Sunday, January 31, 2016

ஐரோப்பிய அரசாங்கங்கள் அகதிகளுக்கு எதிரான தாக்குதலை அதிகரிக்கின்றன. By Marianne Arens

இவ்வார ஆம்ஸ்டர்டாம் கூட்டத்தில், ஐரோப்பிய உள்துறை மற்றும் நீதித்துறை மந்திரிமார்கள் நிராதரவான மத்திய கிழக்கு அகதிகளின் உள்வரவை எவ்வாறு நிறுத்துவது என்பதற்கான பரிந்துரைகளைக் கொண்டு ஒருவரையொருவர் விஞ்சி நிற்க முயன்றார்கள். எந்த நடவடிக்கையும் இல்லையென்றாலும் பரிசீலினைகளே கொடூரமாக இருந்தன.

உள்நுழையவியலாதவாறு எல்லைகளை மூடுவதில் தொடங்கி, தேசிய அரசாங்கங்களின் விருப்பம் இல்லையென்றாலும் கூட, Frontex துருப்புகளை நிலைநிறுத்துவது, அத்துடன் நூறாயிரக் கணக்கான அகதிகளுக்கு கொடுஞ்சிறைக்கூடங்களை எழுப்புவது வரையில் பரிந்துரைகள் இருந்தன.

பல்வேறு மந்திரிமார்கள் கிரீஸைத் தொடர்ச்சியாக தாக்கினர், ஏதென்ஸ் அந்நாட்டின் வழியாக ஐரோப்பாவிற்குள் வரும் அகதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவில்லை என்றால், அதை செங்கென் வலையத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமென அவர்கள் கோரினர், இம்மண்டலம் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சுதந்திர-நகர்வுக்கு உத்தரவாதமளிக்கிறது.

மத்திய கிழக்கிலிருந்து வரும் அகதிகளில் பெரும் விகிதத்தினர், கிரீஸிற்கு அருகே கடந்து செல்வதற்கு முன்னதாக மற்றும் மாசிடோனிய எல்லையில் ஐரோப்பிய ஒன்றியத்தைத் தொடுவதற்கு முன்னதாக, துருக்கியிலிருந்து கிரேக்க தீவுகள் வரையில் அபாயகரமான மற்றும் பெரும்பாலும் மரணகதியிலான பயணத்தை மேற்கொள்கின்றனர். மாசிடோனியா மற்றும் சேர்பியா வழியாக பயணித்த பின்னர், அவர்களில் பலர் ஜேர்மனியை அடையும் முயற்சியுடன், ஹங்கேரி, குரேஷியா மற்றும் ஸ்லோவேனியா வழியாக மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைகிறார்கள்.

உறையும் குளிர் மற்றும் சீற்றமான கடல்களுக்கு இடையே, இப்போதும் 2,000 வரையிலான அகதிகள் நாளாந்தம் கிரேக்க தீவுகளை அடைய ஏகியன் கடலைக் கடந்து வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றிய புள்ளிவிபரங்களின்படி, ஜனவரி 23 வாக்கில், 44,000 பேர் ஏற்கனவே இந்த வழியாக 2016 இல் துருக்கியிலிருந்து ஐரோப்பாவை எட்டியிருந்தனர். உயிரிழந்தவர்கள் அல்லது காணாமல் போன அகதிகளின் எண்ணிக்கை 149 ஆக இருந்தது. ஜனவரி 22 இரவு மட்டுமே, 42 பேர் அப்பயணத்தை மேற்கொள்ளும் முயற்சியில் மூழ்கி இறந்தனர், அதில் 18 குழந்தைகளும் உள்ளடங்கும்.

இந்த பாதை அடைக்கப்பட உள்ளது. Frontex படைகளைக் கொண்டு மாசிடோனியாவை ஒட்டிய கிரீஸின் வடக்கு எல்லையைக் குறிப்பிடத்தக்க அளவில் பலப்படுத்துமாறு மந்திரிமார்கள் கோரினர், அத்துடன் 2017 இறுதிக்குள் செங்கென் வலையத்திற்குள் எல்லை கட்டுப்பாடுகளைப் பலப்படுத்தவும் ஒப்புக் கொண்டனர்.

அகதிகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அல்லது செங்கென் வலையத்திலிருந்து நீக்கப்படுவதை முகங்கொடுக்க கிரீஸிற்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜேர்மன் உள்துறை மந்திரி தோமஸ் டு மஸியர் அக்கூட்டத்திற்குப் பின்னர் கூறுகையில், “நிரந்தரமாக, குறிப்பிடத்தக்க மற்றும் நீடித்த அகதிகள் எண்ணிக்கை குறைப்பு நமக்கு அவசியம், மேலும் இது வரும் வாரங்களில் புலனாகக்கூடியதாக இருக்க வேண்டும்,” என்றார்.

டு மஸியர் தொடர்ந்தார், எல்லை பாதுகாப்பு முகமை Frontex எல்லைகளைப் பாதுகாப்பதில் ஓர் அங்கத்துவ அரசின் இடத்தில் இருந்து நடவடிக்கை எடுக்கலாம் என்பதைத் தெளிவுபடுத்தியாக வேண்டும். ஜேர்மனியின் உள்துறை மந்திரியும் செங்கென் வலையத்திலிருந்து கிரீஸை வெளியேற்றுவதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. “கிரீஸ் அதன் வீட்டுப்பாடத்தை செய்ய நாம் அதற்கு அழுத்தமளிப்போம்,” என்றவர் அச்சுறுத்தினார்.

அகதிகள் மற்றும் புலம்பெயர்வோருக்கான பெல்ஜிய அரசு செயலர் Theo Francken கிரீஸில் 300,000 அகதிகளுக்கான ஓர் "அடைக்கப்பட்ட இடத்தின்" சாத்தியக்கூறை எழுப்பினார். அது ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் இருக்க வேண்டும், ஏனென்றால் கிரீஸின் "அரசு கட்டமைப்புகள் வெளிப்படையாகவே மிகவும் பலவீனமாக [இருந்தன],” என்று அந்த பெல்ஜிய அரசியல்வாதி தெரிவித்தார்.

Francken இன் பரிந்துரை, ஒரு நடுத்தர நகர அளவில் அகதிகளுக்கான ஒரு சேரிப்பிரதேசத்தை உருவாக்கி, கிரீஸை ஒரு பிரமாண்டமான கொடுஞ்சிறைக்கூடமாக மாற்றுவதற்கு ஒத்திருக்கிறது. நாஜி யுகத்திற்குப் பின்னர் ஐரோப்பாவில் இதனுடன் ஒப்பிடுவதற்கு ஒன்றும் கிடையாது.

Frontex படைகளின் ஒத்துழைப்புடன் மாசிடோனியா-கிரீஸ் எல்லையை மூடுவதற்கு ஹங்கேரிய பிரதம மந்திரி விக்டொர் ஓர்பன் ஆதரவு தெரிவித்தார், இவர் பல மாதங்களாக கிரீஸின் வடக்கு எல்லையில் பாரியளவில் எல்லை வேலிகளை ஸ்தாபிக்க கோரி வந்துள்ளார். ஸ்லோவாக்கிய பிரதம மந்திரி ரோபர்ட் பிகோவும் அவரது ஆதரவை வழங்கினார். Der Spiegel செய்தின்படி, ஹங்கேரி, செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியா ஏற்கனவே இந்த எல்லைக்கு அவற்றின் சொந்த பொலிஸ் படைகளை அனுப்பியுள்ளன, ஹங்கேரி ஒரு நிரந்தர வேலியைக் கட்டமைக்க அதிகளவில் கட்டுமானப் பொருட்களை அனுப்பியுள்ளது.

செவ்வாயன்று, டேனிஷ் நாடாளுமன்றம் தஞ்சம் கோருவோரின் உடைமைகளை பறிமுதல் செய்ய சட்டமசோதா நிறைவேற்றியது. குடும்ப மற்றும் உணவு செலவுகளுக்காக 10,000 குரோனெர் (1,340 யூரோ) மதிப்புக்கு அதிகமான உடைமைகளை இனிமேல் பொலிஸ் அகதிகளிடமிருந்து பறிமுதல் செய்யலாம். நிஜமான பரிந்துரையோ, 3,000 குரோனெர் மதிப்பிற்கு அதிகமிருந்தாலே அனைத்தையும் பறிமுதல் செய்யலாம் என்றிருந்தது. அதற்கும் கூடுதலாக, புலம்பெயர்வோர் அவர்களது உறவினர்களுடன் இணைய அவர்களுக்கு விண்ணப்பிப்பதற்காக முன்னதாக காத்திருக்க வேண்டியிருக்கும் காலம் ஓராண்டில் இருந்து மூன்றாண்டாக நீடிக்கப்படும், தற்காலிக வசிப்பிட அனுமதிகள் குறைக்கப்படும் மற்றும் ஒரு நிரந்தர அனுமதி பெறுவதற்கான நிபந்தனைகள் கடுமையாக்கப்படும்.

இரண்டாம் உலக போரின் போது யூதர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டு, டேனிஷ் அரசாங்கம், இப்படி தான் வேலைவாய்ப்பற்ற டேனிஷ் பிரஜைகள் முன்னர் கையாளப்பட்டார்கள் என்று விவரித்து விடையிறுத்தது! எவ்வாறிருப்பினும் அத்தகைய பாசிசவாத நடவடிக்கைகளை எடுப்பதில் டென்மார்க் மட்டும் இப்போது தனியாக இல்லை.

டென்மார்க்கினது விதிகளைப் போன்ற அதேமாதிரியான விதிமுறைகளின் கீழ், ஆனால் 900 யூரோவிற்கும் குறைவாக மட்டுப்படுத்தி, சுவிட்சர்லாந்து 2015 இல் 100 மக்களிடமிருந்து உடைமைகளைப் பறித்தது. ஜேர்மனியில் உள்ள தெற்கு மாநிலங்கள் ஏற்கனவே அதுபோன்ற நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன, பாவேரியா 750 யூரோவிற்கு அதிகமான எல்லா சொத்துக்களையும் பறிமுதல் செய்கிறது, Baden-Württemberg வெறும் 350 யூரோவிற்கு அதிகமிருந்தால் பறிமுதல் செய்கிறது.

கிரீஸில் சிரிசா அரசாங்கம் ஏற்கனவே உழைக்கும் மக்களுக்கு எதிரான கடுமையான சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டியில் முன்னிலையில் உள்ளது. இப்போது அது அகதிகளுக்கு எதிராக அதேமாதிரி கொடூரமாக நடந்துகொள்ளுமாறு கூறப்படுகிறது.

கிரேக்க புலம்பெயர்வு மந்திரி Ioannis Mouzalas, சில ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள் அகதிகள் மூழ்கி சாகட்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளன, அதேவேளையில் வெளியுறவு மந்திரி Nikos Kotzias ஜேர்மனியின் TAZ பத்திரிகையிடம் குறைகூறிய போது அவர் புரிந்து கொண்டிருந்தவாறு என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை அவர் தெளிவுபடுத்தினார் என்று அறிவித்து விடையிறுத்தார். “அகதிகளை நாம் தடுக்க வேண்டுமானால், அவர்களுக்கு எதிராக நாம் போர் தொடுக்க வேண்டும். அவர்கள் மீது நாம் குண்டு வீசி, அவர்கள் படகுகளைக் கவிழ்க்க வேண்டும், அவர்கள் மூழ்கி இறந்து போகட்டும்,” என்று அவர் கூறியிருந்தார்.

கிரீஸ்-மாசிடோனியா எல்லையை கடப்பதென்பது அகதிகளுக்கு ஏற்கனவே ஒரு கடுமையான அனுபவம். புலம்பெயர்வோர் வழமையாக பொலிஸால் மிரட்டிப் பணிய வைக்கப்படுகிறார்கள், அடிக்கப்படுகிறார்கள். ஜேர்மனியின் அகதிகள் ஆதரவு அமைப்பு ProAsyl இன் சமீபத்திய அறிக்கை ஒன்று, பால்கல்களின் மூடப்பட்ட எல்லைகள் நாசகரமானது என்பதை மற்றும் அகதிகளுக்கு மரணகதியிலான விளைவுகளைக் கூட கொண்டு வந்திருந்ததை எடுத்துக்காட்டியது. இந்த விளைவு விருப்பத்திற்குரியது என்பதையும், பரிசீலிக்கப்படும் அணுகுமுறைகளுடன் பொருந்தி இருப்பதையும் ஆம்ஸ்டர்டாம் கூட்டம் தெளிவுபடுத்துகிறது.

அந்த அறிக்கையின்படி, பத்து ஆயிரக் கணக்கான அகதிகள் ஏற்கனவே மாசிடோனியாவில் கைவிடப்பட்டு, வீதிகளில் வசிக்க நிர்பந்திக்கப்பட்டு, அவர்கள் கிரீஸிற்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

ஏதென்ஸிலேயே ஏறத்தாழ தஞ்சம் கோரும் ஒருவரைப் பதிவு செய்வது சாத்தியமில்லை. வருடாந்தர சராசரியாக 10,000 தஞ்சம் கோரும் விண்ணப்பங்களில் வெறும் 1,150 க்கு மட்டுமே ஏதென்ஸில் இடம் கொடுக்கப்படுகிறது என்பதை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் கமிஷனர் அறிவார். தஞ்சம் கோரி ஒருவர் பதிவு செய்யாதவர்கள் கைது செய்யப்பட்டு, கிரேக்கத்தை விட்டு வெளியேற்றும் கூடத்தில் அடைக்கப்படுவார்.

ஏகியன் கடலைப் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கடந்து வருவதற்காக ஏதென்ஸ் அங்காராவில் உள்ள அரசாங்கத்தைக் குறை கூறியுள்ளது, அதேவேளையில் துருக்கிய அரசாங்கம் ஒட்டுமொத்த கடற்பகுதியையும் பாதுகாக்கும் தகைமைகள் அதற்கு இல்லை என அறிவித்துள்ளது. அகதிகள் பிரச்சினைகள் சில காலம் துருக்கிய ஒத்துழைப்பைப் பெற ஐரோப்பிய ஒன்றியம் முயன்றிருந்ததுடன், அது 3 பில்லியன் யூரோ உதவி வழங்கவும் உத்தரவாதம் அளித்திருந்தது, அத்தொகை இன்னும் செலுத்தப்படவில்லை.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவின் போர்களில் இருந்து தப்பியோடி வந்த 2.5 மில்லியன் பேர் இப்போது துருக்கியில் உள்ளனர். இவர்களில் சுமார் வெறும் 250,000 பேர் மட்டும் ஏற்கனவே இருக்கும் முகாம்களில் உள்ளனர். துருக்கி முழுமையாக ஜெனிவா அகதிகள் மாநாட்டு உடன்படிக்கையை அங்கீகரிக்கவில்லை, மேலும் அங்கே அகதிகள் வேலை செய்ய முடியாது அல்லது அவர்களது குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப முடியாது.

ஐரோப்பாவில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் இன்று மிகைமிஞ்சியும், வரவேற்கப்படாமலும் உள்ளனர். அரசியல்வாதிகளும் இதழாளர்களும் எந்தளவிற்கு சிறப்பாக அகதிகளை வெளியேற்றலாம், கைது செய்யலாம், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தள்ளிவிடலாம் என்று ஏதோ விலங்குகள் அல்லது பண்டங்களைக் குறித்து விவாதிப்பதைப் போல பகிரங்கமாக விவாதித்து வருகின்றனர். உண்மையில் அவர்கள், மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் வட ஆபிரிக்காவைச் சீரழித்துள்ள அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளது ஏகாதிபத்திய போர்களால் உருவாக்கப்பட்ட அவலத்திலிருந்து தப்பிப்பதற்கு நாட்டை விட்டு வெளியேறுவதை மட்டுமே ஒரே வழியாக காணும் அந்த மக்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.


Read more...

சிங்கத்தின் வாலில் ஏறி விட்டீர்கள். இனி துண்டு துண்டுதான். ராஜபக்சவின் மூன்றாம் மகன் எச்சரிக்கை.


முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்சவின் இரண்டாம் மகன் லெப்டினன் யோசித்த ராஜபச்ச நேற்று கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, ராஜபக்சவின் முன்றாம் மகன் றோஹித்த ராஜபக்க தனது முகநூலினூடாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அவ் எச்சரிக்கையில் :

'நல்லாட்சி அரசு சிங்கத்தின் வாலில் ஏறிவிட்டதாகவும், தற்போது சிங்கம் உங்களை துண்டு துண்டாக கிழித்தெறியாது என எதிர்பார்க்க வேண்டாம்' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



இதேநேரம் தம்மை பழிவாங்கவே யோசித்த கைது செய்யப்பட்டதாக முன்னாள் அதிபர் மகிந்த தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எதிர்கட்சித் தலைவராக இரா.சம்பந்தனும் அரசாங்கத்துக்கு பக்கபலமாகவே இருப்பதாக, சாடியுள்ள அவர் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக ஒத்துழைப்பு வழங்கிய ஒருவரே தற்போது எதிர்கட்சித் தலைவராக இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜே வி பியும் அரசாங்கத்தை விமர்சிப்பதைப் போன்று அரசாங்கத்தின் பக்கமே இருக்கிறது என்றும் ஜே வி பி கேள்வி எழுப்பும் போது, அரசாங்கம் அதற்கு பதில் வழங்குவது போன்ற திட்டமிட்ட நடைமுறையொன்றை செயற்படுத்திவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்:

யோசித்த ராஜபக்ஷ கைது செய்யப்பட்டமையானது, தம்மை பழிவாங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட செயலென்பது நான்காம் திகதிக்கு முன்னர் இரண்டு ராஜபக்ஷவினரை கைது செய்யவிருப்பதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன போன்றோர் கூறியதிலிருந்து தெளிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் எத்தனை கைதுகளை மேற்கொண்டாலும் ராஜபக்ஷக்களின் பயணத்தினை நிறுத்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மாத்தளையில் இடம்பெற்ற கூட்டமொன்று மற்றும் யோசித்த ராஜபக்சவை சிறையில் பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

தமிழர் ஓர் தேசிய இனமா? அன்றில் இனக்குழுமமா? யாழ் மேலாதிக்கம் மட்டக்களப்பாருடன் மோதல்.

ஈழத்தமிழ் மக்களை ‘தேசம் என்று அழைப்பதா? இல்லையேல் ‘மக்கள் குழுமம்’ என்று அழைப்பதா? இத்தகைய ஒரு நீண்ட சர்ச்சையில் நேற்று சனிக்கிழமை முழுநாளும் வாதப் பிரதிவாதத்தில் ஈடுபட்டது தமிழ் மக்கள் பேரவை.
இனப்பிரச்சினைக்குத் தீர்வாக தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கப்படவேண்டிய ஒரு தீர்வு யோசனையின் முதல் நகல் வடிவம் ஒன்றைத் தயாரிப்பதற்காக தமிழ் மக்கள் பேரவை தனது பிரதிநிதிகளைக் கொண்ட உப ஒன்றை நியமித்திருந்தது.
அந்த உப குழு தயாரித்திருந்த நகல் வடிவயோசனை நேற்றுக் காலை நல்லூரில் இடம்பெற்ற பேரவையின் பொதுச் சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போதே மேற்படி வாதப் பிரதிவாதம் தீவிரமாக முழுநாழும் தொடர்ந்தது.
தீர்வு யோசனையின் நகல் வடிவத்தைத் தயாரித்த உபகுழு, அதில் தமிழ்மக்களை ‘மக்கள் குழுமம்’ (Peoples) என்று குறிப்பிட்டிருந்தது. தேசம் (Nation) என்ற சொல் தவிர்க்கப்பட்டிருந்தது.

தமிழ் மக்கள் பேரவையின் பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர் அதனைக் கடுமையாக ஆட்சேபித்தனர்.


ஒரு தேசிய இன மக்கள் குழுமத்துக்கு சொந்தமான ஒரு தாயகப் பிரதேசம் தொடர்ந்து அவர்கள் வசம் இல்லாவிட்டால் மட்டுமே அவர்களை ‘மக்கள் குழுமம்’ (Peoples)என்று அழைக்கலாம் என்றும் – ஆனால் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை நீண்ட வரலாற்றுப் பின்னணியுடன் தாயகப் பிரதேசத்தில் அவர்கள் தொடர்ந்து வசித்து வருவதால் ‘தேசம்’ (Nation) என்ற பதத்துக்கு அவர்கள் உரிமையுடையவர்கள் என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது.

“ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூட அண்மைக் காலங்களில் தமிழர்களை ஒரு ‘தேசம்’ என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக ஒரு ‘மக்கள் குழுமம்’ (Peoples) என்றே குறிப்பிட்டு வருகின்றனர். இந்தப் பின்புலத்தில் இந்த நகல் யோசனைத் திட்டத்தில் ‘தேசம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது தமிழ் மக்கள் பேரவையை வழிப்படுத்தும் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை தேவையற்ற நெருக்குவாரங்களுக்குள் தள்ளும். எனவே அந்த ‘தேசம்’ என்ற சொல்லை தற்போதைய கட்டத்தில் தவிர்ப்பது நல்லது” – என்று யோசனை நகலை தயாரித்த பிரதிநிதிகள் விளக்கமளித்தனர்.

நேற்றைய கூட்டத்துக்கு முதல்வர் விக்னேஸ்வரன் சமுகம் தந்திராத போதிலும் அவரை நெருக்கு வாரத்திற்குள் தள்ளுவதை உறுப்பினர்கள் எவரும் விரும்பவில்லை.

‘ஒரு நாடு; இரு தேசம்’ என்ற கொள்கையை வலியுறுத்தி நிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட ‘தேசம்’ என்ற சொல்லைத் தவிர்த்து ‘மக்கள் குழுமம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதை சிலாகித்து வரவேற்றார்.

“ஈழத் தமிழ் மக்கள் ‘ஒரு தேசம்’ என்பதை தொடர்ந்து விடாப்பிடியாக வலியுறுத்தி நிற்பவர்கள் நாங்கள். எனினும் சுமுகமான முறையில் இந்த முயற்சி முன்நகர்வதற்காக இதில் சற்று விட்டுக் கொடுப்புடன் இறங்கிவர நாம் முன்வந்திருக்கின்றோம். எனவே ஏனையோரும் அதற்கு இணங்க வேண்டும்” – என்று கோரினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

ஆனால் சில பிரதிநிதிகள் – குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இருந்த வந்த பிரதிநிதிகள் – அதற்கு இணங்க மறுத்தனர். அவர்கள் தமிழர்கள் ‘தேசம்’ என்ற சொல்லுக்கு உரித்துடையவர்கள் ஆதலால் நகல் யோசனையில் அந்தச் சொல் பயன்படுத்தப்படுவது அவசியம், அதை நாம் கைவிடமுடியாது என்று வாதிட்டனர்.

இதனால் காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்தக் கூட்டம் மாலை 6 மணிவரை நீடித்தது. இறுதியில் எந்தச் சொல்லை பயன்படுத்துவது என்ற விடயத்தை மக்கள் கருத்தறிய விடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

உபகுழுவினால் தயாரிக்கப்பட்ட நகல் வடிவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும் பகிரங்க பொதுக் கூட்டத்தில் வைத்து வெளியிட்டு வைப்பதென்ற முடிவு எடுக்கப்பட்டது.

இங்கு குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் இவ்விவாதங்களில் கலந்து கொள்ளாத பேரவையின் தலைவர் விக்னேஸ்வரன் நகலை வெளியிட்டு வைத்தமையாகும்.

மீனுக்கு வாலையும் முதலைக்கு தலையையும் காட்டிக்கொண்டு அரசியல் செய்யும் இந்த மேதாவியால் தமிழ் மக்களுக்கு தலைமைதாங்க முடியுமா என்ற கேள்வி இங்கு மேலெழவே செய்கின்றது.

அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கான முன்மொழிகள்,

1. இலங்கை அரசின் தன்மை


1.1. இலங்கை ஓர் பல்தேசிய, கலாசார, மொழித்துவ, மத அரசாகும். அது தனது அங்கத்துவ மக்கள் கூட்டங்களையும் , சமூகங்களையும்கொண்டமைந்தது ஆகும். மத்தியும் மாநிலங்களும் மக்கள் கூட்டங்களின், சமூகங்களின் பன்மைத்துவத்தை மதித்து, அங்கீகரித்து, பாதுகாக்கும் கடப்பாட்டை கொண்டவை.

1.2. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் ஏனைய சமூகங்கள் பல்தேசிய இலங்கையை உருவாக்குகின்றன.

1.3. 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ்த் தேசத்தின் பாரம்பரிய தாயகமாக இருக்கும் காரணத்தினால் அதன் ஆள்புலபரப்பாக அமையப் பெறும்.

1.4. தமிழ் மக்கள் பாரதீனப்படுத்த முடியாத சுயநிர்ணய உரிமையைக் கொண்ட மக்கள் கூட்டமாவர். தனது சுயநிர்ணய உரிமையை ஏற்று அங்கீகரிக்கும் இடத்து பிளவுபடாத ஒற்றுமையான இலங்கை அரசிற்கு தமிழ் மக்கள் தமது பற்றுறுதியை வெளிப்படுத்துகின்றனர்.

2. இறைமை

2.1. இறைமை தனித்துவாமான மக்களுக்குரியதும் பாரதீனப்படுத்த முடியாததும் ஆகும். முழு சமஷ்டி அரசின் இறைமையும் அதன் அங்கத்துவ மக்கள் கூட்டங்களின் இறைமை மூலம் உய்த்தறியப்படுவதாகும்.

2.2. சட்டவாக்க இறைமையானது மத்திய பாராளுமன்றத்தாலும் மாநில சட்டவாக்க அவைகளாலும் தமக்கென அரசியலமைப்பால் குறித்தொதுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலமாக தனித்துவமாக பிரயோகிக்கப்படும்.

2.3. நிறைவேற்று அதிகார இறைமையானது மத்திய அரசாங்கத்தின் பிரதம மந்திரியாலும் அமைச்சரவையாலும் மாநில அரசாங்கத்தின் முதலமைச்சராலும் மாநில அமைச்சரவையாலும் அரசியலமைப்பில் விதந்துரைக்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கு ஏற்ப பிரயோகப்படுத்தப்படும்.

2.4. நீதித்துறை சார் இறைமை அதிகாரங்கள் அரசியலமைப்பு நீதிமன்றத்தாலும் மத்திய, மாநில நீதித்துறையாலும் அவற்றுக்கென விதந்துரைக்கப்பட்ட நியாயாதிக்கங்களுக்கு ஏற்றவாறு பிரயோகிக்கப்படும்.

2.5. இவ்வரசியலமைப்பால் விதந்துரைக்கப்படும் அடிப்படை உரிமைகள் யாவற்றையும் மத்திய மாநில அரசாங்கங்கள் மதித்து, பாதுகாத்து அவை மக்களால் அனுபவிக்கப்படுவதை உறுதி செய்யப் படுதலும் வேண்டும்.

மத்தியாலோ மாநிலத்தாலோ அரசியலமைப்பால் விதந்துரைக்கப்பட்ட வழிகளால் அன்றி அடிப்படை உரிமைகள் சுருக்கப்படவோ, நிராகரிக்கப்படவோ, மட்டுப்படுத்தவோ முடியாது.
2.6. வாக்குரிமயானது மத்திய பாராளுமன்றம், மாநில சட்டவாக்க சபை தேர்தல்களிலும், பொது ஒப்பங்கோடல்களிலும் 18வயது நிரம்பிய ஒவ்வொரு பிரஜைக்கும் உரியதாகும்.

2.7. ஒவ்வொரு மாநில அரசும் தனது மாநிலத்திற்குட்பட்ட சிறுபான்மையினரது அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் கடப்பாடுடையது.

3. அரசியலமைப்பின் மீயுயர்வுத் தத்துவம் மத்தியினதும் மாநிலத்தினதும் அதியுயர் சட்டமும் அத்திபாரமுமாக அரசியலமைப்பு இருக்கும். மத்தியினதும் மாநிலத்தினதும் அனைத்து செயற்பாடுகளும் அரசியலமைப்போடு இயைந்ததாக இருத்தல் வேண்டும்.

4. மொழி, மதம், பிரஜாவுரிமை மற்றும் அடிப்படை உரிமைகள்

4.1. இலங்கை ஒரு மதச் சார்பற்ற குடியரசாக இருக்கும். அரசு அனைவரினதும் விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கான உரிமையை மதிப்பதோடு எல்லா மதங்களையும் சரிசமனாக நடாத்தும்.

4.2. சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகியன அரசின் உத்தியோகபூர்வ மொழிகளாக இருக்கும்.

4.3. வடக்கு கிழக்கில் தமிழும் ஏனைய இடங்களில் சிங்களமும் நீதிமன்ற மொழியாகவும் பொது ஆவணங்களின் மொழியாகவும் இருக்கும்.

4.4. தமது மொழி, நிர்வாக மொழியாக இல்லாதவிடத்தும் அனைத்து பிரஜைகளும் தமது மொழியில் நீதிமன்றத்தையும் பொதுச் சேவையையும் பெற்றுக் கொள்ள உரித்துடையவர்கள் ஆவார்கள்.

4.5. 04 பெப்ரவரி 1948 அன்று இலங்கையை இயல்பாக வதிவிடமாகக் கொண்ட அனைவரும் அவர்களது வழித் தோன்றல்களும் இலங்கைப் பிரஜாவுரிமைக்கு உரித்துடையவர்கள் ஆவார்கள். பிறப்பால், பதிவால் பிரஜா உரிமை என்ற வித்தியாசம் இருக்க மாட்டாது.

4.6. சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச பொருத்தனையின்அண்மித்த பிரதியாக அமையும் அடிப்படை உரிமைகள் சாசனம் ஒன்று அரசியலமைப்பில் இருத்தல் வேண்டும்.

இவை நீதிமன்றங்களால் வழக்காடப்படக் கூடிய உரிமைகளாக இருக்க வேண்டும். தென்னாபிரிக்க அரசியலமைப்பில் இருப்பதற்கு ஒப்பான பொருளாதார, சமூக, கலாசாரம் சார் உரிமைகளும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

5. ஆட்சி முறைமை

5.1. இலங்கை ஓர் சமஷ்டி குடியரசாக இருக்கும்.

5.2. அதில் இரண்டு மட்டத்திலான அரசாங்கம் இருக்கும்: மத்தி மற்றும் மாநிலம்.

5.3. சமஷ்டியின் கூறுகளாக மாநிலங்கள் இருக்கும். அத்தகைய மாநிலங்களில் ஒன்றாக தற்போதைய 1978 அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை கொண்ட வடக்கு கிழக்கு மாநிலம் அமையப் பெறும்.

5.4. மத்திய அரசாங்கமானது வெஸ்ட்மினிஸ்ரர் முறையிலான ஆட்சி முறையில் இருத்தல் வேண்டும்.

5.5. அரசாங்கத்தின் இரு மட்டத்திலும் உள்ள தேர்தல் முறைகள் ஜெர்மனியில் இருப்பது போன்ற கலப்பு தேர்தல் முறையை பின்பற்றியதாக இருக்க வேண்டும்.

5.6. சமஷ்டி அரசின் சனாதிபதி பாராளுமன்றின் இரண்டு அவைகள் மற்றும் மாநிலங்கள் அவையின் உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் கல்லூரியொன்றினால் தெரிவு செய்யப்படுவார்.

5.7. தத்தமது சட்ட வரையறைகளின் ஊடாக மாநிலங்கள் தமது ஆட்சி முறைகளை சமஷ்டி அரசியலமைப்போடு முரண்படாத வகையில் உருவாக்கிக் கொள்ளலாம்.

5.8. 1978 அரசியலமைப்பின் 17ஆவது திருத்தத்தை ஒட்டிய அரசியலமைப்பு பேரவை ஒன்று இருத்தல் வேண்டும்.

குறிப்பு:

அ) வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தனித்துவத்தை நாம் ஏற்றுக் கொள்கிறோம். முஸ்லிம் சமூகத்தால் இணைந்த வடக்கு கிழக்கில் தமது குழு சார் உரிமைகளை நிறுவன ரீதியாக பாதுகாப்பதற்கு எடுக்கும் முன்வைப்பு எதுவாயினும் அது தொடர்பில் அவர்களுடன் கலந்தாய்வு செய்யத் தயாராக இருக்கின்றோம் என பற்றுதியுடன் கூறிக் கொள்கிறோம்.

ஆ) வடக்கு கிழக்கில் வாழும் சிங்கள பிரஜைகள் யாவரும் அரசியலமைப்பில் உள்ள உரிமைகள் யாவற்றினையும் வடக்கு கிழக்கில் அனுபவிக்கும் உரித்துடையவர்கள் ஆவர். மேலும் வடக்கு கிழக்கு மாநிலத்தால் மேலதிகமாக வழங்கப்படும் மனித உரிமைப் பாதுகாப்பு அவர்களுக்கும் உரித்துடயதாக இருக்கும்.

இ) அதேவேளையில் தமது வாழ்விடங்களில் அவர்களது ஒன்றுபட்ட அக்கறையை பாதுகாப்பதற்கான அமைப்புமுறைசார் உரிமைகளுக்கான வழிமுறைகளை நோக்கிய மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்கான எமது அர்ப்பணிப்பை நாம் வெளிப்படுத்துகின்றோம்.

