Friday, February 27, 2015

சட்டப் புலியையும் கலைக்க பாக்கும் கட்டப்பிராய் நரி !

ஊரில வீரவசனம் பேசி மக்களை உசுப்பேத்திப்போட்டு அதுகள் கஞ்சிக்கும் வழியில்லாமல் கஷ்டப்பட தான் மட்டும் மகிந்த வச்ச விருந்தில எல்லாம் கலந்து வாய்கிழிய சிரிச்சு கூழை கும்புடு போட்டு முந்தி ஒண்டுக்கும் வழி இல்லாமை நிண்டபோது, தான்ஒரு தமிழ் கட்சியிண்ட செயலாளர் நாயகமாக இருந்தும் மகிந்தவின்ர மீன்பிடி அமைச்சில,மகிந்த சம்பளத்துக்கு வேலை கொடுத்த நன்றிக்கு வாலை ஆட்டி, திண்டு வண்டி வீங்கினவர் இப்ப சுமந்திரனை சீண்டுறார் .

பின்னணி தெரியாம பேசக் கூடாது. சட்டவாதி எண்டதால வார்த்தையள வைச்சு விளையாடுறார் எண்டவருக்கு தெரியும் , இரவோட இரவா கோத்தபாய கொழும்பில விடுதிகளில இருந்து சனத்த பஸ்சில ஏத்தி அனுப்பவிருக்க சுமந்திரன் தன்ர சட்ட மூளையால தான் அதுக்கு எதிராகஇடைக்கால தடை உத்தரவு எடுத்தவர் . அப்ப அவர் எம் பி இல்ல .ஆனா நீங்கள் எம் பி.

நீங்கள் முட்டாள் இல்லை தான். எத்தனையோ பல்கலைகழக பொடியள் படிப்பை விட்டுப்போட்டு மண்ணில் நிண்டு போராட. நீங்கள் மட்ராசில படிச்சு பட்டம் வாங்கினதாய் பாராழுமன்ற பதிவில இருக்கு. நீங்கள் படிச்சு வாங்கினதோ இல்ல ஆரையும் பிடிச்சு வாங்கினதோ அது சிதம்பர ரகசியம். விசாரிச்சு பாத்தாதான் தெரியும். ஏனெண்ட அப்ப நீங்கள் படிப்பை விட அந்த பெட்டையின்ர பொடியனை வெருட்டி கலைச்சுபோட்டு அவவோட கோகிலம் பாடுறதில தான் படுபிசியா திரிஞ்சனியள். இடைக்கிடை இஞ்சவந்து அரசியல் துறை பொடியளை உசுப்பேத்தி போட்டு போட்டில இந்தியா திரும்பிபோய் களைப்பு தீர கோகிலம் பாடி திரிஞ்சனியள்.

உள்குத்து வேலை மன்னனான நீங்கள் நெருப்பு தினம் நடத்தி தோழர்களை உசுப்பேத்தி புலிகளுக்கு பலிகொடுத்து போட்டு பிறகு இந்தியன் அமைதி படையோட வந்து எங்கட சனத்தின்ர அமைதிய கெடுத்தியள்.

வரதர் படிச்சவர் கொஞ்ச காலம் விரிவுரையாளராய் இருந்தவர். அவரோட புடுங்கு பட்டியள். பாராளுமன்றத்தில மாகாண சபை அதிகாரம் பற்றி பேசாம ஊரில மண்டையன் குழு நடத்தி எல்லாரையும் திரும்பவும் இந்தியா ஓடவச்சியள்.

கட்சிய புனரமைக்க கேதீஸ்வரன் திட்டமிட நீங்கள் குடுத்த குடைச்சலாலா அவரையும் விலகி போகப் பண்ணினியள். கட்சி பணத்துக்கு கணக்கு கேட்டவை , சொத்துக்களை ஏன் உங்கட குடும்ப சொத்த வைச்சிருக்கிறியள் எண்டு கேட்டவைக்கு வில்சனும் நானும் முடிவெடுத்து தான் எல்லாம் செய்யிறம் எண்டு விறுக்கா பண்ண வெறுப்பில அவங்களை வெளியேற பண்ணினியள். வில்சனும் கனடாவில. சொத்தெல்லாம் யாரிட்ட சொல்லுங்கோ? சு பி .
திறமைசாலிகள் , மக்களை பற்றி சிந்திப்பவர்கள் , படித்தவர்கள் , சுயமாக சிந்திப்பவர்கள், ஒருத்தரையும் நீங்கள் வைச்சிருக்கமாட்டிள் . இருந்த ஒரே ஒரு சூழலியலாளரையும் தம்பிக்கு அந்த மந்திரி பதவிய தரேல்ல எண்டு கட்சியால கலைச்சு போட்டியள் . இப்ப உங்கட அடிமடியில கைவைக்க போகிறார் எண்ட பயத்தில சுமந்திரனோட மல்லுக்கு நிக்கிறியள். கூடமைப்பு என்ன உங்கட முதுசமோ ? அல்லது உங்கட மனிசி கொண்டுவந்த சீதனமோ ?
தராக்கி சிவராமிட்ட கெஞ்சி கரிகாலன்ர காலை பிடிச்சு புலிகளின்ர வாலில தொங்கி மாவையின்ர கடைக்கண் பார்வையால தான் சனம் உமக்கு வாக்கு போட்டது. ஆனா இனிப்போடது.நீங்கள் வடக்கில அரசுக்கு எதிரா கத்திறதும் பிறகு தெற்கில அவங்கள் வைக்கிற பாட்டியில போய் நிக்கிறதும் சனத்துக்கு தெரிஞ்சு போச்சுது.

நீங்கள் கட்டபிராயில கல்லு குத்துது எண்டு உங்கட வீடு மட்டும் காப்பற் றோட் போட்டு அதுக்கங்கால இருக்கிறசனம் சிங்கள சனம் எண்டே போடாம விடசொன்ன நீங்கள் எண்டு சனம் கேட்குது .

கனக்க ஈ பி ஆர் எல் எப் காரர் டக்ளசுக்கு பின்னால் போட்டங்கள் மிச்ச பேரையும் சுகு சுத்தி போட்டுது. நீங்களும் உங்கட தம்பியும் கொஞ்ச அல்லக்கைகளும் தான் இப்ப மிச்சம். உங்களுக்கு போடச்சொல்லி மற்றவை சொன்னாலும் சனம் போடாது அவையளும் கேட்கமாட்டினம். இந்த சீத்துவத்தில சுமந்திரனை தேசியபட்டியல் எண்டு ஏன் சீண்டுறீங்கள்.

முந்தி கிடைச்ச சந்தர்பத்தை எல்லாம் தவற விட்டிடம் இனியும் அந்த தவறை விட கூடாது எண்டு வவுனியாவில வைச்சு கூடமைப்பின்ர தலைவர் சம்மந்தன் ஐயா சொன்ன படிதான் சுமந்திரன் நடக்கிறார் . அனைவரும் அப்பிடித்தான் நடக்கவேணும். மணி கட்டின மாடு சொன்னா கேட்கவேணும் .
தலைமைக்கு கட்டுப்படாத பேச்சளார் தேவையோ எண்டு கூட்டமைப்புக்குள் குரல் கேட்குது. உங்களுக்கும் கெதியில கேட்கும். அடுத்த தேர்தல்வரை தாக்குபிடியுங்கோ. கட்டாயம் தோற்பியள். கோகிலத்தோட காசி ராமேஸ்வரம் எண்டு கடைசி காலத்தை கோவில் குளம் எண்டு போய் தோழர் நபாவுக்கும், நம்பிவந்த தோழர்களுக்கும், தமிழ் சனத்துக்கும் செய்த துரோகத்துக்கும் பிராயச்சித்தம் தேடுங்கோ.

காரியச்சித்தன்

Read more...

Sunday, February 22, 2015

1848 ன் புரட்சிகளும் மார்க்சிச மூலோபாயத்திற்கான வரலாற்று அடித்தளங்களும்.

இந்த வாரத்தை முழுமையாக நிரந்தரப் புரட்சி தத்துவம் குறித்த ஒரு ஆய்வுக்காய் அர்ப்பணிப்போம். இந்த விடயத்தில் நமது முழுக்கவனத்தின் அவசியத்தை நியாயப்படுத்துவது கடினமல்ல. கடந்த அரை வருட கால நிகழ்வுகள், அனைத்திற்கும் முதலாய் எகிப்திய புரட்சி, இந்த தத்துவத்திற்கு ஒரு பெரும் பொருத்தத்தை அளிக்கின்றன. எகிப்திய நிகழ்வுகளின் சமூக இயக்கவியல், இந்த தத்துவத்தின் அடிப்படையில் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடியதாய் இருக்கிறது. வழக்கம் போல, ஜனநாயகம் குறித்த வெற்று வாய்வீச்சுகளை கொண்டுதான் பல்வேறு முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ “இடது” அமைப்புகள் இந்த நிகழ்வுகளுக்கு பதிலளிக்கின்றன.

இவ்வாறே, பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA), சென்ற ஜனவரியில் பசுமைக் கட்சியினர், ஒருமித்த இடது (Unitary Left), பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, இடது கட்சி, மற்றும் சோசலிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளும் கையெழுத்திட்டிருந்த ஒரு கூட்டறிக்கையில் கையெழுத்திட்டது. அந்த அறிக்கை தெரிவிக்கிறது: “பிரெஞ்சு அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் துனிசிய ஆட்சிக்கான தமது வெளிப்படையான மற்றும் மறைமுகமான ஆதரவை நிறுத்திக் கொண்டு ஒரு உண்மையான ஜனநாயக உருமாற்றத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.” அதேநேரத்தில் [சார்க்கோசி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடனான] “உண்மையான ஜனநாயக உருமாற்றத்திற்கு” விடுக்கப்பட்டிருக்கும் இந்த பப்லோவாத2 அழைப்பிற்கு தூண்டுதலாக இருந்த சமூக நலன்கள் மனித உரிமைகளுக்கான துனிசிய லீக்கின் ஒரு அறிக்கையில் வெளிப்பாட்டை கண்டது. பாரிய ஆர்ப்பாட்டங்களின் நடுவில் வெளியான இந்த அறிக்கை அறிவித்தது: “சகிக்க முடியாததாக ஆகிக் கொண்டிருக்கும் இந்த ’கொள்ளையின் வெடிப்பை எப்படி நாம் தடுக்கப் போகிறோம்’ என்பதே இப்போது நம் முன் இருக்கும் கேள்வியாகும். இந்தச் சிறுவர்கள் தாக்குவது ட்ராபெல்ஸி குடும்பத்தின் சொத்துகளை மட்டுமல்ல, மாறாக போலிஸ் நிலையங்களையும், எல்லோருடைய சொத்துகளையும் சேர்த்துத்தான்.”

“துனிசியா: சமூக மற்றும் ஜனநாயகப் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது” என்ற தலைப்பில் NPA வெளியிட்ட ஒரு அறிக்கை பிரகடனப்படுத்தியது:
புதியதொரு தேர்தல் நெறிமுறைகளின் கீழ் சட்டமன்றத்திற்கான சுதந்திரமான ஜனநாயகத் தேர்தலுக்கு தயாரிப்பு செய்கின்ற கடமையளிக்கப்பட்ட, Destourian ஆட்சியின் பிரதிநிதிகள் அற்ற, ஒரு இடைக்கால அரசாங்கத்தின் அரசியல்சட்டம் மட்டுமே துனிசிய மக்கள் தங்களது தலையெழுத்தை திரும்பப் பெறவும் பெரும்பான்மை மக்களுக்கு நியாயமானதும் இலாபகரமானதுமான ஒரு ஒழுங்கை உருவாக்கவும் அனுமதிக்கும். ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு மக்கள் விரும்புகின்ற பட்சத்தில், அந்த விருப்பத்திற்கு விதி தலைவணங்கியே ஆக வேண்டும்! 3

ஜனவரியில் கெய்ரோவில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருந்த சமயத்தில், எதிர்க்கட்சி வரிசைத் தலைவரான முஸ்தபா ஒமாரின் ஒரு நேர்காணல் ISO இல் இடம்பெற்றிருந்தது. எல்பரடேயின் “ஜனநாயகத்திற்கான புதிய இயக்கம்” அமைப்பிற்காகவும் அவரது மாற்றத்திற்கான தேசியக் கூட்டணிக்காகவும் (NAC) எல்பரடேயை ஒமார் புகழ்ந்து தள்ளியிருந்தார்.

பிப்ரவரி 1 அன்று, புரட்சிகர சோசலிஸ்டுகள் இராணுவத்தின் மீதான பிரமைகளை ஊக்குவிக்க முனைந்து அறிவித்தனர்: “மக்களின் இராணுவம் என்பது புரட்சியை காக்கின்ற இராணுவமாகும்.” அந்த அறிக்கை தொடர்ந்தது: “இராணுவம் மக்களுடன் இருக்கிறதா அல்லது மக்களுக்கு எதிராக இருக்கிறதா? என்று எல்லோரும் கேட்கின்றனர். இராணுவம் என்பது ஒற்றைத் தொகுதி அல்ல. சிப்பாய்கள் மற்றும் இளநிலை அதிகாரிகளின் நலன்களும் வெகுஜன மக்களின் நலன்களும் ஒன்றேயாகும்.” 4

வரலாற்றை அலட்சியமாக மதிப்பிடுவது, குட்டி முதலாளித்துவக் கட்சிகளின் திட்டவட்டமான குணாம்சங்களில் ஒன்று. மகத்தான வரலாற்று அனுபவங்களை திறனாய்வு செய்வது, தங்களது சந்தர்ப்பவாத மற்றும் பிற்போக்குவாத அரசியலுக்கு தொந்தரவு செய்யும் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் புரட்சிகரப் போராட்டங்களின் வரலாறு குறித்த ஒரு முழுமையான அறிவு இல்லாமல், நடப்பு உலகின் சூழ்நிலையை புரிந்து கொள்வதும் இருபத்தோராம் நூற்றாண்டில் சோசலிசப் புரட்சிக்கான ஒரு மூலோபாயத்தை உருவாக்குவதும் சாத்தியமில்லாததாகும்.
ட்ரொட்ஸ்கி: ஒரு வரலாற்று மனிதர்

இருபத்தோராம் நூற்றாண்டை நிரந்தரப் புரட்சிக் காலம் என்று நியாயமான முறையிலே விபரிக்க முடியும். சென்ற நூற்றாண்டின் மகத்தான புரட்சிகர எழுச்சிகளின் கீழே அமைந்திருக்கக் கூடிய புறநிலை சமூக தர்க்கத்திற்கான வரையறையாகவும் சரி, சர்வதேச தொழிலாளர்’ இயக்கத்தில் புரட்சிகர மூலோபாயம் குறித்த அத்தனை அரசியல் போராட்டங்களுக்கும் கீழமைந்திருக்கக் கூடிய மையமான தத்துவார்த்த மற்றும் மூலோபாயப் பிரச்சினையாகவும் சரி இருவகையிலுமே இது பொருத்தமானதாகும். 1937 ஏப்ரலில் மெக்சிகோ நகரத்தின் புறநகர்ப் பகுதியில் டுவே கமிஷன் விசாரணைகளின் போது ட்ரொட்ஸ்கியுடனான தனது சந்திப்புகளை நினைவுகூர்ந்த ஒரு கட்டுரையில் அமெரிக்க நாவலாசிரியரான James T. Farrell இந்த மாபெரும் புரட்சியாளரை “நாமெல்லாம் அப்படியிருக்கவில்லை, இருக்க முடியாது என்ற அர்த்தத்தில் அவர் ஒரு வரலாற்று மனிதர்” என்று வர்ணித்தார். ட்ரொட்ஸ்கி குறித்த இந்த வருணனையில், அல்லது இன்னும் சரியாகச் சொன்னால் இந்த வரையறையில், ஒரு ஆழமான பார்வை அடங்கியிருக்கிறது.

ட்ரொட்ஸ்கி எந்த அர்த்தத்தில் “வரலாற்று மனிதர்”? ஏனென்றால் இருபதாம் நூற்றாண்டின் பல மகத்தான நிகழ்வுகளில் அவர் முக்கிய பங்கு வகித்திருந்தார். போல்ஷிவிக் கட்சியை அதிகாரத்திற்குக் கொண்டுவந்து வரலாற்றின் முதல் தொழிலாளர்’ அரசான சோவியத் ஒன்றியத்தின் ஸ்தாபகத்திற்கு இட்டுச் சென்ற 1917 அக்டோபர் புரட்சியின் முக்கியமான மூலோபாயவாதியாகவும் ஒருங்கிணைப்பாளராகவும் ட்ரொட்ஸ்கி இருந்தார். 1918 இல் செம்படையின் தளபதியாக ஆன பின்பு மூன்றாண்டு கால உள்நாட்டு யுத்தத்தில் எதிர்ப்புரட்சிப் படைகளை வெற்றிகாண்பதற்கு அவர் வழிநடத்தினார். 1923 இல், சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளான அரசியல் போராட்டத்திற்கு ட்ரொட்ஸ்கி துவக்கமளித்தார், அது முதலில் இடது எதிர்ப்பின் உருவாக்கத்திற்கும், பின்னர் நான்காம் அகிலத்தின் உருவாக்கத்திற்கும் இட்டுச் சென்றது. சென்ற நூற்றாண்டின் உச்சத்தில் இருந்த ஆளுமைகளில் ஒருவராக ட்ரொட்ஸ்கி இருந்தார் என்பதில் சந்தேகமேயில்லை. அவர் தான் இருபதாம் நூற்றாண்டின் மகத்தான அரசியல் மனிதர் என்றும், வரலாற்றில் அவரது தாக்கம் தான் மிகவும் நெடிய ஒன்று என்றும் என்னால் வாதிட முடியும். இந்த நூற்றாண்டில் அபிவிருத்தி காணக் கூடிய தொழிலாள வர்க்கத்தின் புதிய வெகுஜன சோசலிச இயக்கம், மிகப்பெரும் மட்டத்திற்கு, லியோன் ட்ரொட்ஸ்கியின் தத்துவார்த்த மற்றும் அரசியல் கருத்தாக்கங்களையே அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

ஆனால் ஃபாரெல், ட்ரொட்ஸ்கியை ஒரு “வரலாற்று மனிதர்” என்று வரையறை செய்தபோது, ட்ரொட்ஸ்கி வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதர் என்பதைக் கடந்த ஒரு அர்த்தத்தில் அவர் கூறியிருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். வரலாறு என்பது ட்ரொட்ஸ்கியுடன் என்ன உறவு கொண்டிருந்தது, அவரது சிந்தனையிலும் செயல்களிலும் மற்றும் அவரது ஆளுமையின் உருவடிவத்திலும் கூட என்ன இடம் பெற்றிருந்தது என்பதைக் குறித்தே அவர் பேசியிருக்க வேண்டும். ட்ரொட்ஸ்கி வரலாற்றைப் படைத்தது உண்மைதான்; ஆனாலும், அப்படி படைக்கின்ற சமயத்தில், அவர் நிகழிடம் குறித்தும் சமூக உருமாற்றத்தின் ஒரு பரந்த வரலாற்று நிகழ்முறையில் தனது நடவடிக்கையின் மற்றும் தனது தோழர்களது நடவடிக்கையின் மற்றும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து விட்டிருந்த புரட்சிகர தொழிலாளர்’ இயக்கத்தின் நடவடிக்கையின் முக்கியத்துவம் குறித்தும் அசாதாரணமான சுய-நனவு மட்டத்துடன் வாழ்ந்தார். தான் வாழும் பூமியும் கூட, தான் அவதானிக்கின்ற ஒரு செறிந்த பிரபஞ்ச வெளிக்குள்ளான ஒரு இடமே என்பதை அறிந்த ஒரு வானியல் அறிஞர், மாலை வானத்தை காண்பதை போலத்தான், ட்ரொட்ஸ்கி, எதற்குள்ளாக புரட்சிகர சோசலிச இயக்கத்தின் வேலையானது கட்டவிழ்ந்திருந்ததோ அந்த பல தசாப்த கால நீள, இன்னும் சொன்னால் பல நூற்றாண்டுகள் நீள விரிந்த வரலாற்றுத் தொடர்ச்சி குறித்து நன்கு அறிந்து வைத்திருந்தார்.

