முடிந்துவிட்டதென்றால் அவன் எக்கேடு கெட்டு நாசமாய் போனால் எனக்கென்ன என்பதுதான் ஜெயலலிதாவின் மனுநீதி!

தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் அடித்துக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் தன்னுடைய தேர்தல் பரப்புரையை வேண்டுமென்றே மதியம் 3 மணிக்கு ஜெயலலிதா வைக்கின்றார் என்றால், தன் தொண்டர்களைப் பற்றி என்ன மாதிரியான எண்ணத்தில் ஜெயலலிதா இருப்பார் என்று பார்த்துக் கொள்ளுங்கள். வெயில் 104 டிகிரி முதல் 106 டிகிரி வரை இருப்பதால் மதியம் 12 மணி முதல் 3 மணிவரை மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என பல மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள். தினமும் நாளிதழ்கள் கூட படிக்காத, நாட்டில் என்ன நடக்கின்றது என்றே தெரியாத, யாரோ எழுதிக் கொடுத்ததை கிளிப்பிள்ளை போல அப்படியே பேசும் ஜெயலலிதாவிற்கு இதெல்லாம் எப்படி தெரிந்திருக்கும்?

தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்பதை மறந்து ஒரு மகாராணியைப்போல ஹெலிகாப்டரில் வந்து, குளுகுளு வசதி செய்யப்பட்ட மேடையில் அமர்ந்து, அதுவும் மனுதர்ம சாஸ்திரப்படி அமைக்கப்பட்ட மேடையில் அதாவது பார்ப்பனன் உயர்ந்த இடத்திலும் சூத்திரன் கீழ்நிலையிலும் உள்ளது போன்று அமைக்கப்பட்டுள்ள மேடையில் அமர்ந்து ‘மக்களுக்காக நான்’, மக்களால் நான்’ என ஏதோ சினிமா பட பாணியில் பிதற்றும் இந்த சர்வாதிகாரியின் பேச்சுக்கு உச்சி வெயிலில் மண்டையைப் பிளக்க அரைமயக்கத்தில் அமர்ந்துகொண்டு மக்கள் கைதட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கொடுமை வேறு எங்காவது நடக்குமா?




ஜெயலலிதாவின் இந்த கேவலமான கேடுகெட்ட பேச்சை கேட்பதற்காக வெயிலையும் பொருட்படுத்தாமல் வந்த தொண்டர்கள் ஏறக்குறைய ஐந்துபேர் இதுவரை இறந்துள்ளனர். விருத்தாசலத்தில் கடந்த 11-ம் தேதி நடந்த பரப்புரையின் போது மூன்று பேரும், 20-ம் தேதி சேலத்தில் நடந்த பரப்புரையின் போது இரண்டுபேரும் வெயிலின் கடுமை தாங்காமல் இறந்துள்ளனர். ஆனால் இந்த மரணங்கள் எல்லாம் ஜெயலலிதா என்ற பாசிச மனநோயாளியின் மனதை மாற்றிவிடப் போதுமானவை அல்ல.

ஜெயலலிதாவைப் பொருத்தவரை அடுத்தவனின் உயிரை எல்லாம் கிள்ளுக்கீரையாக நினைப்பவர். 1992 ஆம் ஆண்டு மகா மக குளத்தில் ஜெயலலிதா குளிக்கச் சென்ற போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 60 பேர் பலியானார்கள். அப்போதும் அதே அலட்சிய மனநிலையில்தான் ஜெயலலிதா இருந்தார்; இப்போதும் அதே அலட்சிய மனநிலையில் தான் இருக்கின்றார். அதனால் தான் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் இறந்தவர்கள் உடல்நிலை சரியில்லாததால் இறந்துவிட்டார்கள் என அவரால் பேச முடிகின்றது.

தமிழ்நாட்டில் 2011 முதல் 2015 வரை 9948 கொலைகள் நடந்துள்ளன; மேலும் 1 லட்சத்திற்கும் அதிகமான கொள்ளையும் மற்றும் திருட்டுச் சம்பவங்களும் நடந்துள்ளன என எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் ஜெயலலிதவோ தமிழ்நாடு ‘அமைதிப் பூங்காவாக’ இருப்பதாக சொல்கின்றார். ஜெயலலிதா போன்ற பாசிச வக்கிரம் பிடித்த மனநோயாளி இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்டார் என்றால் நிச்சயம் தமிழ்நாடு முழு ‘அமைதிப் பூங்காவாக’ மாறிவிடும். ஆம் நிச்சயம் ‘அமைதிப் பூங்காவாக’ மாறிவிடும்.

- செ.கார்கி

Read more...

ஊடக நடுநிலைமை என்பது பல எதிர் அரசியல் புரியும் கட்சிக்- காறர்களை ஒரு மேடையில் அமரச்செய்வதல்ல - சிப்லி பாறுக்

ஊடக நடுநிலைமை என்பது பல எதிர் அரசியல் புரியும் கட்சிக்காறர்களை ஒரு மேடையில் அமரச்செய்வதல்ல என்று 2016.04.24ஆந்திகதி (ஞாயிற்றுக்கிழமை) நேற்று இடம்பெற்ற இம்போட்மிறரின் 6 ஆவது வருட நிறைவு ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு நிகள்வில் பிரதம அதிதிகளில் ஒருவராக கலந்து கொண்டு பொறியியலாளர் சிப்லி பாறுக் தெரிவித்தார்.

ஊடகத்துறை அதனோடு சார்ந்த விடயங்கலென்று சொல்லுகின்றபோது ஒரு சமூகத்தினுடைய எழுச்சியையும் அதனுடைய இருப்பினையும் அதனுடைய முன்னேற்றத்தினையும் தோழில் சுமந்து செல்லுகின்ற ஒரு பாரிய சக்தியாக ஊடகத்துறையை பார்க்க முடியும்.

உலகிலே இன்று நசுக்கப்பட்டு ஆங்காங்கே நலினமாக இரத்தங்கள் ஓட்டப்படுகின்ற சமூகம் இஸ்லாமிய சமூகம் முஸ்லிம்களாக இருந்தாலும் ஊடகம் என்கின்றதொன்று சர்வதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் இவர்களுக்கு இல்லாதது துரதிஸ்டவசம் அவர்களுக்கு ஏற்படுகின்ற, அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற அராஜகங்களை, அநியாயங்களை உலகிற்கு சொல்லுவதற்கு மற்றயவர்கள் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக இல்லாத ஒரு காரணியாக எமது சமூகத்திற்கென்று குறிப்பாக முஸ்லிம்களுக்கென்று ஒர் தனியான வீரியமிக்க ஊடகம் இல்லையென்றுதான் சொல்ல முடியும்.

கடந்த ஆட்சி மாற்றத்தில் மிக அதிகமாக ஊடகங்கள்தான் செல்வாக்கு செலுத்தியது. அதிலும் சமூக வலைத்தளங்கள் இந்த ஆட்சி மாற்றத்தில் அதிக பங்கினை செலுத்தியது. அறபு நாடுகளிலே ஏற்பட்ட அறபு வசந்தத்திலும் இந்த சமூக வலைத்தளங்கள் என்பது பலத்த தாக்கத்தினை கொடுத்தது.

இலங்கையினுடைய ஒரு தனிப்பட்ட சிறுபான்மை சமூகம் சம்மந்தமான விடயங்களை முன்கொண்டு வருவதற்கு அதனை வெற்றிகரமாக இந்த நாட்டிலே சொல்லுவதற்கு இன்னும் பல ஊடகங்கள் ஆளுமையுடன் வெளிப்படையாக பக்கச்சார்பில்லாத ஊடகங்களாக வரவேண்டுமென்பதே எங்களுடைய அவா. பக்கச்சார்பில்லாத அல்லது நடுநிலையான ஊடகம் என்பதன் கருத்து மாற்றுக்கட்சியில் உள்ளவர்களை ஒன்றாக அழைத்து ஒரே மேடையில் அமர்த்துவதல்ல நடுநிலையான ஊடகம். நடுநிலையான ஊடகம் என்பது எவர் எந்தக்கட்சி சார்ந்தவராக இருந்தாலும் அவருடைய சமூகம்சார் பொதுவிடயங்களை உண்மைக்கு புறம்பில்லாமல் தெளிவாக சொல்வதே நடுநிலை ஊடகம். ஆகவே இந்த நடுநிலை என்பது ஊடகவியலாளர்களுக்கு உண்மையில் இருக்க வேண்டிய ஒரு தார்மீக பொறுப்பு.

ஊடகவியலாளர் தனிப்பட்டரீதியில் எந்தக்கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் செய்தியினை சொல்லுகின்றபொழுது அந்த கட்சிக்கு அப்பால் நின்றுகொண்டு அவர் பேச வேண்டும். எனக்கு முன் பேசிய சகோதரர் மூஸா அவர்கள் சொன்னார்கள். அரசியல்வாதிகள் என்றால் எம்சமூகத்தில் ஒரு கண்ணோட்டம் இருக்கின்றது. அரசியல்வாதிகள் என்றால் அவர்கள் ஏமாற்றுக்காரர்கள் வாக்குறுதி மீறுகின்றவர்கள் இன்று ஒன்றை சொல்லிவிட்டு நாளை வேறு ஒன்றை செய்வார்கள் எந்த நேரம் எந்த கட்சியில் இருப்பார்கள் என்று தெரியாது. இப்படியான ஒரு வரைவிலக்கனம் இருக்கிறது.

கடந்த மூன்றரை வருடங்களாக மாகாண சபை உறுப்பினர் என்ற வரம்புக்குள் என்னுடைய சேவையை நிறைவேற்றி வருகின்றேன். இந்த காலகட்டத்திற்குள் நான் கண்டு கொண்ட மிகப்பெரிய அனுபவம் மீடியாக்களில் வேண்டுமென்று எனக்கு எதிராக பேசுகின்ற, எனக்கு எதிராக செய்தி இடுகின்ற அந்த செய்தியினை நான் பார்ப்பது கிடையாது. என்னுடைய முகபுதத்கத்தில் எனக்கெதிராக வேண்டுமென்று என்னுடன் இருக்கின்ற காழ்ப்புணர்ச்சியினால் எனக்கெதிராக ஒரு செய்தியை இடுகின்றார்கள் என்றால் அதனை நான் ப்ளக் (Block) பன்னி விடுவேன். ஏனென்றால் அச்செய்தியினூடாக எனக்கு ஏற்படும் மன உளைச்சல் சிலவேளைகளில் என்னுடைய நல்ல செயற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்திவிடலாம்.

ஆகவே விமர்சனம் என்பதும் ஒருவர் மீது கொள்ளுகின்ற காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக இருக்கக்கூடாது மாற்றமாக குறிப்பிட்ட வலைத்தளத்தினூடாக அல்லது முகபுத்தகத்தினூடாக கொடுக்கப்படுகின்ற உள்ளீட்டல்கள் ஒரு அரசியல் வாதியை நல்லவனாக மாற்றுகின்ற அடிப்படையில் இருக்க வேண்டும் இதனை நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்கின்றது.