இது தொடர்பில் மலையக அரசியல் கட்சிகளுடனும் சிவில் சமூகங்களுடனும் வேலை செய்வதற்கு நாம் முழுமையாக எம்மை அர்ப்பணிக்கின்றோம்.

மத்திய மட்டத்திலான பகிரப்பட்ட ஆட்சி

6. இரண்டாவது அவை

6.1 செனட் என்று அழைக்கப்பட வேண்டிய இரண்டாவது அவையில் அனைத்து மாநிலங்களும் சமமான பிரதிநிதித்துவத்தை கொண்டிருக்கும். ஒவ்வொரு மாநில சட்டவாக்க சபைகளும் விகிதாசார வாக்கு அடிப்படையில் தலா 9 உறுப்பினர்களை செனட் அவைக்கு தெரிவு செய்யும்.

6.2 ஒவ்வொரு சட்டமூலமும் ஜனாதிபதியினால் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பாக கீழவை மற்றும் செனட் அவை ஆகிய இரண்டு சபைகளினாலும் நிறைவேற்றப்பட வேண்டும். ஏதேனும் சட்டமூலமானது செனட் அவையினால் நிராகரிக்கப்படும் பட்சத்தில் அது சட்டமாக ஆக்கப்பட முடியாது.

6.3 ஒரு சட்டமூலமானது தமது மாநிலத்தின் நலன்களுக்கு குறிப்பாக குந்தகமாக அமைவதாக வடக்கு - கிழக்கு மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கருதுமிடத்து குறித்த சட்டமூலமானது அதன் இரண்டாவது வாசிப்புக்காக விடப்படலாகாது.

ஒரு சட்டமூலமானது வடக்கு கிழக்கு மாநிலத்தின் நலன்களுக்கு குறிப்பாக குந்தகமாக அமைகின்றதா என்பது தொடர்பான விடயமானது பிணக்கிற்குட்படுத்தப்படும் போது, அது தொடர்பிலான விவாதமொன்றைத் தொடர்ந்து அவைத்தலைவர் குறித்த விடயம் தொடர்பில் முடிவெடுக்க முடியும்.

அவைத்தலைவரின் குறித்த தீர்மானமானது அரசியலமைப்பு நீதிமன்றினால் மீளாய்வுக்குட்படுத்தப்பட முடியும்.

7. மாநில ஆளுநர்

7.1 முதலமைச்சரின் ஆலோசனையின்மீது ஆளுநரானவர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட வேண்டும்.

7.2 ஆளுநரின் பதவியானது அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்ட சந்தர்ப்பம் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் சம்பிரதாயபூர்வமானதாகும்.

7.3 மாநில சட்டவாக்க சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெறும் உறுப்பினரை முதலமைச்சராக ஆளுநர் நியமிக்க வேண்டும். முதலமைச்சர் மாநில அமைச்சர்களை நியமிக்க வேண்டும்.

8. மத்தியினதும் மாநிலத்தினதும் அதிகாரங்கள்

8.1. அரசாங்க அதிகாரங்கள் மத்திக்கும் மாநிலத்திற்கும் இடையே பகிரப்படும்.

8.2. சமஷ்டி நிரல் என அழைக்கப்படும் நிரல் மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை கொண்டமையும்.

8.3. சமஷ்டி நிரலில் இல்லாத அனைத்து அதிகாரங்களும், மாநில நிரலில் நிரல்படுத்தப்பட்டுள்ள அதிகாரங்கள் உள்ளடங்கலாக, மாநிலத்தின் அதிகாரங்கள் ஆகும்.

8.4. மத்தியும் மாநிலமும் தத்தமது அதிகார தத்துவங்களில் மீயுயர்வானவை.

குறிப்பு:

கீழே காணப்படும் மாநில நிரல் வடக்கு கிழக்கிற்கு இருக்க வேண்டிய அதிகாரங்கள் எவை என்ற பார்வையில் முன் வைக்கப்படுகின்றது. பல்கூறு சமஷ்டி ஏற்பாட்டிற்கு நாம் எதிரானவர்கள் அல்ல என்றாலும் எல்லா மாநிலங்களுக்கும் ஒரே அளவான அதிகாரங்கள் இருக்க வேண்டுமா (சமச்சீரான சமஷ்டி) என்பது தொடர்பில் நாம் இங்கு கருத்துக்கூறவில்லை.

வடக்கு கிழக்கு மாநிலத்தைப் போலல்லாது இலங்கையின் வேறெந்தப் பாகமும் சுயாட்சியைக் கோரவில்லை. மேலும் நாங்கள் இலங்கையின் மற்றைய மாநிலங்கள் குறைந்த அதிகாரங்களை வைத்திருப்பது போலல்லாது வடக்குக் கிழக்கு மாநிலமானது சமச்சீரற்ற அதிகூடிய அதிகாரங்களை அனுபவிப்பதை அங்கீகரிக்கின்றோம்.

மாநில நிரல்

1. காணி

2. சுகாதாரமும் சுதேச மருத்துவமும்

3. உயர்கல்வி, பல்கலைக்கழகங்கள் உள்ளடங்கலாக கல்வியும் கல்விச் சேவைகளும்

4. கமத்தொழிலும் கமநலசேவைகளும்

5. நீர்ப்பாசனம்

6. விலங்குவேளாண்மை

7. கண்டமேடு மற்றும்பொருளாதார வலயம் உள்ளிட்ட வரலாற்றுநீர்ப்பரப்புகள் மற்றும் ஆள்புலநீர்ப்பரப்புக்கள் உள்ளடங்கலான கரையோரவலயங்களுடன் தொடர்புபட்ட மீன்பிடித்தொழில், கனிப்பொருள்கள், சுரங்கங்கள் உள்ளடங்கலான பொருளாதார வளங்கள்.

8. மாநிலத்திற்குள்ளான வனங்கள், சரணாலயங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

9. கைத்தொழில்களும் கைத்தொழில் அபிவிருத்தியும்

10. எரிபொருள், மின்சாரம் மற்றும் மின்வலு வழங்கல்

11. சுரங்கங்களும் கனியவளங்களும் குவாரிகளும்

12. போக்குவரத்து

13. மாநில கணக்கெடுப்பும் புள்ளி விபரவியலும்

14. விமான நிலையங்களும் துறைமுகங்களும் இறங்குதுறைகளும்

15. ஆறுகளும் நீர்நிலைகளும்

16. வீதிகளும் பெருந்தெருக்களும்

17. வீடமைப்பும் நிர்மாணத்துறையும்

18. நகர திட்டமிடலும் அபிவிருத்தியும்

19. கிராமிய அபிவிருத்தி

20. உள்ளுராட்சிமன்றங்கள்

21. கூட்டுறவுகள்

22. மாநிலத்திற்குள்ளான உணவு விநியோகமும் பகிர்ந்தளிப்பும்

23. சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு

24. பொது ஆற்றுகைகள் உள்ளடங்கலாக கலாச்சாரச் செயற்பாடுகளை ஒழுங்கமைத்தல்,

25. தொலைக்காட்சி உள்ளடங்கலான ஒலிபரப்பும் ஊடகமும்

26. நிவாரணங்கள், புனர்வாழ்வு, புனர்நிர்மாணம்

27. சமூகப் பாதுகாப்பு

28. காவல்துறையும் சட்டமும் ஒழுங்கும். (மீன்பிடி உரித்துகளையும் மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கும் கரையோர வளங்களை பாதுகாக்கும் பொருட்டும் காவல்துறை ஒரு கரையோரப் பாதுகாப்பு பிரிவொன்றை ஸ்தாபிக்கமுடியும்)

29. சீர்திருத்தும் நிலையங்கள் மற்றும் சிறுவர் நன்னடத்தை நிறுவனங்களின் நிர்வாகம்

30. மாநில பொதுச்சேவைகள்

31. விளையாட்டுத்துறை

32. மாநிலத்திற்குள்ளான கூட்டிணைக்கப்படாத சங்கங்களையும் மன்றங்களையும் ஒழுங்குபடுத்தல்

33. மாநிலத்தின் கடன்

34. உள்நாட்டு மற்றும் சர்வதேச கடன் மற்றும் உதவி பெறுதல் (சர்வதேச கடன் பெறுதலின் போது குறித்த வரையறையை மீறும் பட்சத்தில் மத்தியின் ஒருங்கியைவு தேவைப்படும்)

35. மாநிலத்துக்கான வெளிநாட்டு நேரடி முதலீடு, சர்வதேச நன்கொடைகள், அபிவிருத்திக்கான உதவிகளை ஒழுங்குபடுத்தலும் ஊக்குவித்தலும்.

36. மாநில நிதி மற்றும் கடன் நிறுவனங்கள்

37. மதுவரி தீர்வைகள்

38. பிராந்தியத்தின் மொத்த மற்றும் சில்லறை விற்பனைகள் மீதான விற்பனைப் புரள்வுவரிகள் பெறுமதி சேர்க்கப்பட்ட வரிகள்.

39. தேசிய லொத்தர்கள் தவிர்ந்த பந்தய வரிகளும், பரிசுப்போட்டிகளும், லொத்தர்களும் மீதானவரிகள்.

40. மோட்டார் வாகன உரிமம் மற்றும் கட்டணங்கள்.

41. மோட்டார் வாகன மற்றும் ஆதன விற்பனைகள் மீதான முத்திரைக் கட்டணம்.

42. நீதிமன்றங்களினால் அறவிடப்படும் தண்டப்பணங்கள்

43. நீதிமன்றங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் மீதானமுத்திரைக் கட்டணம் உள்ளடங்கலாக நீதிமன்ற கட்டணங்கள்.

44. இறைவரியினை மதிப்பிடுதல், அறவிடுதல் உள்ளடங்கலான காணி வரி அறவீடு மற்றும் வரி அறவிடும்; நோக்கங்களுக்காக காணி பதிவேடுகளை பேணுதலும்.

45. கனிப்பொருள் உரிமைகள் மீதானவரிகள்.

46. மாநில கணக்காய்வு

47. மாநில நிரலில் குறித்துரைக்கப்பட்டவிடயங்கள் தொடர்பில் சட்டங்களை ஆக்குதல்.

48. மாநில நிரலில் குறித்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலான தண்டப்பணம்

49. மாநில மட்டத்திலான திட்டமிடல்

50. மாநிலத்துக்கான சட்ட சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள்

51. தொல்பொருள் மற்றும் பாரம்பரிய அமைவிடங்கள், நூதனசாலைகள், சுவடிகள்

52. மாநிலத்துக்குள்ளான நிர்வாகம்

53. மாநிலத்துக்குள்ளான நீதிநிர்வாகம்

54. மாநில திரட்டுநிதியம்.

மத்திய நிரல்

1. பாதுகாப்பு, மத்திய பந்தோபஸ்து மற்றும் ஆயுதப்படைகள்.

2. மத்திய புலனாய்வுத் திணைக்களம் சமஷ்டி நிரலுக்குட்பட்ட எல்லா விடயங்கள் தொடர்பிலான காவல்துறை அதிகாரங்கள்.

3. குடிவரவு, குடியகல்வு

4. வெளி விவகாரங்கள்

5. தேசிய குடிசன மதிப்பும் புள்ளி விபரமும்

6. நாணயமும் வெளிநாட்டு நாணய மாற்றும், சர்வதேச பொருளாதாரத் தொடர்புகள் நாணயக் கொள்கை.

7. மத்திய அரசுக்கான பொதுக்கடன்கள்

8. மத்திய அரசுக்கான வெளிநாட்டுக் கடன்கள்

9. வங்கி மற்றும் நிதியில் நிறுவனங்களின் ஒழுங்குபடுத்தல்கள்.

10. காப்புறுதி

11. பங்குப் பரிவர்த்தனையும் எதிர்காலச் சந்தை வாய்ப்பும்

12. மத்திய அரசின் கணக்காய்வு

13. தனியாட்களினதும் கம்பனிகளினதும் கூட்டுத்தாபனங்களினதும் வருமானம் மூலதனம் செல்வம் என்பவற்றின் மீதானவரிகள்.

14. மாநில வரிகள் தவிர்ந்த மத்திய அரசுக்கான மொத்த விற்பனை வரவு வரிகளும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரிகளும்

15. இறக்குமதி ஏற்றுமதி தீர்வைகள் உள்ளிட்ட சுங்கத் தீர்வைகள்

16. மத்திய அரசினால் அல்லது மத்திய திரட்டு நிதியினால் செலுத்தப்படக் கூடிய ஓய்வூதியம்

17. அணுசக்தி

18. தேசிய மின் உற்பத்தி பராமரிப்பும் முகாமைத்துவமும்

19. சர்வதேச போக்குவரத்து மத்திய அரசின் போக்குவரத்து மற்றும் மத்திய அரசின் புகையிரதப் போக்குவரத்தும்

20. விமானப் போக்குவரத்து

21. மத்திய அரசின் அதிவேக நெடுஞ்சாலைகள்

22. கடலோர வலயம் தொடர்பிலான கடலோரப் பாதுகாப்பு வரலாற்று நீர்ப்பரப்புகள், ஆட்புல நீர்ப்பரப்புகள் உள்ளடங்கலாக பொருளாதார வலயங்கள் கண்ட மேடுகள் உள்ளடங்கலாக, சர்வதேச கப்பற் தொழிலும்; கப்பல் போக்குவரத்தும்

23. மத்திய அரசுக்கான தேர்தல்கள்

24. தபால் மற்றும் தொலைத்தொடர்புகள்

25. மத்திய அரசின் பொதுச்சேவைகள் மற்றும் மத்திய அரசின் பொதுச்சேவைகள் ஆணைக்குழு

26. மருந்துகள், நஞ்சுகள் மற்றும் போதைவஸ்துகள்

27. நீதி நிர்வாகம்

28. மத்திய அரசுக்கான கைத்தொழில் ஆராய்ச்சியும் பயிற்சியும்

29. தரநிர்ணயம் மேம்பாடு சம்பந்தமான ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள்

30. ஆக்கவுரிமைகள், புத்தகக்காட்சிகள், வடிவமைப்புகள், பதிப்புரிமை, புலமைத்துவ வியாபாரக் குறிகள், வணிகக் குறிகள்.

31. ஏகபோகவுரிமை இணைப்புகள்

32. மத்திய தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு

33. மத்திய தொல்பொருள்கள் மற்றும் நூதனசாலைகள்

34. மத்திய விளையாட்டுத்துறையின் நிர்வாகம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி

35. இயற்கை அழிவு, பேரிடர் ஏற்படும் சந்தர்ப்பங்களில் தலையீடு செய்தல்

36. தொழில் தரம் மற்றும் ஒழுங்குபடுத்தல்கள்

37. பிரஜாவுரிமை

9. காணி

9.1 காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் 'அரச காணி' என வரையறுக்கப்பட்டவை மாநிலங்களிற்கு உரித்தாகும்.

9.2 மத்திய நிரலின் கீழான விடயங்கள் தொடர்பில் நியாயமாக தேவைப்படும் காணிகள் தவிர தற்போது மத்தியின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகள் அனைத்தும் மாநிலங்களுக்கு உரித்தாகும்.

இது தொடர்பில் பிணக்கு ஏதும் இருப்பின் அப்பிணக்கானது மத்தியஸ்தத்திற்கு விடப்பட்டு இறுதியாக அரசியலமைப்பு நீதிமன்றினால் தீர்க்கப்படலாம்.

9.3 தற்போது மத்திய நிரலில் இல்லாத விடயம் ஒன்று தொடர்பான அரச காணி மத்தியின் கட்டுப்பாட்டில் இருப்பின் அது மாநிலத்தைச் சேரும்.

9.4 மத்தியின் கட்டுப்பாட்டில் அல்லது ஆட்சியில் உள்ள தனியார் காணிகள் அனைத்தினதும் உடமை அவற்றின் சட்டபூர்வ உரித்தாளரிற்கு கையளிக்கப்படல் வேண்டும்.

9.5 காணி கைமாற்றம், காணி அபிவிருத்தி, காணிச் சீர்திருத்தம், காணி பயன்பாடு, காணி விற்பனை, உள்ளடங்கலாக காணி தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு மாநிலங்களிற்கு பூரண உரித்து உண்டு.

9.6 நடைமுறையில் இருக்கும் சட்டங்கள், ஒழுங்கு விதிகள் அல்லது சுற்று நிருபங்கள் போன்றவை மாநிலத்திற்கு உரித்தாகிய காணி அதிகாரங்கள் தொடர்பில் முரணாக இருக்குமிடத்து அவை வலிதற்றவையாகும்.

9.7 மாநிலத்தினுள் உள்ள காணி ஒன்றை மத்திய நிரலில் உள்ள விடயம் ஒன்றிற்கு பயன்படுத்த மத்தி விரும்புமிடத்து, அதனை மத்திய அரசாங்கம் மாநிலத்திடம் கோரலாம். இது தொடர்பில் பிணக்கு ஏதும் இருப்பின் அப்பிணக்கானது மத்தியஸ்தத்திற்கு விடப்பட்டு இறுதியாக அரசியலமைப்பு நீதிமன்றினால் தீர்க்கப்படலாம்.

