Wednesday, March 25, 2015

சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் நச்சு மாசுகள் இல்லை - எம்ரிடி வோல்கர்ஸ் பிஎல்சி

யாழ் குடாநாட்டின், சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் ஆபத்தான நச்சு மாசுகள் இல்லை என்று அந்தப் பிரதேசத்தின் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது தொடர்பாக ஆய்வு நடத்திய நிபுணர் குழு தெரிவித்திருக்கின்றது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் த.ஜெயசிங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் கு.வேலாயுதமூர்த்தி, விவசாய பீடத்தைச் சேர்ந்த டாக்டர் நளினா ஞானவேல்ராஜா, பொறியியல் பீடத்தின் தலைவர் டாக்டர் அ.அற்புதராஜா ஆகியோர் இந்த நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தவறான முடிவுகளை மேற்கொண்டால் வதந்திகள் உருவாகி உணர்வுகள் கிளர்ந்தெழுவதன் ஊடாக யாழ் நிலத்தடி நீர் மாசடைதல் பிரச்சினை தீர்வதற்குப் பதிலாக அந்தப் பிரச்சினை மேலும் மோசமாகும் என்று வரையறுக்கப்பட்ட நொதர்ன் பவர் தனியார் நிறுவனத்தின் தாய் அமைப்பான எம்ரிடி வோல்கர்ஸ் பிஎல்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

“நாம் சுற்றாடலுக்கும் வடக்கில் தற்போது நிலவும் வருந்தத்தக்க நீர் மாசடைந்த பிரச்சினை தொடர்பிலும் எந்தவிதமான தீங்கினையும் இழைக்கவில்லை என்பதில் மிகுந்த நம்பிக்கைகொண்டுள்ளோம். சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தார்மீகப் பொறுப்பு வாய்ந்த ஒரு நிறுவனம் என்ற வகையில் நாம் கடந்த காலத்திலும் குறைந்த அளவு பாதிப்பை அல்லது தீங்கையேனும் இழைத்திருக்கவில்லை” என்று எம்ரிடி வோல்கர்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான லால் பெரேரா நிறுவனத்தின் சுற்றுச்சூழல் கொள்கையினை மீள சமீபத்தில் வலியுறுத்தினார்.

எவ்வாறெனினும், எதிர்காலத்தில் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பையும் இடையூறுகளையும் ஏற்படுத்தக்கூடிய இந்தப் பிரச்சினைக்கான உண்மையான மூல காரணம் அல்லது தோற்றுவாய் மறைக்கப்பட்டு எமக்கெதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது வருத்தமளிக்கிறது. எனவே, உணர்ச்சி மேலீட்டால் மேற்கொள்ளப்படுகிற தவறான முடிவுகள் நீர் மாசடைதல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைப் பாதிக்கும் என்பதுதான் எமது அச்சமாக உள்ளது.

நொதர்ன் மின்சார நிறுவனம் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில், 1987 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்திலிருந்து, இலங்கை மின்சார சபையின் நிலையம் அமைந்துள்ள வளாகத்தில் உள்ள எண்ணெய்க் குளத்தினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி சுன்னாகத்தைப்பற்றிய சிற்றறிவு உள்ள எந்த ஒரு நபரும் அறிவார்.

துரதிர்ஷ்டவசமாக இந்த எண்ணெய்க் குளம் பற்றி கேள்வி எழுப்பவோ விசாரணை நடத்தவோ எந்த ஒரு நபரும் முன்வரவில்லை. ஆகவே, நீர் மாசடைதல் பிரச்சினையில் நாம் எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை எந்தத் தீங்கையும் செய்யவில்லை என்ற திடமான நம்பிக்கை எமக்கிருப்பதால், அதன் உண்மை நிலையைக் கண்டறிவதற்காக சுற்றுச்சூழல் பற்றிய சர்வதேச நிபுணர்களின் ஆலோசனையுடன் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

எனவே, சுயநலமிக்கவர்களின் வதந்திகளுக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கும் செவிசாய்க்காது ஐரிஐ மேற்கொள்ளும் சுயாதீனமான விசாரணைகளின் பெறுபேற்றுக்காகவும் நீதித்துறையின் தீர்ப்புக்காகவும் பொறுமையுடன் காத்திருக்குமாறு இந்த விடயத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரையும் விசேடமாக எமது வடக்கின் சொந்தங்;களையும் வினயமாக வேண்டிக்கொள்கிறோம்.

யாழ்ப்பாணத்தில் உள்நாட்டுப்போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது, குடா நாடு இருளில் முழ்கியதால் குழந்தைகள் குப்பி விளக்கு வெளிச்சத்தில் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டபோது நொதர்ன் பவர் நிறுவனம் யாழ்ப்பாணத்திற்குக் கை கொடுத்தாகவும் திரு.பெரேரா கூறினார்.

இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான ஒரு காலகட்டத்தில் மக்களுக்கு வலுசக்தி தேவையை நிறைவேற்றும் ஒரே நோக்கத்திற்காகவே எமது நிறுவனம் வட மாகாணத்திற்குப் பிரவேசித்தது. உண்மையில், மின்னுற்பத்தி நிலையமொன்றை ஸ்தாபிக்க முன்வந்த ஒரு நிறுவனம், வடக்கில் அபாயமான நிலைமை உச்ச கட்டத்தில் இருந்ததால், அந்த முயற்சியிலிருந்து விலகிக்கொண்டவேளையில், நாட்டுக்கு சேவையாற்றும் நோக்கத்தில் வட பகுதி மக்களுக்கு மாத்திரமன்றி யாழ்ப்பாணத்தின் வர்த்தகங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் முதலானவற்றின் நலன் கருதி எமது சேவையை ஆரம்பித்தோம்.

எமது பங்குதார்களுக்குப் பதில் அளிக்கக் கடப்பாடு உடையதும் பொறுப்புக்கூறக்கூடியதுமான எமது நிறுவனத்தின் செயற்பாடுகளால் யாழ் பொது மக்கள் பாதிப்படைய இடமளிக்கமாட்டோம்.

இந்தத் துரதிர்ஷ்டவசமான நீர் மாசடைதல் பிரச்சினைக்கு நாம் எந்த வகையிலும் காரணமல்லர் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன். சுற்றாடல் மாசடைவதைத் தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்துவித செயற்பாடுகளுக்கும் எமது முழுமையான ஒத்துழைப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் யாழ் பொது மக்களுக்கும் வழங்குவோம் என உறுதியளிக்கின்றேன்.

நொதர்ன் பவர் நிறுவனம் பத்திரிகையில் வெளியான செய்தியொன்றையும் சுட்டிக்காட்டியுள்ளது. (அதாவது, 2015 ஜனவரி 25 ஆம் திகதிய பதிப்பில்) ‘2007இல் இந்த நிறுவனம் மின்சார நிலைய நிர்மாணத்தை ஆரம்பிப்பதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் 1987ஆம் ஆண்டிலேயே நீரில் எண்ணெய் கலந்தமை கண்டறியப்பட்டதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது’


Read more...

Tuesday, March 24, 2015

புலம் பெயர் தமிழர்களே . . . ஆபத்தான நோய் !!!

நோய்க்கான காரணிகள் : முதுமை, பாரிசவாதம், தலையில் அடிபடுதல், அன்பு கிடைக்காமை, உறவுகளைப் பிரிதல், குடும்பச்சச்சரவு, பயந்தான் கோழித்தனம், மாதவிடாய்க்கோளாறு, தனிமையில் இன்பங்காணுதல் . . . . . பல வேறு காரணிகளால் ஏற்படக் கூடிய இந்த நோயானது இலத்தீன் சொல்லான “Dementia” என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது.

அறிகுறிகள்

சிந்திக்கும் ஆற்றலில் ஏற்படும் பாதிப்பு அல்லது அற்றுப் போதல், மொழிவெளிப்பாட்டில் ஏற்படும் இடர்பாடு, சற்றுமுன்னர் செய்த வேலையை, பழகிய நபரை, சம்பவத்தை, இடத்தை மறத்தல், உடல் அசைவியக்கத்தில் ஏற்படும் தாமதம், திக்குத்திசை தெரியாது தடுமாறுதல், மனதை ஒருமுகப்படுத்த முடியாமை, சரியான தீர்மானம் எடுக்கும் ஆற்றல் அற்றுப் போதல், ஏமாற்றியவர்களையே திரும்பவும் திரும்ப நம்புதல், தனக்கு நிகழக் கூடாததையும் கூசாமல் பிறருக்கு நிகழ்த்தல், மனஉளைச்சல், சிறுவர்-பிறர் உரிமைகளுக்கு மதிப்பறியாமை, புலன் உணர்வுகளில்(கேட்டல், பார்த்தல், சுவைத்தல், உணர்ந்தறிதல்) ஏற்படும் மாற்றங்கள், நேர்மையான சிந்தனையின்மை, தனியான வெற்றிகளில் அதிக நாட்டம், தோல்வியை ஏற்க மறுத்தல், நேர்மையற்ற கட்சிகள் - தலமைகளை இனம் காண முடியாமல் ஏற்றுக் கொள்ளலும், நிபந்தனையற்றுப் போற்றுதலும், துறை சார் திறனறியாமை(பாட்டு சிறுமி யசிக்காவுக்குப் பல கள்ள ஓட்டுப் போட்டது போன்ற செயற்பாடுகள்) , என்ன செய்கின்றோம் எதற்காக செய்கின்றோம் என்று தெரியாமல் செயல்களை செய்தல் (கொடி பிடித்தல்) இப்படியானவை இந்த நோயின் அறிகுறிகளாகும்.

குறிப்பு:-

இது கேலிக்காக எழுதியதல்ல . . . . . . உண்மையில் இப்டியொரு நோய் உண்டு என்பதும் உலகளாவியரீதியில் 44 மில்லியன் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருவதாகவும், இந்நோய் ஆகக்குறைந்தது 40 வயதிலும் ஏற்படலாம் என்றும், குணப்படுத்தமுடியாத நோயாகக் கருதப்படுகிறது என்றதான அனைத்துத் தகவல்களும் கனடாவிலிருந்து தளமேற்றும் பிரபல தமிழ் மின் அஞ்சல் சஞ்சிகை வானவில்லின் தகவலிலிருந்து தொகுக்கப்பட்டது! நன்றி!

இலத்தீன் மொழியில் De என்பது தேய்வடைதலையும், Mens என்பது புரிதலையும் குறிப்பிடுதலால் மொத்தத்தில் சிந்தனையாற்றல் தேய்வடைதலால் ஏற்படும் “Dementia” எனும் இந் நோய் தமிழில் 'புலன்(அறளை)பெயர்தல்' என்று அழைக்க உகந்தது.

இதன் குணங்குறிகள், பெருமளவு காரணிகள் புலம்(புலன்) பெயர்ந்துள்ள 90 வீதமான இலங்கைத் தமிழருக்கு அப்படியே அச்சொட்டாகப் பொருந்துவது காணப்பட்டதால் அலறியடித்துக்கொண்டே எனது போக்கில் இந்தத் தகவலைத் தொகுக்கத் தொடங்கினேன் . . . !

புலம் பெயர் தழிழீழ உறவுகளே நீங்களாகவே பரீட்சித்துப் பாருங்கள்! இந்த அறிகுறிகளில் ஒன்றோ பலவோ உங்களிடம் காணப்பட்டாலும். . . . . ? என் செய்வது? ஈழத் தமிழர் மரபணுவோட ஒட்டியிற்றுது... இனிக் குணப்படுத்தமுடியாது! கஸ்டமே தான்!


-லோகன்-

Read more...

Monday, March 23, 2015

தேசியக் கொடியும், தேசிய கீதமும் . தங்க. முகுந்தன்

இன்று பாராளுமன்றத்தில் முக்கியமாகப் பேசப்படும் தேசிய கீதப் பிரச்சினையை எண்ணி அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை. மனித உரிமைகள் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளன.

வாழும் உரிமை,
உணவுக்கான உரிமை,
நீருக்கான உரிமை,
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்,
பேச்சுரிமை,
சிந்தனைச் சுதந்திரம்,

ஊடகச் சுதந்திரம்,
தகவல் சுதந்திரம்,
சமயச் சுதந்திரம்,
அடிமையாகா உரிமை,
சித்தரவதைக்கு உட்படா உரிமை,
தன்னாட்சி உரிமை,
சுயநிர்ணயம்,
ஆட்சியில் பங்குகொள்ள உரிமை,
நேர்மையான விசாரணைக்கான உரிமை,
நகர்வு சுதந்திரம்,
கூடல் சுதந்திரம்,
குழுமச் சுதந்திரம்,
கல்வி உரிமை,
மொழி உரிமை,
பண்பாட்டு உரிமை,
சொத்துரிமை.....
இதில் எமது நாட்டில் எந்த ஒரு உரிமையும் சிறுபான்மையினத்துக்கு செல்லுபடியற்ற நிலையில் தேசிய கீதத்தை ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச தனது யாழ்ப்பாண விஜயத்தின்போது தனிச் சிங்களத்தில் பாடவேண்டும் என்ற கட்டளையைப் பிறப்பித்திருந்தார். இதன் காரணமாக கல்வி சார் அறிஞர் ஒருவர் கொல்லப்பட்டதும் எமது சரித்திரத்தில் வரலாறு. இன்று மைத்திரியின் புதிய அரசு தமிழிலும் பாடலாம் என்று கருத்துக்கூறி அதைப்பற்றி விவாதித்து வருகிறார்கள்.

நாட்டு வணக்கப் பாடல்கள் பெரும்பாலும் அரசு ஏற்பு பெற்ற ஒரு மொழியில் இருந்தாலும், சில நாடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் அரச ஏற்பு பெற்ற மொழிகளாக இருக்கும்பொழுது, அவற்றில், 2 மொழிகளிலோ, சில நாடுகளில் பல மொழிகளிலோ நாட்டுப்பண் அல்லது நாட்டு வணக்கப்பாடல் இருக்கும். கனடாவில் நாட்டுப்பண் ஆங்கிலம், பிரெஞ்ச்சு ஆகிய இரு மொழிகளில் அமைந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் அவர்களின் நாட்டு வணக்கப் பாடல் அந்நாட்டின் நான்கு நாட்டுமொழிகளில் (பிரெஞ்ச்சு, டொச், இத்தாலியன், ரோமன்சு) அமைந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவின் நாட்டு வணக்கப் பாடல், ஒரே பாடலில் அந்நாட்டின் 11 மொழிகளில் ஐந்து மொழிகளில் தனிப்பகுதிகளாக அமைந்துள்ளது. எசுப்பானிய நாட்டுப்பண்ணில் இசை மட்டுமே உள்ளது, சொற்கள் ஏதும் இல்லை.

இலங்கையில் பிரித்தானியர் ஆட்சியின் இறுதிக்காலத்தில், இந்திய விடுதலைப் போராட்டத்தின் செல்வாக்கால், இலங்கையிலும் தேசிய விழிப்புணர்வு ஏற்பட்டது. தேசபக்திப் பாடல்கள் பல எழுதப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகளின் போதும் பாடப்பட்டு வந்தன. பிரித்தானிய குடியேற்றவாத ஆட்சி முடிவுக்கு வந்து, இலங்கை விடுதலை பெற்றபோது, நாட்டின் இறைமையின் சின்னங்களாகத் தேசியக் கொடி, நாட்டுப் பண் என்பவற்றை உருவாக்கும் முயற்சி இடம்பெற்றது. ஏற்கெனவே புழக்கத்திலிருந்த தேசபக்திப் பாடல்களிலொன்றைத் தெரிவு செய்வதில் சிக்கல்கள் எழுந்தமையால், போட்டி ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இப்போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட கீதங்களிலிருந்து ஒன்றைத் தெரிவு செய்வதற்காக நடுவர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
ஆனந்த சமரக்கோன் என்பவர் 1940 ஆம் ஆண்டு எழுதி ஏற்கெனவே பரவலாகப் புழக்கத்திலிருந்த நமோ நமோ மாதா என்று தொடங்கும் சிங்களப் பாடலும் தேர்வுக்காக நியமிக்கப்பட்டவற்றுள் அடங்கும். எனினும், பி. பி. இலங்கசிங்க, லயனல் எதிரிசிங்க என்னும் இருவரால் எழுதப்பட்ட ஸ்ரீ லங்கா மாதா பல யச மஹிமா என்று தொடங்கும் பாடல் தெரிவு செய்யப்பட்டு, 1948 பெப்ரவரி 4 ஆம் தேதி இலங்கையின் சுதந்திர நாளன்று வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டது.

இதன் பாடலாசிரியர் இருவரும், தேசியகீதத் தேர்வுக்குழுவில் உறுப்பினராக இருந்ததால். இத்தெரிவு குறித்துச் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் இரண்டாவது, மூன்றாவது சுதந்திர தினங்களில் ஆனந்த சமரக்கோனின் பாடல் உத்தியோகபூர்வமற்ற முறையில் பாடப்பட்டு வந்தன. 1950 இல், அக்காலத்தில் நிதியமைச்சராக இருந்த ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் ஆலோசனையை ஏற்று ஆனந்த சமரக்கோனின் நமோ நமோ மாதா என்று தொடங்கும் பாடலைத் தேசியகீதமாக ஏற்க முடிவு செய்யப்பட்டது.

1951 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி இதற்கு முறைப்படியான அங்கீகாரமும் கிடைத்தது. இப்பாடலுக்கான இசையும் ஆனந்த சமரக்கோன் அமைத்ததே. தொடர்ந்து வந்த நாட்டின் நான்காவது சுதந்திர தினத்தன்று இப் பாடல் முதல் முதலாக, கொழும்பு, மியூசியஸ் பாடசாலையைச் சேர்ந்த 500 மாணவ மாணவிகளால் பாடப்பட்டு வானொலி மூலம் நாடெங்கும் ஒலிபரப்பப்பட்டது.

1956 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தின் காலத்தில் இப் பாடலின் ஆரம்ப வரிகள் நமோ நமோ என 'ந' என்னும் எழுத்துடன் தொடங்குவது அபசகுனம் என்றும், அது நாட்டுக்கு துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்றும் ஒரு பகுதியினர் குரல் எழுப்பினர். தொடர்ந்து வந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியின்போது, 1961 இல், செல்வத்தைக் குறிக்கும் ஸ்ரீ என்னும் மங்கல எழுத்துடன் தொடங்கும், ஸ்ரீ லங்கா மாதா என்ற வரி முதல் வரியாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இப்பாடலை எழுதிய ஆனந்த சமரக்கோன் இந்த மாற்றத்தைக் கடுமையாக எதிர்த்தார் என்றும் இது தொடர்பான விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பல கட்டுரைகளை அவர் எழுதியதாகவும் கூறப்படுகின்றது. எனினும் இம் முயற்சியில் அவர் வெற்றியடையவில்லை. இப்பாடல் பின்னர் பொருள் மாறுபடாமல் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. 1950ம் ஆண்டில் தமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்தார்.