வரலாறு ட்ரொட்ஸ்கியில் வாழ்ந்தது. அவரது எழுத்துகளைப் பார்த்தால், அவர் ஏறக்குறைய 1793 இல், 1848 இல் மற்றும் 1871 இல் பாரிசில் வாழ்ந்தது போன்று உணர்ந்து எழுதியிருக்கிறார் என்று எனக்கு நம்பத் தோன்றும். வரலாறு குறித்த அவரது வாசிப்பு மந்தமானதில்லை. டன்ரோனையும் ரோபெஸ்பியரையும் சமகாலத்தவர்கள் போல எண்ணி அவர்களுடன் இவர் தனது மனதில் விவாதித்தார். ட்ரொட்ஸ்கி தனது சொந்த நடவடிக்கைகளை வரலாற்றின் கண்ணாடி வழி அவதானித்தார் என்று லுனாசார்ஸ்கி கூறியது உண்மை. ஆனால் வரலாற்று நோக்குநிலை கொண்ட அவரது சுய-நனவில் அகநிலைவாதத்தின் அல்லது சுய-டாம்பீகத்தின் ஒரு சுவடைக் கூட காண முடியாது. தனது காலத்தின் போராட்டங்களில் முழுமனதுடன் ஈடுபட்டிருந்த அவர், சமகால நிகழ்வுகளை வரலாற்று அனுபவங்களுடன் தொடர்புபடுத்திக் கண்டார். மேலும், புரட்சிகரப் போராட்டத்தின் வருங்கால பரிணாமத்தில் எந்த வேலைத்திட்டம் மற்றும் கொள்கைகளுக்காக அவர் போராடினாரோ அவற்றின் தாக்கம் மற்றும் தொடர்புபட்ட பிற விடயங்களை புரிந்துகொள்வதற்கு ட்ரொட்ஸ்கி முனைந்தார். நான்காம் அகிலத்தின் ஸ்தாபிதத்தின் போது அவர் கூறியதைப் போல, ஒரு புரட்சியாளர் “மனித குலத்தின் விதியின் ஒரு துகளை தனது தோள்களில் சுமக்கிறார்.” நிகழ்காலம், கடந்தகாலம், மற்றும் எதிர்காலம் குறித்து தனது சிந்தனையில் ஓயாமல் அவர் நடத்திய இந்த கருத்துப் பரிவர்த்தனைதான் ட்ரொட்ஸ்கியை ஒரு “வரலாற்று மனிதர்” ஆக ஆக்கியது.

வரலாற்று அனுபவத்தின் மீது சளைக்காமல் மீண்டும் உழைப்பது என்பதை தமது தத்துவார்த்த மற்றும் அரசியல் வேலைக்கான அத்தியாவசியமான மூலபாகமாக கொண்டிருந்த புரட்சியாளர்களின் தலைமுறை ஒன்றின் பாகமாக ட்ரொட்ஸ்கி இருந்தார் என்பதையும் கூறியாக வேண்டும். ரிச்சார்ட் டே மற்றும் டானியல் கைடோ ஆகிய வரலாற்றாசிரியர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்ட மதிப்புமிகுந்த ஆவணச் சேகரமான நிரந்தரப் புரட்சிக்கான சாட்சியங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டிருப்பதன் மூலமாக, ட்ரொட்ஸ்கி ரஷ்யப் புரட்சியின் உந்து சக்திகள் குறித்து பகுப்பாய்வு செய்வதற்கும், போல்ஷிவிக்குகளின் வெற்றிக்கு ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலத்திற்கு முன்பே ரஷ்ய எதேச்சாதிகாரத்தை தூக்கியெறிவது சற்றேறக் குறைய நேரடியாக தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிசப் புரட்சியில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இட்டுச் செல்லும் என்ற ஒரு முடிவுக்கு அவர் வருவதற்கும் இட்டுச் சென்ற புரட்சிகர மார்க்சிச சிந்தனையின் பரிணாம வளர்ச்சியை மிக முழுமையாக நம்மால் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. இந்தத் தொகுதியில் ட்ரொட்ஸ்கி எழுதியது மட்டுமல்ல, பிளெக்ஹானோவ், ரியாசனோவ், மேஹ்ரிங், லுக்சம்பேர்க், பர்வஸ் மற்றும் கவுட்ஸ்கி எழுதிய முக்கியமான கட்டுரைகளும் கூட இடம்பெற்றுள்ளன. 1905 புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் ட்ரொட்ஸ்கியால் அபிவிருத்தி செய்யப்பட்ட மிகவும் முன்னேறியதும் திறம்பட்டதுமான நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் சூத்திரமாக்கலின் அபிவிருத்தி குறித்த ஒரு ஆழமான புரிதலுக்கு இந்த ஆவணங்கள் பங்களிப்பு செய்கின்றன. 5

இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தின் ஆரம்ப வருடங்களில், இக்கட்டுரைகள், கட்டவிழ்ந்து கொண்டிருந்த ரஷ்யப் புரட்சி குறித்த தமது பகுப்பாய்வை, அதற்கு முன்னோட்டமாக நிகழ்ந்த புரட்சிகர நிகழ்வுகளான 1789-94 வரையான மகத்தான பிரெஞ்சுப் புரட்சி, 1848 புரட்சிகள், மற்றும் 1871 இன் பாரிஸ் கம்யூன் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்திக் காண விழைந்த விதம்தான் இக்கட்டுரைகளின் மிகவும் போற்றத்தக்க அம்சங்களாகும். 1905 ஆம் ஆண்டின் அனுபவத்தின் வழி கடக்க நேர்ந்த தலைமுறையை பொறுத்தவரை, பாரிஸ் கம்யூனோ 1848 புரட்சிகளோ அத்தனை ரொம்பவும் கடந்து விட்ட காலத்தின் நிகழ்வுகளாக இருக்கவில்லை. கால இடைவெளியை பொறுத்தவரை, ரொம் ஹெனஹன்6 படுகொலை செய்யப்பட்ட 1977 ஆம் ஆண்டிற்கும் இன்றைக்கும் இடையிலிருக்கும் இடைவெளியைக் காட்டிலும் பாரிஸ் கம்யூனுக்கும் 1905க்கும் இடையில் தூரம் குறைவு தான். இன்னும் 1848 ஆம் ஆண்டும் கூட அத்தனை தொலைவானதாய் கூறிவிட முடியாது. அதிசயங்களின் ஆண்டின் (annus mirabilis) புரட்சிகர எழுச்சிகளுக்கும் 1905 ஆம் ஆண்டிற்கும் இடையில் வெறும் 57 வருடங்கள் தான் இருந்தன. இன்னும் கொஞ்சம் காலத்தை நீட்டித்துப் போனால் ஐசனோவர் நிர்வாகத்தின் ஆரம்ப வருடங்களுக்குச் சென்று விடலாம். இருபதாம் நூற்றாண்டின் திருப்பத்திலான ஐரோப்பிய சோசலிச இயக்கத்தில், பாரிஸ் கம்யூனின் அனுபவசாலிகள் மட்டுமல்லாமல் 1848 புரட்சியில் பங்குபற்றியவர்களும் கூட இருந்தனர். ஜேர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சியை ஸ்தாபிப்பதில் பேபெலின் முன்னாள் சக-ஸ்தாபகராக இருந்தவரும் 1848 போராட்டங்களில் பங்கேற்றவருமான வில்ஹெல்ம் லிப்னெக்ட் 1900 ஆம் ஆண்டுவரை வாழ்ந்தார். மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸின் நெருங்கிய நண்பரும் ஜேர்மனியில் பாடென் எழுச்சியில் பங்குபெற்றவருமான அடோல்ப் சார்ஜ் 1906 ஆம் ஆண்டுவரை வாழ்ந்தார்.

பிரெஞ்சுப் புரட்சி

1789-94 பிரெஞ்சுப் புரட்சியின் மூத்தவர்கள் எல்லாம் வெகு காலத்துக்கு முன்னரே காட்சியில் இருந்து மறைந்து விட்டிருந்தனர் என்பது உண்மை தான். ஆனால் அந்த நிகழ்வின் தாக்கம் - பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக, அரசியல் ரீதியாக மற்றும் சித்தாந்தரீதியாக - அதன் நிழல் இன்னமும் ஐரோப்பாவை வியாபித்து நிற்குமளவுக்கு (இன்று வரை வியாபித்துள்ளது!) மிகத் தீவிரமானதாய் இருந்தது. ஒரு அரசியல் அர்த்தத்தில் பார்த்தால், நவீன உலகம் என்பதே மகத்தான பிரெஞ்சுப் புரட்சியில் செதுக்கப்பட்டது தான் என்று நிச்சயமாகக் கூற முடியும். பங்கு பற்றியவர்கள் மகா தீரத்துடன் போராடிய அந்த மாபெரும் நிகழ்வின் மிகப்பெரும் போராட்டங்கள் தான் வருங்கால புரட்சிகரப் போராட்டங்களை முன்கணித்தன, அவற்றுக்குக் களம் தயாரித்தன. அந்தப் புரட்சியின் கொதிகலத்தில் இருந்து தான் நவீன சமூகப் போராட்டங்களின் அடிப்படையான வார்த்தைகளும் கூடப் பிறந்தன. “Mountain” என்று அழைக்கப்பட்ட தீவிர சமூக மாற்றத்திற்கான ஆதரவாளர்கள், பிரதிநிதிகள் மன்றத்தின் தலைமை அதிகாரிக்கு இடப்பக்கமாக அமர்ந்தனர்; பழமைவாதிகளும் பிற்போக்குவாதிகளும் வலப்பக்கமாக அமர்ந்தனர். “இடது” “வலது” ஆகிய வார்த்தைகள் மட்டுமின்றி “நிரந்தரப் புரட்சி” என்ற பிரயோகமும் கூட பிரெஞ்சுப் புரட்சியில் தான் மூலம் கொண்டிருக்கிறது. ரிச்சார்ட் டே மற்றும் டானியல் கேய்டோ நிரந்தரப் புரட்சிக்கான சாட்சியங்கள் என்ற புத்தகத்திற்கு அளித்த அறிமுகத்தில் சுட்டிக் காட்டியவாறு, நிரந்தரப் புரட்சி (“revolution en permanence”) என்ற கருத்தாக்கம், 1789 ஜூன் மாதத்தில் Third Estate இன் பிரதிநிதிகள் வெர்சாய் டென்னிஸ் மைதானத்தில் எடுத்துக் கொண்ட புகழ்பெற்ற சத்தியப் பிரமாணத்தில் இருந்து தோற்றம் பெற்றதாகும். ‘தேசிய அவையைக் கலைக்க முடியாட்சியாளர் எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் சரி அதன் அங்கத்தவர்கள் கூடும் இடங்களில் எல்லாம் தேசிய அவை உயிர் பெற்றிருக்கும்’ என்று அவர்கள் பிரமாணம் எடுத்துக் கொண்டிருந்தனர். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் Third Estate இன் தேசிய அவை அதன் நிரந்தரத்தை அறிவித்தது!
பிரெஞ்சுப் புரட்சி நவீன அரசியலின் வார்த்தை உருவாக்கங்களுக்கு பங்களிப்பு செய்ததை விட முக்கியமானது, அது நிலப் பிரபுத்துவத்தின் சமூக மற்றும் பொருளாதார அடித்தளத்தை அழித்ததும், ஒரு முதலாளித்துவ அரசை ஸ்தாபிக்கவும் முதலாளித்துவத்தின் அபிவிருத்திக்குமான ஒரு பாதையைத் திறந்து விட்டதுமாகும். அதுவே தவிர்க்கவியலாமல் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சிக்கும் நவீன வடிவத்தில் அமைந்த வர்க்கப் போராட்டத்தின் எழுச்சிக்கும் இட்டுச் சென்றது. இன்னும் சொன்னால், 1794 ஜூலையில் ஜாக்கோபின் சர்வாதிகாரம் அகற்றப்பட்டதற்கு பின்னர்தான் வருங்கால புரட்சிகளுக்கான முதல் உள்ளுணர்வு, கிராக்கூஸ் பாபேஃப் (Gracchus Babeuf) தலைமையிலான “சம உரிமை படைத்தவர்களின் சதி” யில் (Conspiracy of Equals) வெளிப்பாட்டை கண்டது. நனவான புரட்சிகர நடவடிக்கையின் மூலமாக சமூக சமத்துவத்தை அடைவதற்கான முதல் முயற்சியாக அது இருந்தது.

இந்த உரையிலேயே போதுமான அளவுக்கு பேசி விடக் கூடிய விடயமல்ல இது, ஆனால் புரட்சி, பிரான்சின் சமூகப் பொருளாதார உருமாற்றத்திற்கு மட்டும் இட்டுச் செல்லவில்லை என்பதை ஒருவர் குறித்துக் கொள்ள வேண்டும்; வரலாற்று அபிவிருத்தியின் புறநிலையான உந்து சக்திகளை விஞ்ஞானபூர்வமாக புரிந்து கொள்வதில் ஒரு மிகப்பெரும் முன்னேற்றத்திற்கான உத்வேகத்தை அது வழங்கியது. அந்த முன்னேற்றத்தில் இருந்து தான் மார்க்சிசம் எழுந்து வந்தது. பிரெஞ்சுப் புரட்சிக்கு பின்னர், அரசியல் வாழ்வின் பின்புலத்தில் சட நலன்கள், சொத்து மற்றும் வர்க்க மோதல் ஆகியவற்றின் தீவிர முக்கியத்துவம், மிக முன்னேறிய சிந்தனையாளர்களுக்கு அதிகரித்த அளவில் தெளிவாகியது.

எப்படியாயினும், தொழிற்துறைமயமாக்கம் உள்ளிட்ட பொருளாதார மாற்றங்களின் தாக்கம், புரட்சிக்கான முன்னுணர்வுகளை இன்னும் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றிய சமூக மோதலின் புதிய வடிவங்களுக்கு இட்டுச் சென்றது. 1806 லேயே, கட்டிடத் தொழிலாளர்களின் ஒரு வேலைநிறுத்தம் பாரிஸில் நடந்தது. 1817 ஆம் ஆண்டில் லியோனில் தொப்பி செய்யும் தொழிலாளர்கள் சம்பளக் குறைப்பை எதிர்த்து போராட்டத்தில் இறங்கினர். 1825க்கும் 1827க்கும் இடையில் பாரிஸின் கலைஞர்கள் மற்றும் உற்பத்தித்துறை தொழிலாளர்கள் நடத்திய முக்கியமான வேலைநிறுத்தங்கள் நடந்தன. 1830 ஆம் ஆண்டில் பாரிசில் நடந்த வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் பத்தாம் சார்ல்ஸ் மன்னரது வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றது. ஆனாலும் இந்தப் “புரட்சி”யில் நிதியாதாரம் அளித்தவர்கள்தான் ஆதாயம் பெற்றவர்களாக இருந்தனர். அபிவிருத்தியடைந்து கொண்டிருந்த தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகள், குறிப்பாக நெசவாளர்களின் நிலைமைகள், மோசமடைந்தது. சாமானிய மக்கள் மீதான வரிகள் உயர்த்தப்பட்டன, அவர்களின் சம்பளங்கள் குறைக்கப்பட்டன. பெருகிய கோபம், இறுதியில் 1831 நவம்பரில் லியோன் நகரத் தொழிலாளர்களின் ஆயுதமேந்திய எழுச்சியின் வடிவத்தில் வெடித்தது. பல நாட்களுக்கு அரசாங்க சிப்பாய்கள் நகரை விட்டுத் துரத்தப்பட்டனர். பல நாட்களுக்கு பின்னர் அரசாங்கம் கட்டுப்பாட்டை மறுஸ்தாபகம் செய்ய முடிந்தது என்றபோதும் கூட, புதிதாக உருவாகிய பாட்டாளி வர்க்கத்தின் எதிர்ப்பில் இருந்து எழுந்த வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியால் முதலாளித்துவ சொத்துடைமை நலன்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளானதைக் கண்டு முதலாளித்துவ வர்க்கம் அதிர்ச்சியில் உறைந்தது.

லூயி பிலிப்பின் ஆட்சி

பிரான்சில் லூயி பிலிப் தலைமையிலான ஒரு முதலாளித்துவ முடியாட்சிதான் ஆட்சி செய்து கொண்டிருந்தது. முன்னதாக அவரது உத்தியோகபூர்வ பதவியின் பெயர் பிரெஞ்சு மன்னர் என்று இருந்தது. பிரெஞ்சுப் புரட்சியும் பதினான்காம் லூயி இன் தலைசீவப்பட்டதும், பின்னர் அவரது இளைய தம்பியான பத்தாம் சார்ல்ஸ் அகற்றப்பட்டதும் முற்றிலும் வீணாகி விடவில்லை என்பதன் மறைமுகமான ஒப்புதலே இது. லூயி பிலிப்பின் தந்தையான, துயரமான தலைவிதி கொண்ட பிலிப் எகாலிட்டே, பதினாறாம் லூயியின் உறவினராவார். இவர் புரட்சியின் போது அரச குடும்பத்தில் இருந்து முறித்துக் கொண்டு வந்ததோடு அரசர் கொல்லப்படுவதற்கும் ஆதரவாக வாக்களித்திருந்தார். ஆனாலும் அரசகுடும்ப வழி எதிர்ப்புரட்சியின் கருவியாக அவர் ஆகியிருக்கிறாரோ அல்லது ஆகக் கூடுமோ என்ற சந்தேகத்தில் இருந்து அவர் தப்ப முடியவில்லை. 1793 நவம்பரில் அவர் கில்லட்டின் மூலம் கொல்லப்பட்டார். எப்படியிருப்பினும் அவரது மகன் தான் இறுதியில் முடியாட்சிக்கு எழுச்சி கண்டார், என்றபோதிலும் அது 1793க்கு முன்னர் நிலவியதற்கு முற்றிலும் மாறுபட்ட அரசியல் மற்றும் சமூக நிலைமைகளின் கீழ் நடந்ததாகும்.