9.8 மத்திய நிரலில் உள்ள விடயம் ஒன்றிற்கு மாநிலத்தினால் காணி ஏதாவது வழங்கப்பட்டிருக்குமிடத்து மத்திய அரசாங்கம் அத்தேவைக்கு மாத்திரமே அதனைப் பயன்படுத்தலாம்.

10. உள்ளூராட்சி மன்றங்கள்

10.1 உள்ளூராட்சி சபைகளின் கட்டமைப்பு, அதிகாரங்கள், அமைவு போன்றவை தொடர்பில் மாநிலம் சட்டங்களை இயற்றும்.

10.2 அவ்வுள்ளூராட்சி சபைகள் குறிக்கப்பட்ட மாநிலத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்பதுடன் அச்சபைகள் சட்டத்தின் பிரகாரம் ஒதுக்கப்பட்ட விடயங்களை செயற்படுதுவதுடன் அவ்விடயங்கள் தொடர்பில் குறிப்பிட்ட மாநிலத்தின் முகவராகவும் தொழிற்படும்.

10.3 உள்ளூராட்சி சபைகள் உட்பட நிர்வாக அலகுகளின் எல்லை நிர்ணயம் தொடர்பில் மாநிலங்கள் அதிகாரமுடையதாக இருக்கும்.

11. பொலிஸ், சட்டம் மற்றும் ஒழுங்கு

11.1 பொது ஒழுங்கு உள்ளிட்ட சட்டம் மற்றும் ஒழுங்கும் பொலிஸ் அதிகாரங்களும் மாநிலங்களின் அதிகாரங்களாக இருக்க வேண்டும். ஆயினும் கொழும்புத் தலைநகரப் பிராந்தியத்துக்கும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே உள்ளிட்ட அதன் சுற்றுப்புறங்களுக்குமாக மத்திக்கும் ஒதுக்கப்படலாம்.

11.2 ஒவ்வொரு மாநிலத்திலும் பொலிஸ் படையொன்று இருக்க வேண்டும் என்பதுடன் அது மாநிலத்துக்குள் பொது ஒழுங்கைப் பேணுவதற்கும்; அத்தகைய குற்றங்களைத் தடுத்தல், கண்டுபடித்தல் புலன்விசாரணை செய்தல் மற்றும் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் வழக்குரைத்தல் போன்ற செயற்பாடுகளுக்கும் பொறுப்பாக இருத்தல் வேண்டும்.

11.3 பொலிசுக்குள் கரையோரப் பாதுகாப்பு பிரிவொன்று உருவாக்கப்படுவதுடன் குறித்த பிரிவானது மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மீன்பிடி உரிமைகளை உறுதிப்படுத்தவும் கரையோர வளங்களைப் பாதுகாக்கவும் வேண்டும்.

11.4 மத்திய அரசுக்கான நிரலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல், கண்டுபிடித்தல் புலன்விசாரணை செய்தல் மற்றும்; வழக்குரைத்தல் போன்ற செயற்பாடுகளுக்கும் சர்வதேச குற்றங்கள் மற்றும் தலைநகரப் பிராந்தியத்தில் இடம்பெறும் குற்றங்கள் போன்றவற்றுக்கு பொறுப்பாக மத்திய புலனாய்வுத் திணைக்களமொன்று உருவாக்கப்படுதல் வேண்டும்.

11.5 ஒவ்வொரு மாநிலத்திலும் பொலிஸ் ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படுவதுடன் மத்திய அளவில் மத்திய பொலிஸ் ஆணைக்குழுவொன்றும் உருவாக்கப்படல் வேண்டும்.

11.6 மத்திய பொலிஸ் ஆணைக்குழுவிற்கான அங்கத்தவர்கள் அரசியலமைப்புச் சபையினால் நியமிக்கப்பட வேண்டும். மாநில பொலிஸ் ஆணைக்குழுவிற்கான அங்கத்தவர்கள் மாநில நல்லாட்சிச் சபையினால் நியமிக்கப்பட வேண்டும்.

11.7 மாநில அரசுக்குள்ளாக ஒரு கடுமையான நிலை ஏற்படுகின்ற போது இராணுவத்தை நிலைநிறுத்த வேண்டி, குறித்த மாநில அரசின் முதலமைச்சர் மத்திய அரசின் ஜனாதிபதியின் தலையீட்டைக் கோரலாம்.

இரண்டு வாரங்களுக்கிடையில் மாநில சட்டவாக்க சபை குறித்த முடிவினை பலப்படுத்தாது விட்டால் முதலமைச்சரின் வேண்டுகோள் காலாவதியாகிவிடும்.

12. வெளியுறவுக் கொள்கை

12.1 வெளியுறவுக் கொள்கை மத்திய நிரலுக்குரிய விடயமாக இருக்கும். எப்படி இருப்பினும் மாநில நிரலுக்குரிய விடயம் ஒன்று வெளியுறவுக் கொள்கைத் தீர்மானத்திற்குரிய விடயமாக உள்ளபோது, மாநில அரசின் அத்தியாவசிய நலன்கள் மற்றும் அதிகாரங்கள் தொடர்பிலான குறித்த விடயம் பற்றி வெளியுறவுக் கொள்கைத் தீர்மானங்கள் எடுக்கப்படும் போது மாநில அரசு அதில் பங்கெடுக்கும்.

மாநில அரசுகளின் அதிகாரங்கள் பற்றியதாக ஒரு விடயம் உள்ளபோது, மாநில அரசின் பங்களிப்பு காத்திரமானதாக இருத்தல் வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மாநில அரசுகள் பொருத்தமான வகையில் சர்வதேச இணக்கப்பாடுகளில் பங்கெடுக்கும்.

12.2 வடகிழக்கு மாநில அரசு தனது பொருளாதார, கல்வி, கலாச்சார நலன்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசுக்குரிய தூதுவராலயங்கள் உயர் ஸ்தானிகராலயங்களில் தனக்கான ஒரு அலகினை ஏற்படுத்திக் கொள்வதற்கான உரித்தினைக் கொண்டிருக்கும்.

13. பொதுச் சேவை

13.1 பிரதம செயலாளர், முதலமைச்சரின் செயலாளர், அமைச்சர்களின் செயலாளர்கள் ஆகியோர் முதலமைச்சரினால் மாநில அமைச்சரவையின் ஆலோசனையுடன் நியமனம் செய்யப்படுவர்.

13.2 மாநிலத்தின் அதிகாரத்திற்குட்பட்ட விடயங்களை மேற்கொள்வதற்கு மாநில பொதுச் சேவைகள் ஒன்று ஏற்படுத்தப்படும்.

13.3 அரசியலமைப்பின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பொதுச் சேவைகள் ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்படும். ஒவ்வொரு மாநில பொதுச் சேவைகளிற்கான ஆட்சேர்ப்பு, நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு, பதவி விலக்கல், ஒழுக்காற்று கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு இவ்வாணைக்குழு பொறுப்பாக இருக்கும்.

மாநில பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மாநில நல்லாட்சிக்கான அவையின் பரிந்துரையின் மீது முதலமைச்சரினால் நியமிக்கப்படுவர்.

13.4 மாநிலத்திற்குட்பட்ட கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோரின் நியமனங்கள், இடமாற்றம், மற்றும் ஒழுக்காற்றுக் கட்டுப்பாடுகள் என்பவற்றை மாநில பொதுச் சேவைகள் ஆணைக்குழு கொண்டிருக்கும்.

மேற் குறித்த உத்தியோகத்தர்கள் பிரதம செயலாளர் அல்லது மாநில அரசாங்கத்தின் ஊடாக மத்திய அரசினால் ஒதுக்கப்பட்ட பல்வேறுபட்ட செயற்பாடுகளையும் மேற்கொள்வர்.

13.5 மத்திய பொதுச் சேவைகள் ஆணைகுழு மத்திய அரசாங்கத்தின் செயற்பரப்பினுளடங்கும் மத்திய நிரலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்தும்.

13.6 மத்திய பொதுச் சேவைகளிற்கான ஆட்சேர்ப்பு, நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு, பதவி விலக்கல், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றிற்கு மத்திய பொதுச் சேவைகள் ஆணைக்குழு பொறுப்பாக இருக்கும்.

மத்திய பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையின் மீது பிரதம மந்திரியால் நியமிக்கப்படுவர்.

14. ஆட்சேர்ப்புக் கொள்கை

14.1 மத்திய பொதுச் சேவைகளுக்கும் பாதுகாப்பு படைக்குமான ஆட்சேர்ப்பானது முழு நாட்டினதும் இன விகிதாசாரத்தினைப் பிரதிபலித்தல் வேண்டும்.

14.2 மாநில பொதுச் சேவைகளுக்கும் காவல்துறைக்குமான ஆட்சேர்ப்பானது அப்பிராந்திய இன விகிதாசாரத்தினைப் பிரதிபலித்தல் வேண்டும்.

15. கல்வி

15.1 கல்வி என்னும் விடயமானது மாநிலங்களுக்கு பாரப்படுத்தப்படல் வேண்டும். இது ஆரம்ப, இடைநிலை மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளடங்கலான மேல்நிலைக் கல்வி ஆகியவற்றையும் தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில் சார் கல்வி போன்றவற்றை வழங்கும் நிறுவகங்களையும் உள்ளடக்கியிருத்தல் வேண்டும்.

15.2 ஏதேனும் பாடசாலை, பல்கலைக்கழகம் அல்லது வேறு ஏதேனும் மேல்நிலைக் கல்வி நிறுவகம் என்பனவற்றை ஆரம்பிப்பதோ அல்லது கொண்டு நடாத்துவதோ மாநிலங்களின் விடயப்பரப்புக்குள் அமைந்திருத்தல் வேண்டும்.

15.3 கல்வி நிறுவகங்களில் ஆளணியினரை வேலைக்கமர்த்தல் மற்றும் அவர்கள் மீதான ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு போன்றவை மாநில கல்விச் சேவைகள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரப்படுதல் வேண்டும்.

16. அரசிறை சமஷ்டி

16.1 மாநிலங்கள்; தமது அதிகாரங்களை சுயாதீனமாக பிரயோகிக்ககூடியதாக இருப்பதை அரசிறை ஏற்பாடுகள்; உறுதிப்படுத்த வேண்டும்.

16.2 அரசிறை சமநிலைப்படுத்துகை மற்றும் சமாந்திர சமத்துவம் ஆகியவற்றை அமுல்ப்படுத்துவதற்கான வழிமுறைகள் முன்னெடுக்கப்படும் போது வடக்குக் கிழக்கில் போரினால் ஏற்பட்ட தாக்கம் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.

16.3 அரசிறை உறவுகள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் மத்திய அரசாங்கத்திற்கு பிணிக்கும் தன்மை வாய்ந்த சிபாரிசுகளை மேற்கொள்ளும் அதிகாரங்களைக் கொண்ட மத்திய நிதி ஆணைக்குழு உருவாக்கப்படல் வேண்டும்.

16.4 வடக்குக் கிழக்கு மாநிலமானது சர்வதேசத்திடமிருந்து நேரடியாக கடன் மற்றும் உதவி பெறுவதற்கான அதிகாரங்களைக் கொண்டிருத்தல் வேண்டும் என்பதுடன் வடக்கு கிழக்கின் கடன் சுமையானது மத்திய அரசாங்கத்தின் பொறுப்புடைமையாக இல்லாத வேளையில் மத்திய அரசாங்கத்தில் தலையீடு இன்றி சர்வதேச உதவிகளை நேரடியாகப் பெறுவதற்கான உரிமையையும் கொண்டிருத்தல் வேண்டும்.

கடன்பெறுதலானது மத்திக்கு தாக்கம் ஒன்றை ஏற்படுத்தும் தருணத்தில் மாநிலமானது மத்திய அரசாங்கத்துடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.மத்தி - மாநிலத்திற்கிடையிலான பிணக்குகளைத் தீர்த்தல்

17. அரசியலமைப்பு நீதிமன்றம்

17.1 அரசியலமைப்பு தொடர்பான சகல விடயங்கள் சம்பந்தமாக தீர்ப்பு வழங்குவதற்கான முழுமையான நியாயதிக்கத்தை கொண்டதாக அரசியலைப்பு நீதிமன்றமொன்றானது இருக்க வேண்டும் என்பதுடன் அடிப்படை உரிமைகள் மற்றும் எழுத்தாணை நியாயாதிக்கம் தொடர்பான இறுதி மேன்முறையீட்டு நீதிமன்றமாகவும் அது அமைந்திருக்க வேண்டும்.

17.2 மத்திய பாரளுமன்றம் மற்றும் மாநில சட்டவாக்க மன்றங்களினால் ஆக்கப்படும் சட்டவாக்கங்களை நீதிமுறை மீளாய்வு செய்கின்ற நீதிமன்றமாகவும் அரசியலமைப்பு நீதிமன்றம் அமைந்திருக்க வேண்டும்.

17.3 அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு மேற்கொள்ளப்படும் நியமனங்களானவை இலங்கையின் பன்மைத்துவ தேசியத் தன்மையை பிரதிபலிப்பதாக அமைந்திருத்தல் வேண்டும்.

17.4 பிரதமர் மற்றும் மாநிலங்களின் முதலமைச்சர்களைக் கொண்ட அமையமானது (Colloquium) புலமைவாய்ந்த சட்டவாளர்களிலிருந்து 9 உறுப்பினர்களை அரசியமைப்பு நீதிமன்றத்துக்கு நியமனஞ் செய்ய வேண்டும்.

முதலமைச்சர்களும் பிரதமரும் முறையே மாநில நல்லாட்சி பேரவையினதும் அரசியலமைப்புச் சபையினதும் ஆலாசனைகளின் பேரில் செயற்பட வேண்டும்.

17.5 வடக்கு-கிழக்கு மாநில முதலமைச்சரானவர் சமஷ்டி ஏற்பாடுகளின் சமச்சீரற்ற தன்மையின் அடிப்படையில் அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு 3 உறுப்பினர்களை நியமித்தல் உரித்துடையவராதல் வேண்டும்.

வடக்கு-கிழக்கு மாநிலம் தொடர்பான வழக்கொன்றின் தீர்ப்பில் வடக்கு கிழக்கு மாநில முதலமைச்சரால் பிரேரிக்கப்பட்ட 3 நீதிபதிகளில் குறைந்தது 2 பேராவது ஒத்துப் போயிருத்தல் வேண்டும்.

17.6 பாராளுமன்றம் அல்லது மாநில சட்டசபையினால் சட்டம் ஒன்று ஆக்கப்படும் போது அதன் அரசியலமைப்புக்கமைவாந்தன்மை பற்றி எவரேனும் ஒரு பிரஜை அரசியலமைப்பு நீதிமன்றில் வழக்கிடலாம்.

18. நீதித்துறை

18.1 ஒவ்வொரு மாநில அரசுக்கும் ஒரு மேன்முறையீட்டு நீதிமன்றம் இருக்க வேண்டும். முதனிலை நீதிமன்றங்கள், மேல் நீதிமன்றங்கள், நியாய மன்றங்கள் மற்றும் நீதி நிறுவனங்கள் கையாண்ட வழக்குகள், வழக்குரைப்புகள் மற்றும் விடயங்கள் தொடர்பில் மேன்முறையீடு, மீளாய்வு மற்றும் முன்னிலை மீட்பு செய்வதற்கான நீதிமன்றாகவும் முதனிலை நீதிமன்றங்கள், மேல் நீதிமன்றங்கள், நியாய மன்றங்கள் மற்றும் நீதி நிறுவனங்கள் விடுகின்ற சட்ட மற்றும் நிகழ்வுப் பிழைகளை சீர் செய்கின்ற மேன்முறையீட்டு நியாயாதிக்கத்தை கொண்ட நீதிமன்றாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் செயற்படும்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் எழுத்தாணை நியாயாதிக்கம் தொடர்பில் மாநிலத்துக்குள் முதனிலை நீதிமன்றாகவும் செயற்படும்.

18.2 பாராளுமன்றமும் மாநில சட்டவாக்க சபையும் சட்டத்தால் அளிக்கப்படுகின்ற தத்துவங்கள் தொடர்பில் முதனிலை மற்றும் மேன்முறையீட்டு அதிகாரங்களை பிரயோகிக்கின்ற நீதிமன்றமாக மேன்முறையீட்டு நீதிமன்றம் விளங்கும்.

18.3 மத்திக்கான நீதித்துறை உயர் நீதிமன்றத்தை மாத்திரம் கொண்டதாகவும் அது மேன்முறையீட்டுக்கான ,றுதி நீதிமன்றமாகவும் விளங்கும்.