ஊடகங்களில் எல்லாவிதமான செய்திகளும் வரவேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் நாங்கள் ஊடகத்தில் பேசமுடியாது அன்மையில் வலைத்தளத்தில் ஒரு செய்தியை வாசித்தேன். அதில் இளைஞர்கள் மத்தியில் புதிதாக போதை உருவாக்குவதற்காக வேறு தேவைகளுக்காக பாவிக்கப்படுகின்ற ஜெல்களை சில பழங்களில் பூசி சாப்பிட்டால் ஒருவிதமான போதை ஏற்படுகின்றதாம். இதனை முக்கியத்துவம் கொடுத்து ஊடகங்களில் வெளியிடும்போது அது பத்து பேரை திருத்த எடுக்கின்ற முயற்சியாக இருக்கும் அதேவேளை நூறு பேரை சீர்கெடுத்துவிடும். இவ்வாறான விடயங்கள் வலைத்தளத்திலோ அல்லது ஊடகங்களிலோ வரக்கூடாது. நாங்கள் இவ்வாறான குற்றங்களை சுட்டிகாட்டுகின்றோம் என்று சொல்லுகின்ற விடயம் இன்னும் பத்து பேரை தூண்டுகின்ற ஒரு விடயமாக அது மாறக்கூடாது.

நடுநிலை, வெளிப்படைதன்மை என்பது ஊடகத் துறையை பொருத்தமட்டில் அது மிக நிதானமாக நோக்கப்பட வேண்டிய விடயம். வெளிப்படை என்பதற்காக எல்லாம் வெளிப்படையல்ல ஒருவருடைய அந்தரங்கத்தை பற்றி பேசுவது வெளிப்படையல்ல. இவ்வாறான சமூக சீர்கேடுகளைப்பற்றி இவ்வாறான விடயங்களை செய்கின்றபோது இவ்வாறு நடக்கின்றது என்பது சொல்லுவது வெளிப்படையல்ல. ஏனென்றால் அது அறியாதவர்களுக்கு நாங்கள் கொடுக்கின்ற பிளையான ஒரு வழிகாட்டலாக அமைந்துவிடலாம். ஆகவே அவ்வாறான விடயங்களில் ஊடகத்துறையிலே ஈடுபடுகின்றவர்கள் மிக கவனமாக கையாள வேண்டும்.

எதிர்காலத்தில் பேப்பர் மீடியா என்கின்ற ஒன்று இல்லாமல் சென்று வலைத்தளங்களினூடாக, நவீன தொழில்நுட்பத்தினூடாக மாத்திரம் தகவல்களை அறிந்து கொள்ளும் யுகத்திற்குள் நுழையும்போது இவ்வாறான நவீன தொழிநுட்பத்தினூடாக இந்த தகவல்கள் பரிமாறப்படுகின்றபோது அந்த பரிமாற்றம் என்பது ஒரு வினாடியில் இலட்சக்கணக்கானவர்களை சென்றடைகின்ற ஒரு அபாயம் இருக்கின்றது. ஆகவே நாங்கள் பதி இடுவதற்கு முன்பு நூறு வீதம் சரி பார்த்து கொள்ளவேண்டும். ஒரு பத்திரிக்கையில் பிழையான செய்தி ஒன்று தவறுதலாக பிரசுரிக்கப்பட்டால் அது வாசகர்களை சென்றடைவதற்கான கால அவகாசம் இருக்கின்றது. ஆனால் இலத்திரனியல் ஊடகத்தில் அவ்வாறான சந்தர்ப்பம் குறைவு ஒரு வினாடியிலும் குறைந்த மில்லி செக்கனில் நாங்கள் கொடுக்கின்ற அந்த செய்தி இலட்சக்கணக்கானவர்களை உலகளாவிய ரீதியில் பல திசைகளுக்கும் கொண்டு சேர்த்துவிடும்.

அதேபோன்று இந்த நல்லாட்சியினை தூரநோக்குடன் கொண்டு செல்வதற்கு குறிப்பாக இரண்டு சிறுபான்மை சமூகங்களும் தங்களுடைய தலையெழுத்தை தீர்மானிக்க இருக்கின்ற இந்த யாப்பு மாற்றம் அல்லது யாப்பு சீர்திருத்தம் என்கின்ற விடயத்தில் உங்களுடைய பங்களிப்பு மிக அதிகமாக இருக்க வேண்டும். எங்களது இரண்டு சிறுபான்மை சமூகங்களையும் விழிப்பூட்டுகின்ற, அறிவூட்டுகின்ற விடயத்தில் உங்களுடைய செயற்பாடு அதிகமாக இருக்க வேண்டும் ஏனென்றால் வெறுமனமே நான்கு பேர் கூடி அதனை கதைத்துச்சென்று அதிலே இருக்கின்ற முடிவுகளை வெளியிலே சொல்லி யாப்புக்கு வர வேண்டும் என்று சொல்வதை விட ஒவ்வொறு விடயங்களையும் ஒவ்வொன்றாக முஸ்லிம்கள் சார்ந்த விடயங்கள் தமிழ் மக்கள் சார்ந்த விடயங்கள் என்று ஒவ்வொன்றாக மிக அவதானத்துடன் பங்காற்ற வேண்டிய தேவைப்பாடு ஊடகவியலாளர்கட்கு இருக்கின்றது என தனதுரையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் இம்போர்ட்மிரர் இணையத்தளத்தின் பணிப்பாளர் சபையினால் பொன்னாடைபோர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌவிக்கப்பட்டார். அத்தோடு இந்நிகழ்வில் இம்போட்மிறர் இணையத்தளத்தின் நிருவாக சபை உறுப்பினர்களுக்கு நினைவுச்சின்னங்களும் ஏனைய இணையத்தளங்களின் பணிப்பாளர்கள் மற்றும் பிராந்திய செய்தியாளர்கள் ஆகியோருக்கு சான்றிதழ் மற்றும் இம்போட்மிறர் டீசேட் ஆகியன வழங்கி அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்.

இரு அமர்வுகளாக நடந்த இந்நிகழ்வில் இரண்டாவது அமர்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், இம்போட் மிரர் இணையத்தளத்தின் பிரதம பணிப்பாளரும், முன்னாள் அட்டசாளைச்சேனை பிரதுச சபை உறுப்பினருமான முனாஸ், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சபீஸ், வைத்திய கலாநிதி நஹ்பர், கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் பரக்கத்துல்லா மற்றும் இணையத்தளங்களின் பணிப்பாளர்கள், பிராந்திய செய்தியாளர் என பலர் கலந்துகொண்டனர்.

எம்.ரீ .ஹைதர் அலி
செய்தியாளர்

Read more...

நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவுகணை சோதனை: வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன் பாராட்டு

வடகொரியாவில் நீருக்கடியில் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து நடத்திய ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதற்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்-உன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதன்மூலம் தென்கொரியா, அமெரி்க்காவை தாக்குவதற்கான திறன் தங்களுக்கு இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

அதேநேரம் வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை என்பது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறிய செயல் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் தெரிவித்துள்ளன. மேலும் மேற்கொண்டு இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வடகொரியாவை வலியுறுத்தி உள்ளன.

ஜப்பான் கடல் பகுதியிலிருந்தபடி ஏவப்பட்ட அந்த ஏவுகணை வெறும் 30 கி.மீ. தூரம் மட்டுமே பறந்து சென்றதால், அது தோல்வியடைந்திருக்கும் என்று தென்கொரியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வடகொரிய அரசால் நடத்தப்படும் கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனையை அதிபர் கிம் நேரில் பார்வையிட்டு உறுதி செய்தார். மேலும் தென்கொரியாவும் அமெரிக்காவும் தங்களுக்கு எதிராக செயல்பட்டால், அவற்றைத் தாக்கும் திறன் வடகொரியாவுக்கு இருக்கிறது என்றும் கிம் தெரிவித்தார்” என கூறப்பட்டுள்ளது.

Read more...

தேர்தலில் போட்டியிடவில்லை: வைகோ திடீர் அறிவிப்பு. சாதி மோதலை தவிர்ப்பது நோக்கமாம்!

சட்டப் பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திடீரென அறிவித்துள்ளார். கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் வைகோ இன்று மனுதாக்கல் செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென அவர் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை.

மதிமுக சார்பில் மாற்று வேட்பாளர் விநாயக் ரமேஷ் கோவில்பட்டி தொகுதியில் மனுதாக்கல் செய்தார்.

ஏன் மனுதாக்கல் செய்யவில்லை என்பது குறித்து கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:

"சாதி ஓட்டுகளை முன்னிறுத்தி திமுக வேட்பாளர் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இதன் காரணமாகவே பசும்பொன் தேவர் சிலைக்கு நான் நேற்று மாலை அணிவிக்க செல்லும்போது என்னை தடுத்து நிறுத்தினார்கள்.

இந்தத் தேர்தலில் என்னை மையமாக வைத்து தேவர் - நாயக்கர் இடையே சாதி மோதல் ஏற்படுத்த திமுக சதியில் ஈடுபட்டுள்ளதாக எனக்கு நம்பகத்தன்மையான தகவல் கிடைத்தது. எனவே சாதி மோதலை தவிர்க்கும் வகையில் கோவில்பட்டியில் நான் போட்டியில் இருந்து இருந்து விலகுகிறேன்.

விநாயக் ரமேஷ் கோவில்பட்டியில் மதிமுக சார்பில் போட்டியிடுவார் . தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா கூட்டணியின் வெற்றிக்காகப் பாடுபடுவேன்'' என்று வைகோ கூறினார்.

வைகோ விளக்க அறிக்கை:

பின்னர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், "கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நான் வேட்பாளராகப் போட்டியிடவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தில் பலநூறு ஆண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற சமூகங்களுக்கு இடையில் பகையையும், வெறுப்பையும் நெருப்பாக மூட்டி, அதன் வெப்பத்தில் குளிர் காய்ந்து தங்களை நிலைப்படுத்திக் கொள்ளத் தமிழ்நாட்டின் பல இடங்களில் பலர் முயல்கிறார்கள்.

நாம் 50 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்றுகொண்டு இருக்கின்றோம். வளரும் பிள்ளைகளிடம், பிஞ்சு உள்ளங்களில் கல்லூரி மாணவர்கள் இடையே, சாதி வெறி எனும் ஆலகால விஷம் திணிக்கப்படுகிறது.

தங்கள் சுயநலத்திற்காக, அரசியல் லாப வேட்டைக்காக, தங்களை அரசியல் தலைவர்களாகக் காட்டிக் கொள்வதற்காக, 1980 க்குப்பின்னர் தீவிரமாகப் புறப்பட்டுள்ள சிலர், தமிழ்நாட்டின் வளமான எதிர்காலத்திற்கே உலை வைக்கும் கொள்ளிக் கட்டைகளைத் தூக்கித் திரிகிறார்கள்.