இலங்கையின் தேசிய கீதம் 3 மொழிகளிலும் அர்த்தம் பிசகாமல் மொழிபெயர்க்கப்பட்டு பாடப்பட்டு வந்துள்ளது.

நான் அனுராதபுரத்தில் கல்விகற்ற காலத்தில் 1975 – 1977வரை எமது பாடசாலையான அனுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்லூரி நிகழ்வுகளில் முதலில் பாடசாலைக் கீதம் பாடப்பட்டு நிகழ்வின் இறுதியில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டு வந்தது. நாம் சங்கீதம் கற்றதனால் அடிக்கடி எல்லா நிகழ்வுகளிலும் பாடுகின்ற சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த நேரத்தில்

ஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நல்லெழில் பொலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நமதலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

என்ற தற்போது பழக்கத்தில் உள்ள பாடலின் முதல்பந்தி மட்டுமே இருந்தது. நான் நினைக்கின்றேன் 1978 புதிய அரசியலமைப்பின் பின்னர் தேசிய கீதத்தில் கீழ்க்கண்ட 2 பந்திகள் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

நமதாரருள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதோர் வலியானாய்
நவில் சுதந்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல்செறி துணிவருளே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

நமதோர் ஒளி வளமே
நறிய மலர் என நிலவும் தாயே
யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

ஏனெனில் 1977 இன்பின் இன்றுவரை நான் தேசிய கீதத்தைப் பாடவுமில்லை. அதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை. மேலும் யாழ்ப்பாணத்தில் தேசிய கீதம் ஒரு சில இடங்களில் இசைக்கப்பட்டாலும் எல்லோருக்கும் தேசிய கீதம் தெரிந்திருக்கவில்லை.

2 தடவைகளுக்கு மேல் மாற்றஞ் செய்யப்பட்ட தேசியக்கொடி!



இலங்கை சுதந்திரமடைந்தது 4-2-1948ல். அப்போது நாட்டின் தேசியக் கொடி கண்டி அரசனின் சிங்கக்கொடி. சிறுபான்மையினத்தவர்களின் பெரும்போராட்ட எதிர்ப்புக்களின் பின்னர் 1952இல் மாற்றப்பட்ட கொடியும் 1972ல் சிறு மாற்றத்திற்குள்ளானது! எத்தனைபேருக்கு இது தெரியும்? இதனால்தான் சிறுபான்மையினத்தவர்கள் இன்றுவரை இக்கொடியை ஒட்டுக்கொடி என்பதுடன் ஏற்றுக்கொள்ளவும் மறுத்து வருகிறார்கள்.

வாழும் உரிமை – மறுக்கப்பட்ட ஒரு சமுதாயம் கொடியையோ – நாட்டின் தேசிய கீதத்தையே ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் அரச ஊழியர்கள் அனைவரும் சில உறுதிமொழிகளை எடுத்திருந்தாலும் அவர்களும் தமது மனச்சாட்சிப்படி நடக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். தேசியக் கொடியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்ட வரலாறு கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் சிறுபான்மையினத்தவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை அவர்களிடம் நாட்டின் கொடியைப் பற்றியோ அல்லது தேசிய கீதத்தைப் பற்றியோ எதிர்பார்ப்பது முட்டாள்தனமானதாகும்.




Read more...

Friday, March 20, 2015

சித்தாண்டி யுவதியின் சோகக்கதை ! நடந்தது என்ன ?

ஒருநாள் விடுமுறை என்றாலே ஒரு குதுகலம்தான் அதிலும் சுற்றுலா என்றால் சொல்லவா வேண்டும். அதுவும் வேலைத்தளத்தில் ஒன்றாக கடமையாற்றுவோருடன் செல்வதாயின் அந்த நாளையே மறக்கமுடியாது. அந்த நாளை எவ்வாறு மறக்கமுடியாதோ, அதேபோல சென்ற இடங்களை ஞாபகப்படுத்துவதற்காக வாங்குகின்ற ஞாபகசின்னங்களை பார்க்கும் போதெல்லாம். அந்த நாள் நினைவில் ஓடும். சென்ற இடங்களிலும் சிலர் நினைவுகளை பதித்துவிட்டு வருவர். நினைவுத்தடங்கள் நீங்காதவைதான் ஆனால், சில நினைவுகளையும் நினைவு தடங்களையும் எம்மால் மறக்கவே முடியாது. அவ்வாறான சம்பவமொன்றே மட்டக்களப்பு சித்தாண்டி விநாயகர் கிராமத்தைச் சேர்ந்த ஏழை யுவதியான உதயசிறிக்கு இடம்பெற்றுள்ளது. அவர் பதித்த நினைவுத்தடம் இரண்டு வருடங்கள் சிறைவாசத்துக்கு வித்திடும் என்று அவள், தனது கொண்டை பின்னை கழற்றும்போதோ, நாமத்தை பதியும் போதோ நினைத்திருக்கவே மாட்டாள். ஏழை யுவதியான உதயசிறி, அனுராதபுரம் சிறையிலடைக்கப்பட்டு இப்பொழுது ஒரு மாதம் கழிந்து விட்டது. கடந்த மாதம் 14ஆம் திகதி, சிகிரியா அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட உதயசிறி, தம்புள்ளை நீதிமன்றத்தால் 2 வருடம் சிறைத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இப்பொழுது அனுராதபுரம் சிறையில் வாடுகின்றாள் மட்டக்களப்பிலுள்ள இரத்தினக்கல் பட்டை தீட்டும் தொழிற்சாலையில் பணிபுரியும் உதயசிறிக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கும் பெப்ரவரி 14ஆம் திகதி காதலர் தினமான சனிக்கிழமையன்று ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டது.

அந்த விடுமுறை தினத்தில் எங்காவது சுற்றுலா சென்று வரலாம் என்று முடிவெடுத்த தொழிலாளர்களின் தெரிவாக, அன்றைய நாளுக்குள் மட்டக்களப்பிலிருந்து போய்த் திரும்பக் கூடிய இடமாக காணப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சிகிரியாதான் இருந்தது. காலை 6.40 மணியிருக்கும் அவர்கள் மட்டக்களப்பிலிருந்து கலகலப்பாகப் புறப்பட்டார்கள்.

உதயசிறியும் தனது சொந்த இடமான சித்தாண்டியில் வைத்து நண்பர்களோடு வந்த பஸ்ஸில் எறிக்கொண்டாள்

ஒரு பிஸ்கட் பக்கற்றோடு போகின்றேன் என்று அதைக் கையில் எடுத்து உயர்த்திக் காட்டினார் எனது மகள். வழமையாக போயிற்று வாறனம்மா என்று சொல்லிவிட்டு போவாள். ஆனால், அன்றைய தினம் இந்த பிஸ்கட்டோடதான் போறனம்மா என்று மட்டும்தான் சொன்னாள்.

அவளின் வாயிலிருந்து வந்த அந்த கடைசி வார்த்தையும் ஒரு அறிகுறிதான். ஆனால் அதன் அர்த்தம் அவள் திரும்பி வராமல் சிறையில் இருக்கும்போதுதான் விளங்குகின்றது

அந்த பிஸ்கட் பக்கெற்று திறக்கப்படாமலே திரும்பி வந்தது. கூடப்போன பிள்ளைகள் அந்த பிஸ்கட் பக்கெற்றைக் கொண்டு வந்தாங்க. ஆனால் என் மகள் வரவில்லை.

மகளைப் பிடித்து விட்டார்கள் என்று மாலை ஐந்து மணிக்குத் தகவல் வந்தது. எனது மற்ற மகளுடன் உதயசிறி தொலைபேசியில் பேசினார். எனக்குத் தொண்டை வறளுகிறது அக்கா, என்னால் பேச முடியாமல் இருக்கிறது எனக்கு ஐந்து வருடம் சிறையும் ஐந்து இலட்சம் தண்டப்பணமும் விதிக்கப்போகின்றார்களாம் என்று கூறி அழுதாள். தலையிலடித்துக் கதறினாள். நாங்களும் அழுதோம்.’ இப்படி அழுதழுது தனது மகளின் துயரக் கதையை விவரித்தார் பார்வையிழந்து உடலாற்றல் குன்றியுள்ள அந்த ஏழை யுவதி உதயசிறியின் தாய். 61 வயதை கடந்திருக்கும்; அந்த வயோதிப தாயின் பெயர் சின்னத்தம்பி தவமணி.

உதயசிறியின் உயிர்த்தோழி ரவிச்சந்திரன் வனத்தம்மா

எனக்கு உதயசிறியை 2 வருடங்களாக தெரியும். மட்டக்களப்பு கூழாவடியிலுள்ள டயமன்ட் ஆபரணக் கற்கள் வெட்டும் தொழிற்சாலையில் நான் 3 வருடங்களாக வேலை செய்கின்றேன். உதயசிறி இந்த நிறுவனத்தில் 4 வருடங்களாக வேலை செய்கிறாள்.

இந்த நிறுவனத்தில் ஆரம்பச் சம்பளம் மாதமொன்றுக்கு 5,500 ரூபாய் தந்தார்கள். இப்பொழுது 13,000 ரூபாய் தருகிறார்கள். இருவேளைச் சாப்பாடும் தேநீரும் மேலதிகமாகத் தருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் ஓய்வு. சிலவேளை, அந்த நாளிலும் வேலை செய்யச் சொல்வார்கள்.

நான் மலையகத்தின் நாவலப்பிட்டியை சேர்ந்தவள். எனக்கு தந்தை இல்லை. தாயார் மத்திய கிழக்கில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்கிறார். அம்மா போன பிறகு வீட்டில் தனியே இருக்க முடியாது. எனது மாமா முறையானவரின் இம்சை தாங்க முடியாமல் எனக்குக் கடவுளால் கிடைத்த நண்பி நிறோஜியிடம் வந்து சரணடைந்து மட்டக்களப்பு கல்லடியிலுள்ள அவரது வீட்டிலேயே சொந்தப் பிள்ளை மாதிரி தங்கியிருக்கின்றேன்.

இப்படியிருக்கும்போதுதான் உதயசிறியும் எனது துயரக் கதைகளோடு இணைந்து உயிர்த்தோழியானாள். அவளிடம் நல்ல குணமும் சிறந்த பண்புகளும் இருப்பதால் நான் அவளோடு நெருங்கிப் பழகினேன். எங்களுக்கு பெப்ரவரி 14ஆம் திகதி கிடைத்த விடுமுறையில் சிகிரியாவுக்குப் போக முடிவெடுத்தோம்.

எங்களது தொழிற்சாலை மேற்பார்வையாளர் செல்வகுமாரும் அங்கு பணிபுரியும் டிலக்ஷனும் சேர்ந்தே இந்த சுற்றுலாவை ஏற்பாடு செய்து அதற்குத் தலைமை தாங்கி எங்களை அழைத்துச் சென்றார்கள். பகல் 11 மணிக்கெல்லாம் எங்களது பஸ், சிகிரியாவை சென்றடைந்தது. சிகிரியா மலையில் நாம் ஏறும்போது பகல் 12.30 மணியிருக்கும்.

சிகிரியாவைப் பற்றியோ அங்கு நாங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியோ எங்களுக்கு எதுவிதமான முன்னறிவும் இருக்கவில்லை. அறிவுறுத்தல்களும் வழிகாட்டல்களும் எவரும் தந்திருக்கவுமில்லை. மற்றவர்கள் மலையில் மேலேறும் போது நானும் எனது நண்பியும் கீழிறங்கி வந்து கொண்டிருந்தோம்.

அப்பொழுது ஏற்கெனவே கீறப்பட்டிருந்த நீற்று சுண்ணாம்பு சுவருள்ள இடத்தில் என் நண்பி உதயசிறி தனது பெயரை அவளது கூந்தலில் இருந்த கிளிப்பை எடுத்து ‘உதயா தேங்க்ஸ்’ என்று எழுதி முடியும் தறுவாயில் 4 பேர் படியிலேறி ஓடிவந்தார்கள். நீற்று சுண்ணாம்பு சுவரில் அவள் எழுதி முடிக்கும்வரை அந்த இடத்தில் எந்தக் காவலரும் இருந்திருக்கவில்லை. வந்தவர்களில் இருவர் அவ்விடத்தில் நின்று கொண்டு பொலிஸாருக்கு அழைப்பை எடுத்தனர். இது நடக்கும்போது மாலை 3.30 மணியிருக்கும்.

மற்றவர் கமெராவை சூம் செய்து, இவள் சுவரில் எழுதியவற்றை புகைப்படம் பிடித்தார். உங்களை நாங்கள் பொலிஸூக்கு அழைத்துச் செல்லப் போகின்றோம் உங்களுக்கு ஐந்து வருட சிறைத் தண்டனையோடு நீங்கள் இரண்டரை இலட்சம் ரூபாய் பணமும் செலுத்த வேண்டி வரும் என்று தமிழில் சொன்னார்கள்.

அந்த இடத்தில் நாங்கள் இருவர் மாத்திரமே நின்றிருந்தோம். நண்பி வைத்திருந்த அலைபேசி மற்றும் அவளது கைப்பை என்பவற்றை என்னிடம் ஒப்படைக்குமாறு கூறினார்கள். நான் அவற்றை அவளிடமிருந்து வாங்கி கொண்டு எங்களை அழைத்து வந்த மேற்பார்வையாளர் செல்வகுமாரிடம் அலைபேசி ஊடாக நடந்தவற்றைக் கூறினேன்.

எங்களை கீழே அவர்கள் அழைத்து வரும்போது நான் சாகப்போகின்றேன் என்று மலையிலிருந்து குதிப்பதற்கு அவள் முயற்சித்தாள் அப்பொழுது நான் அவளது கைகள் இரண்டையும் இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டேன். என்றாலும் அந்தப் படிகளில் அவள் பாய்ந்து பாய்ந்தே நடந்து கீழிறங்கி வந்து சேர்ந்தாள்.

உங்களை சிகிரியா பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப் போகின்றோம் என்று கூறி, என்னையும் நண்பியையும் பொலிஸ் ஜீப் வண்டியில் ஏற்றிச் சென்றனர். ‘இதைக் கேள்விப்பட்டால் என் அம்மா ஏங்கிச் செத்துவிடுவார் என்று மட்டும் அழுதழுது சொல்லிக் கொண்டு வந்தாள் உதயசிறி. என் குடும்பமே இப்போது என்னால் அவமானப்படப்போகுது என் வாழ்க்கை இனி என்னவாக போகிறதோ? என்று சொல்லி அழுது கொண்டே வந்தாள்.

என் அம்மா என்னை நம்பித்தானே இருக்கின்றார் என் வாழ்க்கையில் நான் இதுவரை பொலிஸ் நிலையத்துக்குப் போனது கிடையாதே. எனக்கு ஐந்து வருடங்கள் சிறை என்றால் என் அம்மாவின் நிலைமை என்னவாகுமோ என்று கலங்கியவாறே இருந்தாள். பின்னர் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள்.
பொலிஸ் நிலையத்துக்குள் விழுந்து புரண்டு புரண்டு அழுதாள். பொலிஸார் பயப்பட வேண்டாம் என்று சொன்னவுடன் சிறிது நேரம் அமைதியானாள்.

அவளின் சகோதரி தொலைபேசி அழைப்பு எடுத்தவுடன் இங்கு எனக்கு நடக்கும் ஒன்றையும் அம்மாவிடம் சொல்லாதே என்று அலறினாள்.
எங்களைப் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்ற பின்னரே, எங்களது மேற்பார்வையாளர் செல்வகுமார் அங்கு வந்து சேர்ந்தார்.

மாலை ஆறு மணியாகும்போது உதயசிறியை சிறையில் வைக்க போகின்றோம் என்று கூறி அவளுடன் என்னை இருக்க விடாது பொலிஸார் வெளியே அனுப்பி விட்டனர். பின்னர் மாலை ஆறரை மணியளவில் பொலிஸார் என்னை அழைத்து அவளோடு தங்குமாறு கூறினர்.

சிங்கள மொழியில் வாக்குமூலம் எழுதிய பின்னர். என்னை சாட்சிக்கு கையெழுத்துச் போடச் சொன்னார்கள். எங்களோடு வந்தவர்கள் இரவு எட்டரை மணிக்குத் திரும்பி விட்டார்கள். நான் மட்டும் அன்றிரவு அவளோடு பொலிஸ் நிலையத்திலேயே தங்கி இருந்தேன். எங்களோடு ஒரு பாட்டியையும் தங்க வைத்தார்கள்.

உதயசிறி தனக்கு தலையிடி என்று கூறி கண்ணயர்ந்து விட்டாள். எங்களது நண்பர்கள் வாங்கித் தந்த சோற்றை நான் அவளுக்கு ஊட்டி விட்டு விழித்திருந்து அவளைக் கவனித்துக் கொண்டேன். அதிகாலை ஐந்து மணிக்கு அவள் விழித்துக் கொண்டு மீண்டும் ஓவென்று அழ ஆரம்பித்தாள். அழாதே விட்டுவிடுவார்கள் என்று சொன்னவுடன் சிரித்தாள்.

காலையில் பொலிஸார் சோறு தந்தார்கள். அதையும் நான் அவளுக்கு ஊட்டி விட்டேன். காலை 10 மணியளவில் அவளது சகோதரி, சித்தாண்டியிலிந்து சிகிரியா பொலிஸ் நிலையம் வந்து சேர்ந்தாள். தனது சகோதரியைக் கண்டதும் மீண்டும் அழ ஆரம்பித்தாள் உதயசிறி.

பின்னர் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர். 12 மணிவரை அங்கே இருந்தோம். நீதிபதி இல்லை என்பதால் பதில் நீதிபதி, விசாரணையை 18ஆம் திகதி வரைத் ஒத்திவைத்தார்.