18.4 மாநிலத்துக்கான மாநில முதலமைச்சருடன் கலந்துரையாடி நல்லாட்சிக்கான மாநில அவையினால் நியமிக்கப்படும் மாநில நீதிச்சேவை ஆணைக்குழு தன்னகத்தே மேன்றையீட்டு நீதிமன்றத் தலைவரோடு மேன்முறையீட்டு நீதிமன்றின் அடுத்த ,ரண்டு சிரேஷ்ட நீதிபதிகளைக் கொண்டிருக்கும்.

18.5 மாநிலத்தக்கான ஏனைய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளையும் அதன் கீழ்நிலை நீதிமன்ற நீதிபதிகளையும் நியமிக்கின்ற பொறுப்பினை மாநில நீதிச்சேவை ஆணைக்குழுவானது கொண்டிருக்கும். நீதிபதிகளுடைய ,டமாற்றம் தொடர்பில் மாநில நீதிச்சேவை ஆணைக்குழுவானது மத்திய நீதிச்சேவை ஆணைக்குழுவோடு கலந்துரையாடல் செய்யும்.

19. நல்லாட்சிக்கான மாநில சபை

19.1 முக்கியமான அரசாங்க பதவிகள், அரசாங்க அமைப்புக்களிற்கான நியமனங்கள் சுயாதீனமாக இருப்பதை உறுதிப்படுத்த நல்லாட்சிக்கான மாநில சபை ஒன்று இருத்தல் வேண்டும்.

19.2 அமைவு : முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர்,மாநில சபையின் முதல்வர், முதலமைச்சராலும், எதிர்கட்சித் தலைவராலும் கூட்டாக நியமிக்கப்படும் திறமை வாய்ந்த துறை சார் நிபுணர்கள் எட்டுப் பேரும் கொண்டதாக அமையும். மேற்கூறிய எட்டு சிவில் அமைப்பைச் சார்ந்தவர்களில் ஆகக் குறைந்தது மூன்று பெண்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும்.

19.3 சபையின் பொறுப்பானது :மாநில நீதிச் சேவை ஆணைக்குழு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், பொது சேவைகள் ஆணைக்குழு, பொலிஸ் சேவைகள் ஆணைக்குழு,மாநில மன்றாடியார்,மாநில பொலிஸ் ஆணையாளர்,மாநில மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவற்றிற்கு உறுப்பினர்களை நியமித்தல்.

20. மாநில சட்டமா அதிபதி

20.1 நல்லாட்சிக்கான மாநில சபையினால் பரிந்துரைக்கப்படும் ஒருவர் முதலமைச்சரினால் மாநில சட்டமா அதிபதியாக நியமிக்கப்படுவார். அவர் மாநில சட்ட சபையினால் நிறைவேற்றப்படும் சட்டங்கள் அரசியலமைப்பிற்கு அமைவான தன்மை பற்றிய ஆலோசனைகளை முதலமைச்சருக்கு வழங்குவார்.

20.2 பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் சட்டங்கள் எதுவும் அரசியலமைப்புக்கு முரணானதாகக் கருதுமிடத்து மாநில சட்டமா அதிபதி முதலமைச்சருடனான கலந்தாலோசனையின் பின்னர் அரசியலமைப்பு

21. அவசர கால அதிகாரங்கள்.

21.1 மாநில அரசாங்கம் ஒன்று சமஷ்டியில் இருந்து பிரிவதற்கான மாநில நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது என்றும் அவ்வாறான பிரிவு உடனடியானதொன்று என மத்தியின் தலைவர் திருப்திப்படுமிடத்து,

அவர் அவசரகால நிலையினைப் பிரகடனப்படுத்தலாம். அவ்வாறு பிரகடனப்படுத்துமிடத்து ஆளுநர் நிறைவேற்று அதிகாரங்களையும் மற்றும் முதலமைச்சரினதும் மாநில அமைச்சரவையினதும் அதிகாரங்களையும் அந் நிலமைகளுக்கு ஏற்றவாறு, கையகப்படுத்தலாம்.

21.2 அவசரகால நிலைப் பிரகடனமெதுவும் அரசியலமைப்பு நீதிமன்றத்தினால் தன்னியக்கமாகவே பிரகடன தினத்தில் இருந்து ஒரு மாத காலத்தினுள் மீளாய்விற்கு உட்படுத்தப்படல் வேண்டும்.

அரசியலமைப்பு நீதிமன்றம் அவசரகால நிலைப் பிரகடனம் சரியானது எனக் தீர்மானிக்குமிடத்து மத்திய அரசின் தலைவர் மாநில சட்ட சபையைக் கலைத்து அவசரகால நிலைப் பிரகடனத் தினத்தில் இருந்து ஆறு மாத காலப்பகுதியினுள் தேர்தலை நடாத்துதல் வேண்டும்.

அவசரகால நிலைப் பிரகடனம் நியாயப்படுத்த முடியாது என அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்மானிக்குமாயின் அவசர கால நிலை உடனடியாக அதன் சட்ட அந்தஸ்தையும் வலுவையும் இழந்து விடும்.

21.3 மேலே கூறியவாறு அவசரகால நிலை வலுவிழந்ததும், முதலமைச்சரும் மாநில அமைச்சரவையும் தொடர்ந்து பதவியில் இருப்பதோடு அவர்கள் இடைக்காலப் பகுதியில் நடைபெற்ற எந்த செயல், செயற்பாடுகளுக்கும் கட்டுப்பட மாட்டார்கள்

22. மத்தி-மாநிலங்கள், மாநிலங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு

22.1 மாநிலங்களுக்கு இடையேயும் மாநிலங்களுக்கும் மத்திக்கும் இடையேயும் ஏற்படும் பிணக்குகளை கலந்தாலோசித்து சுமூகமான தீர்வு காண்பதற்கு விசேட சபைகளும் ஏற்பாடுகளும் செய்யப்படல் வேண்டும்.

22.2 பிணக்குகளைத் தீர்ப்பதற்கான வெளி ஒன்றை உருவாக்கும் நோக்கில் மத்திய அரசினால் முதலமைச்சர்களின் நிரந்தர மாநாடு ஒன்று கூட்டப்படல் வேண்டும்.

22.3 கல்வி, போக்குவரத்து போன்ற விடயங்களிற்கு தேவை ஏற்படும் இடத்து விசேட சபைகள் உருவாக்கப்படலாம்.

23. அரசியலமைப்புத் திருத்தங்கள்

23.1 மாநில த்தின் புவிசார் ஆள்புலம், மாநிலத்தின் அதிகாரம் மற்றும் பிராந்தியம் தொடர்பான அனைத்து விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றம் அரசியல் அமைப்பில் மாற்றம் எதனையும் முன்மொழியுமிடத்து அத்திருத்தங்கள் பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளிலும் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன் அனைத்துப் மாநிலங்களினதும் சட்டவாக்க சபைகளிலும் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படவும் வேண்டும்.

மேலே விபரிக்கப்பட்டவாறு மத்தியில் ஏதாவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு அத்திருத்தம் ஏதாவது ஒரு மாநிலத்தில் அல்லது மாநிலங்களில் நிறைவேற்றப்படாது விடின் அம் மாநிலத்திற்கு அல்லது மாநிலங்களுக்கு ஏற்புடையதாகாது.

23.2 ஏனைய அரசியலமைப்புத் திருத்தங்கள் பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படின் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்..

24. வடகிழக்குப் மாநில ஆட்சி நடைமுறைக்கான சில முன் மொழிவுகள்.


மேலே குறிப்பிடப்பட்டது போல் தங்கள் மாநிலங்களில் ஆட்சியினைக் கொண்டு நடாத்துவதற்கு அந்தந்த மாநிலங்கள் ஏற்பாடுகளைச் செய்தல் வேண்டும்.

1. சட்டவாக்க சபையிலும், மாநில அமைச்சரவையிலும் ஆகக் குறைந்தது 1/3 பங்கு ஆசனம் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

2. முதலமைச்சர் தவிர்ந்த ஆகக் கூடுதலாக 14 அமைச்சர்களைக் கொண்ட மாநில அமைச்சரவை. உப அமைச்சர் அல்லது அது போன்ற அமைச்சர்கள் இடம் பெற மாட்டார்.

3. ஐக்கிய நாடுகள் சபையால் தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களுக்கு என வகுக்கப்பட்ட நியமங்களுக்கு அமைவாக உருவாக்கப்பட்ட மாநில மனித உரிமைகள் ஆணைக்குழுவால் கண்காணிக்கப்படுவதுமாகியதும் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வலுவாக்கக் கூடியதுமான பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளை உள்ளடக்கிய மாநில மனித உரிமைகள் பட்டயம் ஒன்று ஏற்படுத்தப்படும்.

4. மக்களின் ஆலோசனைகளுடன் சாதி பாகுபாட்டை இல்லாதொழிப்பதை வலியுறுத்தும் நடவடிக்கைகள் மாநிலத்தின் வழிகாட்டும் கோட்பாடுகள் ஆவணத்தில் உள்ளடக்கப்படல் வேண்டும்.

5. ஊழலுக்கெதிரான இந்திய செயற்பாட்டாளர்களால் முன் வைக்கப்பட்ட இந்திய ஜன் லோக்பல் சட்டமூலத்தை மாதிரியாகக் கொண்ட சுயாதீன பிரஜைகள் குறைகேள் அதிகாரி நியமிக்கப்படுவார்.

6. நிலையான அபிவிருத்தியையும் பசுமை வளர்ச்சியையும் உறுதிப்படுத்தக்கூடிய அதிகாரங்களை உடைய சுயாதீன பிராந்திய சுற்றுப் புறச்சூழல் அதிகாரசபை ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு தமிழ் மக்கள் பேரவை முன்வைத்துள்ள புதிய அரசியல் அமைப்பு வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

ஐ.எஸ்.-ல் இணைய கைக்குழந்தையுடன் சிரியா சென்ற பிரிட்டிஷ் பெண் குற்றவாளியாக அறிவிப்பு.

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைய கைக்குழந்தையுடன் சிரியா சென்ற பிரிட்டிஷ் பெண் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவருக்கான தண்டனை விவரம் திங்களன்று வெளியிடப்படுகிறது.

பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரைச் சேர்ந்தவர் தரீனா ஷகீல் (26). கணவரை பிரிந்து வாழும் அவருக்கு 2 வயதில் மகன் உள்ளார். கடந்த 2014 அக்டோபரில் துருக்கிக்கு சுற்றுலா செல்வதாக கைக்குழந்தையுடன் தரீனா ஷகீல் புறப்பட்டார். அங்கிருந்து சிரியா எல்லையில் உள்ள காஸியன்டப் நகருக்கு சென்றார்.

அவரையும் அவரது குழந்தையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவின் ராக்கா நகருக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள விடுதியில் தரீனா தங்க வைக்கப்பட்டார். சுமார் 30 பெண்கள் அந்த விடுதியில் இருந்தனர். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு மனைவிகளக மாற அவர்களுக்கு மூளைச் சலவை செய்யப்பட்டது.

அந்த காலகட்டத்தில் ஏ.கே. 47 துப்பாக்கியுடன் தரீனாவும் அவரது குழந்தையும் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. ஐ.எஸ். தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் கொடூரமாக இருந்ததால் அங்கிருந்து தப்பி 2015 ஜனவரியில் அவர் பிரிட்டனுக்கு திரும்பினார். அவரை போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.

அவர் மீதான வழக்கு பர்மிங்ஹாம் நீதிமன்றத்தில் சில மாதங்களாக நடைபெற்று வந்தது. அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

ஐ.எஸ். அமைப்பில் இணைய சிரியாவுக்கு சென்றது நான் செய்த மிகப்பெரிய தவறு. ட்விட்டரில் என்னை தொடர்பு கொண்ட ஐ.எஸ். தீவிரவாதி, நான் லண்டனில் வாழ்ந்தால் சொர்க்கத்துக்கு செல்ல மாட்டேன் என்றும் சிரியாவில் ஜிகாத் போரில் இணையுமாறும் அறிவுறுத்தினார்.

அதை நம்பி சிரியாவுக்கு சென்றேன். அங்கு சென்ற பிறகுதான் விபரீதம் புரிந்தது. ஒரு டாக்ஸி டிரைவருக்கு அதிக பணம் கொடுத்து துருக்கி எல்லைக்குள் நுழைந்து அங்கிருந்து பிரிட்டனுக்கு வந்து சேர்ந்தேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பில், தரீனா 3 மாதங்கள் சிரியாவில் தங்கியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணையவே கைக்குழந்தையுடன் அவர் சிரியா சென்றிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை குற்றவாளியாக தீர்ப்பளிக்கிறேன். அவருக்கான தண்டனை விவரம் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

பிரிட்டனைச் சேர்ந்த சுமார் 56 பேர் ஐ.எஸ். அமைப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்களின் நடமாட்டம் குறித்து அந்த நாட்டு உளவு அமைப்பு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.







Read more...

Saturday, January 30, 2016

கோத்தபாய, சிங்க ரத்தம் அமைப்பின் முடிக்குரிய இளவரசர் – உபுல் ஜோசப் பெர்னாண்டோ வின் அதிர்ச்சி தகவல்

தேசிய தலைமைத்துவத்திற்கு கோத்தபாய ராஜபக்‌ஷவைக் கொண்டு வருவதற்கான ஆபத்தான வேலைத் திட்டமொன்று தற்போது சிங்க ரத்தம் அமைப்பால் மேற்கொள்ளப்படுகிறது.

மிக விரைவில் கோத்தபாய, சிங்க ரத்தம் அமைப்பின் முடிக்குரிய இளவரசனாக மாறுவார் என சிலோன் ருடே இதழில் உபுல் ஜோசப் பெர்னாண்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தலதா மாளிகைக்கு எதிராக அண்மையில் சிங்க லே அமைப்பால் வழிபாட்டு நிகழ்வொன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இந்த வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் ஏந்திய தேசியக் கொடியில் நாட்டின் சிறுபான்மை இனத்தவரைக் குறிக்கும் குறியீடுகள் மறைக்கப்பட்டிருந்தன என ஊடகங்கள் அறிக்கை வெளியிட்டன.

இதற்கு முன்னர், தேசியக் கொடியில் சிறுபான்மை இனத்தவர்களின் அடையாளங்களை மறைத்த சம்பவமொன்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்‌ஷ, ஊழல் மோசடி ஆணைக்குழுவின் முன்னால் நிறுத்தப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நிகழ்ந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறுபான்மை இனத்தவர்களைப் புறக்கணிக்கும் வகையில் தாம் ஏந்திய தேசியக் கொடிகளில் அவர்களது அடையாளங்களை மறைத்தனர்.

இது சிங்க ரத்தம் அமைப்பின் கொடி என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்றது.

உருமாற்றப்பட்ட தேசியக் கொடியைத் தமது கைகளில் ஏந்தியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் முன்னால் கோத்தபாய உரை நிகழ்த்தியிருந்தார். உருமாற்றப்பட்ட தேசியக் கொடி விவகாரம் தொடர்பாக கறுவாத்தோட்டம் காவற்துறையினர் கொழும்பு பிரதம நீதவானிடம் முறையிட்டனர்.

குறித்த சர்ச்சைக்குரிய தேசியக் கொடி தொடர்பான காணொளியை சமர்ப்பிக்குமாறு பிரதம நீதவான் காவற்துறையிடம் உத்தரவிட்டார்.

சர்ச்சைக்குரிய தேசியக் கொடியை எதிர்த்து பொதுமக்கள் கிளர்ந்தெழுந்த போதிலும் அரசாங்கம் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது.

உருமாற்றப்பட்ட தேசியக் கொடியை தயாரித்தமை மற்றும் இவ்வாறான கொடியை ஏந்தியமை போன்ற குற்றங்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது.

சர்ச்சைக்குரிய தேசியக் கொடி தொடர்பாக கறுவாத்தோட்டம் காவற்துறையினரால் பிரதம நீதிவானிடம் முன்வைக்கப்பட்ட முறைப்பாடும் இன்னமும் விசாரணை செய்யப்படவில்லை.

உருமாற்றப்பட்ட தேசியக் கொடி மீண்டும் தற்போது சிங்க ரத்தம் அமைப்பால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சிறுபான்மை இனங்களின் அடையாளங்கள் நீக்கப்பட்ட தேசியக்கொடி மீண்டும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டுள்ளதானது கடந்த ஏப்ரலில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமை தெளிவாகிறது.

ஆகவே, கோத்தபாயவுக்கும் சிங்க ரத்தம் அமைப்பிற்கும் இடையில் தொடர்பு காணப்படுகின்றமை இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தில், கோத்தபாய மற்றும் பொதுபலசேனா அமைப்பிற்கும் இடையிலான தொடர்பானது உறுதிப்படுத்தப்பட்டது.

