Wednesday, November 26, 2014

இம்முறை ஹம்பாந்தோட்டையில் மகிந்தவுக்கு படுதோல்வியே!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தோல்வியைத் தழுவுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கிறார்.

மொரட்டுவை இதிபெத்த பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

“மகிந்த ராஜபக்ஷ இந்நாட்டில் நடாத்திய ஜனாதிபதித் தேர்தல்கள்இரண்டிலும் எனது தலைமையின் கீழ் அவரின் சொந்த ஊரான ஹம்பாந்தோட்டையில் தோல்வியடையச் செய்தேன். இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் நான் அவரைத் தோற்கடிப்பேன். ஏனென்றால் ஹம்பாந்தோட்டை மக்களுக்கு எங்களைப் பற்றி நன்கு தெரியும்..நாங்கள் ஏது செய்திருக்கின்றோம் என்பது பற்றித் தெரியும். அதனால் அம்மக்கள் என்றும் எங்களுடன் இருப்பார்கள்.

ஜனாதிபதி ஆட்சியில் இருந்துகொண்டு ஹம்பாந்தோட்டைக்கு சிற்சில விடயங்களைச் செய்கிறார். நானோ எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்கின்றேன். எனது தந்தையாகிய முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச மக்களுக்காக பல்வேறு நற்காரியங்களைச் செய்தவர் என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள். நாங்கள் பொதுமக்களின் வாக்குகள் மூலமே பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுகிறோம்.. அவர்களது பிரதிநிதிகளாகவே நாங்கள் இருக்கின்றோம். அதனை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும்,அமைச்சர்களும் கருத்திற் கொள்ள வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

(அபூஹம்னா)

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com