18ஆம் திகதியும் பதில் நீதிவான்தான் கடமையிலிருந்தார். அன்றைய தினம் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்திடமிருந்து அறிக்கை பெற வேண்டும் என்று நீதிபதி பொலிஸரிடம் கூறினார். அதனால், அடுத்தநாள் 19ஆம் திகதிக்கு விசாரணை பிற்போடப்பட்டது. 19ஆம் திகதியும் பதில் நீதிபதிதான் கடமையிலிருந்தார். தொல்பொருள் திணைக்களத்திடமிருந்து பெக்ஸ் மூலமாகத்தான் அறிக்கை வந்திருந்தது. ஆயினும் புராதன சின்னத்துக்கு ஏற்பட்ட சேதத்தை மீளமைப்புச் செய்ய முடியுமா முடியாதா என தொல்பொருள் திணைக்களத்திடமிருந்து அறிக்கை பெற்று அதனை மன்றுக்குச் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டு தீர்ப்பு மார்ச் மாதம் 02ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.

உதயசிறியின் மற்றொரு நண்பியான ராஜ்குமார் நிறோஜின் கூறுகையில், 21ஆம் திகதி, அனுராதபுரம் சென்று உதயசிறியைப் பார்த்தோம் எலும்புந்தோலுமாகி மெலிந்திருந்தாள். சிறைக்கூட ஜன்னல் கம்பியில் தலையைச் சாய்த்து எங்களைக் கண்டதும் தேம்பித் தேம்பி அழுதாள்.
பரிதாபமாக இருந்தது. நானும் உதயசிறியின் அம்மாவும் வனத்தம்மாவுமாக நாங்கள் மூன்று பெண்கள் மட்டும்தான் அங்கு போனோம். எங்களுக்கு சிங்கள மொழியே தெரியாது.

பின்னர் மார்ச் மாதம் 02ஆம் திகதி விசாரணைத் தீர்ப்பன்று சென்றோம். அன்றைய தினம் இறுதியாகதான் இவளது விசாரணை இடம்பெற்றது. கடவுளை மன்றாடிக் கொண்டிருந்தோம் அங்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள எமக்கு மொழி தெரியாது.

சட்டத்தரணி அஸ்மி, 2 வருடங்கள் சிறை என்று சொன்னார். நாங்கள் நிலைகுலைந்து போனோம். அந்த நீதிமன்றத்துக்கு அன்று வந்திருந்த அத்தனை சிங்கள மக்களும் துயரப்பட்டு வாயடைத்துப் போய் நின்றார்கள்.

நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே நண்பி தலையிலடித்துக் கொண்டு உருண்டு புரண்டு அழுதாள். என்ன செவ்வதென்றே எங்களுக்குப் புரியவில்லை நாதியற்றுப் போய் நின்றிருந்தோம். அவர்கள் எல்லோரும் ஏதேதோவெல்லாம் பேசினார்கள் மொழி தெரியாததால் எமக்கு எதுவுமே புரியவில்லை.
‘சிறைக்குள்ளே இருந்தால் எனது வாழ்க்கை, எனது எதிர்காலம் எல்லாமே பாழாய்ப் போய்விடும் என்னை விடுதலை செய்யப்பாருங்கள் என்று கட்டிப்பிடித்து அழுதாள். மனத்தளவில் அவள் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறாள். அப்படியான வார்த்தைகள்தான் அவளது வாயிலிருந்து வெளிப்பட்டன.

அவளது குடும்பத்தில் ஐந்து பேரும் பெண் பிள்ளைகள். அவர்களது குடும்ப நிலைமையைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி, உதயசிறிக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும். நடந்த சம்பவம் பற்றி நாங்கள் எல்லோரும் வருந்துகின்றோம். இது அறியாமையால் நடந்த தவறு.

சட்டத்திட்டங்களும் தண்டனைகளும் பற்றி முன் கூட்டியே தெரிந்திருக்குமாக இருந்தால் பெரும்பாலானவர்கள் அந்தத் தவறைச் செய்ய மாட்டார்கள். அப்படித்தான் இதுவும் நடந்தது. தன் தவறை அவள் பின்னர்தான் விளங்கி அதனை ஒப்புக் கொண்டுள்ளாள். அதற்கு இருக்கும் ஒரேயொரு வழி மன்னிப்புத்தான்.

இனிமேல் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் செல்வோர் அவர்கள் எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் இவ்வாறான துயரத்திற்கு முகம் கொடுக்கக் கூடாது. இது எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும். எங்களது நண்பி சிறைக்குள் இருக்கும்போது நாங்கள் இங்கே படும் துயரத்தை போன்று இனி இந்த நாட்டில் யாருக்கும் நேர்ந்து விடக் கூடாது.

கற்றறிந்த நிபுணர்கள்தான் சிகிரியா மலைக்குன்றையும் ஓவியங்களையும் பார்வையிட வருவார்கள் என்றில்லை. பாமர மக்களும் அந்த இடத்திற்கு வருகிறார்கள் என்பதால் குறித்த பகுதியின் சரித்திர முக்கியத்துவத்தைப் பாதுகாக்க, பாதுகாப்பு அதிகாரிகள் உரிய இடத்தில் எந்நேரமும் கடமையில், கண்காணிப்பில் இருந்திருக்க வேண்டும்.

அறிவித்தல்களையும் மீறி அந்த சரித்திர இடங்களை அறியாத்தனமாக சேதப்படுத்தி விடுவார்கள் என்பதற்காக அந்தந்த இடத்திலேயே பாதுகாப்பு அதிகாரிகள் கடமையில் நிற்க வேண்டும்.

அறிவித்தல்களை வாசித்தறிந்து கொள்ள முடியாத எத்தனையோ பேருக்கு இது காவலர்கள் அங்கே நிற்பது உதவியாக அமையும். இவள் தனது பெயரையும் தேங்க்ஸ் என்ற சொற்களை எழுதி முடியுமட்டும் காவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.

உரியவர்கள் அந்த இடத்திலே இருந்திருந்தால் இவள் எழுதுவதற்கு கை வைக்குமுன்பே தடுத்திருக்கலாம்’ என்று சோகம் தழும்ப கூறுகின்றாள் உதயசிறியின் மற்றொரு நண்பியான ராஜ்குமார் நிறோஜினி.

வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் ஒன்று சிகிரியா. இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடங்களின் பட்டியலிலும் இடம்பிடித்திருக்கின்றது. இந்த இடத்தைப் பாதுகாப்பதற்கென நாடாளுமன்ற சட்டமூலமும் இருக்கிறது.

தொல்பொருள் திணைக்களத்தில் பணியாற்றும் ஐத் என்பவர் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பிற்பகல் 3.45 மணியளவில் தொலைபேசியூடாக அழைத்து, யுவதி ஒருவர் சிகிரிய ஓவியத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் 6 ஆங்கில எழுத்துக்களை எழுதியதாக கூறியதன் அடிப்படையிலேயே சிகிரிய தொல்பொருள் அபிவிருத்திக் காரியாலயத்தின் அலுவலரான கே. நிரஞ்சலா சறோஜினி, பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அதற்குச் சாட்சியாக கிறுக்கியதற்குப் பயன்படுத்திய கொண்டை கிளிப் (கவ்வி) கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் பதியப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே சின்னத்தம்பி உதயசிறி (வயது 27) என்பவர் சிகிரிய பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் கருணாதிலக்க, சார்ஜன் நவரெத்தின ஆகியோரால் கைது செய்யப்பட்டார்.

இந்த விடயத்தில் தனது கட்சிக்கார் தரப்பில் பரிந்து பேசிய சட்டத்தரணி அஸ்மி, ‘எனது கட்சிக்காரர் 27 வயதுடையவர். தொழிற்சாலையொன்றில் பணிபுரிகின்றார். அவர் உழைக்கும் அந்த ஊதியமே அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் வாழ்வாதாரமாக உள்ளது.

அவருக்குத் தந்தையும் இல்லை. வதியோதிபத் தாயோடு காலம் கழிக்கும் அவருக்கு குடியிருக்க வீடும் இல்லை. அடுத்த மாதம் திருமண பந்தத்தில் இணையவிருக்கின்றார். நடந்த சம்பவம் பாரதூரமானது என்பதை அவர் ஏற்றுக் கொள்கின்றார்.

எனவே அவரது எதிர்காலம், அவரது வயோதிபத் தாயின் நிலைமை என்பனவற்றைக் கருத்திற் கொண்டு அவரது எதிர்காலம் பாதிக்காத வகையில் அவரை மன்னித்து கருணைகாட்டி தீர்ப்பை வழங்குமாறு மன்றை வேண்டி நிற்கின்றேன்’ என்று வாதாடியிருந்தார்.

இந்நிலையிலேயே விசாரணை முடிவில் தம்புள்ளை நீதிவான் சஞ்ஜீவ ரம்யகுமாரவினால் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. உதயசிறிக்கு நீதிபதி வழங்கிய தீர்ப்பில், ‘விஷேடமாக வழக்கொன்றில் தீர்ப்பு வழங்கும்போது பிரதிவாதியின் குடும்ப நிலைமை, அவர் தவறு செய்யத் தூண்டிய காரணிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படல் வேண்டும். பிரதிவாதியால் செய்யப்பட்ட குற்றத்தின் பாரதூரம் கருத்திற்கொள்ளப்படல் வேண்டும்.
இந்தப் பிரதிவாதியால் செய்யப்பட்டுள்ள குற்றமானது உலக பாரம்பரிய சின்னமான சிகிரியாவின் கவி வரிகள் மீது கொண்டைப் பின்னால் கிறுக்கியமையாகும். புராதன முக்கியத்துவம் மிக்க நாட்டின் கடந்த காலம் தொடர்பில் சாட்சி சொல்லும் விலைமதிக்க முடியாத இடத்திலேயே இவர் இவ்வாறு நடந்து கொண்டு அச்சின்னங்களுக்குச் சேதம் விளைவித்துள்ளார்.

இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளரிடமிருந்து மன்று பெற்றுக் கொண்டுள்ள அறிக்கையில் அந்த சேதத்தை மீளமைக்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், எந்தவொரு சேதத்தையும் அதன் பழைய நிலைமைக்குக் கொண்டு வருவது சாத்தியமற்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குற்றவாளி தொடர்பாகத் தண்டனை அளிக்கும்போது அவரை புனர்வாழ்வளிக்கும்முகமாக தண்டனையளிப்பது ஒரு முறையாகும். குற்றத்தின் பாரதூரத்தினை உணர்த்துவது அவ்வாறான குற்றங்களைத் தடுக்கும் வகையில் தண்டனை வழங்குவது இன்னொரு முறையாகும். அதனால் இவ்வாறான அனைத்து நடவடிக்கைகளையும் கருத்திற்கொண்டே இந்தப் பிரதிவாதிக்கு தண்டனையை நாம் நிர்ணயம் செய்கின்றோம்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை மன்றுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகளின் பிரகாரமும் சட்டத்தரணிகளால் மன்றுக்குச் முன்வைக்கப்பட்ட விடயங்கள் ஊடாகவும் பிரதிவாதியான யுவதி, கட்டிளம் பருவத்தை உடையவர் என்பதைக் கருத்திற் கொண்டும் குற்றத்தின் பாரதூரத்தைக் கருத்திற் கொண்டுமே தீர்ப்பு வழங்கப்படுகின்றது.

அதன்படி குறித்த குற்றம் தொடர்பில் 1988ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க தொல்பொருள் திருத்தச் சட்டத்தின் (15) ஆ அத்தியாயத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்சத் தண்டனையை வழங்கத் தீர்மானிக்கின்றேன். அதன்படி குற்றவாளிக்கு 2 வருட சிறைத் தண்டனையை விதித்துத் தீர்ப்பளிக்கின்றேன்.’ எனத் தனது தீர்ப்பை அறிவித்தார்.

இவ்வேளையில் யுவதி தலையில் அடித்துக் கொண்டு நீதிமன்ற வளாகத்தில் ஓலமிட்டு உருண்டு புரண்டு அழுதார். இதனடிப்படையில் உதயசிறி அனுராதபுரம் சிறைச்சாலையில் இரண்டு வருடம் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார்.

-ஹூஸைன்-

Read more...

Monday, March 16, 2015

விஜயங்களும் விமர்சனமும்

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான பின்னர் குறுகியகாலத்தினும் பல அரச விஜயங்களை மேற்கொண்டுள்ளார். காரணம் என்ன? இவை எமக்குச் சொல்வது என்ன? அடுத்து சீனாவுக்கும் பயணம் செய்யவுள்ளார். ஒரு வாரத்துக்குள் இரண்டு முக்கிய விஜயங்களும் அதன் எதிர்வினைகளையும் இன்று பார்வையின் பக்கங்களில் பார்க்க இருக்கிறோம். 1) மைத்திரியின் லண்டனுக்கான அரசவிஜயம் 2) இந்தியப் பிரதமர் மோடியினுடைய இலங்கை விஜயம்.

மைத்திரியின் இந்திய விஜயம்

மைத்திரி ஜனாதிபதியாகிய உடன் இந்திய விஜயமொன்று மேற்கொண்டதை யாவரும் அறிந்ததே. இந்தியா தனது இராஜதந்திர நடவடிக்கைகள், உறவுகளை தம்நலன் கருதி மகிந்தருடன் தாமரையிலைத் தண்ணீர்போல் உறவுகொணடிருந்தார்கள். மகிந்தரின் சீன உறவு இந்தியாவின் அடிவயிற்றைக் காலக்கியது என்பதில் ஐயமேயில்லை. இலங்கைக்கு இறுதிப்போரில் இந்தியா உதவியது கூட மைந்தர் வைத்த செக்கில் அரக்க முடியாமையே. இருபுறமும் அணுவாயுதம் கொண்ட பிராந்திய வல்லரசுகள் எதிராகவும், இலங்கையுடன் பலமான நண்புறவைக் கொண்டிருப்பதும் இந்தியாவின் பாதுகாப்புக்கு என்றும் அச்சுறுத்தலே. இதை முறியடிக்கவே இந்தியாவும், தமது கொள்கை கோட் பாடுகளுக்கு இணங்காத சீனாவைப்புறம்தள்ள மேற்குநாடுகளும் முயன்று மைத்திரியை முன்னிறுத்தி வெற்றிகண்டுள்ளனர். இவை அனைத்தும் சுயநலன்களின் வெளிப்பாடே அன்றி தமிழர்கள், தமிழர்களின் அரசியல், சுயநிர்ணயம், எதிர்காலம், போர்க்குற்றமும் அதன் விசாரணைகளும் என்று எண்ணுவது மிகத்தவறானது. போர்குற்றம் என்பது மகிந்தர் கொம்பனியை வெருட்டிப்பணிய வைக்கும் ஒருகருவியாக மட்டமே உள்ளது.

மைத்திரியும் தன் வெற்றிக்கான நன்றியையும், அடுத்து என்ன செய்யவேண்டும், செய்யப்போகிறேன் என்பன பற்றிய உரையாடல் ஒன்று தேவைப்பட்டது. இதற்கு இந்த விஜயம் முக்கியமானது. அங்கே ஈழத்தமிழர்களுக்கான அரசியல், அரசியல்தீர்வு எதுவுமே பெரிதாகப் பேசப்படவில்லை என்பது கவலைக்குரியது. அதை நாம் எதிர்பார்த்ததும் கூட. மைத்திரி ஒருவிடயத்தை நன்கு கவனத்தில் கொள்வது மிக முக்கியமானது. மேற்குறிப்பிட்ட நாடுகள் இலங்கையைச் சுற்றியுள்ள பிராந்திய அதிகாரத்திலும், புதிய முதலீடுகளிலும், முதலீடுகளின் இலாபத்திலுமே அக்கறையாக இருக்கிறார்கள் என்பதை அறியவேண்டும். இவர்களின் இந்த ஆர்வத்தை இலங்கை நாட்டின் வளர்ச்சி க்கும், இனப்பிரச்சனைத் தீர்வுக்கும் சாதகமாக, இராஜதந்திர முறையில் காய்நகர்த்துவது இன்றை ஜனாதிபதியின் சவாலாக அமைந்துள்ளது. மைத்திரி இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் கருத்தாகவும் இனப்பிரச்சனைத் தீர்வை பக்கவாட்டில் போடுவார் என்றுமே எண்ணத்தோன்றுகிறது

தமிழர்கள் பிரச்சனை என்றும் தீர்க்கப்படாது இருப்பதே இந்தியாவிற்கு நன்மை பயக்கும். இலங்கையரசு இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் நிற்கத்தவறித் திமிறும் போது தமிழர்களின் பிரச்சனை துரும்புசீட்டு மேசையில் அடிக்கப்படும். ஆதலால் தமிழர்களின் பிரச்சனை தீர்வுக்கு வருவதை இன்றல்ல என்றுமே இந்தியா விரும்பாது. ஆனால் இந்தியாவைத் தாண்டி ஒரு தீர்வையோ தீர்மானங்களையோ எடுக்க மற்றநாடுகளும் விரும்பாது. இதுவே இற்றைவரை தமிழர்களின் பிரச்சனை ஆண்டாண்டு காலமாகத் தீர்க்கப்படாமல் இருப்பதற்கான காரணம். இது போன்றதே மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நடவடிக்கைகள். இந்திய ஈழத்தமிழர்கள் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் என்று எதிர்பார்ப்பது முழு முட்டாள்தனமாகும்.

மைத்திரியின் இலண்டன் விஜயம்

சென்றவாரம் பொதுநலவாய நாடுகளின் வரவேற்பு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக மைத்திரி இலண்டன் வந்ததும், தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததும், பிரித்தானியப்பிரதமர் கமரூண் மைத்திரிக்கு " தீர்வுகள் பேச்சளவில் இல்லாமல் செயலள வில் இருக்கவேண்டும்" என்று வலியுத்தியதும் அனைவரும் அறிந்ததே. இந்த வலியுறுத்தலூடாக தமிழர்களுக்குச் சொல்வது என்ன? நாங்கள் சொல்லியிருக்கிறோம் அவர் செய்வார் நீங்கள் அமைதியாக இருங்கள் என்பதே. இதுவேதான் இறுதிப்போர் காலத்திலும் நடந்தது. முடிவு என்னவாக இருந்தது? இது முழுமையான வெறும் கண்துடைப்பு அறிக்கை மட்டுமே. இவர்களின் அரசியல் உரையாடல்களில் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் ஆளமாக அலசப்பட்டிருக்கும் என்பது சந்தேகமே. போர்க்குற்ற விவகாரத்தில் ஊடகங்கள் கொடுத்த , கொடுக்கிற அழுத்தத்துக்கு நிகரான எந்த அழுத்தத்தையும் பிரித்தானிய அரசு கொடுத்திருக்கவில்லை.

பிரித்தானியாவில் மைத்திரிக்கெதிரான போராட்டம் சரியா? பிழையா?