பொதுபல சேனாவால் ஒழுங்குபடுத்தப்பட்டு அதன் தலைவராக இருந்த புத்த பிக்கு ஒருவரின் தலைமையில் இடம்பெற்ற பிரதான நிகழ்வொன்றிற்கு கோத்தபாய ராஜபக்‌ஷ பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டமையானது கோத்தாவுக்கும் பொதுபல சேனவுக்கும் இடையில் எவ்வாறானதொரு தொடர்பு காணப்பட்டது என்பதற்கு போதியளவு சான்று பகர்கிறது.

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்‌ஷ, பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறினார்.

இவர் பொதுபல சேனாவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக களுத்துறையில் இடம்பெற்ற சமூக மோதல்களில் ஈடுபட்ட பொதுபல சேனாவைப் பாதுகாத்தார்.

மஹிந்தவின் கூட்டணியான ஹெல உறுமயவிற்கு பௌத்த சிங்கள சமூகத்திற்கு மத்தியில் காணப்பட்ட ஆதரவு குறைந்துள்ளதாகவும், இதனால் பொதுபல சேனாவிற்கு ஆதரவளித்து அதன் மூலம் பௌத்த சிங்களவர்களின் ஆதரவைத் தனதாக்கிக் கொள்ளலாம் எனவும் கோத்தபாய கருதினார்.

அந்த வேளையில், பௌத்த சிங்களவர்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாக கோத்தபாய புகழாரம் பாடினார்.

இவரது இந்தப் புகழாரமே மஹிந்த அரசாங்கத்திடமிருந்து ஹெல உறுமய விலகிக் கொள்ளத் தீர்மானித்ததற்கான காரணமாகும்.

2015 ஜனாதிபதி தேர்தலில் பௌத்த சிங்களவர்களின் பலத்தை மஹிந்தவிற்கு ஆதரவாகப் பயன்படுத்த முடியும் என கோத்தபாய திட்டமிட்ட போதிலும், மைத்திரியின் எதிரணியானது கோத்தாவின் கனவைச் சிதைத்தது.

கோத்தபாய தனது இலக்கை இன்னமும் கைவிடவில்லை என்பதற்கு சிங்க ரத்தம் அமைப்பின் எழுச்சி சான்றாக அமைகிறது.

மஹிந்தவிற்குப் பின்னர் சிறிலங்காவின் தலைவராகத் தான் வரவேண்டும் என்பதற்கான ஒரு அடித்தளமாக கோத்தபாயவால் பொதுபல சேனா வளர்க்கப்பட்டது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உடைத்து புதியதொரு அரசியற் கட்சியை உருவாக்க வேண்டும் என்பதில் கோத்தபாய உறுதியாக நிற்கிறார்.

ஆனால் கோத்தபாயவின் நிலைப்பாட்டிற்கு மஹிந்த ஆதரவளிக்கவில்லை.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாகத் தான் ஒரு பலமான அரசியல்வாதியாக உருவாகுவது மிகவும் கடினமானது என்பது கோத்தபாயவுக்கு நன்கு தெரியும்.

அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் புதிய கட்சியில் போட்டியிடுவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்த சார்பு அணியின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு கோத்தபாய திட்டமிடலாம்.

தற்போதைய அரசியல் யாப்பின் பிரகாரம், மகிந்த மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.

கோத்தபாய போன்றவர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது.

இவர் மைத்திரி மற்றும் ரணிலுடன் தனித்தனியாக மிகவும் இரகசியமான முறையில் தொடர்பைப் பேணிவருகிறார்.

இவ்விரு தலைவர்களும் கோத்தபாயவைக் கைதுசெய்வதற்கான அனுமதியை வழங்கமாட்டார்கள்.

தனது கைதைத் தடுக்கும் முகமாக உச்சநீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவைக் கையளித்த முதலாவது நபர் கோத்தபாய ஆவார்.

இது தொடர்பாக முதலில் ரணில் விசாரணை செய்த போதிலும், பின்னர் கோத்தாவைக் கைது செய்வது தொடர்பாக ரணில் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வென்றெடுத்த போர்க் கதாநாயகனான கோத்தபாயவைக் கைதுசெய்வதற்கு ஒருபோதும் தான் அனுமதியளியேன் என நீதி அமைச்சரான விஜயதாச ராஜபக்‌ஷ நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்.

கோத்தபாயவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பாரியதொரு சர்ச்சையாக அவன்கார்ட் ஆயுத விவகாரம் அமைந்துள்ளது.

கோத்தபாய பாதுகாப்புச் செயலராகக் கடமையாற்றியபோது மேலதிக பாதுகாப்புச் செயலராகப் பதவி வகித்த தமயந்தி ஜெயரட்னவிடம் அவன்கார்ட் ஆயுத விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய முற்பட்ட போதிலும் அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.

ஊழல் மோசடி ஆணைக்குழுவானது இவரைக் கைது செய்ய முற்பட்ட தருணத்தில் அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.

அவன்கார்ட் உடன்பாடானது கோத்தபாயவின் கட்டளையில் கீழேயே தமயந்தியால் நிறைவேற்றப்பட்டது.

கோத்தபாயவைப் பாதுகாப்பதற்கு அரசாங்கத்தால் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை மேற்கூறிய விடயங்கள் தெளிவுபடுத்துகின்றன.

தேசிய தலைமைத்துவத்திற்கு கோத்தபாயவைக் கொண்டு வருவதற்கான பாரியதொரு ஆபத்தான நிகழ்ச்சி நிரல் தற்போது சிங்க ரத்தம் அமைப்பால் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த அமைப்பால் 2015 ஏப்ரலில் உருமாற்றப்பட்ட தேசியக் கொடி ஏந்தப்பட்டதை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

தற்போது இது ஒரு அரசியல் அமைப்பாக மாறியுள்ளது. மிக விரைவில் கோத்தபாய, சிங்க லே அமைப்பின் முடிக்குரிய இளவரசராக மாறுவார்.

Read more...

இலங்கைக்கு எதிராக யுத்த குற்றச்சாட்டுக்கள் இல்லை. ஜனாதிபதி.

புலிகள் பயங்கரவாதிகள் அவா்கள் யுத்தம் தொடர்பான சட்டதிட்டங்களை கடைப்பிடிக்கவில்லை! ஜனாதிபதி குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை என்றும் மனித உரிமைகள் மீறப்பட்டமை குறித்தே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

அல்​ஜஸீரா தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள நேர்காணலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைக் கூறியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை நிறைவேற்றுவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.

எனினும் எமது நாட்டின் சுயாதீனத் தன்மைக்கு அமைவாகவே அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இதற்காக விஷேடமாக வௌிநாடுகளில் இருந்து தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும், என்றாலும் வௌிநாட்டு நபர்களை இந்நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கான தேவை இருக்காது.

எமது நாட்டில் பக்கச்சார்பற்று சுயாதீனமாக செயற்படும் நீதிமன்றம் இருக்கின்றது. அதேபோல் பக்கச்சார்பற்று செயற்படும் வேறு நிறுவனங்களும் இருக்கின்றன.

எங்களுக்கு தேவையாக இருப்பது நாட்டுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டில் இருந்து விடுபடுவதே.

ஆகவே அந்த விசாரணை நடவடிக்கைகளை தௌிவாகவும் சுயாதீனமானதாகவும் நியாயமான முறையிலும் முன்னெடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

நாம் நீதிமன்றத்தை சுயாதீனப்படுத்தியுள்ளோம். அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் சுதந்திரமாக செயற்படும் நிலமையயை ஏற்படுத்தியுள்ளோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

அத்துடன் தான் ஒருபோதும் திருடர்களையும் மோசடிக்காரர்களையும் பாதுகாக்க கூடியவன் அல்ல என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மேலும் யுத்தத்தின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக விடுதலைப் புலிகள் ஒருபோதும் செயற்படவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவம் சர்வதேச சட்டங்கள் மற்றும் இலங்கையின் சட்டங்களுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன் போது தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை இராணுவம் இந்த நியமங்களை மதித்து அனைத்து சந்தர்ப்பங்களிலும் நேர்மையாக செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இராணுவத்தினரைச் சேர்ந்த எவரேனும் ஒருவர் இந்த நடவடிக்கைகளை மீறி தவறிழைக்கப்பட்டிருந்தால், அது தொடர்பில் விசாரணைப் பொறிமுறைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தவறிழைத்தமை கண்டறியப்படுமாயின், அதனுடன் தொடர்புடையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தாம் இதற்கு முன்னரும் தெளிவாக கூறியிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்

Read more...

யோசித உட்பட ராஜபக்ச குடும்பத்தினருக்கு நெருக்கமான ஐவருக்கு 14 நாள் விளக்கமறியல் உத்தரவு!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்ற நீதிபதி தம்மிக்க ஹேமபால உத்தரவிட்டுள்ளார்.

யோஷித ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக ஒருங்கிணைப்பாளர் ரொஹான் வெலிவிட்ட, சிஎஸ்என் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி நிஷாந்த ரணதுங்க உள்ளிட்ட ஐவரை இன்று பிற்பகல் நிதிமோசடிப் பிரிவினரர், நிதிமோசடி குற்றச்சாட்டில் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்தபோதே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கைது செய்யப்பட்டனர்.

சிஎஸ்என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடிகள் குறித்து இன்று காலை கடற்படைத் தலைமையகத்தில் வைத்து யோசித்த ராஜபச்சவிடம் விசாரணையை மேற்கொண்ட நிதி குற்ற விசாரணைப்பிரிவினர் அவரை செய்து செய்தனர்.

அதேநேரம் குறித்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உட்பட முக்கியஸ்தர்கள் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு வரவழைக்கப்பட்;டு விசாணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக ஒருங்கிணைப்பாளர் ரொஹான் வெலிவிட்டவும் அடங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் கடுவல நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது மகிந்த ராஜபக்ச , சிராந்தி ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச , நாமல் ராஜபச்ச என பலர் நீதிமன்ற வாசலில் கூடி நின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.













Read more...

அடுத்த சட்டமா அதிபர் யார் உப்புலா? ஜயந்தவா?

அரசாங்கத்தின் அடுத்த சட்டமா அதிபர் யார் என்பது தற்போதைய பேச்சுப் பொருளாகியுள்ளது. அதற்காக சிரேஷ்ட தரத்தில் இருப்பவர்கள் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் கடமை நேர சட்டமா அதிபர் சுகந்த கம்லத் ஆகியோரே. எனினும் சுகந்த கம்லத்திற்கு எதிரான பிரதான குற்றச்சாட்டு, அவர் ராஜபக்‌ஷ குடும்பத்தின் விஷேடமாக பஷில் ராஜபக்‌ஷவின் நெருங்கிய நண்பர்.

அத்துடன் அவருடைய சகோதரரான சன்தீப்த கம்லத், முகாமைத்து பணிப்பாளராக பதவி வகிக்கும் குருநாகல் பொபய்கனே ஜிபி நிறுவனம் அமைந்துள்ள பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற பாரிய சுற்றுச்சூழல் பாதிப்புக்கு எதிராக சுகந்த கம்லத் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச் சூழல் நிறுவனங்கள் குற்றம் சுமத்துகின்றன.

சுகந்த கம்லத் சட்ட மா அதிபராக நியமிப்பதற்கு எதிராக பாரிய எதிர்ப்புக்களை தற்போது வௌியிட்டுக் கொண்டிருப்பவர் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்னவே. அவரை சட்ட மா அதிபராக நியமிப்பதற்கு பரிந்துரை செய்துள்ளவர் முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் தலைவராக இருக்கும் முன்னாள் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் உபுல் ஜயசூரிய. உபுல் ஜயசூரிய மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் நீண்ட காலமாக காணப்படுகின்ற விரிசல் நிலை காரணமாக அந்தப் பதவிக்கு அவரை நியமிப்பதில் பாரி இடையூறுகள் மேற்கொள்ளப்படுவதாக சட்ட துறையினரின் கருத்து.

இதன் காரணமாக 19வது அரசியலமைப்பு சீர்திருத்ததத்தின் படி அமைக்கப்பட்ட அரசியலமைப்பு சபைக்காக பெயர் ஒன்றை முன்வைக்க முடியாமல் ஜனாதிபதி பெரும் சங்கடத்துக்கு முகங்கொடுத்துள்ளார். எனினும் அரசியலமைப்பு சபை பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்டது, சட்ட மா அதிபர் திணைக்களத்தில் அடுத்ததாக உள்ள சிரேஷ்ட அதிகாரியின் பெயரே.

இந்த விடயத்தை நன்றாக தெரிந்தும் அமைச்சர் ராஜித சேனாரட்ன அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கூறியிருப்பதாவது, "சட்டமா அதிபர் பதிவிக்காக வௌியில் இருந்து ஒருவர் நியமிக்கப்படுவார்" என்று. அதனை நியாயப்படுத்துவதற்காக அமைச்சர் கூறியிருக்கின்றார், சட்ட மா அதிபர் திணைக்களம் மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தில் இருந்ததை விடவும் மிக மோசமாக மாறி இருக்கின்றது என்று. இது சட்ட மா அதிபர் திணைக்களத்தை மோசமாக குறிப்பிடுவதாகும்.

நிலைமை இவ்வாறு இருக்க, சட்ட மா அதிபர் திணைக்களத்தில் சுகந்த கம்லத்தை விடவும் கணிஷ்ட, பணி அடிப்படையில் மூன்றாம் தரத்தையும் தாண்டும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜயன்த ஜயசூரியவை இதற்காக நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு அரசாங்கத்துடன் நெருங்கிய சட்டத்தரணிகள் சிலர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

எனினும் ஜயன்த ஜயசூரியவின் ஆசை சட்ட மா அதிபர் பதவியையும் விட உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெறுவது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் இந்த மூவருள் ஒருவர் அடுத்த வாரத்திற்குள் சட்ட மா அதிபராக பதவியேற்கவுள்ளனர்.

Read more...

பட்டதாரிகளுக்கு 10,000.00 ரூபாய் ஊதியம் கொடுத்து மாகானத்திற்கு வெளியில் அனுப்பினால் எதிர்காலத்தில் பட்டதாரிகள் உருவாகுவது கேள்விக்குறியாக மாறும். ஷிப்லி பாறூக்


2016ம் ஆண்டிற்கான முதலாவது கிழக்குமாகாண சபை கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை (26.01.2016) அன்று திருகோணமலை பேரவைச் செயலகத்தில் சபை தவிசாளர் கௌரவ சந்திரதாச கலபதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த அமர்வில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் குறைந்த ஊதியத்துடன் வெளி மாகாணங்களில் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பான விஷேட பிரேரணை ஒன்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் முன்வைக்கப்பட்டது.

இவ் அமவர்வில் உரையாற்றிய அவர் கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த பட்டதாரிகளுக்கான பயிற்சி நியமனத்தைப் பெற்றிருக்கின்ற அநேகமான பட்டதாரிகள் ரூபா 10,000.00 ஊதியத்துடன் மாகாணத்துக்கு வெளியே நியமிக்கப்பட்டுள்ளார்கள். இது இப்பட்டதாரிகளை பாரிய அசௌகரியங்களுக்கும் கஷ்டத்துக்கும் உள்ளாக்கியுள்ளது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் என்ற வகையில் அவர்களை உடனடியாக மாகாணத்துக்குள் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இச்சபையில் முன்மொழிந்தார்.

இலங்கையில் பல தசாப்தங்களாக எமது மாணவச் செல்வங்கள் இலவசமாக கல்வியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இலங்கை அரசாங்கம் பல்கலைக்கழகங்கள் வரையும் இலவசக் கல்வியினை வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் பன்னிரெண்டு ஆண்டுகள் பாடசாலைகளிலும் அதனைத் தொடர்ந்து 3,4,5 வருடங்கள் அவர்களுடைய பட்டப்படிப்புகளை பல்கலைக்கழகங்களிலும் முடித்துவிட்டு, மேலும் இரண்டு மூன்று வருடங்கள் தாமதத்தின் பின்பு அவர்கள் வேலைவாய்ப்பினைப் பெறுகின்றபோது பத்தாயிரம் ரூபாவினைக் கொடுத்து மாகாணத்துக்கு வெளியில் அதுவும் தூரப்பிரதேசங்களுக்கு அவர்களை அனுப்புகின்ற இந்தச்செயலானது எதிர்வரும் காலங்களில் பட்டப்படிப்பினை மேற்கொள்வது ஒரு கேள்விக்குறியானதொரு விடயமாக மாறும் என்பது என்னால் உறுதியாகச்சொல்ல முடியும். ஏனென்றால் தற்போது வளர்ந்து வருகின்ற இளம் சமூகம் வேகமாக பொருளாதாரத்திலும் வாழ்க்கையிலும் முன்னுக்கு வரவேண்டுமென்று நினைத்துக்கொண்டு பல கற்பனைகளுக்கு மத்தியில் தங்களுடைய கல்விகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆண் பிள்ளைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் தாங்கள் பொருளாதாரத்தினை ஈட்டி வாழ்க்கையினை வளப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று விரும்புகின்ற இந்தக்காலகட்டத்தில் இவ்வாறான தூர இடங்களுக்குப் பட்டதாரிகளை அதுவும் பத்தாயிரம் ரூபா ஊதியத்தினைக் கொடுத்து அவர்களை பயிலுனர்களாக ஒரு வருடத்துக்கு அமர்த்துவதென்பது நிச்சயமாக அவர்கள் மீது ஒரு பாரிய சுமையைச்சுமத்துகின்ற ஒரு விடயமாக நான் பார்க்கின்றேன். அந்த வகையில் கிழக்கு மாகாணத்திலிருந்து ஏறக்குறைய 500க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கொழும்பு, கண்டி என்று பல்வேறு இடங்களில் மாகாணத்திற்கு வெளியில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். வளர்ந்து கொண்டிருக்கும் இந்த கல்விச் சமூகத்தில் அதிகமானவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர், பல்கலைக் கழகங்களில் 60 வீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உயர் கல்வி கற்கின்றனர்.

