Sunday, February 19, 2012

சிறிதரன் கைது செய்யப்படுவாரா? அல்லது அரசுடனான அவரது குட்டு வெளிப்படுமா?

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரும் கொமன்வெல்த் நாடாளுமன்றத் தலைவருமான சேர்.அலன் ஹார்சல் துறூஸ்ட் கடந்த 17 ம் திகதி மாலை 6 மணியளவில் யாழ் சென்றிருந்தார். அவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சிலர் சந்தித்து பேசினர். அச்சந்திப்பில் கலந்து கொண்ட சிறிதரன் வடகிழக்கில் தற்போதுள்ள இளைய சமுதாயம் மிக விரைவாக போராட்டம் ஒன்றை ஆரம்பிப்பது பற்றியே சிந்திக்கின்றது என சேர் அலன் அவர்களிடம் தெரிவித்தாக செய்திகள் தெரிவிக்கின்றது.

அரசிற்கு எதிராக போராட்டங்களை ஆரம்பிக்கின்றவர்கள், புரட்சியை தூண்டுகின்றவர்கள் தொடர்பாக தகவல் தெரிந்திருந்தால் அவற்றை பொலிஸாருக்கு தெரியப்படுத்தவேண்டும் என்பது இலங்கையின் சட்டம்.

இவ்வாறான போராட்டங்களை ஆரம்பிக்க இருக்கின்ற நபர்கள் தொடர்பான தகவல்களை அறிந்து வைத்துள்ள பா.உ சிறிதரன் அவற்றை பிரித்தானிய பிரதிநிதி ஒருவருக்கு தெரியப்படுத்தியிருக்கின்றார். ஆனால் அதை சிறிலங்கா பொலிஸாருக்கு தெரிவித்துள்ளாரா? அவ்வாறு அவர் தெரியப்படுத்தியிரா விட்டால், தகவல்களை மறைத்த குற்றத்திற்காக எத்தனையோ இளைஞர் யுவதிகளை கைது செய்து நீதிமன்றத்தின் முன்நிறுத்தி வருடக்கணக்கில் தண்டனை பெற்றுக்கொடுத்த பாதுகாப்புதுறையினர் , அச்சட்டத்தினை சிறிதரன் மீது பிரயோகிக்காததன் மர்ம என்ன என்ற கேள்வி இங்கு எழுந்துள்ளது.

சிறிதரன் இலங்கை அரசு மீது தாறுமாறான குற்றச்சாட்டுக்களை நீதிக்கு புறம்பான முறையில் முன்வைத்து வருகின்றார். ஆனால் அவர் மீது இலங்கை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதேநேரம் இலங்கை இராணுவத்தின் உயரதிகாரிகளுடன் மிக நெருக்கமான தொடர்பினை கொண்டுள்ளதாகவும், அவர்களுடன் திரைமறைவில் மிகவும் நெருக்கமான உறவினை வைத்துக்கொண்டே போலிக்கு இவ்வாறான வெற்றுக்கோஷங்களை எழுப்புவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எது எவ்வாறாயினும் மேற்படி போராட்டங்கள் தொடர்பாக அறிந்து வைத்துள்ள சிறிதரன் அதன் பின்னணியில் உள்ள நபர்கள் தொடர்பாக இலங்கை அரசிற்கு தெரியப்படுத்த கடமைப்பட்டவராவார். அதை அவர் செய்யமறுக்கும் பட்சத்தில் இலங்கை அரசு அவர் மீதுசட்ட நடவடிக்கை எடுக்க தவறுமானால், இவருக்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையே இரகசிய ஒப்பந்தம்; ஒன்று உள்ளது என்ற கருத்து ஊர்ஜிதப்படுத்தப்படுகின்றது.


மேலும் இவரின் மேற்படி கருத்துக்கள் வடகிழக்கின் நிலைமைகளை சிக்கலடையச் செய்யுமே தவிர சீர் செய்ய உதவாது. வடக்கிலிருந்து இராணுவத்தினர் வெளியேற்றப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்ற தருணத்தில், அங்கே இளையோர் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க சிந்திக்கின்றனர் என்ற தகவல் மேலும் இராணுவத்தினரை குவித்து அங்கே கண்காணிப்புக்களை அதிகரிக்கவேண்டும் என்ற செய்தியையே சொல்லியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com