நான் போட்டியிடுவதாக அறிவித்த கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர், தான் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்; எங்களுக்கு 70000 வாக்குகள் இருக்கின்றன; வைகோ சார்ந்துள்ள சமுதாயத்திற்கு 52000 வாக்குகள்தான் உள்ளன; அதையும் போட்டி போடும் வேட்பாளர்கள் பிரித்துக் கொள்வார்கள். அதனால் நான்தான் வெற்றி பெறுவேன் என்று கூறுகிறார்.

இதைக் கண்டித்துத்துத் தி.மு.க. தலைமை எந்த அறிக்கையும் தரவில்லை.

பெரியார் தலைமை மாணாக்கர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கா இந்தக் கதி?

நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபொழுது சாதி மத வேறுபாடுகள் ஏதும் இன்றிப் பணி ஆற்றியுள்ளேன். வடக்கு திட்டங்குளம் கிராமக் குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய இரண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளும், ரேசன் கடையும் கட்டுவதற்கு எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பணம் ஒதுக்கிக் கட்டித் தந்துள்ளேன்.

கோவில்பட்டி பிரச்சாரத்தில் என் முதல் நிகழ்ச்சியே வடக்கு திட்டங்குளம்தான். அந்த ஊருக்குச் செல்லும்போதெல்லாம் நான் பசும்பொன் தேவர் திருமகனாரின் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம். அப்போதெல்லாம் அனைத்து சமூகத்தினரும் ஒன்றாகத் திரண்டு என்னை வரவேற்பார்கள்.

ஆனால், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் என்னை மையப்படுத்தி சாதி வேற்றுமையையும், சாதி மோதலையும் ஏற்படுத்த தி.மு.க. திட்டமிட்டு இருப்பது, ஆதாரபூர்வமாக எனக்குத் தெரிய வந்துள்ளது. அதனால்தான், நேற்றைய தினம் திட்டங்குளத்தில் தி.மு.க.வினர் சிலர் தேவர் சிலையை நெருங்க விடாமல் கலவரம் செய்ய முனைந்தார்கள். நண்பகல் இரண்டு மணியில் இருந்தே முழு மது போதையில், சாதியைக் குறித்து என்னை வசைபாடிக் கொண்டே இருந்துள்ளனர்.

சாதியைக் குறித்தும், கலப்புத் திருமணம் செய்துகொண்ட சங்கர் உடுமலைப்பேட்டையில் படுகொலை செய்யப்பட்டதற்கு நான் கண்டனம் தெரிவித்ததையும், மருத்துவமனையில் கௌசல்யாவுக்கு நான் ஆறுதல் சொன்னதையும் குறிப்பிட்டு, தொடர்ந்து வெறிக் கூச்சல் போட்டுள்ளனர்.

நான் பிரச்சார வேனில் ஊருக்குள் சென்று, தேவர் சிலைக்குச் சற்றுத் தொலைவில் வேனை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கி தேவர் சிலை நோக்கிச் சென்றபோது, பத்துப் பேர் கெட்ட வார்த்தைகளால் என்னைத் திட்டிக்கொண்டே, சங்கர் கொலையைப் பற்றிப் பேசினவனுக்கு இங்கே என்னடா வேலை?

தேவர் சிலைக்கு மாலை போட விட மாட்டோம். மரியாதையாத் திரும்பிப் போ என்று கூச்சல் போட்டனர். அவர்கள் திட்டமிட்டுக் கலகத்திற்கு முனைகிறார்கள் என்பதை உணர்ந்து திரும்பி பிரச்சார வேனுக்குச் சென்றேன்.

நான் சாதிகளுக்கு அப்பாற்பட்டவன்; மாமன்னர் பூலித்தேவருக்குத் தமிழ்நாட்டிலேயே முதன்முதலில் கழுகுமலைக்கு அருகில் உள்ள சிதம்பராபுரத்தில் என் சொந்தச் செலவில், சிலை அமைத்தவன் நான். அவர் தேவர் என்பதற்காக அல்ல. வெள்ளையரை எதிர்த்து முதல் வாள் ஏந்தியவர் என்பதற்காக.

நாங்குநேரி அருகே உள்ள மறுகால் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தேவர் சமூகத்து இளைஞன் வானமாமலையை ஒரு காரணமும் இல்லாமல் திட்டமிட்டுக் காவல்துறை ஆய்வாளர் சுட்டுக் கொன்றதைக் கண்டித்து, ஆயிரக்கணக்கானவர்களைத் திரட்டி வட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே என் தலைமையில் உண்ணாவிரத அறப்போர் நடத்தினேன். அதில் பொது உடைமை இயக்கத்தின் தலைவர் நல்லகண்ணும் கலந்து கொண்டார். கொலையுண்ட இளைஞனின் மனைவிக்கு, அரசாங்க வேலையும் பெற்றுக் கொடுத்தேன்.

23.4.1979 அன்று, பனவடலிசத்திரத்தில் விவசாயப் போராட்டத்தின்போது, அய்யாப்பழம் என்ற காவல்துறை அதிகாரி மோதலில் கொல்லப்பட்டபோது, அந்தச் சம்பவத்திற்குத் தொடர்பு இல்லாத, வன்னிக்கோனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த நிரபராதிகளான பரமசிவத் தேவர், வெளியப்பத் தேவர் ஆகிய இருவருக்கு, நெல்லை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட நான், பாளைச்சிறையில் இருந்தபோது, அவர்கள் இருவரும் என்னைச் சந்தித்துத் தங்கள் விடுதலைக்கு ஏற்பாடு செய்யுமாறு என்னிடம் வேண்டினார்கள். தமிழ்நாட்டின் அன்றைய பிரபல வழக்கறிஞரும், பார்-அட்-லா படித்தவருமான கோவிந்தசாமிநாதன் அவர்களைக் கொண்டு அந்த வழக்கை என் சொந்தச் செலவில் நடத்தி, அவர்கள் இருவருக்கும் விடுதலை பெற்றுத் தந்தேன்.

தாழையூத்து காவல் நிலையத்தில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில், தேவர் சமூகத்தைச் சேர்ந்த தி.மு.க. ஒன்றியச் செயலாளர் புல்லையாவின் மகன் பாண்டி கைது செய்யப்பட்டார். அவர்களது வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்துத் தரை மட்டமாக்க முயன்றபோது, நான் குறுக்கே நின்று அதைத் தடுத்தேன்.

1991 நாடாளுமன்றத் தேர்தலில், கயத்தாறுக்கு அருகில் உள்ள காப்புலிங்கம்பட்டி என்ற, மறவர் சமுதாயத்தினர் மட்டுமே வாழ்கின்ற ஊரில், வாக்குப்பதிவு அன்று காவல்துறையினரைத் தாக்கி விட்டார்கள் என்று, அந்த ஊரையே சூறையாட ஆயிரம் போலீசார் கயத்தாரில் குவிக்கப்பட்டபோது, போலீஸ் டிஐஜி, எஸ்.பி.யிடம், யாரோ ஒருவர் செய்த தவறுக்காக, ஊரையே அழிக்கப் பார்க்கின்றீர்களே? ஊருக்குச் செல்லும் பாதையின் குறுக்கே நான் படுப்பேன்; என் பிணத்தின் மீதுதான் நீங்கள் ஊருக்குள் நுழைய முடியும் என்றேன். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, காவல்துறையினர் தாக்குதல் திட்டத்தைக் கைவிட்டார்கள். ஊர் மக்கள் காளியம்மன் கோவிலுக்குப் படையல் செய்து, என்னை அழைத்து நன்றி தெரிவித்தார்கள்.

1996 இல், விருதுநகர் மாவட்டத்தில் தேவர் சமூகத்தினருக்கும், தேவேந்திர சமூகத்தினருக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டு, இருதரப்பிலும் படுகொலைகள் நிகழ்ந்தன. அப்பொழுது, இருதரப்புக் கிராமங்களுக்கும் சென்ற என்னை மட்டும்தான் நள்ளிரவிலும் கூட மக்கள் காத்திருந்து வரவேற்றனர். வைகோ எல்லோருக்கும் பொதுவான ஆள்; அவர் மட்டும் ஊருக்குள் வரட்டும் என்று அனுமதித்தனர். ஒவ்வொரு ஊரிலும் இருதரப்பினரும் ஒற்றுமையாக வாழ மன்றாடினேன். இவற்றை எல்லாம் திட்டங்குளம் மக்களிடம் கூறியதோடு, கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பசும்பொன்னுக்குச் சென்று தேவர் திருமகனுக்குப் புகழ் அஞ்சலி செலுத்துகின்ற, தேவர் சமுதாயம் அல்லாத ஒரு அரசியல்வாதி நான்தான். ஓட்டு வேட்டைக்காகக் கடந்த இருபது ஆண்டுகளாக மற்ற தலைவர்கள் அங்கே வருகின்றார்கள்.

அப்படிப் பசும்பொன்னுக்குச் செல்வது, அத்தலைவர் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அல்ல. வங்கத்துச் சிங்கம் நேதாஜிக்கு அவர் வலதுகரமாகத் திகழ்ந்ததாலும், பிரம்மச்சரியத்தை ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தவர் என்பதாலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தலித் மக்களின் ஆலயப் பிரவேசத்திற்குப் பாதுகாப்புக் கொடுத்தவர் என்பதாலும், அவை எல்லாவற்றையும்விட, எனக்குப் பத்து வயது இருக்கும்போது எங்கள் வீட்டுக்கு வந்து பசும்பொன் தேவர் அவர்கள் என் தந்தையிடம் நீங்கள் இனிமேல் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கக் கூடாது என்று கூறியபோது, அரைக்கால் சட்டை போட்ட சிறுவனாக இருந்த நான், அவரது தோற்ற கம்பீரத்தில் மனதைப் பறிகொடுத்ததாலும், அவர் மீது எனக்கு இனம் புரியாத பற்றுதல் ஏற்பட்டதாலும் பசும்பொன் செல்கிறேன் என்பதையும் சொன்னேன்.

எனது கோவில்பட்டி தொகுதிப் பிரச்சாரத்தின் முதல் நிகழ்ச்சி இது. இதில் தேவர் சிலைக்கு மாலை போட விடாமல் தடுத்து விட்டால், வைகோவை ஊர் மக்கள் விரட்டி அடித்தார்கள் என்று அனைத்து ஏடுகளிலும் செய்தி போடுவார்கள்; அதுதான் அவர்களது நோக்கம் என்பதை உணர்ந்துதான், தேவர் சிலைக்கு மாலை போட வருகிறேன்; எத்தனை பேர் அரிவாளோடு வருகிறீர்கள்? தேவர் சிலைக்கு மாலை போடாமல் இந்த ஊரை விட்டுப் போக மாட்டேன் என்று கூறி, என் காலணிகளை வேனிலேயே கழற்றி வைத்து விட்டு, கலகம் வரும் என எதிர்பார்த்து, கருப்பு சால்வையையும் வேனில் போட்டு விட்டு, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சிலையை நோக்கிச் சென்றேன்.