பெண்களை தூர இடங்களுக்கு நியமித்து அனுப்புகின்ற பொழுது அவர்களால் தொடர்ச்சியாக வேலைசெய்ய முடியாது போகின்றது. எங்களுக்கு பல அனுபவங்கள் இருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து திருகோணமலை மாவட்டத்திற்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுவருகின்றவர்கள் பெண்களாக இருந்தால் அவர்கள் 2 அல்லது 3 வருடங்களில் திருமணம்செய்து ஓரிரு வருடங்களில் கர்ப்பிணியாகின்றார்கள் அவ்வாறான சந்தர்ப்பங்களில் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு போக்குவரத்து செய்யமுடியாது போன்ற காரணங்களை முன்வைத்து தற்காலிக இடமாற்றம் செய்து அவர்களின் பிரதேசங்களில் கடமை புரிகின்றனர், இலங்கை சட்டத்தின் பிரகாரம், அவர்களது மகப்பேற்றுக்கு பின்னர் 81 வேலை நாட்கள் அவர்களுக்கு விடுமுறை கிடைக்கின்றது. சிசுவொன்றினை பெற்றெடுத்தபின்பு மீண்டும் ஏறத்தாள 9 மாதங்கள் விடுமுறை முடித்து மீண்டும் கடமைக்கு வருவதற்கு அவர்களுடைய சிசு தடையாக அமைகின்றது.

இவ்வாறு பட்டதாரிகளாக உருவாகின்ற பெண்களுடன் ஒப்பிடும்பொழுது அவர்களுக்கு சமமாக ஆண்களும் உருவாக வேண்டும் என்ற தேவைப்பாடு இருக்கின்றது. இந்த தேவைப்பாட்டை தடுத்து நிறுத்துவதற்குரிய முக்கிய காரணி ஒரு பிள்ளை சாதாரண தரம் கற்கின்றபொழுது தனியார் கல்வி நிறுவனங்கள் கருத்தரங்கு நடாத்துகின்ற போர்வையில் சாதாரண தரம் கற்றபின்பு 2, 21/2 வருடங்கள் உயர்கல்வி கற்கவேண்டும் அதன்பின் கிட்டத்தட்ட 1வருடம் காத்திருந்து பல்கலைகழகத்திற்கு தெரிவாகி 3 அல்லது 5 வருடங்கள் பல்கலைகழகங்களில் கழிக்கவேண்டும் ஆகமொத்தத்தில் 6,7 வருடங்கள் செலவு செய்து பட்டப்படிப்பின் பின் ஒரு தொழிலை பெறுவதாக இருந்தால் மீண்டும் 2,3 வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்று அவர்களை தவறாக வழிகாட்டுகின்ற தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இவ்வாறான செயற்பாடுகள் சாதகமாக அமைவதுடன் மாணவர்கள் கல்வியை இடைநடுவில் கைவிட முற்படுவார்கள். அதிகமான பிள்ளைகள் சாதாரண தரத்தில் நல்ல பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்து உயர்தர கல்வியினை தொடராமல் விட்டுவிட்டு தனியார் கல்வி நிறுவனங்களில் 06 மாத குறுகிய காலப்பயிற்சிநெறி ஏதேனுமொன்றை முடித்துக்கொண்டு வளைகுடா நாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்று செல்கின்றனர். இதற்கு காரணம் என்ன? அவர்கள் ஒப்பிட்டு பார்க்கின்றனர் 8,9 வருடங்கள் முடிந்த பிற்பாடு ரூபா 10,000.00; சம்பளத்திற்கு வேலை செய்வதா அல்லது 06 மாத குறுகிய கால பயிற்சிநெறி ஏதேனுமொன்றை முடித்துக்கொண்டு ரூபா 100,000.00 சம்பளம் பெறக்கூடிய அந்த வேலைவாய்ப்பினை பெறுவதா என்ற வினாவிற்கு விடைகானும் முகமாக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் உழைத்து வாழ வேண்டிய தேவைப்பாடும் கட்டாயமும் இம் மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு குடும்பத்தில் 2,3 பெண்பிள்ளைகள் இருப்பின் அக்குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளை மீது பாரிய சுமைகள் சுமத்தப்படுகின்றன ஏனெனில் தனது பெண்சகோதரிகளுக்குரிய கடமைகளை மேற்கொள்ளவேண்டும் வீடுகட்ட வேண்டும் என்ற கடமைகள் வரும்போது அவன் தனது கல்வியினை இடைநடுவே நிறுத்திவிட்டு தனது குடும்பத்திற்காக தனது கல்வியினை தியாகம் செய்துவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று கஷ்டப்படும் அந்த நிலைமையும், கல்வியிலே ஆண்பிள்ளைகள் இல்லாமல் போகின்றதோர் துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கிழக்குமாகாணத்தில் மட்டுமல்ல அகில இலங்கை முழுவதும் உள்ள ஆண்பிள்ளைகள் தமது கல்வியினை இடைநடுவே நிறுத்தி விட்டு வெளிநாடுகளிலும், இங்குள்ள சிறிய சிறிய கூலிவேலைகள் அல்லது அவர்களுடைய கல்வி தகைமைக்குப்பதிலாக அவர்கள் பொருளாதாரத்தினை ஈட்டுகின்ற வேறுசெயற்பாடுகளில் ஈடுபடுவதனூடாக எதிர்காலத்தில் கல்வியை இழந்த சமூகமாக இலங்கை மாறக்கூடிய துர்ப்பாக்கிய நிலைமை இருக்கின்றது, ஆகவே இந்த செயற்பாடானது நிச்சயமாக வடக்கிலே வழங்கப்பட்ட அனைத்து பட்டதாரி பயிலுனர் வேலைவாய்ப்புக்களும் வடமாகாணத்திற்குள்ளேயே வழங்கப்பட்டிருக்கின்றது ஏன் கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரம் இவ்வாறானதோர் அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என்ற விடயத்தினை உங்களிடம் கேட்கின்றேன். ஆகவே உடனடியாக முதலமைச்சரும், இங்குள்ள அமைச்சரவை வாரியமும் இதற்குரிய தீர்வொன்றை கண்டறிந்து, அவர்களின் கஷ்ட நிலைமையை கருத்திற்கொண்டு அவர்கள் பெப்ரவரி மாதம் 13ம் திகதிக்குமுன் பொறுப்புக்களை பாரமெடுக்குமுன் அவர்களை உடனடியாக மாகாணத்திற்குள் உள்வாங்கி அந்தந்த மாவட்டங்களில் நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தனது பிரேரணையை முன்வைத்து உரையாற்றினார்.










Read more...

Thursday, January 28, 2016

அமெரிக்க இராணுவத்திற்கு தளங்கள் மற்றும் துறைமுகங்களை திறந்துவிடுவது குறித்த பேச்சுவார்த்தையில் இந்தியா. By Wasantha Rupasinghe

இந்திய செய்தி ஊடக அறிக்கைகளின்படி, பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) அரசாங்கம் அமெரிக்காவுடன் இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாடு (LSA) பற்றிய பேச்சுவார்த்தைகளை தொடங்கிவிட்டது. இது இறுதியாக்கப்படுமாயின், இந்திய துறைமுகங்கள், இராணுவம் மற்றும் விமானப்படை தளங்களை எரிபொருள் நிரப்புதல், மற்றொருவிதத்தில் அமெரிக்கா அதன் இராணுவத் தளங்களை படிநிலைப்படுத்துதல், ஆயத்தங்களுக்கு வாய்ப்பளித்திடல் என்ற வகையில் அமெரிக்கா வாடிக்கையாக பயன்படுத்திட ஏதுவாக இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாடு அனுமதிக்கும்.

இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாட்டின் கீழ், இந்திய இராணுவத்திற்கும் அமெரிக்காவிற்கு ஒத்த உரிமைகள் இருப்பதாக அமெரிக்கா உத்தரவாதம் அளிக்கும். என்று கருதப்படுகிறது. எனினும், இது பெரும்பாலும் ஒரு உயிரற்ற எழுத்தாகவே இருக்கும், அமெரிக்கா ஒரு ஆசிய மற்றும் பூகோள இராணுவ சக்தியாக உள்ளபோது, இந்திய இராணுவத்தின் எல்லை என்பது துணைக்கண்டம் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிவரைக்குமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான ஒரு அதிகாரபூர்வ இராணுவ கூட்டணியை நோக்கி இந்தியாவின் ஒரு மிகப் பெரிய மாற்றம் இருக்கும் என்பதை இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாட்டின் மீதான தொடக்க பேச்சுவார்த்தைகள் குறிக்கின்றன. சீனாவை பொருளாதார மற்றும் இராஜதந்திர ரீதியில் தனிமைப்படுத்தி அதனை இராணுவ ரீதியாக சுற்றிவளைக்கும் விதமான வாஷிங்டனின் உந்துதலுக்கு காரணமான, "ஆசியாவில் முன்னிலை" என்ற அமெரிக்காவின் கொள்கையுடன் ஏற்கனவே இந்தியா மிகத் தீவிரமாக ஒத்துழைத்து வருகிறது. தற்போது இந்தியாவின் வடக்கு அண்டை நாடான சீனாவிற்கு மிக நெருக்கமான வரம்பிற்குள் அமெரிக்க விமானங்கள் மற்றும் கப்பல்களைக் கொண்டுவரும் வகையில், இந்திய வசதிகளைப் அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்க புது டெல்லி தயாராகிக்கொண்டிருக்கிறது.

ஜோர்ஜ் டபிள்யூ புஷ் நிர்வாகம் 2006ல் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்துடன் ஒரு மூலோபாய கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்பதால், இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாட்டில் கையெழுத்திட இந்தியாவை அமெரிக்கா வலியுறுத்திக்கொண்டே இருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாடு மீதான பேச்சுவார்த்தைகளை அமெரிக்காவுடன் நடத்திய போதும், இவ் உடன்பாடு இந்தியாவின் "மூலோபாய சுயாட்சி"க்கு ஆபத்து விளைவிக்கும் மற்றும் சீனாவை எரிச்சலூட்டும் போன்ற கவலைகளின் காரணமாக இறுதியில் கையெழுத்திடுவதில் இருந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி பின்வாங்கிற்று.

இந்திய வசதிகளை அமெரிக்க இராணுவம் பயன்படுத்திக்கொள்ள வெளிப்படையாக அனுமதிப்பது என்பது மிகுந்த உணர்திறன்கொண்ட மற்றும் சர்ச்சைக்குரிய பிரச்சினையாகும் என்ற காரணத்தினால், பா.ஜ.க. அரசாங்கம் இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாட்டினை ஊர்ஜிதப்படுத்துவது தொடர்பாக வாஷிங்டன் உடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பது பற்றி எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், செய்தி ஊடக அறிவிப்புகளை இந்திய அரசால் மறுக்கமுடியவில்லை. பெயர்குறிப்பிடப்படாத இந்திய பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரி ஒருவர் இப்பேரத்தில் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது மேற்கோள் செய்து காட்டப்பட்டுள்ளது, பாதுகாப்புத்துறை அமைச்சரின் டிசம்பர் 7 முதல் 10ம் தேதி வரையிலான அமெரிக்கப் பயணத்தின்போது இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது என டிசம்பர் 26ம் தேதிய சென்னை சார்ந்த ஹிந்து செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தியா அதன் இராணுவ வசதிகளை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்வதற்கு வெளிப்படையாக ஒப்புதல் அளிப்பதன் பிரம்மாண்டமான முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டும் ஒரு அறிக்கையில், புது டெல்லி அமெரிக்கா உடனான இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாடு மீதான ஒப்பந்தத்தை விரைவில் அடைத்துவிடுவதில் எந்தவொரு கடுமையான தடையையும் சந்திக்கவில்லை என்று இந்திய அதிகாரிகள் பார்ப்பதாக ஹிந்து செய்தி மேலும் கூறியது. "ஒரே ஒரு கவலை மட்டுமே உள்ளது" என்று அவர் பின்னர் அறிவித்தார். "போர் நிகழ்ந்தால் என்ன நடக்கும்?

அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு ஒருவேளை இந்தியா ஒத்துழைக்காமல் இருந்திருந்தால் இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாடு எப்படி பிரயோகிக்கப்படும் என்பதற்கான "விளக்கங்களை" இந்தியா அறிய முயல்வதாக அதிகாரி கூறினார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புத் தன்மை பற்றி ஒருவேளை அவர் நினைத்ததைவிட அதிகமாக இருக்கலாம் என்றார், "நட்பு நாடுகளுடன் போருக்கான ஆதரவை நீட்டிக்க" சட்டபூர்வமாக கடமைப்பட்டிருக்க புது டெல்லி விரும்பவில்லை எனவும் அந்த பெயர் குறிப்பிடப்படாத அதிகாரி தெரிவித்தார்.

போர் நிகழுமானால் LSA விதிமுறைகளில் எவ்வித இடைநீக்கம் அல்லது திருத்தம் செய்யப்படாமல் அப்படியே மாற்றம் இல்லாமல் இருந்தால் மட்டுமே இந்தியா எனவும் மொழி விதிகளை உட்படுத்துவதன் மூலம் ஒரு "சமரசம்" காண வழிகாணலாம் எனவும் ஆலோசனை கூறினார்.

இம்மாதிரியான மொழியை உட்சேர்ப்பது என்பது இந்தியா "மூலோபாய சுயாட்சி" எனும் பாசாங்கினை பேணிவரும் அதேவேளையில் சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் மூலோபாய தாக்குதல்களில் இந்தியா தன்னை இன்னும் முழுமையாக ஒருங்கிணைத்துக் கொள்ளும் வகையில் இந்தியாவின் கொள்கையை கடைபிடிக்கும் வழியில் உள்ளது.

இது அமெரிக்கா உடனான இராணுவ-பாதுகாப்பு கூட்டினை மேம்படுத்துதல் குறித்த உள்நாட்டு எதிர்ப்பினை எதிர்கொள்ள உதவும். இந்திய தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினரிடையே அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பரந்த விரோதப் போக்கு உள்ளது, அவர்கள் இதை போர் மற்றும் அடக்குமுறைகளுடன் சரியாக அடையாளம் கண்டு வைத்துள்ளனர். சீனா உடனான இந்தியாவின் உறவுகளில் ஏற்படும் தாக்கம் மற்றும் இந்தியாவை கடுமையாக மிரட்டுவது மற்றும் அச்சுறுத்துவது போன்ற நீண்டகால வரலாற்றை அமெரிக்கா கொண்டிருப்பது போன்ற இரண்டு காரணங்களினால் இந்திய அரசியல் மற்றும் இராணுவ ஸ்தாபகத்தின் பிரிவுகள் தங்களது சொந்தக் காரணங்களால் வாஷிங்டன் உடன் மிக நெருக்கமாக பிணைந்து செல்வதை எதிர்க்கின்றன.