மைத்திரிக்கு எதிராக புலிப்பின்னணி கொண்ட அமைப்பின் ஆதரவில் இந்த எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. இது எதற்கு? அவசியமா? எட்டியது என்ன? இதன் எதிர்கால தாக்கம் என்ன என்பதையும் பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம். இதற்கு ஒழுங்க மைப்பாளர்கள் சொல்லும் காரணங்கள் பலவாக இருந்தாலும் அவற்றில் சில
1)சிங்கள அரசுகள் தமிழர்களுக்கு எந்த ஒரு நல்லதீர்வையும் தரமாட்டார்கள்.
2) தமிழர்கள் மைத்திரியை ஏற்றுக் கொண்டார்கள் என்ற மாயையை உடைக்கவேண்டும்.
3) ஜனாதிபதியாகி இவ்வளவு நாட்களாகியும் தமிழர்களுக்கே தமிழர் பகுதிகளிலோ எதையும் செய்யவில்லை
4)ஆட்கடத்தல் கைது போன்றவை தொடர்ந்து நடக்கின்றன.
5) சிறைக்கைதியகள் இன்னும் விடப்படவில்லை.

முதலாவது தமிழர்களுக்கு நல்ல தீர்வும் கிடைக்காது என்பது ஊகமானாலும் அதற்கே சாத்தியம் அதிகம் உள்ளது? அடுத்துச் செய்யவேண்டியது என்ன? இந்தவகை எதிர்ப்பார்ப்பாட்டங்களை காலம் பூராய் செய்து வந்துள்ளீர்கள். அப்போது கிடைக்காத பலன் இப்போ கிடைத்துவிடுமா? ஈழத்தமிழர் அரசியல்வாதிகள் ஆரம்பங்களில் இணக்கவரசியலைக் கைக்கொண்டனர் சேர் பொன் இராமநாதன், அருணாசலம், மகாதேவன் போன்றோர். இவர்கள் கொழும்பு ரோயல்கல்லூரி மாணவர்கள், சிங்கள அரசியல் குடும்பங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். முதலாளித்துவ அரசியல் கொள்கை உடையவர்கள், அனைவரும் ஒரே குடும்பத்தினர். இந்த இணக்கவரசியலின் ஏமாற்றமும், எதிர்வினையுமே இன்று எதிர்பரசியலாக மாறி தமிழினத்தை இந்நிலையில் கொண்டுவந்து விட்டுள்ளது. இனி எதிர்பரசியல்தான் எமது அரசியல் என்று பிரகடனப்படுத்தப் போகிறீர்களா? எதிப்பரசியலில் விளைவை நாம் நேரியாக் கண்டுள்ளோம். இணக்கவரசியிலும் சாத்தியம் இல்லை. இது துரோகவரசியலாகவே முத்திரை குத்துப்படும்.

எதிர்பரசியல் பல துரோகவரசியலை உருவாக்கியது. சுருங்கச் சொல்லின் சோறா சுதந்திரமா? என்பதில் சோறு என்பது துரோகமாகக் கருதப்பட்டது. அதை ஆதரித்தவர்கள் துரோகியிகளாகக் கருதப்பட்டனர். வேறுவளியின்றி இவர்கள் இரண்டும் கெட்ட நிலையில் தமிழ்மக்களுக்கான துரோகவரசியலை நடத்தினர் என்று கருதப்பட்டனர். உ.ம் துரையப்பா

டக்லஸ் தேவா, கருணா போன்றவர்களின் அரசியலை இணக்க அரசியலாகப் பார்க்க முடியாது. சுதந்திரம்தான் வேண்டும் என்ற பக்கத்தினர் தமக்கும் தமது சுயநலங்களுக்கு எதிரான அனைவரையும் துரோகிகள் எனக்கருதத்தொடங்கி இளைஞர்களை உசுப்பி விட்டு தம்மைத் தமிழ்மக்களின் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொண்டு தமிழினத்துக்கான துரோக அரசியலையே நடத்தினர். ஆனால் இவர்களே தமிழர்களின் தானைத்தளபதிகளாக வலம்வந்தனர். இதன் படிமானங்களைப் புலிகளிலும் காணக்கூடியதாக இருந்தது. தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்ல புலிகளுக்கு எதிரான நல்ல தேவையான கருத்துக்களைக் கூறியவர்களும் துரோகிகளாகவே கருதப்பட்டனர். இதனால் நற்கருத்துக்களும் தேவையான அறிவுரைகளும் கேட்கப்படாமல் போனதன் விளைவே முள்ளிவாய் முடிந்தது. உ-ம் ஒஸ்லோ உடன்படிக்கை

இந்த அரசியல் வியாபாரத்தில் பல அரசியல் வடிவங்கள் இருந்தாலும் வெற்றிகரமானதும் உறுதியானதும் இராஜதந்திர அரசியல் ஆகும். நோர்வே போன்ற தந்திரோபாயம் கொண்ட நாடுகள் தமது விடுதலையைக் கூட கத்தி இரத்தம் இன்றி வென்றெடுத்தன.

இராஜதந்திர அரசியல்

அப்படி என்றால் என்ன? தந்திரோபாயம் என்பதால் ஏமாற்றுவதா? உறவாடிக் கெடுப்பதா? இதை சரியான தமிழில் சொல்வதாயின் சாதுரியம், அரசியல் தந்திரம்> அரசியல் விவகாரங்களை நடத்தும் சாமர்த்தியம். எதிரிக்கும் நோகாமல் எமக்கும் நோகாமல் தந்திரமாக எமது அரசியல் தேவைகளை, அபிலாசைகளைப் பூர்த்தி செய்தல் எனவும் கொள்ளலாம்.

இதற்கு அரசியல் தெளிவு, ஞானம், அணுகுமுறை, விட்டுக் கொடுத்தல், விட்டுப்பிடித்தல், எதிரியை அனுபவிக்கவிடுதல், போக்குக் காட்டல், காலம்கனியும் வரை காத்திருத்தல், உரிமை நோக்குக்காக இணக்க உடன்பாடுகள், நோக்கில், கருத்தில் எதிர்கால முடிவில் தெளிவாகவும் உறுதியாகவும் இருத்தல் போன்ற பலகாரணிகளில் இது தங்கியிருக்கும். எமது அரசியல் தலைவர்களில் இராஜதந்திர அரசியலைச் செய்தவர் ஜி ஜி பொன்னம்பம் எனக்கொள்ளலாம். இவரின் அரசியலும் முழுமையாக வெற்றியடையாது போனதற்கு மற்றைய தலைவர்களின் பாராளுமன்ற ஆசன ஆசைகளும் உணர்ச்சி அரசியலுமே. இவ்வாசனங்களுக்காக எதிர்பரசியல் கையில் எடுக்கப்பட்டு, உணர்ச்சியரசியல் பேசப்பட்டு பாராளுமன்றத் தளபதிகளாய் தங்களைத் தாமே பிரகடனப்படுத்திக் கொண்டு தமிழ்மக்களின் உரிமைகள், தேவைகள் அனைத்தும் அரசியில் சந்தையில் விற்கப்பட்டன.

எல்லோரையும் கூட்டிவைத்து முளங்குவதல்ல இராஜதந்திர அரசியல். எதையும் சொல்லியபின் செய்வது இராஜதந்திரமே ஆகாது. இதை மாகாபாரதத்தில் அழகாகக் காணலாம். கிருஸ்ண அவதாரத்தின் நோக்கமே பூமியின் பாரம் குறைப்பது. ஆனால் அதுபற்றி எந்தப்பேச்சும் இன்றி அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அதை நோக்கியே இருந்தது. பெரும் தொகைமக்கள் அழியவேண்டும் என்றால் அதற்கெதிராக கிருஸணர் இருக்கவேண்டும். பலமானது தொகையில் குறைந்தவர்களுக்கு அதிகம் சேரவேண்டும். தனது பெரும்படையையும் கெளரவர்பக்கம் கொடுத்துவிட்டு தான்மட்டும் தனியாக பாண்டவர் பக்கம் நின்றார் பரமாத்மா. எத்தனை பலவான்கள், சிறந்த வீரர்கள் இருந்தும் கிருஸ்ணரின் இராஜதந்திரத்தின் முன் தவிடுபொடியாயினர். பரமாத்மாவான கிருஸ்ணர் கெளரவருடன் என்றும் எதிரிபோல் நடந்துகொள்ளவில்லை. எம்தமிழ் எமக்கு இப்படியான பல படிப்பனைகளைத் தந்தும் நான் எதைப் பயன்ப டுத்தினோம்?

எதிர்ப்பரசியில்

மக்களின் அபிலாசைகள், கோரிக்கைகள், எதிர்பார்ப்புக்கள், அரசியல் எதிர்காலம் என்ன என்பதை வைத்தே இணக்கவரசியில் தீர்மானிக்கப்படும்.

இராமநாதன் காலத்து இணக்கவரசியலின் தோல்வி எதிர்பரசியலை வளர்ந்து உணர்ச்சியரசியல் மேலோங்கியது. இது இராஜதந்திர அரசியலையும் சேர்த்தே புதைத்தது. எதிர்பரசியலால் உணர்ச்சியரசியல் வெகுவேகமாக வளர்ந்தது. இது துவேசத்தை இன பாகுபாட்டை வகுத்தது. இந்த உணர்ச்சியரசியலில் வளர்தவர்கள் நிதானத்தை மறந்தனர். அரசியல் படங்காட்டல்கள் இறுதியில் ஆயுதங்களுடன் அக்கசன் படங்களாக, ஸ்டண் படங்களாகி முள்ளிவாய்காலில் முடிந்தது. ஐக்கிய இலங்கையை நோக்கிய அரசு இப்படியான தமிழரசியலை தடுத்திருக்க முயன்றிருக்க வேண்டும் அவர்களும் தமது பங்குக்கு பெளத்த இனவாத உணர்ச்சியரசியலில் இறங்கினார்கள். விளைவு காலம்பூராக நடந்து கலவரங்கள், இலங்கைக் பொருளாதாரத்தைத்தின்ற போர்.

முக்கிய குறிப்பு:- ஆயுதம், ஆயுதப்போராட்டங்கள் வெறும் கருவியே தவிர அது அரசியலாக முடியாது. அரசியலை வென்றெடுக்க ஆயுதம் என்ற கருவி பாவிக்கப்படலாம். அரசியலே ஆயுதத்தை வழிநடத்து வேண்டுமே தவிர ஆயுதம் அரசியலை வழி நடத்தினால் முடிவு புலிகளைப் போன்றே அமையும். இதுவரலாற்று உண்மை

அரசியல்கட்டமைப்புகள்

அரசியல் விஞ்ஞானம் படித்தவர்களுக்கு இக்கட்டமைப்புகள் பற்றிய அறிவு இருக்கும். தேர்தலில் மக்களுக்குக் கொடுக்கும் வாக்குறிதிகளை பலகட்சிகள் நிறைவேற்ற முடியாது போவதற்கு இக்கட்டமைப்போ காரணம். வெளியில் சொல்வது மிக மிகச்சுலபமானது. ஆனால் இலங்கையைப் போல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி உலகில் எங்கும் கிடையாது. இது தமிழ்மக்களை அடியோடு அழிப்பதற்கு உருவானது என்பதை யாரும் மறுக்கவும் இயலாது. நிறைவேற்று அதிகாரம் கையில் இருந்தாலும் அதை ஒழிப்பேன் என்று கூறி வந்தவர் அதை உடனடியாக நீக்காது இருப்பதற்கும் காரணம் உண்டு. நிறைவேற்ற அதிகாரத்தை நீக்கிவிட்டால் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தல் சறுக்கினால் இந்த அதிகாரத்தை மைத்திரி பயன்படுத்தலாம் அல்லவா. சர்வதியாரம் கொண்ட ஜனாதிபதியின் முன்னால் பாராளுமன்றம் ஆடுபொமமையே. தன் அரசியல் எதிர்காலம் கருதி மைத்திர ஜனாதிபதி முறைமையை 100 நாட்களினுள் நீக்கமாட்டார் என்பது திண்ணம்.

மைத்திரி நிலை

மைத்திரியின் நகர்வுகளில் இராஜதந்திரம் தென்பட்டாலும், அது தமிழ்மக்களுக்குச் சாதகதமாக அமையும் என்று எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் எதிர்பரசியலை உடனடியாக முன்னிறுத்தாது "நம்பநட நம்பிநாடவாதே" என்ற தமிழ்பழமொழிக்கிணங்க நாம் நடந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. மைத்திரி இலண்டன் வந்த போது எதிர்ப்பைக் காட்டியது சரியா என்ற கேள்வியும் எழுகிறது. இது எந்தவித அரசியலுக்கு இழுத்துச் செல்லப்போகிறது என்பது கேள்விக்குறியே.

படுதோல்வி அரசியல்வாதியான இரணில் தனது அரசியல் வாழ்வை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கான முன்நடவடிக்கைகளில் பலமாக ஈடுபட்டு வருகிறார். இது இவர்களின் கூட்டமைப்புக்குள் முறிவுகளை ஏற்படுத்தி முடமாகும் நிலையை உருவாக்கலாம். இங்கே த.தே.கூ நிலை என்ன என்பது பற்றியும், அதற்கான முன்னநடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும், இப்போதே தீர்மானிக்க வேண்டியவர்களாக உள்ளார்கள். இப்படியான முடநிலை நாளை மகிந்தரை மிக இலகுவாக துாக்கிவந்து அரசியலில் முன் நிறுத்தும். இனியும் மகிந்தர் தமிழ்பேசி தமிழர்களைத் தாஜா பண்ணும் அரசியலை கடசிவரை நடத்தமாட்டார். சூடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடாது. இந்நிலையைத் தடுப்பதற்காக ஊழல்குற்றச்சாட்டு, போர்குற்றம் போன்ற சுத்தியல்களால் தலையில் அடித்தாலும் ரணிலின் நரித்தன அரசியில் துணைபோகிறது போன்ற உருவப்பாடு தென்படுகிறது. மைந்தர் கொம்பனியை வைத்தே பாராளுமன்றத் தேர்தல் அசையவிருக்கிறது

இன்று மைத்திரியின் அரசின் அசைவுகளை நாம் நோக்கும் போது ஏதோ ஒரு பொறிக்குள் இவர்கள் அகப்பட்டவர்கள் போலவே உள்ளார்கள். இதற்கான காரணங்கள் பலவாக இருந்தாலும் இது அடுத்துவரும் பாராளுமன்றத் தேர்தலை நோக்கியதாகவே இருக்கிறது. அத்துடன் வாக்களிக்கும் மக்களுக்கான முன்னெடுப்புக்கள் எதுவுமே இல்லாமல் பிராந்திய நலன்சார்ந்த, முதலீடுகள் சார்ந்த விடயங்களே பலமாக முன்னெடுக்கப்படுகிறது. இதைத்தான் மேற்குலகமும் இந்தியாவும் எதிர்பார்க்கிறது. இதன் விளைவுகளை தேர்தலின் பின்புதான் எம்மால் வெளிச்சத்தில் பார்க்க முடியும். மகிந்தகொம்பனியின் ஊழல்கள் அப்பட்டமானவையாக இருந்தாலும் இது வரை அதற்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படாமைக்கும் காரணங்களுண்டு. இதை செயற்படுத்தும்போது மகிந்தர்கொம்பனியின் எதிர்ப்புகளால் இரக்கவாக்குக்களை இழக்க நேரலாம் என்ற பயமும் இவர்களுக்கு உண்டு. காரணம் இவர்கள் சிங்களவர்களின் பகுதியில் உண்மையில் தோற்றவர்களே.

தற்போது தமிழ்கைதிகளை விடுதலை செய்வதாலும், தமிழர் நலன்சார்ந்த விடயங்களில் ஈடுபடுவதாலும் சிங்களப் பகுதியிலுள்ள தமது வோட்டுக்களையே தக்கவைக்க முடியாது போகலாம். அடுத்து ஐநாவில் வெளியாக இருந்து அறிக்கையையும் நாட்டுக்குள்தான் போர்குற்றவிசாரணை என்பதும் மகிந்தகொம்பனிக்கு விடுமெச்சரிக்கையே. இது மகிந்த கொம்பனியின் ஆவேசமான அரசியலை தடுக்கும் என்பது உறுதி. அத்துடன் மைத்திரியின் கூட்டும் கூட ஸ்திரத்தன்மை அற்றது என்பதே இதற்கு முக்கிய காரணமாம். சர்வஅதிகாரம் கொண்ட அல்லது சர்வாதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை 100 நாட்களுக்குள் மைத்திரி செய்யவே மாட்டார் என்பது உறுதி. தற்போது தன்னைக்காக்க வைத்திருக்கும் துரும்பு வீணாக்க மைத்திரி விரும்பமாட்டார் முடிந்தவரை தனது இறுதிநாள்வரை இந்த அதிகாரத்தை மைத்திரியே வைத்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

மோடியின் இலங்கை விஜயம்.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புவாய்ந்ததாக இருந்தாலும் மோடி தனது நிலையை சொல்லாமல் சொன்னார். அதுவும் சுப்பிரமணியபாரதியார் பாடலாகச் சொன்னார். "சிங்களத் தீவினிற்கோர் பாலமைப்போம்" இதன் பிரகாரம் இலங்கை சிங்களத்தீவு என்பதை சொல்லாமல் சொல்வதுடன் எமது உறவு உதவி என்றும் சிங்கள அரசுக்கு இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். தமிழ்கவிஞனை தன்பேச்சில் இழுப்பதனூடாக தமிழர்களை தாஜாப்படுத்தாலாம் என்றும் எண்ணியிருக்கலாம். இப்படிப்பட்ட சின்னச்சின்ன இராஜதந்திரநடவடிக்கைளால் தமிழினம் காலம்பூராக ஏமாற்றப்பட்டு வந்ததை இவர்கள் நன்கு அறிவது. அதை இன்றும் பாவிக்க முயல்கின்றனர். இப்பாடலின் கருத்தை சரியாகப் புரிந்து உணர்ந்துதான் மோடி பேசியிருந்தால் இது எமக்கு எந்தச்சாதகமான தீர்வையும் எமக்குத்தராது.

சிங்களத்தீவினுக்கோர் பாலமமைப்போம் தமிழர்கள் நாம் தூணாக இருப்போம் என்ற மோடியின் கருத்துப்படியே இன்றுவரை இந்திய-இலங்கை அரசியல் நடந்தது. இதுதான் தொடரப்போகிறது என்பதை இந்தப்பேச்சு குறிகாட்டியது. இது தமிழர்களின் எதிர்கால அழிவையே குறி கூறி நிற்கிறது.

வேதனையுடன் விடைபெறும்
நோர்வே நக்கீரா 14.02.2015

Read more...

Sunday, March 15, 2015

நாம் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர். யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் அதுரலிய ரத்ன தேரர்.