இதன்பிறகுதான், காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினார்கள். வன்முறையில் ஈடுபட நான் கருதி இருந்தால், என்னோடு வந்த 50 க்கும் மேற்பட்ட தொண்டர்படை வீரர்கள், எனக்காகத் தங்கள் உயிரையும் தத்தம் செய்யும் தீரர்கள், என் சொல்லுக்கு அஞ்சியே மிகக் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டார்கள். அவர்கள் அனைவருமே மறுகால்குறிச்சி தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். 1983 இல் அண்ணன் கலைஞருக்காக நான் ஏற்படுத்திய தொண்டர் படையைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களுள் பலர் நடுவயதை எட்டியதால், அவர்களது பிள்ளைகள் இப்போது எனக்குப் பாதுகாப்பாக இருக்கின்றார்கள்.

தேவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, தெற்கு திட்டங்குளம் சென்று, அங்கே இமானுவேல் சேகரனார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, விளாத்திகுளம் தொகுதிப் பிரச்சாரத்தை நான் தொடர்ந்தேன்.

எனக்குக் கிடைத்த நம்பகமான தகவலின்படி, இந்தத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் என்னை மையமாக வைத்து, தேவர் - நாயக்கர் சாதிக் கலவரத்தை ஏற்படுத்த தி.மு.க, தலைமையைத் தற்போது இயக்கிக் கொண்டு இருப்பவர் திட்டமிட்டு இருப்பதும், அந்த யோசனையை தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் ஊக்குவித்ததையும் நான் அறிய நேர்ந்தது. கோவில்பட்டி தொகுதி முழுவதும் கலவரம் நடத்தத் திட்டமிட்டு இருக்கின்றார்கள் என்பதையும் அறிந்தேன்.

என்னைக் குறிவைத்துச் சாதி மோதல் ஏற்படுவதையும், இரத்தக்களறி ஆக்க முனைவதையும் நினைத்துப் பார்க்கவே மனம் வேதனையில் துடிக்கின்றது.

சாதி வெறியும், சாதிய ஆணவமும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நாசமாக்கி விடும் என நான் உணர்வதால், அந்த அபாயகரமான சீர்கேட்டைத் தடுக்கவும், தமிழ்நாட்டின் ஜீவாதார, நீராதார நிலைகளையும் காக்கவும், நான் பிறந்த பொன்னாடாகிய தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் நல்வாழ்வுக்குப் பாடுபடவும், புற்று நோயாகி வரும் ஊழலை அறவே ஒழிக்கவும், மதுக்கொடுமையில் இருந்து தமிழ்நாட்டை மீட்கவும், தரணியெங்கும் வாழும் தமிழர்களின் நலனைக் காக்கவும், சுதந்திரத் தமிழ் ஈழ தேசத்தை நிர்மாணிக்கவும் எஞ்சிய என் வாழ்நாளை அர்ப்பணிப்பது என முடிவு செய்துள்ளேன்.

ஐவரின் தியாகத் தணலில் உதயமான மறுமலர்ச்சி தி.மு.கழகத்தை எவரும் நெருங்க முடியாத எஃகுக் கோட்டையாக நிர்மாணிப்பேன்.

திராவிட இயக்கத்தில் ஒளி வீசுகின்ற தந்தை பெரியாரின் சுயமரியாதையுடன், அண்ணாவின் இலட்சியக் கனவுகளை நனவாக்கி வெற்றி பெறுவேன் என்று என் நெஞ்சுக்குள் தவம் செய்து, சபதம் பூண்டுள்ளேன்.

இந்தப் பின்னணியில், 2016 மே 16 இல் நடைபெற இருக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், நான் போட்டியிடுவது இல்லை என்றும், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்குத் தகுதியான வேட்பாளராக விநாயகா ரமேஷ் பெயரையும், கழகத்தின் அவைத்தலைவர் அண்ணன் திருப்பூர் சு.துரைசாமி, ஆட்சி மன்றக் குழுச்செயலாளர் அ. கணேசமூர்த்தி, அரசியல் ஆய்வு மையச் செயலாளர் மு.செந்திலதிபன், அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளர் புலவர் செவந்தியப்பன் ஆகியோரிடமும், துணைப் பொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை. பாலகிருஷ்ணன் ஆகியோரிடமும் தெரிவித்து, அவர்களின் முழு சம்மதத்துடன் இந்த முடிவை அறிவிக்கிறேன்.

எமது அணியின் முதல்வர் வேட்பாளரான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தேசிய முற்போக்கு திராவிட கழகம், மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆகிய ஆறு கட்சிகளும் இணைந்து அமைத்துள்ள மாற்று அரசியல் வெற்றிக் கூட்டணி, நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க, பசி நோக்காது, கண் துஞ்சாது, மெய் வருத்தம் பாராது நான் பாடுபடுவேன்.

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத கழகக் கண்மணிகள், எனது முடிவை ஏற்றுக்கொண்டு, 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பம்பரமாகச் சுழன்று, தோழமைக் கட்சித் தலைவர்கள் நம்மைப் பாராட்டும் வகையில் பணியாற்றிடப் பாசத்தோடும் உரிமையோடும் வேண்டுகிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.

Read more...

ரவுடித்தனங்களில் ஈடுபடுவோருக்கு எவ்வித கருணை காருணியமும் காட்டப்படாது, பல்கலைக்கழகமும் செல்ல முடியாது. இளஞ்செளியன்.

யாழ் மாவட்டத்தில் ரவுடித்தனத்திலும் தெருச் சண்டித்தனத்திலும் ஈடுபடும் மாணவர்கள் சிறைத் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார்.

ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் உயர் கல்விக்காகப் பல்கலைக்கழகம் செல்ல முடியாத நிலை உருவாகும் என்றும், இவ்வாறானவர்களைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கு சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் உடனடியாகச் செயற்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

போதை வஸ்து வழக்கொன்றில் மேல் நீதிமன்றத்தில் பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான விசாரணையின் போதே, நீதிபதி இளஞ்செழியன் இந்த எச்சரிக்கையையும் பொற்றோருக்கான அறிவுறுத்தலையும் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தனிமனித நலனைவிட சமூக நலனே நீதிமன்றத்திற்கு முக்கியம். எனவே, ரவுடித்தனத்திலும் தெரு சண்டித்தனத்திலும் ஈடுபடும் மாணவர்களுக்கு, மாணவர்கள் என்ற ரீதியில் ஈவிரக்கம் நீதிமன்றத்தினால் காட்டப்படமாட்டாது. எனவே, தெரு ரவுடிகளாகச் செயற்படும் பிள்ளைகளை, அவர்களுடைய பெற்றோர்கள் உடனடியாகக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வர வேண்டும்.

சமூகக் குற்றச்செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்பில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். ஒழுக்கசீலர்களாக மாணவர்களை மாற்றுவதற்கு அச்சப்படும் ஆசிரியர்கள் அச்சமில்லாத இடங்களுக்கு இடம் மாற்றம் பெற்றுச் செல்வது நல்லது. சமூகத்தைக் காப்பாற்றும் பொறுப்பில் இருந்து எந்த அதிபரும் ஆசிரியரும் தவறக் கூடாது.

மண்ணின் எதிர்காலத் தலைவர்களாகவுள்ள மாணவர்கள் சமூக சீர்கேடுகளில் சிக்கி, தங்களுடைய வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்வதை நீதிமன்றம் அனுமதிக்க முடியாது. எனவே, ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் அதனை உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையேல் அவர்களுக்கு சிறை வாழ்க்கை நிச்சயம் என்பதை மறந்துவிடக் கூடாது.

யாழ் மாவட்டத்தில் தொண்ணூறு வீதமான குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த போதிலும், சில வாள் வெட்டுச் சம்பவங்களும் தெரு ரவுடித் தனமும் கொள்ளைகளும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.

யாழ் குடாநாட்டு நீதவான் நீதிமன்றங்கள் வாள்வெட்டு வழக்குகளில் சிறைத் தண்டனைத் தீர்ப்புக்கள் வழங்கி வருகின்றன. அதேநேரம் பாரிய குற்றச் செயல்களுக்கு பிணையில் வெளியில் வரமுடியாத வகையில் குற்றம்சாட்டப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார்கள்.

யாழ் மேல் நீதிமன்றம் மரண தண்டனை மற்றும் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை என பாரிய குற்றச் செயல்களுக்குத் தண்டனை வழங்கி வருகின்றது. போதை வஸ்து வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்குக் கடந்த ஒரு வருட காலமாக, யாழ் மேல் நீதிமன்றம் பிணை வழங்கவில்லை.

யாழ் குடாநாட்டு சமூகத்தையும் மாணவர்கள் இளைஞர்களையும் போதை வஸ்து என்ற கொடூரப் பிணியில் இருந்து காப்பாற்றுவதற்காக நீதிமன்றங்கள் செயற்பட்டு வருகின்ற போதிலும், சில நபர்கள் தெரு ரவுடித்தனத்தையும் வாள் வெட்டுக்களையும் கைவிடுவதாக இல்லை.

பெற்றோர் இவ்விடயத்தில் முதல் குற்றவாளிகளாகக் காணப்படுகின்றார்கள். தெரு ரவுடித்தனத்தில் ஈடுபடுகின்ற மாணவர்கள், இளைஞர்களுக்கு மோட்டார் சைக்கிள், பெறுமதிமிக்க கைத்தொலைபேசி பெற்றோர்களினால் வாங்கிக் கொடுக்கப்படுகின்றது. தனது மகன் வெளியில் சென்று என்ன வேலை செய்கின்றான் என்று தெரியாத வகையில் பெற்றோர் காணப்படுகின்றார்கள்.

இத்தகைய மாணவர்கள், இளைஞர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை செய்கின்றது.

சமூகக் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உடன் கடும் நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகின்றது.

ரியூசன் செல்லும் மாணவிகளுக்குப் பின்னால் செல்லும் மாணவர்கள், இளைஞர்களைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அடாவடித்தனம் செய்யும் தெரு ரவுடிகளை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாலை 6 மணியில் இருந்து 9 மணிவரையில் வீதிகளில் சட்டவிரோதமாகக் கூடும் இளைஞர்களைக் கைது செய்து அலைந்து திரிவோர் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜராக்க வேண்டும்.

குற்றச் செயல்கள் அதிகமாக இடம்பெறுகின்ற பிரதேசங்கள், சமூகக் குற்றச் செயல்களின் மையங்கள் என்ற சந்தேகத்திற்குரிய இடங்களில் பொலிஸ் சைக்கிள் ரோந்துகளை நடத்த வேண்டும். கண்காணிப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணிவரையில் பொலிஸ் வாகன ரோந்துகளை அதிகரிக்க வேண்டும்.