அமெரிக்கா அதன் பங்கிற்கு, இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாட்டிற்கு இறுதி வடிவம் கொடுக்க ஆர்வமாக உள்ளது, மேலும் இந்திய இராணுவத்தினை அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் ஆயுத முறைகளை சார்ந்திருக்க செய்வது உட்பட பென்டகனுடன் எப்போதும் நெருங்கிய கூட்டை இந்திய இராணுவம் நிலையாகப் பெற்றுக்கொள்ளும் வகையிலான அமெரிக்காவின் நீண்டகால மூலோபாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக அமெரிக்கா இதனை பார்க்கிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு ஒரு பென்டகன் அதிகாரி அளித்த பேட்டியில், பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பது குறித்து வாஷிங்டன் மகிழ்ச்சியுற்று இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். "பாரிக்கர் இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாட்டில் கையெழுத்திட வெளிப்படையாக இணக்கத்தை காட்டியுள்ளார்", மேலும் இந்தியாவுடன் ஒரு முழு இராணுவக் கூட்டினை மேம்படுத்துவதில் அமெரிக்கா "அடித்தளமாக" கருதும் இரண்டு தொடர்புள்ள ஒப்பந்தங்கள் "பின்தொடரும்" என்று அமெரிக்கா "நம்பிக்கை" வைத்துள்ளதாக எக்ஸ்பிரஸ் செய்தியானது அந்த அதிகாரியின் வார்த்தைகளின் சாரம்சத்தை வடித்துள்ளது.

மற்ற இரண்டு "அடித்தளமான ஒப்பந்தங்கள்" ஆக தகவல் தொடர்புகளுடன் இணைந்து செயலாற்றுதல் மற்றும் பாதுகாப்பு உடன்படிக்கை குறித்த ஒப்பந்தம் (CISMOA) மற்றும் புவிசார் ஒத்துழைப்பிற்கேற்ற அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு உடன்பாட்டு ஒப்பந்தம் (BECA) போன்றவை உள்ளன. இவ்வொப்பந்தங்கள் அமெரிக்க இராணுவக் கூட்டுக்களின் நிலைத்த அங்கங்களாக உள்ளன. இவை "தகவல் தொடர்புகளுடன் இணைந்து செயலாற்றுதல்" மற்றும் "பாதுகாப்பு" போன்ற உள்-இராணுவ வசதிகளை ஏற்படுத்துவது மற்றும் மேம்படுத்துவதற்காக என்று கருதப்படுகிறது.

அதே பாதுகாப்பு அதிகாரி ஹிந்துவுக்கு பேட்டியளித்திருப்பதன்படி, அவை "இந்தியாவின் மறைகுறியாக்கப்பட்ட அமைப்புக்களில் அமெரிக்காவின் அணுகுதலை அனுமதிக்கும்", இந்த நிபந்தனை இந்திய ஆயுதப் படைகள் "உடன்பாடின்மைகள்" குரல் எழுப்பும் நிலைக்கு காரணமாக அமைந்துவிட்டது.

2006-2014 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்தின்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஏ.கே.ஆன்டனி, தகவல் தொடர்புகளுடன் இணைந்து செயலாற்றுதல் மற்றும் பாதுகாப்பு உடன்படிக்கை குறித்த ஒப்பந்தம் (CISMOA) மற்றும் புவிசார் ஒத்துழைப்பிற்கேற்ற அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு உடன்பாட்டு ஒப்பந்தம் (BECA), அத்துடன் இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாடு (LSA) போன்றவற்றை இறுதியில் எதிர்க்கத் தொடங்கினார், அதற்கு காரணம்

"இவ்வொப்பந்தங்களில் இடப்படும் கையெழுத்துக்கள், இந்திய இராணுவ நிறுவல்களில் அமெரிக்க இராணுவத்தின் வில்லங்கமில்லா அணுகுதலை அனுமதிக்கும் மற்றும் கூர் உணர்ச்சியுடைய தரவுகளில் சமரசத்தை ஏற்படுத்தும்" என அவர் நம்புவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்தது.

இவற்றிலிருந்து தனியாக, இந்திய-அமெரிக்க பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்முயற்சி (DTTI) யின் கீழ், பென்டகன் மற்றும் அமெரிக்க ஆயுத தயாரிப்பாளர்கள் உடனான இணை தயாரிப்பு மற்றும் இணை அபிவிருத்தி திட்டங்களில் நுழைய இந்தியாவை அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது.

இருப்பினும், அமெரிக்க அதிகாரிகள் அவர்களது இந்திய சமதரப்பினரிடம் CISMOA மற்றும் BECA வின் விதிமுறைகளை இந்தியா ஒத்துக்கொள்ளவில்லை என்றால், அது "ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்" உயர் தொழில்நுட்ப ஆயுத முறைகளின் இணை தயாரிப்பு மற்றும் இணை அபிவிருத்தி விரிவாக்கத்திற்கு ஒரு தடையாக இருக்கும் என்பது நிரூபணமாகும் எனத் தெரிவித்துள்ளனர்.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசின்கீழ், அமெரிக்காவின் ஒரு "பூகோள மூலோபாய கூட்டாளி" ஆக இந்தியா மாறியதுடன் பென்டகனின் கூட்டு பயிற்சிகளில் இந்திய இராணுவம் அடிக்கடி பங்காளியாக மாறியது, மேலும் இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத விநியோகஸ்தராக ரஷ்யாவிற்கு பதிலாக அமெரிக்கா இடம்பெயர்ந்தது.

பா.ஜ.க.வின் 20 மாதகால ஆட்சி, அமெரிக்காவின் மிக முக்கியமான இந்திய-பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உடனான இராணுவ-பாதுகாப்பு பிணைப்புக்களை உருவாக்குவது உட்பட, இந்தியாவை மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் வாஷிங்டன்னை நோக்கி சாய்த்துவிட்டது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் ஆண்டு குடியரசு தினவிழாக் கொண்டாட்டங்களில் மரியாதைக்குரிய விருந்தினராக பங்கேற்ற முதல் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா என ஆக்கினார். ஜனவரி 2015ல் ஒபாமாவின் டெல்லி வருகையின் முடிவின்போது, தென் சீனக் கடல் பகுதிகளில் அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகள் மற்றும் சீனாவிற்கு இடையேயான மோதல்கள் குறித்த அமெரிக்காவின் வரைவு உட்பட வாஷிங்டனின் மகிழ்ச்சிக்கு ஏற்ப "ஆசிய-பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் குறித்த அமெரிக்க-இந்திய கூட்டு மூலோபாய நோக்கு" பற்றி அவரும் மோடியும் அறிவித்தனர்.

செப்டம்பர் மாதத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அவரின் அமெரிக்க சமதரப்பினரான ஜோன் கெர்ரியும், ஐ.நா.வின் அமைதிகாக்கும் இயக்கங்களில் பங்கேற்க வந்திருக்கும் ஆபிரிக்க துருப்புக்களுக்கு "பயிற்சி மீது கவனம்" என்பதுடன் "அமைதிகாக்கும் திறன்வளர்ப்பு"க்கு அமெரிக்க மற்றும் இந்திய இராணுவங்கள் ஒத்துழைக்கும் என அறிவித்தனர். பேரழிவு நிவாரணங்கள் வழங்குவதில் இந்திய மற்றும் அமெரிக்க இராணுவங்களுக்கு இடையே தற்காலிக ஒத்துழைப்பு கடந்தகாலத்தில் இருந்தபோதும், ஒரு வெளிநாட்டு இராணுவ நடவடிக்கையில் முதல் முறையாக அவர்கள் இணையவிருப்பதாகவும், ஏகாதிபத்திய ஆதரவுபெற்ற ஐ.நா. அமைதிகாக்கும் இயக்கங்களில் இணைந்து பணியாற்றி அமெரிக்க-இந்திய இராணுவங்களை கண்காணிப்பு மற்றும் ஆயுதப்படைகளை ஈடுபடுத்துதல் போன்றவற்றில் பயன்படுத்திட இராணுவ படையினரை வழக்கப்படுத்தவேண்டும் என இந்த ஒப்பந்தம் பரிந்துரைக்கிறது.

முத்தரப்பு இந்திய-அமெரிக்க-ஜப்பானிய இராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பினை மோடி அரசாங்கம் தழுவியிருத்தல் என்பது குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது, அதிலிருந்து முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம், சீனாவின் பலத்த எதிர்ப்பிற்குப் பின்னர் பின்வாங்கிவிட்டது.

கடந்த செப்டம்பரில், அமெரிக்க-ஜப்பான்-இந்திய முத்தரப்பு அமைச்சர்களுக்கான பேச்சுவார்த்தையின் ஆரம்ப கூட்டத்தில் கெர்ரி மற்றும் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் ஃபுமியோ கிஷிடாவையும் சுஷ்மா சுவராஜ் சந்தித்தார். அதன்பின்னர் விரைவிலேயே, வருடாந்திர இந்தோ-அமெரிக்க "மலபார்" கடற்படை பயிற்சியில் மூன்றாவது நிரந்தர உறுப்பினராக ஜப்பான் இனிமேல் இருக்கும் என்பது வெளிப்பட்டது.

2008க்குப் பின்னர் அமெரிக்காவிற்கு பாரிக்கரின் பயணம் ஒரு முதலாவது இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சரின் பயணமாக இருந்தது. அதே காலகட்டத்தில், அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் இந்தியாவிற்கு ஆறு முறை பயணம் மேற்கொண்டிருந்தார், சீனாவுக்கு எதிரான பென்டகனின் ஆத்திரமூட்டல்கள் மற்றும் போர் திட்டமிடல்களில் இந்தியாவை ஒருங்கிணைக்க முனைவதற்கான குறியீடாகவே இது இருந்தது.

ஹவாயில் அமெரிக்க பசிபிக் படைத் தளத்தினை (PACOM) பார்வையிடுவதன் மூலம் பாரிக்கர் தனது அமெரிக்க பயணத்தினை தொடங்கியது, இரு நாடுகளுக்கிடையிலான இராணுவ-பாதுகாப்பு கூட்டுக்களை வலுப்படுத்துவதையே குறித்துக்காட்டியது. அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் ஆஷ்டன் கார்ட்டெர் தலைமையில், அமெரிக்காவின் அணு சக்தியில் இயங்கும் விமானம் தாங்கிக் கப்பல்களில் ஒன்றான யுஎஸ்எஸ் டிவைட் டி. ஐசனோவாவிற்கு பாரிக்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டது, இதுவரை யாரும் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலுக்கு பயணம் செய்யாத நிலையில், முதலாவது இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக அவர் பயணம் மேற்கொண்டார் என ஆகியது.

இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), அல்லது சி.பி.எம்., இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாடு மற்றும் இது தொடர்பான இரண்டு இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் மீது அமெரிக்கா உடனான பா.ஜ.க.வின் பேரங்கள் குறித்து கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய முதலாளித்துவ வர்க்கத்தினருடன் முற்றிலும் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய ஒரு கட்சி, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான இந்தியாவின் மூலோபாயக் கூட்டினை வடிவமைப்பது உட்பட. நான்கு ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு சி.பி.எம் உற்ற தூணாக இருந்தது. உழைக்கும் வர்க்கத்தினர் தலைமையில் ஏகாதிபத்தியம் மற்றும் ஏகாதிபத்தியப் போர் குறித்த புரட்சிகரமான எதிர்ப்பை வளர்க்கும் போராட்டங்களின் ஒரு அங்கமாக இல்லாமல், இந்திய ஆளும் மேற்தட்டுக்களின் தேசிய நலன்கள் குறித்த நிலைப்பாட்டில் இருந்துகொண்டு இராணுவ தளவாடங்கள் ஆதரவு உடன்பாட்டினை சி.பி.எம். எதிர்க்கிறது. "இந்தியாவின் இறையாண்மையை கட்டுப்படுத்தக்கூடிய, அதன் மூலோபாய சுயாட்சியை முடக்கக்கூடிய மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு இந்தியாவை ஒரு துணை இராணுவ கூட்டாக உருவாக்கும் வகையிலான இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம் என சி.பி.எம். இன் அங்கமான மக்கள் ஜனநாயகம் பா.ஜ.க. அரசாங்கத்தை வலியுறுத்துவதாக சமீபத்திய கட்டுரை ஒன்று தெரிவிக்கின்றது.

இதே போக்கில், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு முற்போக்கான எதிர் சக்தியாக இந்திய முதலாளித்துவம், ஐ.நா. மற்றும் ஒரு "பல்முனை உலகு" பணியாற்றிடமுடியும் என்று பிற்போக்குத் தனமான மாயையை சி.பி.எம். ஊக்குவிக்கிறது.

Read more...

ஞானசார தேரருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு! தொடர்ந்து என்னால் வழக்கை விசாரிக்க முடியாது நீதிபதி!

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 25ம் திகதி இடம்பெற்ற வேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தினார் மற்றும் நீதிமன்றை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் எதிர்வரும் 9ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசேர தேரர் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணைமனு ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க அவர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிணை மனுவை நிராகரித்த நீதிபதி நீதிமன்றை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் தொடர்பில் விடுக்கப்பட்ட பிணைமனுவில் போதிய நியாயங்கள் இல்லை என்றும் தெரிவித்து நிராகரித்துள்ளார்.

அத்துடன் இது விடயத்தில் தனது தலையில் துப்பாக்கியை வைத்து பிணை வழங்ககோரினாலும் அதை தான் செய்யப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளமை இன்று இலங்கையில் நீதிக்கு தலைவணங்கும் நீதிபதிகள் வாழக்கின்றார்கள் என்பதை புடம்போட்டுக்காட்டியுள்ளது.

மேலும் நீதிபதி அவர்கள் இவ்வழக்கினை தன்னால் தொடர்ந்து விசாரிக்க முடியாது என்றும் இது தொடர்பாக மேலிடத்திற்கு அறிவிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் திட்டமிட்டு வேண்டுமென்றே சிறைக்குச் சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் தென் மாகாணசபை உறுப்பினரும், தாய்நாட்டுக்கான படைவீரர்கள் அமைப்பின் அழைப்பாளருமான மேஜர் அஜித் பிரசன்ன குற்றம் சுமத்தியுள்ளார்.


சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேஜர் அஜித் பிரசன்ன மேலும் கூறுகையில்...

நீதிமன்றில் தவறுதலாக தொலைபேசி ஒலித்த போது ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவரை கைது செய்தால், பௌத்த பிக்குகளுக்கும் சட்டம் ஒரேவிதமாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

புத்தளம் நீதிமன்றம் மீது கல் வீசிய ரிசாட் பதியூதீனை கைது செய்யுமாறு உத்தரவிட்ட நீதவான் ரங்க திஸாநாயக்கவே, ஞானசார தேரரை கைது செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

பிரகித் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள படைவீரர்களுக்கு பிணை வழங்கப்பட வேண்டுமென போராடி வருகின்றேன்.

எனினும் இந்தப் போராட்டங்ளில் ஒரு நாளேனும் ஞானசார தேரர் பங்கேற்கவில்லை. இது தொடர்பில் ஒரு நாளும் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.

இந்த நாட்களில் சிறைக்குச் செல்ல வேண்டிய மிகுந்த அவசியமொன்று ஞானசார தேரருக்கு காணப்பட்டது.

ஞானசார தேரர் திடீர் ஹீரோவாக மாறவே விரும்புகின்றார்.

உணர்வுகளுக்கு அடிமையாகிய சில சிங்கள பௌத்தர்களை ஆத்திரமூட்டி முஸ்லிம் கடைகளை எரித்து. சிலரைத் தாக்கி பிரச்சினை ஏறப்டுத்த முயற்சிக்கின்றார்.

இதன் மூலம் சிங்கள முஸ்லிம் கலவரத்தை உருவாக்கி, மக்கள் அதன் பின்னர் ஓடும் போது நாட்டை பிளவடையச் செய்யும் அரசியல் சாசனமொன்றை அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கக் கூடிய பின்னணியை உருவாக்கிக் கொள்ள முடியும்.

இது முழுக்க முழுக்க ஓர் சூழ்ச்சித் திட்டமாகும்.

இவர்கள் மஹிந்தவிற்கும் இதனையே செய்தார்கள். தற்போது சிங்க லே என்ற அமைப்பின் ஊடாக குழப்பம் விளைவிக்க முயற்சிக்கின்றர்கள்.

அரச சார்பற்ற நிறுவனங்களின் பணததைக் கொண்டே இவ்வாறான போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இந்த சூழ்ச்சி திட்டங்களில் சிங்கள பௌத்தர்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது , உணர்வுகளுக்கு அடிமையாகி விசராட்டம் ஆடாது, சிந்தித்து செயற்பட வேண்டிய தருணமிது என மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

Read more...

போர்குற்ற விசாரணகளை உள்நாட்டு நீதிபதிகளே மேற்கொள்வர். ராஜித திட்டவட்டம்

நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பமானால் அவற்றை உள்நாட்டு நீதிபதிகளே விசாரிப்பர் என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு கூறியுள்ள அவர் இதுவிடயத்தில் வெளிநாட்டு தொழிநுட்பம் மற்றும் உதவிகளை மட்டுமே பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு உதவி எனக் குறிப்பிடுவது, வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்பு அல்ல என தெளிவாக கூறிய அவர், அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது உள்நாட்டு நீதிபதிகளின் உதவியுடன் மட்டுமே எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com