லூயி பிலிப் ஒரு மேலங்கி அணிந்துகொண்டு குடையுடன் காட்சியளித்து தனது ஆட்சியின் முதலாளித்துவ தன்மையை வலியுறுத்துவதற்கு முனைந்தார். ஆனால் அவரது “முதலாளித்துவ ஆட்சி” ‘சக்திவாய்ந்த நிதிய உயரடுக்கினர்’ என்ற முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரேயொரு பிரிவின் நலன்களுக்கு மட்டுமே விசுவாசத்துடன் சேவை செய்தது. இதனால் முதலாளித்துவ வர்க்கத்தின் மற்ற பிரிவுகள், குறிப்பாக தொழிற்துறை மற்றும் உற்பத்தித் துறையுடன் தொடர்புடைய பிரிவுகள் அதிருப்தியடைந்தன. நிதிய உயரடுக்கினரின் ஊழல் பிரான்சின் தொழிற்துறை அபிவிருத்தியை கீழறுக்கும் மட்டத்திற்கு எல்லையற்று விரிந்திருந்தது. லூயி பிலிப்பின் கீழ் பிரெஞ்சு சமூகம் எப்படி இருந்தது என்பதை பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் என்ற படைப்பில் காரல் மார்க்ஸ் விவரிப்பதைக் காட்டிலும் சிறப்பாக வேறெவராலும் விவரிக்க முடியாது:

நிதிப் பிரபுத்துவம் தான் சட்டங்களை இயற்றியது என்பதால், அது தான் அரசு நிர்வாகத்தின் தலைமையில் இருந்தது என்பதால், அதுதான் ஒழுங்கமைந்த பொது அதிகாரங்கள் அத்தனையையும் கையில் கொண்டிருந்தது என்பதால், அதுதான் நடைமுறை விவகாரங்கள் மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவும் பொதுக் கருத்தில் மேலாதிக்கம் செலுத்தியது என்பதால் அதே விபச்சாரம், அதே வெட்கமற்ற ஏமாற்று, பணக்காரராவதற்கான அதே வெறி தான் நீதிமன்றத்தில் இருந்து பார்வையற்றோர் உணவகம் வரைக்கும் எல்லா இடங்களிலும் நடந்தது. பணக்காரராவது என்றால் உற்பத்தி செய்து அல்ல, மாறாக ஏற்கனவே அடுத்தவர் சேர்த்து வைத்திருக்கும் பணத்தைக் கொள்ளையடிப்பதன் மூலமாக. ஆரோக்கியமற்ற மற்றும் அறஒழுக்கமற்ற வேட்கைகளின் கடிவாளமற்ற ஒரு செலுத்தம், குறிப்பாக முதலாளித்துவ சமுதாயத்தின் உயர்பரப்பில், ஒவ்வொரு தருணமும் முதலாளித்துவ சட்டங்களுடனேயே மோதலுக்கு வந்தது. இந்த மோகங்களுக்குள்ளாக சூதாட்டத்தில் இருந்து சேர்த்த செல்வம் இயல்பாக தனது திருப்தியைத் தேடியது. இங்கு பணமும், அசிங்கமும், இரத்தமும் ஒன்றுகலந்தன. நிதிப் பிரபுத்துவம் என்பது அதன் சேர்க்கை வழிமுறையிலும் சரி அதன் இன்பங்களிலும் சரி, முதலாளித்துவ சமூகத்தின் உச்சப் பரப்பில் உதிரிப் பாட்டாளி வர்க்கம் மறுபிறப்பெடுத்ததாக இருந்தது தவிர வேறொன்றும் இல்லை எனலாம்.” 7

ஆனால் நீதிமன்றத்திற்கும் பங்குச் சந்தைக்கும் அப்பால், ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு பிரான்சில் மட்டுமல்லாது ஐரோப்பா முழுவதிலும் தொடர்ந்து பெருகிக் கொண்டிருந்தது. 1815 இல் நெப்போலியன் இறுதியாக தோற்கடிக்கப்பட்டதற்குப் பின்னர், அரசியல் பிற்போக்குத்தனம் கண்டம் முழுவதிலும் நிலவியது. ஆஸ்திரிய பிரபுவான இளவரசர் மெட்டர்னிச்தான் பிற்போக்குத்தன அமைப்புமுறையை கட்டியமைத்தவராக இருந்தார். உள்ளபடியான நிலையை பாதுகாப்பதற்கான மெட்டர்னிச்சின் வழிமுறை “துப்பாக்கி முனைக் கத்திகளின் ஒரு குவியலைக் கொண்டதாக, விடயங்களுக்கு உள்ளபடி உடன்படுவதை கொண்டதாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை, இந்த வழியில் செல்வது என்பது நாம் புரட்சியாளர்களின் கரங்களில் சிக்கி விட்டிருக்கிறோம் என்பதைக் குறிப்பதாகும்” என்று ஒரு விமர்சகர் மெட்டர்னிச்சிடம் தெரிவித்தார்.8 ஆனால் சிதைந்து போன நிலையில் மரணித்துக் கொண்டிருக்கும் ஒரு சமூக ஒழுங்கைப் பாதுகாப்பதற்கு மெட்டர்னிச்சிற்கு வேறு எந்த வழியும் புலப்படவில்லை.

வரலாற்றை திரும்பிப் பார்த்தால், புரட்சி நெருங்கிக் கொண்டிருந்ததன் அறிகுறிகள் எங்கெங்கும் தென்பட்டன. 1839 மே மாதத்தில், “Society of Seasons” 900 அங்கத்தவர்களுடன் ஆகஸ்ட் பிளோன்ங்கி மற்றும் ஆர்மோன்ட் பார்பெஸ் தலைமையில் பாரிஸில் ஒரு கிளர்ச்சியை ஒழுங்கமைக்க முனைந்தது. நகர சபையை கைப்பற்றி ஒரு இடைக்கால அரசாங்கத்தை அறிவித்தனர். ஆனாலும் அவர்கள் எண்ணிப் பார்த்திருந்த உத்வேகத்துடன் ஒரு கிளர்ச்சி அங்கு நிகழாமல் போனது. அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர். உறுதிபூண்ட போராளிகளின் சிறு சிறு எண்ணிக்கையிலானோரின் இந்த ஆரம்ப பரிசோதனைகளின் நேரடி விளைவைக் காட்டிலும் அவற்றின் தாக்கம் பொருளாதாரத் தத்துவம் மற்றும் மெய்யியல் துறையிலான புத்திஜீவித புரட்சிக்கு காரணமாய் இருந்தது. குறிப்பாக பியர்-ஜோசப் புருடோன் 1840 இல் வெளியிட்ட புத்தகத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இப்புத்தகத்தின் தலைப்பு சொத்து என்பது என்ன? என்ற கேள்வியை முன்வைத்தது. அதற்கு “சொத்து என்பது திருட்டு” என்று இரத்தினச் சுருக்கமான மற்றும் சீண்டக் கூடிய ஒரு பதிலை அவர் அளித்தார்.

மார்க்சிசத்தின் தோற்றுவாய்

அரசியல் பொருளாதாரத்தின் மீதான விமர்சனத்தின் பொருட் சுருக்கம் என்ற தலைப்பிலான இன்னொரு திருப்புமுனையான கட்டுரை 1843 இல் எழுதப்பட்டது. ”வர்த்தக விரிவாக்கத்தின் ஒரு இயல்பான விளைபொருளாக அரசியல் பொருளாதாரம் தோன்றியது, அது தோன்றியதை அடுத்து ஆரம்பநிலையான மற்றும் விஞ்ஞானபூர்வமற்ற விற்பனை முறையானது உரிமம் பெற்ற மோசடியின் ஒரு அபிவிருத்தியடைந்த அமைப்புமுறையை கொண்டு, செழுமைப்படுத்திக் கொள்வதின் ஒரு ஒட்டுமொத்த விஞ்ஞானத்தை கொண்டு இடம்பெயர்க்கப்பட்டது” 9 என்ற குறிப்புடன் இக்கட்டுரை ஆரம்பித்தது. 23 வயதான பிரெடரிக் ஏங்கெல்ஸ் தான் இதன் ஆசிரியர். விரைவிலேயே இங்கிலாந்தில் தொழிலாள வர்க்கத்தின் நிலை என்ற இன்னுமோர் மகத்தான படைப்பை அவர் எழுதவிருந்தார்.

இருப்பினும் 1840களின் புத்திஜீவித அபிவிருத்திகளில் மிக முக்கியமானது மெய்யியல் துறையில் நிகழ்ந்தது. இத்துறையில் ஹேகலின் கருத்துவாத மெய்யியலின் மீது இளம் காரல் மார்க்ஸ் அளித்த விமர்சனம் சிந்தனையில் ஒரு புரட்சியை உண்டுபண்ணியது. அதுவே பிற்பாடு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகர இயக்கத்திற்கான புத்திஜீவித்தன சாரத்தை வழங்கியது. மார்க்சின் சொந்த எழுத்துகளே காட்டுவது போல், அவரது அரூபமான தத்துவார்த்த உழைப்புகளின் வெடிப்புமிகுந்த தாக்கங்கள் குறித்து, அவரது படைப்புகளின் மிக ஆரம்ப கட்டத்திலேயே அவர் அறிந்து வைத்திருந்தார். “விமர்சனம் என்ற ஆயுதம், ஆயுதங்களாலான விமர்சனத்தை இடம்பெயர்க்க முடியாது, சடரீதியான சக்தி சடரீதியான சக்தியைக் கொண்டே தூக்கியெறியப்பட்டாக வேண்டும் என்பது உண்மையே, ஆனால் தத்துவமும் கூட அது வெகுஜனங்களைப் பற்றிக் கொண்டவுடன் ஒரு சடரீதியான சக்தியாக மாறி விடுகிறது”10 என்று 1844 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே அவர் எழுதினார். அடுத்த சில பக்கங்கள் தள்ளி மார்க்ஸ் மேலும் அறிவித்தார், “ஜேர்மன் விடுதலை என்பது மனித குல விடுதலை. இந்த விடுதலையின் தலையாக இருப்பது மெய்யியல், அதன் இருதயமாக இருப்பது பாட்டாளி வர்க்கம்.” 11

1845 ஆம் ஆண்டுக்குள்ளாக மார்க்சும் ஏங்கல்சும் வரலாற்றின் சடவாதக் கருத்தாக்கத்தை அபிவிருத்தி செய்து விட்டிருந்தனர். புரட்சிகள் எல்லாம் தீர்மானமிக்க தலைவர்கள் மற்றும் அவர்களது சீடர்களால் நடத்தப்பட்ட நன்கு ஒழுங்கமைந்த சதித் திட்டங்களின் விளைபொருட்கள் அல்ல என்பதை அக்கருத்தாக்கம் நிறுவியது. உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தியானது இதுவரை அவை எதற்குள்ளாக அபிவிருத்தியுற்று வந்திருந்தனவோ நிலவுகின்ற அந்த சமூக உறவுகளுடன் அடக்கமுடியாத மோதலுக்கு வருகின்ற ஒரு சிக்கலான சமூகப்பொருளாதார நிகழ்ச்சிப்போக்கின் அவசியமான விளைவுகளே புரட்சிகள். ஆக, புரட்சியின் மூலத்தை சிந்தனைகளின் நகர்வில் காண முடியாது, மாறாக உற்பத்தி சக்திகளின் ஒரு குறிப்பிட்ட மட்டத்து அபிவிருத்தியால் பக்குவப்படுத்தப்பட்டிருக்கும் சமூகத்தின் சமூகப் பொருளாதார ஒழுங்கமைப்பில் தான் காணக் கூடியதாக இருக்கும். உற்பத்தி சக்திகளின் அபிவிருத்திக்கும் நிலவும் சமூக உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடு வர்க்கப் போராட்டத்தில் தனது அரசியல் வெளிப்பாட்டைக் காண்கிறது. இதுதான் நவீன சமூகத்தில், உற்பத்தி சாதனங்களை உடைமையாகக் கொண்டிருக்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் உழைப்பு சக்தியை மட்டுமே உடைமையாகக் கொண்டிருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான மோதலின் பிரதான வடிவமாக உருவெடுக்கிறது.

1847 ஆம் ஆண்டில் மார்க்சும் ஏங்கல்சும் நீதிக் கழகத்தில் (League for the Just) இணைந்தனர், அது விரைவில் கம்யூனிஸ்ட் கழகம் என ஆனது. 1847 இன் பிற்பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற வடிவத்தில் ஒரு வேலைத்திட்டத்தை எழுதுவதற்கு அவர்கள் கழகத்தால் பணிக்கப்பட்டனர். அது உலக வரலாற்றின் பாதையில் ஏற்படுத்திய மாற்றம் எத்தகைய முக்கியமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியான சமயத்திற்கெல்லாம், ஐரோப்பா அரசியல் வெடிப்பின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது. சோசலிச தத்துவாசிரியர்களின் உழைப்புக்கு சுயாதீனமான வகையில், முதலாளித்துவமானது, உழைக்கும் மக்களின் பரந்த பிரிவுகளின் மீது ஒரு நாசகரமான தாக்கத்தைக் கொண்டிருந்த ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியின் வலியில் முனகிக் கொண்டிருந்தது. 1846-47 ஆம் ஆண்டுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முந்தைய வேறெந்த காலத்தின் சமயத்தை விடவும் பெரியதொரு அளவில் மனிதத் துயரத்தை கண்ணுற்றன. விளைச்சலில்லாமல் போய் பரவலான பஞ்சம் தோன்றியதும் பொருளாதார நெருக்கடியை இன்னும் சிக்கலாக்கியது. அயர்லாந்தில் 21,000க்கும் அதிகமான மக்கள் பட்டினியால் உயிர்விட்டனர். நூறாயிரக்கணக்கிலான மக்கள் டைபஸ் மற்றும் காலரா போன்ற நோய்களுக்குப் பலியாயினர். இறந்து போன விலங்குகளின் மாமிசத்தை உண்டு உயிர்பிழைக்க மக்கள் தள்ளப்பட்டனர். பெல்ஜியத்தில், 700,000 மக்கள் பொது நிவாரண ஏற்பாட்டில் உயிர்வாழ்ந்து கொண்டிருந்தனர். இன்னும் ஆயிரக்கணக்கானோர் தானதருமத்தை நம்பி வாழ்ந்தனர். பேர்லினிலும் வியன்னாவிலும் கதியற்ற நிலைமைகளால் மக்களுக்கும் ஆயுதமேந்திய அதிகாரிகளுக்கும் இடையில் மோதல்கள் நிகழ்ந்தன. பிரான்சில் ரொட்டியின் விலைகள் கடுமையாக உயர்ந்தன, உருளைக்கிழங்கின் விலைகள் இரட்டிப்பாயின. வேலைவாய்ப்பின்மை விகிதம் விண்ணைத் தொட்டது.

புரட்சியின் அணுகுமுறை

பிரான்சின் மக்கள் கிளர்ச்சி, லூயி பிலிப்பின் ஆட்சிக்கும் பல்வேறு முதலாளித்துவ அரசியல் போக்குகளைக் கொண்ட (நிதி நலன்களின் சர்வாதிகாரத்திலும் அதிகார நிலைகளில் இருந்து தொழிற்துறை நலன்கள் விலக்கப்பட்டதிலும் அதிருப்தியடைந்த தாராளவாதிகள், மற்றும் சற்றேறக் குறைந்த மட்டத்தில் ஒரு குடியரசை உருவாக்க ஆதரித்த கூடுதல் ஜனநாயகத்தன்மை படைத்த போக்குகள் ஆகியவை இதில் இருந்தன) பெருகி வளர்ந்த எதிர்ப்பு இயக்கத்திற்கும் இடையிலான அரசியல் பதட்டங்களைத் தீவிரமாக்கியது. இந்தப் போக்குகளின் நன்கறிந்த, கூடுதல் தீவிரமான பிரதிநிதிகளில் ஒருவர் தான் அலெக்சாண்டர்-ஒகுஸ்ட் லுதுரு-ரோலன் (1807-1874). இவர் 1848க்கு முன்னதாக ஆட்சியை தனது பேச்சில் மிக ஆவேசமாகத் தாக்குவார் என்பதால், பிரெஞ்சுத் தொழிலாளர்களின் ஆதரவு இவருக்குக் கிட்டியது. இவர் நிறுவிய La Réforme என்ற ஒரு செய்தித்தாள் கணிசமான வாசகர்களைப் பெற்றது. மக்கள் ஆதரவைப் பெற்ற இன்னொரு மனிதர் லூயி பிளோன்ங் (1811-1882). இவர் ஒரு சோசலிஸ்ட் என்றே அறியப்பட்டார் என்றாலும் சோசலிசம் குறித்த இவரது கருத்து ராபர்ட் ஓவன், செயிண்ட் சீமோன் மற்றும் எத்தியான் கபே போன்ற கற்பனாவாத சிந்தனையாளர்களின் செல்வாக்கையே பிரதிபலித்தது. முன்னேற்றம் என்பது மனிதனின் தூய்மை நோக்கும் தன்மையில் இருந்து இயல்பாகப் பாய்வதாக அவர் கருதினார். சோசலிசம் என்பது வன்முறை மிகுந்த புரட்சியால் தோன்றும் என்பதை அவர் எதிர்த்தார். மாறாக அவரது பேச்சில் இருக்கும் அசைக்க முடியாத காரண நியாயத்தில் இருந்தும் தூண்டும் சக்தியில் இருந்தும் தான் தோன்றும் என்று கருதினார். புரட்சி வெடிப்பதற்கு முன்னதாக, பிளோன்ங்க் அவ்வப்போது ஏங்கெல்ஸையும் சந்தித்து வந்தார்.

ஏங்கெல்சுக்கு இவருக்கும் இவரது கூட்டுக்கலவை யோசனைகளுக்கும் முழுக் கவனம் அளிப்பது என்பது கடினமான வேலையாக இருந்தது. 1847 மார்ச்சில் மார்க்சுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் ஏங்கெல்ஸ், பிளோன்ங் எழுதிய பிரெஞ்சுப் புரட்சியின் வரலாறு குறித்து பின்வரும் கருத்தைக் கூறுகிறார்:
“சரியான ஊகங்களும் எல்லையற்ற பேரார்வமும் விகிதமற்றுக் கலந்த கலவை இது. சார்சலில் இருக்கும்போது முதல் தொகுதியில் பாதி மட்டும் தான் படித்தேன்... அது ஆர்வம் மிக்க பாதிப்பை ஏற்படுத்தும் மிகப் பயங்கரமான அடிமுட்டாள்தனத்தில் தலைக்குப்புற விழுகையில் அவர் ஒருவரை சரியான அவதானிப்பால் வியப்படைய வைப்பது அரிதாகும்.” 12

1847-48 இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலத்தின் போது, எதிர்க்கட்சியைச் சேர்ந்த முதலாளித்துவப் போக்குகள் எல்லாம் மக்கள் ஆதரவை ஈர்க்க “நிதிதிரட்டல் விருந்து”களுக்கு —ஒரு தட்டு 10 டாலர் நிர்ணயிக்கும் இன்றைய விருந்துகளின் ஆரம்ப வடிவம்— ஏற்பாடு செய்தன. மக்கள் வருகையை அதிகரிக்க விலை தொடர்ந்து குறைக்கப்பட்டது. தீவிர நிலை கொண்டவரான லுதுரு-ரோலனும் சோசலிஸ்டான லூயி பிளோன்ங்கும் பரந்த நடுத்தர வர்க்கத்தையும் தொழிலாள வர்க்கப் பங்கேற்பையும் ஈர்க்கும் வண்ணம் தமது சொந்த விருந்துகளுக்கு கூட்டாக ஏற்பாடு செய்தனர். எதிர்க்கட்சியின் வசதியான மற்றும் பழமைவாத முதலாளித்துவ பிரிவினர் இந்த விருந்துப் பிரச்சாரத்தில் மொத்தமாய் அதிருப்தி கண்டனர். லூயி பிலிப்புடன் ஒரு பகிரங்கமான மோதலின் சாத்தியத்தை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லை, குறிப்பாக இந்த விருந்துகள் தங்களின் விவேக உணர்வுக்கு மாறாக, சொத்துடைமை நலன்களின் கட்டுப்பாட்டிற்கு வெளியே நிகழ்கின்ற மக்கள் போராட்டங்களுக்கு ஊக்குவித்து விடும் என்று அவர்கள் அஞ்சினர். அடோல்ப் தியேர் (இறுதியில் பாரிஸ் கம்யூனின் சமரசமற்ற எதிரியாக வரலாற்றில் இடம்பிடித்தவர்) விருந்து மேசை விரிப்புகளின் கீழே புரட்சியின் செங்கொடி இருப்பதை தான் உணர்வதாக எச்சரித்தார்! முதலாளித்துவ வர்க்கமானது, ஜனநாயகச் சீர்திருத்தத்தின் ஏதேனுமொரு வடிவத்தை வலியுறுத்தியபோதிலும், அரசியல் போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் தலையீடு செய்யக் கூடும் என்று அஞ்சியது.

முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவுகளுக்குள் இருந்த இந்த அச்சமானது 1789-94 பெரும் புரட்சிக்குப் பிந்தைய பிரெஞ்சு சமூகத்தின் (இன்னும் விரிவாய் ஐரோப்பிய சமூகத்தின்) கட்டமைப்பிலான ஆழமான மாற்றங்களின் வெளிப்பாடாக இருந்தது. 1789 இல் Third Estate இன் பிரதிநிதிகள் வெர்சாயில் கூடியபோது, நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கான வெகுஜன எதிர்ப்புக்குள் இருந்த வர்க்கப் பிளவுகள் அபிவிருத்தியடையாமல் இருந்தன. பதினாறாம் லூயியுடனான மோதலின் போது, தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சோசலிச எதிர்ப்பின், அதாவது நிலப் பிரபுத்துவ சொத்துடைமையை மட்டுமல்லாமல் முதலாளித்துவ சொத்துடைமையையும் அச்சுறுத்திய ஒரு எதிர்ப்பின், பயங்கரத்தை முதலாளித்துவம் எதிர்கொள்ளவில்லை. அதனால் தான் 1790களில் பழைய ஆட்சியை நோக்கிய முதலாளித்துவ வர்க்கத்தின் புரட்சிகர மனோபாவம் அதற்கு அரை நூற்றாண்டு பிந்தைய காலத்தை விடவும் மிக மிகத் தீர்மானகரமானதாக இருந்தது. ஆயினும் ஒன்றை கட்டாயம் குறிப்பிட வேண்டும். பெரும் புரட்சியின் அதீத தீவிரமயம் என்பது, பொதுவாக பதினாறாம் லூயியுடன் ஒரு அரசியல் சமரசத்திற்காய் முனைந்து வேலை செய்து கொண்டிருந்த முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து உருவானதில்லை, மாறாக sans culottes என்று அழைக்கப்பட்ட நகர்ப்புறத்தின் பரந்த வெகுஜன மக்களிடம் இருந்தே உருவானதாகும். அவர்களிடம் இருந்துதான் ஜாக்கோபின் தலைவர்கள் தங்களுக்கான பிரதான ஆதரவினைப் பெற்றனர். அவர்களது தொடர்ந்த கலக எழுச்சிகளால்தான் புரட்சி மேலும் மேலும் இடது நோக்கித் தள்ளப்பட்டது.

1848 ஆம் ஆண்டுக்குள்ளாக, நாம் இதுவரை விவாதித்தவாறு, லூயி பிலிப்பின் ஆட்சிக்கும் முதலாளித்துவ ரீதியான எதிர்ப்பு அணிக்கும் இடையிலான அரசியல் மோதல் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியால் மேலும் தீவிர சிக்கலுற்றது. பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய சமூகத்திலான இந்த மாற்றம் 1848 இன் புரட்சிகளில் ஒரு தீர்மானகரமான முக்கியத்துவம் படைத்ததாய் நிரூபணமானது. முதலாளித்துவ தாராளவாதிகள் நடப்பு ஆட்சிகளுக்கான எதிர்ப்பாளர்களாய் தங்களைக் கண்டனர் என்ற போதிலும், அவர்களது எதிர்ப்பையும் ஜனநாயகத்திற்கான அவர்களது உறுதிப்பாட்டையும் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச அபிலாசைகள் குறித்த அவர்களது மாபெரும் அச்சம் சூழ்ந்து கொண்டது. இந்த முரண்பாடுகள் தான், அதாவது முதலாளித்துவ வர்க்கத்தின் ஜனநாயகப் பாசாங்குகளுக்கும் அவர்களது சடரீதியான நலன்களுக்கும் இடையிலானதும், முதலாளித்துவ சொத்துடைமையைப் பாதுகாப்பதற்கு உறுதிபூண்ட முதலாளித்துவ வர்க்கத்திற்கும் சொத்தற்ற தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலானதுமான முரண்பாடுகள் தான், 1848 புரட்சிகளின் முடிவுகளை தீர்மானித்தன.

லூயி பிலிப் ஆட்சியின் அரசியல் நெருக்கடி வெகுகாலமாய் தயாரிக்கப்பட்டிருந்தது. ஆட்சி, புரட்சிக்கு வித்திட்டுக் கொண்டிருந்தது என்ற ஒரு தீர்க்கதரிசன எச்சரிக்கையை 1848 ஜனவரியில் டு ரொக்குவில் கூறியிருந்தார். என்றபோதிலும் மூன்று நாள் கிளர்ச்சி வன்முறையிலேயே ஒட்டுமொத்தமான இற்றுப் போன கட்டமைப்பும் நிலைகுலைந்து விடும் என்பதை வெகுசிலரே எண்ணிப் பார்த்திருந்தனர். டு ரொக்குவில் இன் எச்சரிக்கையை மன்னரே கூட கேலி செய்தார்: “பாரிஸ்காரர்கள் குளிர்காலத்தில் புரட்சியை தொடங்குவதில்லை” என்றார் அவர். “சூடான சூழலில் தான் அவர்கள் கட்டுமீறுவார்கள். பாஸ்டிலில் ஜூலையில் கட்டுமீறினார்கள், பூர்போன் அரியணையை ஜூனில் மீறினார்கள். ஆனால் ஜனவரி பிப்ரவரியில் எல்லாம் அப்படி செய்ய மாட்டார்கள்.”13

பாரிசில் பிப்ரவரி 1848

1848 பிப்ரவரி 22 அன்று எதிர்ப்பாளர்கள் நடத்த திட்டமிட்டிருந்த ஒரு மாபெரும் விருந்தினை தடுப்பதற்கு, அரசாங்கம் முயற்சித்ததில் தான் பிரச்சினை தொடங்கியது. அதனையடுத்து கூட்டத்தை ஈர்ப்பதற்கு விருந்தின் கட்டணமும் குறைக்கப்பட்டது. அதனால் பின்வாங்கிய அரசாங்கம், விருந்தினை சாம்ப்ஸ்-எலிசே (Champs-Elysées) அருகில் ஏதேனும் ஒரு செழிப்பான பகுதியில் நடத்திக் கொள்ளலாம் என்று உடன்பட்டது, ஆனாலும் விருந்து முடிந்தவுடன் உடனே கலைந்து விட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது. இந்த அவமதிப்பான நிபந்தனையை ஏற்றுக் கொள்வதற்கும் முதலாளித்துவ வர்க்கத்தை சேர்ந்த ஏற்பாட்டாளர்கள் பலரும் விருப்பத்துடன் இருந்தனர், காரணம் அவர்கள் ஆட்சியைக் கண்டு பயந்தார்கள் என்பதால் மட்டுமல்ல, மாறாக பெரும் கூட்டம் களத்தில் நிற்பது குறித்த அச்சம் அவர்களுக்கேயும் இருந்தது என்பதாலும் தான். ஆனாலும் லுதுரு-ரோலன் மற்றும் Réforme குழுவில் இருந்த அவரது ஆதரவாளர்கள் இதற்கு ஒப்புக்கொள்ள மறுத்தனர். பிப்ரவரி 22 அன்று காலை பிளாஸ் டு லா மட்லன் (Place de la Madelaine) இல் கூடுவதற்கும் பின் அங்கிருந்து சாம்ப்ஸ்-எலிசே வழியாக விருந்து நடைபெறும் இடத்திற்கு கூட்டமாக ஊர்வலம் செல்வதற்கும் அவர்கள் பாரிஸ் மக்களுக்கு அழைப்பு விடுத்தனர். முதலாளித்துவ எதிர்ப்புடன் அடையாளம் காணத்தக்க ஏறக்குறைய அத்தனை செய்தித்தாள்களுமே இந்த அழைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மொத்த விடயமுமே ஆட்சியுடன் ஒரு மோதலுக்கு இட்டுச் சென்று ஆர்ப்பாட்டக்காரர்களை குருதியாற்றில் அடக்கி ஒடுக்குவதில் முடியக் கூடிய ஒரு சாகச முயற்சி என்பதாக அவை கருதின.

ஒரு மோதல் நடந்தது. கட்டுக்கடங்காத கூட்டம் பேருந்துகளை புரட்டிப் போட்டது, தெரு விளக்குகளை உடைத்தது. ஆயினும் போலிசும், தேசியக் காவல் படையும் சூழ்நிலையைக் கையாளும் திறம்படைத்திருந்ததாகவே தோன்றியது. 22ம் தேதி மாலை, சூழ்நிலை கட்டுப்பாட்டில் இருப்பதான நம்பிக்கையிலேயே லூயி பிலிப் இருந்தார். ஆனால் அடுத்த நாள் கூட்டம் இன்னும் பெரிதாக இருந்தது. தேசியக் காவல் படைக்குள்ளும், குறிப்பாக ஏழை மாவட்டங்களில் இருந்தான பிரிவுகளுக்குள், கிளர்ச்சியின் அறிகுறிகள் பெருகின. அடுத்ததாக, பிப்ரவரி 23 அன்று மாலை, பாரிஸ் தொழிலாளர்கள் கலகத்தில் இறங்கினர். எட்டு மில்லியனுக்கும் அதிகமான நடைபாதைக் கற்களை சேகரித்து விட்டனர், 400,000க்கும் அதிகமான மரங்களை வெட்டி வீழ்த்தினர். பிப்ரவரி 24 ஆம் தேதி காலைக்குள்ளாக, சுமார் 1500 தடுப்பு ஏற்பாடுகள் நகரெங்கிலும் நிலைநிறுத்தப்பட்டிருந்தன. தனது பிரதமர் பிரான்சுவா கிசோ வை பதவிநீக்கம் செய்வதன் மூலமாக ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தலாம் என்று லூயி பிலிப் நம்பினார். ஆனால் இந்த நடவடிக்கை தாமதமான ஒன்றாகி விட்டது. பாரிஸ் சூழ்நிலையை மதிப்பிட்டதுடன் சென்ற புரட்சியில் தனது புகழ்பெற்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதியையும் எண்ணிப் பார்த்த லூயி பிலிப் பதவியைத் துறந்து விட்டு நாட்டை விட்டு ஓடினார். புரட்சி வெற்றி பெற்று விட்டது, 500 உயிர்களுக்கும் குறைவாகவே அதற்கு விலை கொடுக்கப்பட்டிருந்தது!.

ஆனால் அகற்றப்பட்ட முடியாட்சியின் இடத்தில் யார் அல்லது எது அமரப் போகிறது? முதலாளித்துவ வர்க்கத்தையும் நடுத்தர வர்க்கத்தின் வசதியான பிரிவுகளையும் பொறுத்தவரை, வெற்றியை உண்மையிலேயே வரவேற்கிறார்களா என்பதிலேயே அவர்கள் நிச்சயமாக இல்லை. லூயி பிலிப் மீது அழுத்தம் கொடுத்து அவரை சிலவகை தேர்தல் சீர்திருத்தத்திற்கு நிர்ப்பந்திக்கவே முதலாளித்துவத்தை சேர்ந்த எதிர்ப்பாளர்கள் முயன்று வந்திருந்தனர். இப்போதோ அவர்கள் கையில் புரட்சி வந்து நிற்கிறது, அதனுடன் லூயி பிலிப்பை வெற்றிகரமாகத் தூக்கியெறிந்ததில் உற்சாகமடைந்த பரந்த தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளும் அபிலாசைகளும் முன்நின்று கொண்டிருக்கின்றன. தாராளவாத முதலாளித்துவத்தை சேர்ந்த எதிர்ப்பாளர்களின் மிகவும் நன்கறியப்பட்ட பிரதிநிதிகளில் அநேகரும் விடயங்களின் இந்த துரித மாற்றங்களால் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்து விட்டனர். சமாளித்து தமது அரசியல் சமநிலையைப் பராமரித்துக் கொண்டிருந்த ஒரு சிலரில் ஒருவர் தான் அல்போன்ஸ் டு லமார்டின், பிரபல காதல் கவிஞர். பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் மழுங்கிய மற்றும் சுயநலமான அபிலாசைகளை பரவசமான வாய்வீச்சில் வெளிப்படுத்துவதற்கு தமது இலக்கியத் திறன்களைப் பயன்படுத்தியவர்.

வழக்கமான வெற்றாவேச பேச்சுகளுக்கும் ஆழமான உரையைப் போன்றதொரு தோற்றத்தை வழங்கக் கூடிய கைதேர்ந்த வாய்வீச்சு வித்தகர்கள் போன்ற இத்தகைய மனிதர்கள் ஒவ்வொரு புரட்சியின் ஆரம்ப கட்டங்களிலுமே மேலெழுச்சி காண்பது வழக்கம். எழுபது வருடங்கள் தாண்டி ரஷ்யப் புரட்சியில் அதே பாத்திரத்தை அலெக்சாண்டர் கெரன்ஸ்கி ஆற்றினார். லூயி பிலிப் பதவி துறந்து பறந்து விட்ட பின்னர் இருந்த பெரும் குழப்பத்திற்கு இடையேயும் மக்களிடம் இருந்து வந்த தீவிர அழுத்தத்தின் கீழும், லமார்ட்டின் Hôtel de Ville இன் பால்கனியில் இருந்து இரண்டாம் குடியரசின் ஸ்தாபகத்தை பிரகடனம் செய்தார். உண்மையில் குடியரசுப் பிரகடனத்தை லமார்ட்டின் எதிர்த்தார். ஆனால், 1830 இல் பத்தாம் சார்ல்ஸ் தூக்கியெறியப்பட்டதில் எந்தப் பலனும் காணவில்லை என்பதை நன்கறிந்திருந்த பாரிஸ் மக்கள் மறுபடியும் வெற்றியின் பலன்கள் கிட்டாமல் ஏமாந்து விடக்கூடாது என்பதில் தீர்மானகரமாய் இருந்தனர்.

தேர்தலுக்குப் பின்னர் அதிகாரத்தை பெறுவதற்காய் இருந்த புதிய இடைக்கால அரசாங்கத்தில் முதலாளித்துவத்தின் பழமைவாத பிரதிநிதிகள்தான் ஏறக்குறைய ஒட்டுமொத்தமாய் இருந்தனர். தீவிரமய அடையாளத்துடன் இருந்த ஒரேயொரு மனிதர் அலெக்சாண்டர் லுதுரு-ரோலன் மட்டுமே. லுதுரு-ரோலன் ஐ அரசாங்கத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிய லூயி பிளோன்ங், கடைசியில், தன்னையும் ஆல்பேர்ட் என்று அழைக்கப்பட்ட ஒரு தொழிலாளியையும் இடைக்கால அரசாங்கத்தின் செயலர்களாக நியமித்துக் கொள்ள மட்டுமே இயன்றது.

முதலாளித்துவ வர்க்கத்தை பொறுத்தவரை, புதிய குடியரசு என்பது அடிப்படையில் தனது வர்க்க நலன்களைத் தொடர்ந்து பாதுகாக்கவிருக்கும் ஒரு அரசியல் கட்டமைப்பு என்றே கருதியது. ஆனால் தொழிலாள வர்க்கமோ, உழைக்கும் மக்களின் நலன்களுக்கு ஏற்ற வகையில் சமுதாயத்தை மறுகட்டுமானம் செய்கின்ற ஒரு சமூக குடியரசின் தன்மைகளை அரசாங்கம் ஏற்க வேண்டும் என்று கோரியது. புதிய குடியரசானது உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தப் பாடுபடும் என்றே இடைக்கால அரசாங்கம் ஆரம்பத்தில் நம்பிக்கையை, அல்லது பின்னர் நிரூபணமானது போல் பிரமைகளை, விதைத்தது. பிப்ரவரி 25 அன்று புதிய அரசாங்கமானது “தொழிலாளர்களுக்கு வாழ்க்கைக்கான ஊதியத்திற்கு உத்திரவாதமளிக்க” உறுதி பூண்டது. “ஒவ்வொரு மனிதருக்கும் வேலைக்கான உரிமைக்கு உத்தரவாதமளிக்க இது வாக்குறுதியளிக்கிறது.” இந்த அறிவிப்பு பெரும் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டது. புருடோன்தான் எழுதினார்: “1848 புரட்சியே உன் பெயர் என்ன?” பதில்? “என் பெயர் வேலை செய்வதற்கான உரிமை.”

ஒரு வாரம் கழித்து, மார்ச் 2 அன்று, பாரிஸில் 10 மணி நேர வேலைநாளையும் நாட்டின் பிற பகுதிகளில் பதினொரு மணி நேர வேலைநாளையும் நிலைநிறுத்திய இன்னொரு சட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியது. அடுத்து இன்னொரு சட்டம் “கொத்தடிமை உழைப்பை” (sweated labour) — ஒரு உழைப்பு ஒப்பந்ததாரர் குறிப்பிட்டதொரு விலையில் வேலையை பெறுவார், பின் அந்த வேலையை இன்னும் குறைந்த ஊதியத்தில் செய்து கொடுப்பதற்கு தொழிலாளர்களை தற்காலிக அடிப்படையில் பணியமர்த்திக் கொள்வார், இதன்மூலம் ஒப்பந்ததாரர் அடுத்தவர் உழைப்பில் பெரும் இலாபம் ஈட்டிக் கொண்டிருந்தார் — ஒழித்தது. இப்போது வணிகத்தில் ஒரு பரவலான வழிமுறையாக மாறி விட்டிருக்கின்ற, இன்னும் சொன்னால், “தற்காலிக தொழிலாளர் முகமைகள்” என்ற பெயரில் எண்ணிலடங்கா இலாபகர வணிகங்கள் ஸ்தாபிக்கப்பட இட்டுச் சென்றிருக்கின்ற ஒரு நடைமுறை, 175 வருடங்களுக்கு முன்னால் சகிக்க முடியாத ஒன்றாகக் கருதப்பட்டதை நாம் காண்கிறோம்.

இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் எல்லாம் பெரும் வரவேற்பை பெற்றன, ஆனால் இவற்றை எல்லாம் செயல்படுத்துவதற்கான எந்த திறம்பட்ட வழிமுறையையும் இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கவில்லை. உழைப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான அமைச்சகத்தை ஸ்தாபிக்க ஆரம்பத்தில் லூயி பிளோன்ங் அழைப்பு விடுத்திருந்தார். இதனை இடைக்கால அரசாங்கம் நிராகரித்தது. அதற்குப் பதிலாக ஒரு சமரச நடவடிக்கையாக, லூயி பிளோன்ங்கின் வழிகாட்டலின் கீழ் உழைப்பாளர் ஆணையத்தை அது உருவாக்கியது. இந்த ஆணையம் லுக்சம்பேர்க் அரண்மனையில் சந்தித்ததால் பொதுவாக லுக்சம்பேர்க் ஆணையம் என்றே அழைக்கப்பட்டது. தொழிலாளர்களின் நிலைமைகளை விசாரிப்பதற்கும் ஆலோசனையளிப்பதற்கும் மட்டுமே இந்த ஆணையம் அதிகாரம் படைத்ததாக இருந்தது. வாரங்கள் செல்லச் செல்ல, இந்த ஆணையத்தின் கையாலாகாத்தனத்தால் தொழிலாளர்களின் வெறுப்பு தொடர்ந்து அதிகரித்துச் சென்ற வண்ணம் இருந்தது.