தமிழ் மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் எதிரானவர்கள் அல்லர். பயங்கரவாதமானது எம் இரு சமுதாயத்தினரையும் அழிவை நோக்கி இட்டுச் சென்றதாலேயே அதனை தோல்வியடையச் செய்வதற்கு நாம் முயற்சித்தோம். பௌத்த பிக்குமார் என்ற வகையில் எம் மனதில் ஒரு காலமும் தமிழருக்கெதிரான மனோபலம் இருந்ததில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் சனிக்கிழமை (14) இடம்பெற்ற சிங்கள பௌத்த கலாசார விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

வடக்கு யுத்தத்தில் தமிழ் மக்கள் பெருமளவு துயரத்துக்குள்ளானார்கள். சிங்கள மக்களின் விகிதாசார அடிப்படையில் தமிழ் மக்களின் இழப்பு அதிகம். தமிழ் சமுதாயம் கடந்த தசாப்தத்தில் சிங்களவர்களுக்கு எதிராக போர் புரிவதாகவே நினைத்தது. சிங்கள, தமிழ் சமுதாயங்கள் மிகத் தெளிவாகப் பார்க்கவில்லை. சிங்கள, தமிழ் அரசியல்வாதிகளின் பிழையான அரசியல் கொள்கையே இந்த சமூகக் கிளர்ச்சிக்கு அடிப்படையானது.

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டமை அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் ஆகும். சிங்களவர்களின் எதிரி தமிழர்களோ தமிழர்களின் எதிரி சிங்களவர்களோ இல்லை.

வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த யுத்தம் இந்தளவுக்கு வீரியமடைவதற்கு காரணம் வெளிநாட்டவர்களின் தலையீடாகும்.

எமது அரசியல் தலைவர்கள் பிழையான வெளிநாட்டுக் கொள்கைகளை பின்பற்றினர். நாங்கள் அமெரிக்கர்களில் தங்கியிருந்த வேளை, இந்தியா சோவித் தேசத்தின் பாதையில் சிந்தித்தது. சோவியத் தேசம் இன்று இல்லாததனால் உலகச் சந்தை தொடர்பில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் போட்டி நடைபெறுகின்றது. நாங்கள் பொம்மலாட்டக்காரர்களாக இருப்பதால், விபரீதமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

விவசாய பொருட்களில் இரசாயன பாவனையால் ரஜரட்ட பிரதேத்தின் நீர் உவர்நீராக மாற்றமடைந்து, அங்கு சிறுநீரக நோய் பரவியுள்ளது. 1 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் மரணத்தை எதிர்நோக்கியுள்ளனர். இவ்வாறான நிலையில், வடமாகாண சபை இரசாயனமற்ற விவசாயக் கொள்கையொன்றை அறிமுகப்படுத்தலாம்.

யாழ்ப்பாணம், எதிர்காலத்தில் கடல்நீருக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது. அதிகபடியான காபனீரொட்சைட்டு வாயு காரணமாக கடல்நீர்மட்டம் அதிகரிக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபை இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை சூழல் ரீதியாக அழிவடையாத நாடு. அதனை பாதுகாக்கவேண்டும்.

மது, போதைப்பொருள் பாவனை, விபசாரம் என்பன சிங்கள, தமிழ் சமூகத்தில் அதிகரித்துள்ளது. இவற்றிலிருந்து சமுதாயத்தை மீட்டெடுக்கவேண்டும். எமது நாடு தற்போது பெரும் கலாசார சீரழிவுகளை எதிர்நோக்கியுள்ளது. கொழும்பிலிருந்து போதைப்பொருள் பாவனை தற்போது வடக்குக்கும் பரவி வருகின்றது. வடக்கு தெற்கு என்ற பாகுபாடின்றி எமது கலாசாரங்களை பாதுகாக்க குரல் கொடுக்கவேண்டும் என்றார்.

Read more...

Tuesday, March 10, 2015

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தமிழர்களுக்கே உரித்தானது: சந்திரகாந்தன்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி என்பது தமிழர்களுக்கு உரித்தானது. இதனைப் பேரம் பேசிப் பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் ஒன்று வருமாக இருந்தால் அதற்கு தார்மீகமாக நாங்கள் பொறுப்பெடுத்து செய்து காட்ட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று கல்லூரி மைதானத்தில் கல்லூரி அதிபர் ஏ.ஜெயஜீவன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக இருந்த எனக்கு பதவிகளுக்கு ஆசை கிடையாது. அது தானாக வந்தது.

நான் இரண்டாவது முறை மாகாண சபையில் போட்டியிட்டு எதிர்பார்த்த வாக்கு கிடைக்காவிட்டால் ஒரு அமைச்சராக வரமுடியாது என்று பஷில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆகியோரிடம் சொன்னேன். நான் நினைத்திருந்தால் அதிலே ஒரு அமைச்சராக வந்திருக்க முடியும்.

மாகாண அமைச்சராக இருந்து செய்யும் அபிவிருத்தியை விட அதிகமான வேலைத் திட்டத்தினை வெளியே இருந்து செய்திருக்கிறேன்.

கிழக்கு மாகாணம் முஸ்லிம், தமிழ், சிங்களவர்களுக்கு சொந்தமானது என்று சொன்னாலும், இந்த நாட்டிலே ஒரு அதிகாரப் பகிர்வு முறைமை தேவை என்று போராடியவர்கள் தமிழர்கள் தான். அதற்கு உயிர் கொடுத்தவர்கள் பலர். அந்த அடிப்படையில் தமிழர்களுக்கு உரித்தான விடயத்தை சந்தர்ப்பம் வருகின்ற போது பெற்றுக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக நாம் அரசியலுக்கு வந்து பிராந்திய அரசியல் கட்சியை உருவாக்கியிருக்கிறோம். இந்த மாகாணத்திலே வருகின்ற மாற்றத்திலே அதிகமாக தமிழர்களுக்கு செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குள்ளே இருக்கின்றது.

குறிப்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி என்பது தமிழர்களுக்கு உரித்தானது. இதனைப் பேரம் பேசிப் பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் ஒன்று வருமாக இருந்தால் அதற்கு தார்மீகமாக நாங்கள் பொறுப்பெடுத்து செய்து காட்ட வேண்டும் என்று எண்ணினோம்.

குறிப்பாக அரசியல் மாற்றத்திற்கு அப்பால் முஸ்லீம் காங்கிரஸ் மிகப் பெரிய சுருக்குவலையைப் போட்டது என்று சொல்லலாம். அது எங்களது அரசியல் சாணக்கியம் என்று முதலமைச்சர் சொன்னாலும், சம்மந்தன் அவர்களை இரண்டு முறை சந்தித்து இருக்கிறேன்.

முதலாவது முறையாக நான் சம்பந்தனை சந்தித்த போது அவர் என்னிடம் சொன்னார், தம்பி நீங்கள் எங்களிடம் இருந்தால் மகிழ்ச்சி முடிந்தால் முதலமைச்சர் எடுப்பதற்கு உதவி செய்யுங்கள் என்று கூறினார்.

நான் சொன்னேன். ஐயா ஆளுந்தரப்பில் 22 பேர் இருக்கின்றோம். அதில் 19 பேர் முஸ்லீம் காங்கிரசுக்கு முதலமைச்சர் வழங்குவதற்கு கைச்சாத்து இட்டுள்ளார்கள். இன்று நான் ஜனாதிபதியைச் சந்திக்கிறேன் அவரிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று சொன்னேன்.

அவரைச் சந்தித்த போது அவர் சொன்னார், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு எதிராக செயற்பட்டிருக்கலாம். தற்போது நான் தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்னுடன் இணைந்து பணியாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஏற்கனவே 19 பேர் கைச்சாத்திட்டுள்ள அடிப்படையில் நான் வெளியில் நின்று ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் கைச்சாத்திட்டேன்.

இதை இங்கிருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதை பிழையான விடயமாக நாங்கள் அங்கும் பேசி இங்கும் பேசி கூத்தடிக்கிறோம் என்று சொன்னார்கள்.

இப்படியே இருக்க, முஸ்லீம் காங்கிரஸ் கையொப்பத்தை எடுத்து விட்டு முதலமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்குள் இருந்த சிலரை அகற்ற வேண்டும் என்ற முடிவு பூதாகரமாக வெடித்து, பத்து உறுப்பினர்கள் வெளியேற வேண்டிய சூழல் வந்தது.

நாங்கள் பத்து உறுப்பினர்கள் வெளியேறினால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்த ஐந்து உறுப்பினர்கள், முஸ்லிம் காங்கிரசில் ஏழு உறுப்பினர்கள் சேர்ந்து பணிரெண்டு பேரும் எதுவும் செய்ய முடியாது.

ஏழு உறுப்பினர்களைக் கொண்ட கட்சி தீர்மானங்களை எடுக்கின்ற கட்சியாக இருக்க முடியும் என்றால், பதினொரு ஆசனங்களைக் கொண்ட கட்சி எவ்வாறு முடிவுகளை எடுக்கின்ற கட்சியாக இருக்க வேண்டும்.

அப்படியிருந்தும் இரண்டாவது தடவையாக சம்மந்தன் ஐயாவைச் சந்தித்துப் பேசினோம். நன்றாக வரவேற்று நீங்கள் கூறுவது நல்ல விடயம் எங்களுக்கு முதலமைச்சர் தருவீர்களா என்று கேட்டார்.

நான் சொன்னேன் முதலமைச்சர் மாத்திரம் அல்ல, அதனுடன் இன்னுமொரு அமைச்சையும் தருகின்றோம். அதே போன்று முஸ்லீம்களுக்கு இரண்டு அமைச்சுக்களும் சிங்களவர்களுக்கு ஒரு அமைச்சும் கொடுத்து சமத்துவமான ஆட்சியை ஏற்படுத்துவோம் என்று.

இதனை திரிவுபடுத்தி யோகேஸ்வரன் எம்.பி. கூறியிருக்கின்றாராம். அவரது தலைவரிடம் நாங்கள் போய் கெஞ்சியதாக நான் ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறேன்.

இந்தப் பதவிகளுக்காகப் போய் பேசுகின்ற நிலை வருமாக இருந்தால் அதனை விட மரணிப்பது மேல் என்று நினைக்கின்றவன் நான் எனத் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.எஸ்.குலேந்திரகுமார், உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.பாஸ்கரன், கிராம சேவை உத்தியோகத்தர் கே.கிருஸ்ணகாந்தன், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் ரீ.ரமேஸ் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், பழைய மாணவர் சங்க பிரதி நிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Read more...

Sunday, March 8, 2015

உலகமகளிர் தினம் 2015 . நோர்வே நக்கீரா

தினங்கள் பல, தினம் தினமாகத் திரிந்து கொண்டிருக்கின்றன. எவை மறைக்க மறுக் கப்பட்டனவோ அவை தினங்களாக நினைவூட்டப் படுகின்றன. எதற்காகக் கொண்டா டுகிறோம் என்று தெரியாமலே பலர் இத்தினங்களை கொண்டாடுகிறார்கள். இம் முறையாவது பெண்கள் தினம் எதற்காக, எப்போது உருவானது என்பதையும் இது தோன்றியதன் காரணத்தையும் இன்று பார்வையின் பக்கங்களில் பார்ப்போம்.

பக்கம் 1 ஆண்களுக்கெதிரானது அல்ல

உலகமகளிர் தினத்தில் அதிகமாகப் பேசப்படும் சொற்பதங்கள் பெண்ணியம் பெண் விடுதலை, ஆணாதிக்கம், சமவுரிமை, அடக்குமுறை என்பனவாகும். இவை எதற்காகப் பயன்படுத்தப்பட்டன என்பதைப் பலர் புரிந்து கொண்டதில்லை. இதை ஒரு கொண்டா ட்டம் போல் எண்ணுபவர்கள் பலருண்டு. இது ஆண்களுக்கு எதிரானது, ஆண்களுக்கு எதிராகப்போராட வேண்டும், ஆண்கள் போல் எமக்கு உரிமைவேண்டும், ஆண்கள் மாதிரி நடக்கவேண்டும் என்ற உணர்வுகளுடன் கொண்டாடுபவர்களை நாம் பார்த்திரு க்கிறோம். இதுவல்ல உலகமகளிர் தினத்தின் நோக்கமும் குறியீடும்.

பெண்கள் தமது உரிமைகளை முன்வைக்கும் போது அதிகாரவர்க்கம் அதைமறுத்தும், எதிராகவும் நடந்து கொண்டது. அன்று அதிகாரத்தில் இருந்தவர்கள் ஆண் ஆதலால் ஆண்களுக்கு எதிராகவே போராடவேண்டி இருந்தது. அதற்காக போராட்டமானது ஆண்களுக்கு எதிரானது அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்வது அவசியம். கறுப்பின மக்களின் விடுதலைக்காக வெள்ளையரான ஆபிரகாம் லிங்கன் போன்றோர் போராடியிருக்கிறார்கள். இதேபோல் பெண்களின் கோரிக்கைகளுக்கு உடன் நின்ற பல ஆண்களும் இருந்திருக்கிறார்கள். இப்பெண்களின் போராட்டம் ஆண்களால் கட்டப்பட்ட கட்டுமைப்புக்கும், மனநிலைக்கும் எதிரானது என்பதே பொருத்தமா னது. இந்த பெண்களின் மீதான அடக்குமுறை எப்படி உருவானது என்பதை அறிய மனிதன் மிருகமாக இருந்தகாலத்தில் இருந்து ஆய்வுகள் தொடங்கப்படவேண்டும்.

பக்கம் 2 எதற்காக போராட்டம்

1857ற்கும் அதற்கு முன்னரும் போர்களால் ஆண்களே அழிவைச் சந்தித்தனர். இதன் காரணமாக பெண்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை வேண்டி வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைக்கு உள்ளாயினர். ஆலைகள், நிலக்கரிச்சுரங்கங்கள், நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்புக்கள் கிடைக்கப் பெற்றபோதும் வேலையின் இவர்கள் அதிக பழுக்களைச் சுமக்கவேண்டியவர்களாகவும் குறைந்த ஊதியத்தையே கொண்டவர்களா கவுமே இருந்தனர். தொழிற்சாலைகளில் 25சதவீதமான பெண்கள் 75சதவீதமான ஆண் களுடன் வேலைபார்க்கும் போது அடக்குமுறைக்கும், சீண்டல்களுக்கும், ஏளனங்களுக் கும், வல்லுறவுகளுக்கும் உள்ளாயினர். சமவுரிமையும், சமவாய்ப்புக்களும், சமஊதிய
மும் மறுக்கப்பட்டன.

இவர்களுக்கு ஆரம்பக்கல்வி, மருத்துவம், வாக்குரிமைகள் அனைத்தும் எட்டாக் கனிகளாகவே இருந்தன. இவர்கள் வீட்டுவேலைக்காரியராகவும் பிள்ளைப்பேறும் இயந் திரங்களாகவுமே மதிக்கப்பட்டனர். வாக்குரிமை என்பது கருத்துரிமை என்பதே ஏற்பு டையது. ஆக பெண்களின் கருத்துரிமை மறுக்கப்பட்டது என்பதே சரியானது. இந் நிலையில்தான் பெண்கள் போராடவேண்டிய காலகட்டத்துக்குள் தள்ளப்பட்டனர்.

பக்கம் 3 இலங்கையில்

உலகின் முதற்பெண் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கா என்பதும், ஐரோப்பிய அமெரிக்கப் பெண்களுக்கு வாக்குரிமை கிடைப்பதற்கு முன்னரே இலங்கையில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது என்பது பெருமைக்குரியதானாலும் அதை சரியாக நடைமுறைப்படுத்தும் கலாச்சாரப்பொறிமுறை போதாது என்பதே எனது கருத்து. மேல்மட்ட, நடுத்தரவர்க்க பெண்களுக்கு இருந்த இவ்வுரிமைகள் கீழ்தட்டு மக்களுக்கு வளங்கப்படவில்லை என்பது மறுக்க முடியாதது. இதற்கு சமூக, கலாச்சார வர்க்க சாதியப்பாகுபாடுகளும் காரணமாயின.

பக்கம் 4 போராட்டம்

8ம் திகதி பங்குனிமாதம் 1857ல் அமெரிக்காவிலுள்ள நியூயோக் மாகாணத்தில் ஆடை ஆலைகளில் பணிபுரிந்த பெண்கள் ஒன்று திரண்டு அதிகவேலைச்சுமை குறைந்த ஊதியம் என்பவற்றுக்கு எதிராகக் கொதித்தெழுந்து போராட்டத்தில் குதித்தனர். அந்தப்போராட்டம் அதிகாரபீடங்களின் உதவியுடன் நசுக்கப்பட்டது. பெண்கள் போரா ட்டம் அடக்கப்பட்டு விட்டது என்று கனவு கண்டு கொண்டிருக்கும் வேளை அக்கினி குஞ்சுகளாய், அனல்பிளம்புகளாய், நீறுபூர்த்திருந்த நெருப்புக்களாய் பெண்களின் உணர்வுகள் உரிமைகோரி மீண்டும் உயிர்பெறத் தொடங்கின.

இந்த நீறுபூர்த்த நெருப்புக்கள் அமெரிக்காவில் மட்டுமல்லாது ஐரோப்பா, இரஸ்யா எங்கும் வேராடி விழுதுவிட்டு எரியத் தொடங்கின. பெண்களைப் புறம்தள்ளி தொழிற்சாலைகள் இயங்கமுடியாத நிலையை எட்டின. 1907ல் மகளிர் போராட்டம் உக்கிரமாக தலை தூக்கியது. ஐரோப்பா, இரஸ்யா அமெரிக்கா எங்கும் இப்பெண்கள் போராட்டம் ஆண்களின் அதிகாரவர்க்கத்தால் மீண்டும் அடக்கப்பட்டது.

பக்கம் 5 உலகமகளிர் தினம் அங்குரார்பணம்

1910ல் டென்மார்க்கில் பெண்களின் உரிமைக்கான மகாநாடு கூட்டப்பட்டது. உலமெங் கணும் உள்ள பெண்கள் அமைப்புக்கள் ஒன்று கூடினர். இந்த மகாநாட்டில்தான் உலகமகளிர்தினமாக அமெரிக்காவில் பெண்கள் மேற்கொண்ட முதற்போராட்டத்தை நினைவுகூரும் அல்லது மையப்படுத்தும் முகமாக பங்குனி 8 இரஸ்யாவைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்ட்ரா கெலனரா முன்மொழியப்பட்டது. இந்நாளே மகளிர்தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது

இத்தினம் 1921ல்தான் இது மிகக்கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இது 105 வருடங்களாகக் கொண்டப்பட்டு வந்தாலும் ஒரு சிலஆண்டுகளுக்கு முன்னரே இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இத்தினம் அறிமுகமானது. இன்னும் பல இஸ்லாமியநாடுகளில் இப்படி ஒரு தினம் இருப்பதாகவே அறியப்படவில்லை என்பது படுவேதனைக்குரிய விடயமாகும்.