பிரபல கல்லூரிகளில் பயிலும் உயர்தர வகுப்பு மாணவர்கள் ரவுடித் தனத்தில் ஈடுபடக் கூடாது. வாள் வெட்டு சம்பவங்களில் சம்பந்தப்படக் கூடாது. வீதிகளில் மாணவிகளைப் பின்தொடரக் கூடாது. தமது எதிர்கால வாழ்க்கை நாசமாகும் வகையில் சட்டவிரோத போதை வஸ்து பாவனை மற்றும் போதை வஸ்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.

குற்றச் செயல்களில் சம்பந்தப்படுகின்ற காரணத்திற்காகக் கைது செய்யப்படும் எந்த ஒரு மாணவனுக்கும் நீதிமன்றத்தினால் பரிவு இரக்கம் காட்டப்படமாட்டாது. எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்திற்குக் கூட செல்ல முடியாத வகையில் சிறைத் தண்டனை தீர்ப்புக்கள் வழங்கப்படும்.

எனவே, குற்றச் செயல்களில் ஈடுபடும் தமது பிள்ளைகளை சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் கண்காணித்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

Read more...

Sunday, April 24, 2016

சுவிட்சர்லாந்தில் கிழக்கின் இளையோருக்கான ஒன்றுகூடல்.

கிழக்கு உதயம் அமைப்பினர் மாகாண இளையோரை ஒன்றிணைப்பதற்கான முன்னெடுப்பொன்றினை மேற்கொண்டுள்ளனர். மாகாண அபிவிருத்திக்காக ஒரு தசாப்தத்திற்கு மேற்பட்ட காலமாக செயற்பட்டுவரும் மேற்படி அமைபினர் தமது எதிர்கால நடவடிக்கைகளை விஷ்தரிக்கும் நோக்கில் இத்திட்டத்தினை தீட்டியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

எதிர்வரும் மே 1ம் திகதி Gemeinschaftszentrum Telli, Girixweg 12, Aarau எனுமிடத்தில் ஓழுங்கு செய்யப்பட்டுள்ள ஒன்றுகூடலுக்கு சுவிட்சர்லாந்து வாழ் கிழக்கிலங்கையின் இளையோருக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள அவ்வமைப்பினர் , அன்றைய தினம் இளையோர் தமது தாயகத்திற்கு எவ்வாறு உதவலாம் என எடுத்துரைக்கவுள்ளதுடன் , சின்னா பின்னாமாக சிதறிக்கிடக்கும் கிழக்கிலங்கை மக்கள் ஒன்று சேரவேண்டியதன் முக்கியத்தையும் எடுத்துரைக்கவுள்ளனர் என நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர் இலங்கைநெட் க்கு தெரிவித்தார்.



இடம் : Gemeinschaftszentrum Telli, Girixweg 12, 5000 Aarau

தொடர்புகட்கு : 076 308 03 01 , 0792593478


Read more...

இணைந்த வட-கிழக்கா? ஒருபோதும் விடமாட்டோம் சீறுகின்றார் ரிஷாட் பதியூதின

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்துமாறு, வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு, அமைச்சர் ரிஷாட் பதியூதின் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

தான் உள்ளிட்ட அனைத்து இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் எவரும் இந்த யோசனைக்கு இணங்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா - நெலுங்குளம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே ரிஷாட் பதியூதின் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

வட மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தனது கட்சியின் மூன்று உறுப்பினர்களும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...

த.தே.கூ தொடர்ந்து இனவாதத்தை தூண்டுகின்றது. விஜித்த ஹேரத்

தமிழ் இனவாதிகள் தனிநாடு, வடக்கு, கிழக்கு இணைப்பு போன்ற தந்திரங்களை பயன்படுத்தி தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர் என கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளருமான விஜித்த தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில் :

மாகாண சபையினால் மேற்கொள்ள வேண்டிய பணிகளை செய்ய வட மாகாண சபை தவறியுள்ளதாக சாடினார்.

இது குறித்து வட பகுதி அரசியல்வாதிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தமக்கு ஒரே ஒரு காரணியாக இருக்கும் இனவாதத்தை மீண்டும் மேலெழுப்புவதாகவும் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைந்து சமஷ்டி நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று வடக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ள யோசனை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது :

மக்கள் விடுதலை முன்னணி உயர் நீதிமன்றத்திற்கு சென்றமையாலேயே வடக்கையும் கிழக்கையும் பிரிக்க முடிந்தது எனறு பதிலளித்தார்:

Read more...

மட்டு மாவட்ட அதிபருக்கு நற்சான்றுதல் அளிக்கின்றார் கருணா அம்மான்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச அதிகாரிகளின் செயற்பாடுகள் ஏதோ ஒர் கட்சியின் அரசியல் நிகழ்சி நிரலின் கீழ் அமைந்துள்ளதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக மாவட்ட அரச அதிபர் மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆகியோர் நேரடிக்குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருகின்றனர்.

பல்வேறு பிரதேச செயலகங்களின் செயற்பாடுகள் பிரசேத செயலாளர்களுக்கும் அரச அதிபருக்குமான முரண்பாடுகள் காரணமாக மக்களுக்கான அன்றாட சேவை வழங்குதலில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதனையும் , இதன் காரணமாக உருவான வேலைப்பகிஸ்கரிப்புக்கள் , ஆர்ப்பாட்டங்கள் என்பன பல்வேறு தரப்பினரின் விமர்சனத்திற்கு உள்ளானதும் யாவரும் அறிந்தது.

இந்நிலையில், மேற்குறித்த பின்னடைவுகள் விமர்சனங்கள் குறித்து புலிகளின் முன்னாள் கிழக்குத் தளபதியான கருணா அம்மான் எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தனது முகநூலில் கீழ்கண்டவாழு கருத்துரைத்துள்ளார்.


அண்மை காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் பிரமுகர்களின் தலையீடு கூடுதலாக அரச நிருவாகத்தில் இருப்பதை காணக்கூடியதாகவுள்ளது. இதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள். உதாரணமாக அண்மையில் மட்டக்களப்பு அரச அதிபரை விமர்சிப்பதில் அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் போட்டி போட்டு நிற்பதை காணக்கூடியதாகவுள்ளது. இதன் பக்கவிளைவுகளை புரியாது வெறும் பழிவாங்கும் நோக்குடன் செயற்படுவீர்களேயானால் மாற்று சக்திகளுக்கு நீங்களே வாய்ப்புக்களை வளங்குகின்றீர்கள் என்றுதான் அர்த்தம் கொள்ளவேண்டும்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு இந்தவிடையத்தில் அவ்வளவு காத்திரமானதாக தெரியவில்லை. தூரநோக்குடன் செயற்படவேண்டிய இந்தகாலத்தில் வெறும் குழந்தைகளைப்போல் செயற்படுவது வேடிக்கையான விடையமாகதெரிகின்றது. இதில் தமிழ் ஊடகவியலாளர்களும் நிதானத்தை கடைப்பிடிப்பது கட்டாய கடமையாகும். ஏற்கனவே மாகாணசபையை சம்பந்தரின் அறிவின்மையால் இழந்து நிற்கும் நாங்கள் தமிழ் அதிகாரிகளை காப்பாற்றுவதில் கவனமெடுக்கவேண்டும்.

மட்டக்களப்பு அரசாங்க அதிபரை பொறுத்த வரையில் துணிந்து செயற்படக்கூடியவர். இவரின்கடந்தகால சேவைகளை நாம் மறந்து விடமுடியாது. வன்னியிலே எமது தமிழினம் போரினால்பாதிக்கப்பட்டு உயிரைக்கையிலேபிடித்துக்கொண்டு எல்லாவற்றையும் இழந்து வெறும் நடைப்பிணங்களாக வன்னிக்கு வந்த போது இரவு பகல் பாராது அந்த மக்களுக்காக கடுமையாக உழைத்தவர் என்பதை தமிழ்மக்கள் மறந்துவிட முடியாது. அதையபோல் மட்டக்களப்பு மாவட்டத்திலையும் அவர் ஆற்றிய சேவைகளையும் மறந்து விடமுடியாது. அன்றைய காலத்தில் H N D A மாணவர்களுக்கு நியமனங்கள் வளங்கும் விடையத்தில் என்னுடன் துணிந்து நின்று செயற்பட்டவர் என்பதும் மிகவும் முக்கியமான விடையமாகும். 400க்கு மேற்பட்டமாணவர்கள் அன்று பயனடைந்தார்கள். அந்தகாலத்தில் இலங்கையில் ஒருமாவட்டத்தில் கூட H N D A மாணவர்களை உள்வாங்கவில்லை. ஆனால் நாம் வளங்கிவைத்தோம். நான் நினைக்கின்றேன் அந்தமாணவர்கள் வாழ்நாளில் அதை மறக்கமாட்டார்கள்.

தற்போது மட்டக்களப்பு பாராளமன்ற உறுப்பினர் சிறினேசன் அவர்களின் அறிக்கையை நான் பார்த்தபோது இது மாற்று சக்திகளுக்கு வாய்ப்பாகவே அமையும் வெறும் அரசியலுக்காக அறிக்கை விடுவதை விடுத்து தமிழ் அதிகாரிகளுக்கு பக்கமலமாக செயற்படவேண்டியது உங்கள் கடமையாகும். புதிதாக உருவாகும் ஊடகவியலாளர்களும் மட்டக்களப்பு மண்ணின் நன்மைகருதி சற்று நிதானமாக செயற்படும் படி கேட்டுக்கொள்கின்றேன்.
ஏனெனில் தற்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்காங்கிரஸ்சுடன் தேனிலவு கொண்டாடத்தொடங்கியுள்ளார்கள். இது முற்று முளுதாக தமிழ்மக்களுக்கு செய்கின்ற துரோகமாகும் ஏற்கனவே மைத்திரிக்கு வாக்குப்போடச்சொல்லி தமிழ்மக்களுக்கு ஒன்றுமே நடக்கவில்லை வெறும் அரசின் கைப்பொம்மைகளாகத்தான் TNA யின் செயற்பாடுள்ளது. இவற்றையெல்லாம் உணர்ந்துகொண்டு ஊடகவியலாளர்கள் பொறுமைகாக்க வேண்டும் என பணிவாக வேண்டிக்கொள்கின்றேன்.

நன்றி கருணா அம்மான்

Read more...

நீதித்துறையைக் காப்பாற்றுங்கள் - பிரதமர் மோடி முன் கண் கலங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

டெல்லியில் மாநில முதல்வர்கள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொண்ட மாநாட்டில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதித்றையைக் காப்பாற்றுமாறு பிரதமர் மோடியிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.