வேலைகள் விடயம் தான் இடைக்கால அரசாங்கத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான மோதலுக்கு மையமான மூலாதாரமாய் எழுந்தது. லூயி பிளோன்ங் அர்த்தமுள்ள வேலைகளை வழங்குகின்ற கூட்டுறவு வகைப்பட்ட ஒன்றை ஆரம்பத்தில் கற்பனை செய்து வைத்திருந்தார். அந்த ”சமூகப் பட்டறைகளை” உருவாக்க அவர் வலியுறுத்தினார். தேசியப் பட்டறைகள் எல்லாம் வேலை வழங்கினால் கூட அவை ”ஒப்புக்கான வேலை”யாய் இருந்ததே தவிர உருப்படியாய் எந்த வேலையும் வழங்கவில்லை. தொழிலாளர்களை திருப்திப்படுத்தும் ஒரு வகையில் இந்த வேலைப் பிரச்சினை நிவர்த்தி செய்யப்படத் தவறிய நிலையில், இந்தத் திட்டமானது பாரிசுக்கு வெளியே அதிருப்தியைச் சம்பாதித்தது. குறிப்பாக பாரிஸ் தொழிலாளர்கள் சும்மாயிருப்பதற்கு மானியமளிக்கவே தமது வரிகள் பயன்படுவதாக பரந்த கிராமப்புற மக்கள் நம்பத் தொடங்கினர். வாரங்கள் செல்லச் செல்ல, இந்த விடயம் பிற்போக்கான முதலாளித்துவ அரசியல்வாதிகளின் கையில் சிக்கி, அவர்கள் கிராமப்புற வெகுஜன மக்களை நகர்ப்புற தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகத் தூண்டி விட முனைந்தனர்.

ஊக்கத்தின் முதல் ஆரவார அலை வடிந்து விட்ட நிலையில், அரசியல் சூழல் மேலும் மேலும் தொழிலாளர்களுக்கு எதிரானதாய் திரும்பியது. பிப்ரவரி புரட்சி விடுவித்த சமூக சக்திகளால் மிரண்டு போயிருந்த லமார்ட்டின் மற்றும் பிற முதலாளித்துவ அரசியல்வாதிகள் எல்லாம் தொழிலாளர்களுக்கு எதிராக இடைவிடாது வேலை செய்தனர். ஒரு வரலாற்றாசிரியர் எழுதினார்: லமார்ட்டின் (முதலாளித்துவத் தலைவர்): முதல் யுத்தங்களை தன்னம்பிக்கை மற்றும் சிறுபிள்ளைத்தனம் ஆகியவற்றின் ஒரு கலவையில் மூழ்கடித்திருந்தார். ஆனால் அதற்கு கொஞ்சக் காலம் முன்பாகவே அவர் ஏழைகளையும், பரிதாபகரமான பாட்டாளி வர்க்கத்தையும் ஒரு தீவிர எதிரியாக கருதத் தொடங்கி, தனது முயற்சிகளை எல்லாம் மக்களுக்கு உறுதியூட்டுவதற்காய் அல்லாமல் அவர்களை மயக்குவதற்காய் செலுத்தத் தொடங்கி விட்டிருந்தார்.... வெகுஜனங்கள் குறித்த ஒரு திகில் அவருக்கு உண்டாகி விட்டிருந்தது..... 14

ஆரம்பத்தில், தொழிலாளர்கள் தேர்தலை, தேசிய அவையில் தங்களுக்கு அனுதாபமான பிரதிநிதிகளைக் கொண்டு வருவதற்கான ஒரு வழிமுறையாகவே கண்டனர். ஆயினும், கிராமப்புற மக்களின் நனவில் புரட்சி செல்வாக்கு செலுத்துவதற்கு இன்னும் காலம் பிடிக்கும் என்ற நிலையில், முன்னதாகவே தேர்தல் நடந்தேறுமானால், முடிவுகள் மிகவும் சாதகமற்று இருக்கும் என்பதை அவர்கள் விரைவிலேயே கண்டுகொண்டனர். முதலாளித்துவவாதிகளும் இதே கணக்கை கண்டுகொண்டனர் என்பதால் தேர்தலை முடிந்த அளவுக்கு சீக்கிரம் நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர். தேர்தலை தாமதப்படுத்த இடைக்கால அரசாங்கத்திற்கு நெருக்குதலளிக்கும் நோக்கத்துடன் மார்ச் 17 அன்று தொழிலாளர்கள் ஒரு பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இடைக்கால அரசாங்கம் தேர்தலை இரண்டு வார காலம் தள்ளி வைக்க ஒப்புக் கொள்ளச் செய்வதற்கே அவர்களால் முடிந்தது. தேர்தல்கள் நடந்தபோது, தொழிலாளர்கள் பயந்திருந்ததைப் போலவே, மிகப்பெருமளவில் பழமைவாத முடிவுகளே வந்தன. ஏப்ரல் 23 அன்று வாக்களிக்கச் சென்ற பாரிய விவசாயிகள், உள்ளூர் பெரும்புள்ளிகளும் மதகுருக்களும் சொல்லியவாறு வாக்களித்தனர்.

அரசியல் சூழல் கூர்மையாக வலது நோக்கித் திரும்பியது. தொழிலாளர்களது கோரிக்கைகளாலும் அவர்களது சோசலிச முழக்கங்களாலும் கோபமடைந்திருந்த முதலாளிகளின் மனோநிலையை குஸ்டேவ் ஃபிளாபேர் தனது Sentimental Education என்ற நாவலில் படம்பிடித்துக் காட்டுகிறார்.
சோசலிசத்தில் நல்லது கெட்டது என இரண்டு வகை இருப்பதை நிரூபிக்க ஆர்னூ முயற்சி செய்து கொண்டிருந்தார். ஆனால் தொழிலதிபரால் அவற்றுக்கு இடையே எந்த வித்தியாசத்தையும் கண்டறிய முடியவில்லை, ஏனென்றால் ‘சொத்து’ என்ற வார்த்தை அவரை பெரும் ஆவேசத்துக்குள் தள்ளியது.
“இது இயற்கை ஆஸ்தியளித்த ஒரு உரிமை. குழந்தைகள் அவர்களது விளையாட்டுப் பொம்மைகளை விடாமல் பற்றிக் கொள்ளும்; பூமியில் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விலங்கும் நான் சொல்வதைப் புரிந்து கொள்வார்கள்; ஒரு சிங்கமாக இருந்தாலும், அதற்கு பேசும் சக்தி இருந்தால், அது தன்னை அந்த நிலத்திற்கு அதிபதி என்று கூறும்! என்னுடைய கதையையே எடுங்கள் கனவான்களே: பதினைந்தாயிரம் பிராங்குகள் மூலதனத்துடன் தொடங்கினேன். உங்களுக்கெல்லாம் தெரியும், தினசரி காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து விடுவேன், முப்பது வருடங்களாக! என்னுடைய செல்வத்தை உருவாக்க நான் பேய் போல் வேலை செய்திருக்கிறேன். இப்போது என்னடாவென்றால் இவர்கள் வந்து என்னிடம் சொல்கிறார்கள், அதனைக் கொண்டு நான் விரும்பியதைச் செய்ய முடியாதாம், என் பணம், என் பணம் அல்லவாம், சொத்து என்பது திருட்டாம்!”

“ஆனால், புருடோன்...”
“ஆ, புருடோன் பற்றி என்னிடம் பேசாதீர்கள்! அவர் மட்டும் இங்கிருந்தார் என்றால் அவரின் கழுத்தை நெரித்திருப்பேன்!”
உண்மையிலேயே அவர் கழுத்தை நெரித்திருப்பார் தான். குறிப்பாக கொஞ்சம் மது உள்ளே சென்று விட்ட பின்னர், ஃபுமிசோனை தடுத்த நிறுத்த எதுவுமிருக்கவில்லை. கோபம் கொந்தளித்த அவர் முகம் வெடிக்கவிருக்கும் எறிகுண்டின் நிலைமையில் காட்சியளித்தது. 15

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய அவை இன்னும் கூடுதலான குரோத நடவடிக்கைகளைக் கொண்டு தொழிலாளர்களை ஆத்திரமூட்டியது. வலதுசாரி கிளர்ச்சிக்கான மத்திய புள்ளியாக தேசிய பட்டறைகள் ஆகின. பிரான்சு முகம் கொடுக்கும் அத்தனை பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் காரணம் தேசியப் பட்டறைகளும் தொழிலாளர்களின்’ மட்டமான கோரிக்கைகளுக்கு வளைந்து கொடுப்பதும் தான் என்பதாக பொதுமக்கள் நம்ப வைக்கப்பட்டனர். ஜூன் மாதத்திற்குள்ளாக, “இப்படியே போய்க் கொண்டிருக்க முடியாது” என்பது எண்ணற்ற முதலாளிகள் மற்றும் குட்டி முதலாளிகளின் உதடுகளில் குடிபுகுந்தது. தொழிலாளர்களுடன் ஒரு மோதலுக்கு அரசாங்கம் தயாரிப்பு செய்தது. தொழிலாளர்களை எப்படிக் கையாளுவது எனத் தெரியும் என்று லாமார்ட்டின் கொண்டிருந்த நம்பிக்கைக்கு உறுதுணையாக, தொழிலாள வர்க்கத்துடன் அரசாங்கம் மோதலுறும்போது அரசாங்கத்தின் பக்கம் நிற்பதாக லுதுரு-ரோலன் அளித்த வாக்குறுதிகள் இருந்தன.

1848 இன் எதிர்ப்புரட்சி

தேசிய பட்டறைகளில் இருந்த 18 முதல் 25 வயதுக்குள்ளான தொழிலாளர்கள் கட்டாயமாக இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று ஜூன் 21 அன்று அரசாங்கம் அறிவித்தது. மற்ற தொழிலாளர்களில் பாரிஸில் ஆறு மாதத்திற்கும் குறைவாய் வசித்தவர்கள் தேசிய பட்டறைகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு நகரை விட்டு அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் தொழிலாளர்களை பட்டினியால் அச்சுறுத்தின. ஜூன் 23 அன்று பாரிஸில் பகிரங்கமான மோதல்கள் வெடித்தன. நகரம் முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டன. இவற்றின் பெரும்பாலானவை கலகக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. போராடியவர்களுக்கு தீர்க்கமான சோசலிச முன்னோக்கு எதுவும் இல்லை. நிர்க்கதியான நிலைமையால் போராட்டத்திற்குள் செலுத்தப்பட்டவர்களாக அவர்கள் இருந்தனர். இந்த சண்டை நான்கு நாட்கள் உக்கிரமாக இருந்தது. தேசிய காவற்படை ஜெனரல் கவாய்னாக்கின் தலைமையில் இருந்தது. இப்படைக்கு பிரான்சின் சகல பகுதிகளில் இருந்தும் வீரர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் நகருக்கு இரயில் மூலம் அழைத்து வரப்பட்டு வந்தார்கள். ஜெனரலை பொறுத்தவரை அவர் குடியரசின் ஆதரவாளராய் இருந்தார், தன்னை ஒரு பிற்போக்குவாதியாக அவர் கருதிக் கொள்ளவில்லை. ஆனால் தனது ஆயுத பலத்தை தடுப்புகளை நோக்கித் திருப்புவதற்கு அவர் தயங்கவில்லை. சுமார் 500 கிளர்ச்சியாளர்கள் இந்தச் சண்டையில் கொல்லப்பட்டனர். 1,000 தேசிய காவற் படை வீரர்கள் வரை போரில் உயிரிழந்தனர். ஆனால் மோசமான விடயம் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டதற்குப் பின்னர் தான் வந்தது. கிளர்ச்சி செய்தவர்கள் வேட்டையாடப்பட்டு 3,000 பேர் வரை ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்டார்கள். இன்னுமோர் 12,000 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் நூற்றுக்கணக்கானோர் இறுதியில் அல்ஜீரியாவில் இருந்த வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.
பாரிஸ் படுகொலையை கவனித்த ஆரம்பகால ரஷ்ய சோசலிஸ்டுகளில் ஒருவரான அலெக்சாண்டர் ஹேர்சன் ஜூன் நிகழ்வுகள் பற்றி இப்படி எழுதினார்: “அந்நாட்களில் கொலை செய்வது கடமையாக ஆகிவிட்டது; யார் பாட்டாளி வர்க்க குருதியில் கை நனைக்கவில்லையோ அவர் மீது முதலாளித்துவ வர்க்கத்தின் சந்தேகக் கண் விழும்படி நிலை இருந்தது.”16 அவர் இன்னொரு இடத்தில் சொன்னார்: “இது மாதிரியான தருணங்கள் ஒருவரை முழு தசாப்த வெறுப்புக்குள் தள்ளி விடுகிறது, ஒருவரின் ஆயுள் முழுக்க பழி வாங்கக் காத்திருக்கும்படி செய்கிறது. இத்தகைய தருணங்களை மன்னிப்பவர்களுக்கு துயரம் தான்!” 17

படுபயங்கரமான ஜூன் நாட்கள் முதலாளித்துவ சகாப்தத்தில் சமூக உறவுகளின் உண்மை நிலையையும், முதலாளித்துவ வர்க்கத்திற்கும் தொழிலாளிக்கும் இடையிலான வர்க்கப் போராட்டத்தையும் அம்பலப்படுத்தியது. ஜனநாயகம், குடியரசு, சுதந்திரம் ஆகிய அழகிய முதலாளித்துவ முழக்கங்களுக்கு பின்னால் மறைந்து கிடந்த வர்க்க மோதலின் முரட்டு யதார்த்தத்தை பிரான்சில் 1848 இல் நடந்த நிகழ்வுகள் வெளிக் கொண்டு வந்தன. ஹேர்சென், முதலாளித்துவ தாராளவாதிகளின் சமூக உளவியலை ஆராய்ந்து, 1849 இல் எழுதினார்:

தாராளவாதிகள் புரட்சி என்ற கருத்துடன் நீண்டகாலமாக மகிழ்ச்சியுடன் விளையாடி வந்திருக்கின்றனர். அவர்களது நாடகத்தின் முடிவு பிப்ரவரி 24 அன்று நடந்தது. மக்கள் சூறாவளி, அவர்கள் நின்றிருந்த உயரமான கோபுரத்தின் உச்சி வரை புகுந்து சுழற்றியடித்து விட்டது. அவர்கள் இப்போது எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள், யார் பின்னால் வருகிறார்கள் என்பதைக் கண்கொண்டு பார்க்க முடிந்தது. கண்முன்னே விரிந்த பாதாளத்தைக் கண்டு, அவர்கள் வெளிறிப் போயினர். கண்முன்னே நொருங்கிக் கொண்டிருந்தது அவர்கள் காமாலைக் கண்ணோட்டங்கள் என்று கருதி வந்திருந்தவை மட்டுமல்ல, அத்துடன் சேர்ந்து எல்லாமே — அவர்கள் உண்மையானது என்றும் நிலையானது என்றும் கருதி வந்ததும் கூடத் தான். சிலர் சரிந்து செல்கின்ற சுவரைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்ததையும், இன்னும் சிலர் பாதி வழியில் நின்று கொண்டு வருந்திக் கொண்டு போவோர் வருவோரிடம் எல்லாம் இதுவல்ல அவர்கள் விரும்பியது என்று சத்தியம் செய்து கொண்டிருந்ததையும் பார்த்து அவர்கள் மிரண்டு போனார்கள். இதனால் தான் குடியரசைப் பிரகடனம் செய்த மனிதர்கள் சுதந்திரத்தின் படுகொலையாளர்களாக ஆனார்கள்; இதனால்தான் பல ஆண்டுகளுக்கு நமது காதுகளில் ஒலித்திருந்த தாராளவாதப் பெயர்கள் இன்று பிற்போக்குத்தன பிரதிநிதிகளின், துரோகிகளின், விசாரணையாளர்களின் பெயர்களாக மாறியிருக்கிறது. அவர்களுக்கு சுதந்திரமும், இன்னும் சொன்னால் ஒரு குடியரசும் கூட வேண்டும் எப்போதென்றால் அது அவர்களது சொந்த வளர்த்தெடுக்கப்பட்ட வட்டத்திற்குள் அடங்கியதாக இருந்தால் மட்டுமே...

முடியாட்சி மற்றும் நிலப்பிரபுத்துவ ஒழுங்கை, அதிர்ஷ்டமற்றவர்களின் கண்ணீரை, ஒடுக்கப்பட்ட மக்களின் துயரத்தை, ஏழைகளின் பட்டினியை சமத்துவத்தின் பெயரால் ஒழித்துக் கட்டுவதற்கு மீட்சிக் காலம் (Restoration) முதல் அனைத்து நாடுகளின் தாராளவாதிகளும் அழைப்பு விடுத்து வந்திருக்கின்றனர். சாத்தியமற்ற தொடர்ந்த பல கோரிக்கைகளைக் கொண்டு பல்வேறு மதகுருக்களை வேட்டையாடி மகிழ்ந்திருக்கின்றனர்; நிலப் பிரபுத்துவ தூண்கள் ஒன்று மாற்றி ஒன்றாக சரிந்த போது அவர்கள் குதூகலித்திருக்கின்றனர். இறுதியில் அவர்களது விருப்பங்கள் வெளித்தெரிய உரிந்து வருகின்ற வரை மிகவும் உற்சாகமடைந்து வந்திருக்கின்றனர். பாதி சிதைந்த சுவர்களின் பின்னால் இருந்து, பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி, கையில் அவனது கோடரியுடனும் கருப்படைந்த கைகளுடன், பட்டினியுடனும் கோபம் கொப்புளிக்க அரை நிர்வாணமாக - புத்தகங்களிலோ அல்லது நாடாளுமன்ற அரட்டைகளிலோ அல்லது கருணைபொங்கும் வார்த்தைப் பிரயோகங்களிலோ கண்டது போல் அல்லாமல் யதார்த்தத்தில்- வந்து நின்ற போதுதான் அவர்கள் தம் உணர்வுக்கு திரும்பினர். யாரைப் பற்றி நிறைய பேசப்பட்டதோ, யார் மீது அளவுகடந்த பரிதாபம் இறைக்கப்பட்டதோ, அந்த “அதிர்ஷ்டமற்ற சகோதரன்” இறுதியில் கேட்டான், இந்த அத்தனை அருட்கொடைகளிலும் அவனுடைய பங்கு எவ்வளவு என்று, எங்கே அவனது சுதந்திரம், எங்கே அவனது சமத்துவம், எங்கே அவனது சகோதரத்துவம் என்று? தொழிலாளியின் மரியாதைக்குறைவையும் விசுவாசமின்மையையும் கண்டு தாராளவாதிகள் அதிர்ச்சியடைந்து விட்டார்கள். பாரிஸ் தெருக்களில் தாக்குதல் கொண்டு களமிறங்கினார்கள், அவர்களைக் கொளுத்தி கரிக்கட்டைகளாக்கினார்கள், பின் நாகரிகத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் முயற்சியில் இராணுவச் சட்டத்தின் துப்பாக்கி முனைகளுக்குப் பின்னால் அவர்களது சகோதரனின் கண்களில் இருந்து மறைந்து கொண்டார்கள்! 18

1848ன் படிப்பினைகள்

மார்க்சை பொறுத்தவரை, பாரிஸில் தொழிலாள வர்க்கம் நசுக்கப்பட்டதானது உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவமாக இருந்தது. நவீன சமூகத்தின் இரண்டு மாபெரும் வர்க்கங்களுக்கு இடையிலான இந்த மோதல் அவற்றின் நலன்களது சமரசத்திற்கு இடமற்ற தன்மையில் இருந்து எழுந்ததாகும். சமூகக் குடியரசு என்பது ஒரு கற்பனை உன்னதமாகவே இருந்தது. “முதலாளித்துவம், ஆயுதங்களைக் கைகளில் தாங்கி, பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கைகளை மறுக்க வேண்டியிருந்தது” என்று மார்க்ஸ் எழுதினார். “அத்துடன் முதலாளித்துவக் குடியரசின் உண்மையான பிறப்பிடம் பிப்ரவரி வெற்றியல்ல, மாறாக ஜூன் தோல்வி தான்.”19 மார்க்ஸ் மேலும் எழுதினார்: “தொழிலாள வர்க்கத்தின் கோரிக்கைகள் முதலாளித்துவக் குடியரசை அதன் தூய வடிவத்தில், அதாவது மூலதனத்தின் ஆட்சியை உழைப்பை அடிமைப்படுத்துவதின் ஆட்சியை பாதுகாப்பது என்ற ஒப்புக்கொண்ட இலக்குடனான அரசாக, வெளிவருவதற்கு தள்ளியிருக்கிறது. அத்தனை தளைகளில் இருந்தும் விடுபட்ட நிலையில் உள்ள முதலாளித்துவ ஆட்சியானது, ஆறாத வடுக்கள் கொண்ட, சமரசமற்ற மற்றும் வெல்ல முடியாத — வெல்ல முடியாத என்று சொல்வதற்கு காரணம், இருப்பே அவர் தம் சொந்த வாழ்க்கைக்கான நிபந்தனையாக இருக்கிறது — தன் எதிரியை கண்முன்னாலேயே எப்போதும் காண நேரும் நிலையில், முதலாளித்துவ பயங்கரவாதமாக மாறத் தலைப்படுகிறது.” 20

பிரான்சிலான நிகழ்வுகள் ஒரு மகத்தான வரலாற்றுத் திருப்புமுனையை குறித்து நின்றன. 1848 பிப்ரவரிக்கு முன்பாக, புரட்சி என்றால் வெறுமனே அரசாங்க வடிவத்தை தூக்கியெறிவதை குறிப்பதாய் இருந்தது. ஆனால் ஜூனுக்குப் பின்னர், புரட்சி என்பதன் அர்த்தம், மார்க்ஸ் அறிவித்தவாறு, “முதலாளித்துவ சமூகத்தை தூக்கியெறிவது” 21 என்றானது.