பக்கம் 6 சமவுரிமைப் போராட்டம்

சமவுரிமை, பெண்விடுதலை என்பன புலத்தில் பலரால் குருட்டுக் கண்களாலேயே பார்க்கப் படுகிறது. இது இலவசமாகக் கிடைத்ததன் காரணமாகவே என்னவோ துர்பிரயோகமும் செய்யப்படுகிறது. இதற்கான விலையை அன்று பலர்பெண்கள் கொடுத்து ள்ளனர் என்பது குறித்தற்குரியது. உரிமை இருக்கு என்தற்காக சிறுபிரச்சனைக்கும் விவாகரத்துக் கேட்டு குடும்பங்களைப் பிரிக்கும் முயற்சியில் பெண்ணியவாதிகள் ஈடுபட்டமை வருந்துதற்குரியதே. சமவுரிமை என்றாலும் சரி பெண்ணுரிமை என்றாலும் சரி அது குடும்பங்களை சீர்பெற ஊக்குவித்து பெண்களின் குடும்பப்பழுக்களை குறைக்கும் நோக்காக அமையவேண்டும். ஆண்களுக்கு பெண்ணின்நிலையை புரியவைப்பதும் அதனூடாக குடும்பத்தை ஸ்திரமாக்கி நிறுவுவதும் சமவுரிமை பெண் ணுரிமைப்போராட்டங்களின் நோக்காக அமையவேண்டும்.

சமவுரிமை என்பது ஆண்களைப்போன்று நடப்பது ஆண்களின் கெட்ட பழக்கங்களில் உரிமை கோருவது என்று ஆகாது. ஆண்களுக்குக் கொடுக்கப்படும் சமவாய்ப்புக்கள் பெண்களுக்கும் கொடுக்கப்படவேண்டும் என்;பதற்காக ஆண்களின் தீயபழக்கங்களிலும் சமவுரிமை வேண்டும் என்பது வேடிக்கைக்குரியதாகும். உ.ம்:- ஆண்கள் மதுவரு ந்துகிறார்கள் புகைக்கிறார்கள் என்தற்காக அதிலும் உரிமை வேண்டும் என்று போராடுவது பெண்ணுரிமைப் போராட்டத்தின் நோக்கத்தை பெண்களே நசுக்குவதாக அமையும். பெண்ணின் உடலில் இயற்கையின் படைப்பில் நீர்தன்மை அதிகம் காரணம் இனப்பெருக்கம் (பிள்ளைப்பேறுதலுக்காக தேவை). இதனால் மதுவின் தாக்கம் அவர்களுக்கு மிக மிக அதிகம். ஒரு குப்பியுடனே கவிண்டு விடும் சந்தர்ப் பங்களில் கற்பிணியாக்கப்பட்டவர்களும் வேண்டா உறவில் கர்ப்பமும் நாம் நாளுக்கு நாள் கேட்கும் சம்பவங்களாகி விட்டன. இந்த மது என்பது ஆணாதிக்கத்திற்கு ஊட்ட ச்சத்தாக அமைந்துவிடுகிறது. இருவரும் மதுபோதையில் இருந்தார்கள் என்று ஆண் மன்னிக்கப்படுகிறான். இது போன்றதே புகைத்தலும். பெண்களின் புகைத்தலால் ஏற் படும் படிவுகள் எக்காலத்திலும் குழந்தைகளைப் பாதிப்புக்கு உள்ளாக்கி அவளின் பரம்பரை நாசத்தையும் ஏற்படுத்துகிறது. இதை சமவுரிமைப்போரட்டுமே பெண்ணுரிமைப் போராட்டமோ ஊக்குவிக்காது. இவை பெண்விடுதலையின் பக்கவிளைவுகள் என்றே பார்க்கவேண்டியுள்ளது. தெரிவு பெண்களுடையதாக இருப்பது தவறில்லை அது பரம்
பரை சமூகப்பாதிப்புக்குரியதாக இருத்தலாகாது.

பாதுகாப்பை அளிக்கவேண்டியவர்கள் ஆண்கள் என்ற நிலைமறந்து தப்பிக்கொண்டவர் களாக பக்கவிளைவுகளை நுகர்வோர்களாக ஆண்கள் மாறிவருவது பெண்விடுத லையைக் கொச்சைப்படுத்துவதாகவும் மனிதநேயத்தை மறுப்பதாகவுமே பார்க்க வேண்டியுள்ளது.

பக்கம் 7 புலத்துப்பெண்களின் நிலத்தின் தாக்கங்கள்.

இன்றைய பொருளாதரா நெருக்கடிகளைச் சமாளிக்கும் முகமாக பெண்களும் சரி சமமாக வேலைக்குப்போக வேண்டியவர்களாக உள்ளார்கள். இந்நிலையில் வீட்டு வேலை குழந்தை பராமரிப்பு என்னவற்றில் பங்கெடுக்க வேண்டிய நிலையில் ஆண் கள் உள்ளனர். இது பலவிடங்களில் தவிர்க்கப்படுகிறது. அன்று எமது மூத்தகுடியினர் ஆண் வேட்டைக்குப் போய் போரிட்டு களைத்து உணவு கொண்டுவர பெண் சமைத்து பிள்ளைகளையும் பார்த்தாள். இன்று ஆண்களின் பொறுப்பான பொருளாதாரச் சுமைக்கு தாக்குபிடிக்க முடியாது போகையில் பெண்களே முண்டு கொடுத்துத்தாங்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். ஆனால் பெணகள் பாரம்பரியாமாக செய்து வந்த சமைப்பது பிள்ளைபராமரிப்பது போன்ற தொழில்களை ஆண்கள் தரக்குறைவாக எண்
ணித் தன்வீட்டிலேயே செய்வதில்லை.

புலத்தில் எம்பெண்கள் பலர் வேலைக்குப்; போய்வந்து சமையலும் செய்து பிள்ளைக ளையும் கணவனையும் பராமரிக்கும் நிலையில் உள்ளார்கள். இவிரட்டை நிலையில் ஆண்கள் சுகம்காண்கிறார்கள். அதேவேளை பல ஆண்கள் பெண்களைவிட சமைய லில், பிள்ளைபராமரிப்பதில் திறமையானவர்களாக இருப்பது பெருமைக்குரியதே.

பக்கம் 8 பெண்விடுதலை பெண்ணியம்

பெண்ணியம்காக்கவோ பெண்விடுதலைக்காகவோ பெண்கள்தான் போராட வேண்டும் என்பதில்லை. இதற்கு ஆண்களின் பங்களிப்பும், புரிதலும் இருந்தாலே பெண்ணியமும் பெண்விடுதலையும் வெற்றி கண்டுவிடும். பெண்கள் ஆண்கள் ஒருவருக்கொருவர் எதிரிகள் அல்லர். படைப்பின் தத்துவமே ஒருவருடன் மற்றவர் இணைந்துதான் வாழ வேண்டும் என்றிருக்கிதே. படைப்பில் பெண் உடல், உணர்வு ரீதியாகப் பலவீனமா னவர்களாகவும் உள்ளரீதியாக பலமானவளாகவுமே படைக்கப்பட்டுள்ளாள். இந்த இயற்கையின் நியதி மாற்ற முடியாது. ஒரு பெண்ணை பெண்ணாக அவளின் பலவீனங்களுக்குப் பலமாக ஆண்களை உருவாக்குவதிலேயே பெண்ணுருமையின் முழுவெற்றியும் தங்கியுள்ளது.

ஆண்கள் பெண்களைப் பலம், பலவீனங்களைப் புரிந்து, அறிந்து கொள்வதன் மூலமாகவே சமவுரிமை, பெண்விடுதலை பெண்ணுரிமை என்பன சாத்தியப்படும் என்பது எனது தாழ்மையான கருத்து. ஒரு பெண் பூப்பு எய்துவதற்கு முன்னரே அவள் தாய்மைக்காகத் தயார்படுத்துப்படுகிறாள். இது ஒரு வேதனை வெட்கம் வலி கொண்ட ஒர் உணர்வுப் போராட்டம் என்பது எத்தனை ஆண்களுக்குத் தெரியும்? நாம் ஒரு திறந்த சமூகத்தில் வாழ்ந்தாலும் பெண்களைப்பற்றிய அறிவுரீதியாக நாம் மூடப்பட்டே உள்ளோம். மாதம் மாதம் அவர்களினுள் நடக்கும் மாற்றங்கள் என்ன? உணர்வு போராட்டங்கள், உடல்மாற்றங்கள் என்ன என்பன பற்றிய தனிமையான படிப்பும் அறிதலும் ஆண்களுக்கு அவசியம் என்பது என்பது எனது முன்மொழிவு.

எமது பெற்றோர் பாட்டன் பீட்டனுக்கு பெண்கள் ஆண்கள் போன்றவர்கள் ஆனால் மென்மையானவர்கள் என்பது மட்டுமே புரியும். வைத்தியசாலை சென்று மலசலம் கழிப்பதுபோல் பிள்ளையைப் பெற்றுக் கொண்டு வருகிறார்கள் என்றே எண்ணுவார் கள். அதன் வலி பேதனைகளை பார்தது கூட இல்லை. 3, 3.5கிலோ அரிசியை அல்லது பொருளை வயிற்றில் கட்டிக்கொண்டு எத்தனை மணித்தியாலங்கள் இருக்க முடியும் என்று கேளுங்கள்? அத்துடன் பிள்ளை வெளியே வருவதற்கான தயாரிப்புகளில் பெண்ணுடல் வலுவிழந்து கொண்டிருக்கும் என்பதையும் அறியார்கள். பிள்ளைப் பேற்றின் போது 32 எலும்புகள் முறியும் வேதனை ஒருதாய்க்கு இருக்கும் என்பதை அறிந்து கூறுகிறது விஞ்ஞானம்.

புலம்பெயர் நாடுகளில் பாலியல் படிப்பு 12வயதில் ஆரம்பித்தாலும் அதன் பிரதி பலன்கள் இன்னம் சரியா அமையவில்லை என்பது மிகவேதனைக்குரியது.

பக்கம் கடமை

இந்த உலகமகளிர் தினத்தில் பெண்களை, அவர்களின் தன்மையை, வேதனைகளை, வலிகளை புரிந்து கொண்டு நடப்பதே பெண்ணியத்தின் வெற்றியும், எம்தாய்க்கும், எம்மைத் தந்தையாக்கிய பெண் தெய்வங்களுக்கும் செய்யும் அன்புப்பரிசுமாகும். ஆண்கள் பெண்களை புரிந்து, உணர்ந்து கொள்வதற்காக, எனது கடமையாக ஒரு காணொயை தருகிறேன். இங்கே பிள்ளைப்பேறின் போது ஏற்படும் வலி 32 எலும்புகள் முறிவதற்குச் சமமானது. இதை இரண்டு ஆண்கள் இலத்திரன் முனைகளில் அனுபவிக்கிறார்கள் பாருங்கள். இதைப் பார்த்துவிட்டாவது உங்கள் தாயையும் மனைவியையும் ஒருதடவை முத்தமிடுவீர்களாயின் அது போதும் நீங்கள் அவர்களை புரிந்து கொள்ளத் தொடங்குகிறீர்கள் என்பதற்கு ஒரு ஆதராமாகும்

வாழ்க உலகமகளிர்.



Read more...

இந்திய அரசுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஒரு திறந்த மடல்.

எதிர்வரும் 13ம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வரவுள்ள நிலையில், இந்திய பிரதமருக்கு இலங்கையின் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் தலைவர் சகாதேவன் பகிரங்க மடல் ஒன்றை எழுதியுள்ளதுடன் மடலின் பிரதியை இலங்கைக்கான இந்திய துாதரகத்தில் கையளித்தும் உள்ளார்.

'இலங்கை விஜயத்தின் போது இலங்கை தமிழர் நலன் சார்ந்த விடயத்தில் முன்னகர்வுகள் இன்றேல் எதிர்ப்புக்கள் வெளிக்கிளம்பும்'

ஈழத்தமிழ் மக்களுக்கு இருந்த வரலாற்று ரீதியான பிரச்சனைகள் இந்திய தலையீட்டின் காரணமாக மிகவும் சிக்கலுக்கு ஆளாகின. சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் என்ற பெயரில் கழுத்தறுப்பு ஒப்பந்தம் ஒன்றில் தொடங்கி இந்திய இலங்கை ஒப்பந்தம் என்ற பெயரில் அமைதிப்படையினை அராஜக படையாக இலங்கைக்கு அனுப்பியதுடன் நில்லாமல், இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட காரணமான யுத்தத்திற்கு, நிதியுதவி, ஆயுத தளபாட உதவி, இராஜதந்திர உதவி, தொழில்நுட்ப உதவி என்ற பெயர்களில் பல்வேறு உதவிகளை வழங்கியது. இவையெல்லாம் ஈழத்தமிழரின் எதிர்கால நலனுக்காக என்று பிரச்சாரப்படுத்தப்பட்டாலும், இன்றுவரை எந்த நன்மையினையும் வடக்கு கிழக்கு தமிழ் சமூகம் அடையவில்லை.

இலங்கை தமிழ் மக்களுடன் அவர்களின் நலன் சார்ந்த விடயங்களில் இந்தியாவின் பங்களிப்பும், அக்கறையுமே இலங்கை இந்திய உறவுகளை நீடிக்க வைக்கும் என்று இந்திய முன்னணி பத்திரிகைகளான இந்தியன் எக்ஸ்பிறஸ், தினமணி, இந்து பத்திரிகைகளினதும், ஏனைய தமிழ் பத்திரிகைகளினதும், தமிழக அரசியல் தலைவர்களினதும், கருத்துக்களை நாம் இங்கு கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இந்தியாவின் இலங்கை தலையீடு காரணமாக தமிழ் மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டன.

1. ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மலையக தமிழ் மக்கள் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் நாடற்றவர்களாக்கப்பட்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் நாடு கடத்தப்பட்டமை இலங்கை தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட முதலாவது அநீதியாகும்.

2. அமைதிப்படையாக வந்த இந்திய இராணுவத்தில் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த கொலை, கொள்ளை, கர்ப்பழிப்பு சம்பவங்கள்.

3. தமிழ் மக்களையும், தமிழ் இளைஞர்களையும் அவர்களது அரசியல் போராட்ட முனைப்பையும், ஆயுதப்போராட்டமாக தூண்டிவிட்டு தமிழ் பிரதேசமெங்கும் அழிவுகளை ஏற்படுத்தியமை.

இதன் காரணமாக...

* தமிழ் மக்கள் தமது பூர்வீக வாழ்விடங்களை இழக்க நேரிட்டது. மாபெரும் இடப்பெயர்வுக்கு ஆளகினர். வடக்கு கிழக்கு மலையகத்தில் தமிழர்களின் சனத்தொகை குறைந்து போனது.

* எமது கடற்றொழில், விவசாயம், கால்நடைவளர்ப்பு, கல்வி, கட்டுமானம், தொழிற்றுறைகளும், கலை, கலாச்சாரங்களும் பாரம்பரிய சமுதாய உறவுகள் என்பன சீர்கெட்டன.

* தமிழ் இளைஞர்கள், யுவதிகள், சிறுகுழந்தைகள், புத்தியீவிகள், அரசியல் தலைவர்கள் என்போர் வகைதொகையின்றி அழிக்கப்பட்டனர்.

* சிறிலங்கா அரசுடன் இராஜதந்திர உறவை பேணுவதற்கும், தெற்காசியாவில் தனது அந்தஸ்தினை பேணுவதற்குமான ஒரு உபாயமாகவே இலங்கை தமிழ் மக்கள் நலன் என்ற கோசத்தை இந்திய மத்திய அரசும், இந்திய உளவுத்துறையும், பயன்படுத்துவதாக இங்குள்ள தமிழ் மக்கள் சந்தேகிக்கின்றனர்.

* வடக்கு கிழக்கு தமிழ் மக்களினதும், ஒட்டுமொத்த இலங்கை தமிழ் மக்களினதும் கௌரவத்தை, நலனை பேணுவதன் மூலம் மட்டுமே இந்தியா தெற்காசியா பிராந்தியத்தில் தனது பாதுகாப்பையும், அந்தஸ்தையும், தக்கவைக்க முடியும் என்பதுடன், இலங்கையுடனான உறவுகள் தொடர்ந்து நீடிக்க ஒரே வழியாகும்.

* இந்திய தமிழக தமிழ் மக்களும், இலங்கை தமிழ் மக்களும் இனத்தால், மொழியால், கலாச்சாரத்தால், பாரம்பரியத்தால், வரலாற்றால் ஒன்றுபட்டவர்கள். நிலத்தால், அரசியல் காரணத்தால் எமக்கிடையே உள்ள இடைவெளியை பிரிவு என்று எவரும் எண்ண முடியது. எமது உணர்வை பிரிக்க எவராலும் இயலாது.

* மிக முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் இந்திய அரசின் நேரடிப் பங்களிப்புடன் நடைபெற்ற இறுதிப்போரில் தமிழ் மக்கள் எஞ்சியிருந்த அனைத்தையுமே இழந்தனர். இந்திய மத்திய அரசின் மௌனமே எம்மை அழித்தது. இன்னும் அழித்துக்கொண்டே இருக்கிறது.

* வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அனைத்து உரிமைகளும் கிடைத்து வாழ வழி செய்வோம் என்ற கோசத்தை இலங்கை அரசின் யுத்தத்திற்கு சார்பாக எழுப்பி யுத்தத்தை நடத்தி, யுத்த வாக்குறுதிகள் பலவற்றை வழங்கிய இந்தியா இதுவரை வடக்கு கிழக்கிற்கு செய்தது என்ன?

* யுத்தத்திற்கு முன்னரும், யுத்தத்திற்கு பின்னரும் வெவ்வேறு நாடுகளும், வெவ்வேறு நிறுவனங்களும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்ய திட்டமிட்டபோது தனது அரசியல் நலன்களுக்காக அவ்வாறான திட்டங்கள் வடக்கு கிழக்கில் வந்துவிடாமல் தடுத்தது இந்தியா தான் என்ற உண்மையை நாம் இவ்விடத்தில் கட்டாயம் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

* வடக்கு கிழக்கு புகையிரதப்பாதை, வீதிப்போக்குவரத்து அபிவிருத்திக்கு அவுஸ்ரேலியா, சீனா அரசாங்கங்கள் உதவி செய்ய வந்ந போது அதனை தட்டிப்பறித்து இந்திய செய்துள்ள உதவியானது தமிழ் மக்களின் நலன் சார்ந்ததாக இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவின் சுயநல அரசியல் நலன் சார்ந்ததே ஆகும்.