இது குறித்து மேலும் அவர் பேசுகையில் ”நீதித்துறை மீது ஒட்டுமொத்த சுமையையும் ஏற்ற முடியாது. நீதிபதிகள் கடுமையாக உழைத்து வருகிறார்கள். நீதித்துறையை விமர்சிக்க வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.

2013-ம் ஆண்டு நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு உறுதி மொழி அளித்தது, ஆனால் இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது குறித்து மத்திய அரசும், மாநில அரசும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. இதனால் நீதிபதிகள் எண்ணிக்கை அப்படியே தொடர்கிறது, பலர் சிறையில் தத்தளிக்கின்றனர். இந்திய சிறைகள் நிரம்பி வழிகின்றன.

உயர் நீதிமன்றங்களில் 454 நீதிபதி பதவிகள் நிரப்பப்படமால் காலியாகவே உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன, ஆனால் 2 கோடி வழக்குகளையே தீர்க்க முடிகிறது. நீதிமன்றங்களில் நீதிபதிகளை அதிகரித்து சாமானிய, ஏழை மக்களுக்கும், விசாரணைக் கைதிகளாக சிறையில் வாடுபவர்களையும், நீதித்துறையின் சுமையையும் குறைத்து இந்திய நீதித்துறையை காப்பாற்றுங்கள்.” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

நீதிபதி டி.எஸ்.தாக்கூர் பேசி முடித்து எழுந்து பேசிய பிரதமர் மோடி “நமது அரசமைப்புச் சட்டத்தின் தூண்களின் ஒன்றான நீதித்துறையை வலுப்படுத்த இதுவே சரியான தருணம்.” என்று குறிப்பிட்டார். மேலும் இந்த பிரச்சனையை தீர்க்க கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.


Read more...

Saturday, April 23, 2016

ஒப்படைக்கப்பட்டுள்ள கருமத்தை சிறப்புறச் செய்வேன் என்கின்றார் புதிய பொலிஸ் மா அதிபர்.

இலங்­கையின் 34 ஆவது பொலிஸ் மா அதி­ப­ராக கட­மை­யேற்­றுள்ள பூஜித ஜய­சுந்­தர, நேற்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக தமது கட­மை­ களை பொலிஸ் தலை­மை­ய­கத்தில் பொறுப்­ பேற்றபின்னர் நடத்­திய விஷேட ஊட­க­வி ­ய­லாளர் சந்­திப்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே இதனைத் தெரி­வித்தார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர மேலும் குறிப்­பி­டு­கையில், 150 வருட பழை­மை­யான வர­லாற்றைக் கொண்­டுள்ள இலங்கை பொலிஸ் சேவையின் 34 ஆவது பொலிஸ் மா அதி­ப­ராக நான் தெரிவு செய்­யப்­பட்­ட­மை­யை­யிட்டு மகிழ்ச்­சி­ய­டை­கிறேன்.

என் மீது நம்­பிக்கை வைத்து இந்த பாரிய பொறுப்பை என்­னிடம் ஒப்­ப­டைத்த ஜனா­தி­பதி, பிர­தமர், சட்டம் ஒழுங்கு அமைச்சர், சபா­நா­யகர் உள்­ளிட்ட அர­சி­ய­ல­மைப்பு சபை­யினர், சட்டம் ஒழுங்கு அமைச்சின் செய­லாளர் உள்­ளிட்ட அனை­வ­ருக்கும் நன்றி தெரி­விக்­கின்றேன்.

என்­மீது வைத்­துள்ள நம்­பிக்­கையை காப்­பாற்றி தாய் நாட்­டுக்கு என்­னா­லான அத்­தனை சேவை­யையும் செய்ய நான் எதிர்ப்­பர்க்­கின்றேன்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் விட்டுச் சென்ற இடத்­தி­லி­ருந்து ஆரம்பம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனை இந்த இடத்தில் ஞாப­கப்­ப­டுத்த வேண்டும்.

அவர் எனது குரு. அவர் விட்டுச் சென்ற இடத்­தி­லி­ருந்து நான் அதி­ர­டி­யாக செயற்­ப­ட­வேண்டும் என எதிர்ப்­பார்க்­கின்றேன். அதன்­படி அவர் விட்டுச் சென்ற இடத்­தி­லி­ருந்து கட­மை­களை ஆரம்­பித்து இலங்கை பொலிஸ் சேவையின் நம்­பகத் தன்மை மற்றும் நம்­பிக்­கையை வெல்லும் வித­மாக பொது மக்கள் பாது­காப்பு உள்­ளிட்ட பொறுப்­புக்­களை நிறை­வேற்­ற­வுள்ளேன். குற்ற விச­ரணை தொடர்­பி­லான பிர­தி­பலன்

தற்­போது நாம் குற்ற விசா­ரணை மற்றும் குற்றப் பரி­காரம் தொடர்பில் நல்ல நிலையில் உள்ளோம். இது குறித்த எமது சத­வீதம் 60 ஆகும். இதனை எனது சேவைக் காலத்தில் மேலும் அதி­க­ரிக்க திட்­ட­மிட்­டுள்ளேன்.

அப்­ப­டி­யாயின் குற்­றங்கள் தொடர்பில் கைது செய்­யப்­ப­டு­வோரின் வீதம் அதி­க­ரிக்கும். எனினும் அண்­மைய நாட்­களில் குற்­றங்கள் தொடர்பில் கைது செய்­யப்­ப­டுவோர் அதி­க­மாக இருந்த போதும் அவர்­களில் குற்­ற­வா­ளி­க­ளாக நீதி­மன்­றங்­களால் தீர்ப்­ப­ளிக்­கப்ப்­டு­வோரில் வீழ்ச்­சியைக் காண்­கிறோம். அப்­ப­டி­யானால் பிர­தி­வா­தி­களைக் குற்­ற­வா­ளி­க­ளாக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யுள்­ளது.

இதற்­காக விசா­ரணை முறை­களில் மாற்றம் செய்து, விசா­ர­ணை­களை மேலும் பலப்ப்­டுத்த வேண்­டி­யுள்­ளது. விசா­ரணை அதி­கா­ரி­க­ளுக்கு இது குறித்த மேல­திக அறிவை வழங்கி நீதிவான் நீதி­மன்­ரங்­களில் வழக்கை வழி நடாத்தும் விதத்தை தொழில் தரத்­துக்கு ஏற்ப விருத்தி செய்ய வேண்­டி­யுள்­ளது.

போதைப் பொருள், விபத்­துக்­களைக் கட்­டுப்­ப­டுத்த திட்டம் இன்று நாட்டில் அனை­வ­ரி­னதும் பேசு­பொ­ரு­ளாக உள்ள போதைப் பொருள் பாவனை மற்றும் வீதி விபத்­துக்­களைக் கட்­டுப்­ப­டுத்த விஷேட திட்­டங்­களை அமுல் செய்­ய­வுள்ளோம்.

நாளுக்கு நாள் வீதி விபத்­துக்­களின் எண்­ணிக்­கையில் அதி­க­ரிப்பைக் காணும் நாம், முடி­யு­மான வரை நவீன தொழில் நுட்­பத்தை பயன்­ப­டுத்தி விபத்­துக்­களைக் கட்­டுப்­ப­டுத்த பயன்­ப­டுத்­த­வுள்ளோம்.

சார­திகள், பாத­சா­ரிகள் உள்­ளிட்டோர் பாதை விதி­களை உரிய முறையில் கடை பிடிக்கும் போது விபத்­துக்­களைக் குறைக்க முடியும் என்­பது விஷேட நிபு­ணர்­களின் கருத்­தாகும். அது தொடர்­பிலும் நம் தெளிவு படுத்­தல்­களை மேற்­கொள்­ள­வுள்ளோம்.

இதே­வேளை போதைப் பொரு­ளினை ஒழிக்க ஜனா­தி­பதி செய­லணி ஒன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அதன் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எம்­மா­லான அத்­தனை ஒத்­து­ழைப்­புக்­க­ளையும் நாம் வழங்­குவோம். நான் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராக கட­மை­யாற்­றிய காலப்­ப­கு­தி­களில் போதைப் பொருளை ஒழிக்க முன்­னெ­டுத்த நட­வ­டிக்­கை­களை தொடர்ந்தும் முன்­னெ­டுப்பேன்.

இந்த நட­வ­டிக்­கை­களி முன்­னெ­டுக்க எனக்கு பொலிஸ் சார­திகள் முதல் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பர்கள் வரை­யி­லான அத்­தனை பேரின் ஒத்­து­ழைப்பும் அவ­சி­ய­மாகும்.

புல­னாய்வுத் தக­வல்­களை மையப்­ப­டுத்­திய பொலிஸ் சேவை பொலி­ஸா­ருக்கும் பொது மக்­க­ளுக்கும் இடையே காணப்­படும் தொடர்பு பல சந்­தர்ப்­பங்­களில் இடை­வெ­ளி­யாக காணப்­ப­டு­வதை நான் அவ­தா­னிக்­கின்றேன். பொலி­ஸா­ரையும் பொது மக்­க­ளையும் வேறு படுத்த முடி­யாது. பொது மக்கள் இன்றி பொலிஸார் இல்லை. அதே போது பொலிஸார் இன்றி பொது மக்­களும் இல்லை.

அதனால் பொது மக்­களை பொலி­ஸா­ருடன் தொடர்பு படுத்தி நாட­ளா­விய ரீதியில் பிரஜா பொலிஸ் சேவையை நடை­மு­றைப்­ப­டுத்த நான் எதிர்ப்­பார்க்­கின்றேன். இலங்கை பொலி­ஸாரின் அடிப்­படை குறிக்கோள், குற்றம் மற்றும் வன்­முறை குறித்த பய­மற்ற நம்­பிக்­கை­யுடன் கூடிய வாழக் கூடிய சூழலை உரு­வாக்­கு­வ­தாகும்.

இந்த குறிக்­கோளை அடைய புல­னாய்வுத் தக­வல்­களை மையப்­ப­டுத்­திய தொழில் சார் பொலிஸ் தேவை­யாகும். இந் நிலையில் யுத்தம் இடம்­பெற்ற காலப்­ப­குதி முதல் நாம் பயன்­ப­டுத்தும் நட­வ­டிக்கை சார் பொலிஸ் சேவையில் இருந்து மனித நேய முகத்தைக் கொண்ட புல­னாய்வுத் தக­வல்­களை மையப்­ப­டுத்­திய தொழில் சார் பொலிஸ் சேவையை நோக்கி நாம் பய­ணிக்க வேண்­டி­யுள்­ளது.