சராசரியான எந்தவொரு வருடத்திற்கும், பிரான்சில் உண்டான புரட்சியே போதுமான அரசியல் நாடகத்தை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் 1848, சாதாரண ஆண்டு அல்லவே. பிப்ரவரி புரட்சி ஐரோப்பா முழுவதும் மக்களுக்கு உணர்ச்சியூட்டி, இத்தாலியிலும், ஜேர்மனியிலும், ஆஸ்திரியாவிலும் மற்றும் ஹங்கேரியிலும் பாரிய மக்கள் போராட்டங்களின் அதுவரை கண்டிராத ஒரு அலைக்கு இயக்கமளித்தது. சுவிட்சர்லாந்து, டென்மார்க், ருமானியா, போலந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் கணிசமான அமைதியின்மை தோன்றியது. முதலாளித்துவ ஆட்சியின் கோட்டையான இங்கிலாந்திலும் கூட, சார்ட்டிஸ்டுகளின் தீவிரப்பட்ட இயக்கம் அதன் உச்சகட்டத்தை எட்டியது.

இந்த அத்தனை போராட்டங்களும் மகத்தான வரலாற்று முக்கியத்துவம் உடையவை, அத்துடன் அவற்றின் முடிவுகளும் ஐரோப்பாவின் அரசியல் மற்றும் சமூகப் பரிணாம வளர்ச்சிக்கு நீண்டகாலத்திற்கான பின்விளைவுகளைக் கொண்டதாக இருந்தன. ஆயினும், நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் தோற்றுவாய்கள் மற்றும் அபிவிருத்தியின் கோணத்தில் இருந்து பார்த்தால், ஜேர்மனியின் நிகழ்வுகள் தான் மகத்தான முக்கியத்துவம் பெற்றவை ஆகும்.
நேரத்தைக் கருத்தில் கொண்டு, இன்று ஜேர்மன் புரட்சி குறித்து மிகச் சுருக்கமான குறிப்புகளை மட்டுமே சொல்ல இயலும். பாரிஸின் பிப்ரவரிப் புரட்சி தான் பேர்லினில் மார்ச் மாதம் நடந்த எழுச்சிக்கான அரசியல் மற்றும் தார்மீக உத்வேகத்தை வழங்கியது என்பதில் சந்தேகமில்லை. இந்த எழுச்சி வியன்னாவில் நடந்த எழுச்சிக்கு ஒரு சில நாட்கள் தள்ளி நிகழ்ந்தது என்பதையும் இங்கு சுருக்கமாகக் குறித்து வைத்துக் கொள்வோம். பிரஷ்யாவில் இருந்த ஹோஹென்ஸோல்லெர்ன் வம்சம் ஆழமாய் ஆட்டம் கண்டது. 1789-94 பெரும் பிரெஞ்சுப் புரட்சியின் போக்கு திரும்ப நடைபெறுவதாக இருந்தால், ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கம் முதலாளித்துவப் புரட்சியின் அடிப்படையான கடமைகளை —அதாவது, முடியாட்சியையும் நிலப் பிரபுத்துவத்தின் அத்தனை அரசியல் எச்சங்களையும் தூக்கியெறிவது, பழைய அரசாட்சி மாகாண அமைப்புகளைக் கலைத்து விட்டு ஜேர்மன் மக்களை ஒரு பெரிய தேசிய அரசாக ஐக்கியப்படுத்துவது, மற்றும் ஒரு ஜனநாயகக் குடியரசை ஸ்தாபிப்பது ஆகியவை— மேற்கொள்ளும் பொருட்டு அரசகுல ஆட்சிக்கு எதிரான அதன் போராட்டத்தை முன்னெடுத்து நடத்த வேண்டும்.

ஆனால், என்ன நடந்தது என்றால், இந்தக் கடமைகளில் எதையுமே செய்வதற்கு ஜேர்மன் முதலாளித்துவம் திறனற்றதாகவும் விருப்பமற்றதாகவும் இருந்தது என்பது நிரூபணமானது. முதலாளித்துவப் புரட்சி ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டது தான் 1848 இல் ஜேர்மனியில் நடந்த கதை ஆகும். இந்த காட்டிக் கொடுப்பின் கீழ் என்ன இருந்தது? வில்லியம் லாங்கர் என்ற பிரபலமான வரலாற்றாசிரியர் எழுதியிருக்கிறார்:
மார்க்சும் ஏங்கல்சும், 1848 ஜனவரியில் ஜேர்மன் சூழலைப் பார்த்து, எந்தவொரு நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் நடப்பு ஆட்சிக்கு எதிரான தனது போராட்டத்தை நடத்துவதற்கு இதைவிட ஒரு அருமையான நிலை வாய்த்திருக்குமா என்று தமக்குத் தாமே கேட்டுக் கொண்டனர். பரவலாய் இருந்த அமைதியின்மை மற்றும் அதிருப்தி, அத்துடன் தாராளவாதிகள் தமக்கிருந்த வாய்ப்பை அனுகூலமாக்கிக் கொள்ளத் தவறியமை இவற்றைத் தான் அவர்கள் குறிப்பிட்டார்கள் என்பது வெளிப்படை. ஆனால் இந்தத் தாராளவாதிகள் — முற்போக்கு அலுவலர்கள், புத்திஜீவிகள், தொழில் நிபுணர்கள் ஆகியோரின் உயர் அடுக்கு மற்றும் குறிப்பாக புதிய வணிக அடுக்கு — வேறெங்கிலும் போலவே ஜேர்மனியிலும் புரட்சியை தூண்டுவதற்கு மிகவும் தயக்கம் காட்டினர். பிரான்சில் 1793 பயங்கரத்தின் அதீதங்களை எண்ணிப் பார்த்த அவர்கள், ஒரு முக்கியமான எழுச்சியை ஏறக்குறைய அரசர்களும் பிரபுக்களும் கடந்து செல்வது போல் கடந்து சென்றனர். 22

ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கத்தைப் பயமுறுத்தியது வெறுமனே 1793-94 சம்பவங்களின் உதாரணம் மட்டுமல்ல. பிரான்சின் சமகால அபிவிருத்திகளும் முதலாளித்துவ சொத்துகளையும் முதலாளித்துவ ஆட்சியின் அடித்தளங்களையும் அச்சுறுத்திய ஒரு சோசலிசப் புரட்சியின் அச்சத்தை மிகத் தெள்ளத் தெளிவாக எழுப்பியது. ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகள், அத்துடன் ஜேர்மன் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் மிகத் தீவிரப்பட்ட பிரதிநிதிகள் இவர்களின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளுமே பாட்டாளி வர்க்கம் குறித்த அவர்களது அச்சத்தால் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. பொருளாதாரம் மற்றும் அரசியல் கட்டமைப்பில் நிலப் பிரபுத்துவத்தின் எச்சங்கள் அனைத்திற்கும் எதிராய், அத்துடன் ஜேர்மன் மாகாணங்களை ஜனநாயக அடிப்படையில் தேசிய அளவில் ஒன்றுபடுத்துவதை நோக்கி செலுத்தப்படுவதாய் இருக்கக் கூடிய ஒரு தீர்மானகரமான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தையும் விவசாயிகளையும் புரட்சிகரரீதியாக அணிதிரட்டுவது முதலாளித்துவ வர்க்கத்திற்கு அவசியமாக இருந்தது. ஆனால் முந்தைய அரை நூற்றாண்டு காலத்தில் முதலாளித்துவம் மற்றும் தொழிற்துறை தொழிலாள வர்க்கத்தின் அபிவிருத்தியை கொண்டு பார்க்கையில், அத்தகையதொரு அணிதிரட்டல் முதலாளித்துவத்தின் வர்க்க நலன்களுக்கு மிகப்பெரும் ஒரு அபாயத்தை கண்முன் நிறுத்தியது. தொழிலாள வர்க்கத்தின் நலன்களைக் காவு கொடுத்து பிரபுத்துவத்துடன் சமரசம் செய்து கொள்வதையே முதலாளித்துவ வர்க்கம் விரும்பியது.

செயிண்ட் போல் தேவாலயத்தில் கூடிய பிராங்பேர்ட் நாடாளுமன்றத்தை முதலாளித்துவ தாராளவாத கோழைத்தனத்தின் உச்சம் என்று சொல்லலாம். ஏராளமான பேராசிரியர்களையும் வழக்கறிஞர்களையும் கொண்ட அதன் பிரதிநிதிகள் முடிவின்றிப் பேசினர், ஆனால் முக்கியமான எதையும் சாதிக்கவில்லை. பாராளுமன்றம், முன்முயற்சி எடுப்பதை பிரஷ்ய பிரபுத்துவத்திடம் வலிந்து ஒப்படைத்ததுடன், ஜேர்மனியை ஐக்கியப்படுத்துவதற்கு புரட்சிகர நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதையும் நிராகரித்தது. இதனால் இந்தப் பணி பிற்போக்குத்தனமான பிரஷ்ய ஆட்சியிடம் விடப்பட்டு, அது பின்னர் பிஸ்மார்க்கின் தலைமையின் கீழ் நடத்தப்பட்டது.

முதலாளித்துவ வர்க்கம் அதன் ”சொந்த” முதலாளித்துவ புரட்சியை காட்டிக் கொடுத்ததில், போராட்டத்தின் ஒவ்வொரு முக்கியமான கட்டத்திலும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகத் திரும்பிய இடது-பேசும் குட்டி முதலாளித்துவ தீவிரப் பிரிவினர் ஆற்றிய பாத்திரத்தை மார்க்சும் ஏங்கெல்சும் கடுமையாகக் கண்டனம் செய்தனர். 1848-49 நிகழ்வுகளில் அவர்களின் பாத்திரம் குறித்து ஏங்கெல்ஸ் எதனையும் தவறவிடாத துல்லியத்துடன் விவரித்தார்:
இந்த வர்க்கமானது ஆபத்து எதுவும் அதன் கண்ணில் புலப்படாத வரைக்கும் முழுநீள சவடால்களும் உரத்த குரல் ஆர்ப்பாட்டங்களும் — வெறும் பேச்சு விடயம் என்றால் எந்த மட்டத்திற்கும் இது நீளும் — நிறைந்ததாய் இருக்கும்; ஏதோ சின்னஞ்சிறிய அபாயம் கண்ணில் தட்டுப்படுகிறதென்றால் கூட மனம் கலங்கும், எச்சரிக்கை கூடும், கணக்குப் போட ஆரம்பித்து விடும்; அது தூண்டிய இயக்கம் மற்ற வர்க்கங்களால் கைப்பற்றிக் கொள்ளப்படுகிறது, தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது என்றவுடன் மிரண்டு போய் விடும், உஷாராகி விடும், நடுங்கத் தொடங்கும்; கையிலிருக்கும் ஆயுதங்களைக் கொண்டு போராடுவதைப் பற்றிய ஒரு கேள்வி வந்தவுடன் அதன் குட்டி-முதலாளித்துவ இருப்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மொத்த இயக்கத்துக்கும் துரோகமிழைக்கும்; இறுதியில் அதன் முடிவெடுக்க இயலா நிலையின் காரணத்தால் பிற்போக்குத்தனமான தரப்பு வெற்றியைச் சாதித்து விட்ட பின்னர், பெரும்பாலும் ஏமாற்றப்பட்டு மோசமாக நடத்தப்படும் என்பதை பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் போலவே ஜேர்மனியிலும் 1830 முதலான அனைத்து அரசியல் இயக்கங்களின் வரலாறும் காட்டுகிறது. 23

1850 மார்ச்சில், “கழகத்தின் மத்திய குழுவிற்கு வழங்கிய உரை” என அழைக்கப்படும் ஒரு ஆவணத்தில் மார்க்சும் ஏங்கல்சும் 1848 புரட்சியின் அரசியல் படிப்பினைகளை சுருங்கக் கூறியிருந்தனர். இந்த அசாதாரணமான ஆவணம், முந்தைய இரண்டு ஆண்டுகளின் புரட்சிகர அனுபவங்களின் அடிப்படையில், ஜனநாயகப் புரட்சியில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நலன்கள் மற்றும் வரலாற்றுப் பாத்திரத்தை ஸ்தாபிக்க முனைந்தன. தொழிலாள வர்க்கம், எல்லா நிலைமைகளின் கீழும், முதலாளித்துவ கட்சிகளிடம் இருந்து மட்டுமல்லாமல் ஜனநாயக குட்டி முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்தும் தனது அரசியல் சுயாதீனத்தை பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்று மார்க்சும் ஏங்கெல்சும் வலியுறுத்தினர். தொழிலாள வர்க்கம், நடுத்தர வர்க்க ஜனநாயகவாதிகளுக்கு எதிராக நிற்பதன் கீழமைந்த சமூக மோதலை அவர்கள் வலியுறுத்திக் காட்டினர்:

மொத்த சமூகத்தையும் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தினருக்காய் உருமாற்றுவதற்கான விருப்பத்தில் இருந்து எல்லாம் வெகு தூரத்தில், ஜனநாயக குட்டி முதலாளித்துவவாதிகள் அவர்களால் முடிந்த அளவுக்கு நடப்பு சமூகத்தை அவர்களுக்கு சகித்துக் கொள்ள முடிவதாகவும் வசதியாகவும் இருக்கும்படி ஆக்குகின்ற வழிமுறையாக சமூக நிலைமைகளிலான ஒரு மாற்றத்திற்காக பாடுபடுகிறார்கள்.......

ஜனநாயக குட்டி முதலாளித்துவவாதிகள், புரட்சியை முடிந்த அளவுக்கு சீக்கிரம் முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள் என்ற வேளையில் ... சற்றேறக்குறைய உடைமை வர்க்கம் மொத்தமும் அவர்களது மேலாதிக்க நிலையில் இருந்து விரட்டப்பட்டு, பாட்டாளி வர்க்கம் அரச அதிகாரத்தைக் கைப்பற்றி, ஒரு நாட்டில் மட்டுமல்லாமல் உலகின் முக்கியமான நாடுகள் அத்தனையிலுமே அவற்றின் பாட்டாளி வர்க்கத்திற்கு இடையிலான போட்டி மறைந்து குறைந்தபட்சம் தீர்மானகரமான உற்பத்தி சக்திகளேனும் பாட்டாளி வர்க்கத்தின் கரங்களில் குவிகின்ற அளவுக்கு பாட்டாளி வர்க்கத்தினரின் ஐக்கியம் முன்னேறுகின்ற வரை புரட்சியை நிரந்தரமாக ஆக்குவது நமது நலனும் நமது கடமையும் ஆகும். 24

“நிரந்தரமான புரட்சி”25 என்பதே பாட்டாளி வர்க்கத்தின் யுத்த முழக்கமாக இருக்க வேண்டும் என்ற அறிவிப்புடன் மார்க்சும் ஏங்கல்சும் தமது உரையை முடித்தனர். அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்திற்குப் பின்னர், ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் இரண்டாம் அகிலத்தின் மகத்தான தத்துவாசிரியர்கள், ரஷ்ய புரட்சியின் அரசியல் இயக்கவியலையும் வரலாற்றுக் கடமைகளையும் புரிந்து கொள்ள முனைந்தபோது, 1848 இன் அனுபவங்களையும் படிப்பினைகளையும் ஆய்வு செய்வதிலும் அதில் மீண்டும் உழைப்பதிலும் இறங்கினர்.

1 Lecture delivered at the summer school held by the Socialist Equality Party (US) in Ann Arbor, Michigan, July 2011.
2 Pabloism is a petty-bourgeois opportunist tendency that emerged in the early 1950s. It provoked a split in the Fourth International in 1953. A review of the history of this grouping is provided in Chapter 11, pp. 274-275.
3 Available: http://www.attac.org/en/tags/tunisia/tunisia-social-and-democratic-revolution-underway
4 Available: http://socialistworker.org/2011/02/07/call-from-egyptian-socialists
5 See Chapter 10 of this volume.
6 Tom Henehan, a leading member of the Workers League (predecessor of the Socialist Equality Party), was shot to death in New York City on October 16, 1977. He was twenty-six years old.
7 [மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் தேர்வு நூல் திரட்டு, தொகுதி. 11, பக் 50-51]
8 [1848: புரட்சியின் ஆண்டு, ஆசிரியர் - மைக் ராப்போர்ட் (நியுயோர்க், 2008), பக். 13]
9 [கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் தேர்வு நூல் திரட்டு, தொகுதி 3, பக். 418].
10 [தொகுதி. 3, பக். 182].
11 Ibid., p. 187.
12 [கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெடெரிக் ஏங்கெல்ஸ், தேர்வு நூல் திரட்டு, தொகுதி. 38, பக். 115]
13 [மேற்கோள் காட்டப்பட்டது, காரல் மார்க்ஸ்: மனிதனும் போராளியும் போரிஸ் நிகோலாவ்ஸ்கி மற்றும் ஓட்டோ மேன்சென் எழுதியது (பென்குவின் புக்ஸ், 1973), பக்.149]
14 [1848: ஒரு புரட்சியின் உருவாக்கம், ஆசிரியர் ஜோர்ஜ் டுவோ (நியூயோர்க்: 1967), பக். 85]
15 Gustave Flaubert, Sentimental Education (London: Penguin Books, 1975), pp. 342–343.
16 Alexander Herzen, From the Other Shore (Oxford: Oxford University Press, 1979), p. 53.
17 Ibid., p. 47.
18 [இன்னொரு கரையில் இருந்து [இலண்டன்: 1956], பக். 59-60)]
19 [கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் தேர்வு நூல் படைப்பு, தொகுதி.10, பக். 67]
20 [அதே புத்தகம், பக். 69]
21 [அதே தொகுதி. பக். 71]
22 [நவீன ஐரோப்பாவின் எழுச்சி: அரசியல் மற்றும் சமூக எழுச்சி, 1832-1852, ஆசிரியர் வில்லியம் எல். லாங்கர் (நியூயோர்க்: 1969) பக். 387]
23 [கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் தேர்வு நூல் திரட்டு, தொகுதி. 10, பக். 150]
24 [தேர்வு நூல் திரட்டு. தொகுதி. 10, பக். 280-281]
25 [அதே தொகுதி. பக்.287].