* வடக்கு கிழக்கு அபிவிருத்தியை முற்றிலுமாக பொறுப்பேற்ற இந்தியா இன்று தமிழ் மக்களை கைகழுவி விட்டுள்ளது என்பதே உண்மை. காலம் தாழ்த்துவதும், நீர்த்துப்போகச் செய்வதும், கிடப்பில் போடுவதும், இறுதியில் கை விடுவதும் மட்டுமே ஈழத்தமிழர் நலனில் இந்தியாவின் இராஜதந்திர நிலைப்பாடாகும்.

இதற்கு ஒரு நல்ல உதாரணமாக இந்திய வீட்டுத்திட்டம் பற்றி இங்கு குறிப்பிடலாம்...

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் முடிந்தவுடன் மகிந்த ராஜபஷ்ச தலைமையில் இந்திய சென்ற தூதுக்குழுவிடம் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50,000 வீடுகளை கட்டித் தருவாதாக வாக்களித்தது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் குடியிருப்புக்கள் வழங்கப்படும் என்றார்கள், விதவைகளுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கப்படும் என்றார்கள். 13திருத்தத்தை 1310 ஆக்குவோம் என்றார்கள்.

இப்போது நடப்பது என்ன. 2009லேயே ரூபா 600,000 (ஆறு இலட்சம்) ஒரு வீட்டுக்கு தேவை என்றோம். ரூபா 550,000 தருவதாக உறுதியளித்தார்கள். 50,000 வீடுகள் வன்னி யுத்த இழப்பிற்கு கட்டித்தருவோம் என்றார்கள். பிறகு இதனை வடக்குக்கு என்றார்கள். பின்னர் வடக்கும் கிழக்குக்கும் என்றார்கள். பிறகு வடக்கு கிழக்கு மலையகம் என்றார்கள், பின்னர் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கும் என்றார்கள். ஆனால் கடந்த 6 வருடத்தில் நடந்தது என்ன? ஒதுக்கப்பட்ட ரூபா 27,500 மில்லியனில் இன்றுவரை செலவளிக்கப்பட்டது ரூபா 9,900 மில்லியன் ரூபா மட்டுமே. இந்தியன் வங்கியில் வைப்பு செய்யப்பட்டுள்ள இந்த பணத்துக்கான வட்டி மட்டும் கடந்த 6 வருடங்களில் செலவளிக்கப்பட்டுள்ளது என்ற உண்மை நிச்சயமாக அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றாகும். ( கணக்கு இதுவே – 27,500மில்லியன் ஒ 6மூ வட்டி வருடம் ஒன்றிற்குஒ6 வருடங்கள் ஸ்ரீ 9900 மில்லியன்) கணக்கு எவ்வளவு கர்ச்சிதமாக பொருந்துகிறது பார்த்தீர்களா.

இதை விட இந்திய உதவித்திட்டம் என்று அறிவிக்கும் போது நிதி இந்திய ரூபாவிலா, அமரிக்க டொலரிலா, இலங்கை ரூபாவிலா செலுத்தப்படுகிறது என்பதனை சரியாக அறிவிக்கவில்லை.

அமெரிக்க டொலரில் இந்த நிதி வழங்கப்பட்டதாக கருதப்படுவதால் வேறு ஒரு வகையில் பார்ப்போமானால் 2009ஆம் ஆண்டு இந்திய வீட்டுத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதி அமெரிக்க டொலரில் 252.29 மில்லியன் டொலருக்கும் அது அப்போதைய இலங்கை ரூபாவில் 27,500 மில்லியன் ரூபாவாகும். 2015 இன்று டொலரிற்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு குறைந்து 132 ரூபாவாக உயர்ந்துள்ளது. இப்போது வீடு ஒன்றிற்கு வழங்க வேண்டிய தொகையும், மொத்த முதலீடும் பின்வருமாறு அமைகின்றன.

2015 இன்று ஒரு வீட்டிற்கு 660,000 ரூபா வழங்க வேண்டும். அண்ணளவாக பார்த்தால் வீடு ஒன்றிற்கு இந்திய அரசு மிச்சம் பிடித்துள்ள தொகை 110,000 ரூபா. இதன் மூலம் இந்திய அரசின் சேமிப்பு சராசரியாக 5,500 மில்லியன் இலங்கை ரூபாய்கள். கணக்குகள் வெளிப்படையான இந்த விடயத்தில் பகிரங்க விவாதத்திற்கு வரும்படி சம்மந்தப்பட்ட எவருக்கும் சவால் விடுக்கிறேன். ஆக வடக்கு கிழக்கு வீடமைப்பு திட்டத்தில் இந்திய அரசுக்கு வெளிப்படையான வருமானம் 55,000 மில்லியன் ரூபாவாகும். இதனை விட அரசியல் ஆதாயமும் உண்டு.

அடுத்த மோசடி என்னவென்றால் வீடுகளை இழந்த அனைவருக்கும் வீடு என்று அறிவித்துவிட்டு குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, பிள்ளைகள் வயது, வருமானம், தொழில் தகைமை, என்று பல்வேறு அளவுகோல்களை வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கிடையில் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட வழி வகுத்துள்ளது. யுத்தத்தில் குடும்ப உறுப்பினர்களை பலரையும் பறி கொடு;த்து அனாதையாகிப்போய் தனி நபராக உள்ளவர்களுக்கு வீடு கிடையாது. ஆவர்கள் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்கவும் முடியாது. யுத்தத்தில் அனைத்தையும் இழந்த காரணத்தால் ஒரு வீட்டைக்கூடு பெற உரிமையற்ற நிலை அவர்களக்க இது என்னையா அநியாயம். அனைத்தையும் இழந்த அரச ஊழியர்கள் மாத வருமானம் பெறுகிறார்கள் என்பதால் அவர்களுக்கும் வீட்டுத்திட்டம் கிடையாதாம்.

தங்கள் பெறுமதியான வாகனங்கள், சொத்துக்கள் எல்லாம் முள்ளிவாய்க்காலில் கைவிட்டு வெறுங்கையோடு முகாமிற்குப்போன எம்மக்கள் திரும்பி வந்து பார்த்தபோது தங்கள் சொத்துக்கள் எல்லாம் இரும்பு விலைக்கு அரச ஆதரவோடு விற்கப்பட்டுக்கொண்டிருக்க இந்திய உதவித் திட்டம் என்ற பெயரில் வடக்கு கிழக்கு போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்பட்ட உழவு இயந்திரங்களும், கர ரக வாகனங்களும் முறை கேடாக யார்யாருக்கோ பகிரப்பட அவர்கள் கந்துவட்டிக்கு வாகனம் எடுத்து இன்று கடனாளியாய் போனார்கள்.

ஒட்டுமொத்தத்தில் கட்டுமானம் தொடக்கம் அனைத்து விடயங்களிலும் ஊழல் நடந்துள்ளது. ஆரம்ப காலத்தில் வீட்டுத்திட்டத்திற்கு பொறுப்பாக இருந்த உள்ளுர் அதிகாரிகளுக்கும் ஊழலுடன் தொடர்பு இருப்பதாக நாம் அப்போதைய இந்திய தூதுவர் மகாலிங்கத்திடம் வற்புறுத்தியதையடுத்து நடைமுறையில் சில மாற்றங்கள் வந்தாலும் இன்றுவரை கட்டுமானம் மூலப்பொருள் விநியோகம், பயனாளிகள் தெரிவு என்பவற்றில் ஊழலும், முறைகேடுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வடக்கு புகையிரத பாதை திட்டத்திலும் வெளிப்படைத் தன்மை என்பது எதுவுமே கிடையாது. பற்கத்தை நடுகை செய்தல், கிறவல் பரவுதல், சல்லிக்கல்லு பரவுதல் இரயில் நிலையங்கள் புனரமைத்தல், பாலங்கள் மதல்கள் அமைத்தல், எதிலும் வடமாகாணத்தை சேர்ந்த எந்த கண்காணிப்பு நடைமுறைகளும் பின்பற்றவில்லை. சொல்லப்போனால் தமிழ் அரசியல்வாதிகளும்;, தமிழ் எம்பிக்களும் திறப்புவிழாவிற்கும், புகையிரத ஓட்டத்திற்கும் மட்டும் வருவார்கள். ஏனென்றால் இந்திய திட்டங்களில் ஏதும் விமர்சனத்தை செய்து தமிழக மக்களின் உறவை பகைத்துக்கொள்ளக்கூடாது என்ற அக்கறை தான் இதற்கு காரணம்.

எமது கேள்விகள் இவைதான்...

1. வடக்கு புகையிரதப் பதை புனரமைப்புக்கான நிதி எவ்வளவு?

2. எவ்வளவு செலவிடப்பட்டது?

3. யார் யாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது?

4. புகையிரத பாதையை மட்டும் அமைப்பதா அல்லது புகையிரத நிலையங்களையும் புனரமைப்பதா?

5. என்ன காரணத்திற்காக வடக்கு புகையிரத நிலையங்களின் புனரமைப்பிற்கு தென்பகுதி நிறுவனங்களிடம் நிதி பெறப்பட்டது?

6. ஓமந்தையிலிருந்து காங்கேசந்துறை வரை 130 கி.மீ புனரமைக்க 6வருடங்கள் ஏன் ஆகியது?

7. மதுரையிலிருந்து இராமேஸ்வரம் 125 கி.மீ பாதை புனரமைப்பு எவ்வாறு 3 மாதத்தில் முடிக்கப்பட்டது?

8. அவ்வாறாயின் வடக்கு புகையிரத பாதை தாமதத்திற்கும், இழுத்தடிப்பிற்கும் காரணம் என்ன?

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி என்ற பெயரில் பணத்தை இந்திய புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான IRCON (ஐ.ஆர்.சீ.ஓ.என்) நிறுவனத்தில் முதலீடு செய்துவிட்டு வீட்டுத்திட்டத்தில் போன்று வட்டிக்கு தான் எங்களுக்கு திடமா?

எமது மக்களின் கேள்விகளை கேள்விகளை பகிரங்கமாக கேட்கவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இந்திய பிரதமாராகிய தாங்கள் இலங்கை வருவதற்கு முன்னர் எமது பிரச்சனைகளின் தீர்வுக்கான முன்மொழிவுகள் எமது மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைய வேண்டும். தனியே உங்களது வருகையையிட்டு நாம் மகிழ்வடைவதற்கு எந்த காரணங்களும் எமக்கில்லை.

உங்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கும், விலையுயர்ந்த ஆடைகளை அணிந்துகொண்டு உங்களுடன் கலந்துரையாடுவதற்கும், விருந்துண்பதற்கும் பலர் இப்போதே விண்ணப்பித்திருக்கலாம். அது ஒரு உணர்வற்ற சந்திப்பு என்றே நீங்கள் கருத வேண்டும்.

தமிழ் மக்களின் ஆதரவுடன் நடந்த ஆட்சி மாற்றத்தின் மூலம் தெரிவாகிய இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது தாங்கள் இருவரும் வெளியிட்ட கூட்டுப்பிரகடனத்தில் இலங்கை தமிழர் நலன் சார்ந்து எதுவுமே தெரிவிக்காத காரணத்தாலே பெரும் அதிர்ப்தியடைந்துள்ள எமது மக்கள் சார்பாக இவற்றை பகிரங்கமாக தெரிவிக்கவேண்டிய நிலைப்பாட்டிற்கு நாம் தள்ளப்பட்டோம்.

இதற்கு காரணம் கூறும் சிலர், அவ்வாறு ஏதேனும் தமிழ் மக்களுக்காக நீங்கள் கூறினால் சிங்கள சமூகம் அதிர்ப்தியடையக்கூடும் என்று தங்களுக்கு அறிவுறுத்தியிருக்கலாம் என்ற காரணத்தை சரியான நியாயப்பாடாக நாம் ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை.

எமது நலனில் உங்களது உண்மையான அக்கறை இருப்பின் அது உருப்பெற வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும்.

நியாயங்கள் கிட்டாத பட்சத்தில் எமது நியாயத்திற்காகவும், உரிமைக்காகவும் அகிம்சை வழியில் தொடர்ந்து போராடுவது என்ற நிலைப்பாட்டிலேயே நாம் தொடர்ந்தும் இருந்து வருகிறோம். பாரத தேசத்தின் தந்தை மகாத்மாகாந்தி யின் அகிம்சைப் போராட்டத்திற்கு வடிவம் கொடுத்தவர்கள் தமிழ் மக்களே என்ற உண்மை உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம். 30 வருடங்கள் அரசியல் ரீதியாக போராடினோம். இன்னும் 30 வருடங்களுக்கு அகிம்சை ரீதியாக போராடவும் நாம் தயாராக இருக்கிறோம்.

எமது கண்ணீருக்கு காரணமானவர்கள் எமது கண்ணீருக்கு பதில் கூறாமல் நிலையான ஆட்சியினை நடத்த முடியாது. கண்ணகியை விதவையாக்கிய பாண்டிய அரசு விழ்ந்தது என்றால், ஒரு இலட்சம் ஈழத்தமிழ்ப்பெண்களை விதவைகளாக்கிய எந்த அரசு தான் வாழும். எமது சாபம் தலைமுறை தலைமுறைக்கும் தொடரும்.

எனவே நாம் உங்களிடம் இரக்கத்துடனும், வேதனையுடனும், இயலாமையுடனும் கேட்கிறோம். உண்மையின் பெயரால், சத்தியத்தின் பெயரால், நீதியின் பெயரால் கேட்கிறோம். இழப்புக்கள் மத்தியில், அழிவுகள் மத்தியில் தாங்கொணாத் துயரத்தோடும், கண்ணீரோடும் கேட்கிறோம்.
இலங்கை தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள தாய்த்தமிழக உறவுகளின் தூதுவராக உங்களை நினைத்து கேட்கிறோம். தாங்கள் இலங்கை வருவதற்கு முன்னார் யுத்தத்தின் அடையாளமாகிப்போன எமது பின்வரும் சுமைகளை இறக்கி ஆறுதல் பெறுவதற்கு ஒரு திட்டத்தை அறிவிக்குமாறு கேட்கிறோம்.

1. அரசியல் கைதிகள் தடுப்பில் உள்ளவர்கள் விடுதலை .

2. கடத்தப்பட்டோர் காணாமற்போனோரை கண்டுபிடித்தல்.

3. யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்பீடுகள் வழங்குதல்.

4. விதவைகள், அனாதைகள், காயமடைந்தோருக்கான உதவிகள்.

5. வடக்கு கிழக்கு பிள்ளைகளின் கல்விக்கு வேலைவாய்ப்புக்கு உதவுதல்.

6. இடம்பெயர்ந்த, புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு தமது சொந்த காணிகளை கிடைக்கச் செய்தல்.

7. உள்ளுரில், சர்வதேசத்தில், அகதிகளாகவுள்ள எம்மக்களின் மீள்குடியேற்றம், தொழில், வீட்டு வசதிகள்.

8. போரில் இறந்தவர்களை நினைவு கூற நினைவுச்சின்னம் ஒன்றையும், நினைவு நாள் ஒன்றையும் பிரகடனப்படுத்தல்.

9. ஐக்கிய நாடுகள் பேரவையின் தீர்மானத்தில் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தல்.

10. அரசியல் தீர்வு ஒன்றுக்கான ஏற்பாடு

தமிழக மக்களுக்கும், ஈழத்தமிழ் மக்களுக்கும் உள்ள பூர்வ தொடர்புகள் காரணமாக இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டினை ஈழத்தமிழ் மக்களும்;;;, ஈழத்தமிழ் அரசியல் வாதிகளும் எப்போதும் நினைத்;;ததில்லை
இலங்கை தமிழ் பத்திரிகைகளும் அவ்வாறன நிலைபபாட்டையே கொன்டுள்ளன. ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமது நலன் சார்ந்த விடயங்களில் எழுப்பப்படும் கோசங்கள் தவறுதலாகக்கூட தமிழகத்திற்கு எதிராக அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்திய மத்திய அரசு ஐ.நா தீர்மானம் உட்பட இலங்கை தமிழர் நலன் சார்ந்த விடயத்தில் காட்டும் மெத்தனப்போக்கு, உதாசீனப்போக்கு என்பவற்றினைக்கூட எமது மக்கள் பெரிதாக எடுத்துக்கொண்டது கிடையாது.

விடுதலைப்புலிகளின் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் கூட புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இந்தியாவின் உறவுகளை புதுப்பித்துக் கொள்வதற்காக திரு.பிரபாகரன் அவர்களுடன் கடும் நிலைப்பாட்டினை எடுத்திருந்தார் என்பதும் உண்மையாகும். இலங்கை தமிழ் மக்களின் அரசியல், போராட்டம், வாழ்வியலில் இந்தியாவின் தலையீட்டின் காரணமாகவே பெரும் அனர்த்தங்கள் ஏற்பட்டன. மிக முக்கியமாக 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தின் வருகையின் பிறகே கடத்தல்கள், காட்டிக்கொடுக்கல்கள், சகோதர, போராளி குழுக்களுக்கு இடையே சண்டைகள், சட்டத்திற்கு புறம்பான வதைமுகாம்கள், தடுத்து வைத்தல்கள், காணாமற் போகச்செய்தல், சட்டத்திற்கு புறம்பான கொலைகள், பழிவாங்கல், கலாச்சாரம் என்பன ஏற்படுத்தப்பட்டன. தமிழ் இளைஞர்கள் கட்டாய ஆயுதப்பயிற்சிக்காக பிடித்து செல்லப்பட்டனர். ஆவர்கள் கையில் ஆயுதங்கள் திணிக்கப்பட்டன. அதுவே இன்றுவரை எமது தமிழ் சமூகத்தை புற்றுநோய் போல் அழித்துக்கொண்டே இருக்கிறது.

இனியும் எம்மால் பொறுக்க முடியாது. இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இம்மாதம் 13ஆம் திகதி இலங்கை வரும் தாங்கள் இலங்கை அரசியல் தலைவர்களை சந்தித்து 14ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியல் தலைவர்களை சந்திக்கப்போவதாக அறிகிறோம்.