சிவில் பாது­காப்புக் குழுக்­களை பயன்­ப­டுத்தும் திட்டம் மீள­மைப்பு இந்த பய­ணத்தை முன்­னெ­டுக்க வேண்­டிய வாகனம் சிவில் பாது­காப்புக் குழுக்­க­ளாகும். இலங்­கையில் உள்ள ஒவ்­வொரு கிராம சேவகர் பிரி­வி­னையும் மையப்ப்­டுத்தி அமைக்­கப்­பட்­டி­ருக்கும் சிவில் பாது­கப்பு குழுக்கள், பிரஜா பொலிஸ் சேவை அல்­லது மக்­களை நோக்­கிய பொலிஸ் சேவைக்கு அடித்­தா­ள­மிடும் மிக முக்­கிய கட்­ட­மைப்­பாகும்.

தற்­போது பல இடங்­களில் இந்த சிவில் பாது­கப்பு குழுக்கள் செய­ழி­ழந்­துள்ள நிலையில் அதனை மீள­மைக்கும் பாரிய பொருப்பு என்­னிடம் இருக்­கி­றது. இதனை மேற்­கொள்ள நான் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பர்­க­ளுடன் இனைந்து திட்டம் வகுக்­க­வுள்ளேன். 5 விட­யங்­களை உள்­ள­டக்கி
நட­மாடும் பொலிஸ் சேவை பொலிஸ் பொது மக்கள் உறவை மேலும் வலுப்­ப­டுத்த நட­மாடும் பொலிஸ் சேவை­களை நான் ஆரம்­பிக்­க­வுள்ளேன். தற்­போதும் இதற்­கான திட்டம் வகுக்­கப்­பட்­டுள்­ளது.

ஒவ்­வொரு பொலிஸ் பிராந்­தி­யங்­க­ளிலும் ஒரு மாதத்­துக்கு ஒரு பொலிஸ் நிலை­யத்­தினை இந்த நட­மாடும் சேவை பணியில் ஈடு­ப­டுத்த திட்டம் வகுக்­கப்ப்ட்­டுள்­ளது. ஆன்­மீகம், கலா­சாரம், கல்வி, சுக­தாரம், விளை­யாட்டு மற்றும் சிர­ம­தானம் ஆகிய ஐந்து அம்­சங்­களை மையப்ப்­டுத்தி இந்த நட­மாடும் சேவை இடம்­பெறும். இதில் சிவில் பாது­காப்புக் குழு­வி­னரும் பொலி­ஸரும் பொது மக்­களும் இணைந்து செயற்­ப­டுவர்.

பொலிஸ் திணைக்­களம் இலங்கை பொலிஸ் என அறி­முகம் மிக முக்­கி­ய­மான ஒரு விட­யத்தை நான் சொல்ல வேண்டும். இலங்கை பொலிஸ் திணைக்­களம் என தற்­போது அழைக்­கப்­படும் எமது நிறு­வனம் இனிமேல் இலங்கி பொலிஸ் என்றே அழைக்­கப்­படும். அவ்­வாறே அழைக்­கு­மாறு நான் உங்­க­ளையும் கோரு­கிறேன். திணைக்­க­ளங்­களில் உள்ள பிரி­வி­னைகள் எமக்கு வேண்டாம். நான் அனை­வரும் ஒரே இலக்­குடன் பய­ணிப்­பவர்க்ள். அதனால் எமது நிறு­வனம் இலங்கை பொலிஸ் மட்­டுமே.

பொலி­ஸாரின் ஒழுக்கம் தொடர்பில் கண்­டிப்­பான நட­வ­டிக்கை

பல சந்­தர்ப்­பங்­களில் பொலி­ஸா­ருக்கு எதி­ரான குற்றச் சாட்­டுக்கள் முன்­வைக்­கப்ப்­டு­கின்­றன. பெரும்­பாலும் ஊட­கங்­களால் இவை முன் வைக்­கப்­ப­டு­கின்­றன. சாதா­ரண விமர்­ச­னங்­க­ளையும் , குற்றச் சாட்­டுக்­க­ளையும் ஆதா­ரத்­துடன் முன் வையுங்கள்.
துஷ்­பி­ர­யோ­கங்­களை கட்­டுப்­ப­டுத்தும் நாம் முதலில் ஊழல் மோச­டிகள், துஷ்­பி­ர­யோ­கங்­களில் ஈடு­ப­டா­த­வர்­க­ளாக இருக்க வேண்டும். அதனால் பொலி­ஸாரின் ஒழுக்கம் தொடர்பில் நான் கண்­டிப்­பான நட­வ­டிக்­கைக்ளை முன்­னெ­டுப்பேன். அது குறித்து யாருக்கும் மன்­னிப்­பில்லை.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பர்­களை உள்­ள­டக்­கிய உயர் சபை

பொலிஸ் மா அதி­ப­ராக நான் கட­மை­யேற்­றுள்ள நிலையில் சிறந்த பொலிஸ் சேவை­யையும் மக்கள் கோரு­கின்ற சேவை­யையும் வழங்க பல திட்­டங்கள் தயார் செய்­யப்ப்ட்டு வரு­கின்­றன. இவை­ய­னைத்தும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பர்­களைக் கொண்ட உயர் சபை­யினால் ஆரா­யப்­பட்டே அமுல் செய்­யப்­படும். திட்­டங்கள் அனைத்தும் இந்த உயர் சபை­யினால் ஆர­யப்ப்ட்டே செயற்­ப­டுத்­தப்­படும். எனவே எமது திட்­டங்கள் மிகவும் ஆரோக்­கி­ய­மா­ன­தக இருக்கும் என நம்­பலாம். என்றார்

கேள்வி பொலிஸ் சேவையில் அர­சியல் தலை­யீ­டு­களை எப்­படி உணர்­கிறீர்?

பதில் கடந்த காலங்­களில் அர­சியல் வாதிகள் பொலி­ஸாரின் கட­மை­களில் தலை­யீடு செய்­த­தாக நான் அறிந்தேன். இனி மேல் அது சாத்­தி­ய­மில்லை. அர­சியல் விளை­யாட்­டுக்கள் பொலிஸ் சேவையில் கலக்க இனி இட­மே­யில்லை.

கேள்வி கடந்த காலங்­களில் பழி வாங்­கப்­பட்­டீரா?

பதில் கடந்த அரசின் காலத்தில் நான் பல்­வேறு வடி­வங்­களில் பழி வாங்­கப்­பட்­ட­தாக உணர்­கிரேன். என்னை பல இடங்­க­ளுக்கு மாற்­றினர். கைது செய்ய முயற்­சித்­தனர். எதுவும் சாத்­தி­யப்­ப­ட­வில்லை. ஒரு முறை என்னை கைது செய்­யவும் முயற்­சித்­தனர். எல்­லா­வற்­றையும் தாண்­டியே நான் இன்று பொலிஸ் ம அதி­ப­ராக தெரிவு செய்­யப்ப்ட்­டுள்ளேன். பொலிஸ் மா அதிபர் தேர்வு எனக்கு 10 ஆவது சவா­லாக இருந்­தது.

கேள்வி பொலிஸ் மாஅ­திபர் பதவி உங்­க­ளுக்கு கனவா?

இல்லை. சிறு­வ­யது முதல் இலக்கே இன்றி நான் இருந்தேன். பல்­க­லை­கக்­ழக வாழ்வின் பின்­ன­ரேயே எனது வாழ்வு மாறி­யது. எனது மாமா ஒருவர் கொண்டு வந்த கெஷட் அறி­விப்பை பார்த்­து­விட்டே நான் பொலிஸ் சேவையில் இணைந்தேன்.

கேள்வி பொலிஸ் மா அதி­ப­ராக முகப் புத்­த­கத்தில் பிரச்சாரம் செய்தமை உண்மையா?

பதில் ஆம். நான் 8 வருடங்களக முகப் புத்தகத்தில் இருக்கின்றேன். நான் முன்னெடுத்த நடவடிக்கைகள் மக்களுக்கு தெரியும். அதனால் எனக்கு முகப் புத்தகத்திலேயே அதிகளவான மக்கள் உள்ளனர். அவர்கள் உள்ளிட்ட பலரும் நான் பொலிஸ் மா அதிபராக வேண்டும் என எதிர்ப்பார்த்தனர்.

கேள்வி பொலிஸ் மா அதிபராக தெரிவானது சட்ட விரோதமானது என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூருகிறாரே?

பதில் அது அவரது கருத்து. அதற்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை.

கேள்வி சம்பிக்க ரணவக்க தொடர்பிலான விசாரணைகளின் அடுத்த கட்டம், நீங்கள் பொலிஸ் மா அதிபராக இருக்கும் இப்போது எப்படி உள்ளது?

பதில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான விசாரணைகள் வெலிக்கடை பொலிஸரினால் சுயாதீனமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. அது தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நீதிமன்றின் ஆலோசனைக்கு அமைவாக விசாரணை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.pugeta001

Read more...

கோத்தபாயவை கைதுசெய்யக்கோரி மீண்டுமொரு முறை மூக்குடைபட்ட புலிப்பினாமிகள்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். அவரை கைது செய்யக்கோரி இரு புலிப்பினாமி அமைப்புக்களான ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு மற்றும் அமெரிக்க தமிழர் பேரவை என்பன அமெரிக்க அரசுக்கு மனுக்கொடுத்தனர். இக்கோரிக்கையை அந்நாட்டின் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் குப்பைத்தொட்டியில் வீசியுள்ளனர்.

இம்மனு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கத் தூதரகம், அமெரிக்கா ரோமப் பிரகடனம் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடாமை, கோட்டாபயவுக்கு எதிராக சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படாமை ஆகிய விடயங்களை முன்வைத்து அமெரிக்கா இந்த வேண்டுகோளை மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேநேரம் கோத்தபாய அமெரிக்க பிரஜாவுரிமையுடையவர். அவரை எதாவது ஓர் குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யவேண்டிய தேவை அமெரிக்க அரசுக்கு இருக்குமாயின் அவ்வரசாங்கம் அவரை ஒரு குறுஞ்செய்தியூடாக அன்றில் மின்னஞ்சலூடாக அழைப்பாணையை அனுப்பி அக்கருமத்தை செய்து கொள்ளும் என்பது யாவரும் அறிந்த விடயம்.

இந்நிலையில் மேற்படி அமைப்புக்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றுவற்காகவும் தாங்கள் ஏதோ ஓர் செயற்பாட்டில் உள்ளனர் என்று மக்களிடம் போலிப்பிரபல்யம் தேடிக்கொள்வதற்காகவும் இவ்வாறான மலிந்த விளம்பரங்களை செய்து வருகின்றனர்.

எது எவ்வாறாயினும் இவர்களின் இச்செயற்பாட்டால் கோத்தபாய மீது சிங்கள மக்களுக்கு மேலும் கருணையும் அக்கறையும் எற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இதன் அடிப்படையில் இவ்வமைப்புக்கள் ராஜபக்சவினரின் அத்தேவையை பூர்த்தி செய்வதற்காகவே செயற்படுகின்றனரா என்ற கேள்வியும் எழுகின்றது.

Read more...