Read more...

ஐ.நா விசாரணை அறிக்கையை அரசியலாக்க வேண்டாம்!

'செப்ரெம்பர் மாதம் கட்டாயம் அறிக்கை வரும். ஆனால் தேர்தல் வராதே'

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையானது எதிர்வரும் மார்ச் மாதம் சபையில் சமர்ப்பிக்கப்படாமல் செப்ரெம்பர் மாதமே சமர்ப்பிக்கப்படும் என்ற செய்தி முன்கூட்டியே தெரிந்த விடயமாகும்.

இது இவ்வாறிருக்க உள்ளுர் அரசியல் மட்டத்தில் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெறுவதற்கு முன்னரே 2009 காலப்பகுதிகளில் இந்த அறிக்கையினை ஒரு வடிவத்திற்கு கொண்டு வந்து மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்த பெருமை அப்போதைய மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கே உரியது. அவரே இந்த அறிக்கையினை பலப்படுத்தி இந்த நிலைமை வரைக்கும் வழிநடத்தியிருந்தார்.

அப்போதைய இலங்கை அரசாங்கம் இந்த அறிக்கையினை பிற்போடுமாறும், தாமதிக்குமாறும், உள்ளடக்கத்தை குறைக்குமாறும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததுடன், நவநீதம் பிள்ளைக்கும், ஐ.நா செயலாளருக்கும், அமெரிக்க தூதுவருக்கும்,ஐரொப்பியநாடுகளுக்கும், இந்தியாவிற்கும் எதிராக நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டிருந்தது.

மிக முக்கியமாக தமிழரின் தாயகப் பகுதிகளிலும் கூலிக்கு ஆட்களைத் திரட்டி அப்போதைய அரசாங்கத்தினால் ஐ.நாவுக்கும், அமெரிக்காவுக்கும் எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக ஐ.நாவுக்கும் அமெரிக்காவுக்கும் எதிராக விமல் வீரவம்சவினால் உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றும் நடத்தப்பட அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபஷ்ச பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்த நகைச்சுவைக் காட்சிகளும் தென்னிலங்கையில் இடம்பெற்றதனை எவரும் மறந்திருக்கமாட்டார்கள்? ஆனால் இறுதியில் என்ன நடந்தது. ஐ.நா பிரேரணையை நிறைவேற்றியிருந்தது.
ஓன்றை நாங்கள் விளங்கிக் கொள்ளவேண்டும். ஐ.நா அமைப்பு ஒரு அரசியல் அமைப்பல்ல. சர்வதேச இராஜதந்திர விடயங்களை கையாளும் ஒரு அரச சார்பற்ற அமைப்பாகும். அத்துடன் மனித உரிமை விடயத்தில் உலகத்தில் பொறுப்புக் கூறலுக்கும,; நம்பகத்தன்மைக்கும், வெளிப்படைத் தன்மைக்கும் பெயர்பெற்ற ஒரு முதல்நிலை அமைப்பும் ஆகும்.

மறுபக்கமாகப் பார்த்தால் இலங்கை மீதான ஐ.நா விசாரணை அறிக்கைக்கு பிரேரணையை கொண்டு வந்த நாடு என்ற வகையில் அமெரிக்காவின் பங்கும் மிக முக்கியமானது. மனித உரிமை விடயத்தை பொறுத்த வரையில் பிரேரணை கொண்டு வந்த நாடு என்ற முறையில் அந்த பிரேரணைக்கு தொடர் ஆதரவினை வழங்கும் தார்மீகப் பொறுப்பு அமெரிக்காவிற்கு உண்டு. இது தொடர்பான அறிக்கையினையும், உறுதிப்பாட்டையும் அமெரிக்க தொடர்ந்து மேற்கொள்ளும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இங்குள்ள மக்களினதும், மக்கள் பிரதிநிதிகளினதும், அரசியல்வாதிகளினதும் கருத்தினை 2015 தொடக்கத்தில் அறிந்த பின்னரே தனது நிலைப்பாட்டினை அமெரிக்கா எடுத்தது என்பது உண்மையாகும். சொல்லப் போனால் மார்ச் மாதத்திற்கும் செப்ரெம்பர் மாதத்திற்கும் இடையில் 6 மாதம் மட்டுமே கால இடைவெளி உள்ளது. 60 வருடம் போராடி, 6 வருட யுத்த முடிவில் உள்ள தமிழ் மக்கள் இந்த 6 மாத காலத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுடன், அமெரிக்க அரசாங்கமும், ஐ.நா சபையும் இந்த தீர்மானத்தின் மீது கொண்டுள்ள பற்றுறதியில் நம்பிக்கை கொண்டும் இருக்கிறார்கள். இந்த உண்மை நிலை இங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் தெரியாதது அல்ல.

அப்படி உண்மை தெரிந்தும் ஏன் பாசாங்கு அறிக்கைகள் விட்டுக்கொண்டும், நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டும் இருக்கின்றார்கள் என்றால் விடயம் வெளிப்படையானது. 'ஆறு மாதத்திற்கு பிறகு ஐ.நா அறிக்கை வரும் ஆனால் அரசியல் களம் வருமா ஐயா' 2015 நாடாளுமன்ற தேர்தல் களத்தை குறிவைத்தே ஐ.நா அறிக்கையினை கையிலெடுத்து எமது அரசியல்வாதிகள் விளாசிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆக தமிழ் மக்களின் இரத்தம், சதை, பிணம், இழப்புக்களின் மீது அரசியல் பிழைப்பு நடத்தியது போதாது என்று இராஜ தந்திர களமான ஐ.நாவையும் அரசியற் களமாக்கியிருக்கின்றார்கள். இதன் விளைவு தென்னிலங்கை அரசியற்களம் ஐ.நாவிற்கும், அமெரிக்காவுக்கும் கடந்த காலத்தில் தீட்டாகியது போலும், தமிழர் அரசியற்களமும் தீட்டுப்பட்டுப்போகும் என்ற எச்சரிக்கை மட்டுமே எம்மால் செய்யக்கூடியது. முடிவு மக்கள் கையில் உள்ளது.

இவ்வண்ணம்
கே.வி.சகாதேவன்
தலைவர்
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்

Read more...

ஸலாமா தேசிய தின நிகழ்வு

“சகவாழ்வு” எனும் தொனிப் பொருளில் நாட்டில் இன நல்லுறவைக் கட்டியெழுப்பும் நோக்கில் இன்று (22) மாத்தறை காலிதாச வீதியில் அமைந்துள்ள பேர்ள் பிலேஸ் ஹோட்டலில் தேசிய ஸலாமா தேசிய தின நிகழ்வு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிகழ்வை கல்வி கலாசார அபிவிருத்தி அமைப்பு ஒழுங்கு செய்துள்ளது.

இந்நிகழ்வில் மாத்தறை மாவட்டச் செயலக செயலாளர், பிரபல ஊடகவியலாளர் நிளார் என். காசிம் உட்பட பிரபல்யம்மிக்க பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

“சகவாழ்வு” பற்றி கருத்துரைத்த சிலரின் படங்கள் கீழே.


(கலைமகன் பைரூஸ்)

Read more...

முடிந்தால் என்னைத் தேர்தலில் தோற்கடிக்கவும்!

மகிந்தவுக்கு ரணிலின் சவால்!!

முடியுமாயின் எதிர்வரும் தேர்தலில் தன்னை தோற்கடித்து வெற்றியீட்டுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சவால் விடுத்துள்ளார்.

நேற்று புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கான கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இச்சவாலை பிரதமர் விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவரது வாக்குகளை தன்னால் 50 இலட்சத்தை விடவும் குறைக்கவியலும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

Read more...

Tuesday, February 17, 2015

இராணுவ பலத்தை கைப்பற்றும் ஜெனரல் சரத் பொன்சேகா!

சில நாட்களுக்கு முன் இராணுவ சேவையில் மீண்டும் இணைக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு நெருங்கிய இராணுவ அதிகாரிகள் சிலர் இலங்கை இராணுவத்தின் முக்கிய பொறுப்புக்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவை வருமாறு..

மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க - இராணுவ செயலாளர் , பிரிகேடியர் துமிந்த கெப்பட்டிவலான – திட்ட பணிப்பாளர் , பிரிகேடியர் அருண பெரேரா – அலுவலக சபை பணிப்பாளர் நாயகம் , மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன – யுத்த உபகரண மாஸ்டர் ஜெனரல்

இந்த அனைத்து நியமனங்களையும் ஜனாதிபதி செயலாளர் பிபி.அபேகோன் 16ம் திகதி இராணுவ தளபதிக்கு விசேட உத்தரவாக அனுப்பி வைத்துள்ளார். இந்த நியமனத்தின் விசேடம் என்னவென்றால் இது குறித்து பிரதமருக்கு அறிவிக்கப்படவில்லை.

இந்த நியமனத்தின் பின்னணியில் சரத் பொன்சேகா, அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன ஆகியோர் உள்ளதாக எமக்கு நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது. இந்த நியமனங்களை அடுத்து இலங்கை இராணுவத்தில் பாரிய குழப்பகர நிலை ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

Saturday, February 14, 2015

பாதுகாப்பு ராஜாங்க அமைச்சருக்கான அதிகாரங்கள் அதிரடியாக பறிக்கப்பட்டன. முறுகல் ஆரம்பமா?

ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்காலத் தலைவர் என மகுடம் சூட்டவென பிரதமர் ரணில் விக்ரமசிங்க வளர்த்துவரும் பாதுகாப்ப இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவின் அமைச்சுப் பொறுப்புக்களை குறைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பில் பாதுகாப்பு செயலாளரால் 13 ம் திகதி விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவின் அமைச்சின் கீழிருந்த 15 நிறுவனங்களில் 4 நிறுவனங்கள் மாத்திரமே அவருக்கு எஞ்சியுள்ளன. அவை இராணுவ சேவை அதிகார சபை, பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் சபை கல்லூரி, பாதுகாப்பு சேவை பாடசாலை மற்றும் தேசிய மாணவர் படையணி ஆகியவையாகும். இராணுவ சேவை அதிகார சபையின் தலைவராக சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா அடுத்த வாரம் பதவியேற்கவுள்ளார்.

ருவான் விஜேவர்த்தனவிற்கு முப்படை மற்றும் அதனோடு தொடர்புடைய எவ்வித அதிகாரமும் இல்லை. அனைத்து அதிகாரங்களும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் கீழ் வருகிறது.

பாதுகாப்பு அமைச்சு அது தொடர்பான அனுபவம் மற்றும் தெளிவு இல்லாத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து போட்டியிடுமாறு சரத் பொன்சேகாவிற்கு ஜனாதிபதி கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Read more...

இலங்கை தேர்தல் முடிவும் அதன் சர்வதேச தாக்கங்களும். Deepal Jayasekera

மஹிந்த இராஜபக்ஷவை வெளியேற்றி மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்ற கடந்த வியாழக்கிழமை நடந்த இலங்கை தேர்தலின் முடிவுகள், இலங்கை மற்றும் தெற்காசியாவில் மட்டுமன்றி உலகம் பூராவும் தொழிலாள வர்க்கத்திற்கு எச்சரிக்கை மிகு தாக்கங்களை கொண்டுள்ளது.

முதலில் அது, சீனாவுடனான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராஜதந்திர, பொருளாதார மற்றும் இராணுவ ரீதியிலான மோதல்களிலும் மற்றும் அதற்கு எதிரான போர் தயாரிப்புகளிலும் ஆசியாவில் உள்ள நாடுகளை இழுத்துப் போடுவதற்கு வாஷிங்டன் இடைவிடாது மேற்கொள்ளும் முயற்சிகளை வெளிப்படுத்தியுள்ளது. இரண்டாவதாக, “ஜனநாயகம்” மற்றும் “மனித உரிமைகள்” என்ற மோசடியான பதாகைகளின் கீழ் ஏகாதிபத்திய சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு நேரடியாக வசதியளிக்கும் போலி-இடது போக்குகளின் அரசியல் பங்கையும் கோடிட்டுக் காட்டுகின்றது.

இராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்து சிறிசேன வெளியேறியது முதல் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பீ) மற்றும் ஏனைய ஒரு தொகை அரசியல் போக்குகளாலும் ஒரு பொது எதிர்க் கட்சி வேட்பாளராக அவர் அங்கீகரிக்கப்பட்டது வரையும் நடந்தது என்னவெனில், ஒரு அமெரிக்க அனுசரணையிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையே ஆகும். இதை சிருஷ்டிப்பதில், கிளிண்டன் மன்றத்தின் ஊடாக ஒபாமா நிர்வாகத்துடனும் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கை நிறுவனங்களுடனும் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பகிரங்கமாக பெரும் பங்காற்றியுள்ளார்.

வாஷிங்டனின் நிலைப்பாட்டில் இருந்து பார்க்கும் போது, இராஜபக்ஷவின் குற்றங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டு போரின்போது பெருந்தொகையான தமிழ் பொது மக்கள் கொல்லப்பட்டமை அல்ல, மாறாக அவரது அரசாங்கம் சீனாவுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள உறவுகளே ஆகும். சீன அரச நிறுவனங்களிடம் இருந்து அவர் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடுகளாக பெற்றுக்கொண்டுள்ளதோடு, அமெரிக்க மற்றும் இந்திய எதிர்ப்புகளை அலட்சியம் செய்து, இலங்கை துறைமுகங்களுக்குள் சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர் கப்பல்கள் வருவதற்கு அனுமதித்ததன் மூலம் இந்து சமுத்திரத்தில் அதன் கடற்படை இருப்பை அதிகரிக்கும் பெய்ஜிங்கின் குறிக்கோளுக்கு உதவி செய்யத் தொடங்கினார்.

இராஜபக்ஷவை வெளியேற்றுவதற்கு அமெரிக்கா திரை மறைவில் மேற்கொண்ட பொறிமுறைகள் தேர்தல் தினத்தன்று வெளிப்படையாகின. இராஜபக்ஷவை தொலைபேசியில் அழைத்த அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி, வாக்களிப்பு “வன்முறை மற்றும் அச்சுறுத்தல்கள் இன்றி இடம்பெற” வகை செய்யுமாறும், அவர் தோல்வியடைந்தால் “அமைதியாக ஆட்சி கையளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும்” அறிவுறுத்தினார். இலங்கை அரச அதிகாரிகள் மற்றும் இராணுவத்துக்கான செய்தி மிகச் சரியானதாக இருந்தது. சிறிசேன வெற்றி பெறுவதை தடுப்பதற்கான எந்தவொரு முயற்சியும் ஏகாதிபத்திய தலையீட்டை எதிர்கொள்ளும் என்பதே அது.

கடந்த வெள்ளியன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, வெற்றிகரமான ஆட்சி மாற்றத்தை வரவேற்றார். “ஐக்கிய அமெரிக்கா, சகல இலங்கையர்களுக்காவும் சமாதானம், ஜனநயாகம் மற்றும் சுபீட்சத்தை வளர்ப்பதற்காக ஜனாதிபதி சிறிசேனவுடன் செயற்பட எதிர்பார்க்கின்றது...” என வலியுறுத்தினார்.

சிறிசேன ஆட்சியில் இருத்தப்பட்டதால் ஒரு காலமும் இலங்கை தொழிலாள வர்க்கத்துக்கு சமாதானம், ஜனநாயகம் மற்றும் சுபீட்சம் கிடைக்கப் போவதில்லை. நாடு, சீனவுக்கு எதிரான அமெரிக்க சதி வலையின் இன்னொரு பகுதியாக மாறும். மோசமடைந்து வரும் உலகப் பொருளாதார சரிவு நிலைமையின் கீழ், 26 ஆண்டுகளாக உள்நாட்டு போரில் அமுல்படுத்தப்பட்டு வந்த மற்றும் இராஜபக்ஷவால் விரிவாக்கப்பட்ட ஒடுக்குமுறை சட்டங்கள் மீண்டும் நடைமுறையில் இருப்பதோடு வாழ்க்கைத் தரங்கள் மீது முன்னெப்போதும் இல்லாத கடும் தாக்குதல்களை முன்னெடுக்க அவை பயன்படுத்தப்படும்.

ஜனாதிபதியாக பதிவியேற்றபோது, வாஷிங்டனின் நிகழ்ச்சி நிரலுடன் அணிசேர்வதற்கான தனது தயார் நிலையை சிறிசேன சமிக்ஞை செய்தார். “உலகின் எல்லா நாடுகளுடனும் சினேகபூர்வமான உறவுகளை கட்டியெழுப்புவதன் பேரில் வெளிநாட்டு கொள்கையில் மாற்றம் செய்வதாக” அவர் சபதம் எடுத்தார். அமெரிக்காவின் ஆசியாவில் முன்னிலை கொள்கையின் சூழலில், இதன் அர்த்தம், பெய்ஜிங்கிடம் இருந்து விலகி வாஷிங்டன் மற்றும் பிராந்தியத்தில் அதன் பங்காளிகளான ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் பக்கம் திரும்புவதே ஆகும்.

அமெரிக்கத் தலையீடானது, ஆசியா மற்றும் உலகம் பூராவும் இத்தகைய நடவடிக்கைகளை பின்பற்றுகின்றது. 2010ல் சீனாவுடன் மோதிக்கொள்வதற்கு மாறாக நல்லிணக்கத்தை விரும்பியமைக்காக ஜப்பானிய பிரதமர் யுகியோ ஹடோயாமா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட்டை அகற்றுவதில் வாஷிங்டன் தலையீடு செய்திருந்தது. இரு நாடுகளும் அமெரிக்கத் தலைமையிலான போர் தயாரிப்புகளில் இப்போது முன்னணியில் உள்ளன. அச்சுறுத்தல்கள் மற்றும் நிதி உதவிகள் மூலம் பர்மாவில் இராணுவ ஆட்சி இப்போது அமெரிக்காவின் வழிக்கு கொண்டுவரப்பட்டு, சீன முதலீடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதோடு இராணுவ உறவுகளும் கீழறுக்கப்பட்டுள்ளன.

கடந்த பெப்பிரவரியில், அமெரிக்காவானது ஜேர்மனியின் ஆதரவுடன் உக்ரேனில் பாசிஸ்டுகள் தலைமையிலான ஒரு ஆட்சி கவிழ்ப்பு சதியை தூண்டி விட்டு ஒரு ஏகாதிபத்திய-சார்பு பொம்மை அரசாங்கத்தை நிறுவியுள்ளது. மாஸ்கோவிலும் தனக்குச் சார்பான அரசாங்கம் ஒன்றை உருவாக்கும் உச்சக்கட்ட இலக்குடன், ரஷ்யாவுடன் ஒரு மோதலை தூண்டிவிடுவதே இந்த சதியின் குறிக்கோளாகும். சீனாவின் வெளிப்படையான சாத்தியமான இராணுவ பங்காளியான ரஷ்யாவை மண்டியிடச் செய்வதற்கான முயற்சியானது, ஆசியாவில் முன்னிலை கொள்கையுடன் பிரிக்க முடியாததாகும். ஆசியாவில் அமெரிக்க செல்வாக்குக்கு சவால் விடவும் வாஷிங்டனின் பூகோள மேலாதிக்கத்துக்கு குழி பறிக்கவும் சீனாவை அனுமதிக்கும் கூட்டணிகள் மற்றும் பூவிசார் செல்வாக்குகளுக்கான சாத்தியங்களைக் கூட அமெரிக்கா விட்டு வைக்கப் போவதில்லை.

இலங்கை தேர்தல் முடிவானது, சீனா எல்லா முன்னரங்குகளிலும் முற்றுகையிடப்பட்டுள்ளது என அதன் அரசாங்கமும் இராணுவமும் செய்துள்ள மதிப்பீட்டை மேலும் பலப்படுத்துவதை மட்டுமே செய்துள்ளதுடன், ஒரு சிறிய சம்பவம் கூட ஒட்டு மொத்த யுத்தத்தை வெடிக்கச் செய்யக் கூடிய ஆபத்தை உயர்த்தியுள்ளது.

போலி இடதுகளான நவ சம சமாஜக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியும் அமெரிக்க ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கான பொறுப்பை பங்கிட்டுக்கொண்டுள்ளன. உக்ரேனில் ஒரு ஏகாதிபத்திய சதியை “ஜனநாயகப் புரட்சி” என சர்வதேச போலி இடதுகள் பிரகடனப்படுத்தியது போலவே, இலங்கையிலும் அவர்கள் இராஜபக்ஷவின் “சர்வாதிகாரத்துக்கு” எதிரான “ஜனநயாகத்துக்கான” வேட்பாளர் என சிறிசேனவை சித்தரித்தனர்.

இந்த மூன்று கட்சிகளும் தமது சொந்த ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்திய போதிலும், அவர்கள் சிறிசேனவின் அமெரிக்க-சார்பு நிகழ்ச்சிநிரலையிட்டு மௌனமாக இருந்ததோடு அவரது அரசியல் வரலாறு பற்றி இலேசான விமர்சனத்தை மட்டுமே முன்வைத்தன. உள்நாட்டு யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமகள் மற்றும் ஜனாநயக உரிமைகள் மீதான கொடூரமான தாக்குதல்களுக்கு இராஜபக்ஷவை போலவே சிறிசேனவும் முழு பொறுப்பாளியாவார்.

ஜனாதிபதி சிறிசேனவின் கீழ் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர் எதிர்கொண்ட துன்பங்கள் தணிக்கப்படும் என்ற மாயையை விதைப்பதற்காக இந்த போலி இடது குழுக்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் முதலாளித்துவ தட்டுக்களுடனும் கூட இணைந்துகொண்டன. தொழிற்சங்கங்களுடன் சேர்ந்துகொண்ட அவர்கள், தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற வறியவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற போலிக் கூற்றுக்களையும் முன்னிலைப்படுத்தினர். உழைக்கும் மக்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக நிலவிய உண்மையான வெகுஜன அதிருப்தியை, சிறிசேன மற்றும் அவருக்கு ஒத்துழைத்த ஏகாதிபத்திய-சார்பு வலதுசாரி கட்சிகளின் பின்னால் திருப்பிவிடுவதற்கு இந்த குட்டி முதலாளித்துவ சக்திகள் உதவி செய்தன.

போலி இடதுகள், இலங்கையை “காலனியாக்க” முயற்சிக்கும் “ஏகாதிபத்திய சக்தியாக” சீனாவை பண்புமயப்படுத்துவதன் மூலம், அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் அணிசேர்வதற்கு எந்தளவுக்கு தயாராக உள்ளார்கள் என்பதைக் காணமுடியும். யதார்த்தத்தை மறுபக்கம் திருப்பி, சர்வதேச மூலதனத்துக்கான ஒரு மலிவு உழைப்புத் தளமாக இயங்கும் சீனாவை, சர்வதேச நிதி மூலதனத்தின் மையமான அமெரிக்காவுக்கு சமப்படுத்தி, பின்னர் சீன “விஸ்தரிப்புவாதம்” மற்றும் “ஆக்கிரமிப்பு” என கண்டனம் செய்வதானது வாஷிங்டனின் பாதையில் செல்வதாகும்.

இங்குதான் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோசக) தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியத்தும் உள்ளது. அது சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தனது சொந்த வேட்பாளரான பாணி விஜேசிறிவர்தனவை தேர்தலில் நிறுத்தியது. சோசக மட்டுமே போர் ஆபத்து நெருங்கி வருவது குறித்து தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் எச்சரிக்க முயற்சித்ததோடு வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது மேற்கொள்ளப்படும் சமூக எதிர்ப்-புரட்சிக்கு எதிராக ஒரு வேலைத் திட்டத்தை அபிவிருத்தி செய்தது. அது சிறிசேன மற்றும் இராஜபக்ஷ முகாங்கள் மற்றும் போலி-இடது போக்குகள் உட்பட முதலாளித்துவத்தின் அனைத்து பகுதியினரில் இருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்காக போராடியது.

அடுத்து வரும் காலத்தில் தீர்க்கமான பிரச்சினை, தொழிலாள வர்க்கத்தினுள் சோசலிச மற்றும் சர்வதேசிய நனவை அபிவிருத்தி செய்வதும், ஆசியா மற்றும் உலகம் பூராவும் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை கட்டியெழுப்புவதுமாகும். இதுவே, போர் மற்றும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையின் தோற்றுவாயான முதலாளித்துவம் மற்றும் அது வேரூன்றியுள்ள தேசிய-அரச அமைப்பு முறைக்கும் முடிவு கட்டுவதற்காக ஒரு சக்திவாய்ந்த போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான அடிப்படையாகும்.

Read more...

ரணில் - மஹிந்த கூட்டு குறித்து மைத்திரி சந்தேகம்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தும் நோக்குடன் ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஸவுடன் கூட்டணி ஒன்றை ஏற்படுத்தி வருகிறார் என்ற நியாயமான சந்தேகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுந்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதியாக தெரிவாகி ஒரு மாதம் நிறைவுற்றுள்ள நிலையில் அரசாங்கம் ஊடக கண்காட்சி காட்டுகிறதே தவிர செயற்பாட்டில் ஒன்றும் நடக்கவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதால் ஜனாதிபதிக்கு இந்த சந்தேகம் எழுந்துள்ளது.

கண்ணுக்கு தெரியும் அளவு கடந்த அரசாங்கத்தில் குற்றம் புரிந்தவர்கள் குறித்த சாட்சிகள் இருக்கும் போது அவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பதால் விருப்பமின்றியேனும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்து செயற்பட வேண்டுடிவரும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அமைதி, கிறிஸ்தவ விவகார மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக ஜோன் அமரதுங்கவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்தமை ராஜபக்ஸக்களை பாதுகாக்கவா என்ற கேள்வி ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் இடையே எழுந்துள்ளன. இந்நிலை தொடர்ந்தால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தவிர்க்க முடியாது என ஜனாதிகதி ஆலோசகர்கள் ஜனாதிபதியிடம் கூறுகின்றனர்.

இதேவேளை பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை ஜனாதிபதி 12ம் திகதி சந்தித்தார். அதன்படி கடந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடி குற்றச்சாட்டில் சிக்கியவர்களை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுக்காவிடின் ஜோன் அமரதுங்க வசமுள்ள பொலிஸ் அதிகாரத்தை தனக்கு கீழ் கொண்டுவர ஜனாதிபதிக்கு நேரிடும் என்பது தெளிவாகப் புலப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

Wednesday, February 11, 2015

கணவரையும், மகள்களையும் ஒழுங்கா பார்த்துக்கோ.... மிஷல் ஒபாமாவுக்கு ஐ.எஸ். எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் ஒபாமாவைக் குடும்பத்துடன் கொல்லப் போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். சமீபத்தில் நியூஸ்வீக் பத்திரிக்கையின் டுவிட்டர் தளத்திற்குள் ஹேக் செய்து ஊடுருவியது ஐ.எஸ்.ஐ.எஸ். அதில் "துணிச்சலான முஜாஹிதீன்" என்ற தலைப்பில் மிரட்டல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :- பிரெஞ்ச் பத்திரிக்கை அலுவலகத்தை தாக்கியது போன்று ஒபாமா குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்துவோம். ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பிற்கு எதிராக அமெரிக்கா துவங்கி உள்ள நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட உள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் அனுப்பியுள்ள எச்சரிக்கை செய்தியில், ‘மிஷல் ஒபாமா...உனது மகள்கள் மற்றும் கணவரை பார்த்துக் கொள். இது அவர்களுக்கு ரத்த காதலர் தினமாக தான் இருக்கும்.

அமெரிக்காவும், அதன் செயற்கைகோள்களும் சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் எங்களின் சகோதரர்களை கொன்றுள்ளது. இதற்கு பதிலடியாக உங்கள் நாட்டின் சைபர் பாதுகாப்பை அதற்கு உள்ளிருந்தே தகர்ப்போம்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போன்று அமெரிக்காவின் பல டுவிட்டர் மற்றும் யூட்யூப் அக்கவுன்டகளை இவர்கள் ஊடுருவி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

Read more...

Monday, February 9, 2015

புத்தி ஜீவிகள் என்ற பெயரில் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு எதிரான சதி பிசுபிசுப்பு

கிழக்குப்பல்கலைக்கழகத்தில் சுமார் 5000 மாணவர்களும் 200ற்கு மேற்பட்ட விரிவுரையாளர்களும் மற்றும் 250ற்கு மேற்பட்ட ஊழியர்களும் காணப்பட சுமார் 20 விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக சமூகத்தின் பேரால் சில உண்மைக்குப் புறம்பான கோசங்களை ஏந்தி பொதுமக்களை பிழையான வழிக்கு திசைதிருப்ப எத்தனிப்பது தொடர்பில் பொதுமக்கள் விழிப்படைய வேண்டியுள்ளது. பல்கலைக்கழக சமூகம் இவர்களது நடவடிக்கையை நிராகரித்த நிலையில் வீதியில் இறங்கியிருப்பது இன்னும் வேடிக்கையே பல்கலைக்கழகத்தில் பெருமளவிலான மாணவர்கள் இருக்க பல்கலைக்கழகத்தை சாராத பிரத்தியேக கல்வி நிலையங்களில் வருகை தந்த சில அப்பாவி மாணவர்களையும் ரியூசன் ஆசிரியர்களையும் ஒரு குறித்த அரசியல்வாதியின் கையாட்டகளையும் தங்கள் சுயநல போராட்டத்தில் ஈடுபடுத்தியது எந்தளவு தூரம் தர்மமாகும்? ஜனநாகமாகும்? இவர்கள் தானா படித்தவர்கள்?

பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி செயற்பாட்டில் அக்கறை காட்டாத(விரிவுரைகளுக்கு செல்லாத) விரிவுரையார்கள் ஊழல் கோசமிடுகிறார்கள்? ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிற கதையில்லையா? இது புத்தி ஜீவிகள் என்ற வகையில் மிகவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விடயமிது.

ஆர்ப்பாட்டத்தில் காணப்பட்ட சுலோகங்கள் இன்னும் வேடிக்கையானவையாகும். ஊழல், அராஜகம் என்று கூறப்பட்டாலும் கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தருக்கான அடுத்த தவணைக்காலம் எதிர்வரும் மாதம் தொடங்க உள்ள நிலையில் உபவேந்தர் கதிரையை வைத்து நடாத்திய ஆர்ப்பாட்டம் என்பது தெளிவாகத் தெரிகிறது. இத்தகைய குழுவினர் மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பான அபிவிருத்தி அல்லது பொதுவான பிரச்சினைகளை மையப்படுத்தி இதுவரை காலமும் எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுக்காத நிலையில் இவ்வாறான இன்றைய போராட்டத்தில் மாத்திரம் குரல் கொடுப்பது சிந்திக்க வேண்டிய விடயம். அதேவேளை இவ்வாறான குழுவினர் மாவட்ட பற்றாளர்களா? அல்லது தங்களது சுயலாபத்திற்காக குரல்கொடுப்பவர்களா? என்பதை பிரித்தறிய தெரியாத முட்டாள்கள் இல்லை மட்டக்களப்பு மக்கள் என்பதையும் இவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.


பல்கலைக் கழக சமூகம்.

Read more...

சந்தர்ப்பங்களை கோட்டை விடும் தமிழ் தேசிய தலைமைகள்

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கிடைக்கின்ற சந்தர்ப்பங்கள் மிக சரியாக பயன்படுத்தப்பட வேண்டும். அதே போல புதிய சந்தர்ப்பங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் தமிழ் தேசிய தலைமைகள் இரு விடயங்களையும் கோட்டை விட்டே வந்து இருக்கின்றன என்பது கடந்த கால வரலாறாகவும், நிகழ் கால நிதர்சனமாகவும் உள்ளது.

பிரச்சினைக்கு தீர்வு காணக் கூடிய அதிக அசுர பலத்தை தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே வழங்கி வந்திருக்கின்றனர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு அரசியல் என்கிற பெயரில் தமிழ் மக்களின் நம்பிக்கைகளை நுட்பமாக சிதைத்தே வந்திருக்கின்றது.

இன்று நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இது தமிழர் வாழ்விலும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பது எதிர்பார்ப்பு ஆகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடனேயே புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியின் அதிகார மையத்தில் அமர்த்தப்பட்டு உள்ளார். இவர் கடுமைப் போக்காளர் அல்லர். எதிர்க் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிப் பீடம் ஏறிய இவரே இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

இதனால் எதிர்க்கின்ற கட்சிதான் எதிர்க் கட்சி என்கிற நிலை இன்று இல்லை. நீலம், பச்சை என்கிற வேறுபாடு இல்லாமல் போய் விட்டது. உண்மையில் எதிர்க் கட்சி இல்லாத தேசிய அரசாங்கம் மலர்ந்திருக்கின்றது என்றும் கூறலாம். எனவே தமிழர் பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள இது மகத்தான வாய்ப்பாக கிடைக்கப் பெற்று உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இச்சந்தர்ப்பத்தையாவது தவற விடாது பயன்படுத்த வேண்டும். நிறைவேற்று அதிகார முறை ஒழிக்கப்பட்டு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால் மீண்டும் ஒரு முறை இவ்வாறான வாய்ப்பு கிடைக்கப் பெறவே மாட்டாது.

புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டபோது இதில் இணைய தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. தலைவர் இரா. சம்பந்தன், தேசியப் பட்டியல் எம். பி எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்வார்கள் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசாங்கத்தில் பங்காளிகளாக இருக்க மாட்டார்கள் என்று அறிவித்து கெடுத்து கொண்டனர்.

ஆனால் யதார்த்தத்தில் இது அல்ல உண்மையான நிலை. அமைச்சரவையை விட அதிகாரம் மிக்க சபை ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் உருவாக்கப்பட்டு உள்ளது. நாட்டின் தேசிய விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தக் கூடிய சகல கட்சிகளின் தலைவர்களும் இதில் அங்கம் வகிக்கின்றார்கள். அரசாங்கத்தின் மிக முக்கிய விவகாரங்கள் இங்கு கலந்து ஆலோசிக்கப்பட்டே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.

இதன் பெயர் தேசிய நிறைவேற்று சபை. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் அங்கம் வகிக்கின்றார். எனவே அரசாங்கத்தில், அமைச்சரவையில் இல்லை என்று சொல்லி தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றவோ, தீர்வு முயற்சியில் இருந்து தப்பிக் கொள்ளவோ முடியாது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசநாயக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியூதீன், ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோரும் நிறைவேற்று சபையில் அங்கம் வகிக்கின்றனர்.

இனப் பிரச்சினைத் தீர்வுக்காக முன்பு உருவாக்கப்பட்ட சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இன்னொரு வடிவம் போலவும் நிறைவேற்று சபை அமைகின்றது. சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் சேரப் போவது இல்லை என்று சொல்லி அடம் பிடித்தது போல் அல்லாது நிறைவேற்றுக் குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சேர்ந்து இருப்பது ஆரோக்கியமான விடயமாகும். ஆனால் இதன் மூலமான உச்ச நன்மைகளை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு இதய சுத்தியுடன் செயற்பட தவறுகின்ற பட்சத்தில் இதுவும் தவற விடப்படுகின்ற வாய்ப்பாகவே வரலாற்றில் பதிவாகி விடும்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை உளுத்துப் போன தீர்வு முயற்சி என்று சொல்லி பொன்னான வாய்ப்பை முன்பு மண்ணாக்கினார்கள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கூடுதல் அதிகாரங்களுடன் கூடிய தீர்வுப் பொதியை எரித்தார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தீர்வு முயற்சியை எதிர்த்தார்கள்.

ஆனால் காலம் காலமாக சுமந்து வந்திருக்கின்ற பாரம்பரிய அரசியல் நிலைப்பாடுகள் சிலவற்றில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு விலகிச் செல்வது போன்ற தோற்றப்பாடு பல விடயங்களில் இப்போது தெரிகின்றது. மாகாண சபை ஆட்சியில் ஈடுபாடு காட்டுகின்றனர். ஜனாதிபதியின் தேசிய நிறைவேற்று குழுவில் அங்கம் வகிக்கின்றனர். சுதந்திர தின வைபவத்தில் பங்கேற்று உள்ளனர். வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். இவை எல்லாவற்றையும் தமிழ் மக்களின் நன்மைகளை உத்தேசித்தே செய்கின்றனர் என்று கூறுகின்றார்கள். இது உண்மையாக இருக்குமானால் கிடைத்து இருக்கின்ற புதிய சந்தர்ப்பத்தை தவற விடாது வேகமாகவும், விவேகமாகவும் செயற்பட்டு தமிழர் பிரச்சினைக்கு அர்ப்பணிப்புடன் தீர்வு காண தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்க வேண்டும்.

நாம் எல்லோரும் சீட்டாட்டம் குறித்து பொதுவாக அறிவோம். திறமையான சீட்டாட்ட வீரர்கள் அருமையான சீட்டுக்கள் கிடைக்கப் பெறாத போதும், அற்பமான சீட்டுக்களே கிடைக்கப் பெறுகின்றபோதும் சாமர்த்தியமாகவும், நுட்பமாகவும். ஈடுபாட்டுடனும் விளையாடி வெற்றியை தட்டிக் கொள்வார்கள். திறமை அற்ற வீரர்கள் அருமையான, அபூர்வமான சீட்டுக்கள் கிடைக்கப் பெறுகின்றபோதும் சாமர்த்திய குறைவு, அலட்சியம் ஆகியவற்றால் வெற்றியை கோட்டை விட்டு விடுவார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் சீட்டாட்டத்தில் இப்போதாவது சாதுரியமாகவும், அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com