தாங்கள் மன்னார் புகையிரதப் பாதை திறப்புத்திட்டத்தை தொடங்கி வைப்பதனையும், சந்திப்புக்கள் மேற்கொள்ளப்படுவதையும் தவிர வேறு என்ன நடவடிக்கை என்பதனையும் அறிய ஆவலாய் இருக்கிறார்கள். எமது மக்களின் மேற்படி கோரிக்கைகள் தொடர்பாக எதிர்வரும் 12.03.2015 திகதிக்கு முன்னர் ஆக்கபூர்வமான பதில் ஒன்றை எதிர்பார்க்கிறோம். தவறும் பட்சத்தில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தமது சோகத்தையும், அதிருப்தியையும் வெளிக்காட்டும் முகமாக தாங்கள் இலங்கையில் தங்கியிருக்கும் நாட்களில் அகிம்சை ரீதியில் போராடுவார்கள். இது எமது உரிமைக்கான போராட்டத்தின் மீள் தொடக்கமாக அமையவும் கூடும்.

நன்றி



சீ.வி.சகாதேவன்
தலைவர்
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்
எம்.எஸ்.சாந்தகுமார்
செயலாளர்
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம


Read more...

Sunday, March 1, 2015

புலிகளின் தலைமையே தமது உறுப்பினர்களை நடுத்தெருவில்விட்டது! ஏனைய கட்சிகள் கட்டுக்கோப்புடன் உள்ளது. சுவிசில் வித்தியாதரன்.

„என்னுடைய விபச்சாரம் இல்லை இல்லை என்னுடைய எழுத்தூ ஆயுதம்' எனும் புத்தகத்தை கொழும்பில் ரணில் விக்கிரமசிங்காவின் கால்களுக்கு சமர்பணம் செய்து வெளியிட்டுவிட்டு அதை புலம்பெயர்ந்த மக்களிடம் காசாக்க வந்திருந்த வித்தியாதரனிடம் , சூரிச்சில் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் சுவிஸ் கிளை செயற்பாட்டாளரும் , சமூகம் சார்ந்த செயற்பாட்டாளருமான சுதாகரன் என்பவர் „தாங்கள் ஆரம்பிக்க இருக்கின்ற அரசியலியக்கம் முன்னாள் புலிகளியக்க உறுப்பினர்களுக்கு மாத்திரமானதா அன்றில் ஏனைய இயக்க உறுப்பினர்களையும் இணைத்து கொள்வீர்களா? என்று கேட்டுள்ளார்.

இக்கேள்விக்கு பதிலளித்த வித்தியாதரன் ஏனைய ஆயுதக்குழுக்கள் இலங்கையில் அரசியல் கட்சிகளாக செயற்படுவதாகவும், அவர்களின் தலைமைகள் கட்டமைப்புடன் உள்ளதாகவும் புலிகளின் தலைமையையே அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் உறுப்பினர்கள் அரசியல் தலைமைத்துவமற்ற நிலையில் உள்ளதாகவும் நீலிக்கண்ணீர் வடித்துள்ளார்.

அதாவது பிரபாகரன் பேசிய தமிழை பாலசிங்கம் மொழிபெயர்ப்பு செய்வதுபோல் சொல்வதாயின், சகல இயக்க தலைமைகளும் தங்களுடைய தலைமை குணங்குறிகளுடன் தமது தொண்டர்களை கொள்கை வழி தவறாது நேரிய பாதையில் கட்டுக்கோப்புடன் வைத்திருப்பதாகவும் , புலிகளின் தலைமை மாத்திரமே அதன் உறுப்பினர்களை நடுத்தெருவில் விட்டு விட்டு சென்றுள்ளார்கள் என்றும் மூ(ஓ)த்த ஊடகவியலாளர் வித்தியாதரன் கூறுகின்றார் என்று சொல்லலாம் அல்லவா.

„என்னுடைய எழுத்தாயுதம்' என தன்னுடைய புழுகை அவிட்டு விட்டிருக்கின்றார் வித்தியாதரன். வித்தியாதரனுடைய ஆயுதம் தொடர்பாக கேட்பதற்குரிய இரண்டே இரண்டு கேள்விகள், உங்களுடைய ஆயுதத்தினூடாக எதை சாதித்தீர்கள்? உங்களுடைய ஆயுதத்தால் மக்களுக்கு கிடைத்த நன்மை ஏது? நீங்கள் செய்து கொண்ட குற்ற ஓப்புதல் வாக்குமூலத்தில் „என்னுடைய எழுத்துக்களை வாசித்துத்தான் வடகிழக்கு பொடிகள் இயக்கத்துக்கு போனவர்கள்' என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களுடைய எழுத்தை வாசித்து போனவர்கள் வென்றார்களா? இல்லை தோற்றார்களே, ஆகவே „என்னுடைய தோற்ற ஆயுதம்" என்று மறு பதிப்புக்களுக்கு பெயரிட முடியுமா? முடியாதுதான்போகும் காரணம் அடித்த புத்தகங்களை கூட்டம் கூட்டிக் கூட்டி தனவந்தர்களின் கைகளில் கொடுத்து அவர்கள் பொக்கட்டுக்குள் செருகும் ஆயிரங்களுடன் லட்சங்கள் சேரலாம். ஆனால் எஞ்சிய புத்தகங்களை கடலைக்கடைளும் எடுக்காது காரணம் அதில் அழுக்குகள் படங்களாக உள்ளன.

மேலும் உங்களுடைய எழுத்தாயுதத்தால் புலிகளில் இணைந்த பொடிகள் பின்னர் பாசிசக் கொள்கைகொண்டு தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பறித்தபோது, தமிழ் இளைஞர்களை தெருவில் டயர்போட்டு எரித்தபோது, அவர்களின் எழுத்துரிமை, வாசிப்பு உரிமை, விரும்பிய தொலைக்காட்சியை பார்க்கும், வானொலியை கேட்கும் உரிமையை பறித்தபோது, பச்சிளம் பாலகர்களை பலவந்தமாக படையில் இணைத்தபோது, கற்பிணிகளை தற்கொலைதாரிகளாக மாற்றியபோது உங்களது எழுத்தாயுதம் கொழும்பிலுள்ள விபச்சாரிகளின் சாமனுக்குள்ளே இருந்தாக பேசுகின்றார்களே.

மேலும் நீர் உன்னை துணிச்சலான ஊடகவியலாளன் என்று வேறு பிதட்டுகின்றீரே! உன்னிடம் நான் ஒரு கேள்வியை தொடுக்கின்றேன். உனது எழுத்தினூடாக புலிகளமைப்பில் இணைந்து கொலைஞர்களாக மாறி மனித உரிமைகளை மீறியவர்களை நோக்கி அம்மனித உரிமை மீறல்களை நிறுத்துமாறு என்றாவது எழுதியுள்ளீரா அன்றில் குற்றத்தை தூண்டிய நீர் அந்த குற்றத்திற்கு மன்னிப்புக்கோரியுள்ளீரா?

காலத்துக்கு காலம் அரியணை ஏறுகின்றவர்கட்கும் பலமிக்கவர்களாக நிற்கின்ற முதலாளிவர்க்தத்திற்கும் குசாதுக்கி திரியும் தாங்கள் புரிவது ஊடகவியல் அல்ல அதற்கு பெயர் அழுக்கெடுப்பு. சற்று பாமரனுக்கும் விளங்கக்கூடிய பாஷையில் கூறுவதாயின் சலவைதொழில்.

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்களை தெரிவு செய்யும்போது தாங்கள் ரிஎன்ஏ யிடம் ரிக்கட் கேட்டு நின்றீர்கள். உதயனை வைத்து உனக்கு ரிக்கட்டா , போ வெளியே என தங்களை தங்கள் மைத்துனன் வெளியே தள்ளி அந்த ரிக்கட்டை பெற்றுக்கொண்டார். அப்போது நான் சுயேட்சையாக போட்டியிட்டு வாக்குளை உடைப்பேன் என்று ரிஎன்ஏ யை மிரட்டியபோது, கொஞ்சம் பொறப்பா „மச்சான் மத்தியில் மாகாணத்தில் நீதான்' என்று சம்மந்தர் விட்ட விடுகையில் வட மாகாண முதலமைச்சர் கனவில் சஞ்சரித்தது மாத்திரமல்ல , எதிர்வரும் வட மாகாண சபைத்தேர்தலில் நானே முதலமைச்சர் வேட்பாளர் வந்தவுடன் பாருங்களேன் விளையாட்டை என்று மாறிய முடிச்சுக்கதைகளை நான் இப்ப அவிழ்க்கவிரும்பவில்லை. ஒரே ஒரு படத்தை மாத்திரம் இங்கு வெளியிடுகின்றேன். நோர்வேயில் உண்டியலை நிரப்பிக்கொண்டு சொச்சத்தை பரிஸ் சூரிச்சிலும் நிரப்ப உள்ளதாக செய்திகள் வந்துள்ளது. அங்கு வரவுள்ள மந்தைகளுக்காவது இந்தப்படத்தின் உண்மைக்கதையை சொல்லுங்கள். சொல்லாவிட்டாலும் நான் சந்தர்ப்பம் வரும்போது யார்யார்? எங்கே? எப்போது? என்னநோக்கத்துடன் ? என்ன விடயம் பேசப்பட்டது? என்பவற்றை தெளிவாக எழுதுவேன்.



இதைப்பார்த்தவுடன் அனாமதேய இணையங்களை நடாத்துபவர்கள் வெளியே வரவேண்டும் என்று நான் சூரிச்சில் வைத்து ஏற்கனவே சொல்லியிருக்கின்றேன் என்று மீண்டுமொருமுறை கூறலாம். அதற்கான பதிலையும் இப்போதே கூறுகின்றேன். நான் அனாமதேயமாக இருந்து யாருக்கும் கூசா துக்காமல் தவறை தவறு என்று சொல்வதையே சிறந்த சேவையாக கருதுகின்றேன். மாறாக மூ(ஒ)த்த ஊடகவியலாளர் என்று வெளியே வந்து பின்னர் ஏதாவது கட்சியை மிரட்டி சீட்டு கேட்டு பாராளுமன்று போகும் நோக்கமோ முடிச்சு மாறும் நோக்கமோ அல்லது யாருடய வியாபாரத்தில் பங்காளியாகும் நோக்கமோ கிடையாது.

முன்னாள் புலிகளுக்காக கட்சி ஆரம்பிக்கப்போகின்றேன் என்று கூறியபோது எத்தனை முன்னாள் புலிகள் உங்கள் கட்சியில் இணைய இருக்கின்றார்கள் என்ற கேள்வி ஒரு அரங்கில் கேட்கப்பட்டது . யாழ்பாணத்தில் ஒருவரும் இல்லை சிலவேளை வெளிநாடுகளுக்கு தப்பி ஒடியிருக்கின்ற முன்னாள் புலிகள் இணையலாம் என்று எதிர்வுகூறப்பட்டது. ஆனால் தங்கள் சுவிஸ் ஒஸ்லோவில் நிகழ்வுகளில் கலந்திருந்தோரில் ஐரோப்பாவிலே பதவி தேடி அலைந்து திரிகின்ற பச்சோந்தி பசங்கள் பத்துபேரைத்தவிர ஒரு முன்னாள் புலி உறுப்பினர் கூட வந்திருந்தாக அறியக்கிடைக்கவில்லை.

எனவே நான் உங்களுக்கு இறுதியாக விடுக்கும் சாவல் யாதெனில் யாழ்பாணத்தில் 12000 முன்னாள் புலிகளை புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்துள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. நிச்சயமாக அவர்களில் சுமார் 2000 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். அங்கு 10000 முன்னாள் புலிகள் உள்ளனர். அவர்களில் 500 பேரை ஒன்று கூட்டி நாங்கள் வித்தியின் கட்சியையும் அவரது தலைமைத்துவத்தையும் ஏற்றுக்கொள்கின்றோம் என சத்தியம் செய்ய செய்யுங்கள் பார்ப்போம்.

அதன் பின்னர் „நான் த.தே.கூ வை மிரட்டிய கட்சி ஆயுதம்' என்று மேலுமொரு புத்தகத்தை எழுதி ஐ.தே.கட்சியின் எதிர்காலத் தலைவர் சஜித் பிரேமதாசவின் கால்கழுவலாம்..

பீமன்

Read more...

இளவாலை பொலிஸ் நிலையத்தை அகற்றக்கோரி குதிரைக் கஜேந்திரன் ஆர்ப்பாட்டம்.

கஞ்சா தங்கம் கடத்தலுக்கு போடப்பட்ட தடைக்கல்லை அகற்று என்பது மறுகருத்து!

குதிரையோடி பல்கலைக்கழகம் சென்ற காரணத்தால் செல்லமாக குதிரை கஜேந்தி என்றழைக்கப்படுகின்ற மகிந்தவின் எடுபிடி இன்று இளவாலை பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பொலிஸ் நிலையத்தை அப்புறப்படுத்தவேண்டும் என்று கூக்குரலிட்டுள்ளார்.

காங்கேசன்துறை பொலிஸ் நிர்வாக வலயத்திற்குட்பட்ட இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் சுமார் 80 உத்தியோகித்தர்கள் கடமையாற்றுகின்றனர். இவர்களது சேவை அப்பிரதேத்திலுள்ள சுமார் இருபத்துமுவாயிரத்து மக்களுக்கு கிடைக்கின்றது.

பிரதேசத்தில் இரவு நேரங்களில் அவசர நோய் ஏற்பட்டால் ஜீப் வண்டியில் நோயாளியை வைத்தியசாலைக்கு கொண்டு சேர்ப்பது முதல் பிரதேசத்தில் நடைபெறுகின்ற வீட்டுச்சண்டை, ரோட்டுச்சண்டை, களவு, கசிப்பு வடிப்பு, பெண்களுக்கெதிரான வன்செயல்கள், கொள்ளை, கொலை வரை சகல விதமான குற்றங்கள் மற்றும் சமூகவீரோத செயல்களுக்கு எதிராகவும் நீதியை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இப்பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக கடமையேற்றுள்ள மிகவும் இளவயதும் துடிப்புமுள்ள பொலிஸ் பரிசோதர் மஞ்சுள டீ சில்வாவின் செயற்திறன் மக்களை மிகவும் கவர்ந்திழுத்துள்ளதுடன் அவர் மக்களை தன் தோழர்களாக்கி அப்பிரதேசத்தில் இடம்பெற்றுவந்த பாரிய குற்றச்செயல்கள் பலவற்றை முறியடித்துள்ளார்.

முஸ்லிம் வர்த்தகர்களால் மாதகல்லூடாக கடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற போதைப்பொருட்களில் முறையே இரு தடவைகளில் 105 மற்றும் 81 கிலோ கஞ்சா கடந்த காலங்களில்; கைதுசெய்யப்பட்டதுடன் தொடர்ந்து இவ்வாறான கடத்தல்களை முறியடிக்கும் நோக்கில் தொடர் முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றார் பொலிஸ் பரிசோதகர் மஞ்சுள டீ சில்வா. இப்போதைப்பொருள் இறக்குமதியின் ஊடாக தமது சமுதாயம் அழிந்து விடக்கூடாது என்ற நோக்கில் பிரதேச மக்கள் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு மிகவும் ஒத்தாசை புரிந்து வருகின்றனர்.


அத்துடன் பிறிது இரு சந்தர்ப்பங்களில் மாதகல்லில் வைத்து முறையே 48 , 10 கிலோகிராம் உருக்கிய தங்கங்கள் கடத்தப்பட்டபோது கடற்படையினரால் பைப்பற்றப்பட்டவிடயம் நினைவிருக்கலாம். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் புலிகளுக்கு சொந்தமான 1300 கிலோ கிராம் ஓரிடத்திலுள்ளதாகவும் அவை சிறிது சிறிதாக உருக்கப்பட்டு இந்தியாவிற்கு கடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்றும் இதற்கும் குதிரை கஜேந்திரனுக்கும் தொடர்பு உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இந்த 1300 கிலோ தங்கம் தமிழ் மக்களிடம் புலிகள் அபகரித்த தங்கமும் மக்கள் வறுமையில் புலிகளின் வங்கிகளில் அடவு வைத்தவையும் தவிர வேறொன்றும் இல்லை. குறித்த தங்கத்தின் மறைவிடத்தை கண்டு பிடிப்பதற்கு பொலிஸ் பரிசோதகர் மஞ்சுள சில்வா தலைமையாலான பொலிஸ் குழு உட்பல பல பொலிஸ் குழுக்கள் புலனாய்வில் இறங்கியுள்ளதுடன் கரையோர பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையிலேயே குதிரை கஜேந்திரன் இளவாலை பொஸிஸ் நிலையத்தை அகற்றக்கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் நகைப்புக்கிடமான விடயம் யாதெனில் சுமார் 23000 மக்களுக்கு பொறுப்பான பொலிஸ் நிலையத்தினை அகற்றக்கோரி குதிரைக்கு பின்னால் நின்றவர்கள் சுமார் 20 பேர். இந்த இருபது பேரும் யார் என்பதும் குதிரையினால் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் இந்த 20 பேரே உள்ளனர் என்பதும் ஊடகங்களை தொடர்சியாக பார்வையிடுகின்றோருக்கு புரியும்.

இறுதியாக குறித்த பொலிஸ் நிலையத்தை குதிரை அகற்றக்கோருவதற்கான காரணம் மக்கள் மீதுள்ள அக்கறையில் அல்ல. மாறாக மேற்படி கஞ்சா மற்றும் தங்கக்கடத்தல்காரார்களுக்கான வழியை திறந்து கொடுப்பதற்கு என்றும் அவர்களிடம் இதற்காக குதிரை பெருந்தொதை பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.

எது எவ்வாறாயினும் இன்று யாழிலுள்ள படையினர் வெளியேறவேண்டும் என்ற கோரிக்கையில் குறிப்பிடதக்க நியாயம் இருந்தாலும் சிவில் நிர்வாகத்தை நிலைநாட்ட குடிகொண்டுள்ள பொலிஸாரை வெளியேற்று என்று கோஷமிடுவது கேலிக்குரியது.

இலங்கை காணிச்சட்டத்தின் பிரகாரம் பொது தேவை ஒன்றுக்கு தனியாரின் காணியை சுவீகரிக்கலாம் என்பதும் பொலிஸ் நிலையம் என்பது அதியாவசிய தேவை என்பதும் அதற்காக காணி ஒன்றை சுவீகரிக்கலாம் என்பதையும் குதிரை குதிரையோடாமல் பல்கலைக்கழகம் சென்றிருந்தால் படித்திருப்பார் என்று கூறத்தோன்றுகின்றது.






Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com