தனிஈழமா? போராட்டமா? கிளிநொச்சி சென்று பேசிப்பாருங்கள். மக்கள் அடித்து விரட்டுவார்கள். மனோ கணேசன் ஆவேசம்.

தேசிய கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக மக்களை விழிப்புணர்வூட்டும் முதலாவது அமர்வு கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன்:

கிளிநொச்சியில் இன்று சென்று தனிஈழம், ஆயுதப் போராட்டம் பற்றிப் பேசிப்பாருங்கள், அங்குள்ள மக்கள் உங்களை விரட்டியடிப்பார்கள். இதுவே இன்றைய வடக்கின் நிலை என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அங்கு பேசிய அவர், இந்த நாட்டை எவராலும் பிளவுபடுத்த முடியாது. இதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. நாட்டை பிரிக்கச் செய்வதற்கு வடக்கு மக்களும் தற்போது விரும்பவில்லை. இந்த நிலைப்பாட்டிலேயே அவர்கள் உள்ளார்கள்.

வடக்கில் இன்று சென்று ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்போம் அல்லது நாட்டைப் பிரிப்போம் என்று எவராவது கூறினால் பொலிஸார் அங்கு சென்று நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அங்குள்ள மக்கள் அவர்களை அடித்து விரட்டிவிடுவார்கள்.

எனவே வடமாகாண மக்கள் நாட்டைப் பிளவுபடுத்த முனைகிறார்கள், மீண்டும் ஆயுதம் ஏந்தி போராட உள்ளனர் என்ற பீதியைக் கிளப்ப வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.

இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இன்றும் மீட்கப்படுகின்றன. தென்னிலங்கையிலும் ஆயுதங்கள் மீட்கப்படுகின்றன. அண்மையில்கூட லக்கல பொலிஸ் நிலையத்தில் ஆயுதங்கள் கொள்ளையிடப்பட்டதோடு மஹியங்கனைப் பகுதியில் துப்பாக்கித் தொழிற்சாலை ஒன்றும் முற்றுகையிடப்பட்டது.

கடந்த காலங்களில் 1971ஆம் மற்றும் 89ஆம் ஆண்டுகளில் தென்னிலங்கையிலும் கலவரங்கள் இடம்பெற்றிருந்தன. அங்கு ஆயுதங்கள் தற்போது மீட்கப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் கலவரங்கள் இடம்பெறும் என்று கூற முடியும் அல்லவா. ஆனால் அவ்வாறு மக்கள் கூறுவதில்லை. ஆனால் வடக்கில் பழைய தற்கொலை அங்கிகள் மீட்கப்பட்டால் தென்னிலங்கையில் பீதியை ஏற்படுத்தி இனவாதத்தை தூண்டுகிறார்கள்.

எனவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோரிடம் இனவாதம், மதவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் என்பவற்றை உருவாக்குவதற்கு முயற்சிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை விடுக்கின்றேன் – என்றார்.

பிரபாகரன்- ரணில் ஒப்பந்தத்தில் எனக்கு பாரிய சந்தகம் உள்ளது.

விடுதலை புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்தில் பிரபாகரனும், ரணில் விக்ரமசிங்கவும் உண்மையாகவும், உளப்பூர்வமாகவும் கைச்சாத்திட்டார்களா? என்ற சந்தேகம் எழுவதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தலைமைகள் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்த விடயங்களை நடைமுறைப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்களா? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் 'பண்டாரநாயக்க – செல்வநாயகம் இருவரும் சமாதான ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டனர். அதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க – பிரபாகரன் ஆகியோர் சமாதன ஒப்பந்தத்தினை ஏற்படுத்திக் கொண்டனர்.

அந்த இரண்டு ஒப்பந்தங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதுமாத்திரம் இல்லாமல் ஒப்பந்தம் குறித்து பேசிய, அதில் கைச்சாத்திட்டவர்கள் தொடர்பிலும் சந்தேகங்கள் எழுந்தன.

பண்டாரநாயக்க மற்றம் செல்வநாயகம் குறித்து தமிழ் சிங்கள மக்களிடையே பெரும் சந்தேகங்கள் இருந்தன. இவர்கள் இருவரும் உண்மையாக இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்களா? என்ற சந்தேகம் இருந்தது.

அதேபோல் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரபாகரன் தொடர்பிலும் பாரிய சந்தேகங்கள் இருக்கின்றன.

இவர்கள் இருவரும் உண்மையில், உள்ளார்த்தமாக சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்களா? என்ற சந்தேகம் நிலவுகின்றது.

அதேபோல் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்களா? என்ற சந்தேகமும் இருக்கின்றது.

ஒப்பந்த்தில் கைச்சாத்திட்டவர்கள், சமாதானம் பேசியவர்கள் அதனை உயர்மட்டத்தில் மாத்திரம் வைத்துக் கொண்டனர். கீழ் மட்டத்திற்கு கொண்டுவரவில்லை. மக்கள் மத்தியில் கொண்டுச் சேர்க்கவில்லை. 'பண்டா – செல்வா ஒப்பந்தம்' கைச்சாத்திடப்பட்டபோது நான் பிறந்திருக்கவில்லை.

ஆனால் ரணில் – பிரபா ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது நான் இருந்தேன். இதனால் இது குறித்து எனக்கு நன்கு தெரியும். சமாதன ஒப்பந்தம் குறித்து புலித்தரப்பினர் இது ஒரு 'சமாதானப் பொறி' என்று வெளிப்படையாக கூறினர். சமாதானத்தை யாரும் நம்பவில்லை. அவ்வாறான ஒரு நிலைப்பாட்டில் தமிழ் மக்கள் இருந்தனர்.

அதேபோல் தெற்கில் எதனைக் கூறினார்கள். இந்த சமாதான ஒப்பந்தத்தினால் ரணில் விக்ரமசிங்க முழு நாட்டையும் விற்று விட்டதாகவும், காட்டிக் கொடுத்து விட்டதாகவும் குற்றம் சுமத்தினர். இங்குள்ள இனவாதிகள் இவ்வாறு குறிப்பிட்டனர்.

அதேபோல் அங்குள்ள இனவாதிகள் அவ்வாறு கூறினர். இவ்வறான இனவாத செயற்பாடுகளினால் செய்துகொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தம் தோல்வியில் முடிந்தது.' என்றும் கூறினார்

Read more...

தென்கிழக்காசியாவிலேயே உயர்ந்த புத்தர் சிலையை திறந்து வைத்தார் மைத்திரிபாலா சிறிசேனா!

மத்துகம, ஓவிட்டிகல, பட்டமுல்லகந்த பௌத்த மத்திய நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட அவுக்கன சிலையினை ஒத்த தெற்காசியாவின் மிகஉயரமான நிமிர்ந்து நிற்கும் புத்தர் சிலையினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (23) முற்பகல் திறந்து வைத்ததுடன் 135 அடி உயரமான இந்த புத்தர் சிலைக்கு முதலில் மலர்களை வைத்து ஜனாதிபதியே வழிப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய சிறிசேனா, பௌத்த தர்மத்தின் அடிப்படையிலேயே சிறந்த சமூக அடிப்படை கட்டியெழுப்படும் எனவும் உலகில் பல துறைகளை சார்ந்த விசேட நிபுணர்கள் தற்போது பௌத்த தர்மத்தை தேடி வரும் நிலைமைக்கு மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தர்மத்தை பாதுகாப்பவன், தர்மத்தினாலேயெ காக்கப்படுவான் என்பதை புத்த பகவானை வணங்கும் போது அடிக்கடி நினைவுறுத்திக் கொண்டு, பௌத்த தர்மத்திற்கு ஏற்ப வாழ்க்கை அமைத்து கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

135 அடி உயரம் கொண்ட இந்த புத்தர் சிலையானது மாகாண சபை உறுப்பினர் ஜகத் பின்னகொட அவர்களின் தனிப்பட்ட நிதி அன்பளிப்பினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




Read more...

Friday, April 22, 2016

புதிய பொலிஸ் மா அதிபர் ஆறு விடயங்களில் அவதானம் செலுத்துவாராம். இன்றைய ஊடகச் சந்திப்பு முதலும் இறுதியுமாம்!

பொலிஸ் திணைக்களம், இனிமேல் இலங்கை பொலிஸ் என அழைக்கப்படும் என்று புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று பூஜித்த ஜயசுந்தர பொலிஸ்மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து இடம்பெற்ற முதலாவது ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறினார்.

கடந்த காலங்களில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் நீண்ட இடைவௌி இருந்ததாகவும் இதன் காரணமாக பொலிஸ் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை இழக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பொலிஸ் மொபைல் சேவையினூடாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய 06 பிரதான விடயங்களில் அவதானம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

கல்வி, சுகாதாரம், சமயம், விளையாட்டு உள்ளிட்ட துறைகள் இதனூடாக கவனம் செலுத்தப்படும் என்று இவை மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் கிராம சேவகர்கள் பிரிவுகளில் உள்ள சிவில் பாதுகாப்பு குழுக்கள் குறித்து கூடிய அவதானம் செலுத்தப்படும் என்றும் கூறினார்.

பொலிஸாரின் நோக்கத்தையும் குறிக்கோளையும் அடைந்து கொள்வதற்கு தகுந்த செயற்பாடாக சிவில் பாதுகாப்பு குழுக்கள் காணப்படுவதாக கூறினார்.

இலங்கை பொலிஸின் முதலாவது நோக்கம் "குற்றங்கள் மற்றும் வன்முறை பயம் அற்ற நம்பிக்கையுடன் வாழக்கூடிய ஒரு அமைதியான சூழலை உருவாக்குவது" என்று அவர் அங்கு தௌ ிவுபடுத்தினார்.

இதற்கிடையில் தான் நடத்தும் முதலாவது மற்றும் இறுதி ஊடக சந்திப்பு இதுவென்றும் அவர் கூறினார்.

ஊடகங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மற்றும் முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன ஆகியோரிடம் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

புதிய பொலிஸ் மா அதிபர், இதுவே தான் நாடாத்துகின்ற முதலும் இறுதியுமான ஊடக சந்திப்பு என்று கூறியபோது : நீங்கள் பொலிஸ் மா அதிபராவதற்கு உங்களது முகநூல் ஊடாக பாரிய பிரச்சார நடவடிக்கை ஒன்றை முன்னெடத்தீர்களே அவற்றை நிறுத்தி விடுவீர்களா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது பதிலளித்த பூஜித ஜெயசுந்தர,

தன்னுடைய முகநூல் தொடர்ந்து பயனிக்கும் என்றும் அமெரிக்காவின் ஜனாதிபதி அதை தொடர்ந்து செய்யலாம் என்றால் பொலிஸ் அதிகாரியான எனக்கு ஏன் செய்ய முடியாது என்றும் கேள்வி எழுப்பினார்.

பொலிஸ் மா அதிபரின் கடமையேற்பு நிகழ்வில் சர்வமத நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